Saturday, November 8, 2025

உலகின் முதல் ...


அவர் கணித்துச் சொன்னபடி காமெட் திரும்ப வந்தது. அதைக் காணத்தான் அவர் இல்லை. ஆம், Halley’s Comet. 1758-இல் அது வந்தது. 1456, 1531, 1607, 1682 இல் வந்ததெல்லாம் அதுவேதான் என்று சொன்னவரும் அவரேதான்.
Edmund Halley… இன்று பிறந்த நாள்!
1676. தூர திருஷ்டி கண்ணாடியைக் கொண்டு உலகின் வடபாதி வெளி மண்டலத்தின் அனைத்து நட்சத்திரங்களையும் இடம் குறித்து வைத்து விட்டனர். தென்பாதிக்கு பொறுப்பேற்றுக் கொண்டார் இவர். அப்பாவும் அரசரும் (King Charles II) உதவ, தென் அட்லாண்டிக் St Helena தீவைச் சென்றடைந்தவர், பருவநிலை சாதகமாக இல்லாத போதும் 341 நட்சத்திரங்களின் உருவ நிலையைக் குறித்துவிட்டே திரும்பினார். கிடைத்தது Royal Society மெம்பர்ஷிப்பும் Oxford இல் மாஸ்டர் டிகிரியும்.
எப்பவாச்சும் நினைச்சிருப்போமா.. சூரியனைச் சுத்தி வரும் கிரகங்கள் இடறி உள்ளே விழாமலும் பதறி வெளியேறி விடாமலும் செலுத்துவது எது? அதைச் செலுத்தும் விசை அப்பால் தள்ளிச் செல்லச் செல்ல உக்கிரம் குறையணும் இல்லையா? அது அவருக்கு தெரிந்திருந்தாலும் பாதையின் வடிவத்தை படம் பிடிக்க முடியவில்லை.
இப்பதான் ஸீனில் என்டர் ஆகிறார் ஐசக் நியூட்டன். கையில் அந்த ellipse பாதையை வரைந்து கொண்டு. போட்ட கணக்கை தொலைத்துக் கொண்டு.
‘அப்படியா? போடு போடு மறுபடி கணக்கை! எழுது எழுது தியரியை!’ என்று அவரைச் செலுத்தி உற்சாகமும் அச்சடிக்க உதவியும் செய்தார் ஹேலி. உருவானதுதான் ‘Principia’. நியூட்டனின் மாபெரும் படைப்பு.
ஒண்ணு தெரியுமா? உலகின் முதல் பருவக் காற்று வரை படத்தை 1686 இல் வரைந்தது இவருதான். அந்த அடையாளக் குறிகளை இன்னிக்கு வரை பயன்படுத்துகிறோம்.
வயசுக்கும் ஆயுசுக்கும் உள்ள தொடர்பை அட்டவணைப் படுத்தினதும் முதலில் இவரே. இன்ஷூரன்ஸுக்கு அது உதவிற்று. ஆழத் தண்ணீரில் இறங்கி நாலு மணி நேரம் வரை வேலை செய்ய உருவாக்கிய Diving Bell இல் தேம்ஸுக்குள் 60 அடி மூழ்கிக் காட்டியது ஆழ்ந்த அறிவைக் காட்டும்.

Friday, November 7, 2025

இரண்டு முறை...


’நோபல் பரிசைப் பெற்ற முதல் பெண்மணி
நோபல் பரிசை இரண்டு முறை பெற்ற ஒரே பெண்மணி
நோபல் பரிசை அறிவியலின் இரண்டு துறைகளில் பெற்ற ஒரே நபர்.
மேரி க்யூரி (Marie Curie)... இன்று பிறந்த நாள்!
‘ரேடியம் கண்டுபிடிக்கப்பட்ட போது அது மருத்துவமனைகளில் உபயோகமாகும் என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அறிவியலின் ஒரு வேலையாகவே அது நடந்தது. விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை நேரடி உபயோகம் என்ற கோணத்தில் பார்க்கக் கூடாது. அறிவியலின் ஓர் அழகு என்று அதை உருவாக்க வேண்டும். பின்னர் அது மனித குலத்துக்கு பிரயோஜனமாக அமைந்துவிடலாம், ரேடியத்தைப் போல.’ என்றார்.
புகழினால் சற்றும் பாதிக்கப்படாத ஒரே பிரபல விஞ்ஞானி என்று ஐன்ஸ்டீன் வியந்த கியூரியஸ் பெண்மணியான க்யூரி சொன்னது: ‘என் வாழ்நாள் முழுவதும் இயற்கையின் இனிய தரிசனங்கள் என்னை ஓர் குழந்தையைப்போல குதூகலிக்கச் செய்துள்ளன.’
‘இந்த வாழ்வில் எந்த விஷயமும் பயப்படுவதற்கானது அல்ல; புரிந்து கொள்வதற்கானது.’
‘முன்னேற்றத்திற்கான பாதை விரைவானதுமல்ல; எளிதானதுமல்ல.’
‘அறிவியலில் விஷயங்களைப் பற்றி ஆர்வமே முக்கியம், நபர்களைப் பற்றிய ஆர்வம் அல்ல.’
‘எதுவரையில் நடந்துள்ளது என்று நான் பார்ப்பதில்லை, என்ன செய்ய வேண்டியது பாக்கி இருக்கிறது என்று மட்டுமே பார்க்கிறேன்.’
‘தனிமனிதரை முன்னேற்றாமல் நம்மால் இன்னும் சிறந்த ஓர் உலகை உருவாக்க முடியாது.’

மிகக் குறைந்த வயதில்...


மிகக் குறைந்த வயதில் நோபல் பரிசு வாங்கியவர். ஆம் 44 வயதில் இலக்கியத்துக்கான நோபல். 'அந்நியன்' என்ற பிரபல நாவலை எழுதியவர்.
ஆல்பர்ட் காம்யூ (Albert Camus)... இன்று பிறந்த நாள்.
சொன்னவை சுவையானவை...
‘ஆனந்தத்தில் என்ன அடங்கியிருக்கிறது என்று ஆராய்ந்தால் உன்னால் ஒரு போதும் ஆனந்தப்பட முடியாது, அதுபோல் வாழ்க்கையின் அர்த்தத்தை தேடிக்கொண்டிருந்தால் வாழ முடியாது.’
‘நட்பு பெரும்பாலும் காதலில் முடியும். ஆனால் காதல் ஒரு போதும் நட்பில் முடிவதில்லை.’
‘உண்மையைத் தேடுவது வேறு; பிடித்ததை தேடுவது வேறு.’
‘வாழ்வின் மேல் விரக்தி ஏற்படாமல் வாழ்வின் மேல் பிரியம் ஏற்படுவது இல்லை.’
‘உன் மகிழ்ச்சியை உனக்குள் கண்டுபிடி.’
‘எங்கே நம்பிக்கையற்று போகிறோமோ அங்கே அதை நாம் உருவாக்க வேண்டும்.’
'என் பின்னால் நடக்காதே. நான் வழிகாட்டப் போவதில்லை. என் முன்னே நடக்காதே. உன்னை நான் தொடரப் போவதில்லை. பக்கத்தில் நட, ஒரு நண்பனாக!'
‘வளைந்து கொடுக்க முடிகிற இதயங்கள் வரம் பெற்றவை. ஒருபோதும் ஒடிக்க முடியாது அவற்றை.’
‘எதையுமே கொடுக்காதவரிடம் எதுவுமே இல்லை. மிகப் பெரும் துயரம் என்பது நேசிக்கப்படாமல் இருப்பது அல்ல; நேசிக்காமல் இருப்பது.’
‘நம் அன்புக்குரிய ஒருவரின் முகத்தில் ஆனந்தத்தின் ஒளியை ஓரு முறை பார்த்து விட்டால், தன்னைச் சுற்றி உள்ளவர்களின் முகங்களில் ஒளி ஏற்படுத்துவதை விட வேறு வேலை நமக்கு இல்லை என்பது புரிந்து விடும்.’
>><<

