Saturday, July 31, 2021

சிறுமிக்கு எழுதிய கதை..

நோய்வாய்ப்பட்டிருந்த ஒரு சிறுமிக்கு ஒரு கதையை எழுதி படங்களும் வரைந்து அனுப்பினாள் அந்தப் பெண். பீட்டர் என்ற முயலின் கதை. படித்த எல்லோருமே அதை புகழ்ந்தனர். மகிழ்ந்து போனாள் அவள். ஒரு சின்ன புத்தகமாக அது வெளியானது. Peter Rabbit பிரபலமாயிற்று. வரவேற்பின் வேகத்தில் ஒவ்வொன்றாக எழுத, அடுத்த 23 பீட்டர் கதைகள் வெளியாகின. அந்த எழுத்தாளர்...
Beatrix Potter. ( 1866-1943)
அந்த முதல் கதை? முயல் குட்டி பீட்டர் ரொம்ப சுட்டி. கூடப் பிறந்ததுகளை மாதிரி அல்ல. அந்தப் பக்கம் மெக்கிரிகர் தோட்டத்துக்கு மட்டும் போய் விடாதே, என்று எச்சரித்துவிட்டு வெளியே போகிறாள் அம்மா முயல். கேட்குமா பீட்டர்? அங்கே தான் போகிறது. அதையும் இதையும் பிடுங்கி சாப்பிட்டுவிட்டு மாட்டிக் கொள்ளப் பார்க்கிறது. அடிபட்டு, மிதிபட்டு மயிரிழையில் தப்பி ஓடி வருகிறது. சொன்னால் புரியாத உலகத்தை அனுபவத்தால் புரிந்து கொள்கிறது. அம்மா டின்னர் தராமல் டீயைக் கொடுத்து படுக்க வைக்கிறாள்.
பீட்டர் கதைகள் (The Tale of Peter Rabbit) உலக பிரசித்தம். எல்லாமே கருத்துள்ளவை என்பது அதன் மற்றொரு பிளஸ்.

Saturday, July 24, 2021

ஆடவும் பாடவும் நடிக்கவும்...




பத்து வயது மகனுடன் தனியே வாழும் ஹோட்டல் பணிப்பெண் மாரிஸா. அறையை கிளீன் செய்யும் போது தோழி சொன்னாள் என்று அங்கிருந்த உயர்ரக ஆடை ஒன்றை அணிந்து பார்க்கிறாள். அப்போது அங்கே வரும் கிரிஸ், செனட்டர் தேர்தலுக்கு நிற்க இருப்பவர், தான் சந்திக்க வந்த கரோலின் ஆக அவளை நினைத்து விடுகிறார். அவளாலும் மறுக்க முடியவில்லை. அவளது பையனை அவருக்குப் பிடித்த போக, இருவரிடையேயும் மெல்லிய காதல் அரும்புகிறது. மேலும் தவறை நீடிக்க விடாமல் அவள் தடுப்பதற்குள் அவர் கண்டுபிடித்து விடுகிறார்.சீறுகிறார். இருந்த வேலையும் போகிறது அவளுக்கு. தடுமாறி நிற்கிறாள். ஒரு நாள் நிருபர்களை சந்திக்க வரும் கிரிஸ்சிடம் எல்லோரும் கேள்வி கேட்கும்போது குட்டி பையனும் ஒரு கேள்வி கேட்கிறான், ‘மனிதர்கள் தவறு செய்தால் மன்னிக்கப் படலாமா?’ என்று. மனம் மாறியவர் மாரிஸாவைத் தேடி வருகிறார். மூவரும் ஒன்று சேர்கிறார்கள்.

படம் ‘Maid in Manhatten’. மாரிஸாவாக படத்தையும் நம் மனத்தையும் ஆக்கிரமித்துக் கொள்பவர்...
Jennifer Lopez. இன்று பிறந்த நாள்.
1997 இல் People’s Magazine தேர்ந்தெடுத்த 50 உலக அழகு பெண்களில் ஒருவர் என்றால் 2012 இல் Forbes பட்டியலிட்ட most powerful celebrety லிஸ்டில் முதலிடம்!
ஐந்து வயதிலேயே ஆடவும் பாடவும் பயின்ற லோபஸ் படிக்க நினைத்தது சட்டம். ஆனால் அடுத்த கட்டம் சினிமாவாகியது.
வசீகரத்திலும் வசீகரம் இவர் குரல். ’If You Had My Love..’ பாடலைக் கேட்டவர்கள் மறுக்க மாட்டார்கள். ஒரே சமயத்தில் இவரது படம் ஒன்றும் ஆல்பம் ஒன்றும் டாப் லிஸ்டில் வந்தது நம்பர் ஒன்னாக.
‘Shall We Dance?’ படத்தில் Richard Gere இவருடன் ஆடும் Tango டான்ஸ் இருக்கிறதே அது ஒரு மூன்று நிமிட mind - boggler! மற்றொரு மறக்க முடியாத படம் ‘An Unfinished Life’. Robert Redford உடன் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருப்பார்.
ஒரு டாலர் இவர் வாங்கினால் ஒன்பது டாலர் வசூல் ஆகும் படத்துக்கு என்று கணிக்கப்பட்டவர்.
Gem of a Jennifer Quote:
‘நான் மிகவும் அஞ்சும் விஷயம் தனிமை தான். கலைஞர்கள் பலர் அஞ்சுவதும் அதற்குத்தான். அதனால்தான் நாங்கள் புகழை விரும்புகிறோம். தனிமையைத் தவிர்க்க! இங்கே நாங்கள் கைதட்டப் படுகிறோம். நேசிக்க படுகிறோம். ரசிகர்கள் எங்களைச் சுற்றி இருக்க விரும்புகிறார்கள்.’

