Friday, May 26, 2017

ரெண்டு நிமிஷம்...

அன்புடன் ஒரு நிமிடம்... 116

உற்சாகம் ஒரு துளிகூட இன்றி காணப்பட்டான் வைபவ். வாசுவின் பக்கத்து வீட்டுப் பையன். எஞ்சினீயர். மனைவி, இரு குழந்தைகள். அடிக்கடி வீட்டுக்கு வருவான் இவரைப் பார்க்க. இவரிடம் ரொம்ப ஒட்டுதல்.
என்னப்பா என்று கேட்டபோது எல்லாரையும் போல, வேலை ஜாஸ்தி, டென்ஷன் என்றே எதிர்பார்த்த பதில்.. ஆனால் கொஞ்ச நேரம் அவனுடன் பேசியதுமே தெரிந்துவிட்டது அப்படியொன்றும் வேலைப்பளு இருக்கவில்லை என்று. வீட்டில் ஒன்றும் பிரசினை இல்லை. வேறு எதனால் இவன் இப்படி? எதனாலோ ஒரு வெறுமை...எப்படி இவனை சரிப் படுத்துவது?
“ஒரு வாக் போலாமா?” என்றவர் சொன்னதும் அவன் எழுந்தபோது செல் ஒலித்தது. எடுத்துப் பார்த்துவிட்டு அணைத்து விட்டான்.
”யார் அது? பேசியிருக்கலாமே?”
”ஃப்ரண்ட். அப்புறம் பேசலாம்னு...” காட்டினான் பெயரை’
பார்க்கலாமா என்று அதை வாங்கினார். 
கான்டக்ட் லிஸ்டை உயிர்ப்பித்தார். ”இது யார் அரவிந்த்?’
”என் பெரியண்ணா. என் மேல ரொம்பப் பிரியம்.”
”கடைசியா எப்ப அவருக்கு போன் பண்ணினே.. இரு பார்க்கிறேன் இதில...ஓ, நாலு மாசம் முந்தி.” இன்னும் புரட்டி, ”அஸ்வின்?”
”ஃப்ரண்ட். பத்து வருஷமா... சென்னையில இருக்கான். எப்ப போனாலும் இவனோடதான் தங்கறது...”
”ரெண்டு மாசம் முந்தி ரெண்டு நிமிஷம் பேசியிருக்கே.” புரட்டி... ”ராமாமிர்தம். இது உன் கல்லூரி ஆசிரியராச்சே? எனக்கு இவர்தான் வழிகாட்டின்னு..”
“அவரேதான். அவங்க பையன் கொஞ்ச நாள் முந்தி ஆக்ஸிடெண்ட்ல...”
“ஒரு மாசமா அவர்கிட்ட எதும் பேசலே போல. அப்புறம் வத்சலா கார்த்திக். அது யாரு?”
“ரயிலில் சந்திச்ச எழுத்தாளர். ரொம்ப ஃப்ரண்டாயிட்டாங்க.”
”இவங்களோடும் சமீபத்தில பேசினமாதிரி தெரியலியே?” 
தொடர்ந்து அழுத்திப் பார்த்த முக்கியமான நெருங்கிய பல பேர்களோடெல்லாம் அவன் பேசி  நாளாயிற்றென தெரிந்தது.
”என்னப்பா இது, அத்தனை பிரியமானவங்க..  அப்பப்ப அவங்களை அழைத்து ரெண்டு நிமிஷம் பேசறதில்லையா?”
”அது... எனக்கு... நேரம் கிடைக்கணுமில்லையா?”
”ரெண்டு நிமிஷம்கிறது ஒரு நேரமா என்ன... அதில்லை காரணம்!”
”சரி, அவங்களும் கூப்பிட்டு பேசணும் இல்லையா?”
”நாம மதிக்கிறவங்க, நேசிக்கிறவங்களோட பேசறதுக்கு பதிலுக்கு பதில் பார்க்கணுமாக்கும். நோ! இந்தா!” நீட்டினார் மொபைலை.
”பேசு இப்ப இதில ரெண்டு பேரோட. ஜஸ்ட் அஞ்சு நிமிஷம்... நாளைக்கு ரெண்டு பேர்.  தினம் இப்படி ஒரு வாரம் பண்றே. ப்ளீஸ்....  நான் சொன்னதுக்காக இதை செய்யறே. அடுத்த வாரம் உன்னை பார்க்கிறேன். சரியா?”
இவன் போனை உசுப்பியவாறே வெளியேறினான். .
அடுத்த வாரம் வந்தபோது அவனது கண்களில் அப்படியொரு உற்சாகம். மனதில் அகன்றிருந்த வெறுமை பேச்சில் தெரிந்தது.
><><><
(”அமுதம்’ ஜூன் 2015 இதழில் வெளியானது)

Saturday, May 13, 2017

அவள் - கவிதைகள்


401.
தெரிந்துகொள்ளத் துடிக்கிறேன்
தென்றல் உன் காதில் சொன்ன சேதி.

