Sunday, December 25, 2016

நல்லதா நாலு வார்த்தை... 77



’அதிலிருந்து வெளிவரமுடியாத அளவுக்கு
அசாத்தியமான பிரசினை எதுவுமில்லை.'
-Charles M. Schulz
('No problem is so formidable that you can't walk away from it.')
<>

’ஏற்கெனவே எடுத்துவிட்ட
நிலைப்பாட்டை நிச்சயம் செய்யக்
கேட்கப்படுவதே ஆலோசனை.’
- William Osler
(’Advice is sought to confirm a position already taken.’)
<>

'எப்போதும் நினைவில் கொள்வேனென
எனக்குறுதி செய்:
நீ நம்புவதை விட நீ துணிவானவன்;
பார்க்கத் தோன்றுவதைவிட பலசாலி;
நினைப்பதைவிட சூட்டிகையானவன் நீ.' 
- A. A. Milne
('Promise me you'll always remember: You're braver than you
believe, and stronger than you seem, and smarter than you think.')
<>

'ஒரு நல்ல மனிதன் எப்படி
விளங்க வேண்டுமென்ற
விவாதத்தில் நேரத்தை
வீணாக்குவதை விடு.
விளங்கிடு அப்படி ஒருவனாக.'
- Marcus Aurelius
('Waste no more time arguing about
what a good man should be. Be one.')
<>

'நிலவுக்கு குறி வையுங்கள்
தவறினால் அடையலாம் ஒரு
தாரகையையேனும்.
- W. Clement Stone
('Aim for the moon. If you miss, you may hit a star.')
<>

'என் நண்பனுக்குள் காண்கிறேன்
இன்னொரு என்னை.'
- Isabelle Norton
('In my friend, I find a second self.')
<>

'சந்தர்ப்ப வசத்தினால்
எந்த மனிதனும்
விவேகமாக இருந்ததில்லை.'
- Lucius Annaeus Seneca
('No man was ever wise by chance.')
<>

’என்னே விளங்கிடும் வாழ்க்கை
எதையும் முயற்சிக்கிற
தைரியம் நமக்கில்லையெனில்?’
-Vincent Van Gogh
(”What would life be if we had no courage to attempt anything?’)
<>

’ஏமாற்றப்படுவதில்லை நாமொருபோதும்
ஏமாற்றிக் கொள்கிறோம் நம்மை நாமே.’
-Goethe
('We are never deceived; we deceive ourselves.')
<>

'மற்றவர் முன் மாறுவேடமிட்டுப்
பழகிப் பழகி இறுதியில் நமக்கே
மாறுவேடமிட்டவராக ஆகிவிடுகிறோம்.'
- la Rochefoucault
('We are so accustomed to disguise ourselves to
others that in the end we become disguised to ourselves.')

><><><

Monday, December 19, 2016

மனக்குறை...(நிமிடக்கதை)

அன்புடன் ஒரு நிமிடம் - 111

புலம்ப ஆரம்பித்த காமாட்சி புலம்பிக் கொண்டேயிருந்தார்.

சொல்லித்தான் அழைத்து வந்திருந்தார் சாத்வீகனை அவர் நண்பர் விசு. காமாட்சியின் தம்பி. எப்பப் பார்த்தாலும் குறைப்பட்டுக்கொண்டே இருக்கிறாள் என்று.

பார்த்து நாளாச்சு உங்க அக்காவை... என்று ஆர்வமாக வந்த சாத்வீகன் அவளது சலிப்புகளை நிஜமான அக்கறையுடன் கேட்டார்.

“...இந்த சின்னவன் சேகர் இருக்கானே, பக்கத்தில பங்களூரிலதான் இருக்கான்னு பேரு. மாசம் ஒரு தடவைகூட வந்து பார்க்கிறதில்ல அம்மாவை. எப்பவாவது வந்து எட்டிப்பார்த்துட்டு ஓடிடறான். எனக்குத் தேடுமேன்னு கொஞ்சமாச்சும்...”
அப்போது மொபைல் ஒலிக்க, எடுத்த சாத்வீகன், கேட்டுவிட்டு, “இன்னுமா வேலை கிடைக்கலே? போய் ஆறு வருஷம் ஆச்சே... எப்படித்தான் உங்க அப்பா சமாளிக்கிறாரோ... நீ ஒன்றில் அமர்ந்தால்தானே குடும்பம் தலையெடுக்கும்? சே, கவலையிலேயே அம்மா நோயில் படுத்துடுவாளே...” கொஞ்சம் பேசிவிட்டு வைத்தார்’

காமாட்சி தொடர்ந்தார். ”பெரியவன் கூட இருக்கான்னு பேரு. கொஞ்சமாவது பெண்டாட்டியை அதட்டி வைக்கிறானா? அவ என்னை மதிக்கிறதேயில்லை. வேணும்கிறதை பண்ணி வெச்சுட்டு ஒற்றை வார்த்தை பேசாமல் ஓடிடறா ஆபீசுக்கு...