Thursday, July 22, 2021

'இயக்குநரை' நமக்கு அறிமுகப்படுத்தியவர்

 


அந்த இளைஞன் கொண்டு வந்து கொடுத்த நாடகத்தை படித்துவிட்டு அசந்து போனார் டி. கே. சண்முகம் அவர்கள். ரொம்பச் சின்ன வயசாயிருக்கே, உண்மையிலேயே இவன்தான் அதை எழுதியிருப்பானா? ஒரு ஸீனை அங்கேயே வைத்து எழுதச் சொல்ல, உடனே எழுதி காட்ட... தன் மேல் ‘ரத்த பாசம்’ கொண்ட எழுத்தாளரை தமிழ் சினிமா கண்டுகொண்டது.

‘கல்யாண பரிசு’ தந்தார். வியந்து தீர்ப்பதற்குள் ‘விடிவெள்ளி’ முளைத்தது. ரசித்து முடிப்பதற்குள் ‘தேன் நிலவு’ வந்தது. சிரித்து ஓய்வதற்குள் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. திடுக்கிட்டு நிமிர்வதற்குள் ‘நெஞ்சில் ஒரு ஆலயம்’ அமைத்தார். நெகிழ்ந்து நிற்பதற்குள் ‘காதலிக்க நேரமில்லை’ என்றார். சிரித்து தீர்ப்பதற்குள் ‘நெஞ்சிருக்கும் வரை’. நினைவில் அடைப்பதற்குள் ‘சிவந்தமண்’ படைத்தார். அசந்து நாம் நிற்க, ‘அழகை ஆராதித்துக்’ கொண்டிருந்தவருக்கோ ‘இளமை’ இன்னும் நெஞ்சில் ‘ஊஞ்சலாடுகிறது’.
ஶ்ரீதர்! 'இயக்குநரை' நமக்கு அறிமுகப்படுத்தியவர்..
இன்று பிறந்த நாள்!
தமிழ் திரையுலகுக்கு அவரளித்த முதல் கதையே யாரும் ‘எதிர்பாராதது.’ விமான விபத்தில் கண்ணை இழந்த இளைஞன் வீட்டுக்கு வந்து சேரும்போது காதலியை தன் அப்பாவின் மனைவியாக சந்திக்கிறான் என்ற ஒன்லைன்.
‘1960 களில் தமிழ் திரை உலகம்’ என்றும் சொல்லலாம். சுருக்கமாக ‘ஸ்ரீதர் பீரியட்’ என்றும் சொல்லலாம். ‘அலைகடலில் எங்களது சிறிய தோணி, கலையுலகில் எங்களது புதிய பாணி..’ என்று தன்னை அழகாய் அறிமுகப்படுத்திக்கொண்டது அவரின் சித்ராலயா.
உருக்கமான ஒரு சீனை கற்பனை பண்ணினால் போதும், அதை நறுக்குத் தெறித்தாற்போல் நாலு வசனங்களால் சுவையூட்டி, வித்தியாசமான கோணங்களில் ஷாட் பிரித்து, டிகிரி சுத்தமாக நடிப்பை வாங்கி, விறுவிறு இயக்கத்தினால் மெருகேற்றி நம் கையில் கொடுத்து விடுவார். இவர் படங்களில் எடிட்டர் பாடு ரொம்ப கஷ்டம். (பெரும்பாலும் என் எம் சங்கர்.) ட்ரிம் பண்றதுன்னா எங்கே கை வைக்கிறது? அத்தனை கரெக்டான ஷாட்கள்.
மாமன் மகள், யார் பையன், மாதர்குல மாணிக்கம், எங்கள் வீட்டு மகாலட்சுமி .. எல்லாம் சக்கை போடு போட்டபோது இந்த வசன இளைஞரை யாரும் கவனிக்கவில்லை. இளங்கோவன் புனரமைத்த திரை வசன பாணியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றது இவர்தான். 'உத்தம புத்திரன்' வசனம் பத்தி மொத்தமும் எழுதணும்னா இங்கே இடம் பத்தாது... அந்த பட்டாபிஷேக ஸ்பீச் ஒண்ணு போதுமே!
பாடல் காட்சிகளை படமாக்குவதில் இணை இல்லை. ‘நெஞ்சிருக்கும் வரை’யில் கடற்கரை சாலையில் சிவாஜி, முத்துராமன், கோபி அவங்க பாட்டுக்கு, எம்.எஸ்.வி. பாட்டுக்கு ஆடிக்கொண்டே வர, ட்ராலியில் நம்மை அழைத்துக்கொண்டு, (துளி கிரௌட் இல்லை ஃபீல்டில்) ஜங்ஷனுக்கு ஜங்ஷன் ஆடவைத்து... அத்தோடு திருப்திப்படுபவர் அல்லவே அவர்? லாரியை உபயோகித்தாரோ, இல்லை அசலையே கொண்டு வந்தாரோ, நடுரோட்டில் க்ரேன் ஷாட்டும் வைத்துவிட்டார்!
பெண் பார்க்க வந்திருக்கும் போது அடுத்த வீட்டில் காப்பி பொடி கடன் வாங்க ஓடும் ‘சுமைதாங்கி’ காட்சியாகட்டும், ( மிடில் கிளாஸ் ஃபீலிங்கை ஒரே காட்சியில்!) அரை அடி உயரத்தில் ஹெலிகாப்டர் சிவாஜியை அடித்துப் போட முயல்வதை பள்ளத்திலிருந்து காட்டி பிரம்மாண்டத்தை ஒரே காட்சியில் தரும் ‘சிவந்த மண்’ காட்சியாகட்டும் இவர் ரேஞ்ச் படுவிசாலம்! ‘சிவந்த மண்’ (நம்பியார் இதில் கம்பீரர்!) என்ன ஒரு ஸ்டைல் பீரியட் ஃபில்ம்!
‘விடிவெள்ளி’ விமர்சனத்தில் ‘விழுந்த யானை எழுந்தது’ என்று குறிப்பிட்டது குமுதம். பங்களா மாடியில் குதித்து சிவாஜி திருடச் செல்லும் அந்த அசத்தல் ஆரம்பக் காட்சிகள்! சிவாஜியின் யானைப் பசிக்கு சுமாராகவேனும் தீனி போட்ட சிலரில் முக்கியமானவர். அற்புதமான ஒரு இசையமைப்பாளர் தந்தார் நமக்கு: ஏ. எம். ராஜா.
சிவாஜி, முத்துராமன், விஜயா என்று யாருக்குமே துளி மேக்கப் இல்லாமல் இவர் எடுத்திருந்த அந்தப்படம் மட்டும் முழு வெற்றி பெற்றிருந்தால் பேன் கேக்குக்கு முற்றுப்புள்ளி விழுந்திருக்கும் ‘நெஞ்சிருக்கும் வரை’யோடு!
‘கா. நேரமில்லை’யில் நாம் பார்ப்பது ‘சிரிதர்’ என்றால் போலீஸ்காரன் மகளில் நாம் பார்ப்பது சீரியஸ்தர். ‘தேன் நிலவி’ல் காஷ்மீர குளிர் குன்றில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது வைஜயந்திமாலாவிடம் ஜெமினி கேட்பார் குறும்பாக: ‘இன்னும் கொஞ்சம் மேலே போவோமா?’ அது ரொமான்டிக் ஸ்ரீதர்!
காட்சிகளை நயமாக அமைப்பதில் கில்லாடி. ‘Saathi’யில் (பாலும் பழமும்’ இந்தி) ராஜேந்திரகுமார். வைஜயந்திமாலா தம்பதி ஊட்டியில் உலாவும்போது சஷி கபூர் லவ் சீன் ஷூட்டிங் பார்த்து வெட்கப்படுவார் வைஜு அழகாக. ஹிந்தி திரையுலகத்திற்கு இவர் தந்த Nazrana, Dil Ek Mandir இரண்டு மைல் கல்லும் போதும் இதமாக வழிகாட்ட.
Wit and Wisdom கலந்த அவர் வசனங்களுக்கு சாம்பிள் சொல்றது கஷ்டம். அத்தனை அதிகமாக! ‘நெஞ்சிருக்கும் வரை’யில், ‘கொஞ்சம்கூட கண்கலங்காம ஒரு துளி கண்ணீர் கூட விடாம உன்னால எப்படிடா இருக்க முடியுது?’ன்னு கேட்கும் கோபியிடம் சிவாஜி: ‘வேதனையையும் துன்பத்தையும் சுமந்துகொண்டு என்ன மாதிரி கோடிக்கணக்கான பேர் இந்த உலகத்தில இருக்கிறாங்கடா, அத்தனைபேரும் கண்ணீர் சிந்த ஆரம்பிச்சா இந்த உலகமே அந்த கண்ணீரில மூழ்கிடும். Just to save the world, நான் கண்ணீரே சிந்தறதில்லே!’
இத்தனை எழுதிய பிறகும் அவரைப் பற்றி ஒன்றுமே எழுதாதது போல் தோன்றுகிறதே, அவர்தான் ஸ்ரீதர்!

