Thursday, December 24, 2009

இன்னும்...


காலொடிந்த காக்கைக்கு

எப்படி நேர்ந்தது அந்த விபத்து?


அடை மழை பெய்யும்போது

அணில்கள் எங்கே உறையும்?


நடுநிசியிலும் குரைக்கும் நாய்கள்

எப்போதுதான் உறங்கும்?


எல்லார் வீட்டிலும்

விரட்டப்படும் பூனைக்கு

யார் தான் சோறிடுகிறார்கள்?


ஏழெட்டு எறும்புகள் ஏலேசா பாடி

தூக்கிச் செல்லும் பருக்கை

கூட்டைச் சென்று அடைகிறதா?


சின்ன வயதில் தோன்றிய கேள்விகள்...

இன்னும் விடை கிடைக்கவில்லை.

என்ன, இப்போது இந்த மாதிரி

அசட்டுக் கேள்விகள் தோன்றுவதில்லை!


( 02-12-09 'விகடனி'ல் வெளியான எனது கவிதை)

Wednesday, December 16, 2009

இந்நேரம் நம் கையில்!




'அமுதன், சிற்பக் கலைஞர்.' என்றது முன்பிருந்த போர்டு. சிறிய ஓட்டு வீடு. உள்ளே பத்தடிக்குப் பத்தடி வலிந்து பிரிக்கப்பட்டு அதுதான் அவரின் கலைக் கூடம்.

அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு முறை அவரது புலம்பல் வெளிப்பட்டது.

'ஆரம்பிச்சாச்சா?' எட்டிப் பார்த்தாள் பின்கட்டில் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த ஜானகி.

கடைசியாகச் செய்து முடித்த வேலையில் கிடைத்த காசு கரைந்து விட்டிருந்தது. ஆச்சு இருபது நாள்! ஒரு ஆர்டரையும் காணோம்!

‘’சே, எப்படி சமாளிக்கப் போறோம் ஜானகி? யாரெல்லாமோ வந்து விசாரிக்கிறாங்க. ஆனால் ஆர்டர் தர ஒருத்தரும் வர மாட்டேங்கிறாங்களே! அஞ்சாம் தேதி வாடகை தரணும். பாலிலேருந்து மளிகைக் கடை வரை பாக்கி தீர்க்கணும். ஹரியோட ஸ்கூல் ஃபீஸ் கட்டணும்....''

அவரைப் பார்க்கப் பார்க்க மனதைப் பிழிந்தது அவளுக்கு. செதுக்கும் கல்லின் ஒவ்வொரு சதுர சென்டி மீட்டரும் ஏராளம் கலை நுட்பத்தைப் பறை சாற்றும். எழில் மன்றத்தைக் கடை விரிக்கும். அப்பேர்ப்பட்ட மேதாவி இப்படி மாய்ந்து போன கடந்த காலத்தையும் தேய்ந்து தோன்றும் எதிர்காலத்தையும் நினைத்து ஓய்ந்து கிடக்கிறாரே?

எப்படி அவருக்கு உணர்த்துவது?
ம்... அதுதான் சரி. அவரின் வழியிலேயே...

ஸ்பூனை எடுத்து பாத்திரத்தின் மீது சிற்றுளி போல் கொத்த ஆரம்பித்தாள். டொங் டொங் என்றெழுந்த அந்த ஓசை அவர் கவனத்தை ஈர்க்க, முனகலை நிறுத்திவிட்டு காதைக் கூர்மையாக்கினார்.

வருடக் கணக்காக சிற்பங்களின் கீழ் எழுத்தைப் பொறிக்கிற அவர் புலன்களுக்கு மனைவி பொறித்த அந்த மூன்று வார்த்தைகளையும் சப்தத்தை வைத்தே அறிந்து கொள்ள முடிந்தது.

மறு நிமிடமே துள்ளி எழுந்தார். மகனை அழைத்துக்கொண்டு தன் கலைக் கூடத்தில் நுழைந்தார். ஓரமாய்க் கிடந்த மரக்கட்டை ஒன்றை எடுத்தார். பென்சிலால் சில கோடுகள் கிழித்தார். கத்தியால் செதுக்கத் தொடங்கினார். இடையிடையே மகன் ஒவ்வொரு சந்தேகமாகக் கேட்க, விளக்கினார்.

கொஞ்ச நேரத்தில் அழகான சின்ன ரயில் எஞ்சின் மாடல் ஒன்று மகன் கையில். உலகமே கையில் கிடைத்த மாதிரி சிறுவன் ரசித்து விளையாட மகனும் தந்தையுமாக மகிழ்ச்சி பொங்கும் கணங்களைப் பரப்பியதில் அந்தச் சின்ன வீடு தஞ்சைப் பெரிய கோவிலளவு விரிந்தது. அந்த உற்சாகத்தில் தானும் பங்கு கொண்டாள் ஜானகி.

மகிழ் நிமிடங்கள் ஜெட்டாகப் பறக்க...

''ஐயோ. மணி நாலு! நாம இன்னும் சாப்பிடலை!'' மகனை அழைத்துக்கொண்டு மனைவியுடன் சாப்பிட உட்கார்ந்தார்.

எப்படியிருந்த தந்தை எப்படி மாறிவிட்டார்! வியப்பு நீங்காத ஹரி, ''அப்பா, கணக்கு பாடம் சொல்லித் தாங்கப்பா!'' என்று கேட்க, ''கொண்டா, கொண்டா!'' என்று அன்போடு அதில் புகுந்தார் அமுதன்.

