Tuesday, December 29, 2015

அவள் - கவிதைகள்...


218
அசட்டுப் பட்டம் 
வாங்கிட ஆசை
உன்னிடமிருந்து.

219.
அநீதி நீ செய்வது,
நாலு முறை மட்டுமே பேசுவது
ஒரு நாளில் என்றால்?

220
ஏங்குகிறேன் நான்
எதையும் ரசித்திடும் உன் மனம்
எனக்கும் வேண்டுமென்று.


221
உன்னை சந்தித்ததும்
இனிப்பை விட்டுவிட்டேன்
வாழ்வில் எதற்கு 
இரண்டு இனிப்பு?

222
விழைகின்றேன் 
எப்போதும் நானிருக்க, உன்
விழி நோக்கும் இடத்தில்.


223
எனக்கென்று என்ன இருக்கிறது உன்
இதயத்தைத் தவிர? 
ஆனால் அதுவே
எல்லாமுமாக இருக்கிறது.

224
ஒரு கணம் எனினும்
உன் முகப் புன்னகை
எடுத்துச் சென்று விடுகிறது
என்னைத் தன்னுடன்.

><><><

Monday, December 21, 2015

சொல்லக் கூடாதது...(நிமிடக் கதை)

அன்புடன் ஒரு நிமிடம் - 94


 நண்பனைப் பார்த்து நாலைந்து நாளாச்சே என்று தியாகு வீட்டுக்கு வந்தான் வினோத். 
”என்னடா  ஆளையே காணோம்? செல்லில் கிடைக்க மாட்டேங்கிறே... ஆபீசுக்கு போன் பண்ணினா லீவுன்னு சொல்றாங்க!”
”ரெண்டு வாரமா ஒரே அலைச்சல். நானே வந்து உன்னைப் பார்க்கணும்னு நினைச்சேன். வசமா மாட்டிக்கிட்டேண்டா எங்க சதாசிவம் மாமாகிட்டே. ஆத்திரம் ஆத்திரமா வருது. ஆனா ஒண்ணும் செய்ய முடியலே.”
’ஏன், என்ன பண்ணினார்?”
’அவரு வீட்டில மராமத்து வேலை நடக்குது, நீதான் பார்த்துக்கணும்னு இழுத்துட்டுப் போயிட்டாரு. ரெண்டே வாரம் லீவு போட்டால் போதும்னு சொல்லி கையோட...  தினம் அலையறேன்.”
”ஓஹோ?”
”அவருக்கு இல்லாத வசதியா? எத்தனை சம்பளம் வேணா கொடுத்து எத்தனை ஆள் வேணா போடமுடியும்.  அவருக்குப் போய் இதை செய்யறது எனக்கு கொஞ்சமும் பிடிக்கலே.” 
வினோத் ஒரு நிமிடம் யோசித்தான். ”இதை நீ  எதிர்பார்க்கலை இல்லையா?”
”கொஞ்சமும்!”
”ஆனா நான் எதிர்பார்த்தேனாக்கும்!”
”எப்படிடா சொல்றே?”
”போன மாசம் உங்க அண்ணன் வீட்டு கிரகப் பிரவேசத்தில நாம எல்லாம் சந்திச்சோமே ஞாபகமிருக்கா? காலையில டிபன் சாப்பிட்டுட்டு ஃப்ரண்ட்ஸ், சொந்தக்காரங்க  எல்லாருமா உட்கார்ந்து...நீ கூட ஜாலியா லெக்சர் அடிச்சிட்டிருந்தே...”
”ஆமாமா, ஞாபகம் வருது..”
”என்னென்ன சொன்னேங்கிறதும் நினைவிருக்கா?  உன் ஆபீஸ் அட்டெண்டர் ரெங்கனோட பையனை ஒரு வாரமா அலைஞ்சு காலேஜில சேர்த்து அவனுக்கு ட்யூஷன் ஏற்பாடு பண்ணினதை...உன் வீட்டுப் பின்னாடி ஒரு குடிசையில தங்கியிருந்த  வயசான பெண்மணிக்கு தினம் வெஜிடபிள் எல்லாம் வாங்கித்தந்திட்டிருந்ததை... தூரத்து உறவான ஒரு முதியவருக்கு கான்சர் வந்தப்ப மாசாமாசம் லீவு போட்டிட்டு சென்னை ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டுப் போனதை... இப்படி எத்தனை சம்பவம் சொன்னே? எப்படியெல்லாம் உன்னுடைய தொண்டுள்ளத்தைப் பத்தி பெருமையா எடுத்து இயம்பிட்டிருந்தே? ஞாபகம் வருதா? அப்ப இந்த உன் மாமாவும்கூட இருந்தாரே...”
”ஆமா.’ 
”அதான் உன்னைக் கூப்பிட்டிருக்காரு. சரிதானே?”
”என்ன சரி? அவங்க எல்லாம் முடியாதவங்க, வசதியில்லாதவங்க.. அதான் நான் உதவினேன், உதவறேன். இவருக்கு ஏன்...”
”உன்னைப் பொறுத்தவரை அப்படி. அவருக்கு?” 
தியாகுவுக்கு தன் தவறு புரிந்தது.  
”இப்பவாவது தெரிஞ்சிக்க. உண்மையான தேவை உள்ளவங்களுக்கு நாம உதவறதில எத்தனை முனைப்பா இருக்கிறோமோ அத்தனை தூரம் அது இல்லாதவங்க முன்னே  நாம செஞ்ச உதவிகளைப் பத்திப் பேசறதில ஜாக்கிரதையா இருக்கணும்.”
(”அமுதம்’ நவ. 2014  இதழில் வெளியானது)

