Monday, July 21, 2014

காலத்தின் நடை...



கடைக்காரர் நேற்று கொடுத்த
கடைசி மிட்டாய் இருந்த கண்ணாடி பாட்டிலில்
என்ன மிட்டாய் போட்டு நிரப்பியிருப்பார்
இன்றைக்கு என்ற ஆவலிலும்
காலையில் என்னடீ சாப்பிட்டேன்னு
கலா கேட்டால் சாப்பிட்ட பழையதை
சொல்லவா வேண்டாமா என்கிற கேள்வியிலும்
அடுக்களைக்குள் அகப்பட்டு வழி தெரியாமல்
திணறும் தேன் சிட்டு அந்திக்குள் வெளியேறி
சென்றுவிடாதா என்ற கவலையிலும்
ஓரமாய் நிற்கும் இந்தக் காரில்
ஏறிவிட முடியும் தானும்
பக்கத்து வீட்டு அக்கா மாதிரி படித்து
வேலைக்குப் போய்விட்டால்
என்றுதிக்கும் நம்பிக்கையிலும்
பள்ளிக்கூட வாசலருகே பாட்டி விற்கும் இனிப்புகளில்
நாலைஞ்சு ஈக்களாவது மொய்க்க வேண்டுமே
அதை வாங்கி சாப்பிடும் ஆசை வராமலிருக்க
என்ற வேண்டுதலிலுமாக
பள்ளிக்கூடத்துக்கான காத தூரத்தை
நடந்தது தெரியாமல் நடந்தாள்.

><><

4 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

பள்ளிக்கூடத்துக்கான காத தூரத்தை கடப்பதற்குள் மனது ஆகாய விமான வேகத்தில் எத்தனை எத்தனைக் கற்பனைகளை அசை போடுகிறது. !!!!!

அருமையான ஆக்கம். பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
அருமை
தம 2

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... பாராட்டுக்கள்...

கோமதி அரசு said...

அடுக்களைக்குள் அகப்பட்டு வழி தெரியாமல்
திணறும் தேன் சிட்டு அந்திக்குள் வெளியேறி
சென்றுவிடாதா என்ற கவலையிலும்//


ஜனா சார், உங்களுக்கு என் வீட்டு அடுக்களைக்குள் தேன் சிட்டு வந்து வழி தெரியாமல் திணறியது தெரிந்து விட்டதா?

நானும் அது எப்படியாவது அது வந்த ஜன்னல் வழியாக போய்விட வேண்டுமே மகிழ்ச்சியாக என்று தவித்தேன்.
காலத்தின் நடை மிக அருமை.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!