Friday, August 22, 2025

அசட்டு அப்பாவியாக...


அது யாரய்யா அசட்டு அப்பாவியா என்றால் அதுதான் டி. எஸ். பாலையா!
வேறு யாரய்யா முகத்தில் டன் டன்னாக அசடு வழிய விடுவதில் வல்லவர்?
அந்தக் காதலிக்க நேரமில்லை விஸ்வநாதனாக வேறு யாரையாவது நம்மால் நினைக்க முடியுமா பாலையாவைத் தவிர? வெறும் ரீயாக்‌ஷனை வைத்துக்கொண்டே ஐந்து நிமிடம் அந்தக் காட்சியை ஹாஸ்யத்தின் உச்சத்துக்குக் கொண்டுபோய் விடுவாரே நாகேஷ் கதை சொல்லும்போது!
பாலையா அந்த கேரக்டருக்கு கொடுத்த பாலிஷ் நமக்கு ஒரு பிளஸண்ட் சர்ப்ரைஸ்! ஹீரோக்கள் அவரை ஏமாற்றுவதான கதையை, அவர் ஏமாறுவதான கதையாக மாற்றும் அளவுக்கு அட்டகாசமாக அவர் நடிப்பு!
எம்ஜிஆர் அறிமுகமான சதிலீலாவதி படத்தில் அறிமுகமான இவர், வில்லனுக்கும் காமெடியனுக்கும் இடையிலான ஒரு வகை காரக்டரை திரைக்கு சுவாரசியமாக அறிமுகப்படுத்தினார்.
'இன்னிக்கு வெள்ளிக் கிழமை, வாளைத் தொடமாட்டேன்'னு மதுரை வீரனிடம் காட்டும் பொய் மிடுக்கும் சரி, பிள்ளைகளின் பாமா விஜய ஸ்டார் மோகத்தைக் கண்டிக்கும் மெய் மிடுக்கும் சரி என்னவொரு ரேஞ்ச் அஃப் ஆக்டிங்!
கொலைப் பழியை ஏவிஎம் ராஜன் மீது சுமத்தி ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு, தன் மனைவி மகளைப் பறிகொடுத்தபின் மனம் திருந்தும் கேரக்டர், கே எஸ் கோபாலகிருஷ்ணனின் ‘என்னதான் முடிவு?’ படத்தில். பழிவாங்கத் துடிக்கும் ராஜன் முன்னால், ‘உன் கையால் சாகத்தான் காத்திருந்தேன்,’ என்று அமைதியாக வந்து நிற்கும் க்ளைமாக்ஸில் மன்னிப்பை ஆடியன்ஸிடமிருந்தும் வாங்கிவிடுவார்.
சந்தர்ப்ப சூழ்நிலையால் தன் குழந்தையை வேலைக்காரி குழந்தையாகவும் அவள் குழந்தையைத் தன் குழந்தையாகவும் பார்க்க வேண்டிய சூழ்நிலை அம்மா எம் வி ராஜம்மாவுக்கு. அவரது பிடிவாதம் பிடித்த கணவராக அமர்க்களப் படுத்தியிருப்பார். எல். வி. பிரசாத்தின் ‘தாயில்லாப் பிள்ளை’யில்.
ஜெயகாந்தன் கதையில் நடித்தது ‘யாருக்காக அழுதான்?’ படத்தில். குடிகாரனின் பணத்தை எடுத்து வைத்துக்கொண்டு அப்பாவி நாகேஷ் மீது பழியைப் போட்டுவிட்டு உள்ளுக்குள் வதைபடும் அந்த கேரக்டருக்கு 100 சதம் உயிர் கொடுத்திருப்பார்.
பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாமல் நடந்ததை சொல்லவும் முடியாமல் பரிதவிக்கும் கேரக்டர் என்றால் இவருக்கு பீட்சா சாப்பிடுற மாதிரி. இவருக்காகவே எழுதப்பட்டதோ என்று சில சமயம் தோன்றும். ‘ஊட்டி வரை உறவு.’
துளி பிசிறு இல்லாமல் கான்ட்ராஸ்ட் காட்டுவதில் மன்னர். சபையில் காட்டிய கர்வத்துக்கு சற்றும் குறையாமல், ‘சற்று முன்பு ஒரு தேவகானம் கேட்டதே?’ என்று பிரமிப்பை உதிர்த்தபடி தன் செருக்குச் சட்டையைக் கழற்றிப் போடும் அந்த நயம்! (திருவிளையாடல்)
Aug. 23. பிறந்த நாள்!

சித்திரம் பேசுதடி...


“அமுதைப் பொழியும் நிலவே..
நீ அருகில் வராததேனோ?”
‘தங்கமலை ரகசியம்' படத்தின் சாகாவரம் பெற்ற பாட்டு! இளவரசி ஜமுனாவின் பாட்டைக் கேட்டு மொழியே தெரியாத டார்ஜான் சிவாஜி மயங்கி ஓடிவந்து நிற்கும் காட்சி.. ‘தங்கமலை ரகசியம்' படத்தின் சாகாவரம் பெற்ற பாட்டு!
சொடுக்கி இழுக்கும் catchy melody... 'தனனா.. தனனா.. தனனா..' மூன்று 'தனனா'வையும் மூன்று விதமாக அடுக்கி ஒரு பிரில்லியண்ட் ட்யூன்!
இசையமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா... இன்று பிறந்த நாள்!
அடுத்த வருடமே எல்லார் சிந்தையையும் மயங்க வைத்தார்.
“சித்திரம் பேசுதடி...
என் சிந்தை மயங்குதடி…” (‘சபாஷ் மீனா’)
சபாஷ் சொல்ல வைத்த அதன் மற்றொரு கானா: “காணா இன்பம் கனிந்ததேனோ..”
காலாகாலத்துக்கும் ரசிகர்கள் மனதில் நிற்கும் இவரது பாடல் ஒன்று உண்டு.
“என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே,
நீ இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே?..”.
‘எல்லாரும் இந்நாட்டு மன்னர்’ படத்தில் இந்த எல்லாரும் முணுமுணுக்கும் பாடல்.
சி.ஆர்.சுப்பராமன், சுதர்சனம் போன்ற இசை மேதைகளிடம் உதவியாளராக பணிபுரிந்து அனுபவம் பெற்றவர்... எல்லா இசைக் கருவிகளை வாசிப்பதிலும் விற்பன்னரான இவருக்கு ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன் இசைக்கு கிடார் வாசித்த அனுபவமும்...
பி.ஆர்.பந்துலுவுக்கு முன் டி. ஆர் மகாலிங்கம் தன் படங்களில் இவரை பயன்படுத்தினார். கேட்டிருக்கிறீர்களா? “பாட்டு வேணுமா... உனக்கொரு பாட்டு வேணுமா?” என்று மகாலிங்கம் கேட்பாரே?
“தென்றல் உறங்கிடக் கூடுமடி, எந்தன் சிந்தை உறங்காது…” என்று அழகாக பி.லீலா ரெண்டு சரணம் வரை பாட, “துள்ளித் திரிந்தாள் சுற்றிப் பறந்தாள்..” என்று டி.எம்.எஸ். தொடரும் இனிமைப் படகு தபேலா ஆற்றில் உலா வருமே, அது ’சங்கிலி தேவன்' ஹிட்!
சீர்காழியின் மணியான பாடல்களில் ஒன்றான “கோட்டையிலே... ஒரு ஆலமரம்…” மறக்க முடியாதது. ‘முரடன் முத்து’ வுக்கான இவர் அமைத்தது.
டி.ஜி. லிங்கப்பாவின் டி.ஜே. அந்த இரண்டு காமெடி பாட்டுக்களும்:
‘முதல் தேதி’யில் கலைவாணர் என்.எஸ்.கே. பாடும் “ஒண்ணுல இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்..கொண்டாட்டம்! இருபத்தொண்ணுல இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம்… திண்டாட்டம்!”
மற்றொன்று ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’யில் சிவாஜி கலக்கும் “ஜாலி லைஃப்.. ஜாலி லைஃப்.. தம்பதியானா ஜாலி லைஃப்…” பாடல். சிவாஜிக்குக் குரல் கொடுத்தவர் யார் என்கிறீர்கள்? ஜே. பி. சந்திரபாபு!

