Friday, August 25, 2023

யார்க்கும் கிட்டாத குரல்...


அவர் பாடலைக் கேட்டதுமே சொல்லிவிடலாம்: கிட்டாதப்பா இந்த மாதிரி ஒரு குரல்!

S G கிட்டப்பா… இன்று பிறந்தநாள்! (1906 - 1933)
‘காமி சத்யபாமா… கதவைத் திறவாய்!’ ஒரு பிரபல பாடல். ‘திறவாய்… திறவாய்..’ என்று அவர் வாய் திறந்து பாடும்போது வாய் மூடாமல் கேட்டுக் கொண்டிருப்போம்.
ஏற்றம் இறக்கம் எதிலும் சற்றும் மடங்காமல், அற்றம் எதிலும் அடங்காமல்… கம்பீர கந்தர்வ குரல்!
பத்தாது பத்தாது என்று கேட்கும் பாடல்களைப் பாடி மகிழ்வித்தவர் பத்தாவது மகனாக செங்கோட்டையில் பிறந்து ஐந்து வயதிலேயே மேடையேறியவர்.. பள்ளியில் படிக்காத இளமை, ஆனால் ஒரு முறை கேட்டாலே அப்படியே ஒப்புவித்துவிடும் வல்லமை!
இங்கே இவர் நாடக மேடையில் அட்டகாசமாகப் பாடி, பாடகர் நட்சத்திரமாக பவனி வருகையில், அங்கே இலங்கையில் அவர், கே.பி.சுந்தராம்பாள், நாடகங்களில் பாடிக் கலக்கிக் கொண்டிருக்க, ‘அவர் பாட்டுக்கு உம் பாட்டு நிற்காது,’ என மற்றவர்கள் சிலர் இருவரையும் உசுப்பி மோத விட்டதில் இருவருமே சேர்ந்து பாடி வென்று காட்டினர். பிறந்த நட்பு காதலாகியது அறிந்த வரலாறு.
பிற மாநில வித்வான்கள் வந்திருந்து கேட்டு அதிசயித்து அந்த மேடையிலேயே அவரைப் பாராட்டி மாலை அணிவித்து மகிழ்ந்தனர். நாடக மேடையோடு நின்று விட்டது இந்த பாடக மேதையின் பாட்டு.
27 வயதுக்குள் இசையுலகை அலங்கரித்துவிட்டு இறைவனடி எய்தியது நமக்கு இழப்புத்தான்.

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!