Tuesday, July 8, 2025

எண் கைப் பூதம்...


 I Q test என்று ஒன்று வைக்கிறார்களே, அவரவர் திறமையை அங்குலம் சுத்தமாக அளந்து சொல்ல? அதை ஆரம்பித்து வைத்தவருக்கு இன்று (july 8) பிறந்த நாள்! Alfred Binet... (1857 - 1911)


சட்டம் பயின்ற இந்த பிரெஞ்சுக்காரர் சட்டென்று அதை உதறக் காரணமாயிருந்தது ஹிப்னாஸிஸ் பற்றி அவர் படித்த ஒரு புத்தகம். சைகாலஜியில் பையக் காலை வைத்தார். தானே பயின்றார். இருநூறு புத்தகம் எழுதியது அதில்தான்.

பள்ளியில் கற்றுக் கொடுப்பதை சரிவர புரிந்து கொள்ள முடியாத மாணவர்களை கண்டெடுத்து தனியே பயிற்சி கொடுக்க, ஒரு டெஸ்ட் தயாரிக்கச் சொல்லிவந்தது ஓர் வேண்டுகோள் அரசிடமிருந்து அவருக்கு. நண்பர் சைமனுடன் சேர்ந்து முதலாவது ஐ.க்யூ. டெஸ்டை அவர் தயாரித்த வருடம் 1905.

அதை அடியொற்றி ஏகப்பட்ட இன்டெலிஜென்ஸ் டெஸ்ட் வந்து விட்டன. பத்து வருடத்தில் அமெரிக்காவில் காலை வைத்த இவரது டெஸ்ட், ஸ்டான்ஃபோர்டு யுனிவர்சிட்டியால் வார்த்தெடுக்கப்பட்டு இன்றளவும் பாப்புலர்.

'இப்படி எல்லாம் ஒன்றும் புத்திசாலித்தனத்தை ஒரு நம்பருக்குள் கொண்டுவந்துவிட முடியாது, பல்வேறு திறமைகளை உள்ளடக்கியது அது, காலம் சூழ்நிலை மோடிவேஷன் போன்ற ஏகப்பட்ட காரணங்கள் அதை எளிதாக மாற்றிவிடும், ஒரே மாதிரி பின்னணியில் உள்ள குழந்தைகளையே ஒப்பிட இயலும்' என்ற கருத்தையும் அவரே விட்டு சென்றிருக்கிறார்.

உதா ஒன்று: பெற்றெடுத்து ஒரே வீட்டில் வளர்க்கப்பட்ட சகோதர சகோதரிகளின் ஐ. க்யூ., தத்தெடுத்து ஒரே வீட்டில் வளர்க்கப்பட்டவர்களைவிட அதிக ஒற்றுமையாக இருக்குமாம். இப்படி நிறைய கண்டுபிடித்திருக்கிறார்கள் இப்போது.

ஆக, ஐ க்யூவை ஒரு ஹைக்கூவாக சொன்னால்…

‘எண் பாட்டிலில்
அடைக்க முடியவில்லை அதை.
எண் கைப் பூதம்.’

Sunday, July 6, 2025

அணில் சொன்ன சேதி..

அணில் சொன்ன சேதி..
கே பி ஜனார்த்தனன் (‘சுட்டி விகடன்' 31-8-07)
அணில் சொன்ன சேதி கேட்டு மிருகங்கள் கவலையில் உறைந்து போய் நின்றன.
“நிஜமாவா?” என்றது மான்.
“ஐயையோ, அப்படியா?” என்றது முயல்.
“சே, என்னைவிட தந்திரசாலியா இருக்கிறாங்களே?” வியந்தது நரி.
யானை மட்டும் மீண்டும் அணிலிடம் விசாரித்தது.
“நீ கேள்விப்பட்டதை மறுபடியும் தெளிவாக சொல்லு!”
“இந்த பூமியிலே இனி வாழ முடியாது, செவ்வாய்க் கிரகத்திலே எல்லா வசதிகளையும் உருவாக்கிக்க முடியும், பூமிக்கு இனி குட்பை சொல்லிவிட வேண்டியதுதான்னு மனிதர்கள் பேசிக்கொண்டதை நான் கேட்டேன்,” என்று அணில் சொன்னதைக் கேட்டு மிருகங்கள் சோகத்தில் ஆழ்ந்து போயின.
சந்தனக் காட்டில் எல்லா மிருகங்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தன. நகரில் உள்ள விஞ்ஞானிகளின் ஆய்வுக்கூடத்திற்கு தினமும் சென்று அணில் தகவல்களை திரட்டி வரும். அணிலுக்கு அங்கு ராஜ மரியாதை!
விஞ்ஞானிகள் கொடுக்கும் பழம் கொட்டைகளைத் தின்றுவிட்டு அங்கேயே சுற்றி வரும். அப்போது காதில் விழும் சேதிகளை காட்டுக்கு வந்து மற்ற மிருகங்களிடம் சொல்லும். இதனால் அணில் மீது மற்ற விலங்குகளுக்கும் அலாதியான பிரியம். சில நாட்களாக அணில் சொன்ன சேதிகள் மற்றவைகளைக் கவலையடையச் செய்தது. வேற்றுக் கிரகங்கள் பற்றிய மனிதர்களின் ஆராய்ச்சி, அங்கே குடியேற அவர்கள் திட்டமிடுவது பற்றி விலங்குகள் பரபரப்பாக பேசிக்கொண்டன. இப்போது ஒரேயடியாக பூமியை விட்டு மனிதர்கள் செவ்வாயில் குடியேறப் போகிறார்கள் என்று அணில் சொன்னதைக் கேட்டு மிருகங்கள் கவலை கொண்டன.
“எதற்காக இந்த அழகிய பூமியை விட்டுப் போறாங்க?” வினவியது முயல்.
“அதுவா? அவங்க இந்த பூமியை ஏற்கனவே பாழ் படுத்திட்டாங்க. இயற்கையின் சுழற்சியையும் கெடுத்துட்டாங்க. இதுக்கு மேலே இங்கே இருக்கிறது ஆபத்துன்னு வேற இடத்துக்கு போறாங்க.”
“நாமும் அவங்களோடு போக முடியாதா?” கேட்டது மான்.
“ஊஹூம்! அவங்க தங்களைக் காப்பாத்திக்கத்தான் நினைக்கிறாங்களே தவிர நம்மளைப் பத்தி யோசிக்கவே இல்லை.”
“அப்போ நாம என்ன பண்றது?”
“நாம இங்கேயே அழிய வேண்டியதுதான்.”
அன்று முழுவதும் எந்த விலங்கும் எதுவுமே சாப்பிடவில்லை அடுத்த நாளும் அணில் ஆய்வுக்கூடத்திற்கு விரைந்தது சில தகவல்களுடன் மாலை காட்டுக்கு திரும்பியது.
“நம்மையும் அழைத்துச்செல்ல அவங்க தீர்மானம் பண்ணிட்டாங்க,” என்று அணில் சொன்னவுடன் விலங்குகள் ரொம்பவும் ஆர்வமாயின.
“அப்படியா?” என்று மயில் கேட்க, “உண்மையாகவே நம்மை அழைச்சிட்டுப் போறாங்களா?” என்றது ஆமை.
“ஆமா. அந்தக் கிரகத்திலும் நாம அவங்களுக்குத் தேவைன்னு நினைக்கிறாங்க, அதனாலதான்!”
“அட, புரிஞ்சிக்கிட்டாங்களா?”
“ஆமாம்! பொதி சுமக்கவும், பால் கறக்கவும் குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டவும்னு இப்படிப் பல விஷயங்களுக்கு அவங்களுக்கு நாம தேவை. அதனால நம்மையும் அங்கே கொண்டு போறாங்க. இனி நாம கவலைப்பட வேண்டாம்.” இதைக் கேட்டு எல்லா விலங்குகளும் மகிழ்ந்தன.
மறுநாள் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டே வந்தது அணில்
“அவங்களுக்கு நாம தேவைதான். ஆனால் நம்மை அழைச்சிட்டுப் போகாமலேயே அந்தத் தேவைகளைப் பூர்த்தி செஞ்சுக்குவாங்களாம்!” எல்லாரும் விழிக்க அணில் விளக்கியது.
“தங்களுக்குத் தேவையான விலங்குகளை குளோனிங் முறையில் உருவாக்கிக்குவாங்களாம்!”
அதைக்கேட்டு எல்லாரும் அசந்து போய் நிற்க, மூத்த விலங்கான யானை பேச ஆரம்பித்தது.
“எனக்கென்னவோ இது வருத்தப்பட வேண்டிய விஷயமா தெரியலே! நிஜமாகப் பார்த்தால் நாம் சந்தோஷப்படணும். இதைக் கொண்டாடணும்!”
“என்ன சொல்றீங்க?” கேட்டது நரி.
“இதோ பாருங்க, மனுஷங்கதான் பூமியைத் பாழ் படுத்தினது. அவங்க இங்கேயிருந்து போயிட்டா அப்புறம் இயற்கை தன் இயல்பு நிலைக்கு வந்துடும். பூமி மறுபடியும் ஒழுங்காயிடும். அதனால அவங்க நம்மையும் தங்களோட கூட்டிப்போக நினைத்தால்தான் நாம கவலைப்படணும்,” என்று யானை நிதானமாகச் சொன்னது.
இதைக்கேட்டு மற்ற விலங்குகள் மகிழ்ச்சி அடைந்தன.

