வாழ்க்கையைப் புரிந்து கொள்ள, வாழ்க்கையில் பார்க்க வேண்டிய திரைப்படம் என்று ஏதாவது ஒன்று உண்டானால் அது இந்த படம்தான். 1957-லேயே வந்து விட்டது என்பது விசேஷம். (பலர் பார்த்திருக்கலாம்)
அவரும் சேர்ந்து தயாரித்த படத்தில் ஆரும் தொடாத ஒரு நடிப்பு வட்டத்துக்குள் போய் இருக்கிறார் ஹென்றி ஃபோண்டா. இதாண்டா ஒரு நடிகன் தாண்ட வேண்டிய எல்லை என்கிறார்.
ஒரு கொலையைப் பற்றிய படம். ஆனால் க்ரைம் திரில்லர் இல்லை. கொலை செய்யப்பட்டவரையோ, கொலை செய்தவரையோ பற்றிய அலசல் இல்லை. ஆனால் தீர்ப்புக்கு உதவ வந்தவர்களின் மனதுக்குள்ளே புகுந்து கதவுகளைத் திறந்து நமக்கு காட்டும் சைக்கலாஜிக்கல் டிராமா.
அப்பாவுடன் ஏற்பட்ட தகராறு! அந்தப் பையன் அப்பாவைக் கொலை செய்து விட்டதாக வழக்கு. எதிர் வீட்டுப் பெண் ஊடே ஓடிய ரயிலின் ஜன்னல்கள் வழியே பார்த்து இருக்கிறாள். அங்கே கிடந்த கத்தி போல ஒன்றை பையன் வாங்கி இருக்கிறான் என்ற கடைக்காரன் சாட்சி இருக்கிறது. சினிமாவுக்கு போனேன் என்று சொல்லும் பையனுக்கு படத்தின் பெயர் உள்பட எதுவும் நினைவில்லை. ஆகவே ஓபன் அண்ட் ஷட் கேஸ் மாதிரி 11 ஜூரர்களுக்கும்! ஒரே ஒருவர் மாறுபடுகிறார். அவரும் ஐ ஆம் நாட் ஷ்யூர் என்று மட்டுமே சொல்கிறார்.
ஆரம்பிக்கிறது ஒரு அறிவு போராட்டமும் ஒரு மனப் போராட்டமும். ஒவ்வொருவருக்கும்! என்ன நடக்கிறது? எப்படி முடிகிறது? ஜூரர்களின் அறைக்குள் ஒன்றரை மணி நேரமாக அவர்கள் வாதாடுவது மட்டுமேதான் படம் முழுப் படமும். பார்த்து விடுங்கள் ஒருவாட்டி உங்கள் வாழ்க்கையில்.
நாம் முடிவெடுக்கும் போது அணிந்து கொள்ளும் கலர் சட்டைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக கழட்டிப் போடுகிறது இந்தப் படம். மனதின் செயல்பாட்டைப் புரிந்துகொள்ள வைக்கிற காட்சிகள்!
ஒவ்வொருவருக்குள்ளும் நாம் பார்ப்பது அவரை அல்ல, நம்மை. கடைசியில் Lee J Cobb ஆவேசமாக பேசும் பொழுது அந்த கேரக்டருக்குள்ளும் நுழைந்து கொள்கிறோம். அவர் பேசப்பேச அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பது ஃபிரேம் பிசகாமல் நமக்கு தெரிந்து விடுகிறது. அப்படியே செய்கிறார்.
சினிமாவின் ரசிகர்களுக்கு நான் இதை சிபாரிசு செய்கிறானோ என்னவோ, வாழ்க்கையின் ரசிகர்களுக்கு இதை பலமாக சிபாரிசு செய்கிறேன். 3 அகாடமியும் 4 கோல்டன் க்ளோப் நாமினேஷனும் பெற்ற இந்தப் படத்தின் பெயர்?
12 Angry Men.
And we!
--------------------