சாயங்காலம் வீட்டுக்கு வந்தனர் இரு முதியவர். அவர்களின் கல்விக்கூடத்தில் நிறுவவிருந்த ஸ்தாபகரின் சிலை செய்ய அவரைப் பணித்தனர்.

'அட, எல்லாம் காலா காலத்தில் எப்படி சரியாகவே நடக்கிறது! இதற்கிடையில் வெம்பி மாய்ந்து பொழுதை வீணாக்க இருந்தேனே!'

சரியான சமயத்தில் சரியான சேதியை மூன்றே வார்த்தைகளில் தன் காதுக்கு அனுப்பிய அந்தத் தேவதையை - தன் மனைவியை - நன்றியுடன் பார்த்தார், 'இந்நேரம் நம் கையில்!' என்ற அந்த மூன்று வார்த்தைகளை நினைவு கூர்ந்தபடி.

Friday, December 11, 2009

தனிமை





மெல்லச் சுவரேறிக் குதித்த ரங்கன், பைப்பைப் பிடித்து மாடி ஜன்னலுக்கு ஏறினான். ஜன்னலைப் பற்றிக்கொண்டு கவனித்தான். பேச்சுக் குரல் கேட்டதும் திடுக்கிட்டான்.

என்ன இது? 'அந்தப் பொண்ணு மட்டும் தான் தனியா இருப்பா. கணவன் வெளிநாட்டில். மாமனார், மாமியார் ஊருக்குப் போயிருக்காங்க'ன்னு அடித்துச் சொல்லியிருந்தானே துரை? அப்புறம் எப்படி...? கூர்ந்து கேட்டான்.

''ஹாய் ப்ரீத்தி, அப்பவே வந்து காத்திட்டிருக்கேன். எங்கே போனே?''

''சமைச்சிட்டிருந்தேன்.''

''வாவ்! இந்த சிவப்பு சுடிதாரைப் பார்த்தா எனக்கு என்னென்னவோ தோணுது.''

''தோணட்டும். ஆனா இப்ப உங்களால ஒண்ணும் பண்ண முடியாது.''

''ஓஹோ? அப்படீன்னா ஏன் இந்த மாதிரி சூப்பர் டிரெஸ்ஸா போட்டு எனக்குக் காட்டறே?''

''பார்த்து ரசிக்கத்தான்!''

கேட்டுக் கொண்டிருந்த ரங்கன் மெதுவாகப் பின் வாங்கி பைப்பில் இறங்கினான், ஏமாற்றத்துடன்.

மாடியில்...
வெப்காம் ஆன் செய்து நெட்டில் கணவனிடம் பேசிக் கொண்டிருந்த ப்ரீத்தி, விளக்கை அணைத்துவிட்டுப் படுத்தாள்.


('குமுதம்' 8-10-2008 இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை.)

Friday, December 4, 2009

பாடம் ஒன்று




''என்னடா பண்ணினே? இருக்கிற வேலைகளுக்கிடையில இது வேற...'' எரிந்து விழுந்தாள் ரமா தன் பையன் மேல்.

அந்த ஸ்கூலில் அட்மிஷன் வாங்கறதுக்குள்ள அவள் பட்ட பாடு அவளுக்குத்தான் தெரியும். யார் யாரை எல்லாமோ பிடித்து எவ்வளவோ ஃ பீஸ் கட்டி... எல்லாம் எதற்காக? ஒரு தடவை அங்கே சேர்த்து விட்டுட்டா அப்புறம் ஒரு சின்னக் கவலை கூட படவேண்டியிருக்காது குழந்தையைப் பற்றி என்று அவள் அலுவலகத்தில் எல்லாரும் சொன்னதை நம்பித்தான் அப்படி செய்தாள். இப்ப என்னடான்னா சேர்ந்து ஒரு மாசம் ஆகலே, பேரன்ட்ஸ்கிட்டேயிருந்து லெட்டர் வாங்கிட்டு வர சொல்லியிருக்கிறார்கள்.

நவீன் மௌனமாக இருந்தான். அவனைப் பார்க்கப் பார்க்க ரமாவுக்கு எரிச்சல் தான் ஏற்பட்டது.

''என்னடா வால்தனம் பண்ணினே அங்கே?''

''ஒண்ணுமே பண்ணலேம்மா,'' அதற்குள் அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

இவனை விசாரித்து பிரயோசனமில்லை என்று நினைத்தாள். அவளுக்குத் தெரியும். ரொம்ப சென்சிடிவான பயல். லேசா கோபிச்சாலே கண்ணீர் வந்துவிடும். விஷயத்துக்கு வந்தாள். ''என்னடா எழுதித் தரச் சொன்னாங்க?''

''இனிமேல் அப்படி நடந்துகொள்ள மாட்டான்னு...''

''இனிமே அப்படி நடந்துக்குவியா?''

''மாட்டேம்மா! மாட்டவே மாட்டேன்.''

