Tuesday, July 31, 2012

அந்த ஓர் எழுத்து...



அன்புடன் ஒரு நிமிடம் - 13


“இந்த சித்தப்பா அநியாயத்துக்கு இன்னொசென்டா இருக்கார் டாட்!!” என்றான் பரசு வந்ததும் வராததுமாக.

“என்ன பண்றார்? - வாசு.

ஒரு சட்டை தைக்கக் கொடுத்தாலோ, ஸ்பெக்ட்ஸ் ஆர்டர் பண்ணினாலோ முதல்லேயே முழுத் தொகையையும் கொடுத்திடறார். எதையாவது கடையில ஆர்டர் பண்ணினா அட்வான்ஸ் எல்லாம் கொடுக்க மாட்டார். ஃபுல் அமவுண்ட்தான்! கேட்டால் அப்பதான் அவங்க உற்சாகமா நல்ல பண்ணிக் கொடுப்பாங்கன்னு சொல்றார். ஆனா அப்புறம் டயத்துக்கு அவங்க டெலிவர் பண்ணலைன்னா இவர்தானே டென்ஷனோடு அலையணும்...?

“நிஜமாவா?

“ஆமா. எத்தனையோ முறை சொல்லியாச்சு, பழக்கத்தை மாத்திக்க மாட்டேங்கிறார்!”

“பழக்கம்?" வாசு யோசித்தார். “நீ சொல்றதிலே ஒரு எழுத்து மாறியிருக்குமோன்னு தோணுது.”

ஒரு எழுத்து? இவனுக்கு புரியவில்லை.

அவர் கேட்டார், “உனக்கு மரகதராஜை ஞாபகமிருக்கா?

“யாரு? நாம கோயம்பத்தூரில இருக்கும்போது அடிக்கடி உங்களை வந்து பார்ப்பாரே அவர்தானே? எப்பவும் ஊதாக் கலர்ல சட்டை போட்டிருப்பார்?

“அவனேதான். அவன் ஒரு ரியல் எஸ்டேட் மீடியேட்டர். பிளாட்டு, வீடுன்னு டீல் பண்ணுவான். எப்பவும் ரொம்ப பிசியா இருப்பான்.”

“ஆமாமா. நீங்ககூட, வாய்யா ஆயிரத்தி ஒண்ணுன்னு கூப்பிடுவீங்களே?

“அட,அதுவும் ஞாபகம் வெச்சிருக்கியே? அதைப்பத்தித்தான் சொல்லவந்தேன். அவனை ஏன் அப்படி கூப்பிடுவேன் தெரியுமா? அவன் ஒரு பிளாட்டைப் போய்ப் பார்க்கிறான்னு வெச்சுக்க, இடத்தை ஆராய்வான். உடனே ஒரு விலை பேசி ஆயிரத்தி ஒரு ரூபாய் அட்வான்ஸை நீட்டி முப்பது நாள்ல முடிச்சுடறேன்னு சொல்லிடுவான்.”

“ஓஹோ? அதை அப்படியே வேற ஆளுக்கு மேல் லாபம் வெச்சு வித்துடவா?

“அதான் கிடையாது. எப்படியோ ஒரு ஆளைக் கண்டு பிடிச்சு அதை அந்த விலைக்கு விற்கத்தான் அலைவான்.”

“அப்புறம் ஏன் டாட் அவர் வீணா கமிட் பண்ணனும்? அத்தனை சில நாட்களுக்குள்ளே ஒரு genuine buyer –ஐப் பிடிச்சு வாங்க வைக்கிறதுக்கு என்ன கியாரண்டி இருக்கு? பத்து நாளிலேயும் கிடைக்கலாம், ஐம்பது நாளிலேயும் கிடைக்கலாம். ஏன், கிடைக்காமலும் போகலாம். அவரோட இந்த பழக்கம் அர்த்தமில்லாதது.”

