Sunday, August 30, 2020

ரொம்பச் சின்னது உலகம்...

அந்தக் கவிஞரை தொடர்ந்து பயன்படுத்திக் கொள்வதாகச் சொன்னார்கள் பிரபல இசைஅமைப்பாளர்களான ஷங்கர் ஜெய்கிஷன். மறந்துவிட்டார்கள்போல. ஒரு நாள் அவர்களுக்கு ஒரு லெட்டர் வந்தது அவரிடமிருந்து. நாலு வரி.
‘ரொம்பச் சின்னது உலகம். பாதைகளோ மனம் அறியும். என்றோ ஒரு நாள், எங்கோ ஓரிடம் உங்களை நான் சந்திப்பேன். எப்படி இருக்கிறீர்கள் என்பேன்.’
அவ்வளவுதான், அந்த வரிகளையே தங்கள் ‘Rangoli’ படத்தில் ஒரு பாடலாக்கியதோடு (Chotisi Yeh Duniya..) மீண்டும் அவரை தங்களுடன் இணைத்துக் கொண்டார்கள்.
அந்தக் கவிஞர்... ஷைலேந்திரா! வார்த்தைகளில் மகேந்திர ஜாலம் செய்தவர்.
ரயில்வேயில் வேலை பார்த்துக் கொண்டு கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தவரை ராஜ் கபூர் தன்னுடைய ‘Aag' படத்திற்கு பாடல் எழுதக் கேட்டபோது மரியாதையாக மறுத்துவிட்டார். சினிமாவுக்கு பாடல் எழுத அவர் விரும்பியதில்லை. ஆனால் மகன் பிறந்த சமயத்தில் பணம் தேவைப்பட அவரே ராஜ் கபூரைத் தேடிவந்தார். ரெண்டே பாடல்தான் பாக்கி இருந்தது 'Barsaat' படத்தில். 500 ரூபாய் பெற்றுக்கொண்டு அவர் எழுதிய அந்த ரெண்டு பாடல்களும் (“Patli Kamar Hai..” “Barsaat Mein..”) மூவரையுமே (ஆம், ஷங்கர் ஜெய்கிஷனுக்கும் அது டெப்யூட் படம்) வியந்து பார்க்க வைத்தது. கபூருக்கு ஆஸ்தான கவிஞர் கிடைத்தார். நமக்கு ‘ஆவாரா’(விலிருந்து வரிசையாக) பாடல்கள் கிடைத்தன.
ஷங்கர் ஜெய்கிஷன் என்றால் ஷைலேந்திரா அல்லது ஹஸ்ரத் பாடல்கள்தாம் என்றாகியது. அதில் கிடைத்த அளவிலா முத்துக்கள்..
“Ramaiya Vathavaiya…” “Mud Mud Ki Na Dekh…” (Shree 420)
“Main Gavun Tum So Jaavon…’ (Bramhachari)
“Dost Dost Na Raha…” (Sangam)
“Jis Desh Mein Ganga Bahti Hai…” (Jis Desh Mein..)
எஸ் டி பர்மனும் இவரை நன்றாக பயன் படுத்திக் கொண்டார் ‘Kala Bazaar’ -இல் வரும் “Koya Koya Chand…” ஒன்று போதுமே சொல்ல? சலில் சௌத்ரிக்கு இவர் எழுதிய ‘Madhu Mathi’ பாடல்கள்!
நிறைய கலைஞர்களைப்போல சொந்தப் படம் எடுத்து கையை சுட்டுக் கொண்டார். ஆனால் நேஷனல் அவார்ட் அவரது 'Teesri Kasam' படத்துக்கு. விரைவிலேயே மறைவு. மறக்க முடியாத அந்த “Jeena Yahan.. Marna Yahan…”! பல்லவியோடு நின்று போனதை மகன் Shaily Shailendra எழுதி முடித்தார்.
வாழ்ந்த மதுராவில் ஒரு வீதி இவர் பெயரை சூடிக்கொண்டது.
இப்ப 2016 இல் வந்த Ryan Reynolds ஆங்கிலப் படம்… ‘Deadpool’. ஆரம்பக் காட்சியிலும் கடைசியிலும் ஒலிக்கிறது இவரது “Mera Jhutha Hai Japani..” பாடல்.

Monday, August 24, 2020

அடுத்த வீட்டு அழகி...


அடுத்த வீட்டு அழகி மீது டி ஆர் ராமச்சந்திரனுக்கு ஒரு கண். அவருக்கோ இசை மீது ஒரு காது. பாடவே வராத ராமச்சந்திரன் சாளரத்தில் நின்று வாயசைக்க, தங்கவேலு உள்ளிருந்து பாட, கிடைக்கிறது காதல். இசை கற்றுத் தரும் பாட்டு வாத்தியாருக்கும் காதல் அவர்மீது. போட்டிப் பாடலிலும் ஹீரோ இரவல் குரலில் வாகை சூட, வளர்கிறது காதல். ஹீரோயின் பிறந்த நாள் அன்று ஹீரோ வழக்கம்போல் வாயசைக்க, குரலைக் கேட்ட அழகியின் தோழி சரோஜா, ஆ, இது என் காதலர் குரலாச்சேன்னு அலற, குரலும் குட்டும் உடைகிறது.
முதல் கார்ட்டூன் டைட்டிலிலிருந்து கடைசி ஷாட் வரை வயி.குலு. சிரிக்க வைத்த ‘அடுத்த வீட்டுப்பெண்' படத்தைத் தந்தவர்தான் படத்தின் நாயகியும்.
அஞ்சலி தேவி… இன்று பிறந்த நாள்!
பால்கோவாவுக்கும் பட்டுப்புடவைக்கும் பேர்போன பெத்தாபுரத்தில் பிறந்த அஞ்சம்மா... டைரக்டர் புல்லையாவின் படம்தான் அழைத்து வந்தது அஞ்சலிதேவியாக.
அழைக்காதே… என்று இவர் தவிப்புடன் அழகாக ஆடுவாரே… கேட்டு மகிழ்ச்சியில் திளைக்காத காதில்லை.
இங்கே ஜெமினி, சிவாஜி, எம்.ஜி.ஆருடன்... அங்கே என்.டி.ஆர், ஏ.என்.ஆருடன் என்று 50களில் இரு மொழியில் பெரு வழி நடந்தவர்.
ரசிக்க வைத்து விடுவார் ஏற்ற பாத்திரங்களை. ‘மர்மயோகி'யில் வில்லியாக என்றால் ‘சக்கரவர்த்தி திருமகளி’ல் நாயகியாக… பி யூ சின்னப்பாவிலிருந்து பிரம்மானந்தம் வரை சக நடிகையாக விதவிதமான கதா பாத்திரங்களில் நடித்துவிட்டார்.
வைஜயந்தி மாலாவுடன் காண்ட்ராஸ்ட் ரோலில் நடித்த ‘பெண்'... ‘சிட்டுக்குருவி சிட்டுக் குருவி சேதி தெரியுமா…’ என்று கொஞ்சிய ‘டவுன் பஸ்' … சீதாவாக வந்து கண்ணீர் சிந்திய சிந்த வைத்த ‘லவ குசா’... ஜ.ரா. சுந்தரேசனின் ‘கலீர் கலீர்'படமாகியபோது அதில் இவர்தான் நாயகி. (‘ஆடவந்த தெய்வம்')
சிவாஜி, நாகேஸ்வரா ராவ் இருவருடனும் ஒரு படத்தில் நடித்த ஒரே பிரபல நடிகை இவராகத்தான் இருக்கும். படம் :பரதேசி (தெலுங்கு)
பெண்களின் இதயத்தில் இவர் பெர்மனண்ட் டெண்ட் அமைத்தது, ஆ, சொல்லிட்டீங்களே, ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ படத்தில்தான். அந்த இமேஜ் மங்காமல் பார்த்துக் கொண்டார், மங்கையர் உள்ளம் மங்காத செல்வம்' படம் கொடுத்து. ‘அன்பில் மலர்ந்த நல் ரோஜா…’ என்று தாலாட்டு பாடும்போது உருகாத நெஞ்சமுண்டோ?
மண வாழ்வில் இசைந்தது இசையமைப்பாளர் ஆதி நாராயண ராவுடன். அவர் தயாரித்த 27 படங்களில் முக்கியானது 'அனார்கலி'.
உருக்கம் ஒரு கண் என்றால் ஹாஸ்யம் இன்னொன்று. ‘கண்ணாலே பேசி பேசி..’ (அ.வீ.பெண்) பாடலில் அவர் ரீயாக் ஷனைப் பாருங்கள். குறும்பு முகத்தில் கொப்பளிக்கும்.

