Thursday, August 29, 2019

அங்கும் இங்கும்.. (நிமிடக்கதை)

அன்புடன் ஒரு நிமிடம் - 134

"ஒரு பக்கம் மட்டுமே கேட்டு ஒரு முடிவுக்கு வர்றது, அவங்க எத்தனை வேண்டியவங்களா இருக்கட்டும், ரிஸ்க்தான் இல்லையா?" என்றார் வாசு.
"என்ன நடந்திச்சு? யார் அது?" என்றாள் ஜனனி.
"ஒருத்தரில்லை, ரெண்டுபேர்.  சொல்றேன். முதல்ல நம்ம சேகர். கொஞ்ச நாளாவே சொல்லிட்டிருந்தான்... அவன் வீட்டு முன் போர்ஷனை வாடகைக்கு விட்டால் கொஞ்சம் சேமிப்பாகும்னு எவ்வளவோ முயற்சி பண்ணியும் சரியான ஆட்கள் கிடைக்கலேன்னு... காரணம் வர்ற எந்தக் குடும்பத்தையுமே மைதிலிக்கு பிடிக்கலேன்னு... நானும் வேலை மெனக்கெட்டு அவனுக்கு பல யோசனைகளை சொல்லியிருக்கேன். நேத்து மைதிலியோடு அதைப்பத்திப் பேச சந்தர்ப்பம் கிடைச்சப்பதான் தெரிஞ்சது நடந்ததே வேறேன்னு.’
”என்ன சொன்னாள்?”
”அவளுக்கு  ஒண்ணும் பிடிக்காம போகலியாம். துணைக்கு ஒரு குடும்பம் இருந்தால் நல்லதுன்னு நினைக்கிறாள் அவள். ஆனா சேகர்தான் அதை கௌரவக் குறைச்சல்னு நினைச்சு அதையும் இதையும் சொல்லி தள்ளிப் போடறானாம். தயங்கறானாம். என்னத்தை சொல்ல?”
”அடுத்ததை!” என்றாள்.
அவளை முறைத்துவிட்டு தொடர்ந்தார்.
”அடுத்தது நம்ம கண்ணன்.. ஊரிலிருக்கிற அவங்க அப்பா அம்மாவை உன்னோட  இங்கேயே வெச்சுக்கலாமே, உதவியா இருக்குமேன்னு கேக்கிறப்பல்லாம், இங்கே எங்களுக்கு எந்த உதவியும் தேவையில்லை, வந்தால் அவங்களையும் சேர்த்து கவனிச்சுக்க நம்மால முடியாது, அவங்க அங்கேயே இருந்துக்கறதுதான் சரிப்பட்டு வரும்னு எப்பவும் சொல்வான். நானும் அதை நம்பினேன். நேத்து அவங்கப்பாவை ஊரிலே பார்த்தப்பதான் தெரிஞ்சது விஷயம். இவன் கூப்பிட்டுட்டுதான் இருக்கானாம் வற்புறுத்தி. அவங்கதான் டவுன் நமக்கு ஒத்துவராதுன்னு வரலையாம். வீணா ஜம்பத்துக்கு என்கிட்ட அப்படி சொல்லியிருக்கான்... அதான் சொன்னேன்.  எத்தனை பழகினவங்களாயிருக்கட்டும். அவங்க சொல்றதை அப்படியே நம்பிவிடக் கூடாது... ஒரு விஷயத்தை சொல்றது அவங்க விருப்பப்படியோ அல்லது சுய நல நோக்கத்திலோதான். இந்த பாயிண்டைத் தெரிஞ்சுக்க  எனக்கு இத்தனை நாளாயிருக்கு.”
”அதாவது, தப்பான பாயிண்டை!”
”என்னசொல்றே நீ?”
”பின்னே என்ன சொல்றது... சேகர் சொன்னது பொய்யாக இருக்கலாம். தன் ஈகோவுக்காகவோ இமேஜுக்காகவோ அப்படி ஒரு சப்பைக்கட்டு கட்டியிருக்கலாம். அதே சமயம் கண்ணன் மேட்டரை எடுத்திக்கிட்டா அவங்கப்பா சொன்ன மாதிரி தான் நடந்திருக்கணும்னு எப்படி தீர்மானிக்கப் போச்சு? கண்ணன் சொன்னது உண்மைதான். மகனை விட்டுக் கொடுக்காமல் அவங்க பேசியிருக்காங்க. என்ன இருந்தாலும் பெத்தவங்க இல்லையா... மூணாம் மனுஷனான உங்ககிட்டே எப்படி மகனை விட்டுக் கொடுப்பாங்க? மைதிலிக்கு நீங்க சித்தப்பா. அதனால அவள் மனசிலிருக்கிறதை மறைக்காம சொல்லிட்டா. இல்லேன்னா அவளும் தன் கணவனை விட்டுக் கொடுத்துப் பேசியிருக்க மாட்டாங்கன்னுதான் நினைக்கிறேன்.”
”நீ என்ன சொல்ல வர்றே, நான் இப்ப கண்டுபிடிச்சது..”
”இப்படி எதையும் கண்டு பிடிக்காதீங்கன்னுதான்..”
><><
('அமுதம்' டிச.2015 இதழில் வெளியானது)