“அப்படித்தான் நானும் நினைச்சேன், நீ இப்ப சொன்னதைத்தான் நானும் அவன்கிட்டே கேட்டேன். ஆனா அவன் சொன்ன பதில்? என்னங்க, இத்தனை பெரிய பிசினஸ்ல இறங்கியிருக்கேன், நீங்க சொல்றது எனக்குத் தெரியாதா என்னன்னு சிரித்தான். தெரிஞ்சேதான் இதைப் பண்றேனாக்கும் என்றான். ஏன்னும் அவனே சொன்னான். கமிட்மெண்ட்! அது இருந்தாத்தான் வேலை நடக்கும். அதான் முதல்ல துணிஞ்சு கமிட் பண்ணிடறேன். அட்வான்ஸ் பணத்தை இழந்துடுவோம்கிற பயம் நம்மை உசுப்பிவிடும். அப்புறம் எங்கிருந்தோ எப்படியோ சக்தி, ஐடியா எல்லாம் தோன்றி... விஷயம் நடந்துடும். 100க்கு 100 நடக்காட்டியும் 90 நடந்துடும். அப்படி பத்திலே ஒண்ணு மிஸ்ஸாகிறதும் அடுத்த முறை வேகம் இன்னும் கூடுவதற்கு ஓர் உந்து சக்தியா இருக்கும். அதான் இப்படி ஒரு வழக்கம் வெச்சிருக்கேன்னு சொன்னான்."

"ஓ?"

"கவனி, அவன் பழக்கம் இல்லை அது. வழக்கம்! அவனா டெலிப்ரேட்டா வெச்சுக்கிட்ட வழக்கம்!”
<<<>>>
('அமுதம்' ஜூலை 2012 இதழ்)

Monday, July 16, 2012

அந்த லென்ஸின் பெயர்....



அன்புடன் ஒரு நிமிடம் 12.

அந்த லென்ஸின் பெயர்....

ரு மாதிரி பார்த்தான் அபிஜித்.

“என்னடா, இது எப்ப இருந்து? கேட்டார் தாத்தா.

“இப்பதான் தாத்தா மாட்டிட்டு வர்றேன்.”

“ஷார்டா லாங்கா?

“ஷார்ட் சைட் தான், என்றவன் மோட்டு வளையில் எதையோ தேடுவதைப் பார்த்துவிட்டார்.

“என்னடா யோசனை?

“அதில்லே தாத்தா, தூரத்தில தொங்கவிட்டிருந்த போர்டிலிருக்கிற எழுத்துக்களை படிக்கச் சொன்னார் டாக்டர். நாலாம் வரி வரும்போது ஒண்ணும் புரியலே. அங்கே நாலஞ்சு எழுத்து இருக்கிறது தெரியுது. அதுக்கு மேல ஒண்ணுமே தெரியலே. ஆனா பார் தாத்தா, டாக்டர் ஒரு சாதாரண கண்ணாடி லென்ஸை என் கண்ணிலிருக்கிற கண்ணாடி பிரேமில் போட்டதும் எல்லாம் பளிச் பளிச்னு தெரியுது. அதெப்படி தாத்தா? பிரமிப்பா இருக்குது.  பார்த்தா ஒரு சாதாரண கண்ணாடிச் சில்லு. அதுக்கு என்ன ஒரு எஃபக்ட்!”

சாத்வீகன் பதில் சொல்ல ஆரம்பித்தபோது கதவருகில் நிழலாடிற்று. கோவிந்தசாமி. பக்கத்து வீட்டுக்காரர்.

குசலம் விசாரிக்க நேரமில்லை. அவர் பிரசினையில் இருந்தார். நேரடியாக விஷயத்துக்கு வந்தார் வந்தவர். “... இப்படி ஒரு நெருக்கடி வரும்னு நான் நினைக்கவே இல்லை சார்.  இப்ப எனக்கு ஒரு பெருந்தொகை வேணும் சமாளிக்க. வேறே எங்கே புரட்டறதானாலும் சிரமம். அதான் என் நண்பர் வேதாசாலத்திடமே கேட்டுடலாம்னு நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கறீங்க?

தாத்தா தன் மோவாயைத் தடவியபடியே பதிலளித்தார். “அதான் போனிலேயே எல்லாம் டீடெய்லா சொல்லிட்டியே... நிலைமை எனக்கு நல்லாவே விளங்குது. வேதாசாலம் பத்தியும் நிறையவே சொல்லியிருக்கே.”

“ஆமா. இப்ப உங்க அட்வைஸ் என்ன? வேதாசலம்கிட்டே கேட்டிடலாம் இல்லையா?

“நெவர்!”

“என்ன அப்படி சொல்றீங்க? அவர்தானே என்னுடைய ஒரே நெருங்கிய நண்பர்?

