அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அந்த மெயிலையே வெறித்தான். அப்பா என்ன இப்படிப் பண்ணிட்டாரு?
பிரக்யா முதியோர் இல்லத்திலிருந்து வந்திருந்தது அந்தக் கடிதம். ‘... உங்கள் தந்தை ரவிகாந்தன் தன் மெம்பர்ஷிப்பை கான்சல் செய்துவிட்டார். ஆகவே ஆகஸ்ட் ஒன்றிலிருந்து நீங்கள் மாதப் பணம் அனுப்ப வேண்டியதில்லை.’
“சரிதான், பழையபடி இங்கே வரப் போறாரு…” சண்டைக்கு தயாரானாள் ஜமுனா.
“வெய்ட். இங்கே வர்றதானா, கேட்காமல் அங்கே நின்னிருக்க மாட்டாரு.” ஜாக்கிரதையாக ‘உன்னைக் கேட்காமல்’ என்று சொல்வதைத் தவிர்த்தான்.
“போன் பண்ணுங்க… கேளுங்க மானேஜரை.” ஆவல், மாதம் 15000 மிச்சமாவதை கன்ஃபர்ம் செய்ய.
பண்ணினான். ஓனரே போனை எடுத்தார். “ஆமாங்க. நிறுத்திட்டாரு.”
“எங்கே போனாரு?”
“எங்கே போனாரா? அதெல்லாம் ஒண்ணும் சொல்ல வேணாம்னு சொல்லிட்டாரு. ‘தட்ஸ் ஆல் தேர்ஸ் அபவுட் இட், யூ கேன் ஃபர்கெட் த ப்ராப்ளம்’னு மட்டும் சொல்லச் சொன்னாரு.”
அவனுக்கு நினைவு வந்தது. அப்பா அடிக்கடி சொல்லும் வாக்கியம். அவன் ஸ்கூல் டேய்ஸிலிருந்தே கேட்டது.
அந்த நாட்கள்… அவரின் டாண் டாண் வாக்கியங்களை அக்கம் பக்கத்தில் வியக்காதவர் இல்லை.
விச்சு மாமா ஒரு பிரச்சினையோடு வந்தது ஞாபகம் வந்தது. ‘மைத்துனன் கடை ஆரம்பிக்கனும்கிறான். அனுபவம் சுத்தமா கிடையாது. காசும்! லோன் போடலாம்கிறான். மேற்கொண்டு கணிசமா ஒரு அமவுண்ட் போட்டா அள்ளிடலாம்கிறான். என்ன கடைன்னு கேட்டால் இப்ப செல்போன் சீசன், அதான்கிறான். ஜங்ஷன், டவுன் ரெண்டு இடத்தில ஓபன் பண்ணலாமாம். என்ன சொன்னாலும் கேட்கிறதா இல்லை… மகள் கல்யாணத்துக்கு வெச்சிருக்கிற சேவிங்ஸ், எப்படி கைவெக்க அதில்?”
சொல்லி முடிக்குமுன் பட்டென்று பதில் வந்தது. “முதல்ல ஒரு இடத்தில கடை ஓபன் பண்ணி ஒரு வருஷம் ப்ராஃபிட் காட்டி லோன் கட்டறதிலும் ஸ்டெடினெஸ் காட்டு, கட்டாயம் உதவறேன்னு சொல்லுங்க. ஒருநாளும் அந்த சந்தர்ப்பம் வராது. தட்ஸ் ஆல் தேர்ஸ் அபவுட் இட், யூ கேன் ஃபர்கெட் த ப்ராப்ளம்.”
அப்ப சொன்ன அதே வாக்கியம்!
சொல்யூஷன் தர்றதில் மட்டிமில்லை, ஏதாச்சும் ப்ளான்னிங் பண்ணணும்னாலும் பக்காவாக… ஆன்மிகம் பத்திக் கேள்விகள் கேட்டால் ரெண்டே ஆப்ஷனில், அதாவது வாயை மூடற அல்லது பிளக்கிற மாதிரி பதில் வரும்.
பட்டு பட்டுன்னு வரும் அந்த பதில்கள்…. ‘தலைக்குள்ள என்னமா ஒரு அல்காரிதம் வெச்சிருக்கார்’னு அவன் ஃப்ரண்ட்ஸே தலையைப் பிய்ச்சுப்பாங்க.
ஆனா வீட்டில் ஓயாமல் சண்டைதான். எப்ப என்ன விஷயம் பண்ணிட்டு வந்து நிற்பார்னு சொல்ல முடியாது. ஒருதடவை ரோட்டோட போயிட்டிருந்த பாரவண்டிக்காரனை வீட்டுக்குள் அழைத்து உட்காரவெச்சு தன் சாப்பாட்டைக் கொடுத்து சாப்பிடச் சொல்லி… (“என்ன வருண், நான் இனி இவரை பட்டினி போடமுடியுமா, மறுபடி சமைக்கணும்…”)
சொந்தக்காரங்க யாருக்கு என்ன ட்ரபிள்னாலும் முந்திட்டுப் போய் உழைச்சிட்டு வந்து காய்ச்சல்ல படுக்கிறது… இந்த வயசிலே கீபோர்ட் படிக்கணும்னு அடம் பிடிக்கிறது… பூனை வளர்க்கிறது… ராத்திரி போய் மரத்துக்கு அடியில படுத்துக்கறது, அவனுக்கு உதவி செய் இவனுக்கு உதவி செய்னு கெஞ்சறது…
கடைசியில் ஒருநாள் வெடித்தது. அவர் இருக்கட்டும், நான் போறேன் என்றாள் ஜமுனா. அதற்குக் கிடைத்த விடைதான் அவரை முதியோர் இல்லத்தில் சேர்த்தது.
‘நீயாடா?’ ‘என்னையாடா?’ எல்லாம் காற்றில் கரைந்தது. பாசமாவது நேசமாவது. மாசம் ஒன்றரை லட்சம் கொண்டுவரும், கொஞ்சக் கொஞ்சக் கூடிக்கொண்டே செல்லும் அழகை ஆடெட் அட்ராக்ஷனாகவும் தரும் ஜமுனாவின் முன் எவாப்ரேட் ஆன வேகம்!
ஆனால் மனசு தவித்தது. கையில காசில்லாம ரோட்டில எங்கே அலையறாரோ… என்ன பண்ணுவார்? நண்பர்கள் உண்டு, ஆனா எத்தனை நாளைக்கு சோறு…. ரோஷக்காரர் வேறு…
* * *
நிர்வாகி என்ற போர்ட் கீழே அமர்ந்திருந்த நபரைக் கைகாட்டினான் செக்யூரிடி. கோபத்துடன் வேகமாக வந்து எதிரில் நின்று செல்போனில் மெயிலை ஓபன் பண்ணிக் கேட்டான், “என்ன இது?”
“அதிலேயே இருக்கே?”
“கொண்டுவந்து சேர்த்த என்னை ஒண்ணும் கேட்காம நீங்களே இப்படிப் பண்ணினா எப்படி?”
“அதெல்லாம் ஒண்ணும் இல்லே, அவரேதான் முடிவெடுத்தார். சொன்னார். அதைத்தான் மெயில்ல தெரிவிச்சோம்.”
“அவரேயா…” தடுமாறினான். “தெரிவிச்சோமா?”
“ஆமாம் அவரேதான். தன்கிட்ட மிச்சம் மீதி இருக்கிற திறமைக்கு ஏதாச்சும் வேலை கிடைக்காதான்னு யோசித்து… முயற்சி பண்ணினதில் இங்கேயே ஒரு வேலை கிடைச்சது. அந்த வேலையிலிருந்த ஆள் நாலு நாள் லீவு போட்டப்ப ஹெல்புக்கு வந்தவர் அதை இன்னும் அழகா பார்த்துக்கிட்டதை பார்த்து நிர்வாகமே அதை அவருக்குக் கொடுத்திட்டது. அவரும் ஜம்முனு ஏத்துக்கிட்டார். பக்கத்தில ஒரு சின்ன வீட்டை வாடகைக்கும் பார்த்துட்டார். யாரும் தேவையில்லேன்னு தீர்மானிச்சிட்டார்.”
“இது இது… உங்களுக்கே நல்லாருக்கா? சரி சரி, நான் பண்ணினது தப்புத்தான். வாங்கப்பா வீட்டுக்கு.”
“ஸாரி,” என்றார் மானேஜர் ரவிகாந்தன், “தட்ஸ் ஆல் தேர்ஸ் அபவுட் இட், யூ கேன் ஃபர்கெட் த ப்ராப்ளம்.”
><><><



