Friday, May 15, 2026

பாட்டுக்கு பல ராகம்..


இவர்களின் வருகைக்குப் பிறகுதான் தமிழ் திரை ரசிகர்கள் இசையமைப்பாளரை கூர்ந்து கவனிக்கத் தொடங்கினார்கள் எனலாம்.
மூன்று நிமிட பாடலின் ஒவ்வொரு வினாடியையும் அலங்கரித்தார்கள். Orchestration -ஐ வேறு லெவலுக்கு எடுத்துப் போனார்கள்.
பாலும் பழமும், பாவ மன்னிப்பு, பாசமலர், பார்த்தால் பசி தீரும், ஆலயமணி, பாசம், நெஞ்சில் ஓர் ஆலயம், போலீஸ்காரன் மகள், வீரத்திருமகன், நெஞ்சம் மறப்பதில்லை, பணத்தோட்டம், பார் மகளே பார், காதலிக்க நேரமில்லை, கர்ணன், ஆண்டவன் கட்டளை, ஆயிரத்தில் ஒருவன், எங்கவீட்டுப்பிள்ளை, புதிய பறவை... திக்குமுக்காடி போனோம் தேன் பலாச்சுளை விருந்தில்!
மெல்லிசை மன்னர்கள்...
T. K. ராமமூர்த்தி. இன்று பிறந்த நாள்!
அப்பாவும் சரி தாத்தாவும் சரி திருச்சியில் பிரபல வயலினிஸ்ட். 14 வயதிலேயே இவரின் திறமையைப் பார்த்து தன்னுடன் சேர்த்துக் கொண்டார் இசை மேதை சி ஆர் சுப்பாராமன். மீதிக்கதை திரையறியும்.
இணைந்தளித்த பாடல்களை சொல்லலாமென்றால் இடம் எங்கே இருக்கிறது?
“தன்னந்தனியாக நான் வந்த போது..” இந்தப் பாடல் காதில் வந்தது 'சங்கமம்' படத்தில். கூடவே “ஒரு பாட்டுக்கு பல ராகம்..”
மறக்க முடியாத பாட்டு ஒன்றைத் தந்தார், ‘மறக்க முடியுமா?’ படத்தில். “காகித ஓடம்.. கடலலை மேலே.. போவது போலே.. மூவரும் போவோம்!” மூவருமா? நாமும்தான், அந்த இசையோடு இசைவோடு!
அத்தனை பாடல்களுமே அருமையாக இருந்தது ‘நான்’ படத்தில்....அந்த அசத்தல் "அம்மனோ சாமியோ..." ஒவ்வொன்றாய்ச் சொல்வதற்குப் "போதுமோ இந்த இடம்.."?
"சந்தனக் குடத்துக்குள்ளே பந்துகள் உருண்டு வந்தது" போல் வந்தன பாடல்கள் ‘தங்கச் சுரங்கத்தி’ல்.
“காதலன் வந்தான்.. கண்வழி சென்றான்.. கண்களை மூடு.. பைங்கிளியே..” மெல்ல மெல்ல இன்னும் இன்னும் இறங்கிக் கொண்டே போகும் இனிமை -‘மூன்றெழுத்து’
“விழியால் காதல் கடிதம்.. வரைந்தாள் ஆசை அமுதம்..” (தேன்மழை), “எந்த எந்த நெஞ்சுக்குள்ளே என்ன மோகமோ?” (மதராஸ் டு பாண்டிச்சேரி), “நாடகமே இந்த உலகம்.. ஆடுவதோ பொம்மலாட்டம்..” (சாது மிரண்டால்), “நிச்சயம் நானே.. நேச்சுரல் பியூட்டி..” (சோப்பு சீப்பு கண்ணாடி.) ‘’உன் மேலே கொண்ட ஆசை.. உத்தமியே மெத்த உண்டு..” (காதல் ஜோதி) “கோயில் என்பதும் ஆலயமே.. குடும்பம் என்பதும் ஆலயமே..” (ஆலயம்)...
கர்நாடக இசையை இவர் கையிலெடுத்தால் அதைவிட இனிய "வசந்த காலம் வருமோ...?" ('மறக்க முடியுமா.')
“சாட்டைக் கையில் கொண்டு, ஓங்கக் கண்டு, காளை ரெண்டு, ஓடுது பாரு, சீறுது பாரு, பாயுது பாரு, பறக்குது பாரு, எவ்வுது பாரு, தவ்வுது பாரு, இப்படி அப்படி தாவுது பாரு, ஓடுறா ராஜா, ஓடுறா ராஜா, ஓடுறா, ஓடுறா, ஓடுறா ராஜா…” என்ற பல்லவியை ஒரே மூச்சில் ஒரே வீச்சில் சீர்காழி கோவிந்தராஜன் பாடுவாரே, ரவிச்சந்திரன் மாட்டு வண்டி ஓட்டிக்கொண்டு வரும் பாடலை? அது ‘காதல் ஜோதி’யில் இவரின் சொடுக்கும் இசையில்...
இவரது பின்னணி இசையின் முழு வீச்சையும் ‘தங்கச் சுரங்கம்’ படத்தில் கேட்கலாம். வில்லனை (தன் தந்தை) பிடிக்கப்போய் ஏமாந்து திரும்பும் சிவாஜி வீட்டுக்குள் நுழையும் போது சந்தேகம் கண்ணில் கொப்பளிக்க, தாயை சந்திக்கும் காட்சியில் ஒரு உச்சகட்ட பின்னணி இசையை வயலின்களால் இழைத்திருப்பார். காமிராவும் அந்த இசையும் சிவாஜியின் புருவங்களும் சுழன்று சுழன்று மேலெழும்பும் ஆக்ரோஷம்!
“கண் போன போக்கிலே கால் போகலாமா..” (பணம் படைத்தவன்) பாடலில் அமைத்திருக்கும் அந்த அற்புத வயலின் இசைக்கோர்ப்பை இவரது திறமைக்கு எடுத்துக்காட்டாக சொல்வார்கள்.

