Wednesday, December 31, 2014

நல்லதா நாலு வார்த்தை.... 40.


’இதோ, வாழ்க்கை 
இனிதாகி விடுமென்று 
எப்போதுமே அவன் 
எதிர்பார்ப்பதால்
மனிதனின் நிஜ வாழ்வு 
மகிழ்வானதே.’
-Edgar Allan Poe
(‘Man’s real life is happy, chiefly because
he is ever expecting that it soon will be.’)

<><>

’பணம் இந்த உலகை 
சுற்ற வைக்கிறதென்றால்
அது தறிகெட்டு ஓடாமல் 
பார்த்துக் கொள்கிறது 
நகைச்சுவை.’
- Craig Kimberley
(‘If money makes the world go round, it’s humour
that keeps it from spinning out of control.’)
<><>

‘தங்கள் 
கனவுகளின் வனப்பில் 
நம்பிக்கை கொண்டவர்களுக்கே 
உரியது வருங்காலம்.’
- Eleanor Roosvelt
(‘The future belongs to those who believe
in the beauty of their dreams.’
<><>

'புதிய யுக்தி ஒன்றுடன் 
வரும் மனிதன் 
பித்துக்குளி எனப்படுகிறான்
அது 
வெற்றி பெறும் வரையில்.’
- Mark Twain
(‘The man with a new idea is
A crank until the idea succeeds.’)
<><>

‘நிரப்புவதற்கு நிறைய விஷயம் இருந்தால் 
ஒரு நாளுக்கு நூறு பைகள்!’
- Friedrich Nietzsche 
('When one has much to put in them, 
a day has a hundred pockets.')
<><>

’பாதி சரியாக எப்போதும் இருத்தலை
பாதி நேரம் சரியாக இருத்தல்
முறியடித்து விடுகிறது.’
- Malcolm Forbes
(Being right half the time beats
being half-right all the time.)
<><>

’ஒன்றாய்ச் சிரிக்கவல்லமையே 
அன்பின் சாரம்.’
- Francoise Sagan 
(’The ability to laugh together is the essence of love.’)

><><><><

(படம் - நன்றி : இணையம்)

Monday, December 22, 2014

வித விதமாக..



