Wednesday, April 13, 2011

கும்பிடப்போன தெய்வம்...



குஷி தாங்கவில்லை ராஜுவுக்கு.

அவனுடைய அபிமான நடிகை அஜந்தாஸ்ரீ தங்கள் ஊருக்கு ஒரு நாள் ஷூட்டிங்குக்காக வருகிறாள் என்று அறிந்ததுமே எப்ப வரும், எப்ப வரும் என்று காத்திருந்த அந்தப் பத்தாம் தேதியும் வந்தது.

''என்னடா ராஜு, இன்னிக்கு ஞாயிற்றுக் கிழமை, உனக்குக் காலேஜ் இல்லை தானே? என்னோட துணையா கோயிலுக்குக் கொஞ்சம் வாயேன். பக்கத்து ஊர் கோயிலிலே இன்னிக்கு விசேஷம்.'' - அம்மா கேட்டாள்.

''போம்மா நீ வேறே! எனக்கு அர்ஜண்டா ஒரு வேலை இருக்கு,'' என்று மறுத்து விட்டு காலையிலேயே கிளம்பி விட்டான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு.

டப்பிடிப்பு ஆரம்பமாகியிருந்தது. 'சே, இந்த அம்மா வேறே பேசிப் பேசி அரை மணி நேரம் வேஸ்ட் பண்ணிட்டாங்க.' சலித்துக் கொண்டே தன் அபிமான நடிகையை தேடினான்.

அஜந்தாஸ்ரீயைக் கானோம்.

டைரக்டர் யாரிடமோ சண்டை போட்டுக் கொண்டிருந்தார். மெல்ல ஒரு அசிஸ்டன்ட் டைரக்டரை அணுகி விசாரித்தான். ''ஹீரோயின் எங்கே?''

''ரெண்டு மணி நேரம் பர்மிஷன் கேட்டாங்க. டைரக்டர் முடியாது இன்னிக்கு நிறைய ஷாட்ஸ் இருக்குன்னார். கெஞ்சி பர்மிஷன் வாங்கிட்டுப் போயிட்டாங்க!''

''அப்படியா, எங்கே?''

''பக்கத்து ஊர் கோயிலிலே ஏதோ விசேஷமாமே?''


(குமுதம் 06-09-2006 இதழில் வெளியானது)