Friday, July 9, 2021

ஷோலேயின் ஜ்வாலை...


அவர் மட்டும் தன் பக்கத்தில் கிடக்கிற துப்பாக்கியை எடுத்துப் போட்டிருந்தால் தங்களைத் தாக்க வந்த கப்பர் சிங்கை மடக்கியிருப்பார்கள் தர்மேந்திராவும் அமிதாப்பும். ஆனால் அவர் செய்யவில்லை. ஏனென்று அவர் விளக்குவது படத்தின் ஜீவ நாடியான காட்சி. தன்னை சிறைக்கு அனுப்பிய அவரின் குடும்பத்தினரை கொலை செய்ததோடு நிற்கவில்லை கப்பர்சிங். நிற்க வைத்து அவர் கரங்களையும் அல்லவா துண்டித்து விட்டான்? காற்றில் போர்வை விலக அவரது கையறு நிலை புரிந்து அவர்கள் திகைக்க, இன்டர்வெல் கார்டு வேறெப்போதும் அத்தனை அட்டகாசமாக விழுந்ததில்லை. பத்துக் காட்சிகள் போலத்தான் அவருக்கு என்றாலும் படத்தின் சென்ட்ரல் காரெக்டர் அவர்தான் என்பதை அந்தப் பத்து நிமிட ஃபிளாஷ்பேக்கில் காட்டிவிடுவார். 

சஞ்சீவ் குமார். அவரில்லாமல் ‘ஷோலே’யில் ஜ்வாலை ஏது?

ஃபிலிமாலயா நடிப்புப் பள்ளியில் படித்து முடித்த கையோடு ஹீரோவாக ஒரு படத்தில் நடித்தார். கண்டுகொள்ளப்படவில்லை. வில்லனாக நடித்தார். எல்லோரும் கை தட்டினர். அமோக பாராட்டு. ஆகிவிட்டார் ஹீரோவாக.

அந்தப் படம் ‘Sunghursh’. இரண்டு வில்லன்களில் ஒருவராக திலீப் குமாருடன் மோதும் காட்சிகளில் எல்லாரையும் தன்னைக் கவனிக்க வைத்தார். காரணம் அந்த அபாரமான நடிப்பும் அழுத்தமான உச்சரிப்பும்.

சஞ்சீவ் குமார்… இன்று பிறந்த நாள்!

மனைவியுடன் கனவுகளுடன் மாநகரில் வந்து இறங்கும் அவன். வீடு தேடி அலைகிறான். முன்கதைச் சுருக்கம் தெரியாமல் அந்த வீட்டில் மாட்டிக்கொண்டு விடுகிறார்கள். ஒரு மாதிரியான ஏரியா அது. இதற்கு முன்பு அங்கு தங்கியிருந்த பெண்ணும்! ராத்திரியானால் கதவைத் தட்டுகிறார்கள் கஸ்டமர்கள்! விரட்டித் தாங்கவில்லை. எப்படி இருக்கும் அவனுக்கு! வேறு வீடு தேடி அலைவதும் கிடைக்காமல் குமுறுவதும்..  அகலும் ஒவ்வொரு இரவையும் அகழியாகத் தாண்டுவதும்... அந்தப் பாத்திரத்தின் தவிப்பை வேறு யாராலும் அத்தனை பிரதிபலித்திருக்க முடியுமா? ராஜேந்திர சிங் பேடியின் ‘Dastak’ சஞ்சீவுக்கு நேஷனல் அவார்டு வாங்கித் தந்தது.

தங்களுக்கு பிறந்த குழந்தைக்கும் தங்களைப் போல் காது கேளாமல் இருந்து விடுமோ என்று தவிப்பில் கிலுக்கத்தை அதன் காதருகில் ஆட்டி ஆட்டி அவனிடம் சலனமில்லாததைப் பார்த்து (அப்போது அந்த கண்களில் தெரியும் பதைபதைப்பு!) துடிப்பதும், டாக்டர் வந்து காதருகே சுண்டிப் பார்த்துவிட்டு ஓகே என்ற பிறகும் நம்பாமல் விழிப்பதும், அந்தக் கிலுக்கத்தில் மணிகள் இல்லாததைக் டாக்டர் காட்ட, நிம்மதிக்கு  மீள்வதும்.. வசனமற்ற அந்த ரெண்டே நிமிட காட்சியில் கொண்டே சென்றுவிடுகிறார் இதயங்களை. குல்ஜாரின் ‘கோஷிஷ்’! அடுத்த இரண்டாவது வருடமே நேஷனல் அவார்டு வாங்கி தந்த படம்.

சவால் ரோல்கள் அவருக்கு அவல்.  நவராத்திரி, ராமன் எத்தனை ராமனடி, ஞான ஒளி, சாந்தி... இந்திக்கு போன சிவாஜி படங்களுக்கு வேறு சாய்ஸே இருக்கவில்லை இவர் இருந்ததால்.

சீரியஸ் ரோல் ஆனாலும் சரி 'சிரி'ஸ் ரோல் ஆனாலும் சரி சிறப்பாகச் செய்து விடுவார். ‘Pati, Patni aur Woh’, ‘Seeta aur Geeta’... படங்களில் தன் டைமிங் திறமையால் அசத்துவார்.

Aandhi, Mausam, Arjun Pandit… அடுக்கிக் கொண்டே போகலாம் அடையாளம் பதித்த படங்களை. சிகரமாக சத்யஜித் ரேயின் ‘Shatranj Ke Khilari’


Wednesday, July 7, 2021

கல்கண்டு இசை...


அந்தப்படத்தில் ஐந்து இசை அமைப்பாளர்களை அறிமுகப்படுத்தினார் டைரக்டர் வசந்த். ‘ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே’ என்று சொல்ல வைத்தது ஒவ்வொரு பாட்டும். அதில் இதயத்தை "தொட்டுத் தொட்டுச் செல்லும்..." அந்தப் பாட்டை இசையமைத்ததோடு பாடியும் அசத்தி தமிழ் திரைக்கு அறிமுகமானார் அவர்.

இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம்... இன்று பிறந்த நாள்!

'அழகிய தீயே' தான் இவரை பிரபலமாக்கியது. பாடல்களும் சரி பின்னணி இசையும் சரி பாந்தமாக அமைந்த படம். “சந்தனக் காற்றே…” “விழிகளில் அருகினில்…” ரெண்டுமே கல்கண்டு ரகம்.

“ஜீவன் எங்கே …”  ‘யூனிவர்சிடி’ படத்தில் வரும் பாடல். ஜீவனைத் தொட்டுச் செல்லும். இடையிசையில் அமர்க்களப் படுத்தியிருப்பார். 'ஜெர்ரி' படத்தின் ஹிட் "என் சுவாசத்தில் காதலின் வாசம் வீசவைத்ததாரோ.." 

இனி அவரின் அந்த அதி உன்னத முயற்சி. ‘ராமானுஜன்.’ 2014 இன் சிறந்த இசையாக ‘டெக்கான் மியூசிக்’ தேர்ந்தெடுத்த படம். க்ளாஸிகல் இசையும் வெஸ்டெர்னும் அந்தக் கதையின் காலத்திற்கேற்ப கலந்து ஓர் பவழ இசையைத் தவழ விட்டிருப்பார். 

“நாராயணா.. நாராயணா..” என்ற அந்தப் பாட்டை நீங்கள் ஒரு முறையாவது  கேட்க வேண்டும். அடுத்து  எத்தனை முறைகேட்பது என்பதை நீங்களே தீர்மானிப்பீர்கள். சுஹாசினி பாடி முடிந்து சின்ன இராமானுஜன் வந்து பாடும்போது பீட் மெல்லத் தாவி விட்டு இருக்கும் முழு வெஸ்டர்னுக்கு. 