Thursday, November 6, 2025

ஒரு விடை...


திருவிடை தந்த ஒரு விடை..
அதை ஒரு தெளிந்த நீரோடை என்று சொல்லலாம். எங்கிருந்தோ வீசும் தென்றல் காற்று என உணரலாம். பல்லாயிரம் ஆண்டு படிந்து பளிங்கு படுத்திவிட்ட பாறைக் கற்களினூடே வழிந்தோடும் அருவி என்று மகிழலாம். வளைந்தும் நெளிந்தும் வட்டமடித்துத் தாழ இறங்கியும் காற்றில் சிறகுகளை அளைந்த வண்ணம் சீராகப் பறக்கும் வானம்பாடியாக எண்ணலாம். ரொம்பக் கூர்ந்து கவனித்தால் மட்டுமே அது புல்லாங்குழல் இசை என்பதும் வாசிப்பது டி. ஆர். மகாலிங்கம் என்றும் தெரியும். அதாவது நீங்கள் தரைக்கு வந்தால்!
புல்லாங்குழல் மேதை டி. ஆர். மகாலிங்கம்... இன்று பிறந்த நாள்!
இசையால் மனிதரை மெய்மறக்கச் செய்ய முடியுமா என்ற கேள்விக்கு திருவிடைமருதூர் தந்த ஒரு விடை தான் மாலி அவர்கள். பக்கத்தில் இருந்த சிவன் கோவில் மகாலிங்க சுவாமியின் பெயரையே அவருக்கு வைத்தார்கள்.
உறவினர் கோபால ஐயர் இசைப்பள்ளி நடத்தியது இசைவாக இருந்தது. சற்றே ஆரோக்கியம் குறைந்த பையன் ஆயிற்றே? வாய்ப்பாட்டு படிக்கட்டும் என்றார் தந்தை . பையனுக்கோ ஃப்ளூட் மீது ஒரு காது. யாருக்கும் தெரியாமல் பயின்றவனின் திறமையைப் பார்த்து தகுந்த குருவைத் தேடினார்கள்.
எந்த இசைச் சரத்தைக் காதில் வாங்கினாலும் அதை அப்படியே ஃப்ளூட்டில் பிரதிபலிக்க அந்த வயதிலேயே அவரால் முடிந்தது.
மயிலாப்பூர் தியாகராஜர் உற்சவத்தில் ஏழு வயதில் முதல் கச்சேரி. எந்த அளவு வாசித்தார் என்றால் பார்க்க வந்திருந்த இரு வித்வான்கள் பரவசமாகி உடனே சென்று பொன்னாடை வாங்கிவந்து போர்த்தி ஆசீர்வதிக்கும் அளவு!
நுணுக்கங்களை விமரிசிக்க நமக்கு இசை ஞானம் பத்தாது. ஆனால் எந்த இசை ஞானமும் நமக்கு அவசியம் இல்லை அவர் வாசிப்பதை அணுஅணுவாய் ரசிக்க என்பது கேட்கிற ரெண்டாவது நிமிடமே புரிந்துவிடும்.
நின்னு கேட்க நேரம் இல்லாதவர்கள் அவரது 'நின்னுவினா நாமதேனு..'வை மட்டும் கேட்டாலே போதும். என்னே இது என்று விடுவார்கள் அசந்து.
எத்தனையோ ப்ளூட் கச்சேரிகளை கேட்டிருப்பீர்கள்.. ஆனால் இங்கே புல்லாங்குழலே தன்னால் வந்து தன் அதிகப்பட்ச இசை வெளிப்பாட்டு ஆற்றலை பிரகடனப்படுத்தியது போலிருக்கும்!

காட்சி என்றால் காட்சி...


'தெரியுமா அரசே உங்களுக்கு? ரொம்ப நல்லாவே பாடுகிறான் கம்பர் மகன், காதலை,' என்று வம்பிழுக்கிறார் ஒட்டக்கூத்தர் (நம்பியார்)...
அரசரும் கம்பரும் அம்பிகாபதி(சிவாஜி)யும் அமர்ந்திருக்கையில்!
அப்போது இளவரசி அமராவதி (பானுமதி) மெல்லப் படியிறங்கி வருகிறாள் அடியெடுத்து.
தன்னை மறந்து பாடி விடுகிறான் அம்பிகாபதி! "இட்ட அடி நோவ.. எடுத்த அடி கொப்புளிக்க… வட்டில் சுமந்து மருங்கசைய.."
அரசர் கோபமுற நோக்க, பதறிய கம்பர் தொடர்ந்து ஒரு வரி பாடி அதைச் சமாளிக்கிறார். “...கொட்டிக் கிழங்கோ கிழங்கென்று… கூவுவாள் நாவில் வழங்கோசை வையம் பெறும்.” வெளியே கொட்டிக் கிழங்கு விற்கும் முதியவளின் பாதங்கள், கொளுத்தும் வெயிலில் நோவதைத்தான் சொல்கிறான் தன் மகன் என்று.
"யாரங்கே? அழைத்து வா அந்த முதியவளை!" ஆணையிடுகிறார் சந்தேகம் அகலாத அரசர்.
'இருந்தால்தானே வருவதற்கு?' என நம்பியார் குதூகலிக்க, கம்பர் கலங்கி, கலைமகளை மனதில் துதிக்க...
நுழைகிறாள் அந்தப் பாட்டி, "அப்பா... என்னா வெய்யில்," என்கிறாள், தலையிலிருந்து கொட்டிக் கிழங்குப் பெட்டியை இறக்கியபடி.
காப்பாற்றி விடுகிறாள் சரஸ்வதி!
நம்பும் மன்னர்... வெம்பும் நம்பியார்...
'அம்பிகாபதி' படத்தின் அற்புதமான காட்சி.
இயக்குநர் ப. நீலகண்டனின் ஷாட் அமைப்பைக் கவனியுங்கள். மிகக் குறைந்த ஷாட்களில் அந்த செக்வன்ஸையும் அத்தனை எக்ஸ்ப்ரஷன்களையும் அழகாகக் capture செய்திருக்கும் நுணுக்கம்!
காட்சி youtube இல் காணக் கிடைக்கிறது.