மறுபடியும் ஒரு கால் இவருக்கு வர,  எடுத்து கேட்டவர் சொன்னார், ”சரி, நான் ஊருக்கு வந்ததும் உன் தங்கையிடம் சொல்லிப் பார்க்கிறேன். அம்மா பேச்சைக் கேட்கிறான்னு டைவர்ஸ் வரை போறது நல்லாவா இருக்கு?  குழந்தையை எத்தனை பாதிக்கும்?”

காமாட்சி தன் கதையை... “என் மகள் இருக்காளே கலா, அவள் பின்னே இங்கே வந்தா எப்பவும் கடன் பாட்டுத்தான் பாடுவா. மாப்பிள்ளைக்கு பிரசினைன்னு மாசம்தோறும் பத்து இருபதுன்னு வாங்கிட்டு போயிடறா. என்னதான் கொஞ்சம் வசதி இருக்குன்னாலும் நானும் எத்தனை தரம்தான் எடுத்து வீசறது?”
மறுபடி போன். பேசினார். ”...இல்லேப்பா முருகேசா, என்னதான் தேவையில்லாம போலிஸ் கேசில் மாட்டிக்கிட்டாலும் அவன் உன் சொந்தத் தம்பி. நீதான் நல்ல வக்கீலா பார்த்து தொகையை கொடுத்து அவனை மீட்கணும்.  பணமா முக்கியம் வாழ்க்கையில? பாசமில்ல பெரிசு...”
“ஆருங்க அது?” காமாட்சி.

சொன்னார். தன்னிடம் பேசியவர்களைப் பற்றி. ”சரி, நீங்க மேலே சொல்லுங்க.”

”வேறே என்னத்தை? அவ்வளவுதான்! ஒரு இதுக்குத்தான் சும்மா கொட்டினேன். மத்தபடி பசங்க என் மேலே அன்பாத்தான் இருக்காங்க. ஏதோ இறைவன் அனுக்ரகத்தில இத்தனையாவது... முருகா எல்லாம் உன் அருள்.”

வெளியே வரும்போது நண்பர்சொன்னார், ”இன்னிக்குத்தான் அக்கா மனதிருப்தியோட நாலு வார்த்தை உணர்ந்து பேசுது. ஆமா அந்த நேரத்தில பார்த்து உங்களுக்கு என்ன அத்தனை கால்...” 

சாத்வீகன் சொல்லவில்லை, எல்லாம் ஃபேக் கால், அவரே சொல்லி எற்பாடு செய்தது என்று.

(’அமுதம்’ மே 2015 இதழில் வெளியானது)

Tuesday, December 13, 2016

அவள் - (கவிதைகள்)


351.
எத்திசையும் பறந்திட
எனக்குள் நீ
ஓர் ஆகாசமாய்...

352.
ரோஜாவும் மல்லிகையும் எனில்
எனக்குக் குழப்பம்
முதலிடம் வழங்குவதில்.
ரோஜா, மல்லிகை, நீ - எனில்
குழப்பமில்லை.

353.
வீசாத காற்று
பேசாத நீ.

354.
உன் கண் எழுதும் சித்திரங்களைக்
காற்றில் படிக்க முயலுகிறேன்.

355.
ஆயிரம் ஜன்னல்களைச்
சாத்த வேண்டியிருக்கிறது
அரை நிமிடம் உன்னை 
நினைக்காமலிருக்க.

356.
தொலைவில் நீ செல்ல செல்ல
உன் பிம்பம் மனதில்
பெரிதாகிறது.

357.
நான் 
உன் இனிய பக்கம்.
நீ 
என் இனிய புத்தகம்..

358.
நினைவுகளின் எல்லையில் 
நீ நிற்பதால்
எல்லையற்றுப் போனது 
நினைவு.