Thursday, August 21, 2025

அந்த ஒன்றை...


எந்த ஒன்று மட்டும் இல்லை என்றால் திணறித் திண்டாடிப் போவோமோ, அந்த ஒன்றை உருவாக்கிய ரெண்டு பேரில் ஒருவர் அவர்.
தகவல் என்ற மலையை எல்லார் கைக்குள்ளும் அடங்கும்படி செய்த இருவர். சிறு கூழாங்கல்லாக.. ஆம், கூகிளாக..
Google! உலகின் மொத்த விஸ்தீரணமும் ஒற்றை அடியாகி விட்டது. அதாங்க உங்க உள்ளங்கைக்கும் லேப்டாப்புக்கும் உள்ள தூரம்.
Sergey Brin… இன்று பிறந்த நாள்!
மேரிலாண்ட் யூனிவர்ஸிடியில் கணக்கிலும் கம்ப்யூட்டர் சயின்ஸிலும் ஹானர்ஸுடன் B.S. முடித்தவர் மேல்படிப்புக்காக சேர்ந்த ஸ்டான்ஃபோர்டில் அந்த இரண்டாமவரை (Larry Page) சந்தித்தார்.
எத்தனை தூரம் ஒரு வெப்ஸைட் மற்றொன்றால் இணைக்கப்படுகிறது என்பதைக் கொண்டு அதைத் தரப் படுத்தலாம் என்று யோசித்தார்கள். Page Rank என்ற அதன் முதல் அல்காரிதத்தை எழுதினார்கள். சடுதியில் பதில் தரும் கூகுள் பிறந்தது, லாரி பேஜ் தங்கிய விடுதியில்.
இப்படி ரெண்டு பேருமாக சேர்ந்து செய்த ரிஸர்ச்சில் உருவானது உலகின் மாபெரும் ஸர்ச் என்ஜின். ஒன்றுடன் நூறு சைபரை அடுக்கினால் வரும் மாபெரும் எண்ணைக் குறிக்கும் சொல் Googol. அதிலிருந்து தோன்றியது Google.
குடும்பம் நண்பர்கள் என்று உதவிக்கு கிடைத்த ஒரு மில்லியனை கொண்டு உருவாக்கிய தேடல் என்ஜினை இன்று தினமும் ஒரு ட்ரில்லியன் பேருக்கு மேல் கிளிக்குகிறார்கள்.
வேக வளர்ச்சி. YouTube -ஐச் சொந்தமாக்கிக் கொண்டது 2006 இல். 2015 இல் கூகிள் Alphabet Inc இன் அங்கமானபோது அதன் தலைவரானார் ப்ரின்.
கவலையின்றி தகவல் பிடிக்கும் வலையை நமக்குத் தந்தவர்கள் தற்போது அக்கறை காட்டுவது உலகை மேம்படுத்தும் வழிகளில். மாற்று எரிசக்தி, மாசற்ற கார், மாறுபடாத க்ளைமேட் என்று. Artificial Intelligence -இல் காரை இயக்கிக் காட்டியது 2010இல்.
உடற் பயிற்சி என்றால் ப்ரின்னுக்கு உயிர். காலேஜில் படிக்கையில் ‘ஏதும் அட்வான்ஸ்ட் கோர்ஸ் எடுத்திருக்கியா’ன்னு அப்பா கேட்டபோது, ‘ஆமா, அட்வான்ஸ்ட் ஸ்விம்மிங்!’ன்னு பதிலளித்தாராம்.
><><
(தகவல் நன்றி: Google)

உச்சகட்ட ஸ்டைல்...


சிவாஜி நடித்ததிலேயே உச்சகட்ட ஸ்டைலாக இந்தக் காட்சியை கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம்.
"மந்த மாருதம் தவழும்..
சந்த்ரன் வானிலே திகழும்..
இந்த வேளையே இன்பமே,
ஏகாந்தமான இந்த வேளையே இன்பமே!"
(படம்: நானே ராஜா (1956)- ஶ்ரீரஞ்சனியைப் பார்த்து சிவாஜி போதையில் பாடும் seducing பாட்டு.) Link கீழே.
மெள்ள வலது பக்கம் திரும்பி காமிரா பேன் செய்ய அவர் போதையில் தள்ளாடியபடி 'லல்ல லாலலா..' என்று பாடியபடி வந்து நின்று 'ஹக்!' என்ற விக்கலுடன் தலையைச் சொடுக்கும் ஸ்டைல்! (அதையும் ஒவ்வொரு முறை ஒவ்வொரு விதத்தில்!)
நின்ற இடத்திலேயே கால்கள் நங்கூரம் பாய்ச்சி நிற்க, உடல் ஒய்யாரமாக வளைந்து ஒவ்வொரு திசையிலும் அரை அடி சாய்ந்து திரும்ப, ஒயினில் உடல் தள்ளாடுவதையும் ஒய்யாரமாக தனி பாணியில் செய்திருப்பார்.
உயர வேண்டிய நேரம் சரியான மில்லிமீட்டருக்கு உயரும் புருவங்கள்! அசைய வேண்டிய நேரம் அங்குல சுத்தமாக அசையும் கரங்கள்! படியிறங்கி வரும் paragon பாங்கு போனஸ்.
குடித்து விட்டு நாயகியை வளைத்துப் பாடுவதை எத்தனையோ ஹீரோக்கள், வில்லன்கள் செய்திருக்கிறார்கள். ஆனால் அதில் இப்படியொரு தத்ரூபம் (50%) + ஸ்டைல் (30%) + அழகு (20%) என்று ரைட் மிக்ஸில் கலந்த 'archive scene' நடிப்பை யாரும் கொடுத்ததில்லை என்பது பளிச்!
இனி பாடல்... மெல்லிய ஷெனாய் இசைத் துவக்கமே நிமிர்ந்து உட்கார வைத்து விடுகிறது. தபேலாவை அந்த உருட்டு உருட்டுகிறார் அதன் டாப் ரேஞ்சுக்கு! 'கருத்தைக் கொள்ளை கொண்டாய் வாழ்விலே..' என்ற இடத்தில் ரெண்டு செகண்ட் நிறுத்தி பேஸ் கிதாரை மென்மையாக அதிர விட்டு.. அடடா, யார் அந்த டி ஆர் ராம்நாத்? அற்புத இசை! என்னவொரு மெலடி! எல்லாவற்றுக்கும் மேலாக டி.எம்.எஸ்.சின் தெளிவான உச்சரிப்பும் தேனான குரலும்!
மெட்டுக்குப் பாட்டு எழுதுபவர் கவனத்துக்கு இந்த வரி! என்னவொரு match!:"பழுத்தமாம்ப...ழத்தைக்கண்டும்...பசித்தவன்காத்...திருப்பதில்லை..." மற்றொன்று: "கண் படைத்த பயனை நான் கண்டுகொண்டேன் உன்னால் தானே.."
நடிப்புக்கு ஒரு சிவாஜி என்றால் அவர் ஸ்டைலுக்கு ஒரு காட்சி இது!
><><

Wednesday, August 20, 2025

மூன்றும் முதலிடம்...


முதல் நாவல் எழுதினார். அது நியூயார்க் டைம்ஸ் பெஸ்ட் ஸெல்லர் லிஸ்டில் முதலிடத்தில் 28 வாரம். அடுத்ததை எழுதினார். அதுவும் 13 வாரம் முதலிடத்தில். மூன்றாவது நாவல். அதுவும் முதலிடத்தில் 8 வாரம்.
Hat-trick அடித்த பெண் எழுத்தாளர் Jacqueline Susann. இன்று பிறந்த நாள்!
எழுத்தாளராக வர வேண்டியவர் முதலில் விரும்பியது நடிகை ஆக. நாடகம், டிவி, சினிமா என்று முயன்றதில் பெற முடியாத இடத்தை கடைசியில் எழுத்து பெற்றுத் தந்தது.
முதல் நாவல் ‘Valley of the Dolls.’ விமரிசன வரவேற்புக்கு எதிர் விகிதத்தில் விற்பனை எகிறிற்று. ஒன்றரை கோடி பிரதிக்கு மேல் விற்று கின்னஸில் இடம் பிடித்தது 1974 இல்.
மூன்று நாவல்களுமே படமாக வந்தன. நன்றாக இல்லை என்று அவர் வர்ணித்த ‘Valley…’ நல்லாவே கல்லா கட்டியது. மூன்றாவது நாவல், ‘Once is not Enough.’ கிர்க் டக்ளஸ் நடித்து ஹிட்டானது.
Quotes?
‘எவருக்குமே ஒரு அடையாளம் உண்டு. அவரது சொந்த அடையாளம் ஒன்று. அவர் மற்றவருக்கு காட்டும் அடையாளம் ஒன்று.’
‘மற்றவர்கள் சொல்லும் அபிப்ராயத்தை வைத்து ஒருவரை எடை போட்டு விடாதீர்கள். எல்லாருக்குமே வேறு வேறு பக்கங்கள் உண்டு வேறு வேறு நபர்களுக்கு காட்டுவதற்கு.’

‘எவரெஸ்டில் ஏறுவது சுலபமான விஷயம் அல்ல. ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கிறீர்கள். திரும்பிக் கீழே பார்க்காதீர்கள். கண்கள் உச்சியிலே இருக்கட்டும்.’ 

Sunday, August 17, 2025

அந்த நல்ல சப்தம்...

ஆனிவர்ஸரியும் அதுவுமாக மனைவி கேதிக்கு கிஃப்ட் வாங்க அவன் போனபோது கூடவே உள் நுழைந்த நாய் ஒன்று கண்ணாடியை உடைத்து விட, கையில் இருந்ததை டேமேஜுக்கு அழுதுவிட்டு வெறுங்கையோடு வீடு திரும்புகிறான் டேனி. தொடர்கிறது நாய். வாயில் இவன் பரிசில் செருக எழுதிய சீட்டு. பார்த்துவிட்டு ஆஹா, அழகிய பரிசு! என்று அவள் தழுவிக் கொள்கிறாள் நாயை! பிறகு நாயகனையும்! மாமியார் முன் கேவலப்பட வேண்டாமேன்னு மூடிக் கொள்கிறான் வாயை.
திருப்பம் என்னான்னா... நாயோ ஒரு கடத்தல் கூட்டத்தினுடையது. பண்ட மாற்று செய்ய பயன் படுத்துவது. அதைக் காணாமல் அவங்க தலையைப் பிய்த்துக் கொள்கிறாய்ங்க, அதாவது ஒருத்தர் தலையை அடுத்தவன்! அவர்கள் ஒவ்வொருவராகப் போட்ட, நாய் காணோம் விளம்பரத்தை ஆவலோடு பார்த்து (பின்னே? பெட் ரூமுக்கே வந்துவிட்ட நாயை அவளுக்குத் தெரியாமல் அப்புறப்படுத்த வேறு வழி?) அங்கே போனால் அவன்களுக்குள் வரிசையாய் கொலை விழ, அங்கே போனதால் போலீஸ் இவனைத் தூக்க .. வீட்டில் அமளி.
நாயை வாக் அழைத்துப் போகிறாள் கேதி. வழக்கப்படி வந்த கடத்தல்காரன் ஒருவன் அவள் பையைப் பிடுங்கிவிட்டு பணத்தைக் கொடுத்துவிட்டுப் போகிறான். அவன், பையைப் பிரித்தால் எலும்புத் துண்டுகள். இவள் பையைப் பிரித்து மகிழ்ந்தால், அத்தனையும் கள்ள நோட்டு.
தம்பதி அதை ஸ்டேஷனில் ஒப்படைக்கையில், பெண்டாட்டி முன்னாடி உண்மையை, அவளுக்கு பரிசு வாங்காத உண்மையைச் சொல்லவேண்டி வருகிறது. அடுத்து, வீட்டுக்கே மீதி கோஷ்டி தேடிவர போலீஸ் சுற்றி வளைக்கிறது. அவளுக்கு நாயும், அவனுக்கு அதை பெட் ரூமுக்கு வெளியே தள்ளும் தைரியமும் கிடைத்து விடுகிறது!
1951 -இல் வந்த ‘Behave Yourself’ படத்தில் கேதியாக நடித்தவர் Shelly Winters. இன்று பிறந்த நாள்.
நிறைய பேர் மறைவதாலோ என்னவோ படம் முடியும்போது நடிகர்கள் பேரை in the order of disappearance என்று தமாஷாக போடுவார்கள்.
Shelly Winters... 50 களின் கவர்ச்சிக் கன்னியரில் ஒருவர்.. அழகாய் நடிக்கும் டிப்ஸை மர்லின் மன்றோவுக்கே வழங்கியவர்.
‘A Place in the Sun’ -இல் எலிசபெத் டெய்லருடன் நடித்தபோது அவருக்கல்ல, இவருக்கு ஆஸ்கார் நாமினேஷன் வந்தது. அவார்டை பின்னால் ரெண்டு முறை வாங்கிவிட்டார். (‘The Diary of Anne Frank’, ‘A Patch of Blue.’)
‘எல்லா கல்யாணங்களுமே சந்தோஷ சமாசாரம்தான் ஹாலிவுட்டில். அப்புறம் சேர்ந்து வாழ நினைக்கிறதுதான் எல்லா பிரசினையும் கொண்டுவருது,’ என்பவர் சொன்ன ஒன்று, “ஆஸ்காரை வாங்கிக் கொண்டு நான் வீட்டுக்குள் நுழைந்தபோது என் கணவர் அதைப் பார்த்த ஒரே பார்வையில் எனக்குத் தெரிஞ்சு போச்சு என் மணவாழ்க்கை முடிஞ்சதுன்னு.”
Best Quote? ‘நாடகத்திலதான் அந்த நல்ல சப்தத்தை நீங்க கேட்க முடியும். அதை படத்திலேயோ டி.வி.யிலேயோ கேட்கவே முடியாது. அது ஒரு அற்புதமான நிசப்தம். அர்த்தம் என்னன்னா நீங்க அவங்க இதயத்தில அறைஞ்சிட்டீங்க.’


Wednesday, August 13, 2025

இல்லாமல் முடியாது ..


அது இல்லாமல் முடியாது என்று ஆகிவிட்டது நம்ம வாழ்க்கை. ஆனால் அந்த ‘டி.வி.’யை கண்டு பிடித்தவர், அதன் தந்தை என்று அழைக்கப்படுபவர், முதல் பேசும் சினிமா வெளிவருவதற்கு முந்தைய வருடமே அதைச் செய்து காட்டியவர்...
John Logie Baird. இன்று பிறந்த நாள்! (1888 - 1946)
லண்டன் Royal Institution -இல் 1926 ஜனவரியில் நடந்தது அந்த டெமோ. நகரும் பொருட்களை திரைக்கு நகர்த்தி காட்டினார் ஜான். விநாடிக்கு 5 வேகத்தில் படங்கள் வந்து விழுந்தன திரையில். அப்ப அதற்கு அவர் சொன்ன பெயர் டெலிவைஸர்!
அடுத்த வருடமே லண்டனிலிருந்து கிளாஸ்கோவிற்கு அசைவுகளை ஓசையுடன் டெலிபோன் ஒயர்களின் வழியே டெலிகாஸ்ட் செய்தார். அடுத்த வருடம் லண்டனிலிருந்து நியூயார்க்குக்கு. அதே வருடம் கலர் டெலிவிஷனையும்!
ஒளியை மின்சாரமாக மாற்றும் தன்மை selenium -க்கு உண்டு என்பதைப்பற்றி படித்ததுதான் அந்த ஸ்காட்லாண்ட் இளைஞனை டெலிவிஷனைப் பற்றி சிந்திக்க வைத்தது.
பாவம், ஃபண்ட்ஸ் கிடைக்கவில்லை. பத்திரிகை ஆபீஸில் சென்று தன் ஐடியாவை சொன்னால் பைத்தியம் மாதிரி பார்த்தார்கள். தன் முதல் டி.வி. மாடலை செய்தபோது தையல் ஊசியிலிருந்து சைக்கிள் லைட் வரை கையில் கிடைத்த பொருளை எல்லாம் உபயோகிக்க வேண்டியதாயிற்று.
சுழலும் டிஸ்குகள் அசைவுகளை ஸ்கேன் செய்து மின் சிக்னல்களாக கம்பிகளில் அனுப்ப, வேறோரிடத்தில் அவை திரையில் பதிக்கப்படுகின்றன. முதலில் திரையில் அசைந்த பிம்பம் ஒரு பொம்மையின் தலை. பார்த்ததும் அவர் துள்ளிக் குதித்தார்.
டி.வி.க்கான அந்த ஒரிஜினல் ஐடியா Nipkow உடையது. ஆனால் அதை மேம்படுத்தி தெளிவான பிம்பம் கொண்டுவந்தது இவரது டெலிவைஸர் தான். தெளிவைஸர்!
முதலில் ஐந்து வருடத்திற்கு அவருடைய டெக்னிக்கை உபயோகித்தது BBC. இரண்டு மடங்கு லைன்களுடன் இவருடன் போட்டியிட்டது மார்க்கோனி டிவி. இவருடையது மெக்கானிக்கல் என்றால் அவருடையது எலக்ட்ரானிக்.
டி.வி. உலகத்தின் எந்த சாத்தியதையையும் ஜான் விட்டு வைக்கவில்லை. HD TV, 3D TV.... ஏன், வீடியோவையும் தொட்டார். Phonovision என்று பெயர் வைத்தார்.
டி.வி. வரலாற்றில் இவருடையது மெகா சீரியல்!

Tuesday, August 12, 2025

ஏகத்துக்குச் சிரத்தை...


மறுபடி எடுக்க முடியாத மாபெரும் காட்சி அது. ஆயிரக்கணக்கான துணை நடிகர்களுடன் யுத்தக்காட்சி. ஒரே நேரத்தில் நாலு காமிராவால் படமாக்க ஏற்பாடு செய்திருந்தார் தயாரிப்பாள டைரக்டர்.
'ஆக் ஷன்!' சொன்னதும் படை வீரர்கள் மோதினார்கள். குதிரைகள் பாய்ந்தோடின. பீரங்கிகள் முழங்கின. குண்டுகள் வெடித்தன. மேடைகள் வீரர்களுடன் சரிந்தன. எல்லாம் பிரமாதமாக நடந்து முடிந்ததும் பார்த்தால்... என்ன துரதிருஷ்டம்! முதல் காமிராமேன் ஃபிலிம் அறுந்துவிட்டது என்றார். இரண்டாவதில் லென்சை தூசி அடைத்துவிட்டதாம். மேடை ஒன்று விழுந்து கேமரா முறிந்துவிட்டது என்றார் மூன்றாமவர்.. அப்படியே சோர்வாக உட்கார்ந்துவிட்டார் இவர். தூரத்தில் ஒரு குன்றின் மேல் வைத்திருந்த நாலாவது கேமரா! நினைவுக்கு வர, லாங் ஷாட்டாவது முழுமையாக கிடைத்ததே! என்றெண்ணி, மெகா ஃபோனில் கேட்டார். ‘எல்லாம் ஓகே தானே?’ ‘ஓ எஸ், நான் ரெடி!’ என்றார் அந்த கேமராமேன், ‘நீங்க ஆக் ஷன் சொல்ல வேண்டியதுதான் பாக்கி!’
பிரபல டைரக்டர் சிஸில் பி டிமிலி பற்றி சொல்லப்படும் நிகழ்ச்சி அது.
Cecil B DeMille... இன்று பிறந்த நாள்.
உடனே நினைவுக்கு வருவது 'Ten Commandments' & 'King of Kings'. ரெண்டையும் அவரே Silent Era -வில் முன்பு எடுத்திருக்கிறார் என்பது நியூஸ். ஹாலிவுட்டை உலக சினிமாவின் முக்கிய இடமாக மாற்றியவர் என்றிவரைக் கொண்டாடுகிறார்கள். அதன் முதல் 'முழு நீளத் திரைப் படத்'தை எடுத்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. ‘The Squaw Man’ என்ற இவரது மௌனப்படம்!
பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு எதுகை இவர். பிரமிக்க வைப்பது இவருக்கு பிஸ்கட் சாப்பிடுவது போல. பார்ட்னர் இருவருடன் இவர் தொடங்கிய படக் கம்பெனிதான் பின்னால் பாரமவுண்ட் ஆனது. நடிகர்களுக்காக செலவழிக்கும் பணத்தை தயாரிப்பில் செலவழிப்பது பெட்டர் என்று நினைப்பவர்.
‘மக்களின் அபிப்பிராயம் எப்போதும் சரியாக இருக்கும்.. மக்களுக்காகத்தான் படம் எடுக்கிறேன், விமர்சகர்களுக்காக அல்ல!’ சொல்லும் இவர் படங்களைப் பார்த்த ஆடியன்ஸைக் கணக்கிட்டால் மொத்தம் நாலு பில்லியனுக்கு மேல் வரும்!
சும்மா கதையை மட்டும் கேட்டிட்டுப் போக வரலை மக்கள் என்பது இவர் ஐடியா. படத்தின் மற்ற கலை அம்சங்களில் இவர் படு கவனம்! ஏன், இவர்தான் முதல்முதலாக 'ஆர்ட் டைரக்டர்' என்றொரு ஆளைப் போட்டவர்.
ஒரிஜினல் பி.டி.பார்னம் சர்க்கஸ் கம்பெனியை வைத்து இவரெடுத்தது ‘The Greatest Show on Earth’. சிறந்த படம், சிறந்த கதை என ரெண்டு ஆஸ்கார் அதற்கு.
‘பத்துக் கட்டளைகள்’… .அதற்காக 18 மைல் அகலத்தில் அவர் நிர்மாணித்த எகிப்திய நகரம்! 120 அடி உயர சுவர்கள்.. 35 அடி உயர சிலைகள்.. அஞ்சு டன் எடையில் ஏராளம் sphinx... 2,000 பேருக்கு மேலான கலைஞர்களும் மற்றவர்களும் தங்குவதற்கு 1000 டெண்ட்கள்! (தைக்கப்பட்ட உடைகளின் நீளத்தை அளந்தால் 15 மைலுக்கு மேலே.) முடிந்ததும் இடித்துப் புதைத்த நகரத்தைப் பற்றி இன்னமும் பேசும் லோக்கல் மக்கள்.
ஏகத்துக்குச் சிரத்தை வித்தையில். 75 வயதில் எடுத்த 'King of Kings' படப்பிடிப்பில் ரொம்ப உயரம் ஏறியபோது நேர்ந்த ஹார்ட் அட்டாக்… இரண்டே நாள் ஓய்வில் ஷூட்டிங் திரும்பிவிட்டார். அந்தப் படத்தில் தன் சம்பளம் அனைத்தையும் கொடுத்தது தர்மத்துக்கு. அமெரிக்கன் பிலிம் இன்ஸ்டியூட் தேர்ந்தெடுத்த தலைசிறந்த பத்துத் திரைக்காவியங்களில் ஒன்று அது.
டேக் எடுக்கும்போது யாராவது பேசினால் உடனே செட்டை விட்டு அகற்றி விடுவார். ஒருமுறை இவர் சீக்கிரமே ஆபீசுக்குத் திரும்பியபோது செகரட்டரி கேட்டாளாம், ‘என்ன, டேக்கின்போது பேசினீங்களா?’

ஒரு நிமிடத்தில்...