Wednesday, August 19, 2020

பரிசாக வந்த நாய்க்குட்டி...


ஆனிவர்ஸரியும் அதுவுமாக மனைவி கேதிக்கு கிஃப்ட் வாங்க அவன் போனபோது கூடவே உள் நுழைந்த நாய் ஒன்று கண்ணாடியை உடைத்து விட, கையில் இருந்ததை டேமேஜுக்கு அழுதுவிட்டு வெறுங்கையோடு வீடு திரும்புகிறான் டேனி. தொடர்கிறது நாய். வாயில் இவன் பரிசில் செருக எழுதிய சீட்டு. பார்த்துவிட்டு ஆஹா, அழகிய பரிசு! என்று அவள் தழுவிக் கொள்கிறாள் நாயை! பிறகு நாயகனையும். மாமியார் முன் கேவலப்பட வேண்டாமேன்னு மூடிக் கொள்கிறான் வாயை.
நாயோ ஒரு கடத்தல் கூட்டத்தினுடையது. பண்ட மாற்று செய்ய பயன் படுத்துவது. அதைக் காணாமல் அவங்க தலையைப் பிய்த்துக் கொள்கிறாய்ங்க, அதாவது ஒருத்தர் தலையை அடுத்தவன்! அவர்கள் ஒவ்வொருவராகப் போட்ட, நாய் காணோம் விளம்பரத்தை ஆவலோடு பார்த்து (பின்னே? பெட் ரூமுக்கே வந்துவிட்ட நாயை அவளுக்குத் தெரியாமல் அப்புறப்படுத்த வேறு வழி?) அங்கே போனால் அவன்களுக்குள் வரிசையாய் கொலை விழ, அங்கே போனதால் போலீஸ் இவனைத் தூக்க .. வீட்டில் அமளி.
நாயை வாக் அழைத்துப் போகிறாள் கேதி. வழக்கப்படி வந்த கடத்தல்காரன் ஒருவன் அவள் பையைப் பிடுங்கிவிட்டு பணத்தைக் கொடுத்துவிட்டுப் போகிறான். அவன், பையைப் பிரித்தால் எலும்புத் துண்டுகள். இவள் பையைப் பிரித்து மகிழ்ந்தால், அத்தனையும் கள்ள நோட்டு.
தம்பதி அதை ஸ்டேஷனில் ஒப்படைக்கையில், பெண்டாட்டி முன்னாடி உண்மையை, அவளுக்கு பரிசு வாங்காத உண்மையைச் சொல்லவேண்டி வருகிறது. அடுத்து, வீட்டுக்கே மீதி கோஷ்டி தேடிவர போலீஸ் சுற்றி வளைக்கிறது. அவளுக்கு நாயும், அவனுக்கு அதை பெட் ரூமுக்கு வெளியே தள்ளும் தைரியமும் கிடைத்து விடுகிறது!
1951 -இல் வந்த ‘Behave Yourself’ படத்தில் கேதியாக நடித்தவர் Shelley Winters. Aug.18. பிறந்த நாள்.
நிறைய பேர் மறைவதாலோ என்னவோ படம் முடியும்போது நடிகர்கள் பேரை in the order of disappearance என்று தமாஷாக போடுவார்கள்.
Shelley Winters... 50 களின் கவர்ச்சிக் கன்னியரில் ஒருவர்.. அழகாய் நடிக்கும் டிப்ஸை மர்லின் மன்றோவுக்கே ஒரு முறை வழங்கியவர்.
‘A Place in the Sun’ -இல் எலிசபெத் டெய்லருடன் நடித்தபோது அவருக்கல்ல, இவருக்கு ஆஸ்கார் நாமினேஷன் வந்தது. அவார்டை பின்னால் ரெண்டு முறை வாங்கிவிட்டார். (‘The Diary of Anne Frank’, ‘A Patch of Blue.’)
‘எல்லா கல்யாணங்களுமே சந்தோஷ சமாசாரம்தான் ஹாலிவுட்டில். அப்புறம் சேர்ந்து வாழ நினைக்கிறதுதான் எல்லா பிரசினையும் கொண்டுவருது,’ என்பவர் சொன்ன ஒன்று, “ஆஸ்காரை வாங்கிக் கொண்டு நான் வீட்டுக்குள் நுழைந்தபோது என் கணவர் அதைப் பார்த்த ஒரே பார்வையில் எனக்குத் தெரிஞ்சு போச்சு என் மணவாழ்க்கை முடிஞ்சதுன்னு.”
Best Quote? ‘நாடகத்திலதான் அந்த நல்ல சப்தத்தை நீங்க கேட்க முடியும். அதை படத்திலேயோ டி.வி.யிலேயோ கேட்கவே முடியாது. அது ஒரு அற்புதமான நிசப்தம். அர்த்தம் என்னன்னா நீங்க அவங்க இதயத்தில அறைஞ்சிட்டீங்க.’

Wednesday, August 12, 2020

பிரமிப்பு.. பிரமிப்பு..

மறுபடி எடுக்க முடியாத மாபெரும் காட்சி அது. ஆயிரக்கணக்கான துணை நடிகர்களுடன் யுத்தக்காட்சி. ஒரே நேரத்தில் நாலு காமிராவால் படமாக்க ஏற்பாடு செய்திருந்தார் தயாரிப்பாள டைரக்டர்.
ஆக் ஷன் சொன்னதும் படை வீரர்கள் மோதினார்கள். குதிரைகள் பாய்ந்தோடின. பீரங்கிகள் முழங்கின. குண்டுகள் வெடித்தன. மேடைகள் வீரர்களுடன் சரிந்தன. எல்லாம் பிரமாதமாக நடந்து முடிந்ததும் பார்த்தால்... என்ன துரதிருஷ்டம்! முதல் காமிராமேன் ஃபிலிம் அறுந்துவிட்டது என்றார். இரண்டாவதில் லென்சை தூசி அடைத்துவிட்டதாம். மேடை ஒன்று விழுந்து கேமரா முறிந்துவிட்டது என்றார் மூன்றாமவர்.. அப்படியே சோர்வாக உட்கார்ந்துவிட்டார். தூரத்தில் ஒரு குன்றின் மேல் வைத்திருந்த நாலாவது கேமரா! நினைவுக்கு வர, லாங் ஷாட்டாவது முழுமையாக கிடைத்ததே! என்று மெகா ஃபோனில் கேட்டார். ‘எல்லாம் ஓகே தானே?’ ‘ஓ எஸ், ரெடி!’ என்றார் அந்த கேமராமேன், ‘நீங்க ஆக் ஷன் சொல்ல வேண்டியதுதான் பாக்கி!’ 
பிரபல டைரக்டர் சிஸில் பி டிமிலி பற்றி சொல்லப்படும் நிகழ்ச்சி அது. 
Cecil B DeMille... இன்று பிறந்த நாள்.
உடனே நினைவுக்கு வருவது Ten Commandments & King of Kings. ரெண்டையும் அவரே Silent Era -வில் முன்பு எடுத்திருக்கிறார் என்பது நியூஸ்.  ஹாலிவுட்டை உலக சினிமாவின் முக்கிய இடமாக மாற்றியவர் என்றிவரைக் கொண்டாடுகிறார்கள். அதன் முதல் முழு நீளத் திரைப் படத்தை எடுத்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. ‘The Squaw Man’ என்ற இவரது மௌனப்படம்! 
பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு எதுகை இவர். பிரமிக்க வைப்பது இவருக்கு பிஸ்கட் சாப்பிடுவது போல. இன்னும் இருவருடன் இவர் தொடங்கிய ஃபிலிம் கம்பெனிதான் பின்னால் பாரமவுண்ட் ஆனது. நடிகர்களுக்காக செலவழிக்கும் பணத்தை தயாரிப்பில் செலவழிப்பது பெட்டர் என்று நினைப்பவர்.
மக்களின் அபிப்பிராயம் எப்போதும் சரியாக இருக்கும்.. மக்களுக்காகத்தான் படம் எடுக்கிறேன், விமர்சகர்களுக்காக அல்ல!’ சொல்லும் இவர் படங்களைப் பார்த்த ஆடியன்ஸைக் கணக்கிட்டால் மொத்தம் நாலு பில்லியனுக்கு மேல் வரும்! சும்மா கதையை மட்டும் கேட்டிட்டுப் போக வரலை மக்கள் என்பது இவர் ஐடியா. படத்தின் மற்ற கலை அம்சங்களில் இவர் படு கவனம்! ஏன், இவர்தான் முதல்முதலாக ஆர்ட் டைரக்டர் என்றொரு ஆளைப் போட்டவர்.
ஒரிஜினல் பி டி பார்னம் சர்க்கஸ் கம்பெனியை வைத்து இவரெடுத்தது ‘The Greatest Show on Earth’.  சிறந்த படம், சிறந்த கதை என ரெண்டு ஆஸ்கார் அதற்கு.
‘பத்துக் கட்டளைகள்’… .அதற்காக 18 மைல் அகலத்தில் அவர் நிர்மாணித்த எகிப்திய நகரம்! 120 அடி உயர சுவர்கள்..  35 அடி உயர சிலைகள்.. அஞ்சு டன்  எடையில் ஏராளம் sphinx... 2,000 பேருக்கு மேலான கலைஞர்களும் மற்றவர்களும் தங்குவதற்கு 1000 டெண்ட்கள்! (தைக்கப்பட்ட உடைகளின் நீளத்தை அளந்தால் 15 மைலுக்கு மேலே.) முடிந்ததும் இடித்துப் புதைத்த நகரத்தைப் பற்றி இன்னமும் பேசும் லோக்கல் மக்கள்.
ஏகத்துக்கு சிரத்தை வித்தையில்.  75 வயதில்  எடுத்த King of Kings படப்பிடிப்பில் ரொம்ப உயரம் ஏரியபோது நேர்ந்த ஹார்ட் அட்டாக்…  இரண்டே நாள் ஓய்வில் ஷூட்டிங் திரும்பிவிட்டார். அந்தப் படத்தில் தன் சம்பளம் அனைத்தையும் கொடுத்தது தர்மத்துக்கு. அமெரிக்கன் பிலிம் இன்ஸ்டியூட் தேர்ந்தெடுத்த பத்துத் திரைக்காவியங்களில் ஒன்று அது.
டேக் எடுக்கும்போது யாராவது பேசினால் உடனே செட்டை விட்டு துரத்தி விடுவார்.  ஒருமுறை இவர் சீக்கிரம் ஆபீசுக்குத் திரும்பியபோது செகரட்டரி கேட்டாளாம், ‘என்ன, டேக்கின்போது பேசினீங்களா?’