அன்புடன் ஒரு நிமிடம் - 71.
”வர வர மனுஷங்களைக் கண்டாலே ஒரே வெறுப்பா இருக்கு. யாரையுமே என்னால் டைஜெஸ்ட் பண்ண முடியலே..”. அலுத்துக் கொண்ட   நண்பர் பரந்தாமனைப் பரிவுடன் நோக்கினார் சாத்வீகன். கடைக்குப் போகிற வழியில் சந்தித்தார் அவரை. பார்த்ததுமே அவர் ஆரம்பித்து தன்னைச் சுற்றியுள்ள எல்லாரும் தன்னைப் படுத்தும் பாட்டைச் சொல்லி விசனப்பட்டார்.
“சரி, எங்கே கிளம்பி இப்படி…?” – சாத்வீகன்.
“மார்க்கெட்டுக்குத்தான்!” என்றார் அவர். “காய் வாங்கணும்.”
“நல்லதாப் போச்சு. வாங்க, நானும் அந்த வழிதான்.”
மார்க்கெட்டுக்குள் நுழைந்தார்கள். முதல் பெரிய கடை.
”பாருங்க எத்தனை… விதவிதமா காய்கறிங்க அடுக்கியிருக்கிறாங்க.”
”ஆமாமா. எல்லாம் நாம் வாங்கத்தானே?”
”நமக்கே நமக்குத்தான். ஒண்ணொண்ணா பார்ப்போம். அதோ காலிஃப்ளவர்!”
”ஆஹா இது நல்ல டேஸ்டா இருக்கும். பக்குவமா பொரிச்சா சிக்கனை மிஞ்சிரும் சுவையில.”
”அப்ப இது சுவையான ரகம்னு சொல்றீங்க..அப்ப என்ன யோசனை? வாங்கிப் போடுங்க.”
வாங்கினார்.
”இதோ நாட்டு வெண்டைக்காய்!”
”கொஞ்சம் வழ வழ.. ஆனா மெமரிக்கு நல்லதாச்சே?”
”அப்ப அதையும் வாங்கிவிட வேண்டியதுதான்..   நாம பக்குவமா பழகிக்குவோம் அதனோட..”
பக்குவமா பழகிக்குவோமா? இவர் என்ன சொல்றார்? பரந்தாமனுக்குக் குழப்பம்
”வாழைக்காய் ஃப்ரஷா இருக்கு.”
”ஐயோ அது வாயு ஆச்சே? வேணாம்.”
”அப்ப கொஞ்சம் விலகி நின்னுக்குவோம்.”
விலகி நிற்கிறதா? யோசித்தபடியே பீன்ஸை அள்ளினார். “பவர் ஃபுட் ஆக்கும் இது. ஹெல்த்துக்கு நல்லது.”
”அப்ப சினேகிக்க வேண்டியதுதான்…”
சினேகிக்க….. இவர் என்ன வெஜிடபிள்களைச் சொல்றாரா மனுஷர்களைச் சொல்றாரா?
“என்ன பார்க்கறீங்க? மனுஷங்களையும் சேர்த்துத்தான் சொல்றேன். காய்கறிக் கடையில் விதவிதமா காய் இருப்பது போலத்தான் உலகத்தில மனிதர்களும் விதவிதமாக... எல்லா காய்கறிகளையும் ஜீரணிக்க முடிவது போல எல்லா மனிதர்களையும் ஜீரணிக்க முடியும்.”
வியப்புடன் பார்க்க இவர் தொடர்ந்தார்.  ”ஒவ்வொரு காயும் ஒவ்வொரு மாதிரி. பிடித்தவற்றை விரும்பி வாங்குகிறோம். பிடிக்காத சிலதை சத்துக்காக சேர்த்துக் கொள்ளுகிறோம். சிலதை அதன் பிரத்தியேக சுவைக்காக சேர்த்துக் கொள்ள வேண்டியதாகிறது.  இங்கே நாம என்ன பண்றோம்? ஒவ்வொரு காயையும் தனித்தனியா பார்க்கிறோம். ஒன்று போல ஒன்றில்லைன்னு நல்லாவே தெரிந்துகொண்டு!.  இதனுடைய இயற்கை இது, அதனுடைய மாறாத தன்மை அதுன்னு புரிந்து ஏத்துக்கறோம்.  மனுஷர்களையும் அதேபோலப் பார்த்து ஏற்றுகொள்ள முடியும்.  நன்மை இருக்குன்னு நினைக்கிறப்ப கசக்கிற பாவைக்காயையும் வாங்கிக்கறோம் இல்லையா? இப்படியே சில கசப்பான மனிதர்களையும் ஏற்றுக்கொள்ள முடியும். முயற்சி செய்து பாருங்களேன்.  It may work.

It will,“ என்றார் பரந்தாமன் திருப்தி முகத்தில் பிரதிபலிக்க.
(”அமுதம்’ மார்ச் 2014 இதழில் வெளியானது)
><><><

Monday, December 15, 2014

அவள் - 13.



79.
உன் பாரா முகமே
இன்னும் அகலாமல் நெஞ்சில் 
வியாபித்திருக்க,
பார்க்கிற முகத்தை எங்கே
பத்திரப் படுத்துவேன்?

80
மெல்ல இருள் பிரிகிறதா
அல்லது ஒளி விரிகிறதா 
புரியாது புலரும் பொழுது.
அழகு வெட்கம் அளிக்கிறதா
வெட்கம் அழகூட்டுகிறதா
அறியாது மலரும் முகம்.

81
உன் 
முகப் புத்தகத்தைப் படிக்க 
ஆரம்பித்தவன்
முதல் பக்கத்திலேயே
இருக்கிறேன் இன்னும்.

82
உன் போல் 
எனை நேசிக்க
முடியவில்லை
என்னாலும்
எந்நாளும்.

83
மனதை கிள்ளிப் போனாய்...
ஏன்
திரும்பிப் பார்க்க வேண்டும்?

84
மனமின்றி உன் பக்கத்தில் 
அமர்ந்திருக்கிறேன்
அது உன் கையில்.

><><><



Tuesday, December 2, 2014

விநாடிகள் வீணல்ல...


