Monday, August 25, 2025

அன்பு… கருணை…


அன்பு… கருணை… அன்னை தெரஸா…
இன்று பிறந்த நாள்!
‘நேசிக்கவும் நேசிக்கப்படவுமே படைக்கப்பட்டிருக்கிறோம் நாம்.’ என்றவர் சொன்ன இன்னும் சில:
‘தீவிர அன்பு எதையும் அளக்காது; அளிக்கும்.’
‘வலிப்பது வரை கொடுப்பது; அன்பின் உண்மையான அர்த்தம் அதுதான்!’
‘கடவுளுக்கு என் நன்றியை தெரிவிக்க மிகச் சிறந்த வழி என் பிரச்சனைகள் உள்பட எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வதுதான்!’
‘ஒவ்வொருவரையும் ஆராய்ந்து கொண்டிருந்தால் அவரை நேசிக்க நேரம் இருக்காது.’
‘நீங்கள் எத்தனை செய்கிறீர்கள் என்பது முக்கியம் அல்ல, செய்வதில் எத்தனை அன்பு வைக்கிறீர்கள் என்பதே.’
‘உண்மையிலேயே அன்பு செலுத்த விரும்பினால் நீங்கள் மன்னிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.’
‘நாம் பிரார்த்தனை செய்தால் நம்பிக்கை வைப்போம். நம்பிக்கை வைத்தால் நாம் அன்பு செலுத்துவோம். அன்பு செலுத்தினால் நாம் சேவை செய்வோம்.’
‘நீங்கள் எளிமையாக இருந்தால் புகழ்ச்சியும் சரி, இகழ்ச்சியும் சரி உங்களைத் தொட முடியாது. ஏனெனில் நீங்கள் யார் என்று நீங்கள் அறிவீர்கள்.’
‘உங்களைக் கடவுளிடம் முழுமையாக ஒப்படையுங்கள். மாபெரும் விஷயங்களை சாதிப்பதற்கு அவர் உங்களை பயன்படுத்துவார். உங்கள் இயலாமையை விட அவரின் அன்பில் அதிக நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதொன்றே நிபந்தனை.’
‘எத்தனை பேருக்கு என்று கவலைப்படாதீர்கள். ஒரு சமயத்தில் ஒருவருக்கு உதவுங்கள். பக்கத்தில் இருப்பவரிடம் இருந்து ஆரம்பியுங்கள் எப்போதும்.’

கிட்டாதப்பா இந்த மாதிரி...


அவர் பாடலைக் கேட்டதுமே சொல்லிவிடலாம்: கிட்டாதப்பா இந்த மாதிரி ஒரு குரல்!
S G கிட்டப்பா… இன்று பிறந்தநாள்! (1906 - 1933)
‘காமி சத்யபாமா… கதவைத் திறவாய்!’ ஒரு பிரபல பாடல். ‘திறவாய்… திறவாய்..’ என்று அவர் வாய் திறந்து பாடும்போது வாய் மூடாமல் கேட்டுக் கொண்டிருப்போம்.
ஏற்றம் இறக்கம் எதிலும் சற்றும் மடங்காமல், அற்றம் எதிலும் அடங்காமல்… கம்பீர கந்தர்வ குரல்!
பத்தாது பத்தாது என்று கேட்கும் பாடல்களைப் பாடி மகிழ்வித்தவர் பத்தாவது மகனாக செங்கோட்டையில் பிறந்து ஐந்து வயதிலேயே மேடையேறியவர்.. பள்ளியில் படிக்காத இளமை, ஆனால் ஒரு முறை கேட்டாலே அப்படியே ஒப்புவித்துவிடும் வல்லமை!
இங்கே இவர் நாடக மேடையில் அட்டகாசமாகப் பாடி, பாடகர் நட்சத்திரமாக பவனி வருகையில், அங்கே இலங்கையில் அவர், கே.பி.சுந்தராம்பாள், நாடகங்களில் பாடிக் கலக்கிக் கொண்டிருக்க, ‘அவர் பாட்டுக்கு உம் பாட்டு நிற்காது,’ என மற்றவர்கள் சிலர் இருவரையும் உசுப்பி மோத விட்டதில் இருவருமே சேர்ந்து பாடி வென்று காட்டினர். பிறந்த நட்பு காதலாகியது அறிந்த வரலாறு.
பிற மாநில வித்வான்கள் வந்திருந்து கேட்டு அதிசயித்து அந்த மேடையிலேயே அவரைப் பாராட்டி மாலை அணிவித்து மகிழ்ந்தனர். நாடக மேடையோடு நின்று விட்டது இந்த பாடக மேதையின் பாட்டு.
27 வயதுக்குள் இசையுலகை அலங்கரித்துவிட்டு இறைவனடி எய்தியது நமக்கு இழப்புத்தான்.