Wednesday, November 5, 2025

அபார நாவல்...


வாசகர் உலகைப் புரட்டிப்போட்ட அபார நாவல் அது. அந்த நாவலாசிரியரின் ஒரே நாவல். அது படமாக்கப்படுகிறது என்றபோது படித்த லட்சக் கணக்கான வாசகருக்கும் ஆவல். யார் அந்த அசத்தலான நாயகி ஸ்கார்லெட் வேடத்தில் நடிக்கப்போவது? பெட்டி டேவிஸ், கேத்தரின் ஹெபர்ன் என்று பிரபல நடிகைகள் போட்டியிட்ட ரோலாயிற்றே? பிரிட்டனில் இருந்து வந்த அந்த புது நடிகையை அழைத்துக் கொண்டு வருகிறார் ப்ரொட்யூஸரின் தம்பி. “இந்தாருங்கள் உங்க ஸ்கார்லெட்!” என்றார். ஃபில்ம் டெஸ்டில் வென்று அந்த அரிய வாய்ப்பைப் பெற்றுக் கொண்ட அவர், அற்புதமாக நடித்து அதற்காக ஆஸ்காரையும் தட்டிக் கொண்டு போனார்.
Vivien Leigh... இன்று பிறந்த நாள்!
அந்தப் படம், ஊகித்திருப்பீர்கள்,ஹாலிவுட்டின் தலைசிறந்த 10 படங்களில் தவறாது இடம்பெறும் ‘Gone with the Wind’. பிரிமியர் பத்திரிகை தேர்ந்தெடுத்த தலை சிறந்த 100 கதா பாத்திரங்களில் மூன்றவது ரேங்க் அவர் நடிப்புக்கு.
நடிப்பில் ரசிகர்களின் டார்லிங் ஆனவர் பிறந்தது டார்ஜிலிங்கில். ஆறு வயதில் லண்டன் பயணம். ஷேக்ஸ்பியர் நாடகங்களில் கிடைத்தது அனுபவம். எப்படியும் பிரபலம் ஆவேன் என்று சொன்னவர் நடித்த முதல் படம் ‘எல்லாம் நல்லதுக்குத்தான்.’
தான் மேடையில் நடித்த அதே ‘A Streetcar named Desire’ நாடகக் கதையில், பின்னாளில் ஹாலிவுட்டின் பிரபல மார்லன் பிராண்டோவுடன் நாயகியாக நடிக்கும் நாள் வரும் என்று அவர் எதிர்பார்க்கவே இல்லை. அதில் தன் ரெண்டாவது ஆஸ்கார் அவார்டும் பெற்றார்.

நேர்த்தி என்பது...


'எதைத் திரும்பத் திரும்பச் செய்கிறோமோ அதுவே நாம். ஆகவே நேர்த்தி என்பது ஒரு செயல் அல்ல, ஒரு பழக்கமே.'
இந்த பிரசித்தி பெற்ற அருமையான மேற்கோளுக்குச் சொந்தக்காரர்...
Will Durant. இன்று பிறந்த நாள்.
தத்துவ வாதியும் வரலாற்றாசிரியருமான இவர் முதலில் எழுதியது 'The Story of Philosophy'. பல்வேறு கூறுகளாக பரந்து காணப்படும் வரலாற்று ஆக்கங்களை பார்த்தவர் முழுமையான ஒரு உலக வரலாற்றை எழுதக் கொண்ட ஆவலின் விளைவாக எழுந்ததுதான் உலகப் புகழ் பெற்ற 'The Story of Civilization' என்ற மாபெரும் வரலாற்று ஓவியம். 40 லட்சம் வார்த்தைகளாலான 11 வால்யும்களில் ஐந்தை எழுதியது மனைவியுடன் சேர்ந்து.
12 -வது தொகுதிக்கான குறிப்புகளையும் விட்டுச் சென்றிருந்தவர்கள் பதின்மூன்றாவது தொகுதிக்கு வைத்திருந்த பெயர் 'The Age of Einstein'.
ஆதர்ச தம்பதி. ட்யூரண்ட் நோயுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதும் மனைவி ஏரியல் சாப்பிடாமலிருந்து மரணமடைய எப்படியோ அதை அறிந்து கொண்ட கணவர் இரண்டே வாரத்தில் தானும் …
சொன்ன இன்னும் சில…
'சரித்திரம் என்பது பெரும்பாலும் ஊகம்; மீதி பாரபட்சம்.'
'விஞ்ஞானம் அறிவைத் தருகிறது, ஆனால் வேதாந்தம்தான் விவேகத்தைத் தரமுடியும்.'
'60 வருடத்துக்கு முன்பு எனக்கு எல்லாமே தெரிந்திருந்தது. இப்போது எனக்கு எதுவும் தெரியவில்லை. நம் அறியாமையை கொஞ்சம் கொஞ்சமாக தொடர்ந்து கண்டுபிடிப்பதே கல்வி என்பது.'
'பெரும்பாலானவர்களின் பிரச்சினை என்னவென்றால் மூளையை வைத்து சிந்திக்காமல் தங்கள் நம்பிக்கைகளையோ பயங்களையோ ஆசைகளையோ வைத்து சிந்திப்பது தான்.'
'ஒரு முதியவர் தன் வயதான மனைவியின் மீது வைத்திருக்கும் காதலுக்கு இளம் வயதில் நாம் கொண்டிருக்கும் காதல் மிக மேலோட்டமானது.'

‘விஞ்ஞானம் என்பது ஒழுங்குபடுத்தப்பட்ட அறிவு. விவேகம் என்பது ஒழுங்குபடுத்தப்பட்ட வாழ்வு.’
'இளவயதில் நான் சுதந்திரத்தை வலியுறுத்தினேன். இப்போது நான் ஒழுங்கை வலியுறுத்துகிறேன். சுதந்திரம் என்பது ஒழுங்கின் விளைவு என்ற பெரிய கண்டுபிடிப்பை நான் செய்திருக்கிறேன்.'
'சரித்திரம் கற்றுக் கொடுக்கும் பாடங்களில் ஒன்று: பல நேரங்களில் எதுவும் செய்யாமல் இருப்பது உத்தமம். எதுவும் பேசாமல் இருப்பது எப்போதுமே உத்தமம்.'
'விவேகத்தைவிட ஆனந்தத்தையே விரும்புகிறது உலகம், விவேகமாக!'

Tuesday, November 4, 2025

'எண்'ணிலா புகழ்...


