Saturday, May 30, 2026

அவரின் அல்காரிதம்…


அவரின் அல்காரிதம்…
கே. பி. ஜனார்த்தனன்
('ஆரண்ய நிவாஸ்' மார்கழி 2023 இதழில்...)
அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அந்த மெயிலையே வெறித்தான். அப்பா என்ன இப்படிப் பண்ணிட்டாரு?
பிரக்யா முதியோர் இல்லத்திலிருந்து வந்திருந்தது அந்தக் கடிதம். ‘... உங்கள் தந்தை ரவிகாந்தன் தன் மெம்பர்ஷிப்பை கான்சல் செய்துவிட்டார். ஆகவே ஆகஸ்ட் ஒன்றிலிருந்து நீங்கள் மாதப் பணம் அனுப்ப வேண்டியதில்லை.’
“சரிதான், பழையபடி இங்கே வரப் போறாரு…” சண்டைக்கு தயாரானாள் ஜமுனா.
“வெய்ட். இங்கே வர்றதானா, கேட்காமல் அங்கே நின்னிருக்க மாட்டாரு.” ஜாக்கிரதையாக ‘உன்னைக் கேட்காமல்’ என்று சொல்வதைத் தவிர்த்தான்.
“போன் பண்ணுங்க… கேளுங்க மானேஜரை.” ஆவல், மாதம் 15000 மிச்சமாவதை கன்ஃபர்ம் செய்ய.
பண்ணினான். ஓனரே போனை எடுத்தார். “ஆமாங்க. நிறுத்திட்டாரு.”
“எங்கே போனாரு?”
“எங்கே போனாரா? அதெல்லாம் ஒண்ணும் சொல்ல வேணாம்னு சொல்லிட்டாரு. ‘தட்ஸ் ஆல் தேர்ஸ் அபவுட் இட், யூ கேன் ஃபர்கெட் த ப்ராப்ளம்’னு மட்டும் சொல்லச் சொன்னாரு.”
அவனுக்கு நினைவு வந்தது. அப்பா அடிக்கடி சொல்லும் வாக்கியம். அவன் ஸ்கூல் டேய்ஸிலிருந்தே கேட்டது.
அந்த நாட்கள்… அவரின் டாண் டாண் வாக்கியங்களை அக்கம் பக்கத்தில் வியக்காதவர் இல்லை.
விச்சு மாமா ஒரு பிரச்சினையோடு வந்தது ஞாபகம் வந்தது. ‘மைத்துனன் கடை ஆரம்பிக்கனும்கிறான். அனுபவம் சுத்தமா கிடையாது. காசும்! லோன் போடலாம்கிறான். மேற்கொண்டு கணிசமா ஒரு அமவுண்ட் போட்டா அள்ளிடலாம்கிறான். என்ன கடைன்னு கேட்டால் இப்ப செல்போன் சீசன், அதான்கிறான். ஜங்ஷன், டவுன் ரெண்டு இடத்தில ஓபன் பண்ணலாமாம். என்ன சொன்னாலும் கேட்கிறதா இல்லை… மகள் கல்யாணத்துக்கு வெச்சிருக்கிற சேவிங்ஸ், எப்படி கைவெக்க அதில்?”
சொல்லி முடிக்குமுன் பட்டென்று பதில் வந்தது. “முதல்ல ஒரு இடத்தில கடை ஓபன் பண்ணி ஒரு வருஷம் ப்ராஃபிட் காட்டி லோன் கட்டறதிலும் ஸ்டெடினெஸ் காட்டு, கட்டாயம் உதவறேன்னு சொல்லுங்க. ஒருநாளும் அந்த சந்தர்ப்பம் வராது. தட்ஸ் ஆல் தேர்ஸ் அபவுட் இட், யூ கேன் ஃபர்கெட் த ப்ராப்ளம்.”
அப்ப சொன்ன அதே வாக்கியம்!
