Wednesday, April 11, 2012

சொல்லாமல் கொள்ளாமல்...


அன்புடன் ஒரு நிமிடம் - 3

சொல்லாமல் கொள்ளாமல்...

காலிங் பெல் ஒலித்தது. எட்டிப் பார்த்தார் ராகவ். கேட்டுக்கு வெளியே கிஷோர் நின்றிருந்தான் மோவாயைத் தேய்த்தபடி.
சற்று தாமதமாகவே கதவைத் திறந்தார்.
''என்ன மாமா என்ன பண்ணிட்டிருந்தீங்க? எத்தனை வாட்டி பெல்லை அமுத்தறது?''
''இல்லேடா இங்கே ஒரு பேஜார் வேலையில் அகப்பட்டு முழி பிதுங்கிட்டிருக்கேன்... உட்காரு. என்ன தலை எல்லாம் கலைஞ்சிருக்கு?''
அவன் எதோ சொல்ல வாயெடுக்குமுன், ''ஆ, உன்கிட்டே ஐடியா கேக்கலாமே? ஒரு வெப்சைட் போட்டி. பக்கத்து வீட்டு பையன் என்னை கலந்துக்க சொன்னான். ரெண்டே வரியில எழுதணும். 'To whom do you want to thank before you die and why?' அப்படீங்கிற கேள்விக்கு பதில்... எப்படி எழுதறதுன்னு தலையைப் பிச்சிட்டு...''
''ஓ, வந்து... அது இப்ப...''
''ஒரு நிமிஷம்தான்...இந்தக் கேள்விக்கு நீ பதில் சொல்றதாயிருந்தா என்ன சொல்லுவே?''
யோசிக்கவேயில்லை. ''எங்க அம்மாவுக்கு தான் முதல்லே! லிஸ்ட் போட முடியாது அவங்க எனக்காக செய்திருப்பதை எல்லாம்!.அப்புறம் எங்கப்பா...'' என்று அவனாகவே அப்பாவுக்குத் தாவினான். "அவரு மட்டும் அந்தக் காலத்திலே எனக்கு அட்வென்ச்சர் கதைகளை படிச்சுக் காட்டவில்லையானா நான் படிப்பில் இத்தனை ஆர்வத்தோடு வளர்ந்திருக்க மாட்டேன்.''
''அப்ப யாழினி...?''
''ஆமா. முதல்லயே சொல்லியிருக்கணும். என் மனைவி இல்லாம நான் ஏது? அடுத்து என் தங்கை. அவளோட பாசம் நான் முன்னேற எத்தனை உதவியா இருந்திருக்கு! என் ஃபிரண்ட் சீதாராமன். பிளஸ் டூ வில் என் ஹை மார்க் ஸ்கோருக்கு அவனுக்கு நன்றி சொல்லணும். ராப்பகலா கூட இருந்து உழைச்சான்...''
அவன் தொடர்ந்து சொல்ல..மாமா உட்கார்ந்தார்.
''இலக்கணமும் கணக்கும் சொல்லித் தந்த ஆறுமுகம் சார், வேலையில சேர்ந்தப்ப முதல் பிராஜெக்ட் லீடராயிருந்த மனோஜ்...கொஞ்சம் கஷ்டம் தான் மாமா, லிஸ்ட் வளர்ந்துட்டேயிருக்கு. ஆஹா, எத்தனை பேரு என் வாழ்க்கையில நான் நல்லாயிருக்க ஹெல்ப் பண்ணியிருக்காங்க... ஏன் உங்களால அதை ஈசியா எழுத முடியலைன்னு புரியுது.--'' என்ன நினைத்தானோ, ''வர்றேன் மாமா, வீட்டில ஒரு வேலை, மறந்துட்டேன்.'' போய்விட்டான்.
போன் ஒலித்தது. ''சித்தப்பா'', என்றழைத்தாள் யாழினி. ''அங்கே வந்தாரா அவரு? என்னோட ண்டை போட்டிட்டு, கோபத்தில வெளியே போனாரு... அதான் கவலையாயிருக்கு.''
''கவலைப்படாதே. இப்ப சரியாகியிருப்பான். அங்கே தான் வந்திட்டிருக்கான்.'' என்றார் அவன் முகத்தில் அறிகுறி பார்த்து நோயை டயாக்னிஸ் செய்து உடனடியாக ஒரு திரைக்கதை எழுதி அதன்படி வைத்தியமும் பார்த்து அனுப்பிய ராகவ்.

