Sunday, August 31, 2025

ஜன்னல் பெண்ணின் சோக முகம்...


பிசியான வேலை, பிரிய மனைவி, இனிய குடும்பம். ஆனாலும் ஜான் மனதில் ஏதோ வெறுமை. தினம் வீடு திரும்பும் வழியில் பார்க்கும் ஜன்னல் பெண்ணின் சோக முகம் அவனை கவருகிறது. நடன நிலையம் அது. அவளை சந்திக்கவே நடனம் கற்றுக் கொள்ள சேருகிறான். எந்திரமாக இயங்கும் அவள். இவனுக்கோ நிஜமாகவே நடனத்தில் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு விடுகிறது. அடுத்து நடைபெறும் நடனப் போட்டிக்கு தயாராகிறான். இவனிடமிருந்து அவளுக்குத் தொற்றுகிறது உற்சாகம். மனைவி, மகள் வந்ததில் கவனம் சிதறி போட்டியில் இவன் தோற்றாலும் அடுத்து நடைபெறும் போட்டி ஒன்றில் கலந்து கொள்ள அவளை ஊக்குவிக்கிறான். முன்பு தோற்ற அதில் இப்போது ஜெயிக்கிறாள் அவள்… என்று போகிறது அந்த மூவீ.
நடன பயிற்சியாளர் ஆக ஜெனிஃபர் லோபஸ் ஜொலிக்க, அந்த ‘Shall We Dance?’ படத்தில் ஜான் ஆக கவர்ந்தவர் ரிச்சர்ட் கீர்.
Richard Gere.. இன்று பிறந்த நாள்!
Fine actor என்று ஒருவரை சொல்வதானால் இவரை சொல்லிவிடலாம் மறுப்பின்றி.
‘Pretty Woman’ படத்தில் சாதாரண பெண்ணான ஜூலியா ராபர்ட்ஸுக்கு மேல்தட்டு மனிதர்களின் நடைமுறைகளை பொறுமையாக கற்றுத் தருவதில் காட்டும் நேர்த்தி ஆகட்டும், தோற்றுப்போன கம்பெனிகளை இற்றுப்போன விலைக்கு வாங்குவதில் காட்டும் கண்ணியம் ஆகட்டும் படு கச்சிதமான நடிப்பு. இந்தப் படத்தில் வரும் Piano piece இவர் இயற்றியதே...
Julia Roberts உடன் கலகல பூட்டிய ‘Runaway Bride’. ‘An Officer and a Gentleman’ ‘Primal Fear’ இப்படி நிறைய ஹிட்ஸ் இந்த நாயகருக்கு. ‘Chicago’ வில் அவர் ஆடும் டேப் டான்ஸ் கலக்கல்.
பழங்குடி மக்கள் நலனுக்காக பாடு படுவது இவருக்கு பழம் சாப்பிடுவது மாதிரி.
Quotes…
‘பர்சனாலிட்டி ஆவதற்கு நான் விரும்பவில்லை.’
‘அந்த நேரம் அவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் உணர்வுகளுக்கு ஏற்ற கதாபாத்திரங்கள் கிடைக்கும்போது நடிகர்கள் சிறப்பாக பரிமளிக்கிறார்கள்.’

Saturday, August 30, 2025

ரொம்பச் சின்னது உலகம்...


அந்தக் கவிஞரை தொடர்ந்து பயன்படுத்திக் கொள்வதாகச் சொன்னார்கள் பிரபல இசைஅமைப்பாளர்களான ஷங்கர் ஜெய்கிஷன். மறந்துவிட்டார்கள்போல. ஒரு நாள் அவர்களுக்கு ஒரு லெட்டர் வந்தது அவரிடமிருந்து. நாலு வரி.

‘ரொம்பச் சின்னது உலகம். பாதைகளோ மனம் அறியும். என்றோ ஒரு நாள், எங்கோ ஓரிடம் உங்களை நான் சந்திப்பேன். எப்படி இருக்கிறீர்கள் என்பேன்.’
அவ்வளவுதான், அந்த வரிகளையே தங்கள் ‘Rangoli’ படத்தில் ஒரு பாடலாக்கியதோடு ("Chotisi Yeh Duniya..") மீண்டும் அவரை தங்களுடன் இணைத்துக் கொண்டார்கள்.
அந்தக் கவிஞர்... ஷைலேந்திரா! வார்த்தைகளில் மகேந்திர ஜாலம் செய்தவர்.
Shailendra… இன்று பிறந்த நாள்...
ரயில்வேயில் வேலை பார்த்துக் கொண்டு கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தவரை ராஜ் கபூர் தன்னுடைய ‘Aag' படத்திற்கு பாடல் எழுதக் கேட்டபோது மரியாதையாக மறுத்துவிட்டார். சினிமாவுக்கு பாடல் எழுத அவர் விரும்பியதில்லை. ஆனால் மகன் பிறந்த சமயத்தில் பணம் தேவைப்பட அவரே ராஜ் கபூரைத் தேடிவந்தார். ரெண்டே பாடல்தான் பாக்கி இருந்தது 'Barsaat' படத்தில். 500 ரூபாய் பெற்றுக்கொண்டு அவர் எழுதிய அந்த ரெண்டு பாடல்களும் (“Patli Kamar Hai..” “Barsaat Mein..”) மூவரையுமே (ஆம், ஷங்கர் ஜெய்கிஷனுக்கும் அது டெப்யூட் படம்) வியந்து பார்க்க வைத்தது. கபூருக்கு ஆஸ்தான கவிஞர் கிடைத்தார். நமக்கு ‘ஆவாரா’(விலிருந்து வரிசையாக) பாடல்கள் கிடைத்தன.
ஷங்கர் ஜெய்கிஷன் என்றால் ஷைலேந்திரா அல்லது ஹஸ்ரத் பாடல்கள்தாம் என்றாகியது. அதில் கிடைத்த அளவிலா முத்துக்கள்..
“Ramaiya Vathavaiya…” “Mud Mud Ki Na Dekh…” (Shree 420)
“Main Gavun Tum So Jaavon…’ (Bramhachari)
“Dost Dost Na Raha…” (Sangam)
“Jis Desh Mein Ganga Bahti Hai…” (Jis Desh Mein..)
எஸ் டி பர்மனும் இவரை நன்றாக பயன் படுத்திக் கொண்டார் ‘Kala Bazaar’ -இல் வரும் “Koya Koya Chand…” ஒன்று போதுமே சொல்ல? சலில் சௌத்ரிக்கு இவர் எழுதிய ‘Madhu Mathi’ பாடல்கள்!
நிறைய கலைஞர்களைப்போல சொந்தப் படம் எடுத்து கையை சுட்டுக் கொண்டார். ஆனால் நேஷனல் அவார்ட் அவரது 'Teesri Kasam' படத்துக்கு. விரைவிலேயே மறைவு. மறக்க முடியாத அந்த “Jeena Yahan.. Marna Yahan…”! பல்லவியோடு நின்று போனதை மகன் Shaily Shailendra எழுதி முடித்தார்.
வாழ்ந்த மதுராவில் ஒரு வீதி இவர் பெயரை சூடிக்கொண்டது.
இப்ப 2016 இல் வந்த Ryan Reynolds ஆங்கிலப் படம்… ‘Deadpool’. ஆரம்பக் காட்சியிலும் கடைசியிலும் ஒலிக்கிறது இவரது “Mera Jhutha Hai Japani..” பாடல்.