என்னவென்று தெரியாமலே எழுதிக் கொடுத்தாள். அந்த ஸ்கூலில் போய் விசாரிக்கலாம் என்றால் குறிப்பிட்ட நேரம், முன் அனுமதி என்று ஏகப்பட்ட ஃபார்மாலிடீஸ். யாருக்கு நேரம் இருக்கிறது இந்த அவசர யுகத்தில்? சாயந்திரம் ஆபீசில் ஒரு சென்ட் அஃப் பார்ட்டி. கலந்து கொள்ளவில்லை என்றால் மானேஜர் கோபப்படுவார். அவரைப் பகைக்க முடியாது. அடுத்த பிரமோஷன் லேட் ஆகும்...

மாதவனிடம் போய்ப் பாருங்க என்று சொல்ல முடியாது. ஏற்கெனவே கறாராகச் சொல்லியிருந்தான். ''இத பாரு, ஆபீஸ் விட்டு வந்தால் எனக்கு இன்ஷூரன்ஸ் கான்வாசுக்கே நேரம் சரியா இருக்கு. படிப்பு விஷயம் கம்ப்ளீட்டா உன்கிட்ட விட்டிருக்கேன்.''

ஃபீசை வாங்கிக் கொண்டு பொறுப்பை நம்மிடம் தள்ளும் அந்த ஸ்கூலை மனதில் வெறுத்தபடியே டி.வி.யை ஆன் செய்தாள். அவள் விரும்பிப் பார்க்கும் சீரியல் முடிந்து விட்டிருந்தது. ரிமோட்டைத் தூக்கி எறிந்தாள். பாட்டரி வெளியே வந்து விழுந்தது.
ஒரு நாவலைப் பிரித்து அதில் கவனத்தைக் கரைக்க முயன்றாள். முடிய வில்லை. தூக்கிப் போட்டாள்.

அப்போதுதான் உள்ளே நுழைந்த மாதவன் அவளிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டான்.


லெட்டரை வாங்கிக் கொண்ட டீச்சர் அனுசூயா, அனுதாபமாகக் கேட்டாள், ''வீட்டில நல்ல திட்டு வாங்கினியா?''

''ஆமா டீச்சர்.'' நவீன் கண் கலங்கிற்று.

''இங்க என்னை வந்து பார்க்கணும்னு சொல்லியிருப்பாங்களே?''

''சொல்லலே.'' நடந்ததைச் சொன்னான்.

''பார்த்தியா, அவங்களுக்கு ஆயிரம் வேலை. நீ நல்ல பையனா நடந்து கொள்ளாட்டி எல்லாருக்கும் எத்தனை சிரமம் பார்த்தியா?''

''இனிமே புரிஞ்சிப்பேன் டீச்சர்.''

அவன் கண்ணைத் துடைத்தாள். ''போ, சமர்த்து!''


னால் அடுத்த வாரமே இன்னொரு கம்ப்ளைன்டுடன் வந்து நின்றான் நவீன். பல்லைக் கடித்தான் மாதவன். ''உன் செல்லப் புத்திரன் பண்ணியிருக்கிற காரியத்தைப் பார்த்தியா?'' இரைந்தான். ''எங்கேருந்துதான் இதெல்லாம் படிச்சுட்டு வர்றானோ?''

''என்ன பண்ணினானாம்?''

''பக்கத்துக்கு பெஞ்சு பையன்கிட்ட சண்டை போட்டிருக்கான். ஏதோ தகாத வார்த்தை எல்லாம் சொல்லியிருக்கானாம். உடனே வந்து பார்க்கணுமாம்.''

''கூப்புட்டுட்டாங்களா? ஆ ஊன்னா உடனே வரச் சொல்லிருவாங்களே! இவங்க என்னதான் நினைச்சுட்டிருக்காங்க? அங்கே சேர்த்திட்டாப் போதும், அப்படி ஒரு பையன் இருக்கிறதையே நீங்க மறந்துரலாம்னாங்களே... உங்க நண்பர் சந்துரு கூட அப்படித்தானே சொன்னார்? அவரைக் கூப்பிட்டு சொல்லுங்க. நாம கெட்டது போதும், இன்னும் எத்தனை பேர்கிட்ட சொல்லப் போறாரோ? அவங்களையாவது காப்பாத்துவோம்....'' படபடவென்று பொரிந்தாள்.

''சரி, ஸ்கூலுக்கு ஒரு நடை போயிட்டு வந்திரு. என்ன சொன்னாலும் கண்டுக்காதே. அடுத்த வருஷம் நல்ல ஸ்கூலாப் பார்த்து சேர்த்துற வேண்டியதுதான்.''

''ஆமா, இன்னொரு தடவை ஒரு தொகை அழணும். காசு என்ன கொட்டியா கிடக்கு?...'' என்று அவள் ஆரம்பிக்க, சங்கடமாகிவிட்டது மாதவனுக்கு. ரெண்டு நாள் முந்தித்தான் அவர்களுக்குள் பலத்த சண்டை. எதிலோ தொடங்கி எங்கோ போய் விட்டது. கன்னா பின்னாவென்று திட்டிவிட்டான்.

மறுபடி ஒரு சீன் இப்ப தேவையா என்று நினைத்தான். அவளை சமாதானப் படுத்தினான். தன் கோபத்தை மகனை நோக்கித் திருப்பினான்.

''குடும்ப மானத்தைக் கெடுத்திட்டியேடா! நாங்க போய் அங்கே கைகட்டி நிக்கணும். என்ன சொன்னான்னு கேக்கணும். 'ஐயய்யோ, அப்படியா சொன்னான்னு அவங்ககிட்டே சாரி கேக்கணும். அந்தப் பையனோட அப்பாம்மா கிட்ட, நம்ம ஸ்டேடசை விட்டு கெஞ்சணும். தலை குனிய வெச்சிட்டியேடா!''

அவன் நினைத்த மாதிரியே அவள் கொஞ்சம் வேகம் அடங்கி புறப்பட்டாள். ஆனால், ''நீங்களும் வாங்க, என்னால சமாளிக்க முடியாது அவங்களை,'' என்று சொல்லிவிட்டாள்

''சரி, அங்க அப்பாயின்ட்மென்ட் வாங்கணுமே...'' இழுத்தான்.

''அதெல்லாம் எச். எம்மையும் சேர்த்துப் பார்க்கிறதுக்குத் தானே? இப்ப முதல்ல டீச்சரைப் போய் ஒரு நிமிஷம் பாத்துட்டு வந்துருவோம்.''


னுசூயா டீச்சர் கனிவாக எடுத்துரைத்தாள். ''முன்னாலேயே உங்களை ரொம்ப எதிர்பார்த்தேங்க. நல்ல படிக்கிற பையன். நல்ல நண்பர்கள் தான் இங்க அவனுக்கு. ஆனா தினம் தினம் ஏதாச்சும் பண்ணிடறான் கண்டிக்கிற மாதிரி. எங்கேர்ந்து இதெல்லாம் படிச்சுட்டு வர்றான்னு குழம்பற மாதிரி.... தெருப் பசங்க, பக்கத்து வீட்டுப் பசங்க எல்லாம் எப்படி?''

''ஐயோ வீட்டை விட்டு வெளியே விடறதே இல்லைங்க. எப்பவும் எங்க கூடத்தான் இருப்பான்.''

''இல்லைங்க, யாரோ எங்கோ தூண்டுகோலா இருக்கிறாங்க. சின்னப் பையன்களுக்கு இதெல்லாம் தானா வராது.''

''போன தடவை நீங்க இப்படிப் பண்ண மாட்டான்னு எழுதித் தரச் சொல்லியிருந்தீங்க. உடனே எழுதிக் கொடுத்தோம். அவனையும் வார்ன் பண்ணினோம்.''

''வார்ன் பண்றது பெரிய விஷயம் இல்லைங்க. அடிப்படையைக் கண்டு பிடிச்சு திருத்தணும் . அதுவும் அவனாக புரிஞ்சு அது நடக்கணும். அன்னிக்கே நீங்க வந்திருந்தா அவன் என்ன பண்ணினான்னு சொல்லியிருந்திருப்பேன் நீங்க கொஞ்சம் வாட்ச் பண்ணி இன்னும் மோசமாகிவிடாம பார்த்திருக்கலாம்.''

''டயமே இல்லைங்க.''

''என்னங்க, இப்படி சொல்றீங்க? உங்க குழந்தை, அவன் எதிர்காலம்! ஏன், அன்னிக்கு ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசிக்காக மட்டும் என்னை வந்து பார்த்தீங்களே?''

''எஸ், எஸ்... சரி, என்னங்க பண்ணினான் அன்னிக்கு?''

''கையிலிருந்த ஜாமிட்ரி பாக்சை தூக்கி எறிஞ்சிட்டான். சிதறி விழுந்ததில ஒரு பொண்ணு காலில் காம்பஸ் குத்தி ரத்தமே வந்துட்டது. இவன் பதறிடக் கூடாதேன்னு இவன்கிட்ட அதை சொல்லலே. அந்தப் பொண்ணுக்கு மருந்து போட்டு... சமாதானப் படுத்தி...''
மாதவன் திரும்பி ரமாவைப் பார்த்தான். அவள் அடிக்கடி ரிமோட்டைத் தூக்கி எறிவது கண்ணில் நிழலாடிற்று...

அவன் குரல் நடுங்கியது. ''..அப்படியா?''

அந்தத் தகாத வார்த்தையைக் கேட்டதும்...

முந்தா நாள் சண்டையில் அவன் ரமாவைப் பார்த்து சொன்னது! வீட்டில் குழந்தையும் இருக்கிறான் என்பதைப் பற்றிக் கவலைப் படாமல்!

திரும்பினார்கள் பாடத்தைக் கற்றுக் கொண்டவர்களாக...

('தேவி' 25-11-2009 இதழில் வெளியான என் சிறுகதை.)

Tuesday, December 1, 2009

பிரிவின் அர்த்தங்கள்...



எல்லாம் முடிந்த பின்

எழுத என்ன இருக்கிறது?

அன்பின் மணிகா...

விதியின் முன்

செயலற்றுப் போய்

நிற்கிறது வாழ்க்கை.

என்றாலும்

அந்த விதியினுடையது போல

உன் எழுத்தும்

நிற்கிறது உறுதியாய்.

அந்த எழுத்தில் வாழ்கிறாய்.

அந்த ஜீவிதத்துக்கு அழிவில்லை.



என்றோ ஒரு நாள்

ஏதோ ஒரு ஜென்மத்தில்

நம் சந்திப்பு நிகழலாம்.

அதுவரை காத்திருக்கும்

பொறுமையைத் தானே

உன்னிடம் கற்றுக்கொண்டேன்?

அப்போது என்னை நீ

அடையாளம் கண்டு கொள்ள,

விட்டுப் போயிருக்கிறாய் ஒர்

ஜென்ம வாசனை.