யாரும் மறக்காத...


அந்தப் படத்தை யாரும் மறந்திருக்க முடியாது. ஜீவனாம்சம் கொடுக்கத் திணறிக் கொண்டிருக்கும் தன் காதலனை மணம் செய்து கொள்ள பணம் வேணும். கம்பெனியில் நம்பி ஒப்படைத்த நாற்பதினாயிரம் டாலரை அபேஸ் பண்ணிக் கொண்டு காரில் விரைகிறாள் அவள். மழை, புயல்.. மோட்டல் ஒன்றில் தங்க வேண்டியதாகிறது. நார்மல் அல்லாத நார்மன் தான் அதன் ஓனர். ஷவரில் குளிக்கும் போது மெல்லக் கொல்லப் படுகிறாள்... ஆம், அதேதான். ‘Psycho.’
ஹிட்ச்காக்கின் ஹிட் டாக்கி.
‘மெயின் பிக்சர் ஆரம்பித்தபின் யாரும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்’ என்று தியேட்டர்களில் அறிவிக்கப்பட்ட அந்தப் படத்தில் ஹீரோயினாக வந்தவர்...
Janet Leigh... இன்று ( July 6) பிறந்த நாள்.
அந்த சின்னதானாலும் முக்கியமான வேடத்திற்கு ஆஸ்கார் நாமினேஷன் பிளஸ் கோல்டன் க்ளோப் அவார்ட் கிடைத்தது. ஒரு வாரம் எடுக்கப்பட்டது அந்த ஷவர் காட்சி. நடிக்கும்போது தெரியவில்லை ஆனால் அதை திரையில் பார்த்ததும்? ஷவரில் குளிப்பதையே நிறுத்திவிட்டார்.
பிற்பாடு ‘Hitchcock’ என்று படம் எடுத்தபோது அதில் இவராக நடித்தது நடிகை Scarlett Johansson.
‘Houdini’ படத்தில் நடிக்கும்போது கணவர் Tony Curtis -ஐ விட இவர் பிரபலமாக இருந்தார். ஆனாலும் அவர் பெயரை முதலில் போட வைத்தார்.
தம்பதிகள் சேர்ந்து நடித்த படங்களில் முக்கியமானது The Vikings. இந்த தம்பதிக்கு பிறந்தவர் தான் Jamie Lee Curtis. அவரும் பிரபல நடிகை (‘True Lies’)
அந்த ப்ரஃபசரிடம் படிக்கிற மாணவி ஒருத்தி அவரை முத்தமிட்டுவிட, பார்க்கும் அவர் மனைவி பத்ரகாளியாகிறாள். தப்பிக்க, தான் ஒரு சீக்ரட் போலீஸ் என்று ஒரு பொய் சொல்கிறார். அது யாரடா என்று நிஜப் போலீஸ் துரத்த… காமெடி ரகளை! கணவர் டோனியுடன் நடித்த ‘Who Was That Lady?’
பிரபல டைரக்டர் நடிகர் Orson Welles இன் ‘Touch of Evil’ படத்தில் நடித்தது பெருமிதம் தரும் அனுபவம்.

கவலைகளை உன்னிடத்தில் ...


பேச்சிழந்த சிறுவன் ராமு... நம்பிக்கையிழந்த தந்தை ஜெமினி... தாளாமல் கடலில் விழலாம் என்று அலைகளில் இறங்க... தூரத்தில் ஒலிக்கிறது பாடும் குரல், கோவிலிலிருந்து.
“கண்ணன் வந்தான்.. அங்கே கண்ணன் வந்தான்!
ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்."
கால்கள் தம்மையறியாமல் இழுத்துச் செல்கிறது சன்னதிக்கு."பசிக்கு விருந்தாவான், நோய்க்கு மருந்தாவான், பரந்தாமன் சன்னதிக்கு!"
அங்கே குருக்கள் நாகையா பாடிக் கொடிருக்கிறார்.
"..கேட்டவர்க்கு கேட்டபடி கண்ணன் வந்தான்!
கேள்வியிலே பதிலாக கண்ணன் வந்தான்!"
கண்ணன் எப்படியெல்லாம் வந்தான் என்பதை கண்ணதாசனைவிட யாரால் அத்தனை அழகாகச் சொல்ல முடியும்?
எங்கோ ஒரு மதகு திறந்து, ஒரு திவலை விடாமல் மனக் கவலை வடிந்துவிட்ட மாதிரி…தானாய் ஓர் ஊற்று சுரந்து அன்பு வெள்ளம் நிறைந்து பெருக்கெடுத்தாற்போல உணர்ந்து…
இப்போது ஜெமினியும் சேர்ந்து பாடுகிறார்.
"கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும்!
காவல் என்னும் கைநீட்டிக் காக்க வேண்டும்!"
கனிவும் ஏக்கமுமாக அவர் குரலும் (டி.எம்.எஸ்.) அன்பும் ஆதரவுமாக இவர் குரலும்... (சீர்காழி)
உருகி உருகி பாடுகிறார்கள். மருகி மருகி கேட்கிறோம்.. படம்? 'ராமு.'
அந்தக் கடைசி வரிகள்! விஸ்வநாதனின் இசை இங்கே விஸ்வரூபம் எடுக்கிறது.
"கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா!
கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா..!"
எல்லோருடைய உள்ளமுமே வேண்டுவதல்லவா அது!

><><><

Tuesday, July 1, 2025

இசை ஜீனியஸ்...


