Wednesday, August 24, 2011

நம்பிக்கை




''கண்ணன், மாதவன் ரெண்டு பேர்ல ஒருத்தரைத்தான் நான் இந்த ப்ராஜெக்ட் லீடர் வேலைக்குத் தேர்ந்தெடுக்கணும், '' என்ற எம்.டி. பரசுராம் தன் மேனேஜரின் முகத்தைப் பார்த்தார்.
''ஒ.கே.''
''உங்க அபிப்பிராயம் என்ன, முதல்ல கண்ணனைப் பத்திச் சொல்லுங்க.''
''நல்ல திறமைசாலி. எம்.பி.ஏ. பிளஸ் எம்.எஸ்.  ஐம்பதுக்கு மேல  பிராஜக்டில  அனுபவம் .
''குட்.''
''அது  மட்டுமில்லே. இது வரை எந்த ஐடியா கேட்டும் என்கிட்டே வந்ததில்லே. என்னப்பா உனக்கு சந்தேகமே வராதான்னு நானே அசந்து போய்க் கேட்டேன். நெவர்னு சிரிச்சுக்கிட்டே சொல்வான்...''
''ஒ.கே. மாதவன் எப்படி?''
''திறமை சாலி தான் அவரும்.  எம்.பி. ஏ. பிளஸ் எம்.எஸ். ஐம்பது சொச்சம் பிராஜக்ட்ஸ்...''
''கோ ஆன்.''
''ஆனால் ஒரு விஷயம். ஏதாவது சின்ன சின்ன தவறு பண்ணிட்டு வந்து ஆலோசனை கேட்பார்.''
கண்ணனையே தேர்ந்தெடுப்பார் என்று எதிர்பார்த்தார். ஆனால் பரசுராமோ, ''ஒ.கே, மாதவனையே போட்டுருங்க,'' என்றார்.
''சார்?''
''பாருங்க, பிராஜெக்ட் லீடர் வேலையில் இருக்கிறவங்க திறமையானவர்களாக இருக்கிறது எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் நம்பகமானவர்களாக இருப்பதும். தானே செயல் படுகிறவர்களை விட தவறு செய்தாலும் நம்மகிட்டே யோசனை கேட்டு செய்யறவங்க தான் நம்பகமானவங்க.''
''உண்மைதான் சார்,'' என்றார் அவரின் நுண்ணறிவை வியந்தபடி. 

Tuesday, August 16, 2011

எனினும்..



னினும் மீதமிருக்கிறது தன்னம்பிக்கை
அது எழ வைக்கிறது.


எனினும் ஆழ் மனதில்  அன்பிருக்கிறது
அது மறக்க  வைக்கிறது.
 

எனினும் அனுபவ அறிவிருக்கிறது
அது  துவளாதிருக்க செய்கிறது.
 

எனினும் சில நேரம் மழை பெய்கிறது
அது மனதைக் குளிர வைக்கிறது.
 

எனினும் அலைகடல் இசையிருக்கிறது.
அது மகிழ்ச்சி அளிக்கிறது.


'எனினும்' - அந்த வார்த்தையில் என் 
உலகிருக்கிறது!