'எண்'ணிச் சில வருடங்களில் 'எண்'ணிலா புகழ்!
கம்ப்யூட்டர்கள் வந்து கணக்குப் போடுவதை ஜுஜுபி ஆக்கி விட்டன. ஆனால் கம்ப்யூட்டரையே ஜுஜுபி ஆக்கிய மனிதர்களும் உண்டு .
Shakuntala Devi... இன்று பிறந்த நாள்!
சர்க்கஸில் வேலைபார்க்கும் அப்பா தன் மேஜிக்கால் மக்களை அசத்தியதுண்டு. ஆனால் வீட்டுக்கு வந்து தன் மூன்று வயதுப் பெண்ணுக்கு சீட்டுக் கட்டு வித்தை கற்றுவித்தபோது அவள் காட்டிய கணித ஞாபக சக்தியில் அசந்து போனார். அந்த அபார திறமை அவளை வைத்தே நிகழ்ச்சிகள் நடத்தும் அளவுக்கு அவரை உந்தித் தள்ளிற்று.
'எண்'ணிச் சில வருடங்களில் 'எண்'ணிலா புகழ் பெற்றார்..
ஒன்பது இலக்க எண் ஒன்றைச் சொல்லி அதன் மூன்றாம் வர்க்க எண்ணைக் கேட்கிற நேரத்துக்குள் அவர் விடையைச் சொல்லி விடுகிறார்.. அதிசயித்தது நியூயார்க் டைம்ஸ்.

புதிருக்குப் பிரபலம் சகுந்தலா தேவி. ஒன்று முயற்சித்துப் பாருங்களேன்: அந்தக் குடும்பத்தில் ஒவ்வொரு பையனுக்கும் எத்தனை சகோதரிகள் உண்டோ அத்தனை சகோதரர்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் எத்தனை சகோதரிகள் உண்டோ அதற்கு இரண்டு மடங்கு சகோதரர்கள். சொல்லுங்க. . எத்தனை சகோதரர்கள்? எத்தனை சகோதரிகள்? (விடை: கீழே)
இரண்டு 13 இலக்க எண்களின் பெருக்குத் தொகை யை 28 செகண்டுகளில் சொல்லியதுதான் இவருடைய கின்னஸ் ரெக்கார்டு .
எழுபதுகளில் அமெரிக்க யூனிவர்சிட்டி ஒன்றில்... 201 இலக்க எண் ஒன்றின் 23 ஆம் வர்க்கமூலம் கேட்டபோது அதைச் சொல்ல தேவி எடுத்துக்கொண்ட நேரம் ஐம்பது வினாடி. அவரது விடையை சரிபார்க்க கம்ப்யூட்டரில் ப்ரோக்ராம் செய்ய ஆன நேரம் அதைவிட அதிகம்!
ஹ்யூமன் கம்ப்யூட்டர் என்று அழைப்பார்கள் ஆனால் அவருக்கு பிடித்ததில்லை... கம்ப்யூட்டரைக் கண்டுபிடித்ததே மனிதன் தானே என்பார்.
எழுத்தாளரும் கூட. நாவலும் எழுதியிருக்கிறார், சமையலும் எழுதியிருக்கிறார். ஜோசியத்தையும் விட்டுவைக்கவில்லை. ‘Astrology for You’ என்று ஒரு புத்தகம்!
Google Doodle.. ஒளிர்ந்தது இவருக்கும். 2013-இல். இவர் கதை திரைப்படமாக வந்திருக்கிறது. வித்ய நாயகியாக வித்யா பாலன்.

(விடை: 3 சகோதரி, 4 சகோதரர்)

இன்பத் தேனையும் வெல்லும்...