அது உன்

அன்பின் சாதனை...



(சமீபத்தில் காலம் தழுவிக் கொண்ட எழுத்தாளர் 'மணிகா' மறக்க முடியாத நண்பர். விகடன்,குமுதம்,கல்கி,வாரமலர்,தேவியில் சிறுகதைகள், 'கண்மணி'யில் நாவல்கள் 'அமுதம்' இதழில் கட்டுரைத் தொடர் என நிறைய எழுதியவர். அவரின் நினைவாக...)

Friday, November 20, 2009

அன்றும் இன்றும்...




'அப்பா, அந்திச் சூரியன்
அப்புறம் எங்கே போகுது?'
'ரேடியோவின் உள்ளிருந்து
பாட்டு எப்படி வருது?'
'கமலாவின் அப்பா மட்டும் ஏன்
காலில செருப்பு இல்லாமல் போறாரு?'
மழலைச் சிறுவனாய்
அன்று அவன் கேட்ட போது
'போய்த் தூங்குடா.'
'ஸ்கூலுக்கு டயமாச்சு, புறப்படு.'
'போய் புஸ்தகம் எடுத்துப் படி.'
என்றேன் அப்பா.
இன்று
கம்ப்யூட்டரின் முன்னால்
கவிழ்ந்திருக்கும் மகனிடம்
'டபிள் கிளிக் எப்படி பண்றது?'
'ஈ மெயில் ஐ.டி. எங்கே கிடைக்கும்?'
'ஸீ டிரைவ்னா என்ன?'
என்று கேட்கும்போது
'போங்கப்பா நான் பிஸி.'
'உங்களுக்கு லேசில் புரியாது.'
'தெரிஞ்சு என்ன செய்யப் போறீங்க?'
விரட்டத்தான் செய்வான், இயற்கை.
விசனப்பட என்ன இருக்கிறது?

-- கே.பி. ஜனா
(21-12-2006 'குமுதம்' இதழில் வெளியான என் கவிதை.)

Saturday, November 14, 2009

நாளும் பொழுதும் நம்மோடு!




ரை மணி நேரம் தான் அந்த ஸெமினார். தலைக்கு ஐநூறு பீஸ் என்றாலும் அனைத்து சீட்டும் அட்வான்ஸ் புக்கிங்கிலேயே விற்றுத் தீர்ந்திருந்தது.

'நேரத்தை நன்றாகப் பயன் படுத்துவது எப்படி?' என்ற தலைப்பில் அந்தக் கூட்டத்தில் உரையாற்றவிருந்த டைம் மேனேஜ்மென்ட் நிபுணர் காலதேவன் இண்டர்நேஷனல் ரேஞ்சில் வெகு பிரபலம் என்பதால்தான் எகிறியிருந்தது ரெஸ்பான்ஸ்.

சரியாக 10. 10. 10 - க்கு உரை ஆரம்பிக்கப்படும் என்று பெரிய எழுத்தில் விளம்பரம் சொன்னது. நேரத்தைப் பற்றிப் பேச வருகிறவர் நேரத்தோடு வருகிறாரா என்று வாட்ச் மேல் விழி வைத்துக் காத்திருந்தனர் எல்லாரும். ஆனால் அவர் வரக் காணோம்!

நேரம் ஓடிக் கொண்டிருந்தது. அங்குமிங்கும் கண்கள் அலை பாய்ந்தன. முணு முணுப்புக்கள். சலசலப்புக்கள். பெருமூச்சுக்கள்.

பத்தாவது நிமிடம் உள்ளே நுழைந்த காலதேவன், ''வணக்கம்,'' என்றார். பின் ஒவ்வொருவராக, ''உங்கள் பக்கத்தில் அமர்ந்திருப்பவர் என்ன வேலை அல்லது தொழில் செய்கிறார்? அதில் அவர் எந்த அளவு முன்னேறியிருக்கிறார் அல்லது சாதித்திருக்கிறார்?'' என்று வினவினார்.

விழித்தனர். யாருக்குமே தெரியவில்லை.

கனைத்துக் கொண்டார். ''அன்பர்களே! பேச வேண்டியவர் வரவில்லை. அந்தக் காலம் உங்கள் கையில் இருந்தது. வேறொன்றும் செய்ய இடமில்லை. ஸோ, முன்னேற வேண்டும் என்று வந்திருக்கும் நீங்கள் பக்கத்தில் இருப்பவரின் முன்னேற்றம் குறித்து அறிந்து அதை நான் கேட்ட விதத்தில் உருப்படியாகப் பயன்படுத்தியிருக்கலாமே? ஆக, இதுவரை நீங்கள் கற்றுக் கொண்டது நேரத்தை என்ன செய்யக்கூடாது என்பது.''

எல்லாரும் அசந்திருக்க, தொடர்ந்தார். ''உங்களை நான் மூன்றே கேள்விகள் தான் கேட்கப்போகிறேன்,'' என்றவர் ஒவ்வொருவராக, ''உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?'' என்று கேட்டார்.

'' ஸி.இ.ஒ. ஆகணும்!''... ''என் பிசினசை பெரிய லெவலுக்குக் கொண்டு வரணும்!''... ''அஞ்சு லட்சம் சர்குலேஷன் உள்ள பத்திரிகை நடத்தணும்!'' உற்சாகம் கொப்புளிக்க உதட்டிலிருந்து உதிர்ந்தன பதில்கள்.

''கேள்வி ரெண்டு. அதற்காக நீங்கள் என்னென்ன செய்யத் திட்டமிட்டிருக்கிறீர்கள்?''

''முதலில் ஒரு வொர்க் ஷாப் தொடங்கணும்''... ''டெஸ்ட் பாஸ் ஆகணும்.''... ''சிற்றிதழ் தொடங்கணும்.'' அட, எத்தனை புத்திசாலித்தனமான, சுவையான, கோளாறில்லாத திட்டங்கள் கோலார் சுரங்கமாக வெளிவந்தன!

இப்போது மூன்றாவது கேள்வியைக் கேட்டார். ''அப்படியானால் அதைச் செய்வதை விட்டுவிட்டு இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? அதைச் செய்வது தானே உங்களைப் பொறுத்த வரை டைம் மேனேஜ்மென்ட் அட் இட்ஸ் பெஸ்ட்? அதை நோக்கி நீங்கள் எந்த ஒரு அடி எடுத்து வைத்தாலும் அது, அது மட்டும் தானே உங்கள் நேரத்தை உரிய வழியில் உபயோகிப்பது?''

ஒரு நிமிடத் திகைப்பு. புரிந்துகொண்டனர்.

''காலம் என்பது நீங்கள் உபயோகிக்கும் ஒரு பொருள் அல்ல. காலம் என்பதே நீங்கள் தான். ஆகவே காலத்துடன் உங்கள் குறிக்கோள் கலந்துவிட வேண்டும். அதன் பின் காலம் நகர்ந்தது தெரியாமலேயே காலம் உங்களை உருவாக்கியிருக்கும், நீங்கள் உங்களை உருவகித்தது போலவே!''



-- கே. பி. ஜனார்த்தனன்

Tuesday, November 10, 2009

பறவைகள் ஏன் அதிகாலையில் பாடுகின்றன?


ம்.. அவசரம் அவசரம்...
நான் பாடி முடிக்க வேண்டும்.
ஆம்.
மனிதர்கள் விழித்துக்கொண்டு விடுமுன்
நான் முடித்தாக வேண்டும்
இந்தக் காலைக் கச்சேரியை.
அவர்கள் விழித்துவிட்டால்
சந்தோஷமாய்ப் பாடும் என்னைக் கண்டு விட்டால்
உடனே என்னைத் தங்கள்
சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் அவர்களுக்கு.
ஆம்.
சந்தோஷமான எதையும் அவர்களுக்குச்
சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும்.
சொந்தமாக்கிக் கொண்டுவிட்டபின்
எப்படி அதனிடம்
சந்தோஷம் இருக்க முடியும்
என்றறிய மாட்டார்.


-- கே. பி. ஜனார்த்தனன்
( 02-04-1987 குமுதத்தில் வெளியான என் கவிதை )

Tuesday, November 3, 2009

72877629 (சிறு கதை)










திப்புக்குரிய நிர்வாக இயக்குனர் அவர்களுக்கு,

இந்த மின்னஞ்சலை எழுதுவது மனித வள மேலாளர் மாற வர்மன்.

என் மீது நீங்கள் சுமத்தியிருக்கும், இதுவரையிலேயே முதல் முதலான புகாருக்கு விளக்கம் தர நான் கடமைப்பட்டுள்ளேன். ஒரு கொட்டைப்பாக்கு அளவில் அதை சொல்வதானால் சமீபத்திய ஆளெடுப்பில் நான் எங்கள் ஊர்ப் பையன் ஒருவனுக்கு சலுகை காட்டிவிட்டேன் என்பது.

எலுமிச்சம்பழம் உப்பில் ஊறியிருப்பதைப் போல விசுவாசத்தில் ஊறிப்போயிருக்கும் ஒருவனுக்கு இப்படி ஒரு குற்றச் சாட்டு அவன் மேல் சுமத்தப்படுகையில் எத்தனை அதிர்ச்சியாக இருக்கும் என்பதை ஒரு கணம் நீங்கள் எண்ணிப் பார்க்கக் கோருகிறேன்.

என் விளக்கத்தை ஒரே வரியில் அடக்குவதாக இருந்தால் திரு.கந்தன் என்ற அந்த நபரை எங்கள் ஊரைச் சேர்ந்தவர் என்று நான் தெரிந்து கொண்டதே அவர் நம் கம்பெனியில் சேர்ந்த அன்று காலையில் தான்! உண்மை அப்படியிருக்கையில், முதற்கண் நான் எப்படி அவருக்கு உதவ எண்ணியிருக்க முடியும்? இனி அதற்கான சான்றுகளை நான் அளிக்கிறேன்.

1. விண்ணப்பிக்கிறவர்களின் அடிப்படைத் தகுதியை பரிசீலனை செய்து குறும் பட்டியல் தயாரித்து உதவியாளர்கள் என் பார்வைக்கு வைத்த பின்னரே நான் காட்சிக்கு வருகிறேன். அப்போதும் எனக்கு அவர்களின் கல்வி மற்றும் அனுபவத் தகுதி மட்டுமே பட்டியலில் அளிக்கப்படுகிறது. அந்த மின்னஞ்சலை இத்துடன் தங்களுக்கு முன்னனுப்பியுள்ளேன்.

