Wednesday, November 24, 2010

விளையும் பயிர்



ய்வு பெற்ற ஆசிரியர் சுப்பையா தங்கள் வயலைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார். பயிர்களெல்லாம் விளைந்து அறுவடைக்குத் தயாராக. மத்தியான சாப்பாட்டை வயலுக்கே எடுத்து வரும்படி சொல்லியிருந்தார் மனைவியிடம்.

தூரத்தில் வரும்போதே கோமதியின் நடை தளர்ந்திருந்ததைக் கவனித்தார். புரிந்தது அவருக்கு. மகனைப் பற்றிய கவலை. வெளியூருக்கு மேல்படிப்புக்காக செல்லப்போகும் அவன் பிரிவை எண்ணி! மரத்தடியில் வரப்போரமாக அவர் அமர்ந்துகொள்ள, பதார்த்தங்களோடு வார்த்தைகளையும் பரிமாறலானாள்

''என்னங்க, பையனை இத்தனை தூரம் அனுப்பணுமா? சின்னப் பையன், அவனுக்கு என்ன தெரியும்? நமக்குத்தான் ஊரிலே நிலம், வீடு எல்லாம் இருக்கே, நம்மோட நின்னு இங்கேயே வளரட்டுமே? பக்கத்து ஊர் காலேஜிலேயே முடிஞ்ச மட்டும் படிக்கட்டுமே? பத்திரமா நல்லா பாத்துக்கலாமில்லையா? ''

''உன் கவலை எனக்குப் புரியாம இல்லே கோமு,'' என்றார் கனிவாக.
''எனக்கும் அதே கவலைதான். இதோ இந்த மரத்தடியிலே நிக்கிற பயிர் எல்லாம் நிழல்லே சொகுசா இளைப்பாறுது. மத்த பயிர் எல்லாம் வெயில்லே வாடுது. இது மாதிரி தானே நம்ம பையனும் வாடுவான் அங்கே?''

கோமதி அந்தப் பயிர்களைப் பார்த்தபடியே தலையாட்டினாள், ''ஆமாங்க.''

''ஆனா நீ இன்னொண்ணைக் கவனிச்சியா? இந்தப் பயிர்கள் எல்லாம் எப்படி வளர்ச்சி குறைவா, விளைச்சல் குறைவா இருக்கு தேவையான வெயில் கிடைக்காம? அதுபோலத்தான் நம்ம பையனும்! வெளியுலக வெளிச்சம் அவனுக்குத் தேவை. தகுந்த மதிப்பெண் இருக்கிறதாலே சென்னையிலே நல்ல காலேஜில் அட்மிஷன் கிடைச்சிருக்கு. விளையும் பயிர் அவன். அவனைப் போய் பாதுகாப்புக் கயிற்றாலே கட்டிப் போடலாமா?''

அவர் இதமாக எடுத்துச் சொன்னதைப் பதமாகப் புரிந்து கொண்டாள் அந்த அன்னை.

('குமுதம்' 24-01-05 இதழில் வெளியானது)

Saturday, November 13, 2010

பதில் ஒன்றே!

(ஈரோடு திண்டல் ரோட்டரி சங்கமும் 'சிகரம்' இதழும் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற கதை )



மாதவன் அவரே காரை ஒட்டிக்கொண்டு வந்திருந்தார் கிராமத்துக்கு. அவருக்கு இரண்டு பிரசினைகள். அவைதாம் அப்பாவைத் தேடிக்கொண்டு வரவைத்தது. ஏதாவது வழி சொல்லுவார் என்ற நம்பிக்கை.


அம்மா காலமான பிறகும் அப்பா தன் ஐந்து ஏக்கர் தென்னந்தோப்பையும் தோட்டத்தையும் பார்த்துக்கொண்டு, அவருண்டு அவரின் புத்தகங்கள் உண்டு என்று அந்த கிராமத்து வீட்டில் தனியாக வாழ்ந்தார். வற்புறுத்திய மகனிடம் தெளிவாகச் சொல்லிவிட்டார், ''என்னையும் உங்களோட வெச்சுக்க ஆசைப்பட்டா நீங்களும் கிராமத்தில தங்கிடறது தான் ஒரே வழி.''என்று. அது அவர்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று.



மாதவன் சென்னையில் ஒரு கணினி கம்பெனியில் டிவிஷனல் மானேஜராக நல்ல சம்பளம், ஃப்ரீ க்வாட்டர்ஸ், கார், சமூகத்தில் நல்ல அந்தஸ்து, அழகான மனைவி, காலேஜில் படிக்கிற இரு பையன்கள், பெண்...


ஆனால் இன்னொரு பக்கம்...