Sunday, December 20, 2015

நல்லதா நாலு வார்த்தை... 59

’அச்சமும் நம்பிக்கையும்
அடியில் ஒரே போன்றதே.’
- Richard Ford
(”Fear and hope are alike underneath.’)
<>

’தோற்கையில் எங்ஙனம் கருதுகிறாயென்பதே நீ
ஜெயித்திட ஆகும் காலத்தைத் தீர்மானிக்கிறது.'
- G K Chesterton
('How you think when you lose determines 
how long it will be until you win.')
<>

'ஏற்றுக் கொள்ளலிலேயே
வீற்றிருக்க முடியும்
மகிழ்ச்சி.'
- George Orwell
('Happiness can exist only in acceptance.')

<>

‘ஒரு வேளை இன்னொரு கிரகத்தின் 
நரகமாக இருக்கலாம், 
இவ்வுலகு.’
-Aldous Huxley
(”Maybe this world is another planet's hell.’)
<>

'உங்களைச் சுற்றி எங்குமிருக்கும் இறைவனைத் 
தேடியபடி வாழத் தொடங்குவீர்களாயின்,
ஒவ்வொரு கணமும் ஒரு பிரார்த்தனை ஆகிறது.'
-Frank Bianco
('If you begin to live life looking for the God
that is all around you, every moment becomes a prayer.')
<>

’அழகைக் காணும் திறனை 
எப்போதும் கையில் வைத்திருக்கும் 
எவருக்கும் வயதாவதில்லை.’
- John Keats
('Anyone who keeps the ability to
see beauty never grows old.')
<>

'ஒருவர் மேல் வைக்கும் நீடித்த அன்பு, 
அமைதியாக எல்லாம் செல்கையில் 
சற்றே ஆடினாலும்,
புயல் வீசிடும்போது
பலம் சேகரித்துக் கொள்கிறது.'
- Claude Roy
('Lasting love for another sometimes shaken
when the going is calm, gathers strength during a storm.')