“துள்ளாத மனமும் துள்ளும்… சொல்லாத கதைகள் சொல்லும்..”
காற்றில் மிதந்து வருகின்ற அந்த வரிகள்… சொக்கிப் போகும் ஜிக்கியின் குரலினிமையில்.
‘இன்பத் தேனையும் வெல்லும்’ அந்தக் குரல்.. ஜிக்கி... நவ.3. பிறந்தநாள்!
அதே குரல் “சாதுர்யம் பேசாதேடி! என் சலங்கைக்கு பதில் சொல்லடி!” என்று கம்பீரமாகவும் ஒலிக்கிறது ‘வஞ்சிக்கோட்டை வாலிபனி’ல்.
நடிப்புதான் ஆரம்பம். சிறுமியாக சில வேடங்கள்.. இரண்டொரு படங்களில் நடித்ததைத் தொடர்ந்து சிட்டாடலின் ‘ஞானசௌந்தரி’யில் மாஸ்டர் எஸ் வி வெங்கட்ராமன் மற்றொரு சிறுமிக்கு இவரைப் பாடவைத்தார். பாட்டு என்றால் அப்படி ஒரு பாட்டு! “அருள் தாரும் தேவ மாதாவே.. ஆதியே இன்ப ஜோதி..!” சில வரிகள் இவர் பாட மீதியை பி.ஏ.பெரியநாயகி பாடினார். பெரிய பாடகியானார். மீதியை நாடறியும்.
இப்படி ‘சின்னப் பெண்ணான போதிலே’ நடிக்க வந்தவர்தான் பாடகியாகி அந்த சூபர் ஹிட் “சின்னப் பெண்ணான போதிலே…” யையும் நமக்குத் தந்தார். (‘ஆரவல்லி')
“மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ…” இசை ரசிகர்களுக்கு முதலில் நினைவுக்கு வரும் ஜிக்கி பாடல் அதுதான்! அதில் ‘பாடும் தென்றல் தாலாட்டுதே..’ என்று அவரே பாடியது போல்... பாடும் தென்றல் போன்றதே அவர் குரலினிமை.
எந்த நடிகைக்கும் பொருத்தமாய், பாந்தமாய் அமையும் குரல். அஞ்சலி தேவிக்கு அவர் பாடிய பாடலை கேட்டால் “உள்ளம் கொள்ளை போகுதே…!” அதே ‘நீலமலைத் திருடனி'ல் “கொஞ்சும் மொழி பெண்களுக்கு அஞ்சா நெஞ்சம் வேணுமடி…” ஒரு அட்டகாச மெலடி!
பத்மினிக்கு பாடும்போது பாடல் நம் பக்கம் வந்து ஆடும்.: “பச்சைக்கிளி பாடுது.. பக்கம் வந்தே ஆடுது..”(அமர தீபம்). கூவாது அசந்து பார்க்கும் குயில், இவரது “பூவா மலரும் பூத்ததே பொன்னும் மணியும் விளைந்ததே..” கேட்கையில். (‘நான் பெற்ற செல்வம்’) அதே ஜி.வரலட்சுமிக்கு பாடிய மற்றொன்று ‘குலேபகாவலி’யில் “கண்ணாலே பேசும் பெண்ணாலே ஆண்கள் தன்னாலே மயங்கும் காலமே…” எம்.என். ராஜத்துக்காக ‘பாக்தாத் திருடனி'ல் பாடிய “சிரிச்சா போதும் சின்னஞ் சிறு பொண்ணு… திண்டாடச் செய்திடும் மைகூட்டும் கண்ணு..” கேட்டால் போதும், மற்றொரு ஹிட் “யௌவன ராணிதான் இசைபாடும் வாணி நான்…” நினைவுக்கு வரும்.
அவர் திறமையை பற்றி இப்படி ஒரு நிகழ்வு சொல்லப்படுவதுண்டு. சங்கர் - ஜெய்கிஷன், ராஜ் கபூர் எல்லாரும் உட்கார்ந்திருக்கிறார்கள் ரிகார்டிங்கில். இந்தியிலும் (‘Aah’) தமிழ் டப்பிங்கிலும் (‘அவன்') தயாராகிறது அந்த படம். “Raja Ki Aayegi...” என்ற அந்தப் பாடல் எத்தனை இனிமையானதோ அத்தனை கஷ்டமானது பாடுவதற்கு. முதலில் இந்திப் பாடல் பதிவாகும். ஆனால் அவங்க முதலில் பாடட்டுமே என்றதும் சற்றும் தயங்காமல் அந்த மெட்டைப் பாடுகிறார் ஜிக்கி. “கல்யாண ஊர்வலம் வரும்.. உல்லாசமே தரும்.. மகிழ்ந்து நான் ஆடிடுவேன்... “அசந்து ஆச்சரியப்பட்டுப் போகிறார்கள் அனைவருமே. அகமகிழ்ந்து பாராட்டுகிறார் லதா.
“மதனா எழில் ராஜா நீ வா.. “ மறந்திருக்க மாட்டீர்கள் அந்தப் பாடலை. ‘செல்லப் பிள்ளை’ (1955) யில் வருவது. சுதர்சனம் தந்த சுவையான டியூன்.. ரிவால்வரை நீட்டி கே ஆர் ராமசாமி பாடு பாடு என்று சாவித்திரியை விரட்ட, அவர் நிமிடத்துக்கு நிமிடம் பாடும் வேகத்தை அதிகரித்துக் கொண்டே போக வேண்டிய சவாலான பாடல் அது. சற்றும் இனிமை குன்றாமல், பதற்றத்தையும் காட்டத் தவறாமல்… அற்புதம் என்ற பதம் பத்தாது அதைப் பாராட்ட.
அதே படத்தில் வரும் “ஆனந்தம் இங்கே இருக்குது பாருங்க..” என்ற அபூர்வ பாடலையும் இசையின் வேகத்துக்கு ஈடுகொடுத்து பாடியிருப்பார். பாடலின் இடையிடையே அப்படி ஆடு, இப்படி ஆடு என்று சொல்லும் இரண்டொரு வரிகளை மட்டும் சங்கதிகளுடன் உற்சாகமாகவும் அட்டகாசமாகவும் பாடியிருப்பார் ஒரு பிரபல பிரபல பாடகர். யார்? நம்ம டி.எம்.எஸ். தான்!
அதுபோல் ஒரு ஜோடியைக் 'கேட்டதில்லை' என்று எல்லோரும் கொண்டாடினார்கள். அத்தனை இனிய டூயட்களை அள்ளி வழங்கினார்கள் இவரும் ஏ.எம்.ராஜாவும். பெரும்பாலும் ஜெமினி சாவித்திரிக்கு.. “வாசமிகும் மலர் சோலையிலே…”(‘யார் பையன்') “ஆசை பொங்கும் அழகு ரூபம்... (‘ஆசை’) “மனமே நிறைந்த தெய்வம்..” (‘மகேஸ்வரி') சிவாஜி ஜமுனாவுக்கு பாடிய “அன்பே.. நீ அங்கே.. நான் இங்கே..“ (‘பொம்மை கல்யாணம்’) சிவாஜி பத்மினிக்கு “இன்று நமதுள்ளமே…”(தங்கப்பதுமை)
தமிழ் சினிமாவின் தலை சிறந்த பத்துப் பாடல்களில் ஒன்றான ஜி.ராமநாதனின் “உலவும் தென்றல் காற்றினிலே... ஓடமிதே.. நாமதிலே...” (மந்திரி குமாரி) இவர் பாடியதைப் போல யார் பாடமுடியும்?
சொல்லணுமா தனியே அந்தப் பாடலைப் பற்றி? “யாரடி நீ மோகினி..” (உத்தமபுத்திரன்) “மன்மதா நீ ஓடிவா!” அந்த வரிகள் மிதந்து வரும்போதே ஜிக்கியின் வரவைச் சொல்லிவிடுகிறது.
‘சுகம் எங்கே?’ என்றால் இதைக் கேட்பதுதான்: கே ஆர் ராமசாமியின் கணீர் குரலுக்கு பன்னீர் தெளித்தது போல் இவர் பாடும் “தென்றல் அடிக்குது என்னை மயக்குது தேனமுதே இந்த வேளையிலே..” (விஸ்வநாதன் ராமமூர்த்தி - ‘சுகம் எங்கே?’)
கிட்டத்தட்ட இரண்டுமே ஒரே டியூன் என்றாலும் ரெண்டுமே செம பாடல்கள்.. ‘மதுரை வீரனி’ல் “சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்.. சோம்பல் வளர்த்தா ஏற்படும் கஷ்டம்..” & ‘காலம் மாறிப்போச்சு’வில் “ஏரு பூட்டிப் போவாயே அண்ணே சின்னண்ணே!” ரெண்டையுமே லாவகமாக பாடியிருந்தார்.
சோகப்பாட்டு என்றாலே ஜிக்கிதான் என்று ஒரு காலம் இருந்தது. “என் சிந்தை நோயும் தீருமா..” (‘காவேரி’) துன்பம் சூழும் நேரம்.. (‘அமர தீபம்’) என்று வரிசையாக… "ஆசை நிலா சென்றதே அபலை கண்ணீரில் நீந்தியே.." (‘மாமன் மகள்’) பாடலும் அபலையின் குரலில் அவரின் உருக்கமாகப் பாடும் திறமைக்கு ஓர் எ.கா.
எந்தப் பாடலுக்கும் வளைந்தும் (“கண்களால் காதல் காவியம்..” சாரங்கதரா) நிமிர்ந்தும் ("காதல் வியாதி பொல்லாதது…" தாய்க்கு பின் தாரம்) முறுக்கியும் (“என்னைப் பாராய் என் கண்ணைப் பாராய்..”) கொடுக்கும் வாள் போன்ற குரல்...
இசை அரசிகள் கீதா தத்தும் ஆஷா பான்ஸ்லேயும் பாடிய ஓ.பி.நய்யாரின் அந்தப் பாடல்! அதன் தமிழ் தழுவலில் (“கண்ணா கண்ணா வாராய்…”) ஜிக்கி நம்மை இசைப் படகில் அழைத்துச் செல்வது ஓர் இனிய அனுபவம்.
சி எஸ் ஜெயராமனுடன் “உள்ளம் ரெண்டும் ஒன்று.. நம் உருவம் தான் இரண்டு…” (புதுமைப் பித்தன்) பாடும் போதும் சரி, திருச்சி லோகநாதனுடன் “வாராய் நீ வாராய்..” (‘மந்திரி குமாரி')... டி.எம்.எஸ் உடன் “ஏன் இந்த இரவு? ஏன் அந்த நிலவு?” (‘புதிய பாதை’) சீர்காழியுடன் “மின்னுவதெல்லாம் பொன்னென்று எண்ணி..” (‘கோமதியின் காதலன்')... கண்டசாலாவுடன் “கனிந்த அன்போடு...“(‘அனார்கலி’) பாடும்போதும் சரி எடுப்பான குரலில் ஈடுகொடுத்து பாடுவார்.
ரொம்பச் சொல்லவேண்டிய பாட்டு ஏ.எம்.ராஜாவின் ஆக்ரோஷமான ஆர்கெஸ்ட்ரேஷனில் இவர் பாடிய அந்த மாபெரும் சோகப்பாடல்.. நம்பிக் காதலிக்கும் நம்பியார் நல்லவரல்ல என்று தெரியாத அப்பாவிப் பெண் வசந்தி அவர் அழைத்துச் செல்லும் படகில்.. நடக்கப் போகும் ஆபத்தை அறியாமல்…நம்பிக்கையையும் திகிலையும் ஒருசேர குரலில்…பாடுகிறார். “ஊரெங்கும் தேடினேன் ஒருவரைக் கண்டேன் - அந்த ஒருவரிடம் தேடினேன் உள்ளத்தை கண்டேன்..” ஒவ்வொரு சரணத்திலும் படிப்படியாக ஸ்தாயியை ஏற்றுக்கொண்டேபோய் கடைசி வரியில் ‘மறைவதென்று நீங்கள் சொன்னால் மறைய சம்மதம்…’ என்று முடிக்கும்வரை வயலின்களுக்கும் ஜிக்கிக்கும் நடக்கும் இசைப் போராட்டம்! அந்தப் படகை போலவே பாடலை இழுத்துச்செல்லும் அழகு!

