Saturday, October 16, 2021


’சிலர் தாங்கள் எந்த இடத்துக்கு செல்லும்போதும்

சந்தோஷத்திற்குக் காரணமாகிறார்கள்.

மற்றவர் தாங்கள் எந்த இடத்தை விட்டு செல்லும்போதும்!
>><<

'இளைஞனாக இருக்கையில் நான்
வாழ்க்கையில் ஆக முக்கியமான விஷயம்
பணம் என்று எண்ணியிருந்தேன்;
இப்போது எனக்கு வயதாகவே,
அதுவேதான் என்று அறிந்துகொண்டேன்.'
>><<

'நல்ல அறிவுரையை எப்போதுமே நான்
எவருக்கேனும் கொடுத்துவிடுகிறேன்.
அந்த ஒன்றைத்தான்
அதைவைத்து செய்ய முடியும்,
ஒரு போதும் தனக்கு அது உதவுவதில்லை.’
>><<

’கையாளக் கடினமான
இரண்டே விஷயம் வாழ்க்கையில்:
தோல்வியும் வெற்றியும்.’
>><<

'விரும்பும் அத்தனை
விஷயங்களும் கிடைக்காவிடில்
விரும்பாத எத்தனை
விஷயங்கள் கிடைக்காமல் உள்ளதென
எண்ணிப் பாருங்கள்'
சொன்னவருக்கு இன்று பிறந்த நாள்… Oscar Wilde.

Sunday, October 10, 2021

பிருந்தாவனமும் நந்தகுமாரனும் ராஜேஸ்வர ராவும்...

 


“பிருந்தாவனமும் நந்தகுமாரனும்.. யாவருக்கும் பொது செல்வமன்றோ?” பாடலுக்கு அவர் அமைத்த இசையும் அப்படியே! தமிழ் தெலுங்கு இந்தி மூன்றுக்கும் சொந்தமானது. எல்லோர் மனதுக்கும் பந்தமானது. இன்றைக்கும் மிஸ் பண்ணாமல் கேட்கும் ‘மிஸ்ஸியம்மா’ படப் பாடல்.

எஸ். ராஜேஸ்வர ராவ்.. தென்னிந்திய திரை உலகில் மிக முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவர்.. இன்று பிறந்த நாள்!
“தெரிந்து கொள்ளணும் பெண்ணே… அதைப்போல், நடந்து கொள்ளணும் பெண்ணே…” என்று சாவித்திரி பாட, “பழகத் தெரிய வேணும்.. உலகில், பார்த்து நடக்க வேணும்..” என்று ஜெமினி பாட அந்தப் படமே ஒரு இசை விருந்து. “எல்லாம் உனக்கே தருவேனே, இனிமேல் உரிமை நீ தானே..” என்ற ஏ எம் ராஜா பாடும்போது மயங்காதார் யார்? கடைசியில் வரும் “மாயமே நான் அறியேன்..” அற்புதமான மெலடி.
எத்தனை முறை கேட்டாலும் புதிதாகத் தெரியும், புத்துணர்ச்சியும் காதல் உணர்வும் அள்ளித் தெளிக்கும் அந்தப் பாடல்: “ஓஹோ வெண்ணிலாவே...விண்ணாளும் வெண்ணிலாவே…வீசும் தென்றலிலே.. கதை, பேசும் வெண்ணிலவே..” ஜெமினி, சாவித்திரி ‘பிரேம பாசம்’ படத்தில் நடிக்கும் அந்த கண்டசாலா, லீலா பாடல் ஒலிக்காத திசையில்லை.
“எங்கிருந்து வீசுதோ.. இனிதாகவே தென்றல்..” என வீசிய ‘கடன் வாங்கி கல்யாணம்’ படப்பாடல். இந்தப் படத்தில்தான் ஜாலியான அந்த “கையும் கையும் கலந்திடவா ஜாலியாகவே..” இசையில் ஜாலம் செய்த, “போதும் உந்தன் ஜாலமே..”
‘அவர் யார்?’ என்று கேட்க வைத்த, மயக்கும் குரல் கொண்ட ரகுநாத் பாணிகிரஹி தமிழில் பாடிய அந்த இரண்டே பாடல் ‘அவள் யார்?’ படத்தில் இவர் இசையமைத்தவைதான். (“நான் தேடும் போது.. நீ ஓடலாமோ?” “கண் காணும் மின்னல் தானோ?”)
1976 இல் கே எஸ் கோபாலகிருஷ்ணன் ‘தசாவதாரம்’ எடுத்தபோது இவர்தான் இசையமைத்தார்.
“சேலாடும் நீரோடை மீதே... தேனின்பப் பண் பாடுவோமே..” என்ற கண்ணதாசன் பாடல் ராஜா சுசீலாவின் குரலில் வந்தது. ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’
பி பி ஸ்ரீனிவாஸ் அவர்களின் ஆரம்பத் தமிழ்ப் பாடல்களில் ஒன்றான, அவரை பிரபலப்படுத்திய “அவனல்லால் புவி மேலே அணுவும் அசையாது…” இவரது ‘பிரேம பாசம்’ படத்தின் பாடல்.
எல்லா வகை வாத்தியங்களும் வாசிக்கத் தெரிந்த இவர் எல்லா வகை பாடல்களும் இசையமைக்கத் தெரிந்தவர். “காப்பியிலே பல் தேய்க்கிறார்... மாப்பிள்ளை டோய்..” அந்தக் காமெடி பாடல் ‘மனம் போல் மாங்கல்யம்’ படத்தில் வருவது.