359.
திடுக்கிட்டு எழுகிறேன்,
மனதில் நீ அசையும் ஓசை.

360.
வெகு தூரத்தில் நாம்
பக்கத்தில் நம் இதயங்கள்.

><><

Sunday, December 4, 2016

நல்லதா நாலு வார்த்தை... 76


’ஏற்றுக் கொள்ளலில் மட்டுமே
வீற்றிருக்கமுடியும் 
மகிழ்ச்சி.’
- George Orwell
('Happiness can exist only in acceptance.')
<>

'ஒவ்வொரு மனிதரின்
நினைவுப் பெட்டகமும்
அவரின் பிரத்தியேக
இலக்கியம்.
- Aldous Huxley
('Every man's memory is his private literature.')
<>

'விஷயங்கள் நம்பிக்கைகளாக
ஆரம்பிக்கின்றன,
பழக்கங்களாக முடிகின்றன.'
- Lillian Hellman
('Things start out as hopes and end up as habits.')
<>

'ஆனால் வளர்ந்து வயது முதிரும் காலமோ
கற்றுக் கொடுத்து விடுகிறது
அனைத்தையுமே.'
- Aeschylus
('But time growing old teaches all things.')
<>

'எத்தனை வியப்பான விஷயம்!
உலகை முன்னேற்றுவது
என்று இறங்கிவிட்டால்
ஒரு கணம்கூடக்
காத்திருக்க வேண்டியதில்லை யாரும்!'
- Anne Frank
('How wonderful it is that nobody need wait a
single moment before starting to improve the world.')
<>

'விவேகிகளின் துரதிர்ஷ்டம்
முட்டாளின் வளமையைவிட
மேலானது.'
- Epicurus
('The misfortune of the wise is better than
the prosperity of the fool.')
<>

'அடுத்தவருக்கு நீ செய்யும் 
ஆகப் பெரிய நன்மை
அவருடன் உன் செல்வத்தைப்
பகிர்ந்து கொள்வதல்ல;
அவரது செல்வத்தை 
அவருக்குத் தெரியப்படுத்துவதே.'
- Benjamin Disraeli
('The greatest good you can do for another is not
just to share your riches but to reveal to him his own.'
<>

'கவனமாக இருக்கவேண்டும் நீங்கள்,
ரொம்பக் கவனமாக இருப்பதைப் பற்றி.'
<>
- Beryl Pfizer
('You have to be careful about being too careful.')
<>

எதிர்ப்பு அருகிய பாதை
தோற்பவனின் பாதை.'
- H G Wells
('The path of least resistance is the path of the loser.)
<>

'நேர்மையான விமரிசனம் என்பது
எடுத்துக்கொள்ள சிரமமானது,
குறிப்பாக உறவினரிடமிருந்து,
நண்பரிடமிருந்து, தெரிந்தவரிடமிருந்து,
அல்லது தெரியாதவரிடமிருந்து.'
- Franklin P Jones
('Honest criticism is hard to take, particularly from
a relative, a friend, an acquaintance or a stranger.')

><><><

Sunday, November 27, 2016

நன்றாகவும்...(நிமிடக்கதை)

அன்புடன் ஒரு நிமிடம் - 110

”நீ இந்த ரூமிலேயே படுத்துக்க. அதோ அந்தக் கட்டில்.” என்றார் சாத்வீகன்.
தலையாட்டினான் சிவா. அவரது நண்பரின் பேரன். அவருக்கு வெளியூரில் ஒரு வேலை. பத்து நாளைக்கு அவனை நண்பரின் வீட்டில் விட்டுச் சென்றார். 
”தாத்தா ரொம்ப ஜோவியல். உனக்கு போரே அடிக்காது,” என்று அவனிடமும், ”இந்தப் பயல் சுத்த சோம்பேறி, கொஞ்சம் நீதான் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்,” என்று இவரிடம் தனியாகவும் சொல்லிப் போனார்.