Tuesday, August 11, 2020

கையா A. I.யா?

சிறுவர்களுக்கு கதை எழுதுவது சாமானிய விஷயமல்ல. சாமர்த்தியமான பிளாட் இருக்கணும். சிறுவர்களுக்கே உரித்தான கோட்டில் பயணிக்க வேண்டும். வளவள வர்ணனைக்கு நோ.
சமீப அரசியை அறிவோம். சென்ற நூற்றாண்டில் ஆண்டவர் ஒருவர் உண்டு. கையா, A. I.யா என்று சந்தேகப்படும் அளவுக்கு எழுதிக் குவித்தவர் எனிட் ப்ளைடன்.
Enid Blyton... இன்று பிறந்த நாள்.
Famous Five ஃபேமஸ் என்றால் Secret Seven சிறுவர் ஹெவன். ரெண்டையும் நோண்டவில்லை என்றால் நீங்கள் சிறுவயது தாண்டவில்லை. ஒரு நொடி, ஒரு Noddy காமிக்ஸ் படிக்க ஆரம்பித்தால் அடியோடு மறந்து விடுவீர்கள் இந்த அவஸ்தை உலகத்தை. நோடியைப் படித்ததும் நோய் நொடி எல்லாம் பறந்துவிடும்!
சாம்பிளுக்கு இதோ ஒரு கதை...
டீச்சரின் மேஜையில் இருந்து பணம் திருடிய சிறுமி எலிசபெத் காணாமல் போய் விடுகிறாள். அவள் பாட்டி வசிக்கும் கிராமத்துப் பக்கம் அவளைக் கண்டதாகச் சொல்கிறார்கள். பக்கத்து கிராமத்தில் இருக்கும் ஸீக்ரெட் ஸெவனுக்கு கிடைத்தது கேஸ். களம் இறங்குகிறார்கள்.
பாட்டியை விசாரித்தால் தினமும் தின் பண்டங்கள் காணாமல் போவதாக சொல்கிறார். ஊரைச் சுற்றித் தேடுகிறார்கள். பக்கத்தில் இருக்கும் குதிரை லாயத்தில் வேலை பார்க்கும் டாம் என்ற பையன் அவளைப் பார்த்ததாக சொல்கிறான். லண்டன் போய் பிரான்ஸுக்கு தன் சகோதரனை பார்க்க போவதாக அவள் சொன்னாளாம்.
லண்டன் போய் இருந்தால் இங்கே பண்டம் திருடு போவது எப்படி? அன்றிரவு போலீஸ் ஒரு பக்கம், ஸீக்ரெட் 7 ஒரு பக்கம், டாம் ஒரு மரத்தில் ஏறி... என்று வீட்டைச் சுத்தியிருந்து வேவு பார்க்கிறார்கள். ஆனால் அன்றைக்கும் பட்சணங்கள் அபேஸ். எப்படி?
இதற்கிடையில் அவள் சகோதரன் வந்து சேர்கிறான். அவனைப் பார்த்ததும் ஸெவனில் ஒருவனுக்கு சந்தேகம் தட்டுகிறது. அவனை அழைத்துக்கொண்டு டாமைப் பார்க்கப் போகிறார்கள். கண்டதும் குதிரைக்குட்டியில் ஏறி டாம் விரைய, நிறுத்திப் பார்த்தால் அவன்தான் எலிசபெத். ஆண்பிள்ளை வேடத்தில். அவள் பணத்தைத் திருடவில்லை என்றும் தெரிகிறது. வாரச் சம்பளம் கிடைக்கும் வரை வயிற்றுப்பசி. ஆகவே பாட்டி வீட்டிலிருந்து! சம்பவத்தன்று மரத்திலிருந்து மாடியில் இறங்கி தின்பண்டம் எடுத்துக் கொண்டு திரும்பி மரம் வழியாகவே வந்து கண்முன்னே அவர்களை ஏமாற்றியதை சொல்கிறாள்.
சின்ன கவிதை ஒன்றில் ஆரம்பித்து 600 புத்தகங்களுக்கு அசுர வளர்ச்சி. 42 மொழிகளில் 60 கோடி பிரதி விற்பனைக்கு. நாளொன்றுக்கு அவர் டைப் ரைட்டர் கக்கும் வார்த்தைகள் 6000.
1996 இல் அவரது எழுத்துச் சொத்தை மிகக்குறைவாக கொடுத்ததிலேயே 14 மில்லியன் பௌண்ட் குடும்பத்துக்கு கிடைத்ததாம்.
குழந்தைகளுக்கு அம்மா முக்கியம் என்று சொல்லும் இவர் குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு எழுத்தையும் ஜனித்துக் கொண்டவர்.
Quotes?
‘எதையாவது யாருக்காகவேனும் விட்டுச் செல்லுங்கள். ஆனால் எதற்காகவும் யாரையும் விட்டுச் செல்லாதீர்கள்.’
‘பராமரிக்க முடியாத ஒன்றை வைத்திருக்க உங்களுக்கு உரிமை இல்லை.’
‘வளர வளர நம் முகத்தை நாமே உருவாக்கிக் கொள்ளுகிறோம்.’
><><><

Monday, August 10, 2020

கடவுளின் செல்லம்...

விஞ்ஞானம் கடவுளின் செல்ல சப்ஜெக்ட்! உள்ளே செல்லச் செல்ல சுவாரசியம் விரிந்துகொண்டே போகும்...
இப்ப பாருங்க… ஆக்ஸிஜன், நைட்ரஜன், ஹைட்ரஜன்... எல்லாம் வாயுக்கள். தெரியும். எல்லா வாயுவும் மாலிக்யூல்களால் ஆனது. அறிவோம். ஒரு பிடி ஹைட்ரஜனை அள்ளிக் கொண்டால் அதில் ஆயிரக் கணக்கில் ஹைட்ரஜன் மாலிக்யூல்கள் இருக்கும். ஆமா, சரிதான். போலவே ஒரு பிடி நைட்ரஜனை அள்ளிக் கொண்டால் அதில் ஆயிரக்கணக்கில் நைட்ரஜன் மாலிக்யூல்கள். இந்த ரெண்டு கணக்கும் எக்ஸாட்லி ஒரே நம்பராக இருக்கும்னு நினைச்சுப் பார்த்திருப்பீங்களா? ஒண்ணாதான் இருக்கும். ஒரே கன அளவுள்ள எந்த வாயுவை எடுத்துக் கொண்டாலும் அதில் ஒரே எண்ணிக்கை மாலிக்யூல்கள்தாம் இருக்கும் (ஒரே வெப்பம் & அழுத்தத்தில்) அது தான் ஆவகாட்ரோ விதி. அது ஆரோ? அவருதாங்க அதைக் கண்டு பிடிச்சது.. 200 வருஷம் முன்னாடியே…
Amedeo Avogadro... 
படித்தது முதலில் சட்டம். ஆர்வத்தில் நுழைந்தது விஞ்ஞானம். வாழ்ந்த காலத்தில் உரிய பாராட்டு வழங்கப் படாதவர்களில் ஒருவர்.
><><><

முயல் குட்டியின் கதை...

