Saturday, April 17, 2010

திறமை


ப்பா, அம்மா, அண்ணன், அக்கா எல்லார் மேலும் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது ரவீனுக்கு,
சொல்லி வைத்தது மாதிரி எல்லாரும் கைவிரித்து விட்டனர்.
முதலில் அப்பா.
''எனக்கு கொஞ்சம் அனிமல்ஸ் படம் போட்டுத் தாங்கப்பா''
''என்ன விஷயம்டா?''
''டீச்சர் ஒரு பக்கம் நிறைய அனிமல்ஸ் படம் போட்டுட்டு வரச் சொன்னாங்க. எனக்குப் படம் போட வராது, அதான்...''
'' ஐயையோ,'' என்றார் தியாகு, ''அப்பாவுக்கு ஆபீஸ் பெண்டிங் வொர்க் இருக்கே? அர்ஜண்டா முடிக்கணுமேன்னு ஃபைலை வீட்டுக்கு எடுத்திட்டு வந்தேன். ஸாரிடா, அம்மா இப்போ வந்துருவா, வரைஞ்சு தருவா.''
அம்மா, அக்கா, அண்ணன் எல்லாரும் ஏதோ ஒரு வேலையை சொல்லி இதே போல கைவிட்டனர்.
கோபமாய் ஒரு மூலையில் போய் உட்கார்ந்தான். வேறே வழியில்லை, நாமே முயற்சித்துப் பார்க்க வேண்டியது தான்.

ரண்டு மணி நேரம் பொறுத்து...
பின்னால் வந்து நின்ற அப்பா, ''அட, மான், யானை, கங்காரூ எல்லாம் தத்ரூபமா இருக்கே, நீயேவா வரைஞ்சே? எப்படிடா?''
''அது டிஸ்கவரி சேனல்ல பார்த்ததை ஞாபகம் வெச்சி வரைஞ்சேன்,'' என்றான் பெருமை வழிய.
அதற்குள் அம்மா, அண்ணன், அக்கா எல்லாரும் வந்து பாராட்ட, ''பார்த்தியா, நீ கேட்டதும் நாங்க யாராவது வரைஞ்சு தந்திருந்தா, உனக்குள்ளே இத்தனை திறமை இருக்கிறது உனக்குத் தெரிய வந்திருக்குமா?'' என்று கை தட்டினார் அப்பா.
அவர் சொல்லிக் கொடுத்த மாதிரியே சொல்லி நழுவிக்கொண்ட அம்மா அண்ணன் அக்காவும்!

(குமுதம் 09-08-2006 இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை)

Tuesday, April 13, 2010

தொலை(த்தவை) நோக்கு


விடலைப் பருவத்துடன்


விடை பெற்றுக் கொண்டுவிட்டது


வாழ்க்கையிலிருந்து வசந்தம்.


எதிர்பார்ப்பு அதிகமிருந்ததாலோ என்னவோ


ஏமாற்றம் சகஜப்பட்டுப் போய்விட்டது.


இங்கிதமும் சங்கோஜமும் உடனிருந்ததால்


இழந்த வாய்ப்புகள் எத்தனை எத்தனை!


என்ன நினைப்பார்கள் என்ற நினைப்பு


எப்பவுமே அடங்கிப் போக வைத்துவிட்டது.


எல்லாம் ஓய்ந்தபின்


இன்று நினைத்துப் பார்க்கையில்


மிச்சம் இல்லை வாழ்க்கையில்...

Monday, April 12, 2010

நனையாமலிருக்கும் நம் குடைகள்!




ல நேரங்களில் காலியாகப்
பயணிக்கும் பின்னிருக்கைகள்
வேலைக்காரி பெருக்கித் தள்ளும்
விரித்த முழுத் தாள்கள்
அப்புறம் படிக்கவென்று
ஆர்க்கும் தராமல்
அலமாரியில் நகம் கடிக்கும் புத்தகங்கள்
ஏறும் விலை என்று
ஏதும் பயிரிடாமல்
தோதாக விட்டு வைத்த வயல்கள்
கண்ணில் விபத்து பட்டதும்
கடிதில் மூடிக்கொண்ட கார்கள்
பதில் எழுத நினைத்து மறந்த கடிதங்கள்
சட்டென்று மனம் தொட்டதும்
முடிந்து வைத்த சங்கல்பங்கள்
காக்கைக்கு வைக்க மறந்த சாதங்கள்
கச்சேரிக்குப் போகத் தயங்கிய கால்கள்
பசங்களுக்கு சொல்லத் தவறிய கதைகள்
நிசங்களைத் தரிசிக்க அஞ்சிய கண்கள்
நடுவதற்கு விட்டுப் போன செடிகள்
சொல்லாத வாழ்த்துக்கள்
அள்ளாத பன்னீர்ப் பூக்கள்
கிள்ளாத மழலைக் கன்னங்கள்...

நினையாமலிருக்க முடியவில்லை
நனையாமலிருக்கும் நம் குடைகளை...

Wednesday, April 7, 2010

நம்பிக்கை


முக்கால்வாசி தேறி விட்டது. இன்னும் ஒரு பத்தாயிரம் இருந்தால் மகன் வேலையில் சேரத் தேவையான பணம் தேறிவிடும். மண்டையை உடைத்துக் கொண்டிருந்தபோது...

''ஏங்க, தாம்பரத்தில் உங்க நீலகண்ட மாமா இருக்காரில்லையா? அவரைப் பார்த்தால் என்ன?'' அருமையான யோசனைக்கு மறு பெயர் என் மனைவி.

மாமா மனைவியை இழந்தவர். பிள்ளைகள் இல்லை. ரிடையரான பின் தனியே ஒரு வீட்டில் தானே சமைத்து சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார்.

''ப்படி இருக்கிறீங்க மாமா?'' என்று அவரைப் பற்றி விசாரித்தபடி வீட்டில் நுழைந்தேன். கொஞ்சம் பேசினேன்.

''நீ வந்தது ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா. எத்தனையோ சொந்தக்காரங்க. யாருமே எட்டிப் பார்க்கிறதில்லை. நீ ஒருத்தன் தான் தேடிவந்து விசாரிக்கிறே. ரொம்ப நன்றிப்பா.'' கைகளைப் பற்றிக் கொண்டார்.

கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு வந்த விஷயத்தைக் கேட்காமலேயே திரும்பி விட்டேன். எத்தனை நம்பிக்கையோடு என் வருகையில் மகிழ்கிறார்? அந்த மகிழ்ச்சி அப்படியே இருக்கட்டுமே!
(12-11-2008 குமுதம் இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை.)