 402.
அழகை புவி ஈர்ப்பதில்லை போல..
அதனாலோ உன் கால்கள்
தரையில் படுவதில்லை?

403.
சந்தித்த நாளின் 
எந்தக் கணத்தைத் தொட்டாலும்
சிலிர்க்கிறது.

404
உன் கன்னங்களில் நீந்தும்
என் எண்ணங்கள்
கரையேறுகின்றன இதழோரமாய்.

405.
தெளித்திடும் பன்னீரில்
தெறித்திடும் மணம் போல
உன் பேச்சில் அன்பு...

406.
ஓடி ஓடிச் சென்று நிற்க முயலுகிறேன்
உன் மனம் செல்லும் இடங்களில்.

407.
எப்படிக் காட்சியளிக்க முடிகிறது
என்றும் புதிதாக?

408.
முதல் தேதி போல
நீ எனக்கு.
முப்பது நானுனக்கு.

409.
எத்தனையோ சத்தம்.
ஊஹூம்!
என் ஒரு சிறு கிசுகிசுப்பு
விழித்துக் கொள்கிறாய்.

410
தொடுவானத்துக்கு அப்பாலும்
நீள்கிறது உன் 
நினைவு.
><><

Wednesday, May 10, 2017

நல்லதா நாலு வார்த்தை... 81

'ஒரு பணக்காரர் ஆரோக்கியமாகத் திகழ ஒரே வழி
உடற்பயிற்சி, விரும்புவது தவிர்த்தல்
என்றொரு ஏழையைப் போல வாழ்தலே.'
-- Dr Paul Dudley White 
(’The only way for a rich man to be healthy is,
by exercise and by abstinence, to live as if he were poor.’)

'அளிப்பதன் ஆடம்பரம் அறிபவனாக
அவன் இருக்கவேண்டும் வறியவனாக.'
-George Eliot
('One must be poor to know the luxury of giving.')

'என்ன இன்று செய்கிறாயோ அ்து உன்
எல்லா நாளைகளையும் மேம்படுத்த முடியும்.'
-Ralph Marston
(‘What you do today can improve all your tomorrows.’)

'மூளும் கணங்களிடம்
முழுவதுமாகச் சரணடந்துவிட்டால்
இன்னும் சுகமாக வாழ்ந்திடலாம்
 அந்தக் கணங்களை நீ.'
-Anne Morrow Lindbergh
('If you surrender completely to the moments
as they pass, you live more richly those moments.')

'பகலவன் ஒளி நோக்கி
முகத்தை வைத்திருக்க,
பார்த்திட நேராது
இருள் எதையும் நீ.'
-Helen Keller
(‘Keep your face to the sunshine
and you cannot see a shadow.’)

'உங்கள் இதயத்தின் சுவாசங்களால்
 உங்கள் தாளை நிரப்புங்கள்.'
-William Wordsworth
(‘Fill your papers with the breathings of your heart.’)

'விண்,
விழிகளின் தின ஊண்.'
-Emerson
(‘The sky is the daily bread of the eyes.’)

’நேசி எல்லாரையும்,
நம்பிக்கை வை சிலரிடம்,
தவறிழைக்காதே யாருக்கும்.’
-William Shakespeare
{’Love all, trust a few, do wrong to none.’)

'நல்ல மனிதர்களின் 
இயல்பான விழைவு 
அறிவே.'
- Leonardo da Vinci
('The natural desire of good men is knowledge.')

ஆகக் குறைவாய் நம்மிடம்
அமைந்திருப்பது நேரமே.'
- Ernest Hemingway
('Time is the least thing we have of.')

><><><

Monday, May 8, 2017

ஆட்டத்தின் ஆட்டம்...