Monday, October 4, 2021

மனங்களை அள்ளிய மாமி...


1994 -இல் பிரபல நாவலான ‘Little Women’ படமாக வந்தபோது அந்த நான்கு சகோதரிகளின் அம்மாவாக நடித்தவர் எல்லோருடைய மனங்களையும் அள்ளிக் கொண்டார். 

கணவர் சிவில் யுத்தத்திற்கு சென்றுவிட, தன் நான்கு பெண்களையும் கவனித்து வளர்க்க வேண்டிய பொறுப்பு மாமி என்று அழைக்கப்பட்ட அவளுக்கு. அதை எத்தனை அழகாய், தன் உறுதியான மனதுடன் நிறைவேற்றுகிறார்!

எழுத்தாளராகத் துடிக்கும் தன் மகள் ஜோவை தனியே வெளியூர் அனுப்ப முடிவு செய்தபோது ‘நீ இல்லாமல் நான் எப்படி சமாளிப்பேன்னு தெரியலே. ஆனா நீ போ. உன் திறமையை உபயோகி. சுதந்திரத்தை தழுவு. அப்புறம் எத்தனை அற்புதம் நடக்குதுன்னு பார்!’ என்று சொல்லும் போதும்

மகள் Meg காதலை மற்ற சகோதரிகள் எதிர்த்த போது, ‘என் மகள் செல்வத்துக்கு ஆசைப்பட்டு திருமணம் செய்து சுயகௌரவத்தை இழப்பதை விட காதலுக்கு மதிப்பு கொடுத்து ஒரு ஏழையை மணப்பதையே நான் விரும்புகிறேன்,’ என்று தட்டிக் கொடுக்கும் போதும் Louisa May Alcott தன் நாவலில் உருவகித்த தாயை நம் கண்முன் கொண்டு வந்து விடுகிறார்.

Susan Sarandon… இன்று பிறந்த நாள்.

கணவனும் மனைவியுமாக ஆடிஷன் சென்றபோது மனைவிக்கு வாய்ப்பு கிடைக்க நடிகையானவருக்கு கிடைத்த ஆஸ்கார் நாமினேஷன் நாலு. அவார்ட் கிடைத்தது தூக்குத் தண்டனைக் கைதி ஒருவனுக்காக அவன் தண்டனையைக் குறைக்கப் போராடும் பெண் துறவியாக நடித்திருந்த ‘Dead Man Walking’ படத்துக்கு.

 

‘Stepmom’ படத்தில் இவருக்கு சரியான போட்டி Julia Roberts. டிவோர்ஸுக்குப் பின் குழந்தைகள் தன் கணவனின் ரெண்டாவது மனைவியுடன் ஒட்டிக் கொள்ளவில்லையே என்று கவலையும் எரிச்சலும் படும் அன்னையாக ஒரு திடமான நடிப்பை வழங்கியிருந்தார்.

Richard Gere யுடன் நடித்த ‘Shall We Dance?’  படத்திலும் கைதட்டல் நடிப்பை வழங்கினார்.  வாழ்க்கை போரடிக்குது என்று டான்ஸ் கற்றுக்கொள்ள சென்ற  ரிச்சர்ட்  அழகிய ஆசிரியை ஜெனிஃபர் லோபஸுடன் ஆட்டம் போடும் போது அதை அமைதியாக ஏற்றுக்கொள்ளும் பக்குவமும், இறுதியில் ரிச்சர்ட், ‘என் பார்ட்னர் இருப்பது இங்கே தான்!’ என்று தன்னிடம் நன்றி சொல்லும் போது காட்டும் பரவசமும்!

அந்தக் காட்சி! கணவனைத் துப்பறிய அனுப்பிய ஆளிடம் அவள் சொல்கிறாள், போதும், வேண்டாம் என்று.  “நம்ம வாழ்க்கைக்கு ஒரு சாட்சி வேணும். கோடிக்கணக்கான மக்கள் இந்த உலகத்திலே.  அதில ஒருத்தரோட வாழ்க்கை என்ன கவனம் பெறுது? கல்யாணம் செய்யும்போது நாம் உறுதிமொழி எடுக்கிறோம், எல்லாத்தையும் கவனிக்கிறதா. அவரோட நல்லது, கெட்டது, விசித்திரமானது, வித்தியாசமானது எல்லாத்தையும்! எல்லா நேரமும்! நீங்க அப்ப அவர்ட்ட சொல்றீங்க, உங்க வாழ்க்கை கவனிக்கப்படாது போகாது, ஏன்னா நான் அதைக் கவனிக்கிறேன்னு. உங்க வாழ்க்கைக்கு சாட்சியில்லாம போகாது, ஏன்னா நான் அதுக்கு சாட்சியா இருப்பேன்னு!"

2006 ஒலிம்பிக்கில் சோபியா லாரனுடன் கொடியேந்தி நடந்த இவர் Robert Redford உடன் கை கோர்த்தது ‘The Great Waldo Pepper’ படத்தில்.  Marlon Brando வுடன்  ‘A Dry White Season’ 

சொன்னது:  ‘எப்படி நடித்தாலும் நாம் திருப்தி அடையமாட்டோம். அதுதான் நான் நடிகையாக நீடிக்க ஒரே காரணம்.’

‘குழந்தைகள் உங்களுக்கு ஓர் புதிய உலகை சிருஷ்டிக்கின்றன.’