Monday, August 10, 2026

எண்ணிச் சிந்திடுவோம்... (அன்புடன் ஒரு நிமிடம் -1)



அன்புடன் ஒரு நிமிடம் -1

எண்ணிச் சிந்திடுவோம்...

கே. பி. ஜனார்த்தனன்

“மணி எட்டரை ஆச்சு. இன்னும் நீங்க புறப்படலையா கல்யாணத்துக்கு? என்ன இப்படி உட்கார்ந்திருக்கீங்க? கிளம்புங்க சீக்கிரம்,” என்றாள் தலையை வாரிக் கொண்டு வந்த யமுனா. அவள் தொடர்ந்து சொன்னது: “ஒரு அவசரம் விசேஷம் என்றால் உங்களைப் புறப்பட வைக்கிறதே எனக்குப் பெரிய வேலையாப் போகுது!”
வினோத் தன் லேப்டாப்பை மூடிவிட்டு எழுந்தான். “எத்தனை மணிக்கு முகூர்த்தம்? மண்டபம் எது?”
“பத்தரை. ஸ்ரீநிவாஸ் மண்டபம்.”
“முகூர்த்தம் பத்தரைக்குத்தானே? இப்ப அரைமணியில் ரெடியாயிட்டேன்னா ஒரு மணி நேரத்துல அங்க போயிடலாமே?” என்றான். அவன் தொடர்ந்து சொன்னது: “நான் என்ன சும்மா தூங்கிட்டா இருக்கேன்? ரெண்டு வாரமாச்சு. ப்ராஜெக்ட் வேலை முடியலை. அதைத்தான் கொஞ்சம் எட்டிப் பார்த்தேன்.”
“சரி சரி, இட்லி ரெடியாயிருக்கு. எடுத்து சாப்பிட்டுக்குங்க. நான் டிரஸ் பண்ணிக்கிறேன்,” என்றாள் அவள். வேலை ரொம்ப பாக்கின்னா வீட்டிலிருந்து கொஞ்சம் பார்க்கலாமே என்று சொன்னது அவள்தான். ஆகவே அவளுக்கு உறுத்திற்று. நீ சொன்னதைத்தானே நான் செய்தேன் என்கிறானோ? அவள் தொடர்ந்து சொன்னது: “ஆமா, எங்க மாமா வீ டடு கல்யாணமாச்சே, அப்பத்தான் ப்ராஜெக்டைப் பார்க்கிறதுக்கு உட்காருவீங்க!”
“உடனே அப்படிப் போயிருமே நினைப்பு? அதெல்லாமில்லே,” என்று மறுத்தான். ஷேவிங்கை ஆரம்பித்தவன் தொடர்ந்து சொன்னது: “நீதான் சில சமயத்தில் அப்படி சிறுபிள்ளைத்தனமா நடந்துக்குவே, நானில்லை.”
இதற்குப் பிறகு இந்த உரையாடல் எப்படி போயிருக்கும் என்பதை ஊகித்து விடலாம்.
மேலே உள்ள உரையாடலில் எல்லா ‘தொடர்ந்து சொன்னது’களையும் கவனிக்கவும். அவற்றைச் சொல்லுமுன் ஒரு நிமிடம், ஒரே ஒரு நிமிடம் ‘இப்ப இப்படிச் சொல்லணுமா? சொல்லலாமா? சொன்னால் அது என்ன எதிர் விளைவை அல்லது பக்க விளைவை ஏற்படுத்தும் என்று யோசித்துப் பார்த்துவிட்டு அப்படிச் சொல்லவா வேண்டாமா என்று முடிவு எடுத்திருந்தால் அநேகமாக அந்த எல்லா ‘தொடர்ந்து சொன்னது’களையுமே நிச்சயமாக தவிர்த்திருப்போம் இல்லையா? அந்த இடங்களில் அவை அவசியப்படவும் இல்லை என்பதுதான் முக்கியமான விஷயம்.
தான் சொல்வது சரி என்று வாதாடுகையில் ஒருவரை ஏதும் குறை சொல்லும் முன், அப்படிச் செய்திருக்கணும் என்று அறிவுரை வழங்கும் முன், ஒரு நிமிடம் நாம் என்ன சொல்கிறோம் என்பதை யோசித்துவிட்டுப் பேசினால் உறவுகளும் நட்புகளும் எப்போதும் இனிக்குமே? எண்ணிச் சிந்திடுவோம் எண்ணங்களை…!
(‘அமுதம்’ ஏப். 2012 இதழில் வெளியானது)

><><><

Sunday, August 9, 2026

ஓவியரும் கூட....