ஜமா சேர்ந்து பார்க்க...


'எனக்குன்னு சொந்தமா ஒரு ஜமா இருக்கணும், அதுவும் எங்கப்பா இழந்த அந்த ஜமாவா இருக்கணும்,' என்ற ஒரே ஏக்கத்தில் வாழும் கல்யாணம் அந்த ஜமாவை அடைய படும் பாடு கொஞ் ஜமா? நஞ் ஜமா?
‘ஜமா’… ரொம்ப நாளைக்கப்புறம் ஜமா சேர்ந்து பார்க்க ஒரு படம்…
ஒரு படத்துக்கு நடிப்பு எத்தனை முக்கியம் என்று இந்த படத்தில் தெளிவாக காட்டியிருக்கிறார்கள். தாண்டவமாக வரும் நடிகர் தாண்டவம் ஆடி இருக்கிறார் நடிப்பில். ஆர்ப்பாட்டம் செய்கிறார், ஆத்திரப்படுகிறார், ஆவேசமாக கத்துகிறார்! ஆனால் துளி மிகையில்லாமல்! இதான்யா நடிப்பு என்கிறார் 'சத்தமாக'!
அந்த ஏழு நிமிட ஒரே ஷாட் காட்சி! அர்ஜுனன் வேஷம் கேட்டு இன்னொரு ஆள் வந்து அவமானப்பட்டு திரும்பிய விஷயம் தெரியாமல் ஹீரோ கல்யாணம், அதையே கேட்க உள்ளே நுழைந்து, ஜமா தலைவரிடம் வாங்கிக் கட்டிக் கொள்வதும்.. அர்ஜுனனா வர்றவன் எப்படி அடவுல நிப்பான் தெரியுமான்னு அவனுக்கு ஆக்ரோஷமாக நடித்துக் காட்டி, அவன் அழ ஆரம்பிக்க, அண்ணன் தானேடா திட்டினேன்னு சமாதானப்படுத்தி, பொம்பளை வேஷம் போடறதுதாண்டா கஷ்டம்னு நம்ப வெச்சு, உன் கல்யாணத்தைப் பத்திக் கவலைப்படாதே, நான் பார்த்துக்கிறேன்னு தேத்தி ஏமாத்தி, அவன் திருப்தியானதும் பெருமூச்சு விடும் தாண்டவம் (சேத்தன்) அனாயாசமாக சேர்ந்து விடுகிறார் ரங்காராவ், டி.எஸ். பாலையா வரிசையில்! அந்தச் சிறிய வீட்டுத் திண்ணைக்கும் புறவாசலுக்கும் இடையே பாத்திரங்களோடு பாத்திரமாக கேமராவும் குறுக்கே நெடுக்கே நடந்து காட்சியின் முழு உக்கிரத்தையும் கவர் பண்ணி இருப்பது கை தட்ட வைக்கிறது என்றால் அதைத் தொடர்ந்து அரை நிமிடத்திற்கு வரும் அசாதாரண பின்னணி இசை அசர வைக்கிறது.!
வசனம்னு தனியா இல்லாதது அழகு. எல்லாமே சூழ்நிலை உதிர்க்க வைக்கும் யதார்த்த வார்த்தைகளே. (“நமக்கு திறமை இருக்கா இல்லையான்னு நாம தாண்டா சொல்லணும்! அடுத்தவன் சொல்ல மாட்டான்!”)
அந்த அம்மாக்காரியை விட்டு மனம் லேசில் வெளிவர முடியாது. ஆம்பிளை மகனை ஆம்பிளையாக்க அந்தப் பொம்பிளை படற பாடு! நிஜ ரீயாக்‌ஷன்களை நிமிடத்தில் கொட்டி கண் கலங்க வைத்து விடுகிறார்!
ஜன்னல் சூரிய வெளிச்சத்தில் புழுதிகள் பறப்பதைக் காட்டும் துல்லியமாகட்டும், ஹீரோ முகத்தில் ஒளி டாலடிக்கும் அழகாகட்டும், ஓசைப்படாமல் தன் இருப்பை ஒளியில் பதிவு செய்கிறார் ஒளிப்பதிவாளர். தீப்பந்த வெளிச்சத்தை வைத்து மட்டும் எடுத்து இருக்கும் அந்த கடைசி காட்சி சிகரம்.
இன்னொரு பக்கம் இளையராஜாவும் பாரல்லலாக இசையில் கதையை சொல்கிறார். 16 வயதினிலே மாதிரி அந்த ஆழமான தீம் மியூசிக் படத்தின் மூடுக்கு சட்டென்று நம்மை இட்டுச் செல்கிறது. ஆரம்பக் காட்சிகளில் படத்தின் மையப்புள்ளியை நோக்கி எத்தனை அழகாக கதையை நகர்த்தி செல்கிறது பின்னணி இசை என்று வியக்காமல் இருக்க முடியவில்லை. கல்யாணம் அர்ஜுனன் கிரீடத்தை தலையில் வைக்கும் போது ஒலிக்கும் அந்த ஓங்கார இசை! அப்பாவின் சத்தியத்தை நினைவு கூரும்போது பின்னால் ஒலிக்கும் அந்த ஆங்கார இசை, அப்பப்பா! படத்தில் ஒரு பாடல்தான் என்று சொல்ல முடியவில்லை, முக்கியமான இடங்களில் எல்லாம் ராஜா அந்த உணர்வு கொப்பளிக்கும் ஒரு அற்புதமான ட்யூனை பிஜிஎம்மில் வழங்கி விடுகிறார். நாயகி அவனைப் பிரிந்து படிக்கச் செல்ல, அவன் அரிதாரம் பூச ஆரம்பிக்க அப்போது அவர் கொடுக்கும் பின்னணி இசையில் அந்த சோகம் அப்படியே நம் மனதுக்குத் தாவுகிறது.
கதாநாயகி? 'என்னடி எழுந்திருச்சி போயிட்டான், புடிக்கலையா'ன்னு தோழி கேட்கும்போது அவளைப் பார்க்கிற அந்த பார்வை ஒன்றே போதும்! ஆம்பளைன்னா யாருன்னு அவர் விளக்கம் கொடுக்கும் காட்சி அள்ளுகிறது.
தன்னைக் கேலி பண்ணுவதைப் பற்றிக்கூட கவலைப்படாமல் தன்னோடு நடக்கும் பொழுது எதிர்ப்படும் கேலிகளால் அவளுக்கு 'ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள்' மனசு கஷ்டப்படுமே என்று கல்யாணம் சொல்லும் பொழுது அவன் கேரக்டர் பளிச்சென்று மனதுக்குள் போய் உட்கார்ந்து கொள்கிறது.
பிசிறில்லாத டைரக்ஷன். தன் கூட்டாளியிடம் பேசிக் கொண்டிருக்கும் அம்மாவை நோக்கி தூரத்தில் இருந்து வரும் மகன், ஃபிரேமில் இல்லாத, அப்போதுதான் வெளியே சென்ற பொம்பளைகளுடன் கையாட்டி ஏதோ பேசிக் கொண்டே வந்து சேரும் இடத்தில் கச்சிதமான காட்சியாக்கம்…
எல்லா முக்கியமான கேரக்டர்களுக்கும் அவர்கள் நடந்து கொள்ளும் விதத்திற்கு ஆளுக்கு ஒரு நியாயம் அளந்து கொடுத்திருக்கிறார் பாரி இளவழகன். அந்த அளவுக்கு மில்லிமீட்டர் மிகாமல் அவர்கள் நடிப்பு!
கிளைமாக்ஸ் காட்சியில்.. இன்று 17ஆம் நாள் பாரதப் போர்.. 'என்ன நடந்தது? யார் இறந்தாலும் இங்கே அழப்போவது நான்தான்,' என்று ஆரம்பித்து படிப்படியாக இன்டென்ஸிடியை அதிகரித்து அழுகையும் ஓலமுமாக கல்யாணம் குந்தியாக கதறும் காட்சியும் சரி, கடைசியில் அர்ஜுனனாக ஆடும் ஆட்டமும் சரி, கூத்துக் கலையின் ஜீவனை நம் கண் முன்னே வாரிக்கொண்டு வந்து நிறுத்திவிடுகிறார் பாரி. scintillating!
‘எப்பவும் அந்த புள்ளையே வராது உன்ன தூக்கி விடறதுக்கு’ன்னு சொல்லி சப்போர்ட்டுக்கு வரும் ஒரே ஒருத்தனும் கூழ் ஊற்றினால்தான் தன் கல்யாணம் என்கிற சுயநலத்தினால்தானா? … இப்படி ஆங்காங்கே ரசிக்கிற மாதிரி திரைக்கதையில் cognitive முடிச்சுக்கள் நிறையவே.
விரசம் இல்லை, விறுவிறுப்பு இருக்கு. ஒருத்தரை ஒருத்தர் வெட்டிக்கறது இல்லை, கெட்டிக்காரத்தனத்தில்தான் போட்டி.
ஏற்கனவே ஆங்காங்கே கோடி காட்டிவிட்ட ஃபிளாஷ்பேக் கதையை 20 நிமிடத்திற்கு சொல்லியிருக்க வேண்டியதில்லை. இன்னும் சுருக்கமாக காட்டியிருந்தால் விறுவிறுப்பு குறையாமலிருந்திருக்கும். பின்னணி இசைக்கு ஈடாக கூத்துப் பாட்டின் ஒலி சத்தமாக ஒலிக்கவில்லையோ என்று தோன்றுகிறது.. இத்தனை அழுத்தமாக முகவுரை கொடுத்ததற்கு அந்தக் கடைசி இரண்டு கூத்துக் காட்சிகளில் இன்னும் கூட உக்கிரம் ஏற்றியிருக்கலாம்.
இந்தப் படம் தரும் அனுபவம் ஒரு சினிமா பார்த்து விட்டு வரும் அனுபவம் அல்ல. ஒரு கதையை ரசித்து விட்டு வரும் அனுபவமும் அல்ல. ஓசைப்படாமல் ஒரு கிராமத்துக்குள் நுழைந்து அங்குள்ள மக்களோடு மக்களாக உட்கார்ந்து அங்கேயுள்ள கூத்துக் கலைஞர்கள், அவங்க குடும்பங்கள், நண்பர்கள் எல்லாருமாக வாழும் வாழ்க்கையை, கலை வேட்கையும் வாழ்க்கையின் நிர்ப்பந்தங்களுமாகப் போராடுவதை ரொம்ப, ரொம்பக் கிட்ட இருந்து பார்த்துவிட்டு வரும் அனுபவம்.

