Saturday, April 1, 2023

விதை? இவர் போட்டது!


இன்றைக்கு துப்பறியும் நாவலின் அபார வடிவம் அறிவீர்கள். ஆனா விதை? இவர் போட்டது! இவர் அமைத்த ட்ராக்கில்  இன்றுவரை க்ரைம் நாவல் ரயில் ஓடுகிறது. 

Edgar Wallace! இன்று பிறந்த நாள்.


அவரது உச்சப் புகழ்  காலத்தில் இங்கிலாந்தில் வாசிக்கப்பட்ட நாலு புத்தகத்தில் ஒன்று அவருடையது. மட்டுமா? மிக அதிகமாக (160) படமாக்கப்பட்ட நாவலாசிரியர்களில் ஒருத்தர்.  எழுதிய 170 நாவலுமே பெஸ்ட் ஸெல்லர். எழுதிக் குவித்தார். ரெண்டு செக்ரட்டரிக்கும் மூணு டிக்டேஷன் மெஷினுக்கும் ஒரே சமயத்தில் நாவல், நாடகம், கதை என்று நாளை நடத்திக் கொண்டிருப்பார். ‘One man writing machine’ அப்படீம்பாங்க. 72 மணி நேரத்தில் ஒரு நாவல் எழுதி விடுவார்.


1890 -களில் ஆப்பிரிக்காவிலிருந்து கட்டுரைகளை பிரிட்டனுக்கு அனுப்பிக் கொண்டிருந்தபோது தவறுதலா வேறொரு பத்திரிகைக்கு சென்றுவிட்டது ஒரு கட்டுரை. அவங்களுக்கு பிடிச்சுப் போச்சு. அவங்க வாங்கி பிரசுரிக்க ஆரம்பிக்க, அந்த The Daily Mail இல் எடிட்டரானபோது சம்பளம் அப்போதே 4000 டாலர்!


கிரைம் ரிப்போர்ட்டராக வேலை பார்த்ததாலோ என்னவோ, உண்மைகளோடு ஒட்டி உறவாடியதால், தன் கதைகளில் பிளாட், ஃபார்முலா என்றில்லாமல் பல கோணங்கள், பல பாத்திரங்கள், பல மனப்பாங்குகள் என்று பிரமாதப் படுத்தியிருப்பார்.


சட்டத்தினால் தண்டிக்க முடியாத குற்றவாளிகளைக் கண்டறிந்து தாங்களே தண்டனை வழங்குவதற்கு ரகசிய சங்கம் அமைத்த  நாலு புள்ளிகளின் கதை தான் இவர் எழுதிய முதல் மிஸ்டரி நாவல் ‘The Four Just Men.’  கையோடு அதை தானே பப்ளிஷ் செய்ய விரும்பியவர்  கையை சுட்டுக் கொண்டார். விளம்பரத்துக்காக கொலைகாரனை கண்டுபிடிங்கள் போட்டி (அட்டையில்:  'சுவையான ஒரு கதையைப் படிப்பதோடு முடிவில் யார் கொலை செய்தது என்பதைக் கண்டு பிடித்து படிவத்தை நிரப்பி அனுப்புபவர்களுக்கு பரிசு 500 பவுண்ட்!') நடத்தியதில் பின்னும் நஷ்டம், ஒருவருக்குத்தான் பரிசு என்று அறிவிக்கத் தவறியதால்.




துணை நடிகை அம்மாவால் பாராமரிக்க முடியவில்லை.. ஆதரித்த தம்பதி தத்தெடுக்க அங்கே அக்கா க்ளாராவின் ஊக்குவிப்பில் வளர்ந்தவர். வேலைக்காக அலைந்தபோது… கப்பலில் சமையல் வேலை தெரியும் என்று ஏறியவர் தவறை உணர்ந்து அடுத்த கரையில் இறங்கி லண்டனுக்கு வழி நடந்த நாட்கள் முப்பது.


ஷெர்லக் ஹோம்ஸ் துப்பறியும் கானன் டாயிலின் ‘The Hound of the Baskerville’  நாவலுக்கு திரைக்கதை எழுதி இருக்கிறார். மற்றொரு முக்கியப் படம் ‘King Kong’  தவிர நிறைய படங்களுக்கு ‘ஸ்கிரிப்ட் டாக்டரா’க இருந்திருக்கிறார்.


டி.வி.யில் ஓடிய  Edgar Wallace Mystery Series இல் வந்த படங்கள் 48. இன்னொரு பக்கம் Edgar Wallace Mystery Magazine  என்று ஒன்று மூன்று வருடங்கள் வெளிவந்தது.


ஒரு நண்பர் இந்த எழுத்தாளருக்கு போன் செய்தார். 'அவர் புது நாவலை எழுதிக் கொண்டிருக்கிறார்,' என்று பதில் கிடைத்தது.

'பரவாயில்லே, காத்திருக்கிறேன்!' என்றாராம் அந்த நண்பர்.


நிறைய சம்பாதித்தார். இன்னும் நிறைய செலவழித்தார். கடைசியில் விட்டுப் போனதென்னவோ கடன் தான். பொதுவாக வாழ்வின் பின் பிரபலமடையும் எழுத்தாளர்கள் அநேகம். ஆனால் இவரைப் பொறுத்தவரை வாழும் பொழுது பிரகாசித்த அளவு பின்னர் அவர் புகழ் பாடப் பெறவில்லை...  எழுதிக் குவித்தவரை எளிதாக மறந்து விட்டார்கள் பலர். 


பஞ்ச்:

பூட்டிய அறைக்குள் அந்த நபர் கொல்லப்பட்டு கிடக்கிறார் செயரில் உட்கார்ந்தபடியே. அறை வெளியே பூட்டி இருக்கிறது. அறைச் சாவியோ அவர் பாக்கெட்டில்.  எப்படி நடந்தது கொலை?  அவரது ஃபேமஸ் நாவல் ‘The Clue of the New Pin’ -இன் knot இது. 

அட்டகாசமாக அவிழ்த்திருப்பார் முடிச்சை.


No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!