மறு நாள் காலை எட்டு முப்பது. அப்போதுதான் எழுந்துவந்தான்  சிவா. உடனே சாத்வீகன் வந்து அவனின் படுக்கை விரிப்பை மடிப்பதைப் பார்த்தான். அவரின் படுக்கை விரிப்பு ஏற்கெனவே அழகாய் இரண்டாக மடித்து வைக்கப் பட்டிருந்தது.
”தாத்தா, இப்படிக் கொடுங்க. நானே மடிச்சு...”
”இல்லேப்பா, இது கஷ்டம்..”
”என்ன கஷ்டம்? நான் பண்றேனே...  நான் தூங்கிய ஷீட்டை நான்தானே மடிக்கணும்?'
"இல்லேப்பா, இதை நான் எப்படி மடிப்பேன்னா.. வாரத்தில ஏழு நாள் இல்லையா,  முதல் நாள் இரண்டா மடிப்பேன். மறு நாள் அதையும் இரண்டாக, அதாவது மூணு முறை மடிப்பேன். அடுத்த நாள் நாலு. இப்படி ஏழாம் நாள் ஏழு மடிப்பு வரும்.” 
”அப்படியா, சரி, நானும் அப்படியே மடிச்சிடறேன்,” என்றான்.
ஆறாவது நாளன்று அவனால அதற்கு மேல் அழுத்தி மடிக்க முடியாமல் திணறுவதைப் பார்த்த அவர், ”என்னப்பா கஷ்டமா இருக்கா?” அதே நேரம் அவரது ஷீட் துளி பிசிறு இல்லாமல் மடிக்கப்பட்டு கம்பீரமாக வீற்றிருந்தது. 
”ஆமா கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு.’
அதை வாங்கி இன்னும் இலகுவாகவும் லாவகமாகவும் மடித்துக் காட்டினார். ”முதல் நாள் ஜஸ்ட் ரெண்டாக மடிக்கும்போதே நான் அந்த மடிப்பை நல்ல அழுத்தமாக மடித்து அந்த இடத்தை நல்ல நீவிக் கொடுத்து... இப்படி ஒவ்வொரு நாளும் அந்த ஃபோல்டை அழுத்தமாக செய்வதால் கடைசிவரை எனக்கு எளிதாய் இருக்கிறது. வாழ்க்கையில் நமக்கு வயது ஏற ஏற பொறுப்பு அதிகரிச்சுட்டே போகும்.ரெண்டாக மடிக்கும் காலத்திலிருந்து ஏழாக மடிக்கும் காலம் வரும்.அப்போது நாம் கஷ்டத்தைக் கண்டு துவளாமல் இருக்க ரெண்டாக மடிக்கும்போதே அதை நன்றாக மடிக்க பழகிக்கொண்டு விடணும். வாழ்க்கையில் பொறுப்பு அதிகரித்துக் கொண்டே போகிறதால, நாம் பொறுப்பை ஏற்க, எல்லா தளத்திலும் எல்லா விதத்திலும் பழகிக்கொள்வது நல்லதுதானே?”.
அவன் அப்படியே யோசித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தால் அந்த கருத்தை நல்லவே உள்வாங்கிக் கொண்டுவிட்டான் என்றே தோன்றியது இவருக்கு. மறுவாரம் அவனது தாத்தா நன்றி சொல்லியபோது அது நிச்சயமானது.  
(’அமுதம்’ ஏப்.2015 இதழில் வெளியானது)

Sunday, November 20, 2016

அவள் - கவிதைகள்


341.
எப்படி ஜீவிக்க முடிகிறது உன்னால்,
எனக்கு மகனுக்கு மகளுக்கு என்று
இதயத்தை முழுவதுமாகப்
பங்கிட்டுக் கொடுத்துவிட்டு?

342
எப்போதும்
தேடிக் கொண்டிருக்கிறேன் உன்னை
சிலசமயம் 
எதற்கென்று தெரியாமலேயே.

343.
மாங்காய் வெட்டக்
கூராய் ஒன்றைத் தேடுகையில்
கண்ணில் படுகிறது உன் 
கண்.

344.
நீ சிரிக்கையில்
அழகு அதிகரிப்பதில்லை,
அது ஏற்கெனவே  
நூறு சதம் ஆகிவிட்டதால்.

345
இடவலமாகவும்
மேலும் கீழுமாகவும்
நகரும் உன் விழி
ரிமோட்டாக எனைப்
பந்தாடுகின்றனவே?

346
நீ
மிச்சம் வைத்த எழிலை
உலகம் பங்கிட்டுக் கொண்டது.

347
அழகு
சில வேளைகளில்
உன்னைப் போலிருக்கிறது.

348.
என் உலகத்தை
தயாரித்துவிட்டு
உனக்காகக் காத்திருக்கிறேன்.