தி ஷங்கர் டச் ரொம்ப விசேஷமானது. ஒவ்வொரு காட்சியிலும் மைண்ட் தொடும். ரியாலிடிக்கு எத்தனை க்ளோஸாகப் போக முடியுமோ அத்தனை க்ளோஸ் ஆகப் போவார், ஆனால் ‘ட்ராமாடிக்’ ஆக! ஒவ்வொரு சீனும் ‘டிக்’ ஆகி விடுவது இப்படித்தான். கதையிலும் சரியான இடத்தை டச் பண்ணி அதை கோல்டன் டச் ஆக்கிவிடுவார். இந்தப் படத்தில்….
இந்தியன் 2 .. மிகவும் ரசித்தேன். (Spoiler Alert)
படத்தின் ஒன்லைனை முதல் ஒரு நிமிட காட்சியிலேயே சொல்லி விடுகிறார். நிற்கும் இடத்தை அசுத்தப்படுத்திக் கொண்டே சுத்தமான நாட்டை எதிர்பார்க்கும், அடுத்தவனை ‘பார்த்துப் போகச் சொல்லும்' அந்த ஆளைக் காட்டும் போதே விளங்கி விடுகிறது.
அப்பா லஞ்சத்தில் பணத்தை அள்ளுகிறார். ஒரு பெண் இறப்பதற்கும் காரணமாக இருக்கிறார். மகனே அவரைக் காட்டிக் கொடுக்க, கைதாகிறார். மனைவி அதனால் இறந்து விடுகிறாள். அவள் முகத்தை பார்த்துவிடத் துடிக்கிறான் மகன்.. உறவினர்களும் பக்கத்து வீட்டு பெண்களும் அவனை உள்ளே விடாமல் துரத்துகிறார்கள்..
‘COMEBACKINDIAN’ சொன்னவர்களே ‘GOBACKINDIAN’ சொல்லும் நாள் வருவது கவிதை திருப்பம்! அதற்கான காரணம் கதையின் எதார்த்தம்!
சதைப் பிடிப்பான ஒரு கதை வைத்திருக்கிறார். அதற்குள் வருவதற்குள்…
ரசிகர்களின் ஏமாற்றம் புரிகிறது. இந்தியன் தாத்தா வந்தால் என்ன பண்ணுவார்? இப்ப இதைப் பண்ணுவார், இப்ப இப்படி அடிப்பார், இப்ப இப்படி நடக்கும்.. இப்படி தெரிஞ்சுக்கிட்டே இருந்தா எப்படி ரசிக்க முடியும்? ஆக குற்றவாளிகளுக்கு அவர் கொடுக்கும் பனிஷ்மென்ட் காட்சிகள் எல்லாம் ஒரு ரீ ரன் மாதிரி அலுத்து விடுகிறது. அதை புதுவிதத்தில் காட்ட முயலும் டைரக்டருடைய சின்ஸியாரிடி வேஸ்ட் ஆகுது. அதே பிரசினைக்காக சேனாபதி திரும்ப வராமல்..வேறு எத்தனையோ விஷயம் இருக்கே, அதுல ஒண்ணுக்காக அவர் திரும்ப வந்திருந்தால் ஆட்டம் புதுசாக இருந்திருக்கும். ரசிகர்களின் ஆர்ப்பரிப்பும்!
கிரேவ்யார்டு காட்சியில் கமலின் அந்த restrained act … ஏமாற்றம், வருத்தம், அதிர்ச்சியை விழுங்கிக் கொள்வது…எந்த அதிரடியான முக பாவங்களையும் கொடுக்காமலேயே அவர் மனதில் என்ன எண்ணம் ஓடுகிறது என்று நமக்கு தெரிகிறது. கூர்ந்து கவனிக்கிற மாணவர்களுக்கு அங்கே ஒரு ஆக்டிங் கிளாஸ் நடக்கிறது.
கிரிஸ்ப் ஜோக்குகளுக்கு பஞ்சமே இருக்காது ஷங்கர் படத்தில்.. ‘நக்கலா?’ ‘நிக்கல்!’ ஒன்று போதும். காட்சி ஒவ்வொன்றிலும் கடைசி ஷாட் வசீகரமாக இருக்கும். உதாரணம் ‘தாத்தா டாய்பேயிலே என்னடா பண்ணிட்டு இருக்காரு?’ என்று சித்தார்த் கேட்பது. வில்லன் உடலில் தவழும் ஆமையின் அடி வயிற்றில் வாசகம்…
விமான நிலையத்தில் அத்தனை பேருக்கிடையே சேனாபதியைக் கண்டுபிடித்தது எப்படி என்று சிம்ஹா சொல்லுவது இன்டெலிஜென்ஸீன்.
‘அஞ்சே நிமிஷத்தில முடிச்சிடறேன்’னு விரலைக் காட்டி கமலுக்கு எண்ட்ரி ஷாட் கொடுப்பதாகட்டும், ‘மை ஐ.டி.’ என்று விரல்களைச் சொடுக்கும் விதமாகட்டும்… எலிகண்ட்! அதே நிதானத்தில் படம் நெடுக…
“எல்லாத்தையுமே காசாக்கிற அரசியல் வாதிகள்! எல்லாத்திலேயுமே காசு வாங்கற அதிகாரிகள்!”
“இந்த நாட்டில வேலை இல்லாதவனைவிட வேலை நேரத்தில வேலை செய்யாதவன் தான் ஜாஸ்தி.”
“இங்கே எல்லாரும் குடும்பத்துக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுப்பாங்க ஆனால் யாரும் குடும்பத்தை விட்டுக் கொடுக்க மாட்டாங்க!” வசனங்கள் செம க்யூட்!
புதுமைக் காட்சிகளுக்கும் பஞ்சமில்லை. ஜீரோ டாலரன்ஸ் என்று கிளம்பும் இவர் ஜீரோ கிரேவிடியில் செவ்வாயில் சஞ்சரிக்க பிராக்டிஸ் செய்யும் தொழிலதிபரை அந்தரத்தில் அந்தரங்கமாக சந்திப்பது… இறுதி சேஸ் காட்சிகளில் கமலின் சைக்கிள் வீல் வேகத்தில் எடிட்டிங்கும் பாய்கிறது.
‘பால்வெளி பாதை மேலே.. மேகமாய் உலாவலாமே..’ பாடலில் “வெண்ணிலா வேர்வை கொஞ்சம்.. மின்மினி முத்தங்கள் கொஞ்சம்.. கடவுளின் சிரிப்புகள் கொஞ்சம்.. நாம் காணவே..” என்று வரிகள் வசீகரிக்கின்றன... மற்ற படங்களைப் போல் இல்லாமல் அனிருத் அடக்கி வாசித்து இருக்கிறார் பின்னணி இசையை. படத்தின் mood-க்கு பொருத்தமாக. கடைசிக் காட்சியில் அந்த மனம் பிசைகிற வயலின் இசை..
உண்மைத் தாம்பாளத்தில் ஃபேண்டஸி கலர்ப் பொடி தூவி அழகு காட்டுவார். ‘பிரம்மாண்டம் ஐம்பது பர்சண்ட், ஃபேமிலி டிராமா ஐம்பது,’ தான் ஷங்கர் ஃபார்முலா. இதிலும்! பிந்தைய பாதிதான் மனம் கவருகிறது.
“தப்பு பண்றவன் எல்லாம் வேறெங்கேயோ இல்ல, நம்ம தெருவிலேயோ பக்கத்து வீட்டிலேயோதான் இருக்கிறான். ஏன் நம்ம வீட்டிலேயே…” என்று திரைக்கதையின் மையத்தை சுட்டிக்காட்டும் அந்த கமலின் live talk ஆழமாகவும் நேர்த்தியாகவும்! ஆனால்…
பிக் பட்ஜெட் படம் என்றாலே தப்பித் தவறிக்கூட அதில் யதார்த்தம் இருந்து விடக்கூடாது, fantasy தான் ஜாஸ்தியாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வேரூன்றி விட்டது இங்கே. “வெறும் கை முஷ்டியாலேயே நூறு பேரை வீழ்த்தும் நம்ம ஹீரோவிடம், அது என்ன மர்மம் என்று ஒரு நாளாவது கேட்டிருப்போமா? அப்புறம் எதுக்கு வர்மம், அது எப்படி பாதிக்குதுங்கிற விவரம்? நான் கேட்டேனா?” என்கிறார் நம்ம ஆளு.
இன்றைய நாட்டு நடப்பையும் மக்கள் மனநிலையையும் அழுத்தமாக ஒரு கதையாக ஆக்கியிருக்கிறார் ஷங்கர். ரசித்துப் பாருங்கள் என்றும் சொல்வதோடு யோசித்து, பாருங்கள் என்றும் சொல்கிறார்கள்.
திமிங்கலமே தான்! நெடுமுடி வேணு ஒரு இடத்தில் சொல்கிற மாதிரி.

அம்னீஷியாவுக்கு அம்னீஷியா...


திரையுலகைப் பொறுத்தவரையில் அம்னீஷியாவுக்கு அம்னீஷியாவே கிடையாது.
1941 இல் வந்த படம் அது. ஜூலியட்டை திருமணம் செய்துகொண்ட ரோட்னி. கல்யாணத்துக்கு வர முடியாத அவள் கஸின் லாராவின் ஊருக்கு ஹனிமூன் கிளம்புகிறான். அவனின் பழைய காதலி நண்பனுடன் வந்து அவனைக் காரில் அழைத்துச் சென்று பிளாக் மெயில் செய்கிறாள். பணம் தர மறுத்தவனை மண்டையில் தாக்க, கார் ஆக்ஸிடெண்ட் ஆக, ரோட்னிக்கு அம்னீசியா. தான் யாரென்றே தெரியவில்லை அவனுக்கு. பாக்கெட்டில் இருக்கும் லாராவின் அட்ரஸ் தான் ஒரே க்ளூ.
வேறு வழியின்றி அங்கே போகிறான். அவளோ இவனைப் பார்த்ததில்லை. தன் தோட்டத்தில் ஏதோ ஒரு வேலை போட்டுத் தருகிறாள். காதல் மலர்ந்து திருமணம் ஆகிறது. ஹனிமூனுக்கு, எஸ், நீங்க நினைக்கிற மாதிரியே, கஸின் ஜூலியட் ஊருக்கு போகிறார்கள். கார் ஆக்ஸிடெண்டில் இறந்துவிட்டான் என நினைத்திருந்த ஜூலியட் கோஷ்டி இவனைப் பார்த்து திகைக்கிறது. டாக்டர் கொடுத்த ட்ரீட்மெண்டில், யெஸ், நீங்க நினைக்கிற மாதிரியே, நினைவில் முதல் கல்யாண முன்னிரவுக்கு முன்போய்விடுகிறான்.
இப்போ லாராவுக்கு பிரச்சனை. நடந்ததெல்லாம் சொல்லி முத்தமிட்டு அவனை ப்ரஸண்ட் டென்ஸுக்குக் கொண்டு வருகிறாள். தன் காதல் இங்கேதான் என்றறிந்தவன் ஜூலியட்டுக்கு தன்னை 'இறந்தவனாகவே' காட்டி விட்டு அவளுடன் எஸ்கேப்!
'Kisses for Breakfast' என்ற அந்த பிரபல படத்தில் லாராவாக அசத்தியவர்... Jane Wyatt இன்று பிறந்த நாள்!
'One More River' -ல் என்டர் ஆனவர் Frank Capra வின் 'Lost Horizon' இல் சென்டர் ஆகி பிரபலம் ஆனார்.
அந்த டிவி சீரிஸ், 'Father Knows Best', புகழ் வாங்கித் தந்தது என்றால் 'Star Trek', மற்றொரு டிவி சீரிஸ், மிக அதிகமாக ரசிகர் கடிதம் பெற்றுத் தந்தது.

Monday, August 11, 2025

புத்தியைத் தீட்டியதில்...


வெரி வெரி மோசமான ‘பெரிபெரி’ என்ற அந்த நோய்க்கான காரணத்தை கண்டுபிடித்தாகவேண்டும் அவர். புத்தியைத் தீட்டியதில், தீட்டிய அரிசியைத் தீனியாக கொண்ட போது மட்டுமே கோழிகளுக்கு அந்த நோய் வந்ததைத் தெரிந்து கொண்டவர், தவிட்டில் இருக்கிறது சூட்சுமம் என்று தவித்தார். அதிலிருக்கும் அந்த ஏதோ ஒன்று என்னவென்று அவர் நண்பர் கண்டுபிடித்தார்.
இந்த வைட்டல் டிஸ்கவரியில்தான் வைட்டமின் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. Vital -ஐயும் amine (நைட்ரஜன் காம்பவுண்ட்) -ஐயும் சேர்த்து ‘வைட்டமின்’ பேர் வைத்தவர் மற்றொரு நண்பர்.
Christiaan Eijkman. இன்று பிறந்த நாள்! (1858 - 1930)
பல ஊகங்களை உடைத்தெறிந்தவர். வெப்பப் பிரதேசங்களில் வாழ நேரும் ஐரோப்பியர்களுக்கு அப்படியொன்றும் மெட்டபாலிசம் மாறிவிடுவதில்லை என்று காட்டினார். வேலையைப் பொருத்தே வேர்க்கும் யாராயிருந்தாலும்! எண்ணிக்கையில் சிவப்பு அணுக்கள் எல்லோருக்கும் ஒன்றுதான், என்றார்.
நோபல் கிடத்தது 1929-இல்.

6000 வார்த்தைகள்...


சிறுவர்களுக்கு கதை எழுதுவது சாமானிய விஷயமல்ல. சாமர்த்தியமான பிளாட் இருக்கணும். சிறுவர்களுக்கே உரித்தான கோட்டில் பயணிக்க வேண்டும். வளவள வர்ணனைக்கு நோ.
சமீப அரசியை அறிவோம். சென்ற நூற்றாண்டில் ஆண்டவர் ஒருவர் உண்டு. கையா, A. I.யா என்று சந்தேகப்படும் அளவுக்கு எழுதிக் குவித்தவர் எனிட் ப்ளைடன்.
Enid Blyton... இன்று பிறந்த நாள்.