Friday, August 29, 2025

ஒரு புல்லாங்குழல்...


தொடங்கும்போது ஒரு புல்லாங்குழல் ஒலிக்கிறது என்று நினைத்தால் அது ஜானகி அவர்களின் குரல்!
மனதில் காதலை வைத்து மறுகும் இளம்பெண்ணின் எண்ணங்களின் அலைபாய்தலை அப்படியே இசையில் கொண்டு வந்து…
"தூரத்தில் நான் கண்ட உன் முகம்...நதி
தீரத்தில் தேன் கொண்ட என் மனம்!"
இன்றைய பாடலை அன்றே தந்துவிட்டார் இளைய ராஜா. படம் ’நிழல்கள்.’ படத்தில் இடம் பெறவில்லை, ஆனால் மனதில் என்றும்!
முதல் இடையிசையில் எங்கிருந்தோ ஒலிக்கும் சிங்கிள் வயலின் உருக்கமாய்த் தொடங்க, மிகப் பக்கத்தில் எழும் கூட்ட வயலின்கள் அதற்கு பதில் சொல்ல அந்த இசை மோதலை அடுத்து ஆ ஆ... என்று எழும் உருக்கமான கோரஸ் குரல்... அதன் பின்னணியில் மெல்ல ஒலிக்கும் சிதார், கோரஸ் நின்றதும் தனனன தனனா என்று விரைவாகப் பொழிய, அதை மெல்லிய புல்லாங் குழல் வழி நடத்த இப்போது இன்னும் ஆழமாக ஒரு கோரஸ், எல்லாம் ஒரு 40 வினாடிக்குள்! ஒரு அற்புத இசைக் கோர்வை!
இரண்டாவது இடையிசையில் வயலினுக்கும் சிதாருக்கும் மாறி மாறி நடக்கும் பரபரப்பான போட்டி. முடிவில் மீண்டும் சிங்கிள் வயலின் மிக உருக்கமாக தன்னை இரண்டாவது சரணத்தில் ஒப்படைக்க, இம்முறை நீண்டதொரு சரணம் இன்னும் இன்னும் என உயரச் செல்ல, ‘...உருகும் ஒரு பேதையான மீரா!” என்று அவர் நிறுத்த, ’மீரா.. மீரா...’ என்று ஒலிக்கும் கோரஸ்... இப்படி மேலே மேலே செல்ல ஒரு கட்டத்தில் ‘வானமும் மேகமும் போலவே..’ என்று மீண்டும் ஜானகி தொடங்குவாரே அப்போது நமக்கு உண்டாகும் பரவச உணர்வு!
அன்றைக்கும் இன்றைக்கும் என் ஃபேவரிட் பாடல்களிலொன்று.

