Thursday, June 11, 2026

மூன்று மொழிகளில்...


1952. அந்தப் படத்தின் டைரக்டருக்கு கடைசி அசிஸ்டன்டாக வந்து சேர்ந்தார் அவர். கதாநாயக நடிகருக்கு நெருங்கிய நண்பரானார். 13 வருடங்களுக்கு பின் இவரை வைத்து ஒரு பிரமாண்ட படத்தை தான் டைரக்ட் செய்வோம் என்று அவருக்கும், தனக்கு ஒரு வித்தியாசமான படத்தைத் தரப்போகிறார் அவர் என்று இவருக்கும் அப்போது தெரியாது. ‘அன்பே வா’வென்று வரவேற்றார்கள் ரசிகர்கள் அந்த படத்தை. அந்த டைரக்டர்...
A. C..திருலோகசந்தர். இன்று பிறந்த நாள்.
போரில் குண்டடிபட்ட ஜெமினியை ஐம்பது மைல் சுமந்து காப்பாற்றிவிட்டு, தான் சரணடையும் சிவாஜி, பிற்பாடு அவர் குடும்பத்தையும் சுமக்கிறார். அதற்காகத் தன் காதலையும் வாழ்க்கையையும் தியாகம் செய்யக்கூட தயாராகிறார். யாராலும் மறக்க முடியாத கதையைப் ‘பார்த்ததில்’ நம் கதைப் ‘பசி தீர்ந்தது’. ஆம், அவர் எழுதிய கதைதான் அது. அதற்கு முன்பே அவர் ‘விஜயபுரி வீரன்’ கதையை கொடுத்திருந்தார் சிட்டாடல் ஜோசப் தளியத்துக்கு.
முதல் டைரக்‌ஷன் ‘வீரத்திருமகனை’யே வித்தியாசமான கோணங்களில் படமாக்கினார் திரிலோக். S.பாலச்சந்தரிடம் பயின்றவர்ஆயிற்றே? தடாகத்தில் மிதக்கும் தாமரைப்பூக்களில் சச்சுவும் தோழிகளும் ஆடும் அந்த நடனத்தை, நீரில் அரை அடி மூழ்கி மிதக்கும் மரத்தில் அவற்றை அமைத்து, அற்புதமாக படமாக்கி இருந்தார்க்கள்.
நடிப்பின் டிக்ஷனரியை மூன்று மொழிகளில் வெளியிட அவருக்குத்தான் வாய்ப்புக் கிடைத்தது. பிரமாதமாகப் பிரிண்ட் போட்டுக் கொடுத்துவிட்டார். ஆம், ‘தெய்வமகன்’. சத்தான சுமார் 10 காட்சிகளில் படத்தை முத்தாகக் கொடுத்துவிட்டார் இந்த வித்தகர். ஆஸ்கார் பிறமொழி அவார்டுக்கு முதல் தென்னிந்திய entry!
சுமார் 25 படங்கள் சிவாஜியை இயக்கினார். ‘எங்கிருந்தோ வந்தாள்’ படத்தை வேறு யார் இவ்வளவு கம்பீரமாக தந்திருக்க முடியும்?
Subtle humour ஒன்று இவர் காட்சிகளில் இழையோடும். ‘தங்கை’ படத்தில் தாராளமாகப் பார்க்கலாம் அதை. அதில் ACTION ஹீரோவாக சிவாஜியை மாற்றினார் A.C.T.
'நானும் ஒரு பெண் படத்தில் இரவில் யாருக்கும் தெரியாமல் டயாபட்டிக் ரங்காராவ் இனிப்பு சாப்பிட வரும் போது, மருமகள் விஜயகுமாரி மடக்கி அந்த இனிப்பை வார்த்தையில் கொடுக்கும்போது நெகிழ்வையும், அழகின்மையால் புறக்கணிக்கப்பட்ட தெய்வ மகன் சிவாஜி, தன் அழகு அன்னையைத் தூர இருந்து, பார்த்து வணங்கும் போது உருக்கத்தையும் வினாடிகளுக்குள் நம்மிடம் பிறப்பித்த திறமைசாலி! எல்லாமே வித விதமான படங்கள்! 'ராமு'வும் 'பாபு'வும் ஒரு ரகமென்றால் 'இரு மலர்களு'ம் 'அவன்தான் மனிதனு'ம் மற்றொரு. 'தெய்வமகனு'ம் 'எங்கிருந்தோ வந்தாளு'ம்… 'எங்க மாமா'வும் 'அன்பளிப்பு'ம்… 'அதே கண்களு'ம் 'என் தம்பி'யும்… 'பைலட் பிரேம்நாத்'தும் 'டாக்டர் சிவா'வும்…

Sunday, June 7, 2026

அவரவருக்கென ஒரு பொய்கை...



எங்கோ ஒரு சமுத்திரத்தில் எல்லாவற்றையும் தேக்கி வைத்துக்கொண்டு ஒவ்வொருவருக்கும் அளித்துக் கொண்டிருப்பதை விட, அவரவருக்கென ஒரு பொய்கையை அமைத்துத் தந்தால் எத்தனை நல்லாயிருக்கும் என்று எங்கோ ஒருவர் யோசித்தார் . அதன் பலன் தான் இப்போது நீங்கள் இதைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
www… அந்த மூன்று டபுள்யூக்களை உங்கள் முன்னம் வைத்தவர்…கொண்டாட வேண்டாமா அவரை?
Tim Berners-Lee… இன்று பிறந்த நாள்!
1980. ஜெனீவாவில் CERN-இல் (World’s Largest Particle Physics Lab) பணியாற்றிக் கொண்டிருந்தார் அந்த கோடிங் மன்னர். தகவல்களை ஒன்றுக்கொன்று தொடர்புள்ள பைல்களில் கோர்க்க முயன்றதில் hypertext என்றொரு ப்ரோக்ராமை அமைத்தார். பின்னர் அதையே இன்னும் விரிவாக.. கம்ப்யூட்டர்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ளவும், அறிஞர்கள் அளிக்கும் தகவல்களை ஆர்வலர்கள் எங்கிருந்தும் பெற்றுக் கொள்ளவும் வழி தேடியதில், இன்டர்நெட்டை இணைத்து, பேர் சொல்லும் தளம் (DNS) சேர்த்துப் பின்னிய வலைதான் அந்த 3w. அந்தப் பத்து வருட உழைப்பில் உருவானதுதான் உலகளாவிய வலை. முதல் வெப்சைட் info.cern.ch
முக்கியத்திலும் முக்கிய விஷயம் எந்த ராயல்டியும் எடுத்துக்கொள்ளாமல் எல்லோருக்கும் இலவசமாகக் கிடைக்கச் செய்ததுதான். ஆனால் ஒரு ஆகஸ்ட் நாளில் தன் கண்டுபிடிப்பை வெளியிட்டபோது யாரும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லையாம். (எப்போதுதான் அலட்டிக் கொண்டாடினார்கள் அறிஞர்களை?)
பின்னர்... டைம் பத்திரிகையின் உலகின் 100 மிக முக்கிய மனிதர்கள் லிஸ்டில் இடம் பெற்றுக்கொண்டார் அவர். உலகை உருவாக்கிய 80 தருணங்களின் பட்டியலில் முதலாவது இடம் பெற்றுக் கொண்டது அந்த நிகழ்வு.
2012 ஒலிம்பிக்ஸில் 'This is for every one' என்று அவர் ட்வீட் செய்ய உட்கார்ந்திருந்தவர்களின் ஒவ்வொரு நாற்காலியிலும் ஒளிர்ந்தது அது! இன்னும் தெரிந்துகொள்ள அவர் புத்தகம் ‘Weaving the Web’ படிக்கலாம்.
இவர் ஒரு ‘ferroequinologist’ என்றால் சட்டென்று புரிந்து கொள்வீர்கள், ‘ரயில் ஆர்வலர்’ என்றால் சிரமமாயிருந்தால்! சின்ன வயதில் ரயில் மாடல்களை வைத்து விளையாடும்போது எலெக்ட்ரானிக்ஸ் கற்றுக் கொண்டாராக்கும்!
சர் பட்டம் தவிர அவர் பெற்ற பல பரிசுகளில் ஒன்று கம்ப்யூட்டிங்கின் நோபல் பரிசு எனப்படும் AM Turing Award.

Monday, June 1, 2026

இன்னும் நல்ல...


‘THE BIG COUNTRY’
"இன்னும் நல்ல பண்ணுங்க," என்று மட்டுமே சொல்வாராம் டைரக்டர் வில்லியம் வைலர். ஆனா எப்படின்னு சொல்லமாட்டார். ரீடேக் எடுப்பதில் புகழ் பெற்றவர். டைரக்‌ஷனிலும்தான்! ‘பென்ஹர்' டைரக்டர் ஆயிற்றே?
இதனால் நடிகர்கள் பட்ட பாடு! ஹீரோ கிரிகரி பெக் தினம் அவரோடு சண்டைதான். அப்புறம் மூணு வருஷம் அவர் பக்கமே போகவில்லையாம் பெக்.
ஆனால் உருவானதோ ஒரு அருமையான கௌபாய் படம்!. ‘THE BIG COUNTRY' மிகச் சிறந்த 500 படங்களில் 187 ஆவதாக தேர்வானது.
இரண்டு கூட்டங்களுக்கிடையே பகை. அவர்களின் கால்நடைகளுக்கான தண்ணீர் தரும் நதிக்கரை ஒரு டீச்சருக்கு சொந்தம். அவளைப் பயமுறுத்தும் வில்லன். பாதுகாக்க விழையும் ஹீரோ என்று படிப்படியாக பில்ட் அப் ஆகும் திரைக்கதை... டுமீல் டுமீலிலிருந்து கௌபாய் படங்கள் கதைக்கு நகர வித்திட்ட படம்.
பேச்சில் அதிகம் காட்டாமல் பேசாத இடங்களில் கிரிகரி பெக் காட்டும் உணர்வு முக பாவனைகள் அலாதி.