<><><>

Friday, December 18, 2015

அவள் (கவிதைகள்)



211
அன்பு உன்னை நெய்தது
அதன் ஒளி என் மேல் பெய்தது.
<>

212
நேற்று தவறவிட்ட உன் 
நினைவொன்று
இன்று காலை கிடைத்ததில்
நாள் என் வசமானது.
<>

213
எத்தனை தூரம் நீ
எனை விட்டு அகன்றாலும்
இழுத்து என் அருகில்
இட்டுவிடுகிறது
உன் மீதான நினைவுகள்.
<>

214
ஒரு நாள் லீவு கொடேன்
சிந்தனைக்கு வேறொரு வேலை
வந்திருக்கிறது.
<>

215
நத்தைகள் குதிரைகளாயின
காத்திருந்து உனைப் பார்த்த நேரம்.
<>

216
மனதின் கதவுகளை
அடைத்துவிட்டுத் திரும்பினால்
உள்ளே நீ.
<>

217
உன் முகத்திரையில்
நொடிக்கொரு ஓவியம்.

<><><>

Wednesday, December 16, 2015

சுத்தமா மறந்து... (நிமிடக் கதை)

அன்புடன் ஒரு நிமிடம் - 92

ரிலிருந்து வினோதைப் பார்க்க வந்திருந்தான் வரதன். தூரத்து உறவு.

”நாலு மாசம் ஆச்சு பார்த்து...வா வா!”  வரவேற்று உட்கார வைத்தான் வினோத். ”அங்கே என்ன விசேஷம்?... எங்கப்பா அம்மா எல்லாம் எப்படி இருக்காங்க?”

இவன் கேட்க வாயெடுக்குமுன் அவனே விவரமாக எல்லாம் சொன்னான். அப்பாவின் இருமலிலிருந்து பால்காரர் வீட்டு மாடு கன்று போட்டது வரை நீண்டதொரு செய்தித் தொகுப்பு வாசித்தான்.

அதற்குள் யமுனா இட்லிகளை எடுத்து தட்டுக்களில் பரப்ப... “வா, சாப்பிட உட்கார்!” அழைத்தான் வினோத். 

கை கழுவப் போன வரதனைக் காணோமே என்று எட்டிப்பார்த்தான். ”அட, இங்கே என்ன பண்றே இன்னும்...?”

வாஷ் பேசினில் கை கழுவ வந்தவன் அங்கிருந்த பிரஷை எடுத்து பேசினைக் க்ளீன் செய்து கொண்டிருந்தான்.

”கொஞ்சம் அழுக்கா இருந்தது, அதான் இதால லேசா...” என்ற அவன், ”சூபரா க்ளீன் பண்ணுதே இந்த பிரஷ், என்ன விலை, எங்கே வாங்கினே?” 

வினோத் முகத்தில் பெருமிதம். ”சொன்னா ஆச்சரியப் படுவே. பதினஞ்சு வருஷம் இருக்கும் இந்த பிரஷை வாங்கி... வெறும் பதினெட்டு ரூபா. வாங்கினப்ப எத்தனை ஸ்ட்ராங்கா  இருந்ததோ அப்படியே இருக்கு இன்னிக்கும். ஒரு இழை கூட பிரியலே. இத்தனை வருஷமா உபயோகிச்சுட்டு வர்றோம். கொஞ்சமும் தேய்ஞ்சு போகலே. பேசின் சுத்தம் பண்ண, அதை இதைன்னு உபயோகிக்கிறதுக்கு ஒரு கணக்கில்லை. ஆனா இன்னும் அதே மாதிரி நல்லா உழைக்குது.” 
அந்த பிரஷைப் பற்றி வினோதுக்கு எப்போதுமே ஒரு பெருமை உண்டு. அதனால் படு சுவாரசியமாக சிலாகித்தான்.

“அப்படியா?” என்று அதை ஆச்சரியமாகப் பார்த்தான் வரதன். “பதினஞ்சு வருஷமா உழைக்குதுன்னா அபாரம்தான்.”

