1952. அந்தப் படத்தின் டைரக்டருக்கு கடைசி அசிஸ்டன்டாக வந்து சேர்ந்தார் அவர். கதாநாயக நடிகருக்கு நெருங்கிய நண்பரானார். 13 வருடங்களுக்கு பின் இவரை வைத்து ஒரு பிரமாண்ட படத்தை தான் டைரக்ட் செய்வோம் என்று அவருக்கும், தனக்கு ஒரு வித்தியாசமான படத்தைத் தரப்போகிறார் அவர் என்று இவருக்கும் அப்போது தெரியாது. ‘அன்பே வா’வென்று வரவேற்றார்கள் ரசிகர்கள் அந்த படத்தை. அந்த டைரக்டர்...
A. C..திருலோகசந்தர். இன்று பிறந்த நாள்.
போரில் குண்டடிபட்ட ஜெமினியை ஐம்பது மைல் சுமந்து காப்பாற்றிவிட்டு, தான் சரணடையும் சிவாஜி, பிற்பாடு அவர் குடும்பத்தையும் சுமக்கிறார். அதற்காகத் தன் காதலையும் வாழ்க்கையையும் தியாகம் செய்யக்கூட தயாராகிறார். யாராலும் மறக்க முடியாத கதையைப் ‘பார்த்ததில்’ நம் கதைப் ‘பசி தீர்ந்தது’. ஆம், அவர் எழுதிய கதைதான் அது. அதற்கு முன்பே அவர் ‘விஜயபுரி வீரன்’ கதையை கொடுத்திருந்தார் சிட்டாடல் ஜோசப் தளியத்துக்கு.
முதல் டைரக்ஷன் ‘வீரத்திருமகனை’யே வித்தியாசமான கோணங்களில் படமாக்கினார் திரிலோக். S.பாலச்சந்தரிடம் பயின்றவர்ஆயிற்றே? தடாகத்தில் மிதக்கும் தாமரைப்பூக்களில் சச்சுவும் தோழிகளும் ஆடும் அந்த நடனத்தை, நீரில் அரை அடி மூழ்கி மிதக்கும் மரத்தில் அவற்றை அமைத்து, அற்புதமாக படமாக்கி இருந்தார்க்கள்.
நடிப்பின் டிக்ஷனரியை மூன்று மொழிகளில் வெளியிட அவருக்குத்தான் வாய்ப்புக் கிடைத்தது. பிரமாதமாகப் பிரிண்ட் போட்டுக் கொடுத்துவிட்டார். ஆம், ‘தெய்வமகன்’. சத்தான சுமார் 10 காட்சிகளில் படத்தை முத்தாகக் கொடுத்துவிட்டார் இந்த வித்தகர். ஆஸ்கார் பிறமொழி அவார்டுக்கு முதல் தென்னிந்திய entry!
சுமார் 25 படங்கள் சிவாஜியை இயக்கினார். ‘எங்கிருந்தோ வந்தாள்’ படத்தை வேறு யார் இவ்வளவு கம்பீரமாக தந்திருக்க முடியும்?
Subtle humour ஒன்று இவர் காட்சிகளில் இழையோடும். ‘தங்கை’ படத்தில் தாராளமாகப் பார்க்கலாம் அதை. அதில் ACTION ஹீரோவாக சிவாஜியை மாற்றினார் A.C.T.
'நானும் ஒரு பெண் படத்தில் இரவில் யாருக்கும் தெரியாமல் டயாபட்டிக் ரங்காராவ் இனிப்பு சாப்பிட வரும் போது, மருமகள் விஜயகுமாரி மடக்கி அந்த இனிப்பை வார்த்தையில் கொடுக்கும்போது நெகிழ்வையும், அழகின்மையால் புறக்கணிக்கப்பட்ட தெய்வ மகன் சிவாஜி, தன் அழகு அன்னையைத் தூர இருந்து, பார்த்து வணங்கும் போது உருக்கத்தையும் வினாடிகளுக்குள் நம்மிடம் பிறப்பித்த திறமைசாலி! எல்லாமே வித விதமான படங்கள்! 'ராமு'வும் 'பாபு'வும் ஒரு ரகமென்றால் 'இரு மலர்களு'ம் 'அவன்தான் மனிதனு'ம் மற்றொரு. 'தெய்வமகனு'ம் 'எங்கிருந்தோ வந்தாளு'ம்… 'எங்க மாமா'வும் 'அன்பளிப்பு'ம்… 'அதே கண்களு'ம் 'என் தம்பி'யும்… 'பைலட் பிரேம்நாத்'தும் 'டாக்டர் சிவா'வும்…