Famous Five ஃபேமஸ் என்றால் Secret Seven சிறுவர் ஹெவன். ரெண்டையும் நோண்டவில்லை என்றால் நீங்கள் சிறுவயது தாண்டவில்லை. ஒரு நொடி, ஒரு Noddy காமிக்ஸ் படிக்க ஆரம்பித்தால் அடியோடு மறந்து விடுவீர்கள் இந்த அவஸ்தை உலகத்தை. நோடியைப் படித்ததும் நோய் நொடி எல்லாம் பறந்துவிடும்!
சாம்பிளுக்கு இதோ ஒரு கதை...
டீச்சரின் மேஜையில் இருந்து பணம் திருடிய சிறுமி எலிசபெத் காணாமல் போய் விடுகிறாள். அவள் பாட்டி வசிக்கும் கிராமத்துப் பக்கம் அவளைக் கண்டதாகச் சொல்கிறார்கள். பக்கத்து கிராமத்தில் இருக்கும் ஸீக்ரெட் ஸெவனுக்கு கிடைத்தது கேஸ். களம் இறங்குகிறார்கள்.
பாட்டியை விசாரித்தால் தினமும் தின் பண்டங்கள் காணாமல் போவதாக சொல்கிறார். ஊரைச் சுற்றித் தேடுகிறார்கள். பக்கத்தில் இருக்கும் குதிரை லாயத்தில் வேலை பார்க்கும் டாம் என்ற பையன் அவளைப் பார்த்ததாக சொல்கிறான். லண்டன் போய் பிரான்ஸுக்கு தன் சகோதரனை பார்க்க போவதாக அவள் சொன்னாளாம்.
லண்டன் போய் இருந்தால் இங்கே பண்டம் திருடு போவது எப்படி? அன்றிரவு போலீஸ் ஒரு பக்கம், ஸீக்ரெட் 7 ஒரு பக்கம், டாம் ஒரு மரத்தில் ஏறி... என்று வீட்டைச் சுத்தியிருந்து வேவு பார்க்கிறார்கள். ஆனால் அன்றைக்கும் பட்சணங்கள் அபேஸ். எப்படி?
இதற்கிடையில் அவள் சகோதரன் வந்து சேர்கிறான். அவனைப் பார்த்ததும் ஸெவனில் ஒருவனுக்கு சந்தேகம் தட்டுகிறது. அவனை அழைத்துக்கொண்டு டாமைப் பார்க்கப் போகிறார்கள். கண்டதும் குதிரைக்குட்டியில் ஏறி டாம் விரைய, நிறுத்திப் பார்த்தால் அவன்தான் எலிசபெத். ஆண்பிள்ளை வேடத்தில். அவள் பணத்தைத் திருடவில்லை என்றும் தெரிகிறது. வாரச் சம்பளம் கிடைக்கும் வரை வயிற்றுப்பசி. ஆகவே பாட்டி வீட்டிலிருந்து! சம்பவத்தன்று மரத்திலிருந்து மாடியில் இறங்கி தின்பண்டம் எடுத்துக் கொண்டு திரும்பி மரம் வழியாகவே வந்து கண்முன்னே அவர்களை ஏமாற்றியதை சொல்கிறாள்.
சின்ன கவிதை ஒன்றில் ஆரம்பித்து 600 புத்தகங்களுக்கு அசுர வளர்ச்சி. 42 மொழிகளில் 60 கோடி பிரதி விற்பனைக்கு. நாளொன்றுக்கு அவர் டைப் ரைட்டர் கக்கும் வார்த்தைகள் 6000.
1996 இல் அவரது எழுத்துச் சொத்தை மிகக்குறைவாக கொடுத்ததிலேயே 14 மில்லியன் பௌண்ட் குடும்பத்துக்கு கிடைத்தது.
குழந்தைகளுக்கு அம்மா முக்கியம் என்று சொல்லும் இவர் குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு எழுத்தையும் ஜனித்துக் கொண்டவர்.
Quotes?
‘எதையாவது யாருக்காகவேனும் விட்டுச் செல்லுங்கள். ஆனால் எதற்காகவும் யாரையும் விட்டுச் செல்லாதீர்கள்.’
‘பராமரிக்க முடியாத ஒன்றை வைத்திருக்க உங்களுக்கு உரிமை இல்லை.’
‘வளர வளர நம் முகத்தை நாமே உருவாக்கிக் கொள்ளுகிறோம்.’

Sunday, August 10, 2025

காமிரா ஜாலம்...


ஒரு க்ரேன்; ஒரு ஜூம் லென்ஸ் இரண்டையும் வைத்துக்கொண்டு ஜாலம் பண்ணியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் தம்பு.

முழுப்பாடலையும் ஒரே ஷாட்டில் படமாக்கி... ஒரு சாதனை.. 1962 -லேயே!
மாடியிலிருந்து கீழே ஜெமினிக்கு மெள்ள இறங்குவதும் அவர் மேலே வந்ததும் வலம் நகர்ந்து அவரை சரோஜாவிடம் அழைத்து வருவதுமாக காமிர பின்னுகிறது, என்னவொரு gliding movement!
படம்: ஆடிப்பெருக்கு. டைரக்டர் கே. சங்கர்.
பாடல்:
இதுதான் உலகமா...இதுதான் வாழ்க்கையா...
இதுவரையில் வாழ்க்கை காணாற்று வெள்ளமா?
(இசை ஏ எம் ராஜா)
மாடியில் சரோஜா தேவி சோகமாய்ப் பாட, கீழிருந்து கேட்டு மேலே வரும் ஜெமினி. காமிரா மேலே பேன் செய்கிறது, லாங்க் ஷாட்டிலிருந்து குளோஸப்பிற்கு ஜூம் இன் ஆகிறது, கீழே இறங்குகிறது, மறுபடி மேலே வருகிறது...
முழுப் பாடலையும் ட்யூனோடு நினைவு வைத்து 100% sink உடன் முகபாவங்களில் ஆழம் தவறாமல் நடித்த சரோஜா தேவிக்கும் கைநிறைய க்ளாப்ஸ்!

Friday, August 8, 2025

அத்தனை பேரும் கலைஞர்களாக...


‘உங்களை மிக அழகானவராக கற்பனை செய்து கொள்ள வேண்டியதில்லை, ஏனெனில் நீங்கள் மிக அழகானவர்.’
சொன்னவர் யார்?
மூமின்ஸ் என்ற காமிக்ஸ் ஸ்ட்ரிப்ஸ் மூலமாக பூமியில் பிரபலமான நபர் அவர். (Moomins)
பின்லாந்தின் முன்னணி பெண் எழுத்தாளர்களில் ஒருவர். புகழ்பெற்ற ஓவியரும் கூட.
குடும்பத்தில் அத்தனை பேரும் கலைஞர்களாக இருக்கும் போது அதில் வளரும் ஒருத்தி மிகச்சிறந்த படைப்பாளியாக மாறக் கேட்கணுமா?
குழந்தைகளுக்கு எழுதுவதிலும் பெரியவர்களுக்கு எழுதுவதிலும் வல்லவர்.
Tove Jansson. இன்று பிறந்தநாள்!


இன்னும் சொன்னவை சுவையானவை:
‘நீண்ட பிரயாணம் மேற்கொள்ள வேண்டும் நீங்கள், வீடு எத்தனை அற்புதமானது என்பதை கண்டுகொள்ள.’
‘ஒருவன் எல்லாவற்றையும் தானே கண்டுபிடித்தாக வேண்டும்; தானே அதிலிருந்து விடுபட வேண்டும்.’
‘யாரையேனும் அளவுக்கதிகமாக பிரமித்தால் சுதந்திரமாக இருக்கவே முடியாது.’
‘எல்லா விஷயங்களுமே மிகவும் நிச்சயமற்று இருக்கின்றன; அதுவேதான் என்னில் மீண்டும் நம்பிக்கை ஏற்படுத்துகிறது.’
‘பாலத்தில் படுத்துக்கொண்டு வெள்ளம் பாய்வதைக் கவனியுங்கள்; சிவப்பு பூட்ஸ்களை அணிந்துகொண்டு ஈர நிலத்தில் சிரமப்பட்டு ஓடுங்கள்; அல்லது மாடியில் உருண்டபடி கூரையில் மழை விழுவதை கேளுங்கள். தனக்குத்தானே அனுபவிப்பது ரொம்ப சுலபம்!'
‘உள்ளபடியே கடவுள் உதவுகிறார், ஆனால் நீ சொந்தமாக ஒரு முயற்சியாவது செய்த பிறகு தான்.’
‘மொத்தத்தில் இவ்வளவுதான் விஷயம்: ஒரு போதும் களைப்படையாதீர்கள், உற்சாகத்தை இழந்து விடாதீர்கள், வெறுமே இருந்துவிடாதீர்கள் - விலைமதிப்பற்ற உங்கள் ஆர்வத்தை இழந்து உங்களை சாக விட்டுவிடாதீர்கள். அவ்வளவுதான், விஷயம் ரொம்ப சிம்பிள்.’