Sunday, May 17, 2020

ராகத்தின் ராணி...


“ஓ.. தேவதாஸ்..” என்று 17 வயது சாவித்திரி பாடிக்கொண்டே வரும்போது கூடவே நம் மனதில் நுழைந்த 15 வயது குரல் இவருடையது. அதற்கு முன்பே 7 வயதிலேயே ‘தியாகய்யா’ தெலுங்குப் படத்தில் பாட ஆரம்பித்திருந்தார்.
ஜமுனா ராணி. இன்று பிறந்தநாள்!
இந்த வயலின் குரலுக்கு சொந்தக்காரரின் அம்மா ஓர் வயலினிஸ்ட். தந்தை ஆபீஸர் தனியார் நிறுவனத்தில். கிட்டத்தட்ட 6000 பாடல்கள். 1950, 60 களில் அனைத்து இசையமைப்பாளர்கள் பாடல்களிலும்..
முத்திரை பதித்த முதல் பெரிய ஹிட் ‘குலேபகாவலி’யில். கெஞ்சலும் கொஞ்சலுமாக அந்தப் பாட்டு! “ஆசையும்… (விக்கல்) என் நேசமும்..” அந்த அட்டகாசமான பாடலை இந்திப் பதிப்பிலும் அதே அழகுடன் பாடியிருந்தார். (“Aaj Tu In Nainan…”) இப்போது கேட்டாலும் குரலின் வசீகரம் தனியே தெரியும்.
அதே ராஜ சுலோச்சனா “ஆசை அன்பெல்லாம் கொள்ளை கொண்ட நேசா.. பேசும் ரோஜா என்னைப் பாரு ராஜா!” என்று ‘ஆசை’ படத்தில் ஆடிக்கொண்டே வருவதும் இவர் பாட்டு தான்.
நீங்கள் "பாட்டொன்று கேட்டு பரவசமானால்..." அது அனேகமாக ‘பாசமலரி’ல் இவர் பாடியதாக இருக்கும். ‘அன்பு எங்கே’யில் “பூவில் வண்டு போதை கொண்டு தாவு”வது இவர் குரலினிமையாலும் இருக்கலாம். ‘மாலையிட்ட மங்கை’யில் பாடிய “செந்தமிழ் தேன்மொழியாள்..” நீண்ட காலத்துக்கு அந்தத் தேன்மொழியை நினவில் வைத்திருந்தோம்.
மூன்று பாடகிகள் பாடும் “யாரடி நீ மோகினி” பாடலில் இவர் குரல் தன் தனித்தன்மையால் கவரும். “தேன் வேணுமா? நான் வேணுமா?”
‘கவலை இல்லாத மனிதனி'ல் இவரது “காட்டில் மரம் உறங்கும்..” கானத்தில் மனம் கிறங்கும். ‘ராணி சம்யுக்தா’ வில் உருக்கமாகப் பாடினார் ஒரு பாடல்: “சித்திரத்தில் பெண்ணெழுதி..” கேட்டால் மறக்க முடியாதது.
லிஸ்டில் டாப் சாங் “மாமா.. மாமா.. மாமா..”தான்.(‘குமுதம்') “சிட்டுப் போல பெண்ணிருந்தா வட்டமிட்டு சுத்தி சுத்தி..” சூபர் ஹிட்!
சந்திரபாபுவுடன் இவர் டூயட்கள் தனி களை கட்டும். “குங்குமப் பூவே…”யானாலும் சரி, "தடுக்காதே.."யானாலும் சரி! ‘பாண்டித் தேவன்’ படத்தில் ச.பாபுவுடன் "நீயாடினால்..." பாடலில் அந்த பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரத்தின் வரிகளை இவர் பாடும் அழகு இருக்கிறதே..
“சீமான்கள் கொண்டாடும் மேடை..
செண்டாலே காற்றெங்கும் வாடை...
சிரிப்பெல்லாம் வெவ்வேறு ஜாடை..."
நாயகன் நாயகி டூயட்டுகளில் ஞாபகம் அகல மறுப்பவை.. மனதை உருக்கும் ‘மன்னாதி மன்னன்’ பாட்டு! “நீயோ நானோ யார் நிலவே?” ‘செல்வம்’: “எனக்காகவா.. நான் உனக்காகவா?” ‘கொடுத்து வைத்தவள்’: “பாலாற்றில் சேலாடுது..”
‘அத்திக்காய்..’ பாடலில் “ஏலக்காய் வாசனைபோல் எங்கள் உள்ளம் வாழக்காய்..” என்று இவர் எண்ட்ரி ஆவது நினைவிருக்கா? அதோடு “ஆதிமனிதன் காதலுக்குப் பின்..”
நீண்ட இடைவெளிக்குப் பின் “நான் சிரித்தால் தீபாவளி..” என்று மறுபடியும் அவர் பாட்டொன்று கேட்ட பரவசத்தைத் தந்தார்.

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

இனிமையான பாடல்கள் இவருடையது. கேட்டு ரசித்த பாடல்களும் கூட.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!