Friday, October 4, 2013

கண்ணாடி அரண்





வசரமாக பைக்கில் விரைந்து கொண்டிருந்த நான் ‘டம் டமா... டம் டமா...’ என்ற உடுக்கைச் சத்தம் கேட்டுத் திரும்பினேன்.

ரோட்டோரமாக இரு புறமும் பலர் கூடி நின்று பார்த்துக் கொண்டிருக்க... அந்தரத்தில் கயிற்றின் மீது ஒரு சிறுமி. அஞ்சு வயசு கூட இருக்காது. கையில் ஒரு கழியை வைத்துக் கொண்டு லாகவமாக அடி மேல் அடி வைத்து அந்த ஒற்றைக் கயிற்றின் மேல் நடந்து கொண்டிருந்த காட்சி என்னை உலுக்கியது.

பைக்கை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினேன்.

சாலையோரமாக தரையில் முளையடித்துக் கட்டிய கயிற்றை ரெண்டு பக்கமும் பெருக்கலாக நிறுத்திய மூங்கில்களின் மேலாகக் கொண்டு போயிருந்தார்கள். அதன்மேல் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து இந்தப் பக்கம் வந்து சேர்ந்தாள் சிறுமி.

இறங்கப் போகிறாள் என்று நினைத்தால், குனிந்தவள் தலையில் ஒரு சின்னச் சொம்பை வைத்தான் அந்தச் சிறுமியின் தகப்பன். அதையும் வைத்துக் கொண்டு நிமிர்ந்தவள் சொம்பு கீழே விழுந்து விடாமல் மீண்டும் கயிற்றில் அடிகளை எடுத்து வைத்துத் திரும்பி நடந்தாள்.

எங்கே தலை குப்புற விழுந்து விடப் போகிறாளோ என்று எனக்குப் படபடப்பாக இருந்தது.

மூன்றாவது முறையாக அவன் ஓர் அலுமினியத் தட்டைக் கயிற்றின் மீது வைக்க அதை ஒரு காலால் அழுத்திக் கயிற்றின் மேல் நகர்த்தியபடி மறு முனை வரை நடந்து சென்றாள் அந்தச் சிறுமி.

இதோடு இது முடிந்து அந்தப் பெண் குழந்தை கீழே இறங்கிவிடக் கூடாதா என்று நினைத்தேன். கீழே அமர்ந்திருந்த அந்தச் சிறுமியின் தாய் ஒரு தட்டை எடுத்துக் கொண்டு காசு வாங்கக் கிளம்பினாள். அப்பாடா, இதுதான் கடைசி ரவுண்ட்!

உலகம் புரியாத வயதில் அந்தச் சிறுமி உயிரைப் பணயம் வைத்து நிகழ்த்திய சாகசத்தில் உருகிப் போயிருந்தேன் நான்.

அவரவர் ஐம்பது காசு, ஒரு ரூபாய், அதிக பட்சம் ஐந்து ரூபாய் வரை தட்டில் போட, நான் முழு ஐம்பது ரூபாய் நோட்டைப் போட்டுவிட்டு, அந்தத் தாய் எவ்வளவு சந்தோஷப் படுகிறாள் என்று ஆவலுடன் அவள் முகத்தைப் பார்த்தேன். நிமிர்ந்து என்னைப் பார்த்த அவள், சட்டென்று பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள்.

ரொம்பச் சின்னதாக ஒரு விசும்பல் கேட்ட மாதிரி இருந்தது. தட்டில் ஒரு கண்ணீர்த் துளி விழுந்து தெறித்தது. இடுப்பிலிருந்த கைக்குழந்தையின் தலையைத் தடவிக் கொடுத்தபடியே சட்டென்று நகர்ந்துவிட்டாள்.

அவள் செயல் எனக்குப் புரியவில்லை. ஏன், எதற்காக அவள் அழ வேண்டும்?

வீடு வந்து மனைவியிடம் நடந்ததைச் சொல்லி விளக்கம் கேட்டேன்.

''இதில் புரிய என்னங்க இருக்கு? பார்த்திட்டிருந்த யாரோ ஒருத்தராகிய உங்களுக்கே அந்தச் சிறுமி செய்த சாகசம் அவ்வளவு வருத்தத்தை உண்டாக்கியிருந்ததுன்னா, பெத்த தாயான அவளுக்குத் தினம் தினம் அந்தக் குழந்தையை அப்படி ஒரு காரியத்தைச் செய்ய வைக்கிறது எவ்வளவு கஷ்டமா இருந்திருக்கும்? கல்லாலானதுன்னு அவள் மனசுக்குப் போட்டிருந்த அரண், வெறும் கண்ணாடிதான்கிறது எப்பவாவது உங்களை மாதிரி சில பேர் இப்படி அதீதக் கருணைங்கிற கோலியை எறியும்போதுதானே அவளால் தெரிஞ்சுக்க முடியுது?''

என்ன தெளிவாகச் சொல்லிவிட்டாள் என் மனைவி! ஒரு பெண்ணின் மனது இன்னொரு பெண்ணுக்குத்தான் தெரியும்னு சும்மாவா சொன்னாங்க?
<><><>
(விகடனில் 2002 -ஆம் ஆண்டு பவழவிழா பரிசு பெற்ற குட்டிக் கதை.)
<<>>

(படம்- நன்றி: விகடன்)

11 comments:

கவியாழி said...

மனம் வருந்தினாலும் .உங்களுக்குப் பரிசுக் கிடைத்ததில் மகிழ்ச்சியே

வை.கோபாலகிருஷ்ணன் said...

மனதை வருந்த வைக்கும் இந்த சம்பவத்தை நானும் ஒருநாள் நேரில் பார்த்து மிகவும் வருந்தி அழுதேன். வேறென்ன செய்ய முடியும் நம்மால்?. ஒரு 10 ரூபாய் பணம் மட்டுமே அன்று என்னால் அவர்களுக்குக் கொடுக்க முடிந்தது.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//விகடனில் 2002 -ஆம் ஆண்டு பவழவிழா பரிசு பெற்ற குட்டிக் கதை//

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

Yaathoramani.blogspot.com said...

தலைப்பும் அதற்கான
உணர்வுப் பூர்வமான கதையும்
மனம் கலக்கிப் போனது
பரிசுக் கதையை பதிவாக்கி
அறியத் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி

இராஜராஜேஸ்வரி said...

ஒரு பெண்ணின் மனது இன்னொரு பெண்ணுக்குத்தான் தெரியும்னு சும்மாவா சொன்னாங்க?

விகடனில் பரிசுபெற்றதற்கு வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!

vimalanperali said...

நம் சமூகம் நம்மில் விரிக்கின்ற முக்கிய பாடமாயும்,படமாயும்/

தி.தமிழ் இளங்கோ said...

இந்த வித்தைக்காரர்களை தெருவில் பார்க்கும் போதெல்லாம் நம்மால் இவர்களுக்கு காசு போடுவதைத் தவிர வேறு எதுவும் செய்து விடுவிக்க முடியவில்லையே என்ற எண்ணமே தோன்றி மறையும். தங்கள் கதை அந்த நெருடலையே உண்டு பண்ணியது.


திண்டுக்கல் தனபாலன் said...

கலங்க வைத்த கதை...

கோமதி அரசு said...

கல்லாலானதுன்னு அவள் மனசுக்குப் போட்டிருந்த அரண், வெறும் கண்ணாடிதான்கிறது எப்பவாவது உங்களை மாதிரி சில பேர் இப்படி அதீதக் கருணைங்கிற கோலியை எறியும்போதுதானே அவளால் தெரிஞ்சுக்க முடியுது?''

உண்மை ,பெத்தவயிறு தவிக்கும் தவிப்பு!
//ஒரு பெண்ணின் மனது இன்னொரு பெண்ணுக்குத்தான் தெரியும்னு சும்மாவா சொன்னாங்க?//
சரியாக சொன்னீர்கள்.
மனதை கலங்க வைக்கும் இது போன்ற நிகழ்ச்சிகளை நேரில் பார்க்கும் பாக்கும் போது ஏற்பட்ட உணர்வு , கதை படித்த போதும் ஏற்பட்டது.

கலியபெருமாள் புதுச்சேரி said...

இதையே ஒலிம்பிக்கில் செய்தால் சாதனை என்கிறோம்...சாலையில் செய்தால் வேதனை மட்டுமே..

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

அருமையான கதை. பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள்!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!