Friday, August 22, 2025

அசட்டு அப்பாவியாக...


அது யாரய்யா அசட்டு அப்பாவியா என்றால் அதுதான் டி. எஸ். பாலையா!
வேறு யாரய்யா முகத்தில் டன் டன்னாக அசடு வழிய விடுவதில் வல்லவர்?
அந்தக் காதலிக்க நேரமில்லை விஸ்வநாதனாக வேறு யாரையாவது நம்மால் நினைக்க முடியுமா பாலையாவைத் தவிர? வெறும் ரீயாக்‌ஷனை வைத்துக்கொண்டே ஐந்து நிமிடம் அந்தக் காட்சியை ஹாஸ்யத்தின் உச்சத்துக்குக் கொண்டுபோய் விடுவாரே நாகேஷ் கதை சொல்லும்போது!
பாலையா அந்த கேரக்டருக்கு கொடுத்த பாலிஷ் நமக்கு ஒரு பிளஸண்ட் சர்ப்ரைஸ்! ஹீரோக்கள் அவரை ஏமாற்றுவதான கதையை, அவர் ஏமாறுவதான கதையாக மாற்றும் அளவுக்கு அட்டகாசமாக அவர் நடிப்பு!
எம்ஜிஆர் அறிமுகமான சதிலீலாவதி படத்தில் அறிமுகமான இவர், வில்லனுக்கும் காமெடியனுக்கும் இடையிலான ஒரு வகை காரக்டரை திரைக்கு சுவாரசியமாக அறிமுகப்படுத்தினார்.
'இன்னிக்கு வெள்ளிக் கிழமை, வாளைத் தொடமாட்டேன்'னு மதுரை வீரனிடம் காட்டும் பொய் மிடுக்கும் சரி, பிள்ளைகளின் பாமா விஜய ஸ்டார் மோகத்தைக் கண்டிக்கும் மெய் மிடுக்கும் சரி என்னவொரு ரேஞ்ச் அஃப் ஆக்டிங்!
கொலைப் பழியை ஏவிஎம் ராஜன் மீது சுமத்தி ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு, தன் மனைவி மகளைப் பறிகொடுத்தபின் மனம் திருந்தும் கேரக்டர், கே எஸ் கோபாலகிருஷ்ணனின் ‘என்னதான் முடிவு?’ படத்தில். பழிவாங்கத் துடிக்கும் ராஜன் முன்னால், ‘உன் கையால் சாகத்தான் காத்திருந்தேன்,’ என்று அமைதியாக வந்து நிற்கும் க்ளைமாக்ஸில் மன்னிப்பை ஆடியன்ஸிடமிருந்தும் வாங்கிவிடுவார்.
சந்தர்ப்ப சூழ்நிலையால் தன் குழந்தையை வேலைக்காரி குழந்தையாகவும் அவள் குழந்தையைத் தன் குழந்தையாகவும் பார்க்க வேண்டிய சூழ்நிலை அம்மா எம் வி ராஜம்மாவுக்கு. அவரது பிடிவாதம் பிடித்த கணவராக அமர்க்களப் படுத்தியிருப்பார். எல். வி. பிரசாத்தின் ‘தாயில்லாப் பிள்ளை’யில்.
ஜெயகாந்தன் கதையில் நடித்தது ‘யாருக்காக அழுதான்?’ படத்தில். குடிகாரனின் பணத்தை எடுத்து வைத்துக்கொண்டு அப்பாவி நாகேஷ் மீது பழியைப் போட்டுவிட்டு உள்ளுக்குள் வதைபடும் அந்த கேரக்டருக்கு 100 சதம் உயிர் கொடுத்திருப்பார்.
பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாமல் நடந்ததை சொல்லவும் முடியாமல் பரிதவிக்கும் கேரக்டர் என்றால் இவருக்கு பீட்சா சாப்பிடுற மாதிரி. இவருக்காகவே எழுதப்பட்டதோ என்று சில சமயம் தோன்றும். ‘ஊட்டி வரை உறவு.’
துளி பிசிறு இல்லாமல் கான்ட்ராஸ்ட் காட்டுவதில் மன்னர். சபையில் காட்டிய கர்வத்துக்கு சற்றும் குறையாமல், ‘சற்று முன்பு ஒரு தேவகானம் கேட்டதே?’ என்று பிரமிப்பை உதிர்த்தபடி தன் செருக்குச் சட்டையைக் கழற்றிப் போடும் அந்த நயம்! (திருவிளையாடல்)
Aug. 23. பிறந்த நாள்!