‘பக்கயிந்தி அம்மாயி’.. 1953 இல் வந்த தெலுங்குப் படம். எதிர் மாடியில் தரிசனம் தரும் அஞ்சலி தேவியோ கானப் பிரியை. காதலிக்கும் ரேலங்கிக்கோ பாட வராது. நண்பர்கள் ஒரு பாடகரை அழைத்து வருகிறார்கள். கட்டிலில் அமர்ந்து ரேலங்கி வாயசைக்க, கட்டிலுக்குக் கீழே அமர்ந்து ஆக்சுவலாகப் பாடுவார் அந்த பாடகர். பாடகராக நடித்ததும் பாடியதும்..
நம் ஏ.எம்.ராஜா… இன்று பிறந்த நாள்!
தென்னிந்திய சினிமாவில் தென்றலாக நுழைந்தவர்… தன் இசையால் தென்றலை வீசவும் செய்தவர். இவரது பாடகர் பகுதியை பற்றி அதிகம் சொல்லவா இசையமைப்பாளர் பகுதியை பற்றி அதிகம் சொல்லவா? மயக்கத்தைத் தவிர்க்க முடியாது, இரண்டிலும் ஏகத்துக்கு சாதித்திருப்பதால்.
'கல்யாண பரிசு' படத்தின் வெற்றிக்கு ஒரு தூணாக நின்றது, பட்டுக்கோட்டையாரின் எட்டுப் பாடல்களுக்கு ஏ.எம்.ராஜா தந்த இசைப் பரிசு.
“காலையும் நீயே.. மாலையும் நீயே..” என்று கேட்டுக்கொண்டே இருக்கலாம் இன்றைக்கும் அதன் பாடல்களை. ஆம் இசைக்கென்றே அவதரித்த படம்.. ‘தேன்நிலவு.’
கர்நாடக இசை, மேற்கத்திய இசை இரண்டும் இரண்டு கைகளில்! ஆடிப்பெருக்கின் இசை சொல்லும். “தனிமையிலே இனிமை காண முடியுமா..” “காவேரி ஓரம்…”
இவருடைய progression (பல்லவிக்கும் சரணத்துக்கும் இடையே வரும் இசை) கனகச்சிதமாக, மிகச் சரியான வாத்தியங்கள் கொண்டு ஏராளம் வயலின்களுடன் ஒரு முழுமையான orchestration ஆக இருக்கும். “மலரே மலரே தெரியாதோ…” (தேன் நிலவு) பாடலிலும் சரி, “புரியாது.. வாழ்க்கையின் ரகசியம் புரியாது..” (ஆடிப்பெருக்கு) பாடலிலும் சரி அதைத் தெளிவாகப் பார்க்கலாம். ஒரு சின்ன மாற்றம் கூட செய்வதை விரும்ப மாட்டார் என்பார்கள் என்றால் அந்த அளவு ஒரு பர்ஃபெக் ஷனுடன் அது இருக்கும்.
பி.பி. ஸ்ரீனிவாஸின் மிக இனிமையான பாடல்களில் ஒன்று இவர் இசையில் அமைந்த “பண்ணோடு பிறந்தது தாளம்…” (விடிவெள்ளி) சீர்காழி கோவிந்தராஜனின் முத்துக்களில் ஒன்று “அன்னையின் அருளே வா..” அதுவும் இவர் இசையமைத்ததே. (‘ஆடிப்பெருக்கு').
இசையமைத்த ‘அன்புக்கோர் அண்ணி’ யில்தான் அந்த ஒரு நாள் விடாமல் ஒலித்த சூப்பர் ஹிட். “ஒரு நாள்.. இது ஒரு நாள்.. உனக்கும் எனக்கும் இது திருநாள்..”
“ஆடாத மனமும் ஆடுதே..” என்றிவர் பாடினால் ஆடாத மனமும் ஆடும்! “பாட்டு பாட வா..” என்று பாடினால் பாடாத வாயும் பாடும். “வாராயோ வெண்ணிலாவே..” பாடலின் அந்தக் குழைவு! “அதிமதுரா.. அனுராகா..” பாடலோ அதிமதுரம்! “பிருந்தாவனமும் நந்தகுமாரனும்..” விருந்தானது காதலர்களுக்கு அப்போது. “எல்லாம் உனக்கே தருவேனே.. இனிமேல் உரிமை நீதானே…” பெண்களின் மனதை அள்ளிக் கொண்டது.
வளமான குரல் இருந்ததால் வாய்ப்புக்காக ரொம்ப சிரமப்படத் தேவை இருக்கவில்லை. எடுத்த எடுப்பிலேயே ஜெமினி படம், கே.வி. மகாதேவனின் ‘குமாரி' என்று பாட ஆரம்பித்து ஹெலிகாப்டராக உயர்ந்தார். இங்கிருந்து இந்திக்குப் போன முதல் பாடகரும் இவர்தான்.
பிரிக்க முடியாதது? என்று கேட்டால் துள்ளிக் குதித்துக் கொண்டு வரும் பதில்: ஜெமினியும் இவர் குரலும். பாடகரே நடிகராக இருந்த காலம் மாறி நடிக்க மட்டும் நடிகர்கள் வந்தபோது ஜெமினி கணேசன் குரலின் இனிய பாதியாக இவர் இருந்ததை மறக்க முடியுமா? வேறு யாருக்காவது ராஜா பாடினால், 'அட, ஜெமினி இந்த நடிகருக்கு பின்னணி பாடியிருக்கிறாரே?' என்று ஒரு கணம் நாம் தடுமாறும் அளவுக்கு!
“கண்களின் வார்த்தைகள் புரியாதோ..” (களத்தூர் கண்ணம்மா) “தங்க நிலவில் கெண்டை இரண்டும்..” (திருமணம்) “வாடிக்கை மறந்ததும் ஏனோ..” என்று ராஜா-ஜெமினி இனிமை லிஸ்ட் பெருமை மிக்கது.
எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினி, என்டிஆர், நாகேஸ்வரராவ், ராஜ்குமார், சத்யன், பிரேம் நசீர் என்று நாலு மொழி நாயகர்களின் நாவசைப்புக்கும் பாடிக்கொண்டிருந்தவர். சிவாஜிக்கு “என்ன என்ன இன்பமே..” (அன்பு) “இடை கையிரண்டில் ஆடும்..” (விடிவெள்ளி) “திரைபோட்டு நாமே..” (ராஜா ராணி) “யாழும் குழலும் உன் மொழி தானோ..” (கோடீஸ்வரன்) என்றால் எம்ஜிஆருக்கு “கண்மூடும் வேளையிலே..” (மகாதேவி) “மாசிலா உண்மை காதலே..” “பேசும் யாழே பெண்மானே…” (நாம்) “மயக்கும் மாலைப் பொழுதே நீ போ..” (குலேபகாவலி)
அதுபோன்ற ஒரு மதுரமான குரலை ஆண்டவன் தேர்ந்தெடுத்து அவருக்குக் கொடுத்தது, வேறென்ன, நம்மைச் சில வருடங்கள் மகிழ்விக்கத்தான்! எத்தகைய சால மென் குரல் என்பதை எந்த பின் வாத்தியமும் இல்லாமல் வெறும் குரலில் ஆரம்பிக்கும் இவரது சில பாடல்களில் உணர்கின்றோம். “கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்..” (மீண்ட சொர்கம்) என்று ஆரம்பிக்கும் போது! “காலையும் நீயே மாலையும் நீயே..” (தேன் நிலவு) “சிங்காரப் பைங்கிளியே பேசு..” (மனோகரா)
‘இல்லற ஜோதி’யில் “களங்கமில்லா காதலிலே..” பாடலில் “நினைவிலே பேதமில்லை..” என்று இவர் என்ட்ரி ஆகும்போது ஏற்படும் சிலிர்ப்பு இருக்கிறதே, அதை உலகில் வெகு சில குரல்கள் தான் கொடுக்க முடியும்! அதேபோல் “இதய வானின் உதய நிலவே..” பாடலில் “இருளகற்றும் ஒளியென்றென்னை எண்ணும் நீயாரோ..” என்றும்! "தேன் உண்ணும் வண்டு.." பாடலில் "வீணை இன்ப நாதம்.." “மயக்கும் மாலைப் பொழுதே நீ போ..” வில் அந்த மயக்கும் என்ட்ரி “பன்னீர் தெளிக்க பனி பெய்யுமே..”
ஜாலி பாடல்களிலும் கலீர் கலீரென ஒலிக்கும் குரல்.. “கொடுத்துப் பார் பார் உந்தன் அன்பை..” “ஓஹோ எந்தன் பேபி..”
எம். எல். வசந்தகுமாரியிலிருந்து (“இன்பக் குயில் குரல் இனிமை..” - மனிதனும் மிருகமும்) ஜமுனாராணி வரை (“சந்தோஷமே தான் சங்கீதமாக..” - சந்தானம்) சேர்ந்து பாடியவர். ஜி. ராமநாதன் முதல் சங்கர் கணேஷ் இசையில் வரை…
ராஜா - ஜிக்கி தாம் ஐம்பதுகளில் பிரபல பின்னணி ஜோடி. “அழகு நிலாவின் பவனியிலே..” இந்தப் பாடலைத் தொடர்ந்து வாழ்விலும் இணைந்தது அந்த ஜோடி.
ஒரிரு வரி பாடினாலும் உள்ளம் கவரும் குரல். “வெண்ணிலா நிலா.. என் கண்ணல்லவா கலா..” என்று இரு வரிதான் பாடுவார் ‘ஆரவல்லி'யில் “சின்னப் பெண்ணான போதிலே..’’ போதாதா? சில பாடல்களை இவர் பாடினால் கேட்போருக்கு ஏற்படும் உணர்வு மிகப் பிரத்தியேகமானது. அதற்கு உதாரணம் “என் நெஞ்சின் பிரேம கீதம்..” (பணம் படுத்தும் பாடு)
.எத்தனைக்கெத்தனை காதல் பாட்டுக்கு மன்னனோ அத்தனைக்கத்தனை சோகப்பாட்டுக்கும் அரசன். “மின்னல் போல் ஆகும் இந்த..” “அன்பே.. நீ அங்கே..” “என் காதல் இன்பம் இதுதானா..” “அன்பே வா..அழைக்கின்றதெந்தன் மூச்சே..” “உன்னைக் கண்டு நான் வாட…” எல்லாவற்றுக்கும் மேலே மனம் பிழியும் சோகம் வழியும் அந்தப் பாடல்.. “வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே..” (மல்லிகா)
Re entry சில ஹிட்கள் பாடத் தந்தது. 'ரங்கராட்டினம்' படத்தில் வி. குமார் இசையில் “முத்தாரமே உன் ஊடல் என்னவோ..” சங்கர் கணேஷ் இசையில் 'அன்பு ரோஜா'வில் “ஏனடா கண்ணா..”
“மலரே ஓ மலரே..” வெகு காலத்துக்குப்பின் இவர் இசையில் வந்த ‘வீட்டு மாப்பிள்ளை’யில் அந்த அசத்தும் பாடல்! 'நீ என் மலரல்ல..' எனும்போது என்னவொரு எழுச்சியும் வேகமும் அந்தக் குரலில்!
‘அம்மா என்னு ஸ்திரி’ மலையாள படத்துக்கு இசையமைத்தார். ‘பார்யா’ ‘அடிமைகள்’.. என்று ஜி. தேவராஜன் இசையில் ஏராளம் பாடல்கள் பாடினார் மலையாளத்தில்! “தாழம்பூ மணம் உள்ள தணுப்புள்ள ராத்திரியில்..” அங்கே சூபர்ஹிட்.
சில பாடல்களை இவர் தான் பாட முடியும் அத்தனை மென்மையாக… “பூவில் வண்டு போதை கொண்டு..” (அன்பு எங்கே) “போதும் உந்தன் ஜாலமே..” (கடன் வாங்கி கல்யாணம்) “புதுமை நிலா அங்கே..” (கோமதியின் காதலன்)
ஒரு பாட்டின் உருக்கத்தை பாடகர் எத்தனை அப்லிஃப்ட் செய்ய முடியும்? சி. என். பாண்டுரங்கன் இசையில் ‘எதிர்பாராதது' படத்தில் இவர் பாடிய “சிற்பி செதுக்காத பொற்சிலையே..” யைக் கேளுங்கள்.
மிகப் பெரும் மியூசிக் டைரக்டராகத் திகழ்ந்திருக்க வேண்டியவர். தன்னுடைய straightforwardness காரணமாக வாய்ப்புகளைத் துறந்ததாக சொல்லுவார்கள். இழந்தது நாம்.
><><