Tuesday, May 12, 2026

வயிறு குலு சிரிப்’ படம்...


தான் பூட்டிக்கொண்டிருக்கும் டினோஸர் எலும்புக்கூட்டைப் பூர்த்தியாக்கத் தேவைப்படும் ஒரே ஒரு எலும்புத் துண்டுக்காக அலைந்து கொண்டிருக்கும் புதைபடிவ ஆய்வாளர் டேவிட் (Cary Grant). தங்கள் மியூசியத்திற்கு ஃபண்ட் வாங்க அவன் எலிசபெத் என்ற பணக்காரியின் வக்கீலை இம்ப்ரஸ் செய்ய வேண்டும்.
அவரை சந்திக்கப்போன இடத்தில் குறுக்கிட்டுத் தொந்தரவு செய்த சூஸனோடு (Katharine Hepburn) சண்டைகள்.
மனசில் காதல் இருந்தால் அதை இப்படி சண்டை போட்டு வெளிப்படுத்துவார்கள் என்று ஒரு சைக்கியாட்ரிஸ்ட் அவளுக்கு சொல்ல, அவள் அதை காதல் என்று எடுத்துக் கொண்டு விடுகிறாள். தன் அத்தைக்காக அனுப்பி வைக்கப்பட்ட சிறுத்தைக் குட்டி ‘பேபி’யைப் பார்த்துக்க அவன் ஹெல்பைக் கேட்கிறாள்.
வந்தவனை நைசாக அழைத்துக்கொண்டு தன் அத்தையின் பண்ணை வீட்டுக்குப் போகிறாள். அவன் தன்னை விட்டுப் போய் விடாமல் இருக்க, அவன் குளிக்கும்போது டிரஸ்ஸை எடுத்து லாண்டரிக்கு அனுப்பி வைக்கிற அளவுக்கு போய்விடுகிறாள். ஊரிலிருந்து அத்தை, அட அவள்தான் அந்த எலிசபெத் என்ற பணக்காரி! வந்து பார்க்கும்போது இவன் அவளின் கவுனுடன்! என்ன ஒரு இம்பிரஷன்!
தேடியலைந்த கடைசித் துண்டு டினோசர் எலும்பு கிடைக்கிறது அவனுக்கு. ஆனால் அத்தை வளர்க்கிற நாய் அதை லவட்டிக் கொண்டு போய் எங்கோ புதைத்து விடுகிறது. சிரத்தையுடன் அதை தாஜா பண்ணி, ஒளித்து வைத்த இடம் தேடுவதற்குள் சிறுத்தையுடன் அது எங்கோ ஓடிவிடுகிறது.
காணாமல் போன பேபியைத் தேடி அலையும் ஜோடி... ஊரில் முகாமிட்டிருக்கும் சர்க்கஸ் கம்பெனியின் சிறுத்தை குட்டியை பேபி என்று நினைத்து கூட்டைத் திறந்து விட்டுவிட, ரெண்டு பேரும் ஜெயிலில்.
ஆக அந்த ஒரு நாள் அமர்க்களத்தில் டேவிட்டுக்கு அவள்மேல் காதல் வந்துவிடுகிறது…
‘Bringing up Baby'.... டைரக்டர் Howard Hawks -இன் காமெடி கிளாஸிக்...
சீரியஸ் ரோல்களில் நடிக்கும் Katharine Hepburn கலக்கிய ‘வயிறு குலு சிரிப்’ படம். இன்று அவர் பிறந்த நாள்!
தொடர் ஆக் ஷன் காமெடியாக இப்படித் துள்ளிக் குதித்துச் செல்லும் படம். கேரி க்ராண்ட் கிட்டத்தட்ட டி ஆர் ராமச்சந்திரன் மாதிரி அசடு வழிய, கேதரின் பின்னே கேட்கவே வேண்டாம், சாவித்திரி மாதிரி சளைக்காமல் அசர வைப்பார்...