Monday, April 4, 2011

பாடாத பாடல்கள் - 2






பாடல் காட்சி வெறும் பாடல் காட்சியாக மட்டுமில்லாது திரைக் கதையின் ஓர் அங்கமாக இருந்தால் எத்தனை ருசிகரமாக இருக்கும்! இதோ இப்ப பாட்டு வரும்னு சொல்றமாதிரி இல்லாமல் off beat ஆக, பொருத்தமாகவும் புதுமையாகவும் வந்த பாடல்கள் சிலவற்றை பதிவிட்டிருந்தேன். இதோ அதன் தொடர்ச்சி.
7 . சொல்ல வேண்டியதே இல்லை. அற்புதமாகத்தானே இருக்கும் அந்தக் காட்சி? 'நூறு பாடல் தொடர்ந்து பாட வேண்டும் அம்பிகாபதி. ஆனால் ஒரு முறை கூட எதிரில் மாடத்திலிருக்கும் தன் காதலி அமராவதி(பானுமதி)யின் முகத்தைப் பார்க்கக் கூடாது..' இந்த நிபந்தனைக்கு உட்பட்டு சிவாஜி ாடுவார். எங்கே அவர் தோற்று விடுவரோ என்ற பதைபதைப்புடன் நம்மைப் பார்த்து ரசிக்க வைக்கும் அந்தப் பாடல் ''சிந்தனை செய் மனமே..'' மறைந்த மேதை ஜி. ராமநாதன் இசையில் அமைந்த மறையாத பாடல் அம்பிகாபதி படத்தில் வருவது. கடைசியில் அவர் தோற்று விடுவதால் தான் கதை நாட்டில் காவியமானது, பாடல் நம் மனதில் ஓவியமானது.
8. 'பட்டணம் தான் போகப் போறேண்டி பொம்பளே..பணம் காசு பார்க்கப் போறேண்டி, நல்ல கட்டாணி முத்தே நீயும் வாடி பெண்டாட்டி தாயே...' என்று கணவன் அழைக்க 'டவுனு பக்கம் போகாதீங்க.. மாமா டவுனாகிப் போயிடுவீங்க,' என்று அவள் தடுக்க அந்தத் தெருக் கூத்து பாடல் 'காலம் மாறிப் போச்சு' (1957)படத்தில் வரும். பட்டணத்தில் என்னென்ன சொகுசான சௌகரியங்கள் என்று அவன் அடுக்க அதில் என்னென்ன இக்கட்டும் இடரும் என்று அவள் சொடுக்க பாட்டிலேயே அவன் திருந்தும் சுவையான பாடல்.
9.உலவும் தென்றல் காற்றினிலே... ராஜ குமாரியை குறி வைத்து ஏமாந்து மந்திரி குமாரியை மணந்த வில்லன் அவளை ஓடத்தில் உலா அழைத்துப் போகும் பாடல். ஒவ்வொரு வரியும் அர்த்தம் உள்ளதாக இருக்கும் இந்தப் பாடலில். 'தெளிந்த நீரைப் போலத் தூய காதல் கொண்டோம் நாம்...' என்றவள் தொடங்க, 'களங்கம் அதிலும் காணுவாய், கவனம் வைத்தே பார்.'. என்று அவன் கோடி காட்ட அந்த அப்பாவி மடந்தை அதையும் அவன் குறும்பாக எடுத்துக் கொண்டு 'குதர்க்கம் பேசி என்னை மயக்க எங்கு கற்றீரோ?' என்று பாடுவாள். ஜி. ராமனாதனின் மிக மனம் தொடும் இசையில் உருவான இந்தப் பாடலுக்கு நிகர் இதுவரை வரவில்ை.
10. ஆயுதம் இழந்து நிற்கும் ராவணனைப் பார்த்து ராமன் 'இன்று போய் நாளை வாராய்...' என்று சொல்வான் அல்லவா? சம்பூர்ண ராமாயணம் படத்தில் அந்தக் காட்சியைத் தொடர்ந்து வரும் காட்சி இருக்கிறதே இப்போது நினைத்தாலும் மனதில் உருக்கம் இழையோடும். ஆம், அரண்மனைக்கு வந்ததும் ராவணன் அந்த தன் அவல நிலையை நினைத்து வீணை இசைத்து மனம் வாடிப் பாடும் பாடல் கே. வி. மகாதேவன் இசையில் மிளிரும். ''இன்று போய் நாளை வாராய்.. என எனை ஒரு மனிதனும் புகலுவதோ...மண் மகள் முகம் கண்டே மனம் கலங்கிடும் நிலை ஏன் கொடுத்தாய் இறைவா...''
11. 'நீயே உனக்கு என்றும் நிகரானவன்.. அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி வந்தவன்...' இந்தப் பக்கம் சிவாஜி குனிந்து தரையில் அமர்ந்து தன் காதலியின் அப்பா முன் மரியாதையாக பாட அந்தப் பக்கம் சோபாவில் அமர்ந்திருக்கும் எம். ஆர். ராதா உற்சாகமாகி உடன் ஸ்வரம் பாட, 'மாமா!' 'மாப்ளே!' என்று ஒருவரை ஒருவர் நெருங்க ஏற்கெனவே சிவாஜியைக் கொலை செய்ய வந்த வில்லனின் முகமும் வருங்கால மாமாவின் முகமும் ஒன்று போலிருக்கும் என்பதறிந்த நாம் அவர்கள் முகம் பார்த்து பதறப் போகும் வினாடியை எதிர்பார்த்து விலா நோக சிரித்து ரசிக்கும் அந்த சுவையான கர்நாடக சங்கீத காமெடிப் பாடல்...
12. மேற்கொண்டு ஒரு வார்த்தை சொல்ல வேண்டாம். சிவாஜி நடித்த முதல் மரியாதை. என்றாலே போதும், அந்த அற்புதமான காட்சிப் பாடல், இளைய ராஜாவின் 'பூங்காற்று' எல்லார் மனதிலும் திரும்பும்!