அதனால்தான் சொல்றேன். இந்த வேதாசலம் உனக்கு வெறும் நண்பர் மட்டுமல்ல. உன்னுடைய எல்லா பிரசினையிலும் துணை நிற்கிறவர். உன் பிள்ளைகள் படிப்பு விஷயத்தில் அவர் நிறைய கைடன்ஸும், டியூஷனும் கொடுத்திட்டு இருக்கார். உன் பெரிய பெண் கல்யாண விஷயத்தில் வரனுக்காக உன்னோடு அலைஞ்சிட்டிருக்கிறார். இப்ப நீ கேட்டதும் பணம் கொடுத்துருவார். நாளைக்கு ஏதாவது ஒரு காரணத்தால் அதை சரியா திருப்பிக் கொடுக்க முடியாமல் போனால், அதில் உங்களுக்குள் ஏதாவது மனஸ்தாபம் வந்து சேர்ந்தால், உன் குடும்பத்துக்கு கிடைத்து வருகிற, கிடைக்க வேண்டிய பல விஷயங்கள் அறுந்து போகும். பின்னால் உங்களுக்குள் எல்லாம் சரியாகி விடலாம் என்றாலும் கூட அது ஒரு தவிர்க்கப்பட வேண்டிய நஷ்டம் அல்லவா?

“இதை நான் யோசிக்கலே. நீங்க சொல்றது முக்கியம்தான். ஆனா வேறே எங்கேயாவது புரட்டறது..”

“சிரமம்னு சொன்னே. ஆனா முடியாதுன்னு சொல்லலியே?

யெஸ். சிரமப்பட்டு அதை செய்துட வேண்டியதுதான்.!” திருப்தியும் நன்றியும் கண்ணில் தெரிய அகன்றார்.

நடந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த அபிஜித் கேட்டான். “எப்படி தாத்தா பளிச்னு அவருக்கு விடை சொல்லிட்டீங்க?

சாத்வீகன் கண்ணடித்தார். “அதான் அந்த கண்ணாடிச் சில்லு, அனுபவம்!” 

<><><>
('அமுதம்' ஜூலை 2012 இதழ்) 



  

Tuesday, July 10, 2012

ஒரு நிகழ்வு. ஒரு பார்வை.



அன்புடன் ஒரு நிமிடம் 11.

ஒரு நிகழ்வு. ஒரு பார்வை.


...ப்படி ஒரு காட்சியை நான் என் கண்ணால கண்ட பிறகு வேறென்ன முடிவுக்கு வர முடியும்? அவன் இப்படி நடந்துக்குவான்னு நான் நினைக்கவே இல்லை. ஆனா கண்ணால் கண்ட காட்சி நிஜம் ஆயிற்றே? அதை என்னால மறக்க முடியலே. மறுக்கவும் முடியலே.

மகன் பரசு சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தார் வாசு. தன் நண்பனுடன் அவனுக்கோர் வருத்தமான சம்பவம்.

இவர் பதில் எதுவும் சொல்லவில்லை. உள்ளபடியே அவனுக்கு என்ன சொல்லி எப்படி விளக்குவது என்று இவருக்குத் தெரியவில்லை. இரவு மணி எட்டு இருக்கும். இருவரும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டு..

ஒரு வினாடி அங்குமிங்கும் நடை பயின்றவர் அவனிடம்,அதிருக்கட்டும், உனக்கு ஒரு விஷயம் காட்டணும்னு இருந்தேன். போன வருஷம் என் ஆபீஸில் ஒரு அறையில் புதுசா டைல்ஸ் போட்டேனேநீ அந்த அறையை அப்புறம் பார்த்ததில்லையே? வா, வா!என்று அழைத்துப் போனார்.

நானும் வர்றேனே! பார்த்துக் கொண்டிருந்த தாத்தாவும் ஒட்டிக் கொண்டார்

அந்த அறையில் நுழைந்ததும் ஒரு லைட்டைப் போட்டார் வாசு. எப்படி இருக்கு?

பார்வையை தரையெங்கும் ஓட்டினான் பரசு. அட பாலிஷா நல்ல நல்லாயிருக்கே? குனிந்து பார்த்து,டைல் டிசைன் கூட ரம்மியமா...

ரொம்ப அழகாயிருக்கு இல்லை?

ஆமா.

ஒரு நிமிடம். இந்த லைட்டையும் போடறேன். இன்னும் கொஞ்சம் வெளிச்சமா இருக்கும். இன்னும் நல்ல பார்த்து ரசிக்கலாம்.அவர் மற்றொரு லைட்டைப் போட ஒளி வெள்ளம் பாய்ந்தது. இப்ப பார். டைல்ஸ் எப்படி இருக்கு?