நோய்வாய்ப்பட்டிருந்த ஒரு சிறுமிக்கு ஒரு கதையை எழுதி படங்களும் வரைந்து அனுப்பினாள் அந்தப் பெண். பீட்டர் என்ற முயலின் கதை. படித்த எல்லோருமே அதை புகழ்ந்தனர். மகிழ்ந்து போனாள் அவள். ஒரு சின்ன புத்தகமாக அது வெளியானது. Peter Rabbit பிரபலமாயிற்று. வரவேற்பின் வேகத்தில் ஒவ்வொன்றாக எழுத, அடுத்த 23 பீட்டர் கதைகள் வெளியாகின. அந்த எழுத்தாளர்...
Beatrix Potter. ( 1866-1943) 
அந்த முதல் கதை? முயல் குட்டி பீட்டர் ரொம்ப சுட்டி. கூடப் பிறந்ததுகளை மாதிரி அல்ல. அந்தப் பக்கம் மெக்கிரிகர் தோட்டத்துக்கு மட்டும் போய் விடாதே, என்று எச்சரித்துவிட்டு வெளியே போகிறாள் அம்மா முயல். கேட்குமா பீட்டர்? அங்கே தான் போகிறது. அதையும் இதையும் பிடுங்கி சாப்பிட்டுவிட்டு மாட்டிக் கொள்ளப் பார்க்கிறது. அடிபட்டு, மிதிபட்டு மயிரிழையில் தப்பி ஓடி வருகிறது. சொன்னால் புரியாத உலகத்தை அனுபவத்தால் புரிந்து கொள்கிறது. அம்மா டின்னர் தராமல் டீயைக் கொடுத்து படுக்க வைக்கிறாள்.
பீட்டர் கதைகள் (The Tale of Peter Rabbit) உலக பிரசித்தம். எல்லாமே கருத்துள்ளவை என்பது அதன் மற்றொரு பிளஸ்.

Saturday, August 8, 2020

அம்மாவும் ஆகி...

79 இல் வந்த படம்... அதன் பின் அதே மாதிரி கதை நிறைய வந்துவிட்டனதான். என்றாலும்...
வேலைப் பிரியமரான கிரேமர் பிரமோஷன் ஒன்றை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வரும்போது மனைவி ஜோனா அவனைப் பிரிந்து செல்ல தயாராக இருக்கிறாள். அப்பாவை வெறுக்கும் மகனை அவன் பொறுப்பிலேயே விட்டுவிட்டு. வீட்டையும் மகனையும் கவனிப்பதில்லையாம் அவன்!
அம்மாவும் ஆகி, திணறும் கணவன் வேறு வழியில்லாமல் சாதாரண வேலைக்கு இறங்குகிறான். கொஞ்சம் கொஞ்சமாய் மகனின் இதயத்தில் இடம் பிடிக்கிறான்.
இப்போது அவள் வருகிறாள் மகனைக் கேட்டு. வழக்கில் அவன் பக்க நியாயங்கள் வெளிப்பட்டாலும் முடிவு அவளுக்கு சாதகமாக. அப்பீலுக்கு போகலாம்தான், ஆனால் சின்ன பையன் தலையில் தேர்ந்தெடுக்கும் பெரிய சுமை விழுமே என்று விட்டுக் கொடுக்கிறான்.
பையனை அழைத்து போக மறுநாள் காலை வருகிறாள் ஜோனா. அவள் விட்டுப் பிரிந்த முதல் நாள் தயாரித்த அதே காலை டிபன். அப்பவும் மகனுமாக தயாரிக்கிறார்கள். தன்னைவிட அவனிடமே பையன் ஹோம்லியாக இருப்பதைச் சொல்லி விட்டு வெளியேறுகிறாள் தனியே.
கிரேமராக நடித்தவருக்கு எப்படியோ, நமக்கு ‘Kramer Vs Kramer’ மறக்க முடியாத படம். அவருக்கும் அப்படித்தான் இருக்க வேண்டும். ஆஸ்கார் வாங்கித் தந்தது ஆயிற்றே?
Dustin Hoffman... இன்று பிறந்த நாள்.
‘என்னாலே தானே அம்மா பிரிந்து போனாள்?’ என்று கேட்கும் மகளிடம் பொறுமையாக, ‘உன் அம்மாவை அவளாக நான் இருக்க விடாமல் என் விருப்பப்படி மாறச் செய்தேன். அவளைக் கவனிக்கவோ கேட்கவோ எனக்கு நேரமில்லை. முடிந்தவரை முயன்று பார்த்துவிட்டுத்தான் அகன்றாள். உனக்காகத்தான் இன்னும் சில நாள் இருந்தாள்..’ என்று அரவணைக்கும் காட்சியில் பையனின் & நம் இதயம் தொடுவார். ஆஸ்காரையும்!
ஆரம்பப் படங்களில் ஒன்றான ‘The Graduate’ படத்திலேயே எல்லோரையும் தன்னைக் கவனிக்க வைத்தவர். இளைஞராக இருந்த போதும் சரி வயதானவரான போதும் சரி, பிரதான காரெக்டர்களில் பிரமாதமாகப் பண்ணியவர்.
வாங்கிய மற்றொரு ஆஸ்கார் Tom Cruise உடன் நடித்த 'Rain Man'-க்காக.
கூட உட்கார்ந்து திரைக்கதை எழுதுவார் ஆனால் திரையில் பேர் போட்டுக்கொள்ள பிரியப் பட்டதில்லை.
தமாஷான ஒரு Quote? ‘வெற்றி அடைஞ்சதில ஒரு சந்தோஷம் என்னன்னா சாவதைப் பற்றிய பயம் போயிடுச்சு. ஸ்டார் ஆயிட்டீங்கன்னா, ஏற்கனவே நீங்க செத்துப் போயாச்சு. பாடம் பண்ணியாச்சு.’
'விவாகரத்துகள் நடக்கக் காரணம் என்ன? ஏதோ ஒரு காரணத்தால் உங்களால் அதே இடத்தில் இருக்க முடியாமல் போகிறது. ஆனால் மனசில் அந்த அன்பு நீங்காமல் தங்கியே இருக்கிறது. அதுதான் கொல்கிறது. அங்கேயிருந்துதான் எல்லா ஆத்திரமும் கோபமும் கிளம்புகிறது.'

Friday, August 7, 2020

தேன் (தேனீர்) பாடல் ஒன்று!