 

Monday, August 25, 2025

அன்பு… கருணை…


அன்பு… கருணை… அன்னை தெரஸா…
இன்று பிறந்த நாள்!
‘நேசிக்கவும் நேசிக்கப்படவுமே படைக்கப்பட்டிருக்கிறோம் நாம்.’ என்றவர் சொன்ன இன்னும் சில:
‘தீவிர அன்பு எதையும் அளக்காது; அளிக்கும்.’
‘வலிப்பது வரை கொடுப்பது; அன்பின் உண்மையான அர்த்தம் அதுதான்!’
‘கடவுளுக்கு என் நன்றியை தெரிவிக்க மிகச் சிறந்த வழி என் பிரச்சனைகள் உள்பட எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வதுதான்!’
‘ஒவ்வொருவரையும் ஆராய்ந்து கொண்டிருந்தால் அவரை நேசிக்க நேரம் இருக்காது.’
‘நீங்கள் எத்தனை செய்கிறீர்கள் என்பது முக்கியம் அல்ல, செய்வதில் எத்தனை அன்பு வைக்கிறீர்கள் என்பதே.’
‘உண்மையிலேயே அன்பு செலுத்த விரும்பினால் நீங்கள் மன்னிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.’
‘நாம் பிரார்த்தனை செய்தால் நம்பிக்கை வைப்போம். நம்பிக்கை வைத்தால் நாம் அன்பு செலுத்துவோம். அன்பு செலுத்தினால் நாம் சேவை செய்வோம்.’
‘நீங்கள் எளிமையாக இருந்தால் புகழ்ச்சியும் சரி, இகழ்ச்சியும் சரி உங்களைத் தொட முடியாது. ஏனெனில் நீங்கள் யார் என்று நீங்கள் அறிவீர்கள்.’
‘உங்களைக் கடவுளிடம் முழுமையாக ஒப்படையுங்கள். மாபெரும் விஷயங்களை சாதிப்பதற்கு அவர் உங்களை பயன்படுத்துவார். உங்கள் இயலாமையை விட அவரின் அன்பில் அதிக நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதொன்றே நிபந்தனை.’
‘எத்தனை பேருக்கு என்று கவலைப்படாதீர்கள். ஒரு சமயத்தில் ஒருவருக்கு உதவுங்கள். பக்கத்தில் இருப்பவரிடம் இருந்து ஆரம்பியுங்கள் எப்போதும்.’

கிட்டாதப்பா இந்த மாதிரி...


அவர் பாடலைக் கேட்டதுமே சொல்லிவிடலாம்: கிட்டாதப்பா இந்த மாதிரி ஒரு குரல்!
S G கிட்டப்பா… இன்று பிறந்தநாள்! (1906 - 1933)
‘காமி சத்யபாமா… கதவைத் திறவாய்!’ ஒரு பிரபல பாடல். ‘திறவாய்… திறவாய்..’ என்று அவர் வாய் திறந்து பாடும்போது வாய் மூடாமல் கேட்டுக் கொண்டிருப்போம்.
ஏற்றம் இறக்கம் எதிலும் சற்றும் மடங்காமல், அற்றம் எதிலும் அடங்காமல்… கம்பீர கந்தர்வ குரல்!
பத்தாது பத்தாது என்று கேட்கும் பாடல்களைப் பாடி மகிழ்வித்தவர் பத்தாவது மகனாக செங்கோட்டையில் பிறந்து ஐந்து வயதிலேயே மேடையேறியவர்.. பள்ளியில் படிக்காத இளமை, ஆனால் ஒரு முறை கேட்டாலே அப்படியே ஒப்புவித்துவிடும் வல்லமை!
இங்கே இவர் நாடக மேடையில் அட்டகாசமாகப் பாடி, பாடகர் நட்சத்திரமாக பவனி வருகையில், அங்கே இலங்கையில் அவர், கே.பி.சுந்தராம்பாள், நாடகங்களில் பாடிக் கலக்கிக் கொண்டிருக்க, ‘அவர் பாட்டுக்கு உம் பாட்டு நிற்காது,’ என மற்றவர்கள் சிலர் இருவரையும் உசுப்பி மோத விட்டதில் இருவருமே சேர்ந்து பாடி வென்று காட்டினர். பிறந்த நட்பு காதலாகியது அறிந்த வரலாறு.
பிற மாநில வித்வான்கள் வந்திருந்து கேட்டு அதிசயித்து அந்த மேடையிலேயே அவரைப் பாராட்டி மாலை அணிவித்து மகிழ்ந்தனர். நாடக மேடையோடு நின்று விட்டது இந்த பாடக மேதையின் பாட்டு.
27 வயதுக்குள் இசையுலகை அலங்கரித்துவிட்டு இறைவனடி எய்தியது நமக்கு இழப்புத்தான்.

Friday, August 22, 2025

அசட்டு அப்பாவியாக...


அது யாரய்யா அசட்டு அப்பாவியா என்றால் அதுதான் டி. எஸ். பாலையா!
வேறு யாரய்யா முகத்தில் டன் டன்னாக அசடு வழிய விடுவதில் வல்லவர்?
அந்தக் காதலிக்க நேரமில்லை விஸ்வநாதனாக வேறு யாரையாவது நம்மால் நினைக்க முடியுமா பாலையாவைத் தவிர? வெறும் ரீயாக்‌ஷனை வைத்துக்கொண்டே ஐந்து நிமிடம் அந்தக் காட்சியை ஹாஸ்யத்தின் உச்சத்துக்குக் கொண்டுபோய் விடுவாரே நாகேஷ் கதை சொல்லும்போது!
பாலையா அந்த கேரக்டருக்கு கொடுத்த பாலிஷ் நமக்கு ஒரு பிளஸண்ட் சர்ப்ரைஸ்! ஹீரோக்கள் அவரை ஏமாற்றுவதான கதையை, அவர் ஏமாறுவதான கதையாக மாற்றும் அளவுக்கு அட்டகாசமாக அவர் நடிப்பு!
எம்ஜிஆர் அறிமுகமான சதிலீலாவதி படத்தில் அறிமுகமான இவர், வில்லனுக்கும் காமெடியனுக்கும் இடையிலான ஒரு வகை காரக்டரை திரைக்கு சுவாரசியமாக அறிமுகப்படுத்தினார்.
'இன்னிக்கு வெள்ளிக் கிழமை, வாளைத் தொடமாட்டேன்'னு மதுரை வீரனிடம் காட்டும் பொய் மிடுக்கும் சரி, பிள்ளைகளின் பாமா விஜய ஸ்டார் மோகத்தைக் கண்டிக்கும் மெய் மிடுக்கும் சரி என்னவொரு ரேஞ்ச் அஃப் ஆக்டிங்!
கொலைப் பழியை ஏவிஎம் ராஜன் மீது சுமத்தி ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு, தன் மனைவி மகளைப் பறிகொடுத்தபின் மனம் திருந்தும் கேரக்டர், கே எஸ் கோபாலகிருஷ்ணனின் ‘என்னதான் முடிவு?’ படத்தில். பழிவாங்கத் துடிக்கும் ராஜன் முன்னால், ‘உன் கையால் சாகத்தான் காத்திருந்தேன்,’ என்று அமைதியாக வந்து நிற்கும் க்ளைமாக்ஸில் மன்னிப்பை ஆடியன்ஸிடமிருந்தும் வாங்கிவிடுவார்.
சந்தர்ப்ப சூழ்நிலையால் தன் குழந்தையை வேலைக்காரி குழந்தையாகவும் அவள் குழந்தையைத் தன் குழந்தையாகவும் பார்க்க வேண்டிய சூழ்நிலை அம்மா எம் வி ராஜம்மாவுக்கு. அவரது பிடிவாதம் பிடித்த கணவராக அமர்க்களப் படுத்தியிருப்பார். எல். வி. பிரசாத்தின் ‘தாயில்லாப் பிள்ளை’யில்.
ஜெயகாந்தன் கதையில் நடித்தது ‘யாருக்காக அழுதான்?’ படத்தில். குடிகாரனின் பணத்தை எடுத்து வைத்துக்கொண்டு அப்பாவி நாகேஷ் மீது பழியைப் போட்டுவிட்டு உள்ளுக்குள் வதைபடும் அந்த கேரக்டருக்கு 100 சதம் உயிர் கொடுத்திருப்பார்.
பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாமல் நடந்ததை சொல்லவும் முடியாமல் பரிதவிக்கும் கேரக்டர் என்றால் இவருக்கு பீட்சா சாப்பிடுற மாதிரி. இவருக்காகவே எழுதப்பட்டதோ என்று சில சமயம் தோன்றும். ‘ஊட்டி வரை உறவு.’
துளி பிசிறு இல்லாமல் கான்ட்ராஸ்ட் காட்டுவதில் மன்னர். சபையில் காட்டிய கர்வத்துக்கு சற்றும் குறையாமல், ‘சற்று முன்பு ஒரு தேவகானம் கேட்டதே?’ என்று பிரமிப்பை உதிர்த்தபடி தன் செருக்குச் சட்டையைக் கழற்றிப் போடும் அந்த நயம்! (திருவிளையாடல்)
Aug. 23. பிறந்த நாள்!