உன்னி கிருஷ்ணன் பாடும் திருமழிசை ஆழ்வாரின் 'விண் கடந்த ஜோதியாய்..' பாடலாகட்டும், ("ஆறும் ஆறும் ஆறுமாய் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்...") ரமேஷே பாடும் நா. முத்துக் குமாரின்கனிவான 'துளி துளியாய்...' பாடலாகட்டும் கேட்க பரவசம்.

அப்புறம் அவரின் அந்த ஆகச் சிறந்த பாடல்... என்ன அதுன்னு கேட்பவருக்கு: “என்ன இது, என்ன இது என்னைக் கொல்வது?..."  கமலின் ‘நள தமயந்தி'யில் சின்மயியுடன் இவரே பாடியது. சரணத்தின் கடைசி வரி பல்லவியின் முதல் வரியாக மாறும் அதிசயம்! அந்த பிரில்லியண்ட் அரேஞ்ச்மெண்ட்! நான் ஸ்டாப்பாக ஒலிக்க விட்டு நாம் தூங்கிப் போகலாம் நல்ல கனவுகளை நாடி!

அதே படத்தில்தான் மாதவனும் ஷ்ருதிகாவும் ஆடும் அந்த அட்டகாச ஜாலி பாடலும்! "புக்காம் பொறந்தா மனுஷாளெல்லாம் ஒண்ணா சேருங்கோ… மாப்ளே பொண்ணில் யார்தான் சமர்த்து நன்னாப் பாருங்கோ.."

இவரின் பக்திப் பாடல் ஆல்பங்களில் எஸ். பி. பி. பாடிய "கிருஷ்ணா.. ஜனார்த்தனா..." அப்படியொரு உருக்கம்!

க்ளாஸிகல் மெலடி ஸ்டாப் பண்ண முடியாத அந்த "ஸ்டாப் த பாட்டு..." யுவன் இசையில் (தொட்டி ஜெயா) இவர் பாடியது என்றால் ‘என்னத்தை சொல்ல…” ஹாரிஸ் ஜெயராஜ் இசையில்.(‘என்றென்றும் புன்னகை’)


Friday, July 2, 2021

க்ளாஸ் ஜோக்குக்கு ஒரு கோபு...


காஞ்சனா கேட்கிறார் குட்டிப் பெண் மஞ்சுளாவிடம். "Tell me why a man is great?"

"A man is great because he alone can laugh at others and at himself." என்று பதில் வருகிறது.
'சாந்தி நிலையம்' படத்தில் வரும் கலகலப்பான இந்த ஆங்கில டயலாக் நினைவிருக்கிறதா?
52 வருடங்களுக்கு முன் எழுதியவருக்கு இன்று பிறந்த நாள்!
சித்ராலயா கோபு. சிரிப்பு ஆள் ஐயா கோபு என்று சொல்லி விழுந்து விழுந்து சிரித்தோம். மகிழ்ந்தோம்.
ஜோக் எல்லாம் சும்மா க்ளாஸா இருக்கும். தமிழ்த் திரைக்கு ஶ்ரீதரும் இவருமாக அளித்த நகைச்சுவை வண்ணம் கொஞ்சமா?
கட்ட பொம்மன் வசனத்தை எப்படி உணர்ச்சி பொங்கக் கேட்டார்களோ அதேபோல ‘கல்யாண பரிசு’ வசனங்களை சிரிப்பு பொங்க மீண்டும் மீண்டும்!
‘காதலிக்க நேரமில்லை’ பற்றி சொல்லவே வேண்டாம். எழுதுவதற்கு இடமில்லை, அதில் வரும் நல்ல நகைச்சுவை அத்தனையையும் எடுத்து!
காமெடி படத்தில் டயலாக் சற்று சீரியஸான விஷயம். கதையைக் கொண்டு செல்வதாவும் இருக்கணும். எழும் கேள்விகளை இயல்பாக விளக்குவதாகவும்! சங்கீதம் மாதிரி டயலாகிலேயும் ஒரு ப்ராக்ரஷன் உண்டு. ஒன்றிலிருந்து ஒன்று இயற்கையா வரணும். அதே சமயம் கதைக்குத் தேவையில்லாமல் இருக்கக்கூடாது. இந்த இலக்கணத்துக்கு எடுத்துக் காட்டாக 100% சரியாக அமைந்த படம் ‘காதலிக்க நேரமில்லை’.
ஊட்டி வரை உறவு, கலாட்டா கல்யாணம், சுமதி என் சுந்தரி என்று நிறைய படங்களில் தன் வசனத்தால் நம் விசனம் துடைத்தவர். காசேதான் கடவுளடா, அத்தையா மாமியா, ராசி நல்ல ராசி என டைரக் ஷனிலும் டிஸ்டிங்ஷன் காட்டினார்.
என்னைக் கவர்ந்த அந்த ஒன்று… காமெடி, காதல், தத்துவம் என அவரது முழு வீச்சையும் ரசித்தது ‘சாந்தி நிலைய'த்தில்தான்.
சாலையில் சந்திக்கும் கோப ஜெமினியிடம் காஞ்சனா சொல்லும் கோபு டயலாக்: “அந்தஸ்தில இருக்குற உங்கள மாதிரி பணக்காரங்க வாழ்க்கையில முன்னேற மேலே போகும்போது சந்திக்கறங்ககிட்ட கொஞ்சம் அன்பா நடந்துக்கணும். காரணம், கீழே வரும்போது மறுபடியும் அவங்களை சந்திக்க வேண்டியதா இருக்கும்!”
“அனுசூயா டீச்சர்னு வந்தாங்களே, அவங்களும் வேலையைவிட்டு போய்ட்டாங்களா?”ன்னு ஜெமினி கேட்க, நாகேஷ்: வந்தாளே அனுசூயா! புருஷனை விவாகரத்து பண்ணிட்டு, பெத்த இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு இங்க வந்தா. நம்ம வீட்டு குழந்தைகளைப் பார்த்தவுடனே அந்த குழந்தைகளே பெட்டர்னு புருஷனோட போயிட்டா!”
தனியே நிற்கும் காஞ்சனாவிடம், ‘என்ன மாலதி, இருட்டைக் கண்டாலே பயப்படுவியே’ன்னு கேட்கும் ஜெமினியிடம், “வாழணும்கிற நம்பிக்கைகளும் ஆசைகளும் மனசில நிறைஞ்சி இருந்தப்ப நான் பயத்தை உணர்ந்தேன். ஆனால் இப்ப நான் இருட்டைக் கண்டு பயப்படறதில அர்த்தமே இல்லை.”
“என்ன திடீர்னு இந்த விரக்தி மனப்பான்மை?”
“என்னைப்போல அனாதைகள்கிட்ட நிரந்தரமாக உறவாடுவது விரக்தி ஒண்ணுதானே?”
“காலையில உன்னை கடுமையாக பேசிட்டேன், என்ன மன்னிச்சிடு மாலதி.”
“எப்பவுமே மன்னிப்பு கேட்கிறது அடுத்து செய்ய இருக்கிற தப்புக்கு அஸ்திவாரம்னுதான் நான் நினைக்கிறேன்!”
குழந்தைகளைப் பற்றி காஞ்சனா ஜெமினியிடம் சொல்லும் அந்த ஆழமான அட்வைஸ்: “அவங்கள நீங்க கடுமையான நடத்தறதினால நீங்க வீட்டில் இல்லாத போது சுதந்திர உணர்ச்சியில விஷமங்களைக் கொஞ்சம் அதிகமாக செய்யறாங்கன்னு நினைக்கிறேன். குழந்தைங்க எப்போதுமே மலரைப் போல மிருதுவானவங்க. மலர்ல இருக்கிற முள்ளை நீக்க அதைத் தீயில போட்டால் கருகிவிடும் இல்லையா? வேறுவிதமா தானே எடுக்க முயற்சி செய்யறோம்? அதைப்போலத்தான் நாம குழந்தைகளை அவங்க போற போக்குல போய்த்தான் நம்ம வழிக்கு கொண்டு வரணும்!”
“மலருங்கறீங்க, முள்ளுங்கறீங்க, வாத்தியார் வேலைக்கு வர முன்னாலே எங்கேயாவது தோட்டவேலை பார்த்தீர்களா?” என்று நாகேஷ் கேட்பது அதையும் மென் காமெடிக்கு நகர்த்தும்!
சிகரமாக நாகேஷின் அந்த காலட்சேப காட்சி! “குறும்புக்கார கோவிந்தன் நம்ப கிருஷ்ணன் ஒரு நாளைக்கு உண்ணாவிரதம் இருந்தார்... உப்புமா ஒரு குண்டா! உருளைக்கிழங்கு போண்டா! காப்பி ஒரு அண்டா! குடிக்க டம்பளர் கொண்டா!... ஆப்பம் அறுபது! அதிரசம் அறுபத்தெட்டு!... பத்தாதா? இத்தனைக்கும் மேலே ஒரு தார் வாழைப்பழம் அதையும் சாப்பிட்டுட்டு உண்ணாவிரதம் இருந்தார்!” என்று தொடங்கி கோபியர் கதைக்கு வந்து “கோபியரே, கோபியரே, கேளுங்கோடி.. கோபாலகிருஷ்ணனை பாருங்கோடி! குளத்திலே குளிக்கையில் கண்ணன் புடவையை எடுத்தே ஓடிச் சென்றான்! தம்மாத்துண்டு பயலுக்கு தில்லைப் பாத்தியா”ன்னு அமர்க்களப்படுத்துவாரே… அது!

Thursday, July 1, 2021

தென்றலாக நுழைந்தவர்...

 





‘பக்கயிந்தி அம்மாயி’.. 1953 இல் வந்த  தெலுங்குப் படம். எதிர் மாடியில் தரிசனம் தரும் அஞ்சலி தேவியோ கானப் பிரியை. காதலிக்கும் ரேலங்கிக்கோ பாட வராது. நண்பர்கள் ஒரு பாடகரை அழைத்து வருகிறார்கள்.  கட்டிலில் அமர்ந்து ரேலங்கி வாயசைக்க கட்டிலுக்குக் கீழே அமர்ந்து ஆக்சுவலாகப் பாடுவார் அந்த பாடகர். பாடகராக நடித்ததும் பாடியதும்..

நம் ஏ.எம்.ராஜா… இன்று பிறந்த நாள்!

தென்னிந்திய சினிமாவில் தென்றலாக நுழைந்தவர்… தன் இசையால் தென்றலை வீசவும் செய்தவர். இவரது பாடகர் பகுதியை பற்றி அதிகம் சொல்லவா இசையமைப்பாளர் பகுதியை பற்றி அதிகம் சொல்லவா? மயக்கத்தைத் தவிர்க்க முடியாது. இரண்டிலும் ஏகத்துக்கு சாதித்திருப்பதால்.

கல்யாணப்பரிசு படத்தின் வெற்றிக்கு ஒரு தூணாக நின்றது பட்டுக்கோட்டையாரின் எட்டுப் பாடல்களுக்கு ஏ.எம்.ராஜா தந்த இசை.

“காலையும் நீயே.. மாலையும் நீயே..” என்று கேட்டுக்கொண்டே இருக்கலாம் இன்றைக்கும் அதன் பாடல்களை. ஆம் இசைக்கென்றே அவதரிக்க படம்.. ‘தேன்நிலவு.’