இந்தப் பாடலைக் கேட்டதிலிருந்து காலைத் தேநீரின் சுவை கன மடங்கு அதிகரித்துவிட்டது!
என்ன பாடல் அது?
“காலைத் தேனீர்… கையில் ஏந்தி…” (படம்: ‘என்னோடு விளையாடு.’ 2017)
இப்ப வர்ற பாட்டில் எல்லாம் மெலடி இல்லை, ஆழமில்லை, வார்த்தை தெளிவில்லை என்று அலுத்துக் கொள்பவருக்கு இது ஒரு பிளசன்ட் சர்ப்ரைஸ்!
மெல்லத் தொடங்கும் பல்லவி... ஐந்தே ஸ்டெப்பில் ராகம் உச்சத்தை எட்டுகிறது. அப்புறம் அந்த உச்ச வரிகள்.  அவ்வளவே.  வரணும் என்றே இல்லை சரணம். இடையிசையும் தடையிசை ஆகிவிடாமல் பாட்டு அதன் போக்கிலேயே ஆற்றில் படகாக . ஒரு அற்புத இசையனுபவம்!
பல்லவியை தொடர்ந்து முதல் அனுபல்லவியில் ‘உன் கண் பந்தாடும் நேரம்… ஐயோ என்னாகும் நாணம்…’ என்ற வரியில், இசையில் ஒரு வளைவு கொடுத்திருப்பார் பாருங்கள். இலயோரம் திரண்டு கீழே விழும் நீர்ச் சொட்டுப் போல! Ravishing!
அடுத்து ‘சிறு பிள்ளை போல் உனைப் பார்க்கிறேன்..’ என்று ஒரே ஒரு வரி இறங்கி வந்து தொடர்ந்து ‘களங்கம் ஏதும் இல்லையே என்காதல் பிள்ளையே..’ என்று ராகத்தைச் சொடுக்கி ‘சாய்கிறாய் எனைச் சாய்க்கிறாய் ..’ என்று உயர்ந்து, காதலில் படபடத்து அவள் குரல் மூச்சை இழக்கும்போது அவன் கையிலேந்திக் கொள்கிறான் அந்த இசையை. ‘எனக்கானவா… ‘ என அனாயாசமாக உச்சத்துக்கு எடுத்துச் செல்கிறான். 
பொதுவாக high pitch -இல் பாடும்போது அதில் ஒரு வலிந்து இழுத்த பிரயத்தனம் தெரியும். இதுவோ சுபாவமாக இருக்கிறது. காதலின் மீதான அதன் தீவிரத்தை காட்ட முற்படும் குரலாக மட்டுமே அது உயர்கிறது. அதோடு உணர்வும் முதல் பகுதிக்கு ஈடாக, பெண்ணின் நாண ராகத்திற்கு ஆணின் விடையாக இருக்கிறது
அதே ஆறு ஸ்டெப் மறுபடியும் நம்மை அழைத்துச் செல்ல… ‘லல லல்லல் லல் லலா… என்று இறுதியில் வயலின் ஒலித்து அடங்குவதும் சரி, ‘அன்பே…!’ என்ற முத்தாய்ப்பும் சரி, ஆழ் மனதை வருடுகிறது. மேல் மனசுக்குள் ஒரு குஷி பிறக்கிறது.
ரெண்டாவது பல்லவியில் ‘ஏதோ என்னில், மாற்றம் வந்தே, கூச்சல் கொண்டேன் உள்ளே…’ இந்த வரி முடிவில் ‘உள்ளே…’ என்று நீண்டு எதிரொலிப்பது ஒரு அழகு நச்!
60 -க்கான இனிமையும் 20 -க்கான புதுமையும் right mix -இல். (1960 - 2020)
ஒரு பாடலை முதல்முறையாக ஒரு தடவை கேட்டு முடித்ததும் உங்கள் காதில் அதன் முதல் வரி ப்ளே பேக் செய்கிறதா? அதான் சிறந்த tune க்கு அடையாளம். 
பாடலின் இனிமையை ஒரு வார்த்தையில் சொன்னால்… மயிலிறகு! 
இந்த ஏ ஒன் பாட்டை தந்தவர் ஏ. மோசஸ். ஏகப்பட்ட ஃபேமஸ் ஆகிவிடுவார் விரைவில். சந்தேகமில்லை. 

மொழியின் அழகு வார்த்தைகளை பொறுக்கியெடுத்து எழுதியவர் கதிர் மொழி. இழைத்து இழைத்துப் பாடியவர்கள்: கௌரி லக்ஷ்மி  - ஹரி சரண்.
பாடல் லிங்க்:

Thursday, August 6, 2020

நகைச்சுவை அரசி...




1950 களில் கலக்கிய டிவி ஷோ அது. ‘I Love Lucy.’ பிரமாதமாகப் போய்க் கொண்டிருந்தது. நாயகி பிரபல காமெடி நடிகை. அவரும் கணவரும்தாம் தயாரிப்பாளர்கள். தான் குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதை அறிவித்தார் நாயகி, வேறு நடிகையைப் போடலாமென்று நினைத்து. அதையே கதையிலும் கொண்டு வந்துவிடலாம் என்றார் தலைமைக் கதாசிரியர். அப்படியே நடந்தது. அந்த 1953 ஜனவரி 19 அன்று நிஜத்தில் குழந்தை பிறந்த அன்று கதையிலும்!
அந்த நடிகை Lucille Ball… ஹாலிவுட்டின் மனோரமா! Aug.6. பிறந்த நாள்! (1911-1989)
நாலு வயதில் தந்தையை இழந்தவர். பள்ளிக்கூடத்தில் பென்சில்கூட வாங்க முடியாத வறுமையான இளமை. நாடகப் பள்ளியில் சேர்ந்தபோது, ரொம்ப வெக்கப் படறே, டயத்தை வேஸ்ட் பண்ணாதே என்று திருப்பி அனுப்பப் பட்டவர் மிகப் பிரபல நடிகையாகி இரண்டாம் வரிசை படங்களின் அரசியானார்.
மாடலிங், ரேடியோ, டிவி, சினிமா என்று கலக்கியவர். நாடகத்தில் நடிக்க நேரில் கேட்டபோது சேர்த்துக் கொள்ளாதவரை மாடலாக இருந்த போது வெளியான போஸ்டர் சினிமாவில் கொண்டு சேர்த்தது. Bob Hope உடன் ஜோடியாக உயர்ந்தார்.
சொந்த ஸ்டூடியோ வைத்த முதல் பெண்மணி. மூன்று கேமரா உபயோகித்து டிவி ஷோ எடுப்பதை முதலில் ஆரம்பித்து வைத்தது இவர்தான். பிரபல ‘Star Trek’ சீரியலை தயாரித்ததும் இவர் கம்பெனி தான்.
இவரது ‘Lucy and Superman’ எபிசோடில் George Reeves சூபர்மேனாக நடித்தார். டைட்டிலில் அவர் பேரைப் போட சம்மதிக்கவே இல்லையே இவர்? Superman இருக்கிறார்னு நம்பும் குழந்தைகளை ஏமாற்றலாகாது என்று!
“என்னை வெச்சு காமெடி ஒண்ணும் பண்ணலையே?”ன்னு கேட்க மாட்டார், ஏன்னா தன் காமெடி நடிப்புக்குக் காரணம் வசனகர்த்தாவும் டைரக்டரும்தாம் என்று சொல்பவராயிற்றே!
Quote?
‘அதிர்ஷ்டத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. என்னைப் பொறுத்தவரை அதிர்ஷ்டம் என்பது கடும் உழைப்பும் எது சரியான சந்தர்ப்பம், எது இல்லை என்று புரிந்து கொள்வதும் தான்.’
‘உங்களுக்கு எது முடியாது என்பதைத் தெரிந்து இருப்பது உங்களுக்கு எது முடியும் என்பதைத் தெரிந்து இருப்பதைவிட முக்கியமானது.’
‘முதலில் உன்னை நேசி. எல்லாம் சரியாகிவிடும். எல்லா விஷயங்களையும் நடத்த வேண்டுமானால் உன்னை உண்மையாக நேசிக்க வேண்டும்.’

சிறுகதையின் தந்தை...