கூர்ந்து பார்த்த இவன் முகத்தில் சலன ரேகைகள். என்னப்பா, இப்ப இந்த டைல்ஸ் முன் போல எடுபடலையே? ரூம் இன்னும் பிரகாசமா இருந்தும்?

அவன் அப்படி சொன்னதற்குக் காரணம் இருந்தது. இப்போது அந்த டைல்களிலிருந்த சின்னஞ்சிறு கீறல்கள் பிரகாசமான ஒளியில் பளிச் பளிச்சென்று தெரிந்து உறுத்தியது .
முன்பு கவர்ந்திழுத்த அழகு பாதிக்கு மேல் குறைந்திருந்தது

பார்த்தியா? இதே டைல்ஸ் தான் முதல்ல நீ ரொம்ப அழகுன்னு சொன்னது. இப்ப கூடுதல் வெளிச்சதில் கூர்ந்து பார்க்கையில் அதன் அழகு குறைஞ்சிட்டது. முதல்ல அது அழகா இருந்ததும் நீ கண்ணால் கண்ட ஒரு உண்மை. அந்த அழகு இப்ப இல்லை என்கிறதும் ஒரு உண்மை. சரி, இதிலிருந்து நீ என்ன தெரிஞ்சுக்கறே?

கிஷோர் யோசித்தான் கண்ணுக்கு தெரிவதை வைத்து முடிவுக்கு வரக் கூடாதுங்கிறதுதான்! There is more to anything than meets the eye. நான் பார்த்ததை வைத்து ஒரு முடிவு எடுத்தது தவறு. தக்க உதாரணம் காட்டி எனக்குத் தெளிவை ஏற்படுத்திட்டீங்க.

தாத்தா எழுந்து வந்தார். அதுவரை நடந்ததைப் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டுமிருந்தவர்.

பரசு, அவசரப் படாதே. இது அடுத்த தவறு.. இப்ப இங்கே பார்த்த இதே காட்சியிலிருந்து நீ   இன்னொரு விஷயமும் தெரிஞ்சுக்கலாமே?. அதாவது எதையுமே ரொம்ப நுணுக்கமா ஆராய்ந்தால் அது முன்னை விட அதிருப்தி தரலாம். சரியா?

அதுவும் சரிதான்.குழம்பினான் பரசு. அப்படீன்னா நான் முதலில் நினைச்கதோட நின்றிருக்கணுமா தாத்தா?

கவனி. இப்ப நான் சொல்ல வருவதை. எந்த உதாரணத்தையும் ஒரே கண்ணோட்டத்தில் தான் பார்க்கணும் என்றில்லை. இப்ப இங்கே நடந்த நிகழ்வை ரெண்டு விதமா ஏன் மூணு நாலு விதமா கூட பார்க்கலாம் என்பதுதான் நான் இப்ப விளக்கியது.

அப்படீன்னா நாம தெரிந்து கொள்ள வேண்டியது? ஏக காலத்தில் அப்பா மகனிடமிருந்து கேள்வி...

ஒண்ணே ஒண்ணுதான்!என்றார் தாத்தா அமைதியாக. எந்த நிகழ்வையும் நாலு விதமாப் பார்த்து பொருள் தெரிந்துகொண்டு நம் அறிவையும் அனுபவத்தையும் வைத்து யோசித்து அதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான்!

('அமுதம்' இதழ் - ஜூன் 2012)
<<<>>>

Monday, July 2, 2012

நீங்க நல்லவரா கெட்டவரா?


அன்புடன் ஒரு நிமிடம் - 10

நீங்க நல்லவரா கெட்டவரா?

