மூன்று நிமிட பாடலின் ஒவ்வொரு வினாடியையும் அலங்கரித்தார்கள். Orchestration -ஐ வேறு லெவலுக்கு எடுத்துப் போனார்கள்.
பாலும் பழமும், பாவ மன்னிப்பு, பாசமலர், பார்த்தால் பசி தீரும், ஆலயமணி, பாசம், நெஞ்சில் ஓர் ஆலயம், போலீஸ்காரன் மகள், வீரத்திருமகன், நெஞ்சம் மறப்பதில்லை, பணத்தோட்டம், பார் மகளே பார், காதலிக்க நேரமில்லை, கர்ணன், ஆண்டவன் கட்டளை, ஆயிரத்தில் ஒருவன், எங்கவீட்டுப்பிள்ளை, புதிய பறவை... திக்குமுக்காடி போனோம் தேன் பலாச்சுளை விருந்தில்!
மெல்லிசை மன்னர்கள்...
T. K. ராமமூர்த்தி. இன்று பிறந்த நாள்!
அப்பாவும் சரி தாத்தாவும் சரி திருச்சியில் பிரபல வயலினிஸ்ட். 14 வயதிலேயே இவரின் திறமையைப் பார்த்து தன்னுடன் சேர்த்துக் கொண்டார் இசை மேதை சி ஆர் சுப்பாராமன். மீதிக்கதை திரையறியும்.
இணைந்தளித்த பாடல்களை சொல்லலாமென்றால் இடம் எங்கே இருக்கிறது?
“தன்னந்தனியாக நான் வந்த போது..” இந்தப் பாடல் காதில் வந்தது 'சங்கமம்' படத்தில். கூடவே “ஒரு பாட்டுக்கு பல ராகம்..”
மறக்க முடியாத பாட்டு ஒன்றைத் தந்தார், ‘மறக்க முடியுமா?’ படத்தில். “காகித ஓடம்.. கடலலை மேலே.. போவது போலே.. மூவரும் போவோம்!” மூவருமா? நாமும்தான், அந்த இசையோடு இசைவோடு!
அத்தனை பாடல்களுமே அருமையாக இருந்தது ‘நான்’ படத்தில்....அந்த அசத்தல் "அம்மனோ சாமியோ..." ஒவ்வொன்றாய்ச் சொல்வதற்குப் "போதுமோ இந்த இடம்.."?
"சந்தனக் குடத்துக்குள்ளே பந்துகள் உருண்டு வந்தது" போல் வந்தன பாடல்கள் ‘தங்கச் சுரங்கத்தி’ல்.
“காதலன் வந்தான்.. கண்வழி சென்றான்.. கண்களை மூடு.. பைங்கிளியே..” மெல்ல மெல்ல இன்னும் இன்னும் இறங்கிக் கொண்டே போகும் இனிமை -‘மூன்றெழுத்து’
“விழியால் காதல் கடிதம்.. வரைந்தாள் ஆசை அமுதம்..” (தேன்மழை), “எந்த எந்த நெஞ்சுக்குள்ளே என்ன மோகமோ?” (மதராஸ் டு பாண்டிச்சேரி), “நாடகமே இந்த உலகம்.. ஆடுவதோ பொம்மலாட்டம்..” (சாது மிரண்டால்), “நிச்சயம் நானே.. நேச்சுரல் பியூட்டி..” (சோப்பு சீப்பு கண்ணாடி.) ‘’உன் மேலே கொண்ட ஆசை.. உத்தமியே மெத்த உண்டு..” (காதல் ஜோதி) “கோயில் என்பதும் ஆலயமே.. குடும்பம் என்பதும் ஆலயமே..” (ஆலயம்)...
கர்நாடக இசையை இவர் கையிலெடுத்தால் அதைவிட இனிய "வசந்த காலம் வருமோ...?" ('மறக்க முடியுமா.')
“சாட்டைக் கையில் கொண்டு, ஓங்கக் கண்டு, காளை ரெண்டு, ஓடுது பாரு, சீறுது பாரு, பாயுது பாரு, பறக்குது பாரு, எவ்வுது பாரு, தவ்வுது பாரு, இப்படி அப்படி தாவுது பாரு, ஓடுறா ராஜா, ஓடுறா ராஜா, ஓடுறா, ஓடுறா, ஓடுறா ராஜா…” என்ற பல்லவியை ஒரே மூச்சில் ஒரே வீச்சில் சீர்காழி கோவிந்தராஜன் பாடுவாரே, ரவிச்சந்திரன் மாட்டு வண்டி ஓட்டிக்கொண்டு வரும் பாடலை? அது ‘காதல் ஜோதி’யில் இவரின் சொடுக்கும் இசையில்...
இவரது பின்னணி இசையின் முழு வீச்சையும் ‘தங்கச் சுரங்கம்’ படத்தில் கேட்கலாம். வில்லனை (தன் தந்தை) பிடிக்கப்போய் ஏமாந்து திரும்பும் சிவாஜி வீட்டுக்குள் நுழையும் போது சந்தேகம் கண்ணில் கொப்பளிக்க, தாயை சந்திக்கும் காட்சியில் ஒரு உச்சகட்ட பின்னணி இசையை வயலின்களால் இழைத்திருப்பார். காமிராவும் அந்த இசையும் சிவாஜியின் புருவங்களும் சுழன்று சுழன்று மேலெழும்பும் ஆக்ரோஷம்!
“கண் போன போக்கிலே கால் போகலாமா..” (பணம் படைத்தவன்) பாடலில் அமைத்திருக்கும் அந்த அற்புத வயலின் இசைக்கோர்ப்பை இவரது திறமைக்கு எடுத்துக்காட்டாக சொல்வார்கள்.