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் பாடிய பாடல்கள்! எல்லாமே இனிமை என்றாலும் அவருக்காகவே காத்திருந்த மாதிரி திகைக்க வைத்த இனிமை தந்தன இவ்விரு பாடல்கள். சங்கர் கணேஷ் இசையில் “நான் உன்னை நினைச்சேன்.. நீ என்ன நினைச்சே?” ('கண்ணில் தெரியும் கதைகள்') அதில் அந்த வரி, “நம்மை யாரு பிரிச்சா.. ஒரு கோடு கிழிச்சா...” ரொம்பவே உணர்வு கொப்பளிக்கும். இளையராஜா இசையில் “நினைத்தது யாரோ..” (பாட்டுக்கு ஒருதலைவன்) ஒரு மாஸ்டர்பீஸ்! 

Sunday, November 2, 2025

ரசிகர்களின் மன ராஜ்யத்தை...


ஹோட்டல் பார்ட்டியில் மனம் லயிக்காத ரம்யா கிருஷ்ணன் பால்கனியில் எட்டிப் பார்க்கிறார் . தெருவோரமாக காதில் ஒரு கையும் ஆர்மோனியத்தில் ஒரு கையுமாக பாடிக்கொண்டிருக்கும் அவன் கண்ணில் விழ, கைகாட்டி உள்ளே வர சொல்லுகிறார். நன்றியும் மகிழ்வும் முகத்திலாட, ஹாலில் நுழையும் அவன் பாட ஆரம்பிக்கிறான்.
"தனிமையில் உள்ளம் தவிக்கையில் அதை என் குரலாக்குவேன்!
மனவலி எல்லை தாண்டும்போது அந்தக் குரலெடுத்து பாடிடுவேன்!"
அடுத்த மூன்று நிமிடத்தில் அவர்கள் எல்லாரையும் தன் பாட்டுக்கு ஆட வைக்கிறான். அவள் நெஞ்சுக்குள் புகுந்து தேடவைக்கிறான்... (படம்: Chahat. லிங்க் கீழே)
அந்த எளிமை.. அந்த innocence.. அந்தத் துள்ளல்! உற்சாகம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது . அந்த நடிப்பில் எல்லார் இதயத்திலும் சம்மணம் இட்டு உட்கார்ந்து விடுகிறார் அவர்! கிங் கான் என்று அழைக்கப்படுவதில் ஆச்சரியமே இல்லை.
ஷாரூக் கான்... இன்று பிறந்த நாள்.. !
ராஜ்கபூர், திலீப்குமாருக்குப் பிறகு ரசிகர்களின் மன ராஜ்யத்தைப் பிடித்துக்கொண்ட பெரிய நட்சத்திரம்!
சேல்ஸ்மேன் ஆகத் தொடங்கியவரின் படங்களின் சேல்ஸ் வானைத் தொடுகிறது.
முறையாக நடிப்பைப் பயின்று கொண்டவர் முதலில் தொடங்கியது டிவி சீரியல்களில். திரையுலகில் நுழையும் போதே சிறந்த புதுமுக நடிகருக்கான ஃபிலிம் ஃபேர் அவார்டை பாக்கெட்டில் செருகிக் கொண்டவர் ('Deewana'). அடுத்த வருடமே சிறந்த நடிகராக 'Baazigar' படத்துக்காக, அதே வருடத்தில் சிறந்த வில்லனுக்காக நாமினேஷன் 'Darr' படத்துக்காக என்று அசத்தியவர்.
அப்புறம் DDLJ ('Dilwale Dulhaniya Le Jayenge') வந்ததும் ஷாரூக் நம்ம வீட்டு பையன் ஆனதும் ஊருக்குத் தெரியும். Tom Cruise நடிக்கவிருந்த படம் அது. என்னவொரு வெற்றி! வருடங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தன, படம் தியேட்டரை விட்டு மாறவில்லை.
Kuch Kuch Hota Hai... Devdas... Chak De! India...சொல்லணுமா ஒவ்வொன்றாக?
உலகின் 50 பிரபல மனிதர்களின் ஒருவராக Newsweek தேர்ந்தெடுத்தது. திரையில் முன்னால் இருக்கும் இவர் ஏராளமான நற்பணிக் காரியங்களுக்குப் பின்னால் இருக்கிறார்.
அங்கே ஒரு படத்தில் ('Shakthi') கழுத்தைக் காயப்படுத்திக் கொண்டது, இங்கே ஒரு படத்தில் ('Darr')விலா எலும்பை உடைத்துக் கொண்டது என்று ஒன்றி விடும் நடிப்புக்கான விலையை ஒன்றுவிடாமல் கொடுத்தவர்.
ரொம்பவே மெனக்கெட்டது ‘My Name Is Khan’ படத்துக்குத்தான்! 'Titanic' ஜேம்ஸ் காமெரான் பாராட்டிய நடிப்பு அது. Asperger’s Syndrome இல் பாதித்தவரின் பாத்திரம். காரக்டராகவே வாழ்ந்து, விவரம் படித்துக் குவித்து, பாதித்தவர்களுடன் பழகி..
திலீப் குமார் 1957இல் Filmfare Best Actor Award வாங்கிய அதே தேவதாஸ் பாத்திரத்துக்கு 2003இல் இவர் வாங்கினார். அவர்போல் மிகவும் அதிகமுறை அந்த அவார்டை வாங்கியது இவரென்பதும் ‘ஷா’தனை தான். இதுவரை 8. (25 நாமினேஷன்)
மறுத்ததற்காக வருந்திய படம் '3 Idiots'. What a miss!
"என்னை முதலிடத்தில் வைத்திருக்கும் ரசிகர்களுக்கு என்ன கைமாறு செய்யப்போகிறேன்? கடைசிவரை நடித்துக் கொண்டிருப்பதுதான்!"
அமிதாப்! கமல்! நஸிருதீன் ஷா! நானா படேகர்! என்று வியக்கிறார் இவர். "நான் எவ்வளவோ தூரம் போகணும்!" என்னவொரு தன்னடக்கம்!