அந்தக் கதையை அனேகமாக நீங்கள் படித்திருப்பீர்கள். பல மொழிகளில் வெளியான பிரபல கதை...
அவளுக்கு படோபடோபமாக உடுத்துவதிலும் பளிச்சென்று நகையணிவதிலும் கொள்ளை ஆசை. கணவனோ ஒரு சாதாரண வேலையிலிருப்பவன். சராசரி உணவிலேயே மகிழ்பவன். இந்த சாதா வாழ்க்கையில் சதா மனம் வெம்பி வாடுகிறவளை குஷிப்படுத்த அவன் ஒருநாள் பெரிய பார்ட்டி ஒன்றுக்கு அழைப்பைக் கொண்டு வருகிறான்.
அவளோ, "என்னத்தை அணிஞ்சிட்டுப் போறது அங்கே? எல்லா பெண்களும் பிரமாதமா வந்திருப்பாங்களே!" யோசித்து யோசித்து கடைசியில் அவளது பணக்கார பால்ய தோழியிடம் சென்று நகை இரவல் கேட்கிறாள். சம்மதித்த அவளிடமிருந்தவற்றில் ஒரு டைமன்ட் நெக்லஸைப் பொறுக்கி எடுக்கிறாள். போட்டுக் கொண்டு பார்ட்டிக்கு போனால் எல்லாரும் அவளைக் கவனிக்க அவள்தான் centre of attraction. ஒரே உற்சாகம்.
காலை நாலு மணிக்கு டாக்ஸி பிடித்து வீட்டுக்கு வந்தால் கழுத்தில் நகையைக் காணோம். எங்கே போனது? வழிநெடுக தேடிப் பார்க்கிறான். கிடைக்கவில்லை. இப்ப என்ன செய்வது?
கடையில் கேட்டால் அதைப் போல ஒரு நகை 40000 என்கிறார்கள். அவனுடைய சேமிப்புகள் இதற்கு உறை போடக் காணாது. சுற்றிச் சுற்றி கடன் வாங்குகிறார்கள். கடையில் நகையை வாங்கி ஸாரி ஃபார் டிலே சொல்லிக் கொடுக்கிறாள் தோழியிடம். சலிப்புடன் அதை வாங்கி கொள்கிறாள் தோழி.
கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டுமே? அன்றிலிருந்து நல்ல உழைக்கிறாள். வேலைக்காரியை நிறுத்திவிட்டு வீட்டில் உள்ள எல்லா வேலையையும் செய்கிறாள். அவன் இன்னொரு பார்ட் டைம் வேலையையும் செய்ய, சிறுகச் சிறுக சேமிக்கிறார்கள். பத்து வருட உழைப்பு. எல்லா கடனையும் அடைத்து நிம்மதி பெருமூச்சு! நினைக்கிறாள். ‘சின்ன ஒரு விஷயம் வாழ்க்கையை எப்படிப் புரட்டிப் போட்டு விடுகிறது!’
ஒருநாள் வழியில் தோழியை காணுகிறாள். இப்போது அவளிடம் நடந்ததை சொல்வதில் எந்த தயக்கமும் இல்லை இவளுக்கு. சொல்கிறாள். அவள் கேட்கிறாள்: “உண்மையான வைர நெக்லஸா வாங்கி கொடுத்தே எனக்கு? அது வெறும் கவரிங் தானே?”
மாப்பசானின் பிரபல கதை இது..
Guy de Mauppasant ... Aug.5. பிறந்த நாள்! (1850 -1893)
ஆறு நாவல்கள் எழுதி இருந்தாலும் அறியப்படுவது சிறுகதைக்காகவே... சிறுகதையின் தந்தை என்று! இவரால் கவரப்பட்டவர்களில் ஒருவர் ஓ ஹென்றி. இன்னொருவர் சாமர்செட் மாம்.
Quotes? ‘கல்யாணத்தைப் பண்ணி மகிழ்ச்சி இல்லாமல் இருப்பதைவிட காதலித்து மகிழ்ச்சி இல்லாமல் இருப்பது நல்லது; ஆனால் சிலருக்கு ரெண்டுமே வாய்த்து விடுகிறது!’
‘வாழ்க்கையில் ஒரே ஒரு நல்ல விஷயம் தான் உண்டு அதுதான் அன்பு!... காற்றை சுவாசிப்பது போல அன்பை சுவாசிப்போம்; எண்ணங்களை ஏந்துவதுபோல எப்போதும் அதை ஏந்துவோம். அதைவிட வேறொன்றும் இல்லை நமக்காக இங்கே.’

Wednesday, August 5, 2020

கடவுள் தந்த குரல்...

அண்ணனுக்கு பெண்களைக் கண்டாலே ஆகாது. தம்பிகளுக்கு கண்டிப்பான உத்தரவு: பெண்களோடு பேசக் கூடாது, பழகக் கூடாது. அவர்களுடைய வொர்க் ஷாப்பில் அர்த்தராத்திரியில் கார் ரிப்பேராகி கதவைத் தட்டுகிறார் மதுபாலா. தம்பி மட்டும் தனியாக. மனசு கேட்கலை. காரை சரி பண்ணி கொடுத்து அனுப்புகிறான். அழகின் வீச்சில் காசு வாங்க மறந்து விடுகிறான். சொப்பனத்தில் அவள் வந்து காதல் பல்லவி பாட, அவனோ “பாஞ்சு ருபைய்ய்ய்யா... பாரஹ் அணா..” என்று தரவேண்டிய அஞ்சே முக்கால் ரூபாய் பாக்கியை படுகிறான் சரணமாக.
‘Chalti Ka Naam Gadi’ என்ற அந்த 1954 படம் முழுக்க முழுக்க குபீர் காமெடி. தம்பியாக நடித்தவரும் பாடியவரும் கிஷோர் குமார்.
Kishore Kumar... Aug. 4. பிறந்த நாள்.
நடித்துக் கலக்கியது பல படங்கள் என்றால் பாடிக் கலக்கியது பல ஸ்கொயர் படங்கள்! அந்த Delicately distinct voice! கடவுளின் கொடை என்று சொல்வார்கள் அதை. எப்படி வாய்க்கப் பெற்றது என்பதற்கு அவர் அண்ணன் பிரபல நடிகர் அசோக் குமார் சொன்னது... சின்ன வயசில் ஒரு விபத்தில் கிஷோரின் பாதத்தில் அடி பட்டபோது ஒரு மாதமாக அழுதுகொண்டே இருந்தாராம். அதன் நல் விளைவு இது என்று.
வீட்டில் சும்மா K.S.Saigal பாட்டை அவர் போலப் பாடிக் கொண்டிருந்தார். அசோக்குமாரை பார்க்க வந்த S.D.பர்மன் காதில் விழ, நம் காதுக்கு வந்தது. முதல் பாடல் பாடியது தேவ் ஆனந்துக்குத் தான். படம் ‘Ziddi’ (1948).
ஆரம்பத்தில் அவர் தன்னைத் தவிர தேவ் ஆனந்துக்கு மட்டுமே பாடுவது என்றிருந்தாராம். ‘அடுத்த வீட்டுப் பெண்’ இந்தியில் வந்தது. அதில் நடித்தபோது ‘படத்தில்’ கதைப்படி அவர் சுனில் தத் என்ற நடிகருக்கு குரல் கொடுக்க வேண்டி வந்தது. அப்புறம்தான் ராஜேஷ் கன்னாவுக்கு ‘ஆராதனா’வில் பாடி அது சூபர் ஹிட் ஆகி... அனைத்து ஹீரோவுக்கும் அவர் குரல் ஓர் அணிகலன் ஆகியது ஹிஸ்டரி....
‘ஆராதனா’வில் பாடினாரோ இல்லையோ ஆராலும் அசைக்க முடியாத நம்பர் ஒன் இடத்தில் அடுத்த பதினேழு வருடம். 1970, 80-களின் ஹீரோஸ் வாய்ஸ் இவர்தான் என்றாயிற்று. மொத்த 2678 பாடல்களில், அதிகம் பாடியது ராஜேஷ் கன்னாவுக்கே (245). வெளிவராத அவர் பாடல் ஒன்று பதினைந்தரை லட்சத்துக்கு விற்றது என்றால் ஆச்சரியமில்லைதான்.
இத்தனைக்கும் முறைப்படி எந்த சங்கீதப் பயிற்சியும் எடுத்துக் கொள்ளாதவர். கற்றுக் கொண்டதெல்லாம் பர்மனிடம்தான். ஸைகால் மாதிரி பாடியவர், பின்னர் தனக்கொரு ஸ்டைலை ஏற்படுத்திக் கொண்டார். இன்று வரை அலுக்காமல் நாம் கேட்கும் அந்த கிஷோர் ஸ்டைல். தம்பியிடம் கற்றுக் கொண்ட yodelling தனி. ஆதர்ஷ நடிகர் Danny Kaye.
ஆரம்பத்தில் கிஷோருக்கே ஒன்றிரண்டு பாடல்களுக்கு ரஃபி குரல் கொடுத்திருக்கிறார் என்றால் ஆச்சரியம்.. '' 1959 படத்தில் சங்கர் ஜெய்கிஷன் இசையில் "Ajab Hai Daastan Teri..." பாடல் ஒன்று.
பாடிய பாடல்களில் சூபர் ஹிட் என்றால், ’என் சொப்பனத்தின் ராணி நீ எப்ப வருவே?’, அதாங்க, ”Mere Sapnon Ki Rani Kab Aayegi Tu..”, அதைத்தான் சொல்லுவாங்க. ஆனால் ’Mugaddar Ka Sikandar’-இல், லதா மங்கேஷ்கர் ”Salaam-E-Ishq Meri Jaan..” என்று சில வரி பாட, ‘மீதிப் பாடலை நான் பாடுகிறேன்..’ என்று ஆரம்பித்து, 15 வரி இடைவிடாமல் பாடுவார் பாருங்க கிஷோர், அதில் தெரியும் அந்தக் குரலுக்கேயான தனி இனிமையும் காந்தமும்!
அஷ்டாவதானி! நடிகர், பாடகர், டைரக்டர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர்.
‘The Proud Rebel’ படத்தைத் தழுவி இவர் எடுத்த ‘Door Gagan ki Chaon Mein’ (அதில் Allan Ladd தன் மகனோடு நடித்த மாதிரி இதில் தன் மகன் Amit Kumar உடன்.) தோல்வி அடைந்தாலும், சில மாறுதல்களுடன் 'ராமு'வாக வந்தபோது வெற்றி கண்டது.
மிகச் சிறந்த இசை அமைப்பாளரும் கூட. சான்று வேண்டுமா? கேட்டுப்பாருங்கள். சுலக்‌ஷனாவுடன் இவர் பாடிய “Bekaraar Dil....” படத்தில் பாடுவது அண்ணன். Haunting melody.
தேவ் ஆனந்துக்கு மட்டுமல்ல, ‘நாங்க ரெண்டு பேர்; ஆனா ஒரே வாய்ஸ்!’ என்று அமிதாப் சொல்லும் அளவுக்கு அவருக்கும் பொருத்தமா பாடுவார். சரி, அவருக்கு மிகப் பிடித்த அவர் பாட்டு? ‘Mili’ யில் வரும் “Badi Sooni Sooni Hai..”
தனிமை விரும்பி. தவிர்த்துவிடுவார் பார்ட்டிகளை. காசு பாக்கி வைக்கிறவங்களை கண்டாலே பிடிக்காது. வீட்டின் முன்னால் ‘Beware of Kishore’ என்று ஒரு முறை எழுதி வைக்கிற அளவுக்கு தமாஷ் பிரியர். வீட்டு மரங்களுக்கு பெயரிட்டுப் பேசும் அளவுக்கு இயற்கை நேசர். கஞ்சூஸ், கறார் என்பார்கள் தெரியாமல். சத்யஜித்ரே படத்தில் பாடியபோது காசு வாங்காததோடு படத்துக்கும் உதவினார்.
எனக்குப் பிடித்த அவர் பாடல்களில் நாலைந்தை சொல்லலாமென்றால் செலெக்ட் செய்ய நாலைந்து நாள் வேண்டியிருக்கே...

