Monday, May 23, 2016

நல்லதா நாலு வார்த்தை... 68

'அறவே பயனற்ற ஓரு பிற்பகலை 
அறவே பயனற்ற ஒரு விதத்தில் 
உங்களால் கழிக்க முடியுமாயின்
எப்படி வாழ்வதென்பதைப் பயின்று விட்டீர்கள்.’ 
- Lin Yutang
('If you can spend a perfectly useless afternoon in a
perfectly useless manner, you have learned how to live.')
<>

'வீடிருந்து என்ன பயன்
அதை வைத்திட  
ஏற்றுக் கொள்ளத்தக்க ஓர்
கிரகம் உங்களுக்கு இல்லையெனில்?’
- Thoreau
(”What is the use of a house if you haven't got
a tolerable planet to put it on?’)
<>

’வாழ்வில் விரும்பும் அனைத்தும் 
நீங்கள் அடையலாம் 
மற்றவர் விரும்புவதைப் பெற்றிட
சற்றே உதவுவீராயின்.'
- Zig Ziglar
('You can have everything in life you want, if you
will just help other people get what they want.')
<>

'ஆனந்தம் அடைய வழி ஓர்
அன்புப் பசை வலையை 
சிலந்திபோல தன்னிடமிருந்து
அனைத்து திசைகளிலும் விரித்து,
வரும் அனைத்தையும் 
அதில் பற்றிக் கொள்வது.’
- Leo Tolstoy
(”The means to gain happiness is to throw out from oneself like a spider
in all directions an adhesive web of love, and catch in it all that comes.’)
<>

’வாய்ப்பில் 
வசிக்கிறேன் நான்.’
- Emily Dickinson
('I dwell in possibility.')
<>

'சரியாகப் புரிந்துகொள்ளப்படவில்லையே 
என கவலை கொள்ளாதீர்கள்; 
சரியாகப் புரிந்து கொள்ளவில்லையே 
என்று கவலைப் படுங்கள்.'
- Chinese Proverb
('Be not disturbed at being misunderstood;
be disturbed rather at not being understanding.')

<>

’தரம் என்பது 
தற்செயலாக அமைவதல்ல.
அது எப்போதுமே  
அறிவார்ந்த முயற்சிகளால் விளைவது.’
- John Ruskin
('Quality is never an accident. It is always
the result of intelligent effort.')
<>

'எவர் கருத்துக்களை நாம் மதிக்கிறோமோ
அவரால் தவறாகப் புரிந்துகொள்ளப் படுவது 
எல்லாவற்றிலும் மிக வலி தருவது.'
- Gloria Steinem
('Being misunderstood by people whose opinions
you value is absolutely the most painful.')
<>

'எல்லாருக்கும் அளிக்கப்படுகிறது
இடர்ப்பாடுகள் வாழ்வில். 
எவரின் பயணமும் எளிதல்ல.
எப்படி அவற்றைக் கையாளுகிறார்கள்
என்பதே அவர்களை 
தனித்தன்மை வாய்ந்தவர்களாக்குகிறது.’
- Kevin Conroy
('Everyone is handed adversity in life. No one's journey
is easy. It's how they handle it that makes people unique.')
<>

’வெற்றியடைய என் தீர்மானம்
வேண்டுமளவு உறுதியாயிருந்தால்
தாண்டிச் செல்ல முடியாது என்னை தோல்வி'.
- Og Mandino
('Failure will never overtake me if my determination
to succeed is strong enough.')

><><><

Sunday, May 8, 2016

ஓர் அழகு, ஓர் நகைச்சுவை...

அன்புடன் ஒரு நிமிடம் - 102

சோமுவின் சோர்ந்திருந்த முகமே சொல்லிற்று சாத்வீகனுக்கு, சென்ற வாரம் அவர் குமுறிக் கொண்டிருந்த பிரசினையிலிருந்து இன்னும் வெளிவரவில்லை என. இப்பவும் அந்த துன்பத்தை சொல்லி ஆறுதல் தேடியே வந்திருக்கிறார்...

அதனால் அந்த விஷயத்தையே தொடவில்லை சாத்வீகன். பொதுவாக சில விஷயங்களைப் பேசினார். திடீரென்று சொன்னார், ”ஒரு புதிர்.  நீங்க வரும்போது பார்த்திட்டிருந்தேன். வாங்க, நீங்களும் ட்ரை பண்ணலாம்.’