ஏழு படங்களில்...


ஏகாந்தமாக குதிரையில் சவாரி செய்து கொண்டிருக்கிறாள் அந்த லேடி. குதிரை வழியில் மக்கர் பண்ணுகிறது. ஆளற்ற வனாந்திர பகுதி! என்ன செய்வது? விழிக்கிறாள். அந்த நேரம் அங்கே வரும் இளம் ஷெரீஃப் அதன் காலைப் பார்த்து, அடிபட்ட இந்த குதிரையால் இனி நடக்க முடியாது என்று தன் குதிரையில் ஏற்றிக்கொண்டு செல்வதாக சொல்கிறார்.
‘நல்ல வேளை, நீங்கள் தற்செயலாக இங்கே வந்தீர்கள்!’ என்கிறாள் அவள் நன்றியுடன். ‘நான் தற்செயலாக வரவில்லை,’ புன்னகைக்கிறார், ‘தினசரி காலையில் நீங்கள் இப்படி செல்வீர்கள் என்று தெரியும்.’ புரிந்து கொண்டு வெட்கம் அடைகிறாள்.
‘Gunfight at the O K Corral’ படத்தில் வரும் இனிய காட்சி. அந்த நடிகர்…
Burt Lancaster. இன்று பிறந்த நாள்…



ஐரிஷ்காரர்களை சிக்கனத்துக்கு பேர் போனவர்கள் என்று சொல்வார்கள். ஆனால் இந்த ஐரிஷ் வம்சாவழி நடிகர் தாராளமாக நடிப்பை வாரி வழங்கினார் பல வித்தியாசமான ரோல்களில்.
உதட்டின் கடைவாயில் ஒரு மென் சிரிப்பு ஒளிர்ந்து கொண்டே இருக்கும். தீர்க்கமான உச்சரிப்பும் சரி, அந்த இன்னொசன்ட் சிரிப்பும் சரி ஏகப்பட்ட ரசிகர்களை திரட்டி இருந்தது.
30 வயதுக்கு மேல் திரைக்கு வந்தாலும் முதல் படமே பராசக்தி அவருக்கு. ஆமா, ‘The Killers’ அவரை உயரத்துக்கு ஏற்றி விட்டது. தன் வீரத்தை சர்க்கஸில் காட்டிவிட்டு தீரத்தை ரெண்டாம் உலக யுத்தத்தில் காட்டிவிட்டு திறமையை நடிப்பில் காட்ட வந்தவர். சர்க்கஸ் அனுபவத்தை பிற்பாடு ‘The Trapeze’ இல் சக்சஸ்ஃபுலாக பிரயோஜனப் படுத்தினார்.
‘Rainmaker’ ஒரு அற்புதமான படம். வறட்சி வாட்டும் கிராமத்தில் வாடும் தன் ஆடு மாடுகளுக்காக வருந்துகிறாள் லிஸி. வயதாகியும் கல்யாணம் ஆகவில்லையே என்று வருந்துகிறார்கள் அவள் பெற்றோர். அவள் காதலிக்கும் அந்த ஊர் ஷெரீஃப் உள்பட யாருமே அவளை கண்டுகொள்ளவில்லை. வந்து சேருகிறான் அந்த ஊருக்கு ஒரு செப்புடு வித்தைக்காரன். மழை வரவழைக்கிறேன் பேர்வழி என்று. அவள் அப்பாவும் அவனை நம்பி பணம் கட்டுகிறார். அவனை கையும் களவுமாக பிடிக்க வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு கிளம்புகிறார் ஷெரீஃப். ஆனால் அவன்தான் லிஸியைக் கண்டு கொள்கிறான். உற்சாகமாக அவளிடம் பழகுகிறான். தன்னை ஒருவன் விரும்பும்போது ஒரு பெண்ணின் மனம் எத்தனை அழகாக பூக்கிறது! கடைசியில் மழையும் பெய்து விடுகிறது! வித்தைக்காரனாக நடிப்பில் வித்தை காட்டியிருப்பார்.
‘பென்ஹர்’ ஹீரோவாக நடித்திருக்க வேண்டியவர். 10 லட்சம் டாலருடன்வந்த சான்ஸை உதறி விட்டார். ஆனால் இவர் முயற்சித்தும் கிடைக்கவில்லை ‘Godfather’ ரோல்.
அமெரிக்கன் ஃபிலிம் இன்ஸ்டியூட் ஐம்பது அமோக நட்சத்திரங்களில் முப்பத்தி ஒன்பதாவது என்றது. எம்பயர் பத்திரிகையும் என்டர்டெய்ன்மென்ட் வீக்லியும் போட்டி போட்டுக்கொண்டு இவரை தங்கள் டாப் லிஸ்ட்களில் ஏற்றிக்கொண்டனர்.
மசாலா படங்களில் நடித்து மௌஸை ஏற்படுத்திக்கொண்டு அதைவைத்து தரமான பாத்திரங்களை நடிக்கத் துடித்தவர் இந்த கென்னடியின் நண்பர். நாலு அகாடமி நாமினேஷனில் ‘Elmer Gantry’ ஆஸ்கார் அவார்டு வாங்கி தந்தது.
டீன் மார்டினுடன் நடித்து அமோக வசூலைக் குவித்த படம் அந்த ‘ஏர்போர்ட்’ (1970). ஆனால் அதெல்லாம் ஒரு படமா என்கிறார்.
கிளார்க் கேபிளுடன் நடித்த ‘Run Silent, Run Deep’ படமாகட்டும்... ஆட்ரி ஹெபர்னுடன் நடித்த ‘The Unforgiven’ ஆகட்டும், தன் முத்திரை தான் பதித்துவிடுவார் அழகாக. பொதுவாக பிரபல நடிகர் பெயரைச் சொன்னதும் அவருடன் நடித்த பிரபல ஹீரோயின் நினைவுக்கு வருவார். ஆனால் இவர் பெயரைச் சொன்னதும் பலர் நினைவுக்கு வருவது Kirk Douglas! ஏழு படங்களில் இவருடன் நடித்த மற்றொரு பிரபல நடிகர். போட்டி போட்டுக்கொண்டு கலக்குவார்கள்.
H G Wells இன் பிரபல நாவல். ‘The Island of Dr. Moreau’ படத்தில் விலங்குகளை அரை மனிதர்களாக மற்றும் விசித்திரமான டாக்டரின் பாத்திரத்தில் இவர். இதே படத்தின் ரீமேக்கில் மார்லன் பிராண்டோ செய்தார் அதை.
‘List of Adrian Messenger’ படத்தில் 12 பிரபல நடிகர்களுடன் இவரும் கேமியோவாக வந்தார். முடிந்தால் கண்டுபிடியுங்கள்.
அப்பாவுக்கு மகன் திரைக்கதை எழுதும் சந்தோஷம் எத்தனை பேருக்கு கிடைக்கும்? இவருக்கு கிடைத்தது. படம் ‘The Bad News Bears’ மகன் Bill Lancaster.
Quotes? ரொம்ப அழகாக வாழ்க்கையை சொல்லிவிட்டார், ‘வாழ்க்கை என்பது நீங்கள் என்ன ஆக விரும்புகிறீர்களோ அதை உங்கள் அறிவின் வட்டத்துக்குள் வாழ வேண்டியது’ என்று.
'கொஞ்ச நாளில் நாம் எல்லோரும் மறக்கப்பட்டு விடுவோம். ஆனால் நம் சிறந்த படங்கள் நிற்கும். அந்த நினைவுச் சின்னங்கள்தான் வேண்டியது.'