சொல்யூஷன் தர்றதில் மட்டிமில்லை, ஏதாச்சும் ப்ளான்னிங் பண்ணணும்னாலும் பக்காவாக… ஆன்மிகம் பத்திக் கேள்விகள் கேட்டால் ரெண்டே ஆப்ஷனில், அதாவது வாயை மூடற அல்லது பிளக்கிற மாதிரி பதில் வரும்.
பட்டு பட்டுன்னு வரும் அந்த பதில்கள்…. ‘தலைக்குள்ள என்னமா ஒரு அல்காரிதம் வெச்சிருக்கார்’னு அவன் ஃப்ரண்ட்ஸே தலையைப் பிய்ச்சுப்பாங்க.
ஆனா வீட்டில் ஓயாமல் சண்டைதான். எப்ப என்ன விஷயம் பண்ணிட்டு வந்து நிற்பார்னு சொல்ல முடியாது. ஒருதடவை ரோட்டோட போயிட்டிருந்த பாரவண்டிக்காரனை வீட்டுக்குள் அழைத்து உட்காரவெச்சு தன் சாப்பாட்டைக் கொடுத்து சாப்பிடச் சொல்லி… (“என்ன வருண், நான் இனி இவரை பட்டினி போடமுடியுமா, மறுபடி சமைக்கணும்…”)
சொந்தக்காரங்க யாருக்கு என்ன ட்ரபிள்னாலும் முந்திட்டுப் போய் உழைச்சிட்டு வந்து காய்ச்சல்ல படுக்கிறது… இந்த வயசிலே கீபோர்ட் படிக்கணும்னு அடம் பிடிக்கிறது… பூனை வளர்க்கிறது… ராத்திரி போய் மரத்துக்கு அடியில படுத்துக்கறது, அவனுக்கு உதவி செய் இவனுக்கு உதவி செய்னு கெஞ்சறது…
கடைசியில் ஒருநாள் வெடித்தது. அவர் இருக்கட்டும், நான் போறேன் என்றாள் ஜமுனா. அதற்குக் கிடைத்த விடைதான் அவரை முதியோர் இல்லத்தில் சேர்த்தது.
‘நீயாடா?’ ‘என்னையாடா?’ எல்லாம் காற்றில் கரைந்தது. பாசமாவது நேசமாவது. மாசம் ஒன்றரை லட்சம் கொண்டுவரும், கொஞ்சக் கொஞ்சக் கூடிக்கொண்டே செல்லும் அழகை ஆடெட் அட்ராக்‌ஷனாகவும் தரும் ஜமுனாவின் முன் எவாப்ரேட் ஆன வேகம்!
ஆனால் மனசு தவித்தது. கையில காசில்லாம ரோட்டில எங்கே அலையறாரோ… என்ன பண்ணுவார்? நண்பர்கள் உண்டு, ஆனா எத்தனை நாளைக்கு சோறு…. ரோஷக்காரர் வேறு…
* * *
நிர்வாகி என்ற போர்ட் கீழே அமர்ந்திருந்த நபரைக் கைகாட்டினான் செக்யூரிடி. கோபத்துடன் வேகமாக வந்து எதிரில் நின்று செல்போனில் மெயிலை ஓபன் பண்ணிக் கேட்டான், “என்ன இது?”
“அதிலேயே இருக்கே?”
“கொண்டுவந்து சேர்த்த என்னை ஒண்ணும் கேட்காம நீங்களே இப்படிப் பண்ணினா எப்படி?”
“அதெல்லாம் ஒண்ணும் இல்லே, அவரேதான் முடிவெடுத்தார். சொன்னார். அதைத்தான் மெயில்ல தெரிவிச்சோம்.”
“அவரேயா…” தடுமாறினான். “தெரிவிச்சோமா?”
“ஆமாம் அவரேதான். தன்கிட்ட மிச்சம் மீதி இருக்கிற திறமைக்கு ