Friday, December 3, 2021

திரை அமைத்த கடல்...



‘பெண்ணாயிருப்பது பெரும் சிரமமான காரியம், ஏனெனில் அதன் முக்கிய வேலை ஆண்களை கையாளுவது என்பதால்.’

சொன்னவர் Joseph Conrad.

எத்தனையோ எழுத்தாளர்களின் ஆதர்ச எழுத்தாளரான ஹெமிங்வேயின் ஆதர்ச எழுத்தாளர்களில் ஒருவர் இவர். இன்று பிறந்தநாள்!
கடல் தான் இவரது உடல் மொழி. எழுதிய கதைகளில் கடல் கதைகளே பிரதானம். 20 வருட வணிகக் கப்பல் பயண அனுபவம் இவர் எழுத்துக்கு நிறையவே 'திரை' அமைத்தது.
புனைவிலும் சரி, உள்ளடக்கத்திலும் சரி படித்தவர்கள் மறக்க முடியாத நாவல் ‘Lord Jim.’ கோழைத்தனத்தால் தன் கப்பலைக் கைவிட்ட ஜிம்மின் கதை. தன்னை நிலை நிறுத்த அவனது துடிப்பும் முயற்சிகளும் விரிந்து பரவும் நாவலில்! பிரபல Peter O'Toole நடித்தார் Lord Jimஆக, பிரபல Richard Brooks டைரக்‌ஷனில். ஆல்பிரட் ஹிட்ச்காக் படமாக்கிய இவரது நாவல் தான் ‘Sabotage.’ (1936)
1924இல் மறைந்த இவரது Heart of Darkness நாவல் இந்த 2021ல் படம் ஆகிக்கொண்டிருக்கிறது.
சஸ்பென்ஸாக விட்டு மறைந்தார் சஸ்பென்ஸ் என்ற தன் கடைசி நாவலை.
ஆங்கிலத்தில் இத்தனை கதைகளைப் படைத்தவருக்கு இருபது வயதுவரை ஆங்கிலம் தெரியாதாம்.
‘சக மனிதர்களின் குறைபாடுகளின்பால் அக்கறையோ அனுதாபமோ இல்லாதவரை ஒரு எழுத்தாளர் என்று கொள்ள முடியாது,’ என்பவரின் இதர வார்த்தைகள்:
‘மற்றவரை ஒத்துக் கொள்ள வைக்க முயல்கிறவர் சரியான வாதத்தை விட சரியான வார்த்தையையே நம்ப வேண்டும். உணர்வின் சக்தியைவிட ஒலியின் சக்தி அதிகம்.’
‘அடுத்தவர்களின் பலவீனத்திலிருந்து தற்செயலாக எழுவதே பலம் என்பது.’
‘நாம் கனவு காண்பது போல, நாம் வாழ்வதும் தனியாகவே.’
'கேடு விளைவிக்கும் அபூர்வ சக்திகள் எங்கோ இருப்பதாக நம்பவேண்டாம், சகல வகை கெடுதலையும் செய்யும் சக்தியை மனிதர்களே நிறைய வைத்திருக்கிறார்கள்.'
‘எதிர் கொள்வது, எது வந்தாலும் எதிர் கொள்வது: அதுவொன்றே முன்னேறிச் செல்ல ஒரே வழி . எதிர் கொள்ளுங்கள்!’
‘கடல் என்றுமே ஒரு நண்பராக இருந்ததில்லை. மிஞ்சி மிஞ்சி போனால் மனிதனின் அலைபாயும் மனதுக்கு ஒரு துணையாக.’
‘மனிதரின் கற்பனையில்தான் சத்தியம் ஒவ்வொன்றும் சக்தி வாய்ந்த, மறுக்க முடியாத உருவம் பெறுகிறது. கற்பனைதான் வாழ்க்கைக்கும் சரி, கலைக்கும் சரி மாபெரும் அதிபதி.’
‘ஒவ்வொரு புல்லின் இதழுக்கும் மண்ணில் ஓர் இடமுண்டு. தன் பலத்தை அதிலிருந்துதான் எடுத்துக் கொள்கிறது. அதுபோலவே மனிதனும் தன் வாழ்க்கையையும் நம்பிக்கையையும் தான் வேரூன்றியிருக்கும் மண்ணிலிருந்து எடுத்துக் கொள்கிறான்.’

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!