ஹாலிவுட்டின் சாவித்திரி...


நாலைந்து படம் நன்றாக நடித்து அதில் ஒன்றுக்கு ஆஸ்கார் அவார்டும் வாங்கினாலும், எதிர்பார்க்கப்படும் எந்த படோபடோபமும் அந்த நடிகையிடம் இல்லை. இமேஜ் பில்டிங் சுத்தம். நிருபர்களைக் கண்டால் ஓட்டம் (ஒரு முறை விமான விசிறியில் மாட்டிக் கொள்ளப் பார்த்தாராம்) பிராட்வே நாடக மேடைக்கு திரும்பினால் சரியான வரவேற்பு இல்லை. திரும்ப ஹாலிவுட்டுக்கு போனால் கிடைத்த படங்கள் ஓடவில்லை. ‘பாக்ஸ் ஆஃபீஸ் பாய்சன்’ என்றனர் வழக்கம்போல.
மனம் தளரவில்லை. மறுபடியும் மேடைக்கு வந்தார். நடித்த ‘The Philadelphia Story’ சூப்பர் ஹிட். அதன் ரைட்ஸ் வாங்கி, ரைட்டான டைரக்டரை அமர்த்தி, கேரி க்ராண்டையும் ஜேம்ஸ் ஸ்டீவர்டையும் போட்டு தானே தயாரித்தார் படமாக. அதுவும் சூப்பர் ஹிட். நட்சத்திரமானார்.
Katharine Hepburn.. (1907 - 2003) ஹாலிவுட்டின் சாவித்திரி… இன்று பிறந்த நாள்!
12 முறை, ஆமாம், 12 முறை நாமினேஷன் பெற்று (ஒரு தடவை கூட விழாவுக்கு போகவில்லை) அதில் ‘நான்கு முறை’ ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஒரே நடிகை. கின்னஸ் ரிகார்ட் அது.
ஸ்பென்சர் டிரேசியுடன் நல்ல ராசி. ஒன்பது படங்களில் ஜோடியாக. கடைசிப் படம் மிகப் பிரபலம். ‘Guess Who’s Coming to Dinner?’ மற்றொன்று ‘Adam’s Rib.’ கணவரை கொலை செய்ய முயன்றதாக அந்தப் பெண் மீது வழக்கு. போலீஸ் தரப்பில் வாதாடும் வக்கீல் பானர். ஆனால் அந்தப் பெண்ணுக்காக ஆஜராகிறார் பானரின் மனைவி அமெண்டா. இருவருக்கும் சரியான நடிப்பு போட்டி.
உறுதி கொண்ட பெண் காரக்டர்களை சித்தரிப்பதில் விற்பன்னரான காதரின், கேரி க்ராண்டுடன் நடித்த சிரியோ சிரி படத்தைப் பற்றி (‘Bringing up Baby’) வேறொரு நாளில் எழுதியிருந்தேன்.
எண்டர்டெய்ன்மெண்ட் வீக்லி 1999 இல் நடத்திய சிறந்த கிளாஸிக் நடிகை போட்டியில் மற்றொரு ஹெபர்னை (Audrey Hepburn) விளிம்பில் வென்றவர்.
‘எந்தக் கலை ஆனாலும் சரி அதில் உயரத்தில் இருப்பவர்கள் தாங்கள் மேலே இருப்பது தங்கள் திறமையினாலா அல்லது அதிர்ஷ்டத்தினாலா என்று ரகசியமாக வியந்து கொண்டிருப்பார்கள், அவர்களுக்கு நேரம் இருந்தால்,’ என்று நினைக்கும் இவர் சொல்வது, ‘கஷ்டப்படுவது எத்தனை சுவையானது என்பதைப் புரிந்து கொள்ளும் யோகம் எல்லாருக்கும் வாய்ப்பதில்லை.’
உற்சாகமூட்டும் இவர் வார்த்தைகள்: ‘சில சமயம் வாழ்க்கை கொடூரமான சோகமாக இருக்கலாம். எனக்கும் இருந்திருக்கிறது. ஆனால் உங்களுக்கு என்ன நேர்ந்தாலும் சற்றே நகைச்சுவையுடன் எதிர்கொள்ளுங்கள். இறுதியில் பார்த்தால் வாழ்வில் நீங்கள் சிரிக்க மறந்து விடக்கூடாது என்பதுதான் முக்கியம்.’
‘உங்களுக்குப் பிடித்த விஷயங்களை செய்யுங்கள், குறைந்தபட்சம் ஒரே ஒரு நபராவது திருப்தியுடன் இருப்பார்.’
சொன்னாரே ஒன்று தமாஷாக: ‘Life is hard. After all, it kills you.’