Tuesday, August 4, 2026

நகைச்சுவைக்கு ஒரு பாலிஷ் ....


இங்கிருந்து அங்கே ஒரு ஜம்ப்.. அங்கிருந்து இங்கே ஒரு ஜம்ப். இங்குமங்கும் அணிலைவிட அதிவேகமாக தாவல்கள்... அது என்னமோ ரப்பர் மாதிரி இஷ்டத்துக்கு வளைகிற உடல்.. ஆம், சந்திரபாபு என்றதுமே அந்த அந்தர்பல்டிகள் தான் நினைவுக்கு வரும்.

வைரத்தை பட்டை தீட்டுவதுபோல நகைச்சுவைக்கு ஒரு பாலிஷ் கொடுத்தவர். கதாநாயகனை விட அதிக சம்பளம் வேண்டும் என்று கேட்டு வாங்கிய ஒரே நடிகர். லட்சம் தொட்ட முதல் காமெடி நடிகரும்!

இன்று பிறந்த நாள்.

ஆரம்பித்து வைத்த முன்மாதிரிகள் அனேகம். அதில் ஒன்று காமெடி நடிகர் கதாநாயகனாக நடிப்பது. கண்ணதாசனின் 'கவலை இல்லாத மனிதன்.' மற்றொன்று காமெடி நடிகர் சோகக் காட்சிகளிலும் சோபிக்க முடியும் என்று காட்டியது. ‘குமார ராஜா’ ஒன்று போதுமே?

“கல்யாணம் என்பது எது வரை?”என்று கதாநாயகன் பாடினால் “கழுத்தினில் தாலி விழும்வரை!” என்று அழகாகப் பதில் பாட இவர்தான் வேண்டும்! ('பாத காணிக்கை')

பாபு - நாகேஷ் ஜோடி சேரும்போதெல்லாம் அமர்க்களம்தான்.‘கடவுளைக் கண்டேன்’ முதல் ‘அன்னை’ வரை.

பத்மினி படத்தை வைத்துக்கொண்டு “உனக்காக, எல்லாம் உனக்காக..” பாடினாலும், சாவித்திரி படத்தை வைத்துக்கொண்டு “கோவா மாம்பழமே..” பாடினாலும் மாலினி படத்தை வைத்துக்கொண்டு “பம்பரக் கண்ணாலே…” பாடினாலும் அலுக்கவே அலுக்காது அந்த ஸ்டைல்!

“காவேரி ஓரம், கவி சொன்ன காதல்…” பாடலில் பாபுவின் பால் ரூம் டான்ஸ் திறமையை பார்க்கலாம் என்றால் ‘பதி பக்தி’ பாடலில் ராக் ஸ்டைலை ரசிக்கலாம்.
ஆம், எந்த மாதிரியும் ஆட வல்லவர். ‘சபாஷ் மீனா’ வில் சரோஜாதேவியுடன் “ஏறுங்கம்மா.. ரிக்‌ஷா ஏறுங்கம்மா…” விலிருந்து ‘நீதி'யில் “முத்தமிழின் செல்வன் வாழ்க..” என்று சிவாஜி, ஜெயலலிதாவுடன் ஆடுவது வரை சலிக்காத நடனம் அவருடையது.
பொம்மலாட்ட பொம்மை போல் பாட வேண்டுமா? “நான் கோலாலம்பூர் காட்டுக்குள்ளே குருவி பிடிக்கப் போனேன்..” (காத்தவராயன்)
கையையும் காலையும் மடித்து இடுப்பை ஒயிலாக ஒடித்து அவர் ஆடும் அந்த சந்திரபாபு ஸ்டைல் தனி முத்திரை பெற்றது.

அந்தப் படம் மட்டும் நன்கு ஓடியிருந்தால் ஜோரான டைரக்டராகவும் ஜொலித்திருப்பார். ஆம், அவர் தயாரித்து இயக்கிய ‘தட்டுங்கள் திறக்கப்படும்’. கே.ஆர்.விஜயா, சாவித்திரி, மனோகர் நடித்த க்ரைம் த்ரில்லர் அது. ஆங்கிலப் படங்களுக்கு இணையாக எடுத்திருப்பார். ஷாட்டுக்களை அந்தக் காலகட்டத்துக்கு ரொம்பவே அட்வான்ஸாக அமைத்திருப்பார். சாவித்திரியும் மனோகரும் விவாதிக்கும் காட்சியில் அந்த பிரம்மாண்ட செட்டின் ஒரு மூலையில் தொடங்கி, சுற்றி நடந்து அதே இடம் வரும் டிராலி ஷாட்டும் சரி, ஆடும் நாற்காலியில் குழந்தையைத் தாலாட்டும் சாவித்திரியை கணப்புக்குள் இருந்து காமிரா எட்டிப் பார்ப்பதும் சரி, சட்டென்று நிமிர்ந்து ரசிப்போம்.

அப்புறம் அந்த அட்டகாச ஷாட்: மாடியிலிருந்து மனோகரின் உடலை ஸ்ட்ரெச்சரில் எடுத்துக் கொண்டு நம்மை நோக்கி வருவார்கள். அப்படியே அந்த ஸ்ட்ரெச்சர் நம் தலைக்கு மேலாக படியிறங்கும்போது அசந்து போவோம். (காமிரா: பி.எஸ்.லோகநாதன்) படமே ஓர் உயர் தரத்தில் இருக்கும். பாபு பாடும் அந்தப் பிரபல "கண்மணி பாப்பா... மனிதன் பிறந்தது குரங்குக்குத்தான் என்று சொன்னது தப்பா..."(எம்.எஸ்.வி.)



ஆரம்பத்தில் அவர் பாடியது அவருக்கே அல்ல. ஏ.வி.எம்மின் ‘பெண்’ படத்தில் எஸ். பாலச்சந்தருக்கு. "கல்யாணம்... உல்லாசமாகவே.. உலகத்தில் வாழவே.."
ஏன், சிவாஜிக்கே பின்னணி பாடியிருக்கிறார். “ஜாலி லைஃப்.. தம்பதி யானால் ஜாலி லைஃப்.” (கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி) பாடலில். “பெண்டாட்டி கூடவே கொண்டாட்டம் போடுவே.. பின்னாலே நீயும் ஓடுவே.. என்ன சொன்னாலும் பின் பாட்டு பாடுவே.. என்னை கண்டாலும் காணாத மாதிரி.. எதோ காணாததை கண்ட மாதிரி…” என்ற வரிகளை அவர் பாடும் விதமே அலாதி!

சந்திரபாபுவுக்கே மற்றவர்கள் பாடியதும் உண்டு. யார் யார்? ‘அன்னை’யில் டிஎம்எஸ். ( “லைலா மஜ்னு..”) ‘பறக்கும் பாவை’யில் ஜேசுதாஸ் (“சுகம் எதிலே இதயத்திலா..”) ஏன், சீர்காழி கூட… ("அலங்கார வல்லியே.." - 'சபாஷ் மீனா')

நிறைய காமெடி நடிகர்களைப் போலவே சொந்த வாழ்க்கை சற்றே சோகம் சிந்துவது. 46 வயதில் மறைவு என்பது நம்மைத் திகைக்க வைத்த ஒன்று.

“குங்குமப்பூவே..”வை துள்ளலாக பாடிய அதே குரல் தான், “ஒண்ணுமே புரியலே உலகத்திலே..”வை உருக்கமாகவும் 'புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை..”யை அட்டகாசமாகவும் பாடுவது! அங்கே கிஷோர்குமார் என்றால் இங்கே இவர் பிரபலம் yodelling-இல்.

இவரது காமெடி டிராக்குக்காகவே கூடுதலாக ஓடிய படங்களும் உண்டு. உதா: ‘சகோதரி.’ விளம்பரத்தில் அந்த “நான் ஒரு முட்டாளுங்க..” தனி இடம் பெற்றது.

அவர் நாயகனாக நடிப்பதற்காக அவரே எழுதிய கதையாம் அது. அவர் நடிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் பீம்சிங் திரைக்கதையில் படம் வந்து வெற்றியும் பெற்றது: ‘பாவமன்னிப்பு'

சொல்ல வேணுமா? ‘சபாஷ் மீனா’வின் அந்த ஃபேமஸ் காட்சி! சிவாஜியின் அப்பா வரும்போது அவர் மேனேஜர், சந்திரபாபு டைப்பிஸ்ட் ஆகவும், பாபுவின் அப்பா வரும்போது அவர் மேனேஜர், இவர் டைப்பிஸ்ட் ஆகவும் சட்டென்று மாறும், தூள் கிளப்பிய சாகா வரம் பெற்ற காட்சி..

அதே படத்தில் சிவாஜியுடன் ஒரு காட்சி. பயந்த குரலில் தொடங்கி படிப்படியாக இறங்கி அழுகைக் குரலுக்கு அட்டகாசமாக மாறுவார். பாபு: “முதல்ல யார் வர்றாங்க தெரியுமா கண் முன்னால? அப்பா வர்றார். அப்புறம் அந்த கலெக்டர் அப்பாத்துரை வர்றார். (குரலில் பயம்.) அப்புறம் ஜெயில் வருதுடா.. அப்புறம் விலங்கு வருது... (குரலில் நடுக்கம்) அப்புறம் தூக்குக் கயிறு…” (குரலின் அழுகை)

டவுன் சந்திரபாபு கிராமத்தில் மாட்டிக்கொண்டு முழிக்கும்போது எரியும் கற்பூரத்தை முழுங்கும்போதும், கிராமத்து சந்திரபாபு டவுனில் இட்லியை பிளேட் பிளேட்டாக விழுங்கும்போதும் அந்த காமெடியிலும் வித்தியாசத்தை துல்லியமாக காட்டியிருப்பார்.

கைலியை தூக்கி முழங்காலில் செருகிக்கொண்டு இந்த காலிலிருந்து அந்த காலுக்கும் உடம்பை மாற்றி மாற்றி பேசிக் கலாய்ப்பது அவருக்கே உரித்தானது. மெட்ராஸ் பாஷையை அவர் போல யாரால் அத்தனை தத்ரூபமான பேசமுடியும்?

‘ராஜா’ படத்தில்... மீசையால் அவதிப்பட்ட சந்திரபாபு சலூனில் சென்று ‘மீசையை எடுத்துருப்பா!’ என்கிறார். அவன்: ‘சார், உங்க முகத்திலேயே அழகா இருப்பது மீசை ஒண்ணுதான்!’ இவர்: ‘அப்படின்னா மீசையை வெச்சிட்டு முகத்தை எடுக்க சொல்றியா?’

எப்ப எங்கே கேட்டாலும் மனது (சுற்றி யாருமில்லாவிடில் உடம்பும்) துள்ளும் பாடல்கள்! பத்மினி பிரியதர்சினியுடன் 'பாதகாணிக்கை’யில் வண்டலூர் ஜூவில் ஆடும் “தனியா தவிக்கிற வயசு.. இந்த தவிப்பும் எனக்கு புதுசு..”
ஜமுனா ராணியுடன் பாடும் “நீயாடினால் ஊராடிடும்.. நானாடினால் யார் ஆடுவார்..”. (பாண்டித்தேவன்)
“தடுக்காதே என்னை தடுக்காதே..”(நாடோடி மன்னன்)
“கொஞ்சம் தள்ளிக்கணும்..” (கடவுளைக் கண்டேன்)
“சிரிப்பு வருது சிரிப்பு வருது..” (ஆண்டவன் கட்டளை)
“உன் திருமுகத்தை ஒரு முகமா திருப்பு..” (மகாதேவி)
“எப்போ வச்சுக்கலாம்.. எப்படி வெச்சுக்கலாம்..” (பந்த பாசம்)
“நம்பள்கி பியாரி நம்பள் மஜா..” (பாதுகாப்பு)
ஒவ்வொரு தம்பதியையும் சிலிர்க்க வைத்த அந்தப் பாடல் சிகரம்! “பொறந்தாலும் ஆம்பளையா பொறக்கக் கூடாது… ஐயா, பொறந்துவிட்டா..”

Monday, August 3, 2026

மென்மையில் மேன்மை...


பாடலெழுத வாய்ப்புக் கேட்டு தன்னிடம் வந்தவரிடம் பிரபல இசையமைப்பாளர் நௌஷத், “உங்க மொத்த கவிதைத் திறமையையும் ரெண்டே வரியில சொல்லுங்க பார்ப்போம்!” என்றாராம். சொன்னார் அவர்:
“வலியின் வேதனையை இந்த உலகம் கேட்கச் செய்வோம்;
அன்பின் நெருப்பை ஒவ்வோர் இதயத்திலும் பற்ற வைப்போம்.”
உடனே தான் இசையமைக்கும் படத்துக்கு அவரைப் பாடலெழுதச் சொல்லிவிட்டார் நௌஷத். அந்தக் கவிஞர்...
Shakeel. மென்மையான கவிதைகள் எழுதுவதில் மேன்மையானவர். இன்று பிறந்த நாள்.
நௌஷத் அவர்களின் ஆஸ்தான பாடலாசிரியர் ஆனார். 'கங்கா ஜமுனா'வில் வைஜயந்திமாலா பாடும் அந்த ‘Do Hanson Ki Joda… Bichchad Gayo Re..” ஆல் இந்தியா ஹிட் பாடல். ஒலிக்காத திசையில்லை, உருகாத நெஞ்சமில்லை.
ஷகீல் எனறதுமே கைகள் தாமாகத் தட்டும் பாடல் ‘மொகலே ஆஸம்’ படத்தின் மகா பிரபல “Pyar Kiya To Darna Kiya..” 100 தடவைக்கு மேல் எழுதினாராம் இந்தப் பாடலை!
தவிர ஹேமந்த் குமார், ரவி, S.D.பர்மன் படங்களுக்கும் பரிசுப் பாடல்கள்…
திலீப் குமாருக்கு மிகவும் பிடித்த பாடல் இவரது "Madhuban Mein Radhika...” இந்தப் பாடல் காட்சியில் நடிக்க திலீப் 6 மாதம் சிதார் கற்றுக் கொண்டாராம்.
1961, 62, 63 என்று அடுத்தடுத்து மூன்று வருடமும் சிறந்த பாடல் Filmfare அவார்ட் இவருக்குத்தான். (Chaudwin Ka Chand, Gharana, Bees Saal Baad) பங்கஜ் உதாஸ் பாடிய சில கஜல்கள் இவர் எழுதியவை.
பரிசு பெற்ற இவரது “Husnvale Tera Jawab Nahi..” (Gharana) பாடலின் ஒரு வரி: “காற்றில் கரைந்திருக்கும் கதைகளின் மௌனம் உன் அதரங்களில் உறைந்திருக்கும்…”
மற்றொரு பாடலான “Chaudwin Ka Chand...” பற்றி சொல்லத் தேவையில்லை. “பதினான்காம் நாள் நிலவோ நீ... அல்லது பகலவன் தானோ?”
ரசியுங்கள், அந்த 'கங்கா ஜமுனா' பாடல் வரிகளை தமிழில் தருகிறேன்:
"அன்னமிரண்டு பிரிக்கப்பட்டன..
என்ன நியாயம்? என்னே துயரம்!
மகிழ்வில் இணைந்திருந்தோம்,
துயரில் சேர்ந்தில்லையே?
கண்ணீரோடையில் கண்கள் மூழ்கின
கனவுகளனைத்தும் கண்ணில் நொறுங்கின!"

Sunday, August 2, 2026

அட்டகாச காமெடி ...


1940-ல் வந்த படம் என்று சொன்னால் என்றால் நம்ப மாட்டீர்கள்.
ஆனால் ‘I Love You Again’ -ன் அட்டகாச காமெடி கதை இது:
அமைதியான பிசினஸ்மேன் வில்சன். கப்பலில் வந்து கொண்டிருக்கிறான். தவறிக் கீழே விழப்போன ஆளைக் காப்பாற்றப்போய் தலையில் அடிபடுகிறது. அம்போன்னு மயங்கியவன் விழிக்கும்போது ஒன்பது வருட அம்னீஷியா விலகி முன்பிருந்த ஜார்ஜுக்கு வருகிறான். 9 வருட முன் ரயில் ஆக்சிடென்ட்டில் நினைவிழந்த ஜார்ஜ். ஜாலியான ஃபிராடு ஜார்ஜ்!
இப்ப இந்த 9 வருட வாழ்க்கை மறந்துவிட்டது. இப்போது தான் யார் என்று ‘தன்’ லக்கேஜைக் குடைந்து பார்த்தபோது பணக்கார பிசினஸ்மேன் வில்சன்னு தெரியுது. பேங்க் பாஸ்புக்கில் ஒன்றரை லட்சம் டாலர். ‘ஆஹா! பணத்தை அடித்துவிட்டு கம்பி நீட்டி விடலாம்!’
கரையில் இறங்கினால் ஒரு இளம்பெண் வரவேற்கிறாள். மனைவி!
அடுத்த ஜாக்பாட் ஆக தெரிகிறாள் அந்த அழகி. மனைவியாமே.. அடடா, பேர் கூட தெரியாதே? எதற்கோ Okay, Okay என்றிவன் சொன்னப்போ யெஸ் என்று அவள் திரும்பிப் பார்க்க, அவள் பெயர் Kay என்று தெரிகிறது. ‘இப்பேர்ப்பட்ட அழகியோட கணவனா நான்?’
ஆனால் அவளோ அவன் கையெழுத்துக்காக காத்திருக்கும் டைவர்ஸ் பேப்பரை நீட்டுகிறாள். 'டல்லான வெறும் பிசினஸ் மக்கு! யார் வாழ்வார்கள் அவனோடு?' அதான் காரணம். திகைத்தவன் ஒரு மாசம் டைம் கேட்கிறான். பேங்கில் போனால் அவனுக்கு அடுத்த அதிர்ச்சி. அந்த பணம் கம்யூனிட்டி ஃபண்டு. கை வைக்க முடியாது.
வேறென்ன கவிழ்க்க முடியும் தன் ‘மறுபதிப்பி'டமிருந்து? யோசிக்கிறான். ஏகப்பட்ட நல்ல பேர் இருக்கிறது வில்சனுக்கு. சொந்தமா கொஞ்சம் நிலமும்! நண்பன் டியூக் ஐடியா தருகிறான். ‘அந்த நிலத்தில் பெட்ரோல் இருப்பதாக நம்ப வைத்து ஏகப்பட்ட விலைக்கு விற்றுவிடலாம்!’
இங்கே கே-க்கு ஆச்சரியம். படு ஜாலியான கணவனைப் பார்த்து! பார்ட்டி என்ன, டான்ஸ் என்ன? கலக்குகிறான். கருமியா இருந்தவனா இப்படி? தடுமாறுகிறாள் தன் முடிவில்.
பெட்ரோலை வாங்கி நிலத்தில் கொட்டிவிட்டு, பணக்காரப் பசங்களை அந்த இடத்துக்கு டூர் அழைத்துச் செல்வது போல அழைத்து வந்து ‘தற்செயலாக’ பார்க்க வைக்கிறான். அப்பாக்கள் ஓடிவந்து போட்டி போட்டு (ட்யூக் வந்து விலையை ஏற்றிவிட) அபார விலைக்குப் பேசுகிறார்கள். ‘அப்பாடா, பணம் வந்ததும் ஓட வேண்டியதுதான் பாக்கி!' ஆனால் இப்ப அவனுக்கு டிலெம்மா. கூடி வாழவா, ஓடி அவளை இழக்கவா? கே தான் ஜெயிக்கிறாள் மனதில்.
ஆனால் ட்யூக் விடுவதாயில்லை. மிரட்டுகிறான். அவனை எதிர்க்கும்போது தலையில் அடிபடுகிறது ஜார்ஜுக்கு. மறுபடி பழைய வில்சனாகிறான். ட்யூக், கே ரெண்டு பேருக்குமே ஏமாற்றம். ட்யூக் தன் திட்டம் பலிக்காதே இனியென்று அகலுகிறான்.
இப்பதான் கே-க்கு ஐடியா ஃப்ளாஷ் ஆகிறது. ஆக, தலையில் அடிபட்டால் போதும், தன் 'அடுத்தது'க்கு ஸ்விட்ச் ஓவர் ஆகிவிடுவான் அவன்! அகப்பட்ட ஃப்ளவர் வேஸை எடுத்து ஓங்குகிறாள் அடிக்க. “ஐயையோ, நடிச்சேனாக்கும் நானு!" என்கிறான், மறுபடி அம்னீசியா வந்த மாதிரி நடித்த ஜார்ஜ்.
கே ஆக நடித்தவர் Myrna Loy... 2 Aug. பிறந்த நாள்.



1940 இல் வந்த 'I love you again' எந்தளவு ஹிட் என்றால் இதே ஜோடியை வைத்து இதே போன்ற கதையில் அடுத்த படம் எடுக்கிற அளவுக்கு. படத்துல வர்ற எல்லா ஜோக்குகளும் கிடைக்கணும்னா, நீங்க படத்தை ரெண்டு தடவை பார்க்கணும்னு ட்ரெய்லர் சொல்லும்.
பிரபல Clark Gable -உடன் பல படங்களில் நடித்தவர். 1936 -இல் அவரை சினிமாவின் கிங், இவரை க்வின் என்று சொன்னாங்க. தன் வசீகரத்துக்கு முக்கிய காரணமாக ஒளிப்பதிவாளர்களை நன்றியுடன் கைகாட்டுவார்.
சொன்னார் பாருங்க, நச்சென்று ஒரு Quote!
‘Life is not a having and a getting but a being and a becoming.’