Thursday, September 6, 2018

காலம் சார்ந்தும்...(நிமிடக்கதை)


அன்புடன் ஒரு நிமிடம் - 127

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாள் யமுனா. இது மூன்றாவது முறை. சொல்லிவிட வேண்டியதுதான்.

அப்போதுதான் அவன் நண்பன் விஸ்வா வந்துவிட்டுப் போயிருந்தான். வழ்க்கம்போல் உற்சாகமாக ஆரம்பித்தான் வினோத்.  

"நினச்சாலே ஆச்சரியமா இருக்கு. நாங்க ரெண்டு பேரும் ஒண்ணாப் படிச்சவங்க. இப்ப நான் சேல்ஸ் எக்ஸிகியூடிவா இருக்கேன். அவனைப் பாரு, ஒரு சாதாரண ஸ்டில் ஃபோட்டோகிராஃபரா... நிலையான சம்பளம் இல்லாம.. வர்ற ஆர்டர்களை நம்பிக் கொண்டு... எங்க ரெண்டு பேரையும் கம்பேர் பண்ணினா என் லெவலுக்கு அவன் ஐம்பது பர்சண்ட்தான் வந்திருக்கான்.”

 ”மெதுவா மெதுவா.. அவர் பைக் இன்னும் வீட்டைவிட்டுப் போகலே.. சரி, நல்லா யோசிச்சுப் பார்த்துத்தான் சொல்றீங்களா?”

“ஆமா நீயே சொல்லு. இப்ப அவனோட மாத வருமானம் சராசரியாப் பார்த்தா பதினையாயிரம் வருது. அப்பா அம்மாவோட ஆறு பேர் கொண்ட குடும்பம்.  நாம மூணே பேருக்கு என் வருமானம் இருபதாயிரம்.”

புன்னகையுடன் சொன்னாள்,  ”இப்ப நான் சொல்றதை கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. உங்க ரெண்டு பேரோட வெற்றியையோ வாழ்க்கையையோ ஒப்பிட்டுப் பார்க்கிறதுன்னா நிச்சயமா அது இப்படியில்லே. கம்பேர் செய்வதானால் உங்க ரெண்டு பேரையுமே உங்க வயசையொட்டிய ஒரு ஐடியல் பர்ஸனோடு அல்லவா பண்ணிப் பார்க்கவேண்டும்? உங்க வயசில் ஒரு சராசரி நபர் எந்த உயரத்துக்குப் போக முடியும், எத்தனை சாதிக்க முடியும் வாழ்க்கையில் அப்படீன்னு ஒரு அளவுகோலை வெச்சு அந்த அளவுக்கு நீங்க மேலேவா, சமாமாகவா அல்லது கீழேவா எங்கே வந்திருக்கிறீங்கன்னு பார்க்கணும். அடுத்தது, அப்படி பார்த்தால்  நீங்க ரெண்டு பேருமே அந்த லெவலுக்குக் கீழேதான் வருவீங்கன்னு நான் நினைக்கிறேன்.”

யோசித்தான்.  ”உண்மைதான். முப்பத்தஞ்சு வயசில் ஒரு சராசரி மனிதன் இன்னும் மேலே போக முடியும்..ஆனாலும் அதில நான் அவனை விட ரொம்பவே முன்னாடி இருக்கேன். பரவாயில்லே.”

சிரித்தாள். ”ரெண்டு பேருமே பின் தங்கி இருக்கீங்க. அதிலே என்ன முன்பின் ஆறுதல்?” என்றாள், ”அதுவும் தவறு. உங்க அப்பா வசதியான பிசினஸ்மேன். நல்ல சாப்பாடு, ட்யூஷன்னு உங்க வளர்ப்பே வேறே. அவரோ ஒரு அட்டெண்டரோட மகன். சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டதா சொல்லியிருக்கீங்க. அந்த சூழ்நிலையில அவர் இத்தனை முன்னேறினதே பெரிய விஷயம். உங்க சூழ்நிலைக்கும் வளர்ப்புக்கும் நீங்க இன்னும் நிறைய படிச்சிருக்கணும். இன்னொண்ணு, அவர் குடும்பம் பெரிசு. பொறுப்பு ஜாஸ்தி. கிடைக்கிற. நேரம் கம்மி. உங்களுக்கோ ரெண்டே பேர் குடும்பம். கிடைக்கிற டைமுக்கு நல்லா ஓடியாடி உழைச்சு கிடுகிடுன்னு இன்னேரம் ஒரு ஏரியா மானேஜரா ஆகியிருக்கணும்.” 

”அதுவும் சரிதான்.”

”இன்னும் ஒரு விஷயம். இப்ப கூட அவர் கையில் வைத்திருப்பது ஒரு கலை. ஃபோட்டோகிராபி. அதில் திறமைசாலி வேறே. ஒரு வேளை நாலைஞ்சு வருஷத்தில் அவர் பெரிய ஆளாகிவிடலாம். மாதம் அம்பதாயிரம் அறுபதுன்னு வரலாம். அந்த ஸ்கோப் உங்களுக்கு இல்லே. அதனால உங்க கம்பாரிஸன் காலத்துக்கும் கட்டுப்பட்டதுதான்.” 

”உண்மை,” என்றான் கர்வம் அகன்றவனாக.

><><><
('அமுதம்' அக். 2015 இதழில் வெளியானது)

3 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு.

திண்டுக்கல் தனபாலன் said...

உணர்த்திய விதம் அருமை...

கே. பி. ஜனா... said...

வெங்கட் நாகராஜ்; திண்டுக்கல் தனபாலன்: மிக்க மகிழ்ச்சி... நன்றி.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!