Thursday, August 6, 2020

சிறுகதையின் தந்தை...

அந்தக் கதையை அனேகமாக நீங்கள் படித்திருப்பீர்கள். பல மொழிகளில் வெளியான பிரபல கதை...
அவளுக்கு படோபடோபமாக உடுத்துவதிலும் பளிச்சென்று நகையணிவதிலும் கொள்ளை ஆசை. கணவனோ ஒரு சாதாரண வேலையிலிருப்பவன். சராசரி உணவிலேயே மகிழ்பவன். இந்த சாதா வாழ்க்கையில் சதா மனம் வெம்பி வாடுகிறவளை குஷிப்படுத்த அவன் ஒருநாள் பெரிய பார்ட்டி ஒன்றுக்கு அழைப்பைக் கொண்டு வருகிறான்.
அவளோ, "என்னத்தை அணிஞ்சிட்டுப் போறது அங்கே? எல்லா பெண்களும் பிரமாதமா வந்திருப்பாங்களே!" யோசித்து யோசித்து கடைசியில் அவளது பணக்கார பால்ய தோழியிடம் சென்று நகை இரவல் கேட்கிறாள். சம்மதித்த அவளிடமிருந்தவற்றில் ஒரு டைமன்ட் நெக்லஸைப் பொறுக்கி எடுக்கிறாள். போட்டுக் கொண்டு பார்ட்டிக்கு போனால் எல்லாரும் அவளைக் கவனிக்க அவள்தான் centre of attraction. ஒரே உற்சாகம்.
காலை நாலு மணிக்கு டாக்ஸி பிடித்து வீட்டுக்கு வந்தால் கழுத்தில் நகையைக் காணோம். எங்கே போனது? வழிநெடுக தேடிப் பார்க்கிறான். கிடைக்கவில்லை. இப்ப என்ன செய்வது?
கடையில் கேட்டால் அதைப் போல ஒரு நகை 40000 என்கிறார்கள். அவனுடைய சேமிப்புகள் இதற்கு உறை போடக் காணாது. சுற்றிச் சுற்றி கடன் வாங்குகிறார்கள். கடையில் நகையை வாங்கி ஸாரி ஃபார் டிலே சொல்லிக் கொடுக்கிறாள் தோழியிடம். சலிப்புடன் அதை வாங்கி கொள்கிறாள் தோழி.
கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டுமே? அன்றிலிருந்து நல்ல உழைக்கிறாள். வேலைக்காரியை நிறுத்திவிட்டு வீட்டில் உள்ள எல்லா வேலையையும் செய்கிறாள். அவன் இன்னொரு பார்ட் டைம் வேலையையும் செய்ய, சிறுகச் சிறுக சேமிக்கிறார்கள். பத்து வருட உழைப்பு. எல்லா கடனையும் அடைத்து நிம்மதி பெருமூச்சு! நினைக்கிறாள். ‘சின்ன ஒரு விஷயம் வாழ்க்கையை எப்படிப் புரட்டிப் போட்டு விடுகிறது!’
ஒருநாள் வழியில் தோழியை காணுகிறாள். இப்போது அவளிடம் நடந்ததை சொல்வதில் எந்த தயக்கமும் இல்லை இவளுக்கு. சொல்கிறாள். அவள் கேட்கிறாள்: “உண்மையான வைர நெக்லஸா வாங்கி கொடுத்தே எனக்கு? அது வெறும் கவரிங் தானே?”
மாப்பசானின் பிரபல கதை இது..
Guy de Mauppasant ... Aug.5. பிறந்த நாள்! (1850 -1893)
ஆறு நாவல்கள் எழுதி இருந்தாலும் அறியப்படுவது சிறுகதைக்காகவே... சிறுகதையின் தந்தை என்று! இவரால் கவரப்பட்டவர்களில் ஒருவர் ஓ ஹென்றி. இன்னொருவர் சாமர்செட் மாம்.
Quotes? ‘கல்யாணத்தைப் பண்ணி மகிழ்ச்சி இல்லாமல் இருப்பதைவிட காதலித்து மகிழ்ச்சி இல்லாமல் இருப்பது நல்லது; ஆனால் சிலருக்கு ரெண்டுமே வாய்த்து விடுகிறது!’
‘வாழ்க்கையில் ஒரே ஒரு நல்ல விஷயம் தான் உண்டு அதுதான் அன்பு!... காற்றை சுவாசிப்பது போல அன்பை சுவாசிப்போம்; எண்ணங்களை ஏந்துவதுபோல எப்போதும் அதை ஏந்துவோம். அதைவிட வேறொன்றும் இல்லை நமக்காக இங்கே.’

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!