Thursday, September 10, 2026

பிரபல பஞ்ச் டயலாக்...

தன் முன் நின்ற அந்த வாலிபனைப் பார்த்தார் டைரக்டர் எல்லிஸ் ஆர் டங்கன். காங்கேயம் சொந்த ஊர். கம்பீரமான உருவம். வில் புருவங்களின் கீழே கூர்மையான கண்கள். எகத்தாளம் தூக்கி நிற்கும் உதடுகள். அந்த கணீர்க் குரல். கே.பி.சுந்தராம்பாளின் சிபாரிசு தேவையே இல்லை. எடுத்துக் கொண்டார் அந்த நடிகரை. படம் 'மணிமேகலை.' தொடர்ந்து கிடைத்த படம் 'உதயணன் வாசவதத்தை.' உதயமானார் ஒரு வில்லன்.
யாரப்பா அது கர்ஜிப்பது என்று எல்லாரையும் திரும்பிப் பார்க்க வைத்த
வீரப்பா...
பி.எஸ்.வீரப்பா... இன்று பிறந்த நாள்! (1911-1998)
'மணந்தால் மகாதேவி; இல்லையேல் மரணதேவி!' கண்ணதாசன் எழுதிய தமிழ்பட உலகின் மிகப் பிரபல பஞ்ச் டயலாக்கைப் பேசியவர்.
ஸ்ரீராம், ஜெமினி, சிவாஜி, எம்ஜிஆர், எஸ்.எஸ்.ஆர். என்று எல்லோருக்கும் 'சபாஷ்! சரியான போட்டி!'யாக வந்தவர். அவரே 'சபாஷ்' சொன்ன 'சரியான போட்டி' பத்மினி, வைஜயந்தியுடையது. ('வஞ்சிக்கோட்டை வாலிபன்') மறக்க முடியுமா அதை?
சிரித்தாலும் சிரித்தார் ஒரு 'ஹா ஹா ஹா!' வில்லன் என்றால் ஹா ஹா ஹா என்றுதான் சிரிக்கணும் என்று கிளம்பிய பல 'ஹா ஹா ஹா'க்களைத் தாங்க வேண்டியதாயிற்று. அவர்போல் ஒன்றும் வரவில்லை.
நடிகர் எத்தனை பிரபலமோ அதற்குச் சற்றும் பிரபலம் குறையாத புரொட்யூசர். ஆம், ஓங்கி ஒலித்த அந்த ‘ஆலயமணி'! அதை நமக்குத் தந்தவராயிற்றே? திலீப்குமார் நடித்து அது இந்தியிலும் ‘ஆத்மி'யானது.
தயாரிப்பை ஆரம்பித்தது ‘பிள்ளைக் கனியமுது' படத்தில். (அந்த "ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே..." பாடல்!) தொடர்ந்து ஜெமினியுடன் ‘வீரக்கனல்'. ‘ஆலயமணி’ ஒலித்தபின் ஒளிர்ந்தது ‘ஆனந்த ஜோதி' அப்புறம் “ஆறு மனமே ஆறு…” என்ற ‘ஆண்டவன் கட்டளை’... 'Woh Kaun Thi?' யைத் தமிழில் ‘யார் நீ?’ என்று தர, அதிரடி ஹிட், இந்தியைப் போலவே. ராம நாராயணன், எஸ் ஏ சந்திரசேகர், ராமராஜன் டைரக்‌ஷனில் சளைக்காமல் படங்களைத் தந்தவர்.

No comments: