Friday, October 31, 2025

பெரும் மனிதநேயர்...

மன முறிவு ஏற்படும் போல தோன்றினால் ஒருவன் என்ன செய்ய வேண்டும் என்று இந்த மன நல மருத்துவரை கேட்டார்கள். சொன்னது: ‘வீட்டைப் பூட்டிக் கொள். ரயில்வே ட்ராக் ஓரமாக நடந்து போ. உதவி தேவைப்படும் ஒருவனைக் கண்டுபிடி. அவனுக்கு ஏதாவது செய்!’
Karl Menninger ... (1893 - 1990)
வெறும் மனோதத்துவ டாக்டர் மட்டுமல்ல, பெரும் மனிதநேயர். ஆதரவற்றோர்களுக்காக பாடுபடுவதை தன் முக்கிய வேலையாக வைத்திருந்தார்.
சிகிச்சையை மையப்படுத்தும் ஸிக்மண்ட் ஃப்ராய்டிலிருந்து ஸிக்னிஃபிகன்டாக வேறுபடும் இவர் சூழ்நிலை முக்கியம் என்று கருதுபவர். சொல்லும் ஒரு முக்கியமான விஷயம், ‘பெற்றோரின் நேசம் கிட்டாததே பெருமளவு மனநிலை பிறழ்வுக்குக் காரணம். நிறைய குற்றங்களுக்குப் பின்னணியில் இருப்பது இந்த மனநிலைத் தடுமாற்றங்களே!’
மனோ வைத்தியம் வழியாக குற்றங்களை பெருமளவில் தடுத்துவிடலாம் என்று நம்பும் இவர் மனநிலை பாதித்தவருக்கும் மற்றவருக்கும் உள்ள இடைவெளி மிகக் குறைவே, என்கிறார்.
மாணவர்களுக்காக இவர் எழுதிய ’The Human Mind’ மற்றவர்கள் இடையேயும் மகா பிரசித்தம். இவரது மெனிஞ்சர் கிளினிக், 1920 இல் தொடங்கியது, உலக அளவில் பிரபலம்.
வேலை, வேலை என்று மெனக்கெடும் மெனிஞ்சர், ‘மனிதன் கவனம் செலுத்தும் எந்த விஷயமும் மனோ தத்துவத்திற்கு அப்பால் இல்லை; ஆகவே எனக்கு பொழுதுபோக்கு என்று தனியாக எதுவும் இல்லை; எல்லாமே என் வேலைக்குள் வந்துவிடுகிறது!’ என்கிறார்.
ஒரு போடு போடுகிறார் பாருங்கள்! ‘நார்மலாக இல்லாதவற்றை அச்சத்துடன் மட்டுமே பார்க்கும் மனநிலையும், சராசரியாக இருப்பதில் மன திருப்தியுடன் இருப்பதும் மனிதர்களின் அறியாமையே. எதையாவது சாதிக்கும் எவருமே அடிப்படையில் இயல்பு நிலையில் (normal) இல்லாதவர்கள் தாம்.’
மின்னும் வார்த்தைகள் இன்னும் சில...
‘பெற்றோரின் நேசம் குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு மிக முக்கியம்; மனோதத்துவ டாக்டரைவிட மேலாக!’
‘நம்மை நேசிப்பவர்களாலும் நேசிக்க மறுக்கிறவர்களாலும் நம் வாழ்க்கை அமைக்கப்படுகிறது.’
‘எப்படி இருக்கிறார் ஆசிரியர் என்பது, என்ன போதிக்கிறார் அவர் என்பதைவிட முக்கியமான
து.’
‘அன்பு மனிதர்களைக் குணப்படுத்துகிறது. அதைக் கொடுப்பவர்களையும் பெறுபவர்களையும்!’
‘ஒருவனுக்கு மூன்று வேளை சோறு கிடைப்பதும், செய்வதற்கு ஜோலி நிறைய இருக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டியதும் முக்கியம்!’
‘குழந்தைகள் எப்படி நடத்தப்படுகிறார்களோ அதை அவர்கள் சமூகத்துக்கு செய்கிறார்கள்.’
‘கவனித்து கேட்பது ஓர் அதிசய, வசீகரமான விஷயம். நம்மைக் கவனித்துக் கேட்பவர்களை நோக்கி நாம் நகர்கிறோம்.’
‘குழந்தைப் பருவத்தில் அனுபவிக்கும் உணர்வுகளை வளர்ந்தபின் மனிதர்கள் வெளிப்படுத்துகிறார்கள். நான் மருத்துவம் பார்த்தவர்களில் நிறைய பேருக்கு அந்த வைத்தியம் தேவைப்பட்டிருக்காது, சிறு வயதில் அவர்கள் சரியாக வளர்க்கப்பட்டிருந்தால்.’
'தன்னை நேசிப்பது என்பது மற்றவரை நேசிப்பதற்கு எதிரானதல்ல; மற்றவருக்கு ஒரு உதவி செய்யாமல் தன்னை நேசிக்கவோ தனக்கு உதவவோ முடியாது.'
'அறிவின் குரல் அச்சத்தின் கர்ஜனையால் மூழ்கடிக்கப்பட்டு விடுகிறது.
ஆசையின் குரலால் புறம் தள்ளப்படுகிறது. வெட்கத்தின் ஒலியினால் மறுக்கப்படுகிறது. வெறுப்பால் மாறுபாடு அடைகிறது. கோபத்தினால் மறைக்கப்பட்டு விடுகிறது. எல்லாவற்றையும் விட அறியாமையால் வாய் மூடப்பட்டு விடுகிறது.'
‘அச்சங்கள் கற்பிக்கப்படுகின்றன நம்முள். அதேபோல், கற்று வெளியேற்றியும் விடலாம் அவற்றை.’
முத்தாய்ப்பாக இது: ‘Unrest of spirit is a mark of life.’

Tuesday, October 28, 2025

ஒளியைச் சிந்துங்கள்...


Prevention is better than cure.’
இப்போது நாம் உணர்ந்து கொண்டாடும் இந்த வாசகத்தை 500 ஆண்டுகளுக்கு முன்னால் சொன்னவர் அவரே.
Desiderius Erasmus… நெதர்லேண்டில் உதித்த நேர்த்தியான சிந்தனையாளர். இன்று பிறந்த நாள்!
சொன்ன எல்லாமுமே ஃப்ரேம் போட்டு மாட்ட வேண்டியவை. என்றாலும் சில மட்டும் இங்கே...
‘மனித மனம் உண்மையை விட பொய்யினால் மிகவும் கவரப்படுகிற மாதிரி அமைந்துள்ளது.’
‘காலம் மனிதர்களின் துக்கத்தை கரைத்து விடுகிறது.’
‘அதீத துணிச்சல் கொண்டவர்களுக்கு அதிர்ஷ்டம் துணை நிற்கும்.’
‘எழுதும் ஆசை எழுத எழுத வளரும்.’
‘நீங்கள் யாராக இருக்கிறீர்களோ அப்படியே ஆக விரும்புவதில் தான் மகிழ்ச்சியின் விதை இருக்கிறது.’
‘மிகச் சிறந்த புத்தகங்கள் முதலில் படித்து விடு. எவ்வளவு விஷயங்கள் தெரியும் உனக்கு என்பது முக்கியமல்ல. அந்த விஷயங்களின் தரமே முக்கியம்.’
‘ஒளியைச் சிந்துங்கள். இருட்டு தானே மறைந்துவிடும்.’
‘சிக்கனம் ஒரு வசீகர வருமானம்.’
‘ஒரு ஆணியை இன்னொரு ஆணியால் பிடுங்குவது போல ஒரு பழக்கத்தை இன்னொரு பழக்கத்தை வைத்து மாற்ற முடியும்.’
‘எனக்குக் கொஞ்சம் பணம் கிடைத்தால் புத்தகங்கள் வாங்குகிறேன். மீதம்இருந்தால் உணவுக்கும் உடைகளுக்கும்.’
‘கழுகுகள் ஈக்களைப் பிடிப்பதில்லை.’
‘உங்கள் நூலகம் உங்கள் சொர்க்கம்.’
‘எடுத்துக்கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் கடவுள் இருக்கிறார்.’
‘பெண்கள்… அவர்களோடு வாழ்வது கஷ்டம், அவர்கள் இல்லாமல் வாழ்வதும் கஷ்டம்.’
‘எதுவும் தெரியாமல் இருப்பதே ஏற்றவும் சந்தோஷமான வாழ்க்கை.’
‘ஆளுக்கொரு பாத்திரத்தை நடித்துக் கொண்டிருக்கிறோம் திரை கீழே விழும் வரை, என்பதைத் தவிர வாழ்க்கை வேறென்ன?’

Sunday, October 26, 2025

ஓவிய விருட்சத்தை...


ஓவிய விருட்சத்தை உலுக்கியவர்களில் ஒருவர்... மாடர்ன் ஆர்டின் தந்தை...

Pablo Picasso… Oct 25 பிறந்த நாள்!

20000 ஓவியங்களுக்கு மேல் வரைந்தவர், கவிதையும் தீட்டுவார் என்பது நி. பே. தெ. தகவல். 300 கவிதைகளுக்கு மேலேயே... ‘ஆசையின் வாலைப் பிடித்துக்கொண்டு’, என்றொரு நாடகமும்!

அப்பா அபார ஓவியர். அவர்தான் பயிற்றுவித்தது. அம்மாவிடம் முதன்முதலில் வாயைத்திறந்து கேட்டதே பென்சிலைத் தான்! 13 வயதில் தன்னை மகன் மிஞ்சி விடவே, தான் பிரஷைக் கீழே வைத்து விடலாமா என்று யோசித்தாராம் தந்தை.

‘The Little Yellow Picador.’ ஏழு வயதில் வரைந்த இந்த ஓவியத்தை அவரே வைத்திருந்தார் இறுதிவரை. ஆரம்ப வறுமையில் குளிர் காய்வதற்காக தன் படங்களை எரிக்க நேர்ந்திருக்கிறது. எத்தனை இழப்பு!

கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது இவரிடம். ‘உன் ஓய்வு நேரத்தைப் போல உற்சாகம் அளிக்கக்கூடியதாக ஒரு வேலையைத் தேடிக் கொள்!’ என்பதே அவர் அட்வைஸ். தன் மன அழுத்தத்தை தானே வென்றவர்.

‘அன்றாட வாழ்வின் அழுக்குகளை ஆத்மாவிலிருந்து அப்புறப்படுத்துவது தான் கலை... உற்சாகத்தை உருவாக்குவதே கலையின் நோக்கம்,’ என்பார். ‘படைப்பின் முக்கிய எதிரி அது சுவாரசியத்தை எதிர்பார்ப்பது.’

படைப்புத்திறனை வளர்த்துக் கொண்டே போனார் புதுப் புது ஸ்டைல் என்று. ஓவியக் கலையை அடுத்த லெவலுக்கு எடுத்து சென்றார். Braque -ம் இவருமாகப் பிரபலப்படுத்தியதுதான் Cubism.

‘குழந்தையாக இருக்கும்போது நான் பெரியவர்களை மாதிரி வரைவேன். ஆனால் ஒரு குழந்தை மாதிரி வரையக் கற்றுக் கொள்ள எனக்கு வாழ்நாள் முழுவதும் ஆகிவிட்டிருக்கிறது.’

‘மற்றவர்களெல்லாம் என்ன இருக்கிறதோ அதைக் கண்டு கொண்டு ஏன் என்று கேட்டவர்கள். என்ன இருந்திருக்கக்கூடுமோ அதைக் கண்டு கொண்டு ஏன் கூடாது என்று கேட்டவன் நான்.’

இன்னும் சொன்னது...
‘கலை என்பது உண்மையை நாம் உணர வைக்கிற ஒரு பொய்.’
‘உங்களால் கற்பனை செய்ய முடிகிற எதுவும் நிஜம்.’
‘தேவையற்ற விஷயங்களை நீக்குவதே கலை.’
‘நான் தேடுவதில்லை, கண்டு கொள்கிறேன்.’
‘கலையை நீ உருவாக்குவதில்லை, அதை கண்டுபிடிக்கிறாய்.’
‘எதையும் நான் எப்படி நினைக்கிறேனோ அப்படித்தான் வரைகிறேன், எப்படி பார்க்கிறேனோ அப்படி அல்ல.’
‘ஒவ்வொரு குழந்தையும் ஒரு கலைஞன். சிரமம் என்னவெனில் வளர்ந்த பிறகும் கலைஞனாக நீடிப்பதே.’
‘இளமையாக ஆவதற்கு ரொம்ப காலம் பிடிக்கிறது.’
‘இந்த உலகம் அர்த்தமற்றதாக காணப்படுகிறது, நான் மட்டும் ஏன் அர்த்தமுள்ள படங்களை வரைய வேண்டும்?’
‘ஏகப்பட்ட பணம் வைத்திருக்கும் ஒரு ஏழையாக வாழ விரும்புகிறேன் நான்.’
‘வாழ்க்கையின் அர்த்தம் உங்கள் திறமையைக் கண்டுபிடிப்பது. வாழ்க்கையின் நோக்கம் அதை மற்றவர்களுக்கு கொடுப்பது.’
‘கலை என்பது உண்மையை நாம் உணர வைக்கிற ஒரு பொய்.’
‘ஒவ்வொரு குழந்தையும் ஒரு கலைஞன். சிரமம் என்னவெனில் வளர்ந்த பிறகும் கலைஞனாக நீடிப்பதே.’
‘இசையும் கலையும் வாழ்க்கையை இன்னும் வசீகரமாக்கும் அலங்காரங்கள் அல்ல; அவை இல்லாமல் வாழ முடியாத அளவு வாழ்வின் ஆதார தேவைகள்.’

ஒத்திப் போடுவதுபோடுவது இவருக்குப் பிடிக்காத விஷயம். ‘அப்படியே விட்டுவிட்டு இறக்கத் தயாராக இருக்கிற விஷயங்களை மட்டுமே ஒத்தி போடுங்கள்!’ என்பார்.

பிக்காஸோவின் வீட்டுக்கு விஜயம் செய்த ஓர் பிரமுகர் சுற்றிப் பார்த்துவிட்டுக் கேட்டார், “ஆமாம், சுவரில் உங்க ஓவியம் ஒன்றையும் காணோமே, உங்களுக்குப் பிடிக்காதா?”
“ரொம்பப் பிடிக்கும்,” என்றார் பிக்காஸோ, “ஆனா அதெல்லாம் ரொம்பக் காஸ்ட்லியாச்சே?”