ஒரே வருடத்தில் ...


ஏழு வயது இருக்கும் அந்த சிறுமிக்கு. கார் ஒன்று மோதியதில் இடுப்பில் எலும்பு முறிவு. நடப்பதே கஷ்டம் என்றார் டாக்டர். பொய்யாக்கி ஒரே வருடத்தில் நடந்து காட்டினார். ஆனாலும் உயரம் குறைந்துபோன ஒரு காலை, ஷூவில் உயரம் வைத்து சரி பண்ணி நடக்க வேண்டியதாயிற்றாம். தோழிகளின் கிண்டல் எத்தனை வேதனையாக இருந்திருக்கும் அந்த பெண்ணுக்கு? ஆனால் பின்னாளில் அவரொரு மூவி ஸ்டார் ஆனபோது அதுவே அவரது அழகிய பாணி ஆகிவிட்டது.

அவர் Susan Hayward... ஜூன் 30. பிறந்தநாள்!
உலகம் முழுவதும் சொல்லப்படவேண்டிய உண்மைக் கதை இது என்ற ஆல்பர்ட் காம்யூவின் அழுத்தமான முன்னுரை வரிகளுடன் ஆரம்பிக்கிறார்கள் அந்தப் பிரபல படத்தை. ‘I Want to Live.’ வேதனையான குழந்தைப்பருவம், வீணான மணவாழ்க்கை, வேண்டாத சகவாசம் , எல்லாமாகச் சேர்ந்து அவளை ஒரு கொலைக் குற்றத்தில் சிக்க வைக்கிறது. மரண தண்டனை. நாற்காலியில் அமரும் கடைசி நிமிடம் வரை அவளது போராட்டம்.. அவள் படும் பாடு.. அவளுடன் சேர்ந்து நாம் படும் பாடு.. அத்தனை அற்புதமாக நடித்திருந்தார் சுஸன். அதுவரை நாமினேட் ஆவதும் நழுவிப் போவதுமாக நாலு முறை இருந்த ஆஸ்கார், நச்சென்று வந்து விழுந்துவிட்டது கையில். தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம் பார்க்க வேண்டிய படங்கள் லிஸ்ட் லிஸ்டில்.
'Gone with the Wind' படத்திற்காக நாடெங்கும் நடந்த நாயகி தேர்வில் தோற்றவர். ஆனால் தேர்வான Vivien Liegh பெற்ற நட்சத்திர அந்தஸ்தை அடுத்த பத்து வருடங்களிலேயே இவரும் அடைந்துவிட்டார். நடிப்பும் க்ளாமரும் நல்லதொரு விகிதத்தில் கலந்து அளித்த நடிகை.
The Conqueror படத்தில் நடிக்கும் போதுதான் கேன்சர் வந்து இவரைக் கொண்டது. அந்தப் படத்தில் நடித்த JohnWayne -ம் டைரக்டரும் கேன்சரிலேயே முடிவு கொண்டனர்.
Quotes?
‘வாழ்க்கை ஒரு போராட்டம் என்பதை மிகச் சின்ன வயதிலேயே அறிந்துகொண்டேன் நான். குடும்பம், சுற்றுப்புறம் எல்லாமே வறுமை. வறுமை. வாழ்க்கையின் எல்லா அவலங்களில் இருந்தும் நான் விடுபட, சினிமா தியேட்டர் தான் ஒரே வழியாக இருந்தது. நிறையப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று அப்போது தான் தீர்மானித்தேன். ஒரு உறுதியான பெண்மணியாக நான் உருவெடுத்தது அங்கேதான்.’
‘ஓய்வாக உட்கார்ந்ததே இல்லை நான். அது எப்படி என்றுகூட எனக்குத் தெரியாது. தெரிந்துகொள்ள விரும்பவும் இல்லை. வாழ்க்கை மிகச் சின்னது, ஓய்வெடுக்க முடியாத அளவுக்கு!’

Sunday, June 29, 2025

நாவல் அறிமுகம்...