349
உவப்பளிக்கிறதோ இல்லையோ உனக்கு,
உயிர் தருகின்றன எனக்கு
இக்கவிதைகள்.

350.
சிக்கனம் சிறிதுமின்றி
வாரியிறைக்கிறாயே,
எத்தனைதான் வைத்திருக்கிறாயோ 
அன்பு?

><><><

Wednesday, November 16, 2016

நல்லதா நாலு வார்த்தை...75

'வாழ்க்கையை தெரிந்துகொள்ள வழி 
நிறைய விஷயங்களை நேசிப்பது.'
- Vincent Van Gogh
('The way to know life is to love many things.')
<>

'தங்களுக்கு ஓர் வாழ்க்கையைத்
தரக் கடமைப் பட்டிருக்கிறது இத்
தரணியென நினைக்கிறார்கள் சிலர்.'
- Clint Eastwood
('Some people feel that the world owes them a living.')
<>

’களைகளும் மலர்களே, 
அவை பற்றி நாம்
அறிவடைந்தவுடன்.'
- A. A. Milne
('Weeds are flowers too, once you get to know them.')
<>

'தணிவாகப் பேசு,
மெதுவாகப் பேசு,
ரொம்பவும் பேசிவிடாதே.'
-John Wayne
('Talk low, talk slow and don't say too much.')
<>
'உற்றுக் கவனியுங்கள் எல்லா மனிதரையும்,
பெரிதும் உங்களை.’
- Benjamin Franklin
('Observe all men, thyself most.')
<>

’ஒரு கவியாக முடியவில்லையெனில் 
ஒரு கவிதையாக இரு.’
- David Carradine
(”If you can not be a poet be a poem.’)
<>

'ஆண்டவனும் நல்ல நூற்களின் துணையும்
அவனுக்கு இருக்கிற வரையில்
எவரையும் சொல்லமுடியாது நண்பரற்றவரென.'
-Elizabeth Barrett Browning
('No man can be called friendless when he has God
and the companionship of good books.')
<>

'இளமையில் நம் சந்தோஷங்களை
செம்மைப் படுத்தவும்
முதுமையில் அவற்றைத்
திருப்தியுடன் நினைவுகூரவும்
கற்றுத் தருபவை புத்தகங்களே.'
-Leigh Hunt
('It is books that teach us to refine our pleasures when
young, and to recall them with satisfaction when we are old.')
<>

'முடிவுகளின் மீது தாவுவதுபோல
வேகமாகத் தாவுங்கள் வாய்ப்புகளின் மீது,
வெற்றி பெற வேண்டின்.'
- Benjamin Franklin
('To succeed, jump as quickly at opportunities as you do at conclusions.')
<>

'அர்த்தத்துடன் கூடிய மிகச்சில விஷயங்கள்
அதற்ற ஆகப்பெரும் விஷயங்களை விட
அதிக மதிப்புடையது வாழ்க்கையில்.'
- Carl Jung
('The least of things with a meaning is worth more 
in life than the greatest of things without it.')

><><><><

Wednesday, November 9, 2016

முதல் தேவை.. (நிமிடக்கதை)