Monday, August 3, 2020

அழகும் நடிப்பும்...

‘Kaajal’ படத்தில் ஒரு துணைப் பாத்திரத்தில் வருவார் அந்த நடிகை. பத்மினிக்கும் அவருக்குமான காட்சிகளை பார்க்கும்போது (ரோஷமூட்டும் காட்சியில் இவர் சொல்லும் வசனம் ஒன்று பத்மினியின் காதுகளில் மட்டுமல்ல, பார்ப்போர் காதுகளிலும் ஒலித்துக் கொண்டே இருக்கும்) இணையான அழகும் நடிப்பும் உள்ள இவர் இப்படி இன்னும் பெரிய கதாநாயகி ஆகாமல் இருக்கிறார் என்று தோன்றிற்று. எண்ணி சில வருடங்களிலேயே most sought-after ஹீரோயின் ஆகிவிட்டார். திலிப் குமார், தேவானந்த் ஜோடியாக நடித்ததோடு ராஜேஷ் கன்னாவோடு பத்துப் படங்களில் most successful ஜோடியாக.
Mumtaj…. 
அவரின் திரை வாழ்க்கையை மூன்று பருவமாக பிரிக்கலாம். 1. சாந்தாராம் படங்கள் (Stree, Sehra) உட்பட பெரிய படங்களில் சிறிய வேடங்களில் நடித்தது... 2. பத்துப் பதினைந்து தாராசிங் படங்களில் ஹீரோயினாக வந்தது. 3. டாப் ஹீரோயினாக ஜொலித்தது.
நட்சத்திரம் ஆக்கிய படம் ‘Do Raaste’ துணை வேடம், சில காட்சிகள்தான் என்றாலும் நான்கு பாடல் காட்சிகள் அவருக்கு கொடுத்தார் Raj Khosla.
கலகலவென்று சிரிக்கும் அந்த innocent laughter.. சட்டென்று அகல விரியும் கண்கள்... பதினெட்டைத் தாண்ட மாட்டேன் என்று அடம் பிடிக்கும் முகம்... அவருக்கே என்று சில அடையாளங்கள்!
திலீப்குமாருடன் ‘மாந்தோப்பில் நின்றிருந்தேன்..’ இந்திப் பாடலுக்கு ‘ராம் அவர் ஷ்யாம்’ படத்தில் ஆடும்போதும் சரி, ’காஞ்சீரே.. காஞ்சீரே..’ என்று ‘ஹரே கிருஷ்ணா ஹரே ராமா’வில் தேவ் ஆனந்த் தேடும்போது ஆடைத் தொழிற்சாலைக்குள் ஒளிந்தோடும்போதும் சரி, அந்தப் பெரிய கதாநாயகர்களுடன் அழகாகக் காட்சியை பகிர்ந்து கொள்வார், Not to mention ‘பிரம்மச்சாரி’யில் ஷம்மி கபூருடன் ‘ஆஜ்கல் தேரே மேரே சாத்....’ என்ற அந்த அட்டகாச நடனம்!
ரிகார்டுகளில் ஒன்று ராஜேஷ் கன்னாவுடன் நடித்த எட்டுப் படங்களின் பிளாட்டினம் ஜூபிலி. நடிப்பில் கலக்கிய படம் அவருடன் ‘Aap Ki Kasam’ என்றால், முத்திரை பதித்த படம் சஞ்சீவ் குமாருடன் ‘Khilona’ (இந்தி எங்கிருந்தோ வந்தாள்). உச்சக் காட்சியில் ஞாபகம் இல்லையா, ஞாபகம் இல்லையா என்று ஒவ்வொன்றாகச் சொல்லி சஞ்சீவ்குமாரின் நினைவு நியூரான்களை ஆக்டிவேட் செய்ய பதைபதைப்புடன் கதறும் காட்சியில் ‘இதோ, இன்னொரு மீனாகுமாரி’ யாகியிருப்பார்(Filmfare Award). ‘அரங்கேற்றம்’, இந்தியில் அரங்கேற்றம் ஆனபோது (‘Aaina’), நடிப்புக்கு மற்றொரு நல்ல வாய்ப்பு.
பின்னி யெடுத்தது தேவ் ஆனந்தின் மனைவியாக ‘தேரே மேரே ஸப்னே’ யில். நடிகை ஹேமமாலினியுடன் பழகும் கணவனின் போட்டோ பார்த்து கோபத்தில் இருப்பார். கண்ணைக் கசக்கிக் கொண்டு அடுக்களையில். வீட்டுக்கு வரும் தேவ் அவள் பேச்சைப் பார்த்து, என்ன ஆச்சுன்னு கேட்டபடி அவளிடம் வர, அந்த சண்டைக்கிடையிலும், “ஷூவைப் போட்டுட்டு அடுக்களைக்குள்ளே வராதீங்க, ஆமா!”ன்னு கத்துவது ஓ, மறக்க முடியாத சீன்.

Saturday, August 1, 2020

சின்னக் குயில்...

சிறந்த பாடகிக்கான தேசிய விருதை அதிகமா எத்தனை தடவை ஒரே பாடகி வாங்கியிருக்காங்கன்னு கேட்டா ஆறுன்னும், ஆருன்னு கேட்டா சித்ரான்னும் பதில் சொல்லிடுவீங்க.
K. S. Chithra... சின்னக் குயில் சித்ரா.. 
அந்தக் குழைவுன்னு இருக்கலாம், அந்தத் தெளிவுன்னு இருக்கலாம், வெகு நேர்த்தின்னு இருக்கலாம்…soul touchingஆக இருக்கலாம். சொல்ற காரணங்கள் வேறுவேறா இருக்கலாம். ஆனா எல்லாருக்கும் அந்தக் குரல் பிடிக்கும்.
தமிழில் அவர் முதல் பாடல்.. 'பூஜைக்கேத்த பூவிது...' கேட்டதுமே புகழ்வதற்கேற்ற குரலிது என்று தெரிந்துவிட்டது. அடுத்த வருடம் சிந்து பைரவி பாடல்களுக்கு நேஷனல் அவார்டு கிடைக்க, புகழப்பட்டே விட்டது.
'நான் ஒரு சிந்து..' பாடலில் முதல் சரணத்தில் வயலின் எங்கே முடிகிறது, ப்ளூட் எங்கே ஆரம்பமாகிறது, சித்ரா எங்கே தொடங்குகிறார்... கண்டுபிடிப்பது கஷ்டம்தான். அடுத்த சரணத்தில் வீணை வந்துதான் அந்த வித்தியாசத்தை சற்றே எளிதாக்குகிறது.
மடியுமுன் கேட்க வேண்டிய 1000 பாடல்களில் ஒன்றாக ‘Guardian’ தேர்ந்தெடுத்த இவரின் ‘பம்பாய்’ பாடல்,எந்நாளும் நாம் பாடும். “கண்ணாளனே…”
ஓடை நீர் இலகளினூடே ஒழுகுவது போல சலசலக்கும் அந்த மலையாளப் பாடல். அவார்ட் பெற்ற “மஞ்சள் ப்ரசாதவும் நெற்றியில் சார்த்தி..” (‘Nakhakshathangal’) அடுத்த அவார்ட் வாங்கிய 'இந்து புஷ்பம் சூடிய ராத்திரி..' பிரபல இந்தி இசையமைப்பாளர் ரவி எழுதி இசையமைத்த மலையாளப்பாடலை, மன ஆற்றில் படகாக மிதந்து செல்லும் குரலில் பாடியிருப்பார். இந்தியில் பாடி நேஷனல் அவார்ட் வாங்கிய முதல் தென்னிந்தியப் பாடகியாக, இந்தியில் ‘Vir Sat’ படத்தில் அந்த ‘Payalen..’ பாடல். (இஞ்சி இடுப்பழகி..) How elegant! அத்தோடு நிற்காமல் ஃபிலிம்ஃபேர் அவார்டும் வாங்கிக் கொண்டது அது. ஒவ்வொரு பாடலுமே அழகு என்றாலும் 'ஒவ்வொரு பூக்களுமே..' ஒய்யார அழகு!
இளையராஜா இசையில் ‘பழசிராஜா’வின் ‘குன்றத்து கொன்றைக்கும்…’ மலையாளத்தில் பிலிம்பேர் அவார்ட் வாங்கியது, தமிழிலும் அழகாக பாடி இருப்பார். அதில் இரு வரி: ‘வரவேற்று உருகாதோ குலவையிட்டு கிளிகள் வழி நீள வயலில் தலை சாய்ந்து வெட்கி நிற்கும் ஒரு தமிழ் மகள் போல..’ இனிமையில் தோய்த்தெடுத்த தெளிவு... அல்லது தெளிவில் முக்குளித்த இனிமை என்றும் சொல்லலாம்.
இந்தப் பாட்டை இன்னும் இனிமைப் படுத்துகிறார், அந்தப் பாட்டை அழகாகப் பாடியிருக்கிறார் என்று வரிசையா சொல்ல ஆரம்பித்தால் இடத்துக்கு எங்கே போவது? சரி, இந்த ஒரு பாட்டு தான் கொஞ்சம் நல்ல வரலைன்னு சொல்லலாமா என்றால் நான் தேடிக்கொண்டிருக்கிறேன் நாலு நாளாக அப்படி ஒன்றை…
வெறும் பாட்டல்ல அவர் பாடுவது. ‘குழலூதும் கண்ணனுக்கு கேட்கும் குயில் பாடும் பாட்டு!’ என்று தொடங்கி அந்த குயிலாகவும் கூவும் அழகு குக்கூ.. குக்கூ…
ஆர். டி. பர்மனின் ஜாய்ஃபுல் பாட்டு. ‘ஹே மாமா ஹே மாமா..’ லேசில் யாரால் அத்தனை இலாவகமாக பாட முடியும்? ‘ஹே மாமா’வுக்கு முன் போடும் அந்த ஹா என்ற நொடிப்பு! (பூமழை பொழியுது)
‘கொட்டிக்கிடக்குது செல்வங்கள் பூமியிலே…’ பாடிய அவரது இளைய ராஜா பாடல்களும் கொட்டிக்கிடக்குது ஃபேவரைட் பட்டியலிலே. எண்ட 'குருவாயூரப்பா..' நான் எதைன்னு சொல்றது? வர்ணத்தை வாரியிறைத்த 'நின்னுக்கோரி வர்ணத்தை' சொல்லவா? ‘மீனம்மா மீனம்மா..’ பாடியவரின் குரல் தேனம்மா தேனம்மா என்றிடவா? ‘தூளியிலே ஆடவந்த..’ பாடவந்த இசை வானத்து மின்விளக்கு.. எனவா? லிஸ்ட் என்று வந்தால் ‘கல்யாணத் தேனிலா..’ இல்லாமலா? ‘கிழக்கு வாசலை’த் திறந்தால் ‘வந்ததே ஓ.. குங்குமம் தந்ததே..’ மனதில் வைக்கப் போய் மனதையே கரைத்து விட்ட அந்த இரண்டு நிமிட பாடல்: “வானத்தில் ஆடும் ஓர் நிலவு..’ (‘மனம் விரும்புதே உன்னை’)
‘சிறு கூட்டிலே உள்ள குயிலுக்கு ஒரு நூறு ஆசைன்னா அதை நூறு தடவை கேட்க நமக்கு ஆசை. சிறு குரலில்தான் என்ன ஒரு ஓசை! (பாண்டி நாட்டு தங்கம்) ‘உன் மனசுல பாட்டுதான் இருக்குது..’ பாடியவர் மனசுல பாட்டுதான் எப்பவும் இருக்குது போல! மனோ பாடி முடித்ததும் ‘குடகு மலை காற்றில் ஒரு..’ என்று சோகம் குரலை உடைக்க, இசை பிசகாமல், நல்கும்போது சட்டென்று பல்கும் உருக்கம்! (கரகாட்டக்காரன்)
ரகுமானின் ‘தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியிலே ஏழைப்பட்ட சாதிக்கொரு ஈரம் இருக்கு..' பாடலுக்கு ஈரம் சேர்த்தது அவர் குரல். (கிழக்கு சீமையிலே) ‘கண்ணாளனே..’ என்ன, ‘உயிரே..’ என்ன! ரகுமான் இசையில் அந்தக் குரல் உயரப் பறந்தது. ‘டூயட்’ டில் நம்மையும் ‘அஞ்சலி அஞ்சலி..’ என்று, இல்லை ‘அஞ்சேல் அஞ்சேல்..’ என்று அத்தனை உயரத்துக்கு எடுத்துச்சென்றது. ‘இந்திரா’வின் ‘தொடத்தொட…’ பாடப்பாட படி இறங்கிக் கொண்டே போகும் பல்லாங்குழி இசை.. ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் ‘எங்கே எனது கவிதை..’ சிலிர்க்க வைக்கும் அந்த கடைசி சரணம். ‘மலர்கள் கேட்டேன், மனமே தந்தனை..தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை…’ அமைதியாக அன்னத்தைப் போல நீந்தும். (ஓ காதல் கண்மணி)
‘சாம்ராட் அசோகன்’ படத்தின் தமிழாக்கத்தில் 'தாங்குமா கனாக்களே...' தாங்க முடியாத இனிமையுடன், அனு மாலிக் இசையில். ஆடிட்டோரியமே எழுந்து கைதட்டும் அந்த ‘நிலாவே வா..’ பாடல் (‘கோகுலத்தில் சீதை’) கங்கை அமரன் இசையில் ‘மழையின் துளியில் லயம் இருக்குது…’ பாடினால் ஒரு கலயம் நிறைய லயம் இருக்குது அதில்! ‘தத்தித்தோம்.. ‘ (அழகன்) பியானோ & ப்ளூட்டுடன் சேர்ந்து அழகாய் தத்தித் தத்தி வரும் பாடல்.. கீரவாணி இசையில். கர்நாடக சங்கீதம் பயின்றவர் ஆயிற்றே, கடைசி வரிகளில் விளாசி இருப்பார்.
‘கஸ்தூரி மான் குட்டியாம்…’ (எம்.எஸ்.வி)
‘பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா..’ (கார்த்திக் ராஜா)
‘யாரோ யாருக்குள் இங்கு யாரோ..’ (யுவன்)
‘மெதுவா மெதுவா…’ (சந்திரபோஸ்)
‘ஒரு காதல் தேவதை..’ (சங்கர் கணேஷ்)
‘திருடிய இதயத்தை திருப்பி கொடு…’ (பரணி)
‘ஐ லவ் யூ..’ (சிற்பி)
‘மனசுக்கு வயசு என்ன…’ (வித்யாசாகர்)
‘கண்ணுக்குள் நூறு நிலவா…’ (தேவேந்திரன்)
‘குயிலின் குக்கூ குக்கூ..’ (தாயன்பன்)
‘உள்ளம் உள்ளம்…’ (மனோஜ் க்யான்)
‘நூலு இல்ல ஊசியில்லை..’ (டி ராஜேந்தர்)
‘சேலை கட்டும் பெண்ணுக்கொரு…’ (ஹம்சலேகா)