கர்நாடக இசை, மேற்கத்திய இசை இரண்டும் இரண்டு கைகளில்! ஆடிப்பெருக்கின் இசை சொல்லும்.  “தனிமையிலே இனிமை காண முடியுமா..” “காவேரி ஓரம் …”

இவருடைய progression ( பல்லவிக்கும் சரணத்துக்கும் இடையே வரும் இசை) கனகச்சிதமாக, மிகச் சரியான வாத்தியங்கள் கொண்டு ஏராளம் வயலின்களுடன் ஒரு முழுமையான orchestration ஆக இருக்கும். “மலரே மலரே தெரியாதோ…” பாடலிலும் சரி,   “புரியாது..வாழ்க்கையின் ரகசியம் புரியாது..” பாடலிலும் சரி அதைத் தெளிவாகப் பார்க்கலாம். ஒரு சின்ன மாற்றம் கூட செய்வதை விரும்ப மாட்டார் என்பார்கள் என்றால் அந்த அளவு ஒரு பர்ஃபெக் ஷனுடன் அது இருக்கும்.

பிபி ஸ்ரீனிவாஸின் மிக அருமையான பாடல்களில் ஒன்று இவர் இசையில் அமைந்த “பண்ணோடு பிறந்தது தாளம்…” (விடிவெள்ளி) சீர்காழி கோவிந்தராஜனின் முத்துக்களில் ஒன்று “அன்னையின் அருளே வா..” அதுவும் இவர் இசையமைத்ததே. (‘ஆடிப்பெருக்கு').

இசையமைத்த ‘அன்புக்கோர் அண்ணி’ யில்தான் அந்த சூப்பர் ஹிட். “ஒரு நாள்.. இது ஒரு நாள்.. உனக்கும் எனக்கும் இது திருநாள்..”

“ஆடாத மனமும் ஆடுதே..” என்றிவர் பாடினால் ஆடாத மனமும் ஆடும்! “பாட்டு பாட வா..” என்று பாடினால் பாடாத வாயும் பாடும் கூடவே.  “அன்பே வா அழைக்கின்றதெந்தன் மூச்சே..” தென்றல் போல் மிதந்து வரும் பாடல். “வாராயோ வெண்ணிலாவே..” பாடலின் அந்தக் குழைவு! “அதிமதுரா.. அனுராகா..” பாடலின் அதிமதுரம்! (எங்கள் குடும்பம் பெரிசு) “பிருந்தாவனமும் நந்தகுமாரனும்..” விருந்தானது காதலர்களுக்கு அப்போது. “எல்லாம் உனக்கே தருவேனே.. இனிமேல் உரிமை நீதானே…” பெண்களின் மனதை அள்ளிக் கொண்டது.

வளமான குரல் இருந்ததால் வாய்ப்புக்காக ரொம்ப சிரமப்படத் தேவை இருக்கவில்லை. எடுத்த எடுப்பிலேயே ஜெமினி படம், கேவி மகாதேவனின் ‘குமாரி' என்று பாட ஆரம்பித்து ஹெலிகாப்டராக உயர்ந்தார். இங்கிருந்து இந்திக்குப் போன முதல் பாடகரும் இவர்தான்.

பிரிக்க முடியாதது? என்று கேட்டால் துள்ளிக் குதித்துக் கொண்டு வரும் பதில்: ஜெமினியும் இவர் குரலும். பாடகரே நடிகராக இருந்த காலம் மாறி நடிக்க மட்டும் நடிகர்கள் வந்தபோது ஜெமினி கணேசன் குரலின் இனிய பாதியாக இவர் இருந்ததை மறக்க முடியுமா? “கண்களின் வார்த்தைகள் புரியாதோ..” (களத்தூர் கண்ணம்மா) “தங்க நிலவில் கெண்டை இரண்டும்..” (திருமணம்) “வாடிக்கை மறந்ததும் ஏனோ..”

எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினி, என்டிஆர், நாகேஸ்வரராவ், ராஜ்குமார், சத்யன், பிரேம் நசீர் என்று நாலு மொழி நாயகர்களின் நாவசைப்புக்கும் பாடிக்கொண்டிருந்தவர். சிவாஜிக்கு “என்ன என்ன இன்பமே..” (அன்பு) “இடை கையிரண்டில் ஆடும்..” (விடிவெள்ளி) “திரைபோட்டு நாமே..” (ராஜா ராணி) “யாழும் குழலும் உன் மொழி தானோ..” (கோடீஸ்வரன்) என்றால் எம்ஜிஆருக்கு “கண்மூடும் வேளையிலே..” (மகாதேவி) “மாசிலா உண்மை காதலே..” “பேசும் யாழே பெண்மானே…” (நாம்) “மயக்கும் மாலைப் பொழுதே நீ போ..” (குலேபகாவலி) 

இதுபோன்று ஒரு மதுரமான குரலை ஆண்டவன் தேர்ந்தெடுத்து அவருக்குக் கொடுத்தது, வேறென்ன, நம்மைச் சில வருடங்கள் மகிழ்விக்கத்தான்! எத்தகைய சால மென் குரல் என்பதை எந்த பின் வாத்தியமும் இல்லாமல் வெறும் குரலில் ஆரம்பிக்கும் இவரது சில பாடல்களில் உணர்கின்றோம். “கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்..” (மீண்ட சொர்கம்) என்று ஆரம்பிக்கும் போது.. “காலையும் நீயே மாலையும் நீயே..” (தேன் நிலவு)  “சிங்காரப் பைங்கிளியே பேசு..” (மனோகரா)

‘இல்லற ஜோதி’யில் “களங்கமில்லா காதலிலே..”  பாடலில் “நினைவிலே பேதமில்லை..” என்று இவர் என்ட்ரி ஆகும்போது ஏற்படும் சிலிர்ப்பு இருக்கிறதே அதை உலகில் வெகு சில குரல்கள் தான் கொடுக்க முடியும்! அதேபோல் “இதய வானின் உதய நிலவே..” பாடலில் “இருளகற்றும் ஒளியென்றென்னை எண்ணும் நீயாரோ..” என்றும்! “மயக்கும் மாலைப் பொழுதே நீ போ..” வில் “பன்னீர் தெளிக்க பனி பெய்யுமே..”