அன்புடன் ஒரு நிமிடம் - 70
”வாங்க சித்தப்பா!”
யாழினி வரவேற்க வீட்டினுள் நுழைந்த ராகவ், எட்டிப் பார்த்தார் கிஷோரின் அறையை.
ஓங்கி மேஜையில் குத்துவதும் சே! என்று தலையில் அடித்துக் கொள்வதுமாக. கம்ப்யூட்டர் முன் அமர்ந்திருந்தான்
என்ன என்கிற மாதிரி இவளைப் பார்த்தார். இவள் தெரியலையே என தோள்களைக் குலுக்கினாள்.
இவரைப் பார்த்ததும் அவனே சொன்னான். “ரொம்ப ஸ்லோ இந்த கம்ப்யூட்டர். இதை வெச்சிட்டு நான் படற பாடு!”
மறுபடியும் தலைக்குக் கொண்டுபோன கையைத் தடுத்தார் ராகவ். “சொல்லு, என்ன ப்ராப்ளம்?”
”அதைத்தானே சொன்னேன்? மெதுவா வொர்க் பண்ணுது. க்ளிக் பண்ணினா ஒவ்வொரு சைட் வர லேட் ஆகுது. செம எரிச்சலா இருக்கு. ஒரு பேஜ் பார்த்துட்டு அடுத்ததுக்கு போனா உடனே திறக்க வேண்டாமா? ஒவ்வொரு சமயம் ரெண்டு, மூணு செகண்ட் அப்படியே உட்கார்ந்திட்டிருக்க வேண்டியிருக்கு. ஒரு மெயில் எழுதி பட்டுன்னு அனுப்ப முடியுதா?”
“அப்படியா நல்ல சந்தோஷமான சமாசாரமா இருக்கே? என்ன பண்ணினே? எப்படி நடந்தது?”
திகைத்துப் போய்க் கேட்டான். ”இதில சந்தோஷப்பட என்ன இருக்கு? நான் ரிப்பேர் பார்க்க வழி தேடிட்டு இருக்கேன். நீங்க என்னன்னா…”
Actually, இப்படியெல்லாம் இல்லையே என்னோட லேப் டாப்ன்னு நான் வருத்தப்பட்டுட்டு இருக்கேனாக்கும்… நான் சொல்ல வர்ற விஷயம் என்னான்னா பட் பட்னு ஸ்க்ரீன் ஓபன் ஆகிட்டிராமல் நிதானமா திறக்கிறது நாம அமைதியா, பரபரப்பில்லாம, டென்ஷன் ஆகாமல் வேலை பார்க்க உதவுது. படித்த, பார்த்த விஷயத்தை ஒரு கணம் ஆழ்ந்து உள் வாங்கிக்க வழி வகுக்குதுன்னு நான் நம்பறேன்.”
நேர் எதிராகச் சொன்னவரை நிமிர்ந்து பார்த்தான். அவர் தொடர்ந்தார். “…அப்பப்ப க்ளிக் செய்து நிற்கிற அந்த ரெண்டு செகண்டில் மனசைத் திருப்பு. அந்த சூழ்நிலையை பார். இப்படி ஒரு உலகமே கண்முன் விரிகிற விஞ்ஞான விந்தையை நீ அனுபவிப்பதை உணர்.  ஓரத்தில் மலரும் விளம்பர ஓவியத்தை ரசி.  அவ்வப்போது கண்ணை ஜன்னலில் ஓடவிட்டு அதற்கு ஒரு தூரப் பார்வை கொடுப்பதும் நல்லதுதானே?. கண் மூடி ஒரு செகண்ட் ரெஸ்ட் கொடு. ஹாலில் யாழினி முணு முணுக்கும் பாட்டைக் கேள். நேற்று அவள் சொன்ன ஜோக்கை நினைவு கூர். சுற்றிலும் பார். ஒரு முறை இழுத்து மூச்சை விடு. சோம்பல் முறி. இந்த மாதிரி சின்னச் சின்ன இண்டர்வெல்கள் நாம செய்திட்டிருக்கிற விஷயத்துக்கு விதம் விதமா பூட்டற ஃப்ரேம்களை அறிந்து கொண்டாயானால் இது உனக்கு ஒரு குறையே அல்ல.”
ரெண்டு செகண்டில் அவன் முகத்தில் ஒரு புன்னகை மலர்ந்தது.    

 ('அமுதம்’ மார்ச் 2014 இதழில் வெளியானது.)
><><><
(படம்- நன்றி : கூகிள்)