‘வைரமாலை.’ 1954-இல் வெளியான படம்.
“கூவாமல் கூவும் கோகிலம் .. “ என்று பத்மினியுடன் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்த கண்ணதாசன் பாடலை பாடியபடியே வந்த அந்த நாயகர் பின்னாட்களில் பிரபல வில்லனாக வருவார் என்று எதிர்பார்த்திருப்பார்களா? ஆர்ப்பாட்டம் இல்லாமல் அலட்டிக்கொள்ளாமல் வரும் பாலிஷ் வில்லன்...
ஆர். எஸ் மனோகர். இன்று பிறந்த நாள்!
அறிமுகமான படம் ‘ராஜாம்பாள்’. ஜே. ஆர். ரங்கராஜுவின் அந்தப் பிரபல நாவல்தான் கதை. கல்கியின் ‘பொய்மான் கரடு’ படமானபோது பதில் அதிலும் நாயகன்.
நல்லவனாக சில படங்களில் நடித்து முடித்துவிட்டு வில்லன் வேடத்திற்கு நகர்ந்தார் மாடர்ன் தியேட்டர்ஸின் அபிமான நடிகர். அவர்களின் ‘வண்ணக் கிளி'யில்தான் வில்லனாக மாறினார்.
மரப்படிகளில் இறங்கி நின்று புறங்கையில் மது பாட்டிலைத் தட்டி உடைத்தபடி என்ட்ரி தருவாரே பிச்சுவாப் பக்கிரியாக ‘வல்லவனுக்கு வல்லவன்’ படத்தில்.... அந்த நல்லவனுக்கு நல்லவன் ரோலில் அசத்தியது அடுத்த திருப்பு முனை. அந்தப் பாடல்! 'பாரடி கண்ணே கொஞ்சம்... பைத்தியமானது நெஞ்சம்...'
திரை அவருக்கு இரண்டாவதுதான். முதலிடம் மேடை. மேடையில் பிரம்மாண்டம் என்றால் அது மனோகர்தான்! ‘நாடகக் காவலர்' மனோகரால் நன்கு அறியப்பட்ட புராண சரித்திர புருஷர்கள் நிறைய. 1800 தடவைக்கு மேல் நடிக்கப்பட்ட ‘இலங்கேஸ்வரன்’ அதில் மிகப் பிரபலம். தவிர ‘துரோணர்', ‘துரியோதனன்', 'சூரபத்மன்', 'சாணக்கிய சபதம்', 'இந்திரஜித்'...
கண் மூடித் திறப்பதற்குள் நாடகக் காட்சி மாறுவது ஸ்பெஷாலிட்டி என்றால் நாடகத்தில் சினிமாஸ்கோப் இவருடைய அறிமுகம். திரையிலும் சரி மேடையிலும் சரி அந்தக் கணீர்க் குரலும் பளிங்குத் தெளிவு உச்சரிப்பும் அவருக்கு ஒரு தனி இடத்தை கொடுக்கத் தவறவில்லை.
‘நான்’, ‘சொர்க்கம்’ (இரட்டை வேடத்தில் ), ‘குழந்தைக்காக’, ‘அடிமைப்பெண்' ‘நான்கு கில்லாடிகள்' சந்திரபாபுவின் ‘தட்டுங்கள் திறக்கப்படும்'.... பர்ஃபெக்ட் பர்ஃபாமன்ஸ் தந்த படங்கள் நிறைய. இந்தி ராஜ் குமார் போல இவர் நடை ஒரு தனி ஸ்டைல்.
குறிப்பாக சொல்லணும்னா உடனே தோன்றுவது ‘ராஜா’ தான். சிவாஜி உண்மையில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று பாஸ் ரெங்க ராவிடம் நிரூபிக்க மனோகர் படும் பாடு! ‘ஒண்ணு மட்டும் ஞாபகத்தில் வெச்சுக்குங்க. அந்தத் தாயை நான் கடத்தி வெச்சிருக்கிறதாலதான் நான், நீங்க, எல்லாரும் இப்போ உயிரோட இருக்கோம்!’ என்று அழுத்தமாக சொல்வதும்… ‘ஒரே ஒரு சந்தர்ப்பம் கொடுங்க பாஸ்’னு கேட்டு ரங்கராவ், ‘சரி விடுங்கடா அவனை’ன்னதும் பிடித்திருந்த அடியாட்களிடமிருந்து விடுவித்த கைகளை உதறிக் கொண்டு, தளர்ந்திருந்த டையை முறுக்கிக் கொண்டு, கோட்டை சரி செய்தபடியே நடந்து சிவாஜியிடம் பேசியபடியே பண்டரி பாயை அடிக்க ஆரம்பிப்பதும், அந்த முயற்சியிலும் தோற்றுவிட... அந்த நெடு நீளக் காட்சி நெடுக தான் சொல்வதை நிஜமாக்க அவர் துடிக்கிற நடிப்பு க்ளாஸ் ரகம்.

Saturday, June 28, 2025

தோற்காத கதை...

அவரு எவ்வளவு பெரிய ப்ரொடியூசர்.. ஆனா அவரை, 'நம்ம தேவர் அண்ணன், நம்மள நெனச்சு படம் எடுத்திருக்கார், நாலு நல்ல விஷயம் காட்டுவார்'னு நம்பி படக் கொட்டகைகள் நோக்கிப் படையெடுப்பார்கள் ஜனங்கள். ஏமாந்ததே இல்லை. இருவருமே!
சாண்டோ சின்னப்ப தேவர்… இன்று பிறந்த நாள்!
தம்பி உடையான் படமெடுக்க அஞ்சான்னு சொல்ற மாதிரி டைரக் ஷனைப் பார்த்துக்கொள்ள ஒரு தம்பி. எம்.ஏ.திருமுகம். ஒரு ஃபிரேமில் கூட அவர் கை தெரியாத படி காட்சிகள் ரொம்ப இயல்பாக மலரும், கதையை மட்டும் பகரும். வர்மாவின் காமிரா வழுக்கிக் கொண்டு நகரும்.
முருகன் மேல் அவர் வைத்த நம்பிக்கைக்கு கொஞ்சமும் குறையாதது கதை மேல் அவர் வைத்திருந்ததும். பாருங்களேன். ‘தெய்வச் செயல்’ என்று ஒரு படம் எடுத்தார். நாலு யானைகளை வளர்க்கும் செல்வந்தர் சுந்தர ராஜன் நொடித்துப் போனபோது தானும் வாழ்ந்து அவற்றையும் வாழ வைக்கும் அந்தக் கதை நன்றாகப் போகவில்லை.
எப்படித் தோற்க முடியும் இந்தக் கதை என்று யோசித்தார். எழுதினார் அதற்கு இன்னொரு திரைக்கதை. அப்போதுதான் டாப்புக்கு வந்து கொண்டிருந்த பிரபல கதாசிரியர் Salim - Javed -இடம் சீன்கள்எழுதி வாங்கி ஹிந்தியில் வெளியிட்டார். ‘ஹாத்தி மேரே சாத்தி’. ஆத்தி, அது கலக்கிற்று வசூலை. குலுக்கிற்று பாலிவுட்டை. அதை அப்படியே தமிழிலும்! ‘நல்ல நேரம்.’ இங்கேயும் ஹிட்.
டீம் வைத்துக்கொண்டு கதை டிஸ்கஷன் செய்யும் முறையை அனேகமாக இவர்தான் கொண்டு வந்தார். Tell the gist. Get the best. Leave the rest. That's it.
பக்தி சிரத்தையுடன் தியேட்டரில் நுழைந்ததும, பரமன் லீலைகள் பார்த்து பரவசத்துடன் வெளிவர முடிந்தது இவர் காலத்தில்தான்.
ஆஹா, வரிசையாக அவர் தந்த எம் ஜி ஆர் படங்கள்! ஜஸ்ட் பதினோரு நாளில் முடித்துவிட்டார் ‘முகராசி' ஷூட்டிங்கை.
எந்தப் பிராணியைத்தான் கூர்ந்து கவனித்து இருப்போம்? இதயம் என்று அதற்கும் ஒன்று இருக்கும் என்று எண்ணி இருப்போம்? ஆனால் ‘ஆட்டுக்கார அலமேலு’வையும் ‘கோமாதா என் குலமாதா’வையும் பார்த்ததும் நம் அபிப்பிராணியமே எத்தனை மாறிப் போச்சு!
நம்ம எல்லாருக்கும் நல்லாத் தெரிஞ்ச நம்ம சின்னப்ப தேவரைப் பத்தி நாஞ்சொல்ல தனியா என்ன இருக்கு? மறக்க முடியாத மனிதர்!


><><><

Friday, June 27, 2025

ஆர்ப்பரிக்கும் இசை....


அப்பாவைத்தான் புக் பண்ண வந்தார் மெஹமூத் தன் படத்துக்கு இசையமைக்க. ஆனால் அவரிடம் தேதி இல்லை. ஹாலில் தபேலா வாசித்துக்கொண்டிருந்த மகனைப் பார்த்தார். சட்டென்று அவரை புக் செய்து விட்டார். இசைப் பேரலையொன்றை இயக்கி விட்டிருக்கிறோம் என்று அப்போது அவருக்குத் தெரியாது. படம் ‘Chote Nawab.' பாடல்கள் வெற்றி.