ஜாலி பாடல்களிலும் கணீரென்று ஒலிக்கும் குரல்.. “கொடுத்துப் பார் பார் உந்தன் அன்பை..” “ஓஹோ எந்தன் பேபி..” 

எம். எல். வசந்தகுமாரியிலிருந்து (“இன்பக் குயில் குரல் இனிமை..” - மனிதனும் மிருகமும்) ஜமுனாராணி வரை (“சந்தோஷமே தான் சங்கீதமாக..” - சந்தானம்)  சேர்ந்து பாடியவர்.  ஜி. ராமநாதன் முதல் சங்கர் கணேஷ் இசையில் வரை… ராஜா ஜிக்கி தாம் ஐம்பதுகளில் பிரபல பின்னணி ஜோடி. “அழகு நிலாவின் பவனியிலே..” இந்தப் பாடலைத் தொடர்ந்துதான் வாழ்விலும் இணைந்தது அந்த ஜோடி. 

ஒரிரு வரி பாடினாலும் உள்ளம் கவரும் குரல். “வெண்ணிலா நிலா.. என் கண்ணல்லவா கலா..” என்று இரு வரிதான் பாடுவார் ‘ஆரவல்லி'யில் “சின்னப் பெண்ணான போதிலே..’’ போதாதா? சில பாடல்களை இவர் பாடினால் கேட்போருக்கு ஏற்படும் உணர்வு மிகப் பிரத்தியேகமானது. அதற்கு உதாரணம் “என் நெஞ்சின் பிரேம கீதம்..” (பணம் படுத்தும் பாடு) 

எத்தனைக்கெத்தனை காதல் பாட்டுக்கு மன்னனோ அத்தனைக்கத்தனை சோகப்பாட்டுக்கும் அரசன். “மின்னல் போல் ஆகும் இந்த..”  “அன்பே நீ அங்கே..” “என் காதல் இன்பம் இதுதானா..” “அன்பே வா..” “உன்னைக் கண்டு நான் வாட…” எல்லாவற்றுக்கும் மேலே அந்த ஒரு பாடல்.. “வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே..” (மல்லிகா)

Re entry சில ஹிட்கள் தந்தது. ரங்கராட்டினம் படத்தில் வி குமார் இசையில் “முத்தாரமே உன் ஊடல் என்னவோ..” சங்கர் கணேஷ் இசையில் அன்பு ரோஜாவில் “ஏனடா கண்ணா..”   

வெகு காலத்துக்குப்பின் இவர் இசையில் வந்த ‘வீட்டு மாப்பிள்ளை’யில் அந்த அசத்தும் பாடல்! “மலரே ஓ மலரே..” என்னவொரு எழுச்சியும் வேகமும் அந்தக் குரலில்!

‘அம்மா என்னு ஸ்திரி’ மலையாள படத்துக்கு இசையமைத்தார். ‘பார்யா’ ‘அடிமைகள்’.. என்று ஜி. தேவராஜன் இசையில் ஏராளம் பாடல்கள் மலையாளத்தில்! “தாழம்பூ மணம் உள்ள தணுப்புள்ள ராத்திரியில்..” அங்கே சூபர்ஹிட்.

சில பாடல்களை இவர் தான் பாட முடியும் அத்தனை மென்மையாக… “பூவில் வண்டு போதை கொண்டு..” (அன்பு எங்கே) “போதும் உந்தன் ஜாலமே..” (கடன் வாங்கி கல்யாணம்)  “புதுமை நிலா அங்கே..” கோமதியின் காதலன்

ஒரு பாட்டின் உருக்கத்தை பாடகர் எத்தனை --- செய்ய முடியும்? சி. என். பாண்டுரெங்கன் இசையில் ‘எதிர்பாராதது' படத்தில் இவர் பாடிய  “சிற்பி செதுக்காத பொற்சிலையே..” யைக் கேளுங்கள்.

மிகப் பெரும் மியூசிக் டைரக்டராகத் திகழ்ந்திருக்க வேண்டியவர். தன்னுடைய straightforwardness காரணமாக வாய்ப்புகளைத் துறந்ததாக சொல்லுவார்கள். இழந்தது நாம்.


Doctors' Day!


உங்கள் உடல் அவருக்கொரு புத்தகம்.

உங்களுக்காக அவர் அதைப் படிக்கிறார்

ஒரு வரி விடாமல்.
எந்த இடத்திலும் முகம் வாடுவதில்லை.
எங்கே என்ன தேவையோ அந்த
திருத்தத்தைச் செய்கிறார்.
இப்போது அது
இன்னும் படிக்க அழகாக இருக்கிறது.
அவரும் அருகே. எப்போதும்!
><><
மருத்துவர் தினம்!
வாழ்த்துக்கள்
!

Your body, a manuscript for him.
He is reading it for you,
Leaving not a word.
He is editing it for you
Where and what necessary.
Sees to it that it becomes
A good book
And be always one.
And he is always there, too.
><><
DOCTORS' DAY!
My Greetings!