Tuesday, August 3, 2010

முன்னால் ஒரு வார்த்தை


''ன்னடா பெண்டாட்டி கிட்டே நல்லா வாங்கிக் கட்டிக்கிட்டவன் மாதிரி இருக்கே?''
கேட்ட மதுவிடம், ''அதாண்டா நடந்தது!'' என்றான் பரசு.

''என்ன ஆச்சு?''

''ஒண்ணுமில்லே, பூச்செடி வாங்கித் தந்தேன். அதை சரியா நட்டுவைக்கத் தெரியாம எல்லாம் வீணாப் போச்சு. 'இந்தச் சின்ன விஷயம் கூடத் தெரியலியே?'ன்னு சொன்னேன். அவ்வளவுதான், 'எப்ப பார்த்தாலும் எனக்கு இதுகூடத் தெரியலே, அதுகூடத் தெரியலேன்னு தானே சொல்றீங்க'ன்னு திட்டிட்டு அவங்கம்மா வீட்டுக்குப் போயிட்டா!'' என்றான் சோகத்துடன்.

''அட, இதே வாக்கியத்தைத்தான் நானும் இன்னிக்குக் காலையிலே என் மனைவிகிட்டே சொன்னேன். ஆனா நோ ப்ராப்ளம்.''

''உன் பெண்டாட்டி அப்படி.''

''இல்லே, நான் சொன்ன விதம் அப்படி! ஒரு சின்ன வித்தியாசம் தான். அப்படி சொல்றதுக்கு முன்னாடி ஒரு வார்த்தை சேர்த்தேன்.''
''என்ன அது?''
''அட, என்னென்னவோ பெரிய விஷயம் எல்லாம் அழகாச் செய்யறியே? இது ஒரு சின்ன விஷயம். இது தெரியலியான்னேன்!''

''புரிஞ்சது. இனி எனக்கும் பிரச்னை வராது.''

(குமுதம் 17-09-2008 இதழில் வெளியானது)