Thursday, December 30, 2010

புதுச் சட்டை




''டேய் பாலு, என்னடா பண்றே அங்கே? ஒரு பேபி சட்டைக்கு காஜா போட இவ்வளவு நேரமா?'' கத்திய டெய்லர் ஷண்முகம், ''சே! புதுசா வர்ற பசங்களை வேலைக்கு சேர்த்துக்கிட்டா இப்படித்தான்!'' என்று எரிச்சல் பட்டார்.



''நான் அன்னிக்கே சொன்னேனே இவன் சரியில்லேன்னு... அவனுக்கு தோணற மாதிரி வேலை செய்யறான். நேத்து நாலு சட்டைக்கு அரை மணி நேரத்தில பட்டன் தைச்சு, காஜா போட்டுட்டான். இன்னிக்கு ஒரு சின்ன சட்டையை வெச்சு இழு இழுன்னு இழுத்துட்டு இருக்கான். ஊஹூம், இவன் தேற மாட்டான்.'' என்று அலுத்துக் கொண்டான் சண்முகத்தின் உதவியாளன் கிருஷ்ணன்.


''சரி, சரி! அதை நீ வாங்கி முடிச்சுடு. பாலு, கொடுடா அதை கிருஷ்ணன் கிட்டே.'' என்று இரைந்தார் சண்முகம்.


''வேணாங்க முதலாளி, இதோ முடிச்சிடறேன்,'' என்று இறைஞ்சிய பாலு, கொஞ்ச நேரத்தில் ஒரு வழியாக வேலையை முடித்துக் கொடுக்க, காத்திருந்த வாடிக்கையாளர் வாங்கிகொண்டு விரைந்தார்.


அவர் போனதும் சண்முகம் இவனிடம், ''ஏண்டா இந்த சின்ன வேலைக்கே இத்தனை நேரம் எடுத்துக்கிட்டா நாளைக்கு நீயெல்லாம் எப்படிடா பெரிய டெய்லரா வரப்போறே?'' என்று அதட்டினார்.


''அது வந்துங்க... இதைச் சின்ன வேலையா நான் நினைக்கலீங்க. ஆறு மாச குழந்தைக்கான சட்டை இது. குழந்தை சட்டையை எப்பவும் வாயிலேதான் கொண்டு போகும். இல்லீங்களா? அப்ப பட்டன் கழன்று அதன் வாய்க்குள்ளே போயிடக்கூடாது இல்லையா? அதான் பட்டனை நல்ல அழுத்தித் தைச்சு காஜாவையும் ஸ்ட்ராங்காப் போட்டேன். அதான் கொஞ்சம் கூடுதலா நேரமாயிட்டுது. மன்னிச்சுக்குங்க'' என்றான் பாலு.


சண்முகத்தின் முகம் சட்டென்று கனிந்தது. அவன் முதுகில் அன்புடன் தட்டிக் கொடுத்து சொன்னார்.
''நிச்சயம் ரொம்பப் பெரிய ஆளா வருவேடா.''

(ஆனந்த விகடன் 2005 தீபாவளி மலரில் வெளியானது)

Thursday, December 16, 2010

உள் காயம்

உள் காயம்

கையின் மணிமுட்டிக்கருகே

அந்தக் காயம்.

ஆழமானது அல்லதான்.

ஆனாலும் அது என்னைப்

பாடாய்ப் படுத்திற்று.

சுற்றியுள்ள வீக்கம்

சிறு மேடாயினும் என்னைச்

சிணுங்க வைத்தது.

துடித்துத்தான் போனேன்.

காயம் இருந்தது

என் மகள் கையில் அல்லவா?

###

உயர மயக்கங்கள்


டித் தண்டில் ஏற ஆரம்பிக்கையில்

அந்த அணிலுக்குத் தெரியவில்லை

போய்க்கொண்டேயிருக்கும்

அதன் உயரம் என்று.

என்றாலும் ஏறிச் சென்றது

தென்னையின் மேலே மேலே.

மயக்கம் வருகிற வரையில்.

தொடரவும் துணிவின்றி

தாவவும் அருகில் கிளையின்றி

செங்குத்தாக இறங்கவும் தயங்கி

நின்றிருந்த ஒரு கணத்தில்

உலக மொத்தத்திலிருந்தும் தன்

தனிமையை உணர்ந்தது.

###

Wednesday, December 8, 2010

அனுபவம்


விசாலத்தால் தன் கணவரைப் புரிந்து கொள்ள முடியவில்லை. பத்து வருஷத்துக்கு முன் வியாபாரத்தில் நஷ்டமேற்பட்டதால் ஒரு ஐந்தாயிரம் ரூபாய் உதவி கேட்டு வந்த தன் தம்பிக்கு தயவு தாட்சண்யமில்லாமல் மறுத்து விட்டார். இன்று அவனுக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க தன்னை அழைக்கிறார்.


''என்ன திடீர் கரிசனம்?'' வெகுண்டு கேட்டாள்.

''வந்து பாரேன்.''

பார்த்த பிறகு... ''என்னங்க இப்படி ஒரு லட்ச ரூபாயைத் தூக்கிக் கொடுத்து இதை வெச்சு எல்லாத்தையும் சரி பண்ணிக்கோ, எனக்குத் திருப்பித் தர வேண்டாம்னுட்டீங்க?''

ஒரு குழந்தையை பார்ப்பது போல் அவளைப் பார்த்தார். ''பார் விசாலம், அப்ப அவன் அனுபவமில்லாமல் வியாபாரத்திலே சறுக்கின நேரம். அப்ப என்ன உதவி யார் பண்ணினாலும் மேலும் மேலும் சறுக்கத்தான் செய்வான். தானா எழுந்திருக்கப் பழக முடியாது. எல்லா உதவியையும் வாங்கிட்டான். எல்லா சொத்தையும் இழந்திட்டான். இப்ப அவனிடம் அனுபவம் தவிர எதுவுமில்லை. இதுதான் அவனுக்கு உதவி செய்ய வேண்டிய நேரம். அதான் அந்த ஐயாயிரம் ரூபாயை இப்ப கொடுத்தேன்.''

''எங்கே, ஒரு லட்சமில்லே தூக்கிக் கொடுத்தீங்க?''

''அதே தான் இது. என்ன முழிக்கிறே? அன்னிக்கு அவனுக்குக் கொடுக்காத அந்த ஐயாயிரத்துக்கு எக்ஸ்டென்ஷன்லே ஒரு கிரவுண்ட் நிலம் வாங்கிப் போட்டேன். அந்த ஏரியா இப்ப டெவெலப் ஆகிட்டதால் அந்த கிரவுண்டைத்தான் ஒரு லட்ச ரூபாவுக்குப் போன வாரம் வித்தேன். அதைத்தான் அவனுக்குக் கொடுத்தோம்.''


விசாலம் பேசத் தெரியாமல் தவித்தாள்.

(குமுதம் 14-12-2005 இதழில் வெளியானது)

Saturday, December 4, 2010

வேகம்



ரியிட்ட காகிதத்தைப்
பார்க்கும் போதெல்லாம்
வரிந்தெழுதத் தோன்றுகிறது
உடனடியாய் ஒரு கவிதை.

ருகிற கவிதை வரிகளோ
சாயம் பூசியதாய்
யார் மனதிலும்
மாயம் புரியாததாய்
சில சமயம்
எனக்கே அந்நியமாய்
.

னதில் முளையிட்ட அனுபவம்
தன்னுணர்வுடன் வெளிப்படுகையில்
மட்டுமே அல்லவா
தேடவேண்டும் நான்
தாளையும் பேனாவையும்?


----