மன முறிவு ஏற்படும் போல தோன்றினால் ஒருவன் என்ன செய்ய வேண்டும் என்று இந்த மன நல மருத்துவரை கேட்டார்கள். சொன்னது: ‘வீட்டைப் பூட்டிக் கொள். ரயில்வே ட்ராக் ஓரமாக நடந்து போ. உதவி தேவைப்படும் ஒருவனைக் கண்டுபிடி. அவனுக்கு ஏதாவது செய்!’ 
வெறும் மனோதத்துவ டாக்டர் மட்டுமல்ல, பெரும் மனிதநேயர். ஆதரவற்றோர்களுக்காக பாடுபடுவதை தன் முக்கிய வேலையாக வைத்திருந்தார்.
சிகிச்சையை மையப்படுத்தும் ஸிக்மண்ட் ஃப்ராய்டிலிருந்து ஸிக்னிஃபிகன்டாக வேறுபடும் இவர் சூழ்நிலை முக்கியம் என்று கருதுபவர். சொல்லும் ஒரு முக்கியமான விஷயம், ‘பெற்றோரின் நேசம் கிட்டாததே பெருமளவு மனநிலை பிறழ்வுக்குக் காரணம். நிறைய குற்றங்களுக்குப் பின்னணியில் இருப்பது இந்த மனநிலைத் தடுமாற்றங்களே!’ 
மனோ வைத்தியம் வழியாக குற்றங்களை பெருமளவில் தடுத்துவிடலாம் என்று நம்பும் இவர் மனநிலை பாதித்தவருக்கும் மற்றவருக்கும் உள்ள இடைவெளி மிகக் குறைவே, என்கிறார்.
மாணவர்களுக்காக இவர் எழுதிய ’The Human Mind’ மற்றவர்கள் இடையேயும் மகா பிரசித்தம். இவரது மெனிஞ்சர் கிளினிக், 1920 இல் தொடங்கியது, உலக அளவில் பிரபலம்.
வேலை, வேலை என்று மெனக்கெடும் மெனிஞ்சர், ‘மனிதன் கவனம் செலுத்தும் எந்த விஷயமும் மனோ தத்துவத்திற்கு அப்பால் இல்லை; ஆகவே எனக்கு பொழுதுபோக்கு என்று தனியாக எதுவும் இல்லை; எல்லாமே என் வேலைக்குள் வந்துவிடுகிறது!’ என்கிறார்.
ஒரு போடு போடுகிறார் பாருங்கள்! ‘நார்மலாக இல்லாதவற்றை அச்சத்துடன் மட்டுமே பார்க்கும் மனநிலையும், சராசரியாக இருப்பதில் மன திருப்தியுடன் இருப்பதும் மனிதர்களின் அறியாமையே. எதையாவது சாதிக்கும் எவருமே அடிப்படையில் இயல்பு நிலையில் (normal) இல்லாதவர்கள் தாம்.’
‘பெற்றோரின் நேசம் குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு மிக முக்கியம்; மனோதத்துவ டாக்டரைவிட மேலாக!’
‘நம்மை நேசிப்பவர்களாலும் நேசிக்க மறுக்கிறவர்களாலும் நம் வாழ்க்கை அமைக்கப்படுகிறது.’
‘எப்படி இருக்கிறார் ஆசிரியர் என்பது, என்ன போதிக்கிறார் அவர் என்பதைவிட முக்கியமான
து.’
து.’
‘அன்பு மனிதர்களைக் குணப்படுத்துகிறது. அதைக்  கொடுப்பவர்களையும் பெறுபவர்களையும்!’
‘ஒருவனுக்கு மூன்று வேளை சோறு கிடைப்பதும், செய்வதற்கு ஜோலி நிறைய இருக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டியதும் முக்கியம்!’
‘குழந்தைகள் எப்படி நடத்தப்படுகிறார்களோ அதை அவர்கள் சமூகத்துக்கு செய்கிறார்கள்.’
‘கவனித்து கேட்பது ஓர்  அதிசய, வசீகரமான விஷயம். நம்மைக் கவனித்துக் கேட்பவர்களை நோக்கி நாம் நகர்கிறோம்.’
‘குழந்தைப் பருவத்தில் அனுபவிக்கும் உணர்வுகளை வளர்ந்தபின் மனிதர்கள் வெளிப்படுத்துகிறார்கள். நான் மருத்துவம் பார்த்தவர்களில் நிறைய பேருக்கு அந்த வைத்தியம் தேவைப்பட்டிருக்காது, சிறு வயதில் அவர்கள் சரியாக வளர்க்கப்பட்டிருந்தால்.’
'தன்னை நேசிப்பது என்பது மற்றவரை நேசிப்பதற்கு எதிரானதல்ல; மற்றவருக்கு ஒரு உதவி செய்யாமல்  தன்னை நேசிக்கவோ தனக்கு உதவவோ முடியாது.'
'அறிவின் குரல் அச்சத்தின் கர்ஜனையால் மூழ்கடிக்கப்பட்டு  விடுகிறது. 
ஆசையின் குரலால் புறம் தள்ளப்படுகிறது. வெட்கத்தின் ஒலியினால் மறுக்கப்படுகிறது. வெறுப்பால் மாறுபாடு அடைகிறது. கோபத்தினால் மறைக்கப்பட்டு விடுகிறது. எல்லாவற்றையும் விட அறியாமையால் வாய் மூடப்பட்டு விடுகிறது.'
‘அச்சங்கள் கற்பிக்கப்படுகின்றன நம்முள். அதேபோல், கற்று வெளியேற்றியும் விடலாம் அவற்றை.’
முத்தாய்ப்பாக இது:  ‘Unrest of spirit is a mark of life.’

 