திரும்ப அதை வைக்கப் போனவன் அதன் மேற்புரத்தைக் கவனித்தான்.மேல் பகுதியில் நிறைய அழுக்கு.  கைப்பிடியின் பின் பகுதியிலும் திட்டாக படிந்திருந்தது.  அந்தக் கோணத்தில் ஆராய்ந்ததில் ஆங்காங்கே கறுப்பாய் புள்ளிகள் சிலவும் தென்பட்டன.

“என்ன இப்படி இருக்கு?”

”ஆமா இதை க்ளீன் பண்ணவே இல்லை. அதான்...”

”என்ன ஒரு irony பாரு. இந்த பிரஷ் நமக்கு எத்தனை உழைச்சிருக்கு. எத்தனை விஷயங்களை சுத்தம் பண்ணிக் கொடுத்திருக்கு? ஆனா அது கொஞ்சம் தளர்ந்து அதில் அழுக்குப் படிஞ்சிருக்கிறப்ப அதை நாம க்ளீன் பண்ணணும்னு நமக்குத் தோணறதில்லையே?”

சாப்பிட்டுவிட்டு அவன் கிளம்பிப் போய் விட்டான். ஆனால் வினோத் மனதில் அந்தக் கேள்வி எழுந்து உட்கார்ந்து கொண்டிருந்தது. நமக்காக இத்தனை வருஷம் பாடுபட்ட பெற்றோருக்கு இப்ப கொஞ்சம் உடல் நிலை பாதிச்சிருக்கும்போது அவங்களைக் கூடவே வைத்துப் பார்த்துக்கணும்னு நமக்குத் தோணவே இல்லையே?  
(’அமுதம்’ அக்டோபர் 2014 இதழில் வெளியானது)

Monday, December 14, 2015

நல்லதா நாலு வார்த்தை... 58

’வாழ்க்கை வழங்கும் பேரடிகளில் சிலவற்றை 
நகைச்சுவையின் வழியே 
மெலிதாக்கிக் கொள்ளலாம்; 
ஒரு முறை சிரிப்பை கண்டுகொண்டுவிட்டால் 
எத்தனை வேதனையான நிலைமை 

எனினும் உங்களால் மீள முடியும்.’
- Bill Cosby
('Through humour, you can soften some of the worst
blows that life delivers. And once you find laughter,
no matter how painful your situation might be,
you can survive it.')
<>

'எடுத்துக் கொள்வது எது என்பதல்ல 
விட்டு விடுவது எது 
என்பதே நம்மை செல்வராக்குகிறது.'
- Henry Ward Beecher
('It is not what we take up, but what
we give up, that makes us rich.')
<>

'அறியாமையோடுதான் பிறக்கிறோம் 
அனைவருமே, ஆனால் 
முட்டாளாகவே இருப்பதற்கு ஒருவன்
மிகவும் உழைக்க வேண்டும்.’
- Benjamin Franklin
('We are all born ignorant but one must
work hard to remain stupid.')
<>

’எத்தனை திடமானவன் நீ
என்பதை அறியமாட்டாய்
திடமாக இருப்பதொன்றே 
நீ செய்யக் கூடுவதாக 
ஆகாத வரையில்.’
- Bob Marley
(You never know how strong you are
until being strong is your only choice.’)
<>

’உலகில் நீ 
காண விழையும் மாற்றமாக
நீ விளங்கிடு.’
- Mahatma Gandhi
(”Be the change you want to see in the world.’)
<>

’வாசகரை ஒரு வினாடி கூட
நிச்சயமின்மையில் விடக்கூடாது.
தெளிவே எழுத்துக்கு அழகூட்டுவது.' 
- Dezso Kosztolanyi
('You must not - even for a moment - leave the reader 
in uncertainty. Only clarity embellishes writing.')
<>

'தோற்றுக் கொண்டேயிரு.
தொடர்ந்து செய். 
அடுத்த தடவை நல்ல முறையில் 
தோற்க முயல்க.
அவ்வளவுதான்!'
- Samuel Beckett
('Go on failing. Go on. Only next time,
try to fail better.')