ஆர்ப்பரிக்கும் இசை! ஆர் அது? என்று எல்லாரும் பார்க்க ஆரம்பித்த அவர் ஆர். டி. பர்மன். இன்று பிறந்த நாள்!
அந்தக் குழந்தை முகம்! அதன் பின்னே ஒரு இசைமேதை.. ‘Pancham’ இவர் செல்லப் பெயர். அஞ்சாவது நோட். பஞ்சமி.
மெஹ்மூதின் அடுத்த ‘Bhoot Bangla’ வில் கலக்கிவிட்டார். ‘Aavo Twist Karen…’’வும் ‘Pyar Karta Jaa..’ வும் இளைஞர்களை அப்படி ஈர்த்தன என்றால் ‘O Mere Pyar Raja...’ உருக வைத்தது.
அப்புறம் ‘மூன்றாம் வீடு’ (Teesri Manzil) வந்தது. முதலிடத்துக்கு இவர் போனார். ‘Aajaa Aajaa…’ என்று ஷம்மி கபூர் பாட, ரசிகர்கள் ஆட, இசை உலகம், 'இது என்னடா புது மாதிரி துள்ளலிசையென்று துள்ளி எழுந்து உட்கார்ந்தது. ‘தம் மோரா தம்… ‘ வந்ததும் 1971 -ன் இசைக் கோப்பையைத் தனதாக்கிக் கொண்டது. ராஜேஷ்கன்னா வந்து சேர்ந்து கொள்ள கிஷோர் குமாருடன் ஹிட்டுக்களை இசைத் தட்டுக்களில் அடுக்கினார்.
Electronic Rock -ம் Jazz -ம் அவர் இசையில் விளையாட, சங்கர் ஜெய்கிஷன், நய்யாரெல்லாம் தந்து கொண்டிருந்த கலகலப்பான இசையை அடுத்த படிக்கு எடுத்துச் சென்றார்.
அல்ரெடி ‘Chalti Ka Naam Gadi’ யிலிருந்தே அப்பாவின் சில படங்களுக்கு அசிஸ்டன்ட் ஆக வேலை பார்த்தவர். தேவ் ஆனந்தின் பிரபல பாடல் ‘Hey Apna Dil..’ பாட்டில் மவுத் ஆர்கன் வாசித்திருக்கிறார்.
சின்ன வயதில் நண்பர்களுடன் சினிமா பார்த்துக்கொண்டிருந்தபோது அந்தப் பாடலை கேட்டதும் துள்ளி எழுந்து ஹேய், அது என் டியூன் என்று ஆர்ப்பரித்தார். இவர் வாசித்துக்கொண்டிருந்த ட்யூனைக்கேட்ட அப்பா அதை தன் படத்தில் போட்டிருக்கிறார். அதைவிட வேறு என்ன ஆனந்த அங்கீகாரம் வேண்டும் அவருக்கு?
9 வயதில் இவர் போட்ட டியூனைத்தான் ‘Aye Meri Topi…’ என்று தேவ் ஆனந்த் பாடினாராம் ‘Funtoosh’ படத்தில். Pyaasa படத்தில் வந்த ‘Sar Jo Tera Chakraya…’ பாடலும் இவர் ஆரம்பப் பாடல்களில் ஒண்ணுன்னு சொல்வாங்க.
ஒவ்வொருத்தர் டேஸ்டுக்கும் அவரிடம் ஒரு பாட்டு இருக்கும். உங்களுக்கு ‘Tere Bina Zindagi Se Koi...’ பிடிக்கும் என்றால் எனக்கு 'Goyake Chunanche..’ உயிர். அவளுக்கு ‘O Mere Sona Re..’ ஃபேவரிட் என்றால் இவனுக்கு ‘Hum Dono Do Premi..’ பிரியம். ‘எப்படி போட்டேன் என்று தெரியாது, அதுவாக அமைந்தது..’ என்பார் எப்போதும் அடக்கமாக.
நீங்களே பாடுங்க என்று ரமேஷ் சிப்பி சொல்லி இவர் பாடிய ‘மெஹபூபா மெஹபூபா…’ அத்தனை பெரிய ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கவில்லை. அதற்கொரு குரல் வைத்திருந்தார் என்றால் அமிதாப்புக்கு இன்னொரு குரல் வைத்திருந்தார். ‘Pukar’ படத்தில்அமிதாப், ரந்திர் சேர்ந்து பாடும் அந்த ‘Buchke Rehna Re Baba..’ பாடலில் எது கிஷோர் எது ஆர்.டி. என்று கண்டு பிடிப்பது மகா கடினம்.
70 களில் வருஷா வருஷம் நாமினேஷன் பெற்றாலும் filmfare அவார்டை வாங்கியது 1983 இல் கமல் நடித்த ‘Sanam Teri Kasam’ படத்தில் தான்.
அப்படி ஒரு டைட்டில் இசையை யாருமே போட்டதில்லை. திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டே இருக்கலாம். ஆம், ‘ஷோலே’ படத்தில் வரும் இசையைத்தான் ஷொல்கிறேன். ரயில்வே ஸ்டேஷனில் ஆரம்பித்து மெல்ல அந்தக் கிராமம் முழுவதையும் சுற்றிக் காட்டும் அந்த இசை படத்தின் tone -ஐ அற்புதமாக கொடுத்துவிடும்.
எப்போதும் இசையே சிந்தனை. ஃப்ளைட்டில் சென்றுகொண்டிருந்தபோது முணுமுணுத்த டயூனை கவனித்த ராஜேஷ் கன்னா பிற்பாடு ஞாபகமாக அதைக் கேட்டு வாங்கினாராம் ‘Kati Patang’ படத்துக்காக. பாடல், ‘Yeh Jo Mohabbat Hai..’
வித்தியாசமாக எதையாவது வழங்கிக் கொண்டே இருப்பதுதான் அவரது இசை. ‘தனியே நாம் எதுவும் செய்ய விட்டால் தனியாக நம்மை கவனிக்க மாட்டார்கள்,’ என்பாராம். தேவ் ஆனந்தின் ‘Ishq Ishq Ishq’ படத்தில் ‘Wallah Kya Najara Hai..’ பாடல் பல்லவி முதல் வரியை அதே படத்தின் வேறிரு பாடலின் சரணங்களில் அழகாகக் கொண்டு வந்து முடிச்சிட்டிருப்பார்.
‘ஆர். டி. பர்மன் இன்றைக்கு இருந்தால் நான் அவர் பக்கத்திலேயே உட்கார்ந்து அவர் இசையமைப்பதைப் பார்த்துக் கொண்டே இருப்பேன் நாளெல்லாம்,’ என்கிறார் பிரபல பாடகர் அர்மான் மாலிக்.
Amar Prem படத்தில் அப்படி ஒரு கிளாசிக்கல் மியூசிக் கொடுத்திருப்பார். அந்த ‘Raina Beet Jaye..’ பாடலை ஆரால் மறக்க முடியும்?
கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்பதுபோல இவரது கார் கதவும் கானம் இசைக்கும். சோடா பாட்டில்களை உடைத்து, ‘Churaliya..’ (Yadon Ki Bharat) பாடலுக்கும், சீப்பை மேஜையில் உரசி ‘Tere Samne Wale... ‘ (‘Padosan’) பாடலுக்கும் என்று கையில் கிடைக்கிற வஸ்துக்களிலிருந்து விதவிதமான தாளங்கள்...மூச்சு வாங்குவதைக் கூட பாடலின் வீச்சு ஆகியிருப்பார், ‘Piya Tu...’ (‘Caravan’) பாடலில்! ‘Hoga Tumse Pyare Kaun..’ (Zamane Ko Dhikana Hai) பாடலில் ஊட்டி ரயில் விசிலை உசிதமாகக் கொடுத்திருக்கும் அழகே தனி!
கிஷோர்குமார்தான் இவரது ஆஸ்தான பாடகர் என்றாலும் ரபியின் மறு வருகையை ஜொலிக்க வைத்த பாடல்களில் பல இவருடையது. ‘Zamane Ko Dikhana Hai’ யில் வரும் ‘Pucho Na Yaar Kiya Hua ..’ பாடல் ஒன்று போதுமே?
‘அந்தப் பெண்ணை பார்த்தேன்.. அவள் ஒரு மலரும் ரோஜாவை போலே... கவிஞனின் கனவைப்போலே... காட்டின் மானைப்போலே... பௌர்ணமி இரவைப்போலே... வீணையின் ராகம்போல... காலையின் அழகைப்போலே… அலைகளின் விளையாட்டைப்போலே... ஆடும் மயிலைப்போலே... பட்டு நூலைப் போலே…’ என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போகும் அந்த ‘1942, A Love Story’ யின் ‘Ek Ladkhi Ko Dekha..’ பல்லவிகளை மட்டும் அடுக்கி என்னவொரு இசைச் சிலிர்ப்பு! Filmfare அவார்டுக்காக ஒரு பாடலை விட்டு விட்டுத்தான் மறைந்தார்.

பிரமிக்கிற இமேஜ்...



