Thursday, August 29, 2019

அங்கும் இங்கும்.. (நிமிடக்கதை)

அன்புடன் ஒரு நிமிடம் - 134

"ஒரு பக்கம் மட்டுமே கேட்டு ஒரு முடிவுக்கு வர்றது, அவங்க எத்தனை வேண்டியவங்களா இருக்கட்டும், ரிஸ்க்தான் இல்லையா?" என்றார் வாசு.
"என்ன நடந்திச்சு? யார் அது?" என்றாள் ஜனனி.
"ஒருத்தரில்லை, ரெண்டுபேர்.  சொல்றேன். முதல்ல நம்ம சேகர். கொஞ்ச நாளாவே சொல்லிட்டிருந்தான்... அவன் வீட்டு முன் போர்ஷனை வாடகைக்கு விட்டால் கொஞ்சம் சேமிப்பாகும்னு எவ்வளவோ முயற்சி பண்ணியும் சரியான ஆட்கள் கிடைக்கலேன்னு... காரணம் வர்ற எந்தக் குடும்பத்தையுமே மைதிலிக்கு பிடிக்கலேன்னு... நானும் வேலை மெனக்கெட்டு அவனுக்கு பல யோசனைகளை சொல்லியிருக்கேன். நேத்து மைதிலியோடு அதைப்பத்திப் பேச சந்தர்ப்பம் கிடைச்சப்பதான் தெரிஞ்சது நடந்ததே வேறேன்னு.’
”என்ன சொன்னாள்?”
”அவளுக்கு  ஒண்ணும் பிடிக்காம போகலியாம். துணைக்கு ஒரு குடும்பம் இருந்தால் நல்லதுன்னு நினைக்கிறாள் அவள். ஆனா சேகர்தான் அதை கௌரவக் குறைச்சல்னு நினைச்சு அதையும் இதையும் சொல்லி தள்ளிப் போடறானாம். தயங்கறானாம். என்னத்தை சொல்ல?”
”அடுத்ததை!” என்றாள்.
அவளை முறைத்துவிட்டு தொடர்ந்தார்.
”அடுத்தது நம்ம கண்ணன்.. ஊரிலிருக்கிற அவங்க அப்பா அம்மாவை உன்னோட  இங்கேயே வெச்சுக்கலாமே, உதவியா இருக்குமேன்னு கேக்கிறப்பல்லாம், இங்கே எங்களுக்கு எந்த உதவியும் தேவையில்லை, வந்தால் அவங்களையும் சேர்த்து கவனிச்சுக்க நம்மால முடியாது, அவங்க அங்கேயே இருந்துக்கறதுதான் சரிப்பட்டு வரும்னு எப்பவும் சொல்வான். நானும் அதை நம்பினேன். நேத்து அவங்கப்பாவை ஊரிலே பார்த்தப்பதான் தெரிஞ்சது விஷயம். இவன் கூப்பிட்டுட்டுதான் இருக்கானாம் வற்புறுத்தி. அவங்கதான் டவுன் நமக்கு ஒத்துவராதுன்னு வரலையாம். வீணா ஜம்பத்துக்கு என்கிட்ட அப்படி சொல்லியிருக்கான்... அதான் சொன்னேன்.  எத்தனை பழகினவங்களாயிருக்கட்டும். அவங்க சொல்றதை அப்படியே நம்பிவிடக் கூடாது... ஒரு விஷயத்தை சொல்றது அவங்க விருப்பப்படியோ அல்லது சுய நல நோக்கத்திலோதான். இந்த பாயிண்டைத் தெரிஞ்சுக்க  எனக்கு இத்தனை நாளாயிருக்கு.”
”அதாவது, தப்பான பாயிண்டை!”
”என்னசொல்றே நீ?”
”பின்னே என்ன சொல்றது... சேகர் சொன்னது பொய்யாக இருக்கலாம். தன் ஈகோவுக்காகவோ இமேஜுக்காகவோ அப்படி ஒரு சப்பைக்கட்டு கட்டியிருக்கலாம். அதே சமயம் கண்ணன் மேட்டரை எடுத்திக்கிட்டா அவங்கப்பா சொன்ன மாதிரி தான் நடந்திருக்கணும்னு எப்படி தீர்மானிக்கப் போச்சு? கண்ணன் சொன்னது உண்மைதான். மகனை விட்டுக் கொடுக்காமல் அவங்க பேசியிருக்காங்க. என்ன இருந்தாலும் பெத்தவங்க இல்லையா... மூணாம் மனுஷனான உங்ககிட்டே எப்படி மகனை விட்டுக் கொடுப்பாங்க? மைதிலிக்கு நீங்க சித்தப்பா. அதனால அவள் மனசிலிருக்கிறதை மறைக்காம சொல்லிட்டா. இல்லேன்னா அவளும் தன் கணவனை விட்டுக் கொடுத்துப் பேசியிருக்க மாட்டாங்கன்னுதான் நினைக்கிறேன்.”
”நீ என்ன சொல்ல வர்றே, நான் இப்ப கண்டுபிடிச்சது..”
”இப்படி எதையும் கண்டு பிடிக்காதீங்கன்னுதான்..”
><><
('அமுதம்' டிச.2015 இதழில் வெளியானது)

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

//இப்படி எதையும் கண்டுபிடிக்காதீங்கன்னு தான்// ஹாஹா...

பார்க்கும் கோணங்களில் தான் எத்தனை வித்தியாசம். நல்ல கதை.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!