அடுத்து அந்த நாற்பத்து மூன்று பேரில் அந்த வேலைக்காக குறும் பட்டியல் செய்யப்பட்ட பன்னிரண்டு பேரையும் நான் இந்த மாதம் இரண்டாம் தேதி தொலைபேசியில் பேட்டி கண்டதன் முழு உரையாடலும், கம்பெனி வழக்கம் அப்படி ஒன்றைக் கோரவில்லை எனினும், என்னுடைய சுய கண்ணியத்தின் உந்துதலின் பேரில் ஒரு வார்த்தை விடாமல் ஒலி நாடாவில் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளது. அதைத் தாங்கள் தங்கள் ஒய்வு நேரத்தின் எந்தக் கணத்திலும் கேட்டுப் பார்க்கலாம். அப்படிக் கேட்டுப் பார்க்கும் சந்தர்ப்பத்தில் தாங்கள் கீழ்க்கண்ட விஷயங்களைத் தெரிந்து கொள்வீர்கள்.

2. அந்தப் பேட்டிகளில் மிக நீளமானதும் அவற்றின் சராசரி நேரமான இருபத்தொன்று நிமிடங்களை விட ஏழு நிமிடம் அதிகமானதும் ஆன ஒரே பேட்டி திரு.கந்தனுடனானது தான்.

3. பொதுவான கேள்விகளைத் தவிர நான் அனைவரிடமும் அவர்களின் புத்தி சாதுரிய விகுதியை தீர்மானிக்கக் கேட்கும் கேள்விகளில் மிகக் கடினமான கேள்வி கேட்கப்பட்டவரும் அவருடைய துரதிர்ஷ்டவசமாக அல்லது இப்போது என்னுடைய அதிர்ஷ்டவசமாக திரு கந்தன் தான். மிகக் கடினமான அந்தக் கேள்வியின் விடை 72877629 என்கிற எட்டிலக்க எண் ஆகும்.

தாங்களே சொல்லுங்கள். அந்தச் சரியான பதிலை அந்தத் தொலைபேசியில் அடுத்த சில வினாடிகளிலேயே சொல்லுவதற்கு முடிகிற ஒரு விண்ணப்பதாரரின் புத்தி சாதுரிய விகுதியை நான் 180 என்று அளவிட்டதில் என்ன தவறு இருக்க முடியும்? அப்படி ஒரு பிரகாசமான நபர் அடையாளம் கண்டு கொள்ளப்படுகையில், நிறுவனத்தின் முன்னேற்றத்தை மனதில் கொண்டு 24x7 மணி நேரமும் உழல்பவனான ஒரு பணியாளனால் அவனை எப்படிப் புறக்கணிக்க முடியும்? மிக்க மகிழ்வுடன் மட்டுமே அல்லவா அவன் அந்த நபருக்கு நியமன உத்தரவை வழங்க முடியும்?

ஆகவே தாங்கள் என் மீது கொண்டுள்ள சந்தேகம் தவறானது என்று தங்களுக்குத் தெரிவித்துக் கொள்வதோடு, தாங்கள் என் மேல் நடவடிக்கை எடுக்காமல் இருக்கக் கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய முழு விசுவாசத்துடன் என் பணியைத் தொடருவேன் என்றும் இனிமேல் இதுபோன்ற குற்றச்சாட்டு எதுவும் எழாமல் பார்த்துக் கொள்வேன் என்றும் உறுதியளிக்கிறேன்.

நம்பிக்கையுடன்,

மாற வர்மன்.


2


ன்புள்ள மாறவர்மன்,

தங்கள் விளக்கத்தை சுருக்கமாக நிராகரிக்கும் நிலைக்குத் தள்ளப் படுகிறேன் (அதற்கான காரணமும் இந்த மின்னஞ்சலிலேயே உங்களுக்கு விளங்கும் என்று நான் நம்புகிறேன்). எனினும், என்றும் நிறுவனத்துக்கு எந்த ஊறும் நேராத விதத்தில் பணியாற்றுவேன் என்ற தங்கள் கூற்றின் மீது மேலும் ஒரே ஒரு முறை நம்பிக்கை வைத்து வாய்ப்பு அளிக்க நான் உத்தேசித்திருப்பதால் உங்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

அன்புடன்,

சத்தியமூர்த்தி.

பி.கு.: இத்துடன் நீங்கள் எனக்கு விளக்க அஞ்சல் எழுதும்போது அதனுடன் தவறுதலாக முன்னனுப்பிய, இந்த மாதம் ஒன்றாம் தேதியிட்ட, உரைப் பகுதியில் 72877629 என்ற எண் மட்டுமே கொண்டிருந்த, திரு.கந்தன் என்ற அன்பருக்கு நீங்கள் அனுப்பியிருந்த மின்னஞ்சலை உங்களுக்கு திருப்பியுள்ளேன்.

<><><>

--கே. பி. ஜனார்த்தனன்
(சர்வேசன்500 – நச்னு ஒரு கதை 2009 – போட்டிக்காக எழுதிய கதை)

Friday, October 30, 2009

கண்ணாடி அரண்



வசரமாக பைக்கில் விரைந்து கொண்டிருந்த நான் ‘டம் டமா... டம் டமா...’ என்ற உடுக்கைச் சத்தம் கேட்டுத் திரும்பினேன்.