‘உங்களை மிக அழகானவராக கற்பனை செய்து கொள்ள வேண்டியதில்லை, ஏனெனில் நீங்கள் மிக அழகானவர்.’
சொன்னவர் யார்?
மூமின்ஸ் என்ற காமிக்ஸ் ஸ்ட்ரிப்ஸ் மூலமாக பூமியில் பிரபலமான நபர் அவர். (Moomins)
பின்லாந்தின் முன்னணி பெண் எழுத்தாளர்களில் ஒருவர். புகழ்பெற்ற ஓவியரும் கூட.
குடும்பத்தில் அத்தனை பேரும் கலைஞர்களாக இருக்கும் போது அதில் வளரும் ஒருத்தி மிகச்சிறந்த படைப்பாளியாக மாறக் கேட்கணுமா?
குழந்தைகளுக்கு எழுதுவதிலும் பெரியவர்களுக்கு எழுதுவதிலும் வல்லவர்.
Tove Jansson. இன்று பிறந்தநாள்!
இன்னும் சொன்னவை சுவையானவை:
‘நீண்ட பிரயாணம் மேற்கொள்ள வேண்டும் நீங்கள், வீடு எத்தனை அற்புதமானது என்பதை கண்டுகொள்ள.’
‘ஒருவன் எல்லாவற்றையும் தானே கண்டுபிடித்தாக வேண்டும்; தானே அதிலிருந்து விடுபட வேண்டும்.’
‘யாரையேனும் அளவுக்கதிகமாக பிரமித்தால் சுதந்திரமாக இருக்கவே முடியாது.’
‘எல்லா விஷயங்களுமே மிகவும் நிச்சயமற்று இருக்கின்றன; அதுவேதான் என்னில் மீண்டும் நம்பிக்கை ஏற்படுத்துகிறது.’
‘பாலத்தில் படுத்துக்கொண்டு வெள்ளம் பாய்வதைக் கவனியுங்கள்; சிவப்பு பூட்ஸ்களை அணிந்துகொண்டு ஈர நிலத்தில் சிரமப்பட்டு ஓடுங்கள்; அல்லது மாடியில் உருண்டபடி கூரையில் மழை விழுவதை கேளுங்கள். தனக்குத்தானே அனுபவிப்பது ரொம்ப சுலபம்!'
‘உள்ளபடியே கடவுள் உதவுகிறார், ஆனால் நீ சொந்தமாக ஒரு முயற்சியாவது செய்த பிறகு தான்.’
‘மொத்தத்தில் இவ்வளவுதான் விஷயம்: ஒரு போதும் களைப்படையாதீர்கள், உற்சாகத்தை இழந்து விடாதீர்கள், வெறுமே இருந்துவிடாதீர்கள் - விலைமதிப்பற்ற உங்கள் ஆர்வத்தை இழந்து உங்களை சாக விட்டுவிடாதீர்கள். அவ்வளவுதான், விஷயம் ரொம்ப சிம்பிள்.’

கடவுளின் செல்ல சப்ஜெக்ட்...


விஞ்ஞானம் கடவுளின் செல்ல சப்ஜெக்ட்! உள்ளே செல்லச் செல்ல சுவாரசியம் விரிந்துகொண்டே போகும்...
இப்ப பாருங்க… ஆக்ஸிஜன், நைட்ரஜன், ஹைட்ரஜன்... எல்லாம் வாயுக்கள். தெரியும். எல்லா வாயுவும் மாலிக்யூல்களால் ஆனது. அறிவோம். ஒரு கப் ஹைட்ரஜனை அள்ளிக் கொண்டால் அதில் ஆயிரக் கணக்கில் ஹைட்ரஜன் மாலிக்யூல்கள் இருக்கும். ஆமா, சரிதான். போலவே ஒரு கப் நைட்ரஜனை அள்ளிக் கொண்டால் அதில் ஆயிரக்கணக்கில் நைட்ரஜன் மாலிக்யூல்கள். இந்த ரெண்டு கணக்கும் எக்ஸாட்லி ஒரே நம்பராக இருக்கும்னு நினைச்சுப் பார்த்திருப்பீங்களா? ஒண்ணாதான் இருக்கும். ஒரே கன அளவுள்ள எந்த வாயுவை எடுத்துக் கொண்டாலும் அதில் ஒரே எண்ணிக்கை மாலிக்யூல்கள்தாம் இருக்கும் (ஒரே வெப்பம் & அழுத்தத்தில்) அது தான் 'ஆவாகாட்ரோ' விதி. ஆரோ அது? அவருதாங்க அதைக் கண்டு பிடிச்சது.. 200 வருஷம் முன்னாடியே…
Amedeo Avogadro... இன்று பிறந்த நாள்!
படித்தது முதலில் சட்டம். ஆர்வத்தில் நுழைந்தது விஞ்ஞானம். வாழ்ந்த காலத்தில் உரிய பாராட்டு வழங்கப் படாதவர்களில் ஒருவர்.