Thursday, August 22, 2019

அந்த 20 நிமிடம்... (நிமிடக்கதை)

அன்புடன் ஒரு நிமிடம் -133

சென்னைக்கு வந்திருந்தனர் வினோதும் தியாகுவும். வரிசையாக வேலைகளை முடித்துவிட்டு மாலையில் ரூமுக்கு வந்தபோது மணி ஐந்து முப்பது. 

உடனே குளியலறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டான் வினோத்.

”சீக்கிரம், சீக்கிரம்! ஐந்து நிமிஷம்தான் என்ன?” என்றான் தியாகு.

”என்னது, நான் குளிச்சிட்டு வர சரியா பதினஞ்சு நிமிஷம் ஆகும்! தெரிஞ்சதா?”

”டேய், அதெல்லாம் எப்படி முடியும்? இப்பவே கிளம்பினாத்தான் ஒன்பது மணிக்குள் ஷாப்பிங்கை முடிச்சிட்டு சாப்பிட்டு படுத்து அதிகாலை நாலு மணிக்கு  ட்ரையினைப் பிடிக்க முடியும். மறந்துட்டியா?”

”நோ வே,” என்றபடி பாத்ரூமுக்குள் நுழைந்தவன் பதினைந்து என்றால் சரியாக பதினைந்தாவது நிமிடம்தான் குளித்துமுடித்து வெளியே வந்தான்.

”என்னடா இப்படி பண்ணிட்டே?” என்றான் ஆட்டோவில் ஏறியதும் தியாகு

”காரணம் இருக்கு. நீயே யோசிச்சுப்பார். காலையிலேர்ந்து அலையறோம். ஆட்டோ பஸ்னு வேர்க்க விறுவிறுக்க...கம்பெனி மீட்டிங் அது இதுன்னு  தொடர்ந்தாப்பல பல வேலைகள்.  உடலுக்கு எத்தனை அலுப்பு! களைப்பு! இங்கே மட்டுமில்லே, ஊரிலேர்ந்தாலும் தினமும் இப்படி அடுத்தடுத்து வேலைகள் கொடுத்துட்டே இருப்பதில் உடம்பு எத்தனை சூடாகும்? களைப்பாகும்? அந்த அலுப்பையும் களைப்பையும் சூட்டையும் தணிக்க பதினஞ்சு நிமிஷம் ஒதுக்கி குளிர்ந்த நீரில் குளிப்பது வைடல் ஃபார் அவர் ஹெல்த்! எதை செய்யாவிட்டாலும் இதை மட்டும் நான் ஒரு நாளும் செய்யத் தவறினதே இல்லை. தவறவே மாட்டேன்.”

”அட, நான் இதை இப்படி நினைச்சுப்பார்த்ததில்லை. இனி நானும் இதை கடைப்பிடிக்கணுமே!”

ஷாப்பிங் முடிந்து வந்ததும் தியாகு ஐபாட் எடுத்தான், காதில் இயர் போனைச் செருகிக் கொண்டான். ”இருபது நிமிஷம் டிஸ்டர்ப் பண்னாதே,” என்றபடி சாய்ந்து கொண்டான் அந்த ஒடுங்கிய பால்கனி  செயரில், ”எனக்கு மியூசிக் கேட்கணும்.”

பிற்பாடு சாப்பிட செல்லும்போது சொன்னான், ”ஒரு நாளில் நம் உடம்பு எத்தனை சூடாகுது, களைப்பாகுதுன்னு சொன்னாயல்லவா? அதே போல தினசரி நாம் கொள்ளும் கோபதாப உணர்வுகளாலும் டென்ஷன்களாலும் நம்ம மனசு எத்தனை சூடாகுது, களைப்பாகுதுன்னு எண்ணிப் பார்த்தேன். தினமும் அந்தக் களைப்பைப் போக்கி அதை கூல் படுத்திட தவறக்கூடாது இல்லையா ? அதற்குத்தான் இந்தக் கட்டாய இருபது நிமிஷம் ஒதுக்கினேன். இந்த இருபது நிமிஷம் நல்ல மியூசிக்கைக் கேட்பது அல்லது சிறந்த ஓர் ஆன்மிக புத்தகத்தைப் படிப்பது என்று வைத்துக்கொண்டால் மனசுக்கு புத்துணர்ச்சி உண்டாகிவிடும். அதான்.”