அன்புடன் ஒரு நிமிடம் - 109

"நாளைக்கு லீவு சொல்லிரு," என்றான் வினோத் தியாகுவிடம் போனில்.
என்ன விஷயம் என்று  மறு நாள் அவனிடம் சொன்னான். "காரை மாத்திடலாம்னு... பெரிய கார் எடுக்கலாம்னு இருக்கேன். இந்தா பிராச்சர்ஸ்.  செலெக்ட் பண்ணிரலாம் எதுன்னு...” நாலைந்து பிரம்மாண்டமான ரகங்கள் அதில் வித விதமாக...
கொஞ்ச நேரம் ஒவ்வொன்றாகப் பார்த்து ஒன்றை தேர்ந்தெடுத்தார்கள்.
”ஆமா, பணம் எல்லாம் ரெடி பண்ணிட்டியாக்கும்?’
”ஒ! மாடியில விசாலமா ஒரு ரூம் கட்டணும்னு வெச்சிருந்தேன், அதை அப்புறம் பார்த்துக்கலாம்னு... என்னைச் சுத்தி எல்லாரும் அது இதுன்னு அமர்க்களப் படுத்தறாங்க. நாங்க எத்தனை நாளைக்குத்தான் இந்த சின்ன காரையே...”
”ரைட். வாங்கிட வேண்டியதுதான். ஆனா ஒரே ஒரு விஷயம் எனக்கு உதைக்குது. போன வாரம் சொல்லிட்டிருந்தியே ஆபீசில ஏதோ டெஸ்டுக்கு படிக்கணும்னு... அப்புறம் பையன் படிப்பில கூடவே இருந்து கொஞ்சம் கவனம் செலுத்தணும்னு... அது ஞாபகம் வந்தது.”
”அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்?”
”ஒண்ணே ஒண்ணுதான். கார் வந்து நின்னிரும் வீட்டில. அடுத்த அஞ்சு வருஷத்தில அதை நீ எத்தனை முறை உபயோகிப்பேங்கிறதுதான்...  சொல்லேன்.”
இது என்ன திடீர்னு ஒரு கேள்வியைத் தூக்கிப் போடறான் இவன்! யோசித்தான் வினோத். “டெஸ்டு, பையன் படிப்புன்னு இருக்கிறதால அடுத்த நாலைஞ்சு வருஷத்தில அதை எடுத்திட்டு டூர் போகிறது கம்மியாத்தானிருக்கும். ரொம்ப எல்லாம் உபயோகிக்க முடியாதுதான்.”
”அதைத்தான் சொல்ல வந்தேன். ஹவ் மச் யு நீட் இட் - அதை வெச்சு தீர்மானி. ஆசைப்பட்டதை வாங்கிட்டோம்கிற சந்தோஷம் கொஞ்ச நாள் இருக்கும்.  நம்மகிட்டயும் பெரிய கார் இருக்குங்கிற திருப்தி இன்னும் கொஞ்ச நாளைக்கு. அதுக்கப்புறம்? உபயோகிக்கிறதைப் பொறுத்துத்தானே திருப்தியும் சந்தோஷமும்? யோசி”
யோசித்தான். சரிதான்..
”அதே சமயம் அஞ்சு வருஷத்துக்கு அப்புறம் இதை வாங்கினால் உன் தேவைகள் அப்ப அதிகமா இருக்கலாம். அந்த அளவுக்கு இதை உபயோகிக்கலாம். என்ன நான் சொல்றது?” 
மௌனமாக தலையாட்டினான். 
”பேசாமல் அந்த மாடி அறையைக் கட்டு. இப்ப அமைதியா தனிமையா உட்கார்ந்து டெஸ்டுக்கு படிக்கவும் சரி, பையனுக்கு உதவியா பக்கத்தில அமர்த்தி சொல்லிக் கொடுக்கவும் சரி, அட்டகாசமா உபயோகப்படும்!”
ரைட் என்று சிரித்தான் வினோத்.
('அமுதம்’ ஏப்-2015 இதழில் வெளியானது)

Wednesday, October 26, 2016

அவள் - கவிதைகள்


331


நீ பேசிக் கொண்டே..
நான் கேட்டுக்கொண்டே..
காலம் பார்த்துக்கொண்டே..

332
என்னுள் எங்கோ
ஒளிந்திருந்த இனிமையை
ஒளிரவிட்டாய் 
எளிதாய் வெளிக்கொணர்ந்து.

333
எத்தனை நேரம்
பேசுவதென்கிறாய்
பாடலல்லவோ 
கேட்டுக் கொண்டிருந்தேன்
நான்?

334
எத்தனை ஆயிரம்தான்
காம்பினேஷன்கள்
கொடுப்பாய் உன்
கடைக்கண்ணுக்கும்
புன்னகைக்குமாய்?

335
ஆச்சரியம்தான்,
வாழத் தொடங்கிய நாளும்
உன்னை சந்தித்த நாளும்
ஒன்றாக இருந்தது.

336
என் கற்பனையின் 
எல்லை,
அவள் அழகின் 
ஆரம்பம்.

337
நீ 
அருகே வர வர
என் உலகம் 
காலியாகிறது.


338.
நிலவுகூட சற்று நேரத்தில்
நிறுத்தி விடுகிறது தன்
தண் பொழிவை 
உன் அன்பைப் போலல்லாது.

339
நிகராய் ரசிக்கிற ஒன்றைக்
கண்டுபிடிக்கிற வரையில்
சொல்லப் போவதில்லை
உன்னைக் கவிதையென.

340
உன் அன்பை
ஒப்பிட முடியாது மழைக்கு,
பொழிய வேண்டிய நேரம்
பொழியாமல் இருந்துவிடுவதால்.



><><