அதுதான் பிரசினை. அதுதான் அப்பாவைத் தேடி கொண்டு வரவைத்தது.காரை ஊருக்குள் விடாமல் தோப்புக்குச் செலுத்தினார். இந்நேரம் அவர் எங்கே இருப்பார் என்று தெரியும்.


வெண்டைக்காய் தோட்டத்தில் களை பறித்துக் கொண்டிருந்த சுப்பையா ஆச்சரியமே இல்லாது பார்த்தார் மகனை. ''என்ன விஷயம்? ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கே...''


''உங்ககிட்ட கொஞ்சம் பேசலாம்னு தான். கொஞ்சம் பிரசினை எனக்கு... வீட்டுக்குப் போகலாமாப்பா?''


''இல்லை, இதை முடிச்சிட்டுப் போகலாம்,'' என்று ஒரு கூடையை மகன் பக்கம் நகர்த்தினார்.


அப்பா! மாறவே மாட்டார் இவர்! இவருக்கு இந்தத் தோட்டம் தான் டிஸ்னி லேண்ட்... களை பறிப்பது தான் கிரேட்டஸ்ட் ஷோ ஆன் எர்த்... முணுமுணுத்த படியே பறிக்க ஆரம்பித்தார்.


''சொல்லு.''


''ரெண்டு பிரசினைப்பா எனக்கு. ரெண்டும் என்னைப் பிய்க்குது.'' ஆரம்பித்தார்.



''எல்லா வசதியும் இருக்கு. ஆனா நிம்மதியில்லே.''


''ஏண்டா?''


''செலவு. அதிக செலவு! என்னால முடிஞ்ச வரை போராடறேன். முடியலே.''


''உனக்குத்தான் நல்ல சம்பளம் வருதுன்னு சொல்வியே?''


''தாராளமாவே வருது. ஆனா அதைக்கொண்டு சமாளிக்க முடியலியே... எந்த செலவையும் கட்டுப் படுத்த முடியலே.''


''இப்படி மொத்தமா சொன்னா எப்படி? ஏதாவது ஒரு அம்சத்தை சொல்லேன்.''


''மாசா மாசம் பெட்ரோல் செலவு மட்டும் ரெண்டாயிரம் ரூபாய் வருது.''


''ரெண்டாயிரமா?''


''ஆமா, ரெண்டு கார் இருக்கில்ல? ஒரே சமயத்தில் நானும் ஆபீஸ் போகணும்.சாயந்தரம் ரேவதி கிளப் போவாள். மத்தவங்க ட்யூஷன். அதான் இன்னொரு வண்டி வாங்கினேன்.''


''ஓஹோ? சரி, உன் அடுத்த பிரசினை?''


''அது கொஞ்சம் வேறே மாதிரி.'' கை வலிக்கவே கூடையை கீழே வைத்தார்.



''வர வர உடம்பு மோசமாயிட்டே போகுது. டயபடிஸ், கொலேஸ்ட்ரால் ரெண்டும் இருக்குது. பிரஷர் ஒருபக்கம் ஏறிட்டே போகுது.''


''டாக்டர் என்ன சொல்றார்?''


''இதையெல்லாம் கண்ட்ரோல் பண்ணலேன்னா இருதயத்தை பாதிக்கும்கிறார். ஹைபர்டென்ஷன் வந்து ஸ்ட்ரோக் வந்துரும்கிறார்... ஏற்கெனவே வீட்டு செலவுப் பிரசினையினால சோர்ந்து போயிருந்தேனா, இதுவும் சேர்ந்து தூக்கமே இல்லாம போச்சு. டிப்ரஷன் இருக்கலாம்னு சொல்றார் டாக்டர்...''


களைகளை களைந்தபடியே எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டார் சுப்பையா. எதுவும் சொல்லவில்லை.



வீட்டுக்கு திரும்பினார்கள். மனசுக்குள் லேசாக உணர்ந்தார் மகன். அப்பாவிடம் கொட்டிய திருப்தி.



மறு நாள். மாதவனையும் அழைத்துக் கொண்டு தோட்டத்துக்கு கிளம்பினார். மண்பாதை வழியே நடக்கையில்...


''மாதவா, சின்ன வயசில் உனக்கு நிறைய விடுகதைஎல்லாம் போடுவேனே ஞாபகமிருக்கா?''


''ஆமாப்பா.'' நினைவு வந்தது. நிலா நாட்களில் மாடியில் அமர்ந்து தினுசு தினுசாக விடுகதைகள், புதிர்கள்...



''எருக்கம் இலை பழுப்பதேன்? எருமைக் கன்று அழுவதேன்? அப்படீன்னு எல்லாம் கேட்பேனே?''


''ஆமா. ரெண்டுக்கும் ஒரே ஆன்ஸர் தான். பாலின்றி!''