”நானும் இதைக் கடை பிடிக்கணுமே!” என்றான் வினோத்.

><><

Monday, August 12, 2019

அவர்கள்... (நிமிடக்கதை)

அன்புடன் ஒரு நிமிடம் - 132

கடைத்தெருவில் சம்பத்தை சந்தித்த சாத்வீகன் புருவங்கள் உயர்ந்தன.

”சௌக்கியமா அங்கிள்?” என்றபடியே வந்தவனிடம், ”ஆ, சம்பத்! உன்னை எதிர்பார்க்கலை நான். இப்ப பசங்களுக்கு லீவாச்சே? எங்கானும் அழைச்சிட்டுப் போயிருப்பேன்னு...” என்றார்

”அதை ஏன் கேக்கறீங்க?” என்று அவரை நிழலுக்கு அழைத்தவன், ”அழைச்சிட்டுத்தான் போகணும். முடியலே.”

”ஏன் வரமாட்டேங்கறாங்களா?”

”அவங்க துடிக்கிறாங்க. என்னாலதான் அழைச்சிட்டுப் போக முடியலே.”

”புரியறாப்பல...”

”அவங்க இந்த முறை கிராமத்துக்குப் போகணும்னு ஆசைப்படறாங்க, அதான்.. நேச்சர் பத்தி நிறைய பார்க்கிறாங்க, கேள்விப் படறாங்க. வயல்காடு, மலையோரம், தென்னந்தோப்பு, சிற்றாறு, குளம் இப்படி ஒரு வாரம் தங்கி அனுபவிக்கணுமாம்.” 

”கூட்டிப்போக வேண்டியதுதானே உங்க ஊருக்கு?”

”அங்கேதான் வீடு இல்லையே... லாட்ஜும் கிடையாது. எங்கே போய்த் தங்குவேன்?”

”என்னப்பா இப்படி சொல்லிட்டே? அங்கே உனக்கு நிறைய சொந்தக்காரங்க இருக்கிறாங்களே? அவங்க வரசொல்லி அழைச்சிருப்பாங்களே வருஷா வருஷம்? இந்த வருஷம் ஜம்முன்னு போய் இறங்கிட வேண்டியதுதானே?”

”யாருமே அழைக்கலே. அதான் பிராப்ளம்!”

”என்னது?”

”ஆமா. இத்தனைக்கும் ஊரிலேர்ந்து எங்க வீட்டுக்கு வந்து தங்காதவங்க கிடையாது. ஆனா ஒருத்தராவது நம்மைக் 
கூப்பிடணுமே? ஒருத்தருக்கும் அந்தளவு அன்பு, பாசம் இல்லே. எல்லாம் வேஷம்.” 


”தெரியும். நான் ஒரிரு தடவை  உன் வீட்டில் சொந்தக்காரங்களைப் பார்த்திருக்கேன்.” நினைவு கூர்ந்தார் அந்த நாட்களை. 

”எல்லாம் வேஷம் போடற ஆட்கள், மாமா.”

யோசித்த இவரோ மறுத்தார் தலையைப் பலமாக ஆட்டி. ”உன் கிராமத்து சொந்தக்காரங்களை அப்படி சட்டுனு தவறா எடை போட்டுடாதே, எனக்குப் புரியுது ஏன்னு.”

”ஏன்?”

”அவங்க பயப்படறாங்க....நினைவு படுத்திப் பாரு. இங்கே உன் வீட்டில் வந்து தங்கியபோது நீங்க எப்படி வாழறீங்கன்னு 
அவங்க பிரமிப்போட கவனிக்கிறாங்க. உங்க வாழ்க்கை முறை அவங்களை திகில் படுத்தியிருக்கு. அதான் தயங்கறாங்க உங்களை அங்கே அழைக்க.’ 

”அப்படி என்ன தயக்கம்?”

”ஆமா. அது குக்கிராமம். ஓட்டு வீட்டிலே வாழறாங்க. நீங்க வந்தா அவங்களால உங்களை திருப்தியா கவனிச்சுக்க முடியுமான்னு பயம். உங்களால ஏ. சி. இல்லாம தூங்க முடியுமா, தூசியில புழங்க முடியுமா, புழுதி கிளம்பும் மண் சாலையில நடக்க முடியுமா, கலங்கின ஆற்று வெள்ளம் ஒத்துக் கொள்ளுமா, இண்டர்நெட் இல்லாம இருக்க முடியுமா, ஷாப்பிங் மால் ஏதுமில்லாம பொழுது போகுமா, பர்கர் பீட்சாவை மறக்கமுடியுமா... இப்படி பல சந்தேகங்கள். அதான் அந்தத் தயக்கம்.”

”அப்படீங்கறீங்க?”

”ஆமா,” என்றவர், ”நீ மட்டும் அங்கே வர விரும்பறோம்னு சொல்லு. அப்புறம் பாரேன் அவங்க துள்ளிக் குதிக்கிறதை!” 