மனசுக்கு கொஞ்சம் மாற்று என்று நினைத்தாரோ என்னவோ, தலையாட்டினார்.

”இந்த நாலு நிமிஷ விடியோவைப் பாருங்க. பிரசினையான ஐந்து சிச்சுவேஷன். ஒவ்வொண்ணா பாருங்க. முதல்ல மிஸ்டர் ரகு. அவனுக்கு ஊரில தனியா திண்டாடற வயசான அப்பாவை தன்னோட டவுன்ல வெச்சுக்கணும்னு ஆசை.  ஆனா மனைவி அனிதா சம்மதிக்க மாட்டேங்கிறா. தவிக்கிறான்.” 

விடியோவை பார்க்கிறார்கள். ”சரி இப்ப கேள்வி என்னன்னா இந்த கஷ்டமான சூழ்நிலைக்குள்ளேயே இருக்கிற ஒரு அழகையும் ஒரு நகைச்சுவையும் கண்டு பிடிச்சு சொல்லணும்.”

கொஞ்ச நேர யோசனைக்குப் பின் சொன்னார் சோமு. “அழகு என்னன்னா அவன் தூரத்தில், மும்பையில் இருந்துகொண்டே ஊரிலுள்ள தன் ஃப்ரண்ட்ஸ் மூலமா அப்பாவுக்கு மெடிகல் ஹெல்ப் அப்பப்ப கிடைக்கிறதுக்கு ஏற்பாடு பண்றது.”

“சரியா சொல்லிட்டீங்க. அப்புறம் அந்த ஹ்யூமர்?”
“அந்த அப்பா தினம் போன் செஞ்சு ரவா உப்புமா எப்படி பண்றது, அவியலுக்கு காய் எப்படி வெட்டறதுன்னு கேக்கிறதும் அவங்க சொல்லித் தர்றதும் அவர் தப்புதப்பா பண்றதும் ஒரு விதத்தில தமாஷாத்தான் இருக்கு.”

”அதுவும் ரைட்தான்.”    

 அடுத்தாற்போல அந்த தம்பதி. பிரசினை? அவன் சக்திக்கு மீறின செலவாளி. அதனால் உறவினர்களிடம் கடன் மேல் கடன். திணறுகிறான். மனைவிக்கு அவனை அடக்கத் தெரியவில்லை. திணறுகிறாள். 

தேடிப் பார்த்துவிட்டு சோமு அவர்களின் பிரசினைக்குள் இருந்த ஓர் அழகை - தேவையே இன்றி அவன் வாங்கி வரும் சில பொருட்களை அவள் காதும் காதும் வெச்ச மாதிரி கடைக்கே திருப்பிக் கொடுத்தனுப்பி காசு வாங்குவது- சொல்லியதோடு, ஓர் நகைச்சுவையையும் - கடன் வாங்க நேர்ந்த நாட்களில் மட்டும் அவன் அவளை ஐஸ் வைத்து பேசி அதனாலேயே அவள் ஊகித்துவிடுவது - கண்டுகொண்டு சொன்னார்.

மூன்றாவது பிரசினையிலும்  சில நிமிட யோசனைக்குப் பின் வெகுசரியாக ஓர் அழகையும் நகைச்சுவையையும் கண்டுபிடித்துவிட்டார்.

நாலாவது ஐந்தாவது என்று தொடர, இன்னும் சீக்கிரத்தில் அவர் சொல்லலானார். சாத்வீகன் வியந்து கைகுலுக்க, அடுத்த நிமிடம் எழுந்து கொண்டார். ”நான் வர்றேன்.”

“என்ன அதுக்குள்ளே? உங்க பிரசினையைப் பத்தி ஏதோ சொல்ல வந்தீங்களே...”

”பரவாயில்லை. எல்லா பிரசினைக்குள்ளேயும் ஒரு அழகும் நகைச்சுவையும் இருக்குன்னு புரிஞ்சுக்கிட்டேன். அதை ரசித்தபடியே அந்த பிரசினையை ஏற்றுக் கொண்டு சமாளிக்கறதுதான் வாழ்க்கைன்னும்! எனக்கு நம்பிக்கை இருக்கு,” என்றார், “ இப்ப!” 
(’அமுதம்’ ஃபெப்.2015 இதழில் வெளியானது)