Monday, August 3, 2026

மென்மையில் மேன்மை...


பாடலெழுத வாய்ப்புக் கேட்டு தன்னிடம் வந்தவரிடம் பிரபல இசையமைப்பாளர் நௌஷத், “உங்க மொத்த கவிதைத் திறமையையும் ரெண்டே வரியில சொல்லுங்க பார்ப்போம்!” என்றாராம். சொன்னார் அவர்:
“வலியின் வேதனையை இந்த உலகம் கேட்கச் செய்வோம்;
அன்பின் நெருப்பை ஒவ்வோர் இதயத்திலும் பற்ற வைப்போம்.”
உடனே தான் இசையமைக்கும் படத்துக்கு அவரைப் பாடலெழுதச் சொல்லிவிட்டார் நௌஷத். அந்தக் கவிஞர்...
Shakeel. மென்மையான கவிதைகள் எழுதுவதில் மேன்மையானவர். இன்று பிறந்த நாள்.
நௌஷத் அவர்களின் ஆஸ்தான பாடலாசிரியர் ஆனார். 'கங்கா ஜமுனா'வில் வைஜயந்திமாலா பாடும் அந்த ‘Do Hanson Ki Joda… Bichchad Gayo Re..” ஆல் இந்தியா ஹிட் பாடல். ஒலிக்காத திசையில்லை, உருகாத நெஞ்சமில்லை.
ஷகீல் எனறதுமே கைகள் தாமாகத் தட்டும் பாடல் ‘மொகலே ஆஸம்’ படத்தின் மகா பிரபல “Pyar Kiya To Darna Kiya..” 100 தடவைக்கு மேல் எழுதினாராம் இந்தப் பாடலை!
தவிர ஹேமந்த் குமார், ரவி, S.D.பர்மன் படங்களுக்கும் பரிசுப் பாடல்கள்…
திலீப் குமாருக்கு மிகவும் பிடித்த பாடல் இவரது "Madhuban Mein Radhika...” இந்தப் பாடல் காட்சியில் நடிக்க திலீப் 6 மாதம் சிதார் கற்றுக் கொண்டாராம்.
1961, 62, 63 என்று அடுத்தடுத்து மூன்று வருடமும் சிறந்த பாடல் Filmfare அவார்ட் இவருக்குத்தான். (Chaudwin Ka Chand, Gharana, Bees Saal Baad) பங்கஜ் உதாஸ் பாடிய சில கஜல்கள் இவர் எழுதியவை.
பரிசு பெற்ற இவரது “Husnvale Tera Jawab Nahi..” (Gharana) பாடலின் ஒரு வரி: “காற்றில் கரைந்திருக்கும் கதைகளின் மௌனம் உன் அதரங்களில் உறைந்திருக்கும்…”
மற்றொரு பாடலான “Chaudwin Ka Chand...” பற்றி சொல்லத் தேவையில்லை. “பதினான்காம் நாள் நிலவோ நீ... அல்லது பகலவன் தானோ?”
ரசியுங்கள், அந்த 'கங்கா ஜமுனா' பாடல் வரிகளை தமிழில் தருகிறேன்:
"அன்னமிரண்டு பிரிக்கப்பட்டன..
என்ன நியாயம்? என்னே துயரம்!
மகிழ்வில் இணைந்திருந்தோம்,
துயரில் சேர்ந்தில்லையே?
கண்ணீரோடையில் கண்கள் மூழ்கின
கனவுகளனைத்தும் கண்ணில் நொறுங்கின!"

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!