Schindler’s List என்று சொன்னால் ஆஹா, ஆஸ்கார் வாங்கிய ஸ்பீல்பெர்க் படமாயிற்றே என்பீர்கள், Saving Private Ryan என்றால் ஓ,ரெண்டாவது ஆஸ்காரை ஸ்பீல்பெர்க் வாங்கிய படமாயிற்றே என்போம். ஆனால் அந்த ரெண்டு படத்துக்கும் ஒருவர் சிறந்த ஒளிப்பதிவாளர் ஆஸ்கார் வாங்கினார் என்பதும் ஓசைப்படாமல் அவையிரண்டும் சென்ற நூற்றாண்டின் தலை சிறந்த ஒளிப்பதிவுக்கான படங்களில் சேர்ந்து கொண்டன என்பதும் நாமறியோம்.
அவர்… யானஸ் கவின்ஸ்கி. (Janusz Kavinski) உலகின் டாப் 10 ஒளிப்பதிவாளர்களில் ஒருவர். இன்று பிறந்தநாள்!
அமெரிக்கன் ஃபில்ம் இன்ஸ்டிட்யூட்டில் தன் மாஸ்டர் டிகிரியை வாங்கிக் கொண்டவர் ‘Wild Flower’ என்ற டிவி படத்தில் ஒளியோடும் நிழலோடும் விளையாடியதைப் பார்த்து பிரபல Steven Spielberg தன்னோடு இணைத்துக் கொண்டார்.
“பார்த்தால் பிரமிக்கிற மாதிரி இமேஜ்களை அமைக்க வேண்டும் என்ற நோக்கம் எப்போதும் இருக்கும், ஆனால் கடைசியில் என் தலையாய கவனம் எல்லாம் அந்தக் காட்சியின் கதை ஓட்டத்திற்கு நேர்மையாக இருக்கும்படி பார்த்துக் கொள்வதுதான்,” என்று அவர் சொல்வது ஒளிப்பதிவாளர்களுக்கான பாட வரிகள்.
இதை அவர் எப்படிச் சாதிக்கிறார் என்றால் அந்தக் காட்சியின் கதையை அழுத்தமாகக் பிரதிபலிக்கிற மாதிரி, அந்தக் காட்சியில் நடிகர்கள் பிரதிபலிக்கும் உணர்ச்சிக்கு அடிக்கோடு இடுகிற மாதிரி தன் ஒளிப்பதிவை வைத்துக்கொள்கிறார். வேறெப்படி? நீங்களே சொல்லுங்க.
காமிராவை கவனிக்கிற மாதிரியெல்லாம் வைத்துக் கொள்ள மாட்டார். கண் எப்படி அந்த நேரம் பார்க்க வேண்டியதைப் பார்க்கிறதோ அப்படிச் சென்றுகொண்டிருக்கும் அவரது கேமரா. நின்று பார்த்து ரசித்து விட்டு வருகிற மாதிரி ஒரு திருப்தியைக் கொடுத்துவிடுவார் நமக்கு. ஒரு டைரக்டருக்கு இதைவிட வேறென்ன உதவி வேண்டும்?
வெறுமே துரத்திக்கொண்டு ஓடாது காமிரா. துரத்திக்கொண்டு ஓடுவதைப் பார்க்கும்போது நீங்கள் எதை எப்படிப் பார்ப்பீர்களோ அதை அப்படிப் பார்க்கும். ஒரு ரசிகனுக்கு இதைவிட வேறென்ன வேண்டும்?
கேமராவை ரசிக்க இவர் படம் பார்க்க வேண்டாம். படத்தை ‘மேலும் மேலும் ரசிக்க’ இவர் படம் பார்க்க வேண்டும்! Backlighting ஐக் கொட்டிக் கொடுத்து காட்சிகளைத் தட்டிக் கொடுப்பார். வழக்கமான 180 டிகிரி ஷட்டருக்குப் பதிலாக 90, 45 டிகிரி உபயோகிப்பதன் மூலம் இன்னும் நறுக்காக யதார்த்தமாக...
இவரது படங்களைப் பாருங்கள். பனி மூட்டங்களையும் பலகணி வழி பாயும் ஒளிக்கற்றைகளையும் கொண்டு தன் காட்சிகளைப் பின்னியிருப்பார். எந்தக் கோணத்தில் காட்டினால் ஏற்படுத்த வேண்டிய உணர்ச்சி அப்படியே ஏற்படுமோ அந்தக் கோணத்தில்... நடிகர்கள் மீது பாய வேண்டிய ஒளியையும் நிழலையும் எங்கே எத்தனை வேண்டுமா அங்கே அத்தனை துளி பிசகாமல்... ஒளிப்பதிவு என்றாலே நிழலுக்கும் ஒளிக்கும் உண்டான விகிதம்தானே?
நடிகர்களில் எங்கே, எப்படி நிறுத்துவார் என்று தெரியாது, ஆனால் பார்க்கிறபோது அழகாக இருக்கும். முகம் ஒரு புறம் திரும்பும்போது காமிரா இன்னொருபுறம் திரும்பும் அழகு… ‘Catch Me If You Can’ படத்தில் Leonardo DiCaprio ஃபிரேமுக்கு ஃபிரேம் விசேஷ அழகுடன் ஜொலிப்பதை எப்படி மறக்க முடியும்?

Thursday, June 26, 2025

‘பின்’ குறிப்பு

‘பின்’ குறிப்பு
கே. பி. ஜனார்த்தனன்
(விகடன் 28 11 2007 இதழில்)

அன்புள்ள அத்தானுக்கு,

உங்கள் மனைவி மீனாட்சி எழுதிக் கொண்டது. நான் இங்கு நலம். நீங்கள் நலமா?

இங்கே நான் என் பிறந்த வீட்டுக்கு வந்து இன்றோடு நாற்பது நாள் ஆகிறது. இதுவரை உங்களிடமிருந்து ஒரு போன் கால் கூட வரவில்லை. ‘எப்படி இருக்கிறாய் மீனு?’ என்று விசாரித்து ஒரு கடிதம் கூட நீங்கள் எழுதவில்லை.

எப்படி எழுதுவீர்கள்? எங்கள் அப்பா அம்மா செய்ததென்ன மன்னிக்கக் கூடிய குற்றமா? ‘என் மகனுக்கு பிரமோஷன் கிடைத்திருக்கிறது, 12000 ரூபாயில் இருந்து ஒரே ஜம்பில் 20000 ரூபாயாக சம்பளம் உயர்ந்திருக்கிறது, எனவே மாப்பிள்ளைக்கு இப்போதைய அவன் அந்தஸ்திற்கு ஏற்ற மாதிரி ஒரு கார் வாங்கி கொடுங்கள், என்று உங்கள் பெற்றோர் கேட்டபோது, ‘ஆகட்டும், என் தலையை அடமானம் வைத்தாவது பணம் புரட்டி கார் வாங்கித் தந்து விடுகிறேன்,’ என்று என் அப்பா சொன்னாரே, சொன்னதுபோல் செய்தாரா?

கவலைப்பட்டு பட்டே முடியெல்லாம் கொட்டி வழுக்கை விழுந்த தன் தலை பத்துப் பைசாவாவது பெறுமா என்று இவர் யோசித்திருக்க வேண்டாமா?

சரி, நீங்களும்தான் கார் வரும், வரும் என்று எத்தனை காலம் பொறுமையாக இருப்பீர்கள்? நீங்கள் என்ன இளிச்சவாயரா? வேறு வழியில்லாமல் தானே வந்தால் காருடன் வா என்று என்னைப் பிறந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தீர்கள்!

அப்பாவின் 3000 ரூபாய் சம்பளத்தில் மிச்சம் பிடித்து பத்து வருஷமோ இருபது வருஷமோ அவரால் என்றைக்கு கார் வாங்கித் தர முடிகிறதோ அன்றைக்கு நான் வருகிறேன். அல்லது அடுத்த ஜென்மத்தில்தான் நாம் ஒன்று சேர முடியுமென்றாலும் சரி வேறு வழியில்லை, நான் காத்திருக்கத்தானே வேண்டும்?

அன்புடன், மீனாட்சி.

