Friday, October 15, 2010

உதிர்ந்திடும் மந்திரம்...



யதின் சுருக்கங்களுக்குப் பின்னே

வாழ்வின் பெருக்கங்கள்

வாழ்ந்ததற்கு அடையாளமாய்..


தெருவில் எறியப்படுகின்ற

தேய்ந்த எந்திரங்கள்.

படித்து முடித்துவிட்ட

பாடப் புத்தகங்கள்.


வனித்துக் கொள்ள மட்டுமே நாங்கள்

கவனிக்கப்பட அல்ல.

வீசப்படும் வார்த்தைகளுக்கு வலிக்காமல்

தழுவி எடுத்துக்கொள்ளப்

பழகிவிட்டோம்.


விடைகள் கிடைக்காத உள்ளத்தை

உடையாமல் கொண்டு செல்ல

நடையின் வேகம் குறைந்தோம்.


முதிர்ந்ததும் உதிர்ந்துவிடும்

மந்திரம் தெரியவில்லை.
முடியாதவற்றிலிருந்து ஒதுங்கும்

இங்கிதமும் அறியவில்லை.

சுமந்து எம்மை மறு நாளில்
கொண்டு சேர்க்க முடியாமல்

தள்ளாடும் நாட்கள்...


நிஜ விழுதுகளில் ஊஞ்சலாடியதொரு

காலம்...இன்று

நினைவுகளையே விழுதாய் ஊன்றி

நிற்கிறோம் நாங்கள்.


னவலியின் அழுத்தத்தில்

உடல்வலி மறக்கிறோம்.

உடல் வலியின் உக்கிரத்தில்

மனமிருப்பதையே மறக்கிறோம்...


(அவள் விகடன் 27-08-2010 இதழில் பிரசுரம்)



Wednesday, October 6, 2010

தெரியாத விடை


ன்டர்வியூ நடந்து கொண்டிருந்தது. கணேஷ் பதில் சொல்லிக்கொண்டிருந்தான்.

''இது உங்களுக்கு எத்தனையாவது இன்டர்வியூ?'' என்றார் ஒரு அதிகாரி.

''இருபத்தாறாவது!''

பின் அங்கிருந்த மற்றவர்கள் மாறி மாறி ஒவ்வொரு கேள்வியாகக் கேட்க ஆரம்பித்தனர். எல்லாமே கஷ்டமான கேள்விகள். முதல் கேள்விக்கே தெரியாது என்று பதில் சொன்னான். அது மட்டுமல்ல, அவர்கள் அடுத்தடுத்துக் கேட்ட எட்டுக் கேள்விகளுக்குமே தெரியாது என்றுதான் பதில் சொல்ல வேண்டியதாயிற்று.

ஒரு மௌன இடைவெளி. வேறு ஏதாவது கேள்வி இருக்கா என்பது போலத் தயக்கத்துடன் பார்த்தான் கணேஷ். இந்த வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையே போய்விட்டது அவனுக்கு. ஆனால்...

''உங்களை செலெக்ட் செய்து விட்டோம்!'' என்றார்கள்.

''தேங்க்யூ சார்!'' விழிகள் விரிய ஆச்சரியப்பட்டு நெகிழ்ந்தவனிடம் அந்த அதிகாரிசொன்னார்...

''என்னடா எந்தக் கேள்விக்குமே நாம சரியா பதில் சொல்லலையே எப்படி இந்த வேலையை நமக்குக் கொடுக்கிறாங்கன்னு பார்க்கறீங்களா? நாங்க கேட்டதெல்லாம் ரொம்பக் கடுமையான, இந்த சேல்ஸ்மேன் வேலைக்குச் சற்றும் சம்பந்தமில்லாத கேள்விகள். நாளைக்கு நீங்க எங்கள் தயாரிப்பை விற்கப் போகிறப்போ இந்த மாதிரி எத்தனையோ கேள்விகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். அப்ப உங்களுக்குத் தேவை பொறுமையும் விடா முயற்சியும்! எங்கள் கேள்விகளுக்கு நீங்க கொஞ்சம் கூடப் பதறாமல் தெரியாது... இது பத்திப் படிக்கலேன்னு பொறுமையா பதில் சொன்னீங்க. இப்படி எந்த சந்தர்ப்பத்திலும் நிதானம் இழக்காம இருக்கிறதுதான் நாங்க உங்ககிட்டே எதிர்பார்க்கிற தகுதி!''

(விகடன் 06-03-05 இதழில் பிரசுரம்)