அன்புடன் ஒரு நிமிடம் - 115

”ஒரே டென்ஷனுங்க கொஞ்ச நாளாகவே... வரிசையா பிரசினை. என் பையனோட வியாபாரத்தில நஷ்டம். பேரனுக்கு ஸ்கூலில் திடீர்னு காரணமில்லாம வெளியே போக சொல்றாங்க. மனைவிக்கு அனீமியா வந்தது கொஞ்சமும் மட்டுப்பட மாட்டேங்குது. இப்படி ஒவ்வொண்ணா போராடி ... ஒரே சோர்வு.”
அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார் சாத்வீகன். வந்திருந்த சிவதாணு விலாவாரியாக அவரை முற்றுகையிடும் பிரசினைகளையும் அதை எதிர்த்து போராட முடியாமல் துவண்டு போவதையும் விளக்கினார்.
”எல்லாருக்கும் பிரசினைகள் வரும்தான். இல்லேன்னு சொல்லலே. ஆனால் இப்படி அடுக்கடுக்காக... தாங்க  முடியலே. ரொம்ப மனசு துவண்டு போகுது... சரியா சாப்பிட்டு ஒரு மாசமாகுது.”
அப்போது அபிஜித், இவர் பேரன், உள்ளே நுழைந்தான்.
”என்னடா இப்படி ... மேலெல்லாம் வேர்வை.. சட்டையெல்லாம் கசங்கி... அடிகிடி பட்டுட்டுதா?” 
சிரித்தான் கடகடவென்று. ”மூணு மணி நேரம்! சூப்பரா வெளையாடிட்டு வர்றேன்!”
”என்ன கேம்?”
”ஷட்டில்காக். நானும் சரவணனும். அந்தப் பக்கம் மாமாவும் கிருஷ்ணாவும். கேக்கணுமா? மாமா அடி தூள் கிளப்பறார். தாக்கு பிடிக்க முடியலே எங்களால.  ஓரொரு பந்தும் மட்டையை நிமிர்த்தறதுக்குள்ளே வந்து விழுது. பயங்கர டென்ஷன். குனிஞ்சு வளைஞ்சு காட்ச் பண்றதுக்குள்ளே... கால் இடறி கீழே விழுந்து எழுந்து அப்பாடா, முட்டி பேர்ந்துட்டது.” 
”சரி சரி, இன்னும் மூச்சு வாங்குது. மெதுவா பேசு.”
”அதெல்லாம் விளையாட்டில சகஜம் தாத்தா. மூச்சு வாங்க விளையாடினாத்தானே த்ரில்? நாலு தடவை விழுந்து எந்திரிச்சா தானே விளையாட்டு?”
போய்விட்டான்
”பார்த்தீரா?” என்றார் இவரிடம். ”நீங்க மூணு நாளா அனுபவிக்கிற டென்ஷனை இவன் மூணு மணி நேரத்தில இன்னொரு ரூபத்தில அனுபவிச்சிட்டு வர்றான். ஆனா ஆடறப்ப அந்த டென்ஷன் இவனை கஷ்டப் படுத்தலே. அதை பார்ட் அஃப் த கேம் ஆக எடுத்துக்கிட்டான். சமாளிக்கணும்! ஜெயிக்கணும்! அது ஒண்ணு தான் மனசில்! வெற்றியோ தோல்வியோ ஸ்கோரை வாங்கிட்டு வெளியேயும் வந்துட்டான்.” 
”வாழ்க்கையை விளையாட்டா எடுத்துக்கணும்னு சொல்றீங்களா?”
”இல்லை. வேறெப்படி எடுத்துக் கொண்டாலும் கஷ்டம்தான்கிறேன். விளையாட்டா எடுத்துக்க முடியாது. என்ன ஆகுமோ ஏது ஆகுமோன்னு தான் இருக்கும். ஆனா விளையாடறவனுக்கும் அந்த வினாடிகளில் அது என்ன ஆகுமோ ஏது ஆகுமோன்னுதானே இருக்கும்? என்ன வேணா ஆகட்டும்னு தன் திறமை மேலே நம்பிக்கையோட தன் சக்தியை திரட்டி தன் ஆட்டத்தை ஆடறான் அவன், ஜெயித்தாலும் தோற்றாலும் அடுத்த கேம் இருக்குன்னு... அதே நிலைதான் நமக்கும் இங்கே!  என்ன வேணா ஆகும். சக்தி இருக்கு, நம்பிக்கை இருக்கு, அவனுக்கில்லாதபடி யோசிக்க திட்டமிட அவகாசம் இருக்கு. அப்புறம் என்ன, நாமும் அதே எண்ணத்தில் ஆட வேண்டியதுதான் நம் ஆட்டத்தை! அந்த டென்ஷனை இயல்பாக எடுத்துக்கொண்டு நம்மை நாமே ரிலாக்ஸ் பண்ணிக்கலாமே?”

(”அமுதம்’ ஜூன் 2015 இதழில் வெளியானது)