Friday, October 31, 2025

பெரும் மனிதநேயர்...

மன முறிவு ஏற்படும் போல தோன்றினால் ஒருவன் என்ன செய்ய வேண்டும் என்று இந்த மன நல மருத்துவரை கேட்டார்கள். சொன்னது: ‘வீட்டைப் பூட்டிக் கொள். ரயில்வே ட்ராக் ஓரமாக நடந்து போ. உதவி தேவைப்படும் ஒருவனைக் கண்டுபிடி. அவனுக்கு ஏதாவது செய்!’
Karl Menninger ... (1893 - 1990)
வெறும் மனோதத்துவ டாக்டர் மட்டுமல்ல, பெரும் மனிதநேயர். ஆதரவற்றோர்களுக்காக பாடுபடுவதை தன் முக்கிய வேலையாக வைத்திருந்தார்.
சிகிச்சையை மையப்படுத்தும் ஸிக்மண்ட் ஃப்ராய்டிலிருந்து ஸிக்னிஃபிகன்டாக வேறுபடும் இவர் சூழ்நிலை முக்கியம் என்று கருதுபவர். சொல்லும் ஒரு முக்கியமான விஷயம், ‘பெற்றோரின் நேசம் கிட்டாததே பெருமளவு மனநிலை பிறழ்வுக்குக் காரணம். நிறைய குற்றங்களுக்குப் பின்னணியில் இருப்பது இந்த மனநிலைத் தடுமாற்றங்களே!’
மனோ வைத்தியம் வழியாக குற்றங்களை பெருமளவில் தடுத்துவிடலாம் என்று நம்பும் இவர் மனநிலை பாதித்தவருக்கும் மற்றவருக்கும் உள்ள இடைவெளி மிகக் குறைவே, என்கிறார்.
மாணவர்களுக்காக இவர் எழுதிய ’The Human Mind’ மற்றவர்கள் இடையேயும் மகா பிரசித்தம். இவரது மெனிஞ்சர் கிளினிக், 1920 இல் தொடங்கியது, உலக அளவில் பிரபலம்.
வேலை, வேலை என்று மெனக்கெடும் மெனிஞ்சர், ‘மனிதன் கவனம் செலுத்தும் எந்த விஷயமும் மனோ தத்துவத்திற்கு அப்பால் இல்லை; ஆகவே எனக்கு பொழுதுபோக்கு என்று தனியாக எதுவும் இல்லை; எல்லாமே என் வேலைக்குள் வந்துவிடுகிறது!’ என்கிறார்.
ஒரு போடு போடுகிறார் பாருங்கள்! ‘நார்மலாக இல்லாதவற்றை அச்சத்துடன் மட்டுமே பார்க்கும் மனநிலையும், சராசரியாக இருப்பதில் மன திருப்தியுடன் இருப்பதும் மனிதர்களின் அறியாமையே. எதையாவது சாதிக்கும் எவருமே அடிப்படையில் இயல்பு நிலையில் (normal) இல்லாதவர்கள் தாம்.’
மின்னும் வார்த்தைகள் இன்னும் சில...
‘பெற்றோரின் நேசம் குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு மிக முக்கியம்; மனோதத்துவ டாக்டரைவிட மேலாக!’
‘நம்மை நேசிப்பவர்களாலும் நேசிக்க மறுக்கிறவர்களாலும் நம் வாழ்க்கை அமைக்கப்படுகிறது.’
‘எப்படி இருக்கிறார் ஆசிரியர் என்பது, என்ன போதிக்கிறார் அவர் என்பதைவிட முக்கியமான
து.’
‘அன்பு மனிதர்களைக் குணப்படுத்துகிறது. அதைக் கொடுப்பவர்களையும் பெறுபவர்களையும்!’
‘ஒருவனுக்கு மூன்று வேளை சோறு கிடைப்பதும், செய்வதற்கு ஜோலி நிறைய இருக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டியதும் முக்கியம்!’
‘குழந்தைகள் எப்படி நடத்தப்படுகிறார்களோ அதை அவர்கள் சமூகத்துக்கு செய்கிறார்கள்.’
‘கவனித்து கேட்பது ஓர் அதிசய, வசீகரமான விஷயம். நம்மைக் கவனித்துக் கேட்பவர்களை நோக்கி நாம் நகர்கிறோம்.’
‘குழந்தைப் பருவத்தில் அனுபவிக்கும் உணர்வுகளை வளர்ந்தபின் மனிதர்கள் வெளிப்படுத்துகிறார்கள். நான் மருத்துவம் பார்த்தவர்களில் நிறைய பேருக்கு அந்த வைத்தியம் தேவைப்பட்டிருக்காது, சிறு வயதில் அவர்கள் சரியாக வளர்க்கப்பட்டிருந்தால்.’
'தன்னை நேசிப்பது என்பது மற்றவரை நேசிப்பதற்கு எதிரானதல்ல; மற்றவருக்கு ஒரு உதவி செய்யாமல் தன்னை நேசிக்கவோ தனக்கு உதவவோ முடியாது.'
'அறிவின் குரல் அச்சத்தின் கர்ஜனையால் மூழ்கடிக்கப்பட்டு விடுகிறது.
ஆசையின் குரலால் புறம் தள்ளப்படுகிறது. வெட்கத்தின் ஒலியினால் மறுக்கப்படுகிறது. வெறுப்பால் மாறுபாடு அடைகிறது. கோபத்தினால் மறைக்கப்பட்டு விடுகிறது. எல்லாவற்றையும் விட அறியாமையால் வாய் மூடப்பட்டு விடுகிறது.'
‘அச்சங்கள் கற்பிக்கப்படுகின்றன நம்முள். அதேபோல், கற்று வெளியேற்றியும் விடலாம் அவற்றை.’
முத்தாய்ப்பாக இது: ‘Unrest of spirit is a mark of life.’