பின்குறிப்பு: அனேகமாக இதுவே என் கடைசிக் கடிதமாக இருக்கும். இங்கே, சென்னையில் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் ரூ. 35000 சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்துவிட்டேன். அதனால் இனிமேல் உங்களுக்கு கடிதம் எழுதக் கூட எனக்கு நேரம் இருக்குமா என்று தெரியவில்லை.

Tuesday, June 24, 2025

சந்திக்காமலேயே...

சிலர் இருக்கிறாங்க. அவங்களை நாம சந்திச்சே இருக்க மாட்டோம். ஆனா நம்ம வாழ்க்கையில அவங்க வெகுவா ஊடுருவியிருப்பாங்க. இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு எடுத்துக்குவாங்க. உற்சாகத்தையும் ஆறுதலையும் அள்ளி வழங்கி இருப்பாங்க. ஆ, நீங்களே சொல்லிட்டீங்களே.. அவரு தாங்க...
கண்ணதாசன்... இன்று, ஜூன் 24, பிறந்த நாள்!
‘அவரு எழுதின பாடல்கள்ல உங்களுக்குப் பிடிச்ச ஒரு பாடல் சொல்ல முடியுமா?’ன்னு கேளுங்க.
உடனே மனசில ஓடறதிலேருந்து ஒரே ஒரு பாட்டை செலக்ட் பண்றதுக்குள்ளே முழி பிதுங்கிரும்.
யோசிக்க ‘ஒரு நாள் போதுமா?’
எந்தப் படமா இருக்கட்டும், கதையின் அடிநாதத்தை சில அடிகளில் தன் பாடலில் கொண்டு வந்து விடுவார். அதுதான் அவருடைய ஸ்பெஷாலிட்டி: படத்தின் ஒன் லைன் பாடலில்!
"தூக்கி வளர்த்தவள் தாயென்றால் அதை
ஆக்கிக் கொடுத்தவள் பேரென்ன?
வாங்கிய தாய்க்கே மகனென்றால் அதைத்
தாங்கிய தாயின் உறவென்ன?"
‘அன்னை’ படக்கதையை இதைவிட க்ளாஸிக்காக எப்படிச் சொல்ல முடியும்?
வானம்பாடி படத்தின் சுருக் இதோ இந்தப் பாடல் வரிகளில். (காதல் தோல்வியில் இருக்கும் கதாநாயகனுடன் கவியரங்கத்தில் போட்டியிடுகிறாள் தோழி... அவன் கேட்க அவள் பதில்.)
‘காதலித்தாள், மறைந்து விட்டாள், வாழ்வு என்னாகும்?”
‘அன்பு காட்டுகின்ற வேறிடத்தில் காதல் உண்டாகும்.’
‘ஒரு முறைதான் காதல் வரும் தமிழர் பண்பாடு.’
‘அந்த ஒன்று எது என்பதுதான் கேள்வி இப்போது.’
‘வருவதெல்லாம் காதலித்தால் வாழ்வதெவ்வாறு?’
‘தன் வாழ்க்கையையே காதலித்தால் புரியும் அப்போது.’
ஒன் லைனில் என்ன, சில சமயம் இரண்டொரு வார்த்தையிலேயே சொல்லிவிடுவார். படத்தின் கதையை. இதோ உதா.
“எங்கிருந்தாலும் வாழ்க..”
(’நெஞ்சில் ஒரு ஆலயம்’ : காதலித்தவள் எங்கிருந்தாலும் அவள் வாழவேண்டுமென்று எண்ணி அவள் கணவனைக் காப்பாற்றுகிறான் தன் உயிரைவிட்டு.)
நவரசமும் அபிநயம் பிடிக்கும் அவர் பாடல்களில்.. ‘பேசுவது கிளியா..’ என்று கொஞ்சும்! ‘வீடுவரை உறவு…’ என்று அஞ்சும்!
பறக்க ஆரம்பித்துவிட்டால் போதும். நாம்'பாட்டு’க்கு பறந்து கொண்டேயிருக்கலாம் மனதில். கடைசி வார்த்தை வரைக்கும்!. "காதல் சிறகை காற்றினில் விரித்து வானவீதியில் பறக்கவா..."
அள்ள அள்ள வந்து கொண்டே…
‘சொன்னாலும் வெட்கமடா..
சொல்லாவிட்டால் துக்கமடா…
துக்கமில்லாமல் வெட்கமில்லாமல்
வாழுகிறேன் ஒரு பக்கமடா…’ (முத்து மண்டபம்)
‘ஊரெங்கும் தேடினேன் ஒருவரைக் கண்டேன்..
அந்த ஒருவரிடம் தேடினேன், உள்ளத்தைக் கண்டேன்..
உள்ளமெங்கும் தேடினேன், உறவினைக் கண்டேன்..
அந்த உறவினிலே மூழ்கினேன் பிரிவினைக் கண்டேன்..’ (தேன் நிலவு)
இலக்கியத்துக்கும் சாதாரண ரசிகனுக்கும் இடையே உள்ள தூரத்தை யாராவது இத்தனை டெஸிமலுக்குக் குறைத்திருப்பார்களா என்றால் இல்லை.
"நீரோடும் வைகையிலே..நின்றாடும் மீனே…" பாடலில் ஒரு வரி.
"உன் ஒருமுகமும் திருமகளின் உள்ளமல்லவா...?"
"உங்கள் இரு முகமும் ஒரு முகத்தின் வெள்ளமல்லவா..?"
ஒரு முகத்தின் வெள்ளம் என்றால்? நதியும் கடலும் சங்கமிக்கும் இடத்தை பொழி முகம் (Estuary) என்பார்கள். சங்க முகம் என்றும் சொல்வதுண்டு. அந்த முகம்! அதில் ஒன்றாய்ப் பாயும் இரு வெள்ளம்!
கவிதையிலும் ஓர் காவிய நயம்..
மதுரைவீரன், மன்னாதி மன்னன், மகாதேவி, மாலையிட்ட மங்கை, ரத்தத் திலகம், இல்லற ஜோதி, கவலை இல்லாத மனிதன்... மனதில் தடம்பதித்த படங்களையும் எழுதினார்.
'மணந்தால் மகாதேவி; இல்லையேல் மரணதேவி!' தமிழ் திரையின் முதல் பிரபல பஞ்ச் டயலாக் அதுவே! அதுவும் வில்லனுக்கு!
காலம் அவருக்கு எத்தனையோ பரிசுகளை வழங்கி இருக்கலாம் ஆனால் காலத்துக்கு அவர் வழங்கிய பரிசு அவை எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டு விடக்கூடியது. ‘சிவகங்கைச் சீமை’ என்ற அவர் தயாரித்த படம். காலத்துக்கும் நிற்கும் காவியம்.
எத்தனையோ சொல்லலாம். ஆனால் இந்த ஒரு பாட்டு போதுமே? அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும்!
“ஓஹோஹோஹோ மனிதர்களே,
ஓடுவதெங்கே சொல்லுங்கள்!
உண்மையை வாங்கி, பொய்களை விற்று,
உருப்பட வாருங்கள்!
1
அழுகிப் போனால் காய்கறி கூட சமையலுக்காகாது
அறிவில்லாதவன் உயிரும் மனமும் ஊருக்கு உதவாது
உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது
உளறித் திரிபவன் வார்த்தையிலே ஒரு உருப்படி தேறாது.
காலம் போனால் திரும்புவதில்லை, காசுகள் உயிரை காப்பதும் இல்லை...
2
அடிப்படை இன்றி கட்டிய மாளிகை காற்றுக்கு நிற்காது
அழகாய் இருக்கும் காஞ்சிரம் பழங்கள் சந்தையில் விற்காது
விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது
விளக்கிருந்தாலும் எண்ணெய் இல்லாமல் வெளிச்சம் கிடைக்காது.
கண்ணை மூடும் பெருமைகளாலே, தம்மை மறந்து வீரர்கள்போலே...
3
ஒதிய மரங்கள் பெருத்திருந்தாலும் உத்திரம் ஆகாது
உருவத்தில் சிறியது கடுகானாலும் காரம் போகாது
படிப்பதனாலே தெளிவுள்ள மனசு பாழ் பட்டுப் போகாது
பாதையை விட்டு விலகிய கால்கள் ஊர் போய் சேராது.
காற்றைக் கையில் பிடித்தவன் இல்லை, தூற்றித் தூற்றி வாழ்ந்தவரில்லை…”
('படித்தால் மட்டும் போதுமா?')