”இதோ இன்னிக்கே போன் பண்றேன்,” என்று சென்றவன் அடுத்தவாரம் அங்கிருந்து உற்சாகமாக பேசினதைக் கேட்டு சந்தோஷமடைந்தார் தன் ஊகம் சரியானதில். 

('அமுதம்' டிச.2015 இதழில் வெளியானது)

Saturday, August 3, 2019

அந்த சந்தோஷமும்...(நிமிடக்கதை)

அன்புடன் ஒரு நிமிடம் - 131

வாசு வீட்டுக்குள் நுழைந்த போது மணி நாலு. பெயிண்ட் அடிக்க வந்தவர்கள் கையில் கேன்களை எடுத்துக் கொண்டு ஹாலுக்குள் நுழைந்திருந்தனர். அப்போதுதான் டீ குடித்துவிட்டு வந்திருந்த திருப்தி முகத்தில் ஒளியிட்டது.
ஜனனியிடம் சொல்லிவிட்டுப் போயிருந்தார், நாலு மணிக்கு டீக்கு பணம் கொடுத்துவிடு என்று. கொடுத்திருக்கிறாள் கரெக்டாக.  
”டீ சாப்பிட்டிட்டு வந்தவுடன் அவங்க கிட்ட ஒரு உற்சாகம் தொற்றிக்கிச்சு பார்த்தியா ஜனனி?” 
”ஆமா. ரொம்பவே. அதைப் பார்த்து நமக்கொரு சந்தோஷம் வருது,” என்றவள், ”இப்பதான் நான் போட்டுக் கொடுத்தேன்,”
”என்னது, நீயா?” சுர்ரென்று கோபம் மேலிட்டது. காட்டிக் கொள்ளவில்லை. இப்ப வேண்டாம். அவள் மூடைக் கெடுக்க வேண்டாம்.
ஆனால் அடுத்த  நிகழ்வில் அவராலேயே கட்டுப்படுத்த முடியவில்லை கோபத்தை.
கண்ணாடி பதித்திருந்த ட்ராயிங்க் டேபிளை காட்டி எப்படியிருக்கு என்றாள்.
பள பளவென்று அழகாக மின்னிற்று. ஒரு கம்பீரம் வந்து ஏறிக் கொண்டிருந்தது. 
”ஆஹா! நாம உபயோகிக்கிற டேபிளை நல்லா துடைச்ச பிறகு பார்த்தா எத்தனை சுகமா இருக்கு!"
”ஆமாங்க,” ஆமோதித்தாள். 
”செண்பகத்துக்கு ஏதாச்சும் தனியா காசு கொடு.” வேலை செய்யும் பெண் அழகாகத் துடைத்ததில்   அவருக்கு திருப்தி. 
”ஐயோ நான்தான் துடைச்சேன்.” 
”நீயா? உனக்கு ஏன் இந்த வேலையெல்லாம்? வயசாச்சேன்னு கொஞ்சம் கூட பொறுப்பில்லாம ... அதான் இதையெல்லாம் செய்யத்தான் அவங்க இருக்கிறாங்களே, அப்புறம் நாம ஏன் செய்யணும்? சொன்னா கேக்கிறதேயில்லை.” படபடவென்று பொரிந்து தள்ளிவிட்டார்.
”நான் ஒண்ணு சொல்லட்டுமா... எனக்கு கொஞ்சம் ஆசை அதிகம். அதனாலதான் நானே துடைச்சேன்.”
”என்னது?”
’இப்ப நீங்க சொன்னதுதான். இந்த டேபிளை நல்ல சுத்தமா துடைத்தபின் பார்க்கிறது சுகம் தானே?” 
”ஆமா.”
”எனக்கு துடைக்கிற சுகமும் வேணும்!”
”என்னது?”
”ஆமா. நாம உபயோகிக்கிற டேபிளை  விதம் விதமா அழகா கிளீன் பண்றதும் ஒரு சுகம் தான். எனக்கு அதும் வேண்டியிருக்கு.”
”ஓஹோ?”
”நேத்து அவங்களுக்கு டீ போட்டுக் கொடுத்ததும் அப்படித்தான். அவங்களுக்கு டீ கொடுக்கிறது ஒரு திருப்தின்னா அதை நானே என் கையால் தயாரிச்சுக் கொடுக்கிறதிலே இன்னொரு திருப்தி ஏற்படுது. அதும் எனக்கு வேணும். நான் டபிள் சந்தோஷம் அடையறதில ஏன் நீங்க வருத்தப் படறீங்க?”
அவளை அவர் பார்த்ததில் ஒரு பெருமை வந்து தொற்றிக் கொண்டது.
>><<
('அமுதம்'நவ. 2015 இதழில் வெளியானது)