<><><>

Saturday, December 12, 2015

அவள் - (கவிதைகள்)


204
பரிகசித்து உன் சிரிப்பு
என் கவிதைகளுக்கோ பூரிப்பு.
<>

205
வாழ்வின் எல்லா வருத்தங்களும்
வறண்டு போனது
வசந்தமாய் நீ வந்தபோது.
<>

206
தென்றல் என்னை முந்திக்கொண்டது
உன்னிடம் தோற்பதில்.
<>

207
மனதில் உன் காலடித் தடம் இல்லை
ஆனால் நீ வந்து செல்கிறாய்
ஒவ்வொரு கணமும்.
<>

208
கால் இடறிற்று உனக்கு 
நான் கீழே விழுந்தேன்.
<>

209
எவரெஸ்ட் அளவுக்கு 
என் ஞாபக சக்தியை அதிகரித்தது
எதுவுமில்லை உன்போல.
<>

210
தேடிக் கொண்டிருக்கிறேன்
நம் சந்திப்பில் நழுவிச்சென்ற 
வருடங்களை.

<><><>

Friday, December 11, 2015

சொல்லாமலே... (நிமிடக் கதை)




அன்புடன் ஒரு நிமிடம் - 91

கண்ணைக் கசக்கிக் கொண்டு மீண்டும் பார்த்தார் ராகவ். கிஷோர்தானே அது? சந்தேகமில்லாமல் அவனேதான்.
யாழினியுடன் கை கோர்த்துக் கொண்டு அந்த நாலுமாடி ஜவுளிக் கடையிலிருந்து படிகளில் இறங்கிக் கொண்டிருந்தான். இருவர் கைகளிலும் பைகள்.
ஒரு வேளை அவளை அழைத்துக் கொண்டுவரப் போயிருப்பான் என்று தனக்குத்தானே ஒரு பதிலையும் சொல்லிக் கொண்டார். ஆனால் மறுகணம் அதுவும் பொய்யாயிற்று.  ரோட்டில் இறங்கியவர்கள் நேராக எதிரிலிருந்த பாத்திரக் கடைக்குள் நுழைந்தார்கள்.
கிஷோரா இப்படி மாறிவிட்டான்?
ஆச்சரியம் தாங்கவில்லை அவருக்கு.
சில நாள் முன்பு கூட அவன் எதற்கோ சொல்லிக் கொண்டிருந்தான். ”அதை வாங்கணும் வாங்க, இதை வாங்கணும் கூட வாங்கன்னு ஒரே நச்சரிப்பு. ஷாப்பிங் என்றாலே எனக்கு அலர்ஜி. முடியாது நீ போய்க்கோன்னு ஒவ்வொரு தடவையும் கழன்றுகொண்டு வர்றதுக்குள்ளே... அம்மாடி!”
”சரி, வற்புறுத்தறாள் இல்லையா, கொஞ்சம் கூட போயிட்டு வர்றது.”
”போங்க மாமா. என்னால முடியாது. கடை கடையா அலையறதும் ஒவ்வொண்ணா அலசிப் பார்த்து விசாரிச்சு வாங்கறதும்...ஊஹூம்,  நம்மால ஆகாது. அதில விருப்பமும் சரி அந்தப் பொறுமையும் சரி என்கிட்டே கிடையாது...”  
”ஷாப்பிங்லே எத்தனை சுவாரசியம் இருக்கு தெரியுமா?” 
”அப்படித்தான் அவளும் சொல்லுவா. நம்மகிட்ட நடக்குமா? நகரமாட்டேனே!” என்றான் ஏதோ பெருமையாக.
அத்தனை சொன்னவன் இப்போது மாறியிருப்பானா? ஒரு  வேளை அவளிடம் ஏதோ காரியம் சாதிக்க இந்த ஒரு தடவை?
அப்படியில்லை என்று அடுத்த வாரம் யாழினியுடன் போனில் பேசும்போது தெரிந்தது. 
’இப்பல்லாம் அவரே என்னை கடைகளுக்கு அழைச்சுட்டுப் போறார்,’னு அவள் பேச்சினூடே குறிப்பிட்டதைக் கவனித்தார்.