சித்திரம் பேசுதடி...


“அமுதைப் பொழியும் நிலவே..
நீ அருகில் வராததேனோ?”
‘தங்கமலை ரகசியம்' படத்தின் சாகாவரம் பெற்ற பாட்டு! இளவரசி ஜமுனாவின் பாட்டைக் கேட்டு மொழியே தெரியாத டார்ஜான் சிவாஜி மயங்கி ஓடிவந்து நிற்கும் காட்சி.. ‘தங்கமலை ரகசியம்' படத்தின் சாகாவரம் பெற்ற பாட்டு!
சொடுக்கி இழுக்கும் catchy melody... 'தனனா.. தனனா.. தனனா..' மூன்று 'தனனா'வையும் மூன்று விதமாக அடுக்கி ஒரு பிரில்லியண்ட் ட்யூன்!
இசையமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா... இன்று பிறந்த நாள்!
அடுத்த வருடமே எல்லார் சிந்தையையும் மயங்க வைத்தார்.
“சித்திரம் பேசுதடி...
என் சிந்தை மயங்குதடி…” (‘சபாஷ் மீனா’)
சபாஷ் சொல்ல வைத்த அதன் மற்றொரு கானா: “காணா இன்பம் கனிந்ததேனோ..”
காலாகாலத்துக்கும் ரசிகர்கள் மனதில் நிற்கும் இவரது பாடல் ஒன்று உண்டு.
“என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே,
நீ இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே?..”.
‘எல்லாரும் இந்நாட்டு மன்னர்’ படத்தில் இந்த எல்லாரும் முணுமுணுக்கும் பாடல்.
சி.ஆர்.சுப்பராமன், சுதர்சனம் போன்ற இசை மேதைகளிடம் உதவியாளராக பணிபுரிந்து அனுபவம் பெற்றவர்... எல்லா இசைக் கருவிகளை வாசிப்பதிலும் விற்பன்னரான இவருக்கு ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன் இசைக்கு கிடார் வாசித்த அனுபவமும்...
பி.ஆர்.பந்துலுவுக்கு முன் டி. ஆர் மகாலிங்கம் தன் படங்களில் இவரை பயன்படுத்தினார். கேட்டிருக்கிறீர்களா? “பாட்டு வேணுமா... உனக்கொரு பாட்டு வேணுமா?” என்று மகாலிங்கம் கேட்பாரே?
“தென்றல் உறங்கிடக் கூடுமடி, எந்தன் சிந்தை உறங்காது…” என்று அழகாக பி.லீலா ரெண்டு சரணம் வரை பாட, “துள்ளித் திரிந்தாள் சுற்றிப் பறந்தாள்..” என்று டி.எம்.எஸ். தொடரும் இனிமைப் படகு தபேலா ஆற்றில் உலா வருமே, அது ’சங்கிலி தேவன்' ஹிட்!
சீர்காழியின் மணியான பாடல்களில் ஒன்றான “கோட்டையிலே... ஒரு ஆலமரம்…” மறக்க முடியாதது. ‘முரடன் முத்து’ வுக்கான இவர் அமைத்தது.
டி.ஜி. லிங்கப்பாவின் டி.ஜே. அந்த இரண்டு காமெடி பாட்டுக்களும்:
‘முதல் தேதி’யில் கலைவாணர் என்.எஸ்.கே. பாடும் “ஒண்ணுல இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்..கொண்டாட்டம்! இருபத்தொண்ணுல இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம்… திண்டாட்டம்!”
மற்றொன்று ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’யில் சிவாஜி கலக்கும் “ஜாலி லைஃப்.. ஜாலி லைஃப்.. தம்பதியானா ஜாலி லைஃப்…” பாடல். சிவாஜிக்குக் குரல் கொடுத்தவர் யார் என்கிறீர்கள்? ஜே. பி. சந்திரபாபு!

Thursday, August 21, 2025

அந்த ஒன்றை...


எந்த ஒன்று மட்டும் இல்லை என்றால் திணறித் திண்டாடிப் போவோமோ, அந்த ஒன்றை உருவாக்கிய ரெண்டு பேரில் ஒருவர் அவர்.
தகவல் என்ற மலையை எல்லார் கைக்குள்ளும் அடங்கும்படி செய்த இருவர். சிறு கூழாங்கல்லாக.. ஆம், கூகிளாக..
Google! உலகின் மொத்த விஸ்தீரணமும் ஒற்றை அடியாகி விட்டது. அதாங்க உங்க உள்ளங்கைக்கும் லேப்டாப்புக்கும் உள்ள தூரம்.
Sergey Brin… இன்று பிறந்த நாள்!
மேரிலாண்ட் யூனிவர்ஸிடியில் கணக்கிலும் கம்ப்யூட்டர் சயின்ஸிலும் ஹானர்ஸுடன் B.S. முடித்தவர் மேல்படிப்புக்காக சேர்ந்த ஸ்டான்ஃபோர்டில் அந்த இரண்டாமவரை (Larry Page) சந்தித்தார்.
எத்தனை தூரம் ஒரு வெப்ஸைட் மற்றொன்றால் இணைக்கப்படுகிறது என்பதைக் கொண்டு அதைத் தரப் படுத்தலாம் என்று யோசித்தார்கள். Page Rank என்ற அதன் முதல் அல்காரிதத்தை எழுதினார்கள். சடுதியில் பதில் தரும் கூகுள் பிறந்தது, லாரி பேஜ் தங்கிய விடுதியில்.
இப்படி ரெண்டு பேருமாக சேர்ந்து செய்த ரிஸர்ச்சில் உருவானது உலகின் மாபெரும் ஸர்ச் என்ஜின். ஒன்றுடன் நூறு சைபரை அடுக்கினால் வரும் மாபெரும் எண்ணைக் குறிக்கும் சொல் Googol. அதிலிருந்து தோன்றியது Google.
குடும்பம் நண்பர்கள் என்று உதவிக்கு கிடைத்த ஒரு மில்லியனை கொண்டு உருவாக்கிய தேடல் என்ஜினை இன்று தினமும் ஒரு ட்ரில்லியன் பேருக்கு மேல் கிளிக்குகிறார்கள்.
வேக வளர்ச்சி. YouTube -ஐச் சொந்தமாக்கிக் கொண்டது 2006 இல். 2015 இல் கூகிள் Alphabet Inc இன் அங்கமானபோது அதன் தலைவரானார் ப்ரின்.
கவலையின்றி தகவல் பிடிக்கும் வலையை நமக்குத் தந்தவர்கள் தற்போது அக்கறை காட்டுவது உலகை மேம்படுத்தும் வழிகளில். மாற்று எரிசக்தி, மாசற்ற கார், மாறுபடாத க்ளைமேட் என்று. Artificial Intelligence -இல் காரை இயக்கிக் காட்டியது 2010இல்.
உடற் பயிற்சி என்றால் ப்ரின்னுக்கு உயிர். காலேஜில் படிக்கையில் ‘ஏதும் அட்வான்ஸ்ட் கோர்ஸ் எடுத்திருக்கியா’ன்னு அப்பா கேட்டபோது, ‘ஆமா, அட்வான்ஸ்ட் ஸ்விம்மிங்!’ன்னு பதிலளித்தாராம்.
><><
(தகவல் நன்றி: Google)

உச்சகட்ட ஸ்டைல்...


சிவாஜி நடித்ததிலேயே உச்சகட்ட ஸ்டைலாக இந்தக் காட்சியை கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம்.
"மந்த மாருதம் தவழும்..
சந்த்ரன் வானிலே திகழும்..
இந்த வேளையே இன்பமே,
ஏகாந்தமான இந்த வேளையே இன்பமே!"
(படம்: நானே ராஜா (1956)- ஶ்ரீரஞ்சனியைப் பார்த்து சிவாஜி போதையில் பாடும் seducing பாட்டு.) Link கீழே.
மெள்ள வலது பக்கம் திரும்பி காமிரா பேன் செய்ய அவர் போதையில் தள்ளாடியபடி 'லல்ல லாலலா..' என்று பாடியபடி வந்து நின்று 'ஹக்!' என்ற விக்கலுடன் தலையைச் சொடுக்கும் ஸ்டைல்! (அதையும் ஒவ்வொரு முறை ஒவ்வொரு விதத்தில்!)
நின்ற இடத்திலேயே கால்கள் நங்கூரம் பாய்ச்சி நிற்க, உடல் ஒய்யாரமாக வளைந்து ஒவ்வொரு திசையிலும் அரை அடி சாய்ந்து திரும்ப, ஒயினில் உடல் தள்ளாடுவதையும் ஒய்யாரமாக தனி பாணியில் செய்திருப்பார்.
உயர வேண்டிய நேரம் சரியான மில்லிமீட்டருக்கு உயரும் புருவங்கள்! அசைய வேண்டிய நேரம் அங்குல சுத்தமாக அசையும் கரங்கள்! படியிறங்கி வரும் paragon பாங்கு போனஸ்.
குடித்து விட்டு நாயகியை வளைத்துப் பாடுவதை எத்தனையோ ஹீரோக்கள், வில்லன்கள் செய்திருக்கிறார்கள். ஆனால் அதில் இப்படியொரு தத்ரூபம் (50%) + ஸ்டைல் (30%) + அழகு (20%) என்று ரைட் மிக்ஸில் கலந்த 'archive scene' நடிப்பை யாரும் கொடுத்ததில்லை என்பது பளிச்!
இனி பாடல்... மெல்லிய ஷெனாய் இசைத் துவக்கமே நிமிர்ந்து உட்கார வைத்து விடுகிறது. தபேலாவை அந்த உருட்டு உருட்டுகிறார் அதன் டாப் ரேஞ்சுக்கு! 'கருத்தைக் கொள்ளை கொண்டாய் வாழ்விலே..' என்ற இடத்தில் ரெண்டு செகண்ட் நிறுத்தி பேஸ் கிதாரை மென்மையாக அதிர விட்டு.. அடடா, யார் அந்த டி ஆர் ராம்நாத்? அற்புத இசை! என்னவொரு மெலடி! எல்லாவற்றுக்கும் மேலாக டி.எம்.எஸ்.சின் தெளிவான உச்சரிப்பும் தேனான குரலும்!
மெட்டுக்குப் பாட்டு எழுதுபவர் கவனத்துக்கு இந்த வரி! என்னவொரு match!:"பழுத்தமாம்ப...ழத்தைக்கண்டும்...பசித்தவன்காத்...திருப்பதில்லை..." மற்றொன்று: "கண் படைத்த பயனை நான் கண்டுகொண்டேன் உன்னால் தானே.."
நடிப்புக்கு ஒரு சிவாஜி என்றால் அவர் ஸ்டைலுக்கு ஒரு காட்சி இது!
><><

Wednesday, August 20, 2025

மூன்றும் முதலிடம்...


முதல் நாவல் எழுதினார். அது நியூயார்க் டைம்ஸ் பெஸ்ட் ஸெல்லர் லிஸ்டில் முதலிடத்தில் 28 வாரம். அடுத்ததை எழுதினார். அதுவும் 13 வாரம் முதலிடத்தில். மூன்றாவது நாவல். அதுவும் முதலிடத்தில் 8 வாரம்.
Hat-trick அடித்த பெண் எழுத்தாளர் Jacqueline Susann. இன்று பிறந்த நாள்!
எழுத்தாளராக வர வேண்டியவர் முதலில் விரும்பியது நடிகை ஆக. நாடகம், டிவி, சினிமா என்று முயன்றதில் பெற முடியாத இடத்தை கடைசியில் எழுத்து பெற்றுத் தந்தது.
முதல் நாவல் ‘Valley of the Dolls.’ விமரிசன வரவேற்புக்கு எதிர் விகிதத்தில் விற்பனை எகிறிற்று. ஒன்றரை கோடி பிரதிக்கு மேல் விற்று கின்னஸில் இடம் பிடித்தது 1974 இல்.
மூன்று நாவல்களுமே படமாக வந்தன. நன்றாக இல்லை என்று அவர் வர்ணித்த ‘Valley…’ நல்லாவே கல்லா கட்டியது. மூன்றாவது நாவல், ‘Once is not Enough.’ கிர்க் டக்ளஸ் நடித்து ஹிட்டானது.
Quotes?
‘எவருக்குமே ஒரு அடையாளம் உண்டு. அவரது சொந்த அடையாளம் ஒன்று. அவர் மற்றவருக்கு காட்டும் அடையாளம் ஒன்று.’
‘மற்றவர்கள் சொல்லும் அபிப்ராயத்தை வைத்து ஒருவரை எடை போட்டு விடாதீர்கள். எல்லாருக்குமே வேறு வேறு பக்கங்கள் உண்டு வேறு வேறு நபர்களுக்கு காட்டுவதற்கு.’

‘எவரெஸ்டில் ஏறுவது சுலபமான விஷயம் அல்ல. ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கிறீர்கள். திரும்பிக் கீழே பார்க்காதீர்கள். கண்கள் உச்சியிலே இருக்கட்டும்.’ 