''அது மாதிரி உன் ரெண்டு பிரசினைக்கும் ஒரே தீர்வு தான்.''


மாதவன் திடுக்கிட்டு நிமிர்ந்து அப்பாவைப் பார்த்தார்.


''இப்படி உட்கார், சொல்றேன்!'' கால்வாய்க்கரை ஓரமாக அமர்ந்தனர்.


''உங்களை மாதிரி காரிலும் ஆபீசிலும் கான்ஃப்ரன்ஸிலுமாக உட்கார்ந்தே நாளைக் கழிக்கிறவங்க சீக்கிரமே உடல் தளர்ந்திடறாங்க. தசைகள் கட்டுவிட்டுப் போகுது. ரத்த ஓட்டம் குறையுது. எடை அதிகமாகுது. டயபடிஸ் வருது. பி.பி. ஏறுது. இதுக்கெல்லாம் காரணம் போதுமான உடலசைவு இல்லாதது தான். உடற் பயிற்சி தான் இதற்கு நிவாரணம். ஏரோபிக் எக்ஸர்சைஸ்னு எல்லாம் கேள்விப்பட்டிருப்பியே...''


இந்த மாதிரி சங்கதிகளை எல்லாம் படிக்க எங்கே நேரம் இருக்கு அவருக்கு? அப்பாவுக்கோ படிப்புதான் முதல் உணவு.


''ஒழுங்கா உடற் பயிற்சி செய்யறதால உடலின் கெமிஸ்டரியில் ஏற்படற மாற்றம் ஏராளம். நம்ம உடம்பில மொத்தம் ஒரு லட்சம் கிலோ மீட்டருக்கு ரத்தக் குழாய்கள் இருக்கு. தசைக்குப் பாசனம் செய்கிற வாய்க்கால்கள்! தசைகள் சும்மா இருக்கும்போது இதில கொஞ்சம் தான் திறந்து மூடுது. ஆனால் உடற் பயிற்சி செய்யறபோது 50 மடங்கு அதிகம் குழாய்கள் திறந்து மூடுது. ஏன், புது ரத்தக் குழாய்களே உருவாகுது... மூளைக்கும் எத்தனையோ நன்மைகள். ஞாபகசக்தி அதிகமாகுது. ஆராய்ந்து தெளியும் திறன் சக்தி கூடுது. ஒரு மன இளக்கம் ஏற்படும். அப்புறம் எப்படி டிப்ரஷன் அங்கே இருக்கும்?''


இவ்வளவு விஷயம் இருக்கா? வியந்தார். ''அப்ப நான் கொஞ்சம் இதெல்லாம் செய்ய நேரம் ஒதுக்கணுமே..?''



''தனியே நேரம் ஒதுக்க வேணாம்னு தான் சொல்ல வந்தேன். நீ ஆபீஸ் போய் வர்ற நேரம் தான் இருக்கே?''


''என்னது?''


''ஆமா. உலகத்திலேயே சிறந்த எளிமையான பாதுகாப்பான உடற் பயிற்சியை நீ அப்ப செய்யலாமே! தினம் ஆபீசுக்கு நடந்து போய் வா. வேகமா கையை வீசி... ஸ்ட்ரைடிங்னு சொல்லுவாங்க, அப்படி. தவறாம இதை தொடர்ந்து செய்து பார்.''


''பார்த்தா?''


''உன் ரெண்டாவது பிரசினையும் தீர்ந்திடும்.''


''அப்படியா?''


''எஸ். பெட்ரோலுக்காக செலவாகிற ஒரு கணிசமான தொகை மிச்சமாயிடும். நீ இப்படி நடந்து போகிறதைப் பார்த்தா நிச்சயம் ரேவதியும் பிள்ளைகளும் காரை தேவையில்லாம எடுக்கிறதைக் குறைச்சுக்குவாங்க. பெட்ரோல் பில்லும் சரி, டாக்டர் பில்லும் சரி, குறைஞ்சிரும்.''பிரமிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார் மாதவன். மனதில் ஏராளம் மாற்றங்கள். தீர்மானங்கள்.


''அது மட்டுமில்லே. இப்படி செய்யறதில உனக்கொரு ஆத்ம திருப்தியும் உண்டாகும் பார். பெட்ரோலை இப்படி உபயோகிக்கிறதால உலகத்தில மிஞ்சி இருக்கிற ஏரிசக்தியை வேகமா அழிச்சுத் தீர்க்கிறோம். இயற்கையின் சுழற்சியில் அளவோடு உண்டாகிற அபூர்வ சக்திகளை இப்படி அபரிமிதமா வீணாக்கிறது பாவம் இல்லையா? இந்த மாதிரி நம்ம காரியங்களை நாமே செய்யறதன் மூலம் அதை தவிர்க்கலாம். அதில நமக்கொரு சந்தோஷமும் திருப்தியும் உண்டாகும். விலை மதிக்க முடியாத விஞ்ஞான தொழில் நுட்ப முன்னேற்றத்தை விட்டுறணும்னு சொல்லலை.ஆனா அது நம்மை சுகபோகங்களுக்கு அடிமையாக்கிடக் கூடாது இல்லையா?''


