Friday, June 25, 2010

எப்படி?


ணேஷை எல்லாரும் சூழ்ந்து கொண்டனர். ''எப்படிடா? எப்படிடா?''
எல்லார் வாயிலிருந்தும் ஒரே கேள்வி.

''ரெண்டு மணி நேரம் கெஞ்சிப் பார்த்தேன், ஸ்போர்ட்ஸ் குட்ஸ் விற்கிற கம்பெனி அது. ஸ்போர்ட்ஸில் அரை டன்னுக்கு சர்டிஃபிகேட் வெச்சிருக்கேன், என்னை ஏறெடுத்தும் பார்க்கலே. வேகன்சி இல்லவே இல்லேன்னு விரட்டிட்டாங்க! நீ எப்படிடா அந்தக் கம்பெனியில் வேலை வாங்கினே?'' -- ரகு.

''உன்னை விட ரெண்டு டிகிரி அதிகம் எனக்கு. என்னையே ஓரம் கட்டிட்டாங்க!'' -- கௌதம்.

புன்னகைத்தான் கணேஷ். ''நீங்க எல்லாரும் அங்கே போய் என்ன கேட்டீங்க?''
''எங்க தகுதியைச் சொல்லி ஏதாவது வேலை காலி இருக்கான்னு தான்!''

''நான் அப்படிக் கேக்கலே. 'சார், உங்க கம்பெனி ப்ராடக்ட்ஸ் எல்லாம் நல்ல தரமானதா இருக்கு. ஆனா, எங்க ஏரியாவிலே அதை ப்ரமோட் பண்றதுக்கு சரியான ஆள் யாரும் இல்லை, அதை நீங்க உடனே கவனிக்கணும்,' அப்படீன்னேன். உடனே, 'அதுக்கு நீங்க தயாரா'ன்னு கேட்டு இன்டர் வியூ பண்ணி எனக்கு வேலை போட்டுக் கொடுத்துட்டாங்க.''

''சாதுரியம்தான்!'' என்றது அவர்கள் பார்வை.

('நாணயம் விகடன்' Oct 1-2006 இதழில் வெளியானது)

Friday, June 18, 2010

காட்சி


பொசுக்கும் வெயிலில்

தகிக்கும் பாறைகள்,

வறட்சியில் வைக்கோலாகி

வாடும் வயல்கள்,

இல்லாத காற்றால்

அசையாத மரங்கள்,

மண்டிக் கிடக்கும்

குற்றுச் செடிகள்,

மேய்ந்து மாய்ந்து

தேய்ந்த மாடுகள்

எல்லாமே கண்ணுக்கு

அழகான காட்சியாக...

குளிரூட்டப்பட்ட காரின்

வண்ணக் கண்ணாடி வழியே

பார்க்கையில்!

(கவிப்பேரரசு வைரமுத்து தேர்ந்தெடுத்த கவிதைகள்

-- குங்குமம் 18-10-2007 )

Monday, June 14, 2010

அத்தையின் ஆசை


''இத்தனை கரிச்சுக் கொட்டறியே உன் மாமியாரை, அப்படி என்ன பண்ணினாங்க?''


கேட்ட தோழியிடம் பொருமித் தள்ளினாள் கமலி, ''பின்னே என்ன, அவருக்கு நாலு நாள் புவனேஷ்வரில் ட்ரெய்னிங் வந்தது, எனக்கும் சேர்த்தது டிக்கட் போட்டிருந்தார். கடைசி நேரத்தில் எனக்கு அந்த ஊர் கோவில் பார்க்கணும்னு ஆசையா இருக்குடான்னு சொல்லி என் டிக்கட்டை கான்சல் செய்துட்டு அவரோட கிளம்பிட்டாங்க. அதான் எரிச்சல்ல இருக்கேன்.நாளைக்கே எங்கம்மாவைப் போய்ப் பார்த்துட்டு வரலாம்னு இருக்கேன்.''

தே நேரம் ரயிலில்...

''என்னம்மா அண்ணாவோட ஒரிசா பயணமா?'' என்று செல்லில் கேட்ட மகளிடம் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் கமலியின் அத்தை.

''அதுவா? கமலியோட அம்மாவுக்கு கொஞ்ச நாளா உடம்புக்கு முடியாம இருந்தது. போய் நாலு நாள் பார்த்துட்டு வரலாம்னு அவ கேட்டால் உங்கண்ணன் விட்டால் தானே? அதான் வலுக்கட்டாயமா நான் கோவிலுக்கு வரணும்னு சொல்லி டிக்கட்டை மாத்திடச் சொல்லி அவ ஊருக்குப் போயிட்டு வர்றதுக்கு ஒரு சந்தர்ப்பத்தை உண்டுபண்ணிக் கொடுத்திட்டேன்!''


( நன்றி : குமுதம் இந்த வாரம். )

Friday, June 11, 2010

அவனுக்காகவும்...


ங்கோ வெகு தொலைவில்
கணினி முன் அமர்ந்திருக்கும்
என் மகனும்
பசித்தெழும்போது
நான் விளைவிக்கிற
இதே போன்ற அரிசியைத்தான்
உண்ணுகிறான் என்பதை
நினைவுகூரும்போது என்
வியர்வை எங்கோ மறைந்துவிடுகிறது.
அயர்வு அகன்று விடுகிறது.
இன்னும் விளைவிக்க
வேட்கை ஏற்படுகிறது.

வெறுமை

ருமையைக்
கழுவ முடிகிறது.
வறுமையை?