Ernest Hemingway… அவர் காலத்துக்கு way too advanced writer.
இன்று பிறந்த நாள்!
அந்த நாவல்தான் ‘The Old Man and the Sea.’ உடனடியாக வாங்கிக் கொடுத்தது கதைக்கான புலிட்சர் பரிசு. உதவியது அவர் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறுவதில்.
84 நாட்கள் எந்த ஒரு மீனும் சிக்காமல் துரதிர்ஷ்டசாலி என்று முத்திரை குத்தப்பட்ட வேதனை, கிழவன் ஸாண்டியாகோவுக்கு. இன்றைக்கு எப்படியும் மீனோடு வருவேன் என்று கிளம்புகிறான், அந்த சிறிய படகில். சிக்குகிறது ஒரு பெரிய மெர்லின் மீன். திமிறும் முரட்டு மீனை இழுத்தெடுக்க முடியாத அவனையும் படகையும் அது இழுத்துச் செல்கிறது. இருவருக்குமான அந்தப் போராட்டம் இரண்டு நாளுக்கு மேல் நீள்கிறது. நேர்ந்த காயங்களில் உடல் உருக்குலைந்தாலும் மன உரம் குறையவில்லை. ஒருமித்த உக்கிரத்தில் குத்தீட்டியால் அதைக் கொன்று விடுகிறான், ஆனால் அதைக் கொண்டு வருவதற்குள் சுறாக்கள் அதைத் தாக்க அந்தப் போரில் இன்னும் தளர்கிறான். அவை தின்றது போக, கரைக்கு வரும் மீனின் பதினெட்டடி எலும்பைக் கண்டு வியந்து நிற்கிறார்கள் எல்லாரும்.
ஸான்டியாகோ தன்னைத்தானே ஊக்கப்படுத்திக் கொள்ளும் வார்த்தைகள் அற்புதமானவை.
‘நான் நினைக்கிற அளவுக்கு வலிமை இல்லாதவனாக இருக்கலாம்; ஆனால் என்னிடம் ஏராளமான தந்திரங்கள் இருக்கின்றன. வைராக்கியம் இருக்கிறது.’.
‘என்ன இல்லை உன்னிடம் என்று யோசிப்பதற்கான தருணம் அல்ல இது. உன்னால் என்ன செய்ய முடியும், உன்னிடம் இருக்கிறது என்பதை யோசி.’
‘ஏ மீனே, நான் சாவது வரை உன்னை விட போவதில்லை!’
திரைப்படமானபோது Spencer Tracy நடித்தார். கியூபாவிலிருந்த ஹெமிங்வேயை நேரில் சந்தித்து சம்மதம் வாங்கினாராம். ஆஸ்கார் நாமினேஷன்! டிவி படமானபோது நடித்த Anthony Quinn அதைத் தன்னுடைய பிறந்தநாள் பரிசாக கேட்டு வாங்கினாராம்.
படிக்கிற காலத்திலேயே பள்ளி பத்திரிகையில் எழுத ஆரம்பித்தவர் ஹெமிங்வே. Kansas City Star பத்திரிகை இவர் எழுத்தை செதுக்கியது. இரண்டாம் உலக யுத்தத்தில் பணியாற்றியதோடு பத்திரிகைகளுக்கும் பல கட்டுரைகள்.. அட்வெஞ்சர் காற்றடைக்கப்பட்ட அனுபவங்களால் ஆனது அவரது வாழ்க்கை.
இவருடைய ஸ்டைலும் நடையும் தமக்கென்று ஒரு பெயரை வாங்கிக் கொண்டன, ஏராளம் எழுத்தாளர்கள் பின்பற்றும் அளவுக்கு! அவர் சொல்வது… ‘நடந்த, நடக்கிற விஷயங்களிலிருந்தும் தெரிந்த, தெரிந்துகொள்ள முடியாத விஷயங்களில் இருந்தும் நீங்கள் முயன்று கண்டுணருவது முற்றிலும் புதிதான விஷயம் மட்டுமல்ல, அது அசல் விஷயங்களை விட அசலானதும் துடிப்பானதுமான ஒன்று. அதற்கு நீங்கள் உயிர் கொடுக்கிறீர்கள். செம்மையாகச் செய்யும்போது அதற்கு அழியாத் தன்மையும் கொடுக்கிறீர்கள்.’
காதலித்த ஆக்னஸ் தன்னை விட்டுச் சென்றதில் உருவான கதையின் பெயர் ‘A very short Story.’
படைத்த மற்றொரு காவியம் அறிவீர்கள்: ‘A Farewell to Arms.’ முதல் உலக யுத்த பின்னணியை வைத்து எழுதிய அந்த நாவலின் முடிவை ஒன்பது முறை திருத்தி எழுதினாராம். பிரமாதமான விற்பனையுடன் மகத்தான இடத்துக்கு அவரைக் கொண்டு சென்றது அது.
Quotes?
'மிகச் சிறிய விடை என்பது அந்த வேலையை செய்து விடுவது.'
'நம்பலாமா ஒருவரை என்பதை நன்கறிய நல்ல வழி அவரை நம்புவதே.'
'புத்திசாலிகளிடம் சந்தோஷம் நானறிந்தவரை அதிசயம்!'
No comments:
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!