''உண்மைதாம்பா. நேத்திக்கு உங்களோட கொஞ்ச நேரம் களை பிடுங்கினப்போ அதை நானே உணர்ந்தேன். முதல்ல கஷ்டமா இருந்தது, ஆனா கடைசியில வேறெப்போதும் உண்டாகாத ஒரு திருப்தி, ஒரு சந்தோஷம் உண்டானது.''


''நல்லவே புரிஞ்சிக்கிட்டே. இந்த வேடிக்கையைப் பார். ஒரு பக்கம் ஏரி சக்தியை வீணாக்கிட்டு இன்னொரு பக்கம் மனித சக்தியை அளவுக்கு மீறி ஊளைச் சதையா உடம்பில தேக்கி வைக்கிறோம். நாளைக்கு ரெண்டினாலேயும் கஷ்டப்படப் போறோம்!'' என்று சிரித்தார்.


மாதவனும் சிரித்தார்.''உங்க விடுகதை புரியுதுப்பா!''


''ஆமா, உடம்பில் வியாதிகள் பெருகுவதேன்? குடும்பச் செலவு கூடுவதேன்? இது தானே உன் கேள்வி? என் பதில் என்ன தெரியுமா?''


''தெரியும்,'' என்றார் மாதவன், ''உழைப்பின்றி!''.



#####

Tuesday, November 2, 2010

காரணம் நான் உன்..



ன்புள்ள சுந்தர்,


நீ சினிமா வாய்ப்புத் தேடி சென்னைக்கு சென்றிருப்பதாக பழநி சொல்லித் தெரிந்து கொண்டேன். வெகு விரைவிலேயே மிகப் பெரிய டைரக்டராக வருவேன் என்று நீ சபதம் செய்திருப்பதாகவும் அவன் சொன்னான்.


வகுப்பை கட் அடித்துவிட்டு நீ எழுதும் கவிதைகளைப் பார்க்க நேர்ந்த போதே உனக்குள் ஒரு கவிஞன் இருக்கிறான் என்பதைத் தெரிந்து கொண்டேன்.


'வானில் பறக்கும் மேகத்துக்குத் தெரியுமா, அதை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மயிலின் ஏக்கம்?' என்ற உன் கவிதையை நான் எத்தனை முறை திரும்பத் திரும்பப் படித்து மகிழ்ந்திருக்கிறேன் தெரியுமா?


பொதுத் தேர்வைப் பற்றிக் கூடக் கவலைப் படாமல் ராத்திரியெல்லாம் கண் விழித்து ஒரு நாடகம் எழுதினாயே, நினைவிருக்கிறதா? அதைப் படித்த போதே உனக்குள் ஒரு கதாசிரியனும் இருக்கிறான் என்று தெரிந்துகொண்டேன்.


ஒரு பணக்காரப் பெண் ஏழை வாலிபனைக் காதலித்து அந்தக் காதலுக்காக தன்னுடைய எல்லா சுகங்களையும் இழந்து, கடைசியில் அவனையே கல்யாணமும் செய்து கொள்கிறாள் என்ற அந்தக் கதை சினிமாவாக எடுக்கப்பட்டால் தமிழ்த் திரையுலகை ஒரு புதிய பாதையில் அழைத்துச் செல்லும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் கிடையாது.


உன் அக்காவின் கல்யாணம், அம்மாவின் தீராத நோய், குடும்பத்தின் பொருளாதார நலிவு என்கிற மாதிரி சின்ன சின்னப் பிரசினைகளைப் பற்றியெல்லாம் அனாவசியமாக நீ அலட்டிக்கொள்ளாதே! அதை எல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வார். அதைவிட அவருக்கு வேறென்ன வேலை? நீ உன் பி.இ. படிப்புக்கான வேலையில் சேர்ந்துவிட்டாயானால் உனக்கான ஆஸ்கர் பரிசை நீ வாங்குவது எப்போது?


இப்படியெல்லாம் எழுதி உன்னை உற்சாகப் படுத்த வேண்டும் என்று எனக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் அப்படி செய்ய முடியவில்லையே! காரணம் நான்...


உன் அன்புள்ள,


அப்பா.


(13-02-2005 விகடனில் பிரசுரமானது. )