மறு நாள் அவனை சந்தித்ததுமே...
”என்னப்பா, ஆளே மாறிட்டியே...ஷாப்பிங் இப்ப பிடிச்சுப் போயிட்டதாக்கும்?”
”அதெல்லாம் ஒண்ணுமில்லே மாமா, சொன்ன மாதிரி எனக்கு கட்டோடு பிடிக்காத விஷயம்தான் அது.  சரி,  நமக்குப் பிடிக்காட்டியும் யாழினிக்காக ஏன் அதை செய்யக்கூடாதுன்னு யோசிச்சேன். செய்யறேன்.” 
மகிழ்வாய் சொன்னார். ”கிஷோர், நீ எங்கேயோ போயிட்டே.”
”யெஸ், இப்ப அதை செய்ய முடியுது. பிடிக்காத விஷயத்தை என்றாலும் அவளுக்காக.... ஒரே ஆச்சரியம் அவளுக்கு! அவளுக்காக செய்யறேன்னு சொன்னால் சந்தோஷப்படுவாள்."
"இரு, உனக்கு அது கட்டோடு பிடிக்காதுன்னு அவளுக்கு நல்லாவே தெரியும்தானே?”
”நல்லாவே. அதனால நான் அவளுக்காக கஷ்டப்பட்டு இதை செய்யறேன்னு சொன்னால் சந்தோஷப்படுவாள்.”
”அதை சொல்லாதே. இன்னும் சந்தோஷப்படுவாள்,” என்றார் அவர்.
அவன் ஒரு வினாடி விழித்தான். ”நீங்க சொல்றது முற்றிலும் சரி,” என்றான்.
(’அமுதம்’ அக்டோபர் 2014 இதழில் வெளியானது)

Monday, December 7, 2015

நல்லதா நாலு வார்த்தை... 57


'எத்தனை பரிவை ஊட்டுகிறீர்களோ,
அத்தனை குறைகிறது 
அதன் தேவை உங்களுக்கு!'
- Malcolm Forbes
('The more sympathy you give, 
the less you need.')

<>

மனிதரைவிட மேம்பட்டவை 
மந்திகள் ஒரு விஷயத்தில்:
மந்தி கண்ணாடி பார்க்கையில் ஒரு 
மந்தியைப் பார்க்கிறது.'
- Malcolm de Chazal
('Monkeys are superior to men in this:
when a monkey looks into a mirror,
he sees a monkey.')
<>

'புரிந்து கொள்வதென்பது மன்னிப்பது.
தன்னையே கூட.'
- Alexander Chase
('To understand is to forgive, even oneself.')
<>

'வலியை விளையாட்டாக 
எடுத்துக்கொள்ள வைக்கும்
உள்ளுணர்வே நகைச்சுவை.'
- Max Eastman
('Humour is the instinct for taking pain playfully.')

<>

’ஒரே ஒரு ரோஜா என்
தோட்டமாக இருக்கமுடியும்.
ஒரே ஒரு நண்பன் என்
உலகமாக.'
Leo Buscaglia
('A single rose can be my garden...
a single friend, my world.')
<>

'தன் முந்தைய தலைமுறையைவிட
அறிவாற்றல் கொண்டதாகவும் 
தனக்கு அடுத்த தலைமுறையைவிட
விவேகம் உள்ளதாகவும் 
தன்னை கருதிக் கொள்கிறது
ஒவ்வொரு தலைமுறையும்.’
- George Orwell
('Each generation imagines itself to be more
intelligent than the one that went before it,
and wiser than the one that comes after it.')
<>

’தடுமாறித்தான்
கற்றுக் கொள்கிறோம்
நடக்க.’
- Proverb
(”We learn to walk by stumbling.’)

<><><>