Sunday, August 17, 2025

அந்த நல்ல சப்தம்...

ஆனிவர்ஸரியும் அதுவுமாக மனைவி கேதிக்கு கிஃப்ட் வாங்க அவன் போனபோது கூடவே உள் நுழைந்த நாய் ஒன்று கண்ணாடியை உடைத்து விட, கையில் இருந்ததை டேமேஜுக்கு அழுதுவிட்டு வெறுங்கையோடு வீடு திரும்புகிறான் டேனி. தொடர்கிறது நாய். வாயில் இவன் பரிசில் செருக எழுதிய சீட்டு. பார்த்துவிட்டு ஆஹா, அழகிய பரிசு! என்று அவள் தழுவிக் கொள்கிறாள் நாயை! பிறகு நாயகனையும்! மாமியார் முன் கேவலப்பட வேண்டாமேன்னு மூடிக் கொள்கிறான் வாயை.
திருப்பம் என்னான்னா... நாயோ ஒரு கடத்தல் கூட்டத்தினுடையது. பண்ட மாற்று செய்ய பயன் படுத்துவது. அதைக் காணாமல் அவங்க தலையைப் பிய்த்துக் கொள்கிறாய்ங்க, அதாவது ஒருத்தர் தலையை அடுத்தவன்! அவர்கள் ஒவ்வொருவராகப் போட்ட, நாய் காணோம் விளம்பரத்தை ஆவலோடு பார்த்து (பின்னே? பெட் ரூமுக்கே வந்துவிட்ட நாயை அவளுக்குத் தெரியாமல் அப்புறப்படுத்த வேறு வழி?) அங்கே போனால் அவன்களுக்குள் வரிசையாய் கொலை விழ, அங்கே போனதால் போலீஸ் இவனைத் தூக்க .. வீட்டில் அமளி.
நாயை வாக் அழைத்துப் போகிறாள் கேதி. வழக்கப்படி வந்த கடத்தல்காரன் ஒருவன் அவள் பையைப் பிடுங்கிவிட்டு பணத்தைக் கொடுத்துவிட்டுப் போகிறான். அவன், பையைப் பிரித்தால் எலும்புத் துண்டுகள். இவள் பையைப் பிரித்து மகிழ்ந்தால், அத்தனையும் கள்ள நோட்டு.
தம்பதி அதை ஸ்டேஷனில் ஒப்படைக்கையில், பெண்டாட்டி முன்னாடி உண்மையை, அவளுக்கு பரிசு வாங்காத உண்மையைச் சொல்லவேண்டி வருகிறது. அடுத்து, வீட்டுக்கே மீதி கோஷ்டி தேடிவர போலீஸ் சுற்றி வளைக்கிறது. அவளுக்கு நாயும், அவனுக்கு அதை பெட் ரூமுக்கு வெளியே தள்ளும் தைரியமும் கிடைத்து விடுகிறது!
1951 -இல் வந்த ‘Behave Yourself’ படத்தில் கேதியாக நடித்தவர் Shelly Winters. இன்று பிறந்த நாள்.
நிறைய பேர் மறைவதாலோ என்னவோ படம் முடியும்போது நடிகர்கள் பேரை in the order of disappearance என்று தமாஷாக போடுவார்கள்.
Shelly Winters... 50 களின் கவர்ச்சிக் கன்னியரில் ஒருவர்.. அழகாய் நடிக்கும் டிப்ஸை மர்லின் மன்றோவுக்கே வழங்கியவர்.
‘A Place in the Sun’ -இல் எலிசபெத் டெய்லருடன் நடித்தபோது அவருக்கல்ல, இவருக்கு ஆஸ்கார் நாமினேஷன் வந்தது. அவார்டை பின்னால் ரெண்டு முறை வாங்கிவிட்டார். (‘The Diary of Anne Frank’, ‘A Patch of Blue.’)
‘எல்லா கல்யாணங்களுமே சந்தோஷ சமாசாரம்தான் ஹாலிவுட்டில். அப்புறம் சேர்ந்து வாழ நினைக்கிறதுதான் எல்லா பிரசினையும் கொண்டுவருது,’ என்பவர் சொன்ன ஒன்று, “ஆஸ்காரை வாங்கிக் கொண்டு நான் வீட்டுக்குள் நுழைந்தபோது என் கணவர் அதைப் பார்த்த ஒரே பார்வையில் எனக்குத் தெரிஞ்சு போச்சு என் மணவாழ்க்கை முடிஞ்சதுன்னு.”
Best Quote? ‘நாடகத்திலதான் அந்த நல்ல சப்தத்தை நீங்க கேட்க முடியும். அதை படத்திலேயோ டி.வி.யிலேயோ கேட்கவே முடியாது. அது ஒரு அற்புதமான நிசப்தம். அர்த்தம் என்னன்னா நீங்க அவங்க இதயத்தில அறைஞ்சிட்டீங்க.’


Wednesday, August 13, 2025

இல்லாமல் முடியாது ..


அது இல்லாமல் முடியாது என்று ஆகிவிட்டது நம்ம வாழ்க்கை. ஆனால் அந்த ‘டி.வி.’யை கண்டு பிடித்தவர், அதன் தந்தை என்று அழைக்கப்படுபவர், முதல் பேசும் சினிமா வெளிவருவதற்கு முந்தைய வருடமே அதைச் செய்து காட்டியவர்...
John Logie Baird. இன்று பிறந்த நாள்! (1888 - 1946)
லண்டன் Royal Institution -இல் 1926 ஜனவரியில் நடந்தது அந்த டெமோ. நகரும் பொருட்களை திரைக்கு நகர்த்தி காட்டினார் ஜான். விநாடிக்கு 5 வேகத்தில் படங்கள் வந்து விழுந்தன திரையில். அப்ப அதற்கு அவர் சொன்ன பெயர் டெலிவைஸர்!
அடுத்த வருடமே லண்டனிலிருந்து கிளாஸ்கோவிற்கு அசைவுகளை ஓசையுடன் டெலிபோன் ஒயர்களின் வழியே டெலிகாஸ்ட் செய்தார். அடுத்த வருடம் லண்டனிலிருந்து நியூயார்க்குக்கு. அதே வருடம் கலர் டெலிவிஷனையும்!
ஒளியை மின்சாரமாக மாற்றும் தன்மை selenium -க்கு உண்டு என்பதைப்பற்றி படித்ததுதான் அந்த ஸ்காட்லாண்ட் இளைஞனை டெலிவிஷனைப் பற்றி சிந்திக்க வைத்தது.
பாவம், ஃபண்ட்ஸ் கிடைக்கவில்லை. பத்திரிகை ஆபீஸில் சென்று தன் ஐடியாவை சொன்னால் பைத்தியம் மாதிரி பார்த்தார்கள். தன் முதல் டி.வி. மாடலை செய்தபோது தையல் ஊசியிலிருந்து சைக்கிள் லைட் வரை கையில் கிடைத்த பொருளை எல்லாம் உபயோகிக்க வேண்டியதாயிற்று.
சுழலும் டிஸ்குகள் அசைவுகளை ஸ்கேன் செய்து மின் சிக்னல்களாக கம்பிகளில் அனுப்ப, வேறோரிடத்தில் அவை திரையில் பதிக்கப்படுகின்றன. முதலில் திரையில் அசைந்த பிம்பம் ஒரு பொம்மையின் தலை. பார்த்ததும் அவர் துள்ளிக் குதித்தார்.
டி.வி.க்கான அந்த ஒரிஜினல் ஐடியா Nipkow உடையது. ஆனால் அதை மேம்படுத்தி தெளிவான பிம்பம் கொண்டுவந்தது இவரது டெலிவைஸர் தான். தெளிவைஸர்!
முதலில் ஐந்து வருடத்திற்கு அவருடைய டெக்னிக்கை உபயோகித்தது BBC. இரண்டு மடங்கு லைன்களுடன் இவருடன் போட்டியிட்டது மார்க்கோனி டிவி. இவருடையது மெக்கானிக்கல் என்றால் அவருடையது எலக்ட்ரானிக்.
டி.வி. உலகத்தின் எந்த சாத்தியதையையும் ஜான் விட்டு வைக்கவில்லை. HD TV, 3D TV.... ஏன், வீடியோவையும் தொட்டார். Phonovision என்று பெயர் வைத்தார்.
டி.வி. வரலாற்றில் இவருடையது மெகா சீரியல்!