ரோட்டோரமாக இரு புறமும் பலர் கூடி நின்று பார்த்துக் கொண்டிருக்க... அந்தரத்தில் கயிற்றின் மீது ஒரு சிறுமி. அஞ்சு வயசு கூட இருக்காது. கையில் ஒரு கழியை வைத்துக் கொண்டு லாகவமாக அடி மேல் அடி வைத்து அந்த ஒற்றைக் கயிற்றின் மேல் நடந்து கொண்டிருந்த காட்சி என்னை உலுக்கியது.

பைக்கை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினேன்.

சாலையோரமாக தரையில் முளையடித்துக் கட்டிய கயிற்றை ரெண்டு பக்கமும் பெருக்கலாக நிறுத்திய மூங்கில்களின் மேலாகக் கொண்டு போயிருந்தார்கள். அதன்மேல் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து இந்தப் பக்கம் வந்து சேர்ந்தாள் சிறுமி.

இறங்கப் போகிறாள் என்று நினைத்தால், குனிந்தவள் தலையில் ஒரு சின்னச் சொம்பை வைத்தான் அந்தச் சிறுமியின் தகப்பன். அதையும் வைத்துக் கொண்டு நிமிர்ந்தவள் சொம்பு கீழே விழுந்து விடாமல் மீண்டும் கயிற்றில் அடிகளை எடுத்து வைத்துத் திரும்பி நடந்தாள்.

எங்கே தலை குப்புற விழுந்து விடப் போகிறாளோ என்று எனக்குப் படபடப்பாக இருந்தது.

மூன்றாவது முறையாக அவன் ஓர் அலுமினியத் தட்டைக் கயிற்றின் மீது வைக்க அதை ஒரு காலால் அழுத்திக் கயிற்றின் மேல் நகர்த்தியபடி மறு முனை வரை நடந்து சென்றாள் அந்தச் சிறுமி.

இதோடு இது முடிந்து அந்தப் பெண் குழந்தை கீழே இறங்கிவிடக் கூடாதா என்று நினைத்தேன். கீழே அமர்ந்திருந்த அந்தச் சிறுமியின் தாய் ஒரு தட்டை எடுத்துக் கொண்டு காசு வாங்கக் கிளம்பினாள். அப்பாடா, இதுதான் கடைசி ரவுண்ட்!

உலகம் புரியாத வயதில் அந்தச் சிறுமி உயிரைப் பணயம் வைத்து நிகழ்த்திய சாகசத்தில் உருகிப் போயிருந்தேன் நான்.

அவரவர் ஐம்பது காசு, ஒரு ரூபாய், அதிக பட்சம் ஐந்து ரூபாய் வரை தட்டில் போட, நான் முழு ஐம்பது ரூபாய் நோட்டைப் போட்டுவிட்டு, அந்தத் தாய் எவ்வளவு சந்தோஷப் படுகிறாள் என்று ஆவலுடன் அவள் முகத்தைப் பார்த்தேன். நிமிர்ந்து என்னைப் பார்த்த அவள், சட்டென்று பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள்.

ரொம்பச் சின்னதாக ஒரு விசும்பல் கேட்ட மாதிரி இருந்தது. தட்டில் ஒரு கண்ணீர்த் துளி விழுந்து தெறித்தது. இடுப்பிலிருந்த கைக்குழந்தையின் தலையைத் தடவிக் கொடுத்தபடியே சட்டென்று நகர்ந்துவிட்டாள்.

அவள் செயல் எனக்குப் புரியவில்லை. ஏன், எதற்காக அவள் அழ வேண்டும்?

வீடு வந்து மனைவியிடம் நடந்ததைச் சொல்லி விளக்கம் கேட்டேன்.

''இதில் புரிய என்னங்க இருக்கு? பார்த்திட்டிருந்த யாரோ ஒருத்தராகிய உங்களுக்கே அந்தச் சிறுமி செய்த சாகசம் அவ்வளவு வருத்தத்தை உண்டாக்கியிருந்ததுன்னா, பெத்த தாயான அவளுக்குத் தினம் தினம் அந்தக் குழந்தையை அப்படி ஒரு காரியத்தைச் செய்ய வைக்கிறது எவ்வளவு கஷ்டமா இருந்திருக்கும்? கல்லாலானதுன்னு அவள் மனசுக்குப் போட்டிருந்த அரண், வெறும் கண்ணாடிதான்கிறது எப்பவாவது உங்களை மாதிரி சில பேர் இப்படி அதீதக் கருணைங்கிற கோலியை எறியும்போதுதானே அவளால் தெரிஞ்சுக்க முடியுது?''

என்ன தெளிவாகச் சொல்லிவிட்டாள் என் மனைவி! ஒரு பெண்ணின் மனது இன்னொரு பெண்ணுக்குத்தான் தெரியும்னு சும்மாவா சொன்னாங்க?

(விகடனில் பவழவிழா பரிசு பெற்ற குட்டிக் கதை.) -- கே. பி. ஜனார்த்தனன்.

Friday, October 9, 2009

இன்று முதல்...

புதிதாய் ஏதேனும் சொல்ல பூத்திருக்கும் என் வலைப்பூ. 'ப்பூ, இவ்வளவு தானா!' என்று சொல்லிவிடாமலிருக்க முயல்வேன். அன்பர்கள் ஆதரவை வேண்டுகிறேன்...
கே.பி.ஜனார்த்தனன்.