லோ மாமா!உள்ளே நுழையும்போதே கிஷோர் குரலில் உற்சாகம் கொப்பளித்தது.
என்னடா ட்ரான்ஸ்ஃபர்லே கோவை போய் மூணு மாசமாச்சே, எங்களையெல்லாம் ஞாபகம் வெச்சுருக்கியா?
அதெப்படி மறப்பேன்? முதல் முதலா லீவு போட்டு ஊருக்கு வந்ததும் உங்களைத்தான் பார்க்க ஓடோடி .வர்றேனாக்கும்.
புது இடம் எப்படி...பிடிச்சிருக்கா?
ரொம்பவே!கொஞ்ச நேர பேச்சுக்குப் பின் கேட்டார். என் நண்பர் தம்பி கதிரேசன்னு ஒருத்தர் அங்கே இருக்கார், முடிஞ்சா மீட் பண்ணுன்னு சொல்லியிருந்தேனே, பார்த்தியா அவரை?
பார்த்தேன், பார்த்தேன். அட்ரசை விசாரிச்சப்ப நான் தங்கியிருந்த இடத்துக்குப் பக்கத்திலதான் அவர் வீடு. போய் சந்திச்சப்போ நல்ல வரவேற்பு கொடுத்தார். ரொம்ப அனுசரணை. அடிக்கடி சந்திப்பேன் அவரை. ரொம்ப நல்ல மனுஷன். துளி கூட பந்தா இல்லை. அரை அங்குலம் கூட முகச் சுளிப்பு இல்லாம உதவி செய்யறவர். பேச்சு எப்பவும் இனிமையா இருக்கும். மொத்தத்தில் ஒரு ஜென்டில்மேன்.
அடடே? அப்படியா? அப்ப அவரைப் பத்தி உன் அபிப்பிராயம்?
வேறென்ன? ஒரு நல்ல மனுஷன்கிறது தான்.
அப்படீன்னா நான் கவலைப் பட வேண்டியதுதான்!
ஏன் மாமா அப்படி சொல்றீங்க?
ஒரு நிமிஷம், என்றவர் யாருக்கோ போன் செய்தார். ஸ்பீக்கர் போனில் பேசினார். ஹலோ மகாதேவன், எப்படி இருக்கே? சில நிமிடங்கள் பேசினார். பை த பை அங்கே நம்ம கதிரேசன் எப்படி இருக்கிறார்? உங்க பிரண்ட்ஷிப் நல்ல போயிட்டிருக்கா?
அதை ஏன் கேட்கறீங்க? அவரோட எல்லாம் பழகறது ரொம்ப கஷ்டம். நம்மால முடியாது...
என்னப்பா அப்படி சொல்றே?
ஆமா சார், ரொம்ப உரிமை எடுத்துக்குவாரு. நம்ம பர்சனல் விஷயத்திலெல்லாம் தலையிடுவார். சின்ன காரியத்திலெல்லாம் கோபப்படுவாரு. மொத்தத்தில் நாட் எ ஜெண்டில்மேன்.
பேசி முடித்துவிட்டு இவன் பக்கம் திரும்பினார். இப்ப என்ன சொல்றே? அதே ஆளைப் பத்தித்தான் கேட்டேன். இவன் இப்படி சொல்றானே?
கிஷோர் குழம்பினான். என்ன காரணம்? புரியலே எனக்கு.. ஒரு வேளை இவன் அவசரத்தில் தவறாக புரிந்து கொண்டிருக்கலாம் அவரை, இல்லையா?.
ஆனா நீ சொன்னது ஒரு மாச பழக்கத்தில் உருவான அபிப்பிராயம். அவன் இவரோட பழகி ஆறு மாசம் ஆச்சு. அவரோட இன்னொரு பக்கத்தையும் பார்க்கிற அவகாசம் அவனுக்குக் கிடைச்சிருக்கலாம். அதனால அபிப்பிராயம் இப்படி வருது. முதல் பழக்கத்தில் பெரும்பாலோர் நல்லவங்களாத்தான் காட்சியளிப்பாங்க. அதை வெச்சு ஒரு முடிவுக்கு வந்துவிடக் கூடாது இல்லையா?
அப்ப மகாதேவன் இப்ப சொன்னதுதான் அவரைப்பற்றிய சரியான அபிப்பிராயமா?
அவரு நல்லவரா கெட்டவரான்னுதானே யோசிக்கிறே?
அது வந்து... ஆமா அதான்.
‘“யாருமே முழுக்க நல்லவருமில்லை கெட்டவருமில்லை. பலவித குணங்களும் கலந்தவங்கதாம் எல்லாரும். அதனால அவங்களை அப்படியெல்லாம் வகை பிரிக்கமுடியாது. அவங்களை அவங்களா பார்க்கிறது, ஏத்துக்கறதுதான் நாம் செய்யக்கூடியது. செய்ய வேண்டியதும் கூட.


('அமுதம்' இதழ் ஜூன் 2012 )

<<<>>>