Tuesday, August 12, 2025

ஏகத்துக்குச் சிரத்தை...


மறுபடி எடுக்க முடியாத மாபெரும் காட்சி அது. ஆயிரக்கணக்கான துணை நடிகர்களுடன் யுத்தக்காட்சி. ஒரே நேரத்தில் நாலு காமிராவால் படமாக்க ஏற்பாடு செய்திருந்தார் தயாரிப்பாள டைரக்டர்.
'ஆக் ஷன்!' சொன்னதும் படை வீரர்கள் மோதினார்கள். குதிரைகள் பாய்ந்தோடின. பீரங்கிகள் முழங்கின. குண்டுகள் வெடித்தன. மேடைகள் வீரர்களுடன் சரிந்தன. எல்லாம் பிரமாதமாக நடந்து முடிந்ததும் பார்த்தால்... என்ன துரதிருஷ்டம்! முதல் காமிராமேன் ஃபிலிம் அறுந்துவிட்டது என்றார். இரண்டாவதில் லென்சை தூசி அடைத்துவிட்டதாம். மேடை ஒன்று விழுந்து கேமரா முறிந்துவிட்டது என்றார் மூன்றாமவர்.. அப்படியே சோர்வாக உட்கார்ந்துவிட்டார் இவர். தூரத்தில் ஒரு குன்றின் மேல் வைத்திருந்த நாலாவது கேமரா! நினைவுக்கு வர, லாங் ஷாட்டாவது முழுமையாக கிடைத்ததே! என்றெண்ணி, மெகா ஃபோனில் கேட்டார். ‘எல்லாம் ஓகே தானே?’ ‘ஓ எஸ், நான் ரெடி!’ என்றார் அந்த கேமராமேன், ‘நீங்க ஆக் ஷன் சொல்ல வேண்டியதுதான் பாக்கி!’
பிரபல டைரக்டர் சிஸில் பி டிமிலி பற்றி சொல்லப்படும் நிகழ்ச்சி அது.
Cecil B DeMille... இன்று பிறந்த நாள்.
உடனே நினைவுக்கு வருவது 'Ten Commandments' & 'King of Kings'. ரெண்டையும் அவரே Silent Era -வில் முன்பு எடுத்திருக்கிறார் என்பது நியூஸ். ஹாலிவுட்டை உலக சினிமாவின் முக்கிய இடமாக மாற்றியவர் என்றிவரைக் கொண்டாடுகிறார்கள். அதன் முதல் 'முழு நீளத் திரைப் படத்'தை எடுத்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. ‘The Squaw Man’ என்ற இவரது மௌனப்படம்!
பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு எதுகை இவர். பிரமிக்க வைப்பது இவருக்கு பிஸ்கட் சாப்பிடுவது போல. பார்ட்னர் இருவருடன் இவர் தொடங்கிய படக் கம்பெனிதான் பின்னால் பாரமவுண்ட் ஆனது. நடிகர்களுக்காக செலவழிக்கும் பணத்தை தயாரிப்பில் செலவழிப்பது பெட்டர் என்று நினைப்பவர்.
‘மக்களின் அபிப்பிராயம் எப்போதும் சரியாக இருக்கும்.. மக்களுக்காகத்தான் படம் எடுக்கிறேன், விமர்சகர்களுக்காக அல்ல!’ சொல்லும் இவர் படங்களைப் பார்த்த ஆடியன்ஸைக் கணக்கிட்டால் மொத்தம் நாலு பில்லியனுக்கு மேல் வரும்!
சும்மா கதையை மட்டும் கேட்டிட்டுப் போக வரலை மக்கள் என்பது இவர் ஐடியா. படத்தின் மற்ற கலை அம்சங்களில் இவர் படு கவனம்! ஏன், இவர்தான் முதல்முதலாக 'ஆர்ட் டைரக்டர்' என்றொரு ஆளைப் போட்டவர்.
ஒரிஜினல் பி.டி.பார்னம் சர்க்கஸ் கம்பெனியை வைத்து இவரெடுத்தது ‘The Greatest Show on Earth’. சிறந்த படம், சிறந்த கதை என ரெண்டு ஆஸ்கார் அதற்கு.
‘பத்துக் கட்டளைகள்’… .அதற்காக 18 மைல் அகலத்தில் அவர் நிர்மாணித்த எகிப்திய நகரம்! 120 அடி உயர சுவர்கள்.. 35 அடி உயர சிலைகள்.. அஞ்சு டன் எடையில் ஏராளம் sphinx... 2,000 பேருக்கு மேலான கலைஞர்களும் மற்றவர்களும் தங்குவதற்கு 1000 டெண்ட்கள்! (தைக்கப்பட்ட உடைகளின் நீளத்தை அளந்தால் 15 மைலுக்கு மேலே.) முடிந்ததும் இடித்துப் புதைத்த நகரத்தைப் பற்றி இன்னமும் பேசும் லோக்கல் மக்கள்.
ஏகத்துக்குச் சிரத்தை வித்தையில். 75 வயதில் எடுத்த 'King of Kings' படப்பிடிப்பில் ரொம்ப உயரம் ஏறியபோது நேர்ந்த ஹார்ட் அட்டாக்… இரண்டே நாள் ஓய்வில் ஷூட்டிங் திரும்பிவிட்டார். அந்தப் படத்தில் தன் சம்பளம் அனைத்தையும் கொடுத்தது தர்மத்துக்கு. அமெரிக்கன் பிலிம் இன்ஸ்டியூட் தேர்ந்தெடுத்த தலைசிறந்த பத்துத் திரைக்காவியங்களில் ஒன்று அது.
டேக் எடுக்கும்போது யாராவது பேசினால் உடனே செட்டை விட்டு அகற்றி விடுவார். ஒருமுறை இவர் சீக்கிரமே ஆபீசுக்குத் திரும்பியபோது செகரட்டரி கேட்டாளாம், ‘என்ன, டேக்கின்போது பேசினீங்களா?’