<<<>>>

16 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அவன் முகத்தில் அறிகுறி பார்த்து நோயை டயாக்னிஸ் செய்து உடனடியாக ஒரு திரைக்கதை எழுதி அதன்படி வைத்தியமும் பார்த்து அனுப்பிய ராகவ்.//

ராகவ் ஐயா செய்து அனுப்பிய வைத்தியம் மிக அருமை. சொல்வதை இனிமையாகப் பக்குவமாகச் சொன்னால் யாருமே மனம் மாறிப்போக வாய்ப்பு உண்டு தான்.

நல்ல பதிவு. பகிர்வுக்கு நன்றிகள்.

கீதமஞ்சரி said...

அனுபவம் பேசியிருக்கிறது. பேசியதுடன் செய்ய நினைத்த வேலையை யாருக்கும் மனத்தாபம் வராமல் செய்தும் முடித்திருக்கிறது. அந்த அனுபவ முதிர்வை அறிந்த காரணம்தான் ராகவனைத் தேடி கிஷோரை வரவழைத்திருக்கிறது. நல்ல கதையும் கருவும். பாராட்டுகள்.

வெங்கட் நாகராஜ் said...

மிகவும் நன்று.

குறையொன்றுமில்லை. said...

ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துகள்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

JANA SIR...STORY SUPER!!

ADHI VENKAT said...

அவர் கையாண்ட விதம் அருமை. கதை பிரமாதம் சார்.

ராமலக்ஷ்மி said...

நல்ல வைத்தியர் ராகவ்:)! நல்லாருக்கட்டும்.

Yaathoramani.blogspot.com said...

சிந்திக்கச் செய்து போகும் அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்


தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

Tha.ma 2

Rekha raghavan said...

ராகவ்வைப் போன்ற வாழ்க்கையை கற்றுணர்ந்த டாக்டர்களின் சேவைதான் தற்போதை தேவை. அருமையான கட்டுரை.

கோமதி அரசு said...

அவன் முகத்தில் அறிகுறி பார்த்து நோயை டயாக்னிஸ் செய்து உடனடியாக ஒரு திரைக்கதை எழுதி அதன்படி வைத்தியமும் பார்த்து அனுப்பிய ராகவ்//

ஒவ்வொருவருக்கும் ராகவ் மாதிரி ஒரு மாமா கிடைத்தால் குடும்பம் அமைதிப்பூங்கா ஆகும்.

நல்ல கதை.

கே. பி. ஜனா... said...

panju uthandaraman said..

இனிய ஜனா சார்
சொல்லாமல் கொள்ளாமல்...ஒவ்வொரு சிறுகதையிலும் நல்ல கருத்தைப் பதிவு
செய்து எல்லாரையும் சிந்திக்க வைக்கும் உங்கள் இலட்சியம் மேலும் வளர இனிய
நல்வாழ்த்துகள்-இலக்கியபீட சிறுகதைப்போட்டி முடிவு பார்த்தீர்களா ?
பாராட்டு+வணக்கத்துடன் உத்தண்டராமன்

ரிஷபன் said...

மனசைத் தொட்டு சிம்மாசனமும் போட்டுக் கொண்ட அருமையான கை வைத்திய கதை.

ராமலக்ஷ்மி said...

இலக்கிய பீடம் போட்டியில் தங்களுக்குப் பரிசா? மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்!!

கே. பி. ஜனா... said...

@ ராம லக்ஷ்மி: நன்றி. இலக்கியப் பீடம் போட்டியில் இம்முறை நான் கலந்துகொள்ளவில்லை மேடம்!

ராமலக்ஷ்மி said...

ஓ சரி. முன்னர் பரிசு கிடைத்ததை நண்பர் குறிப்பிட்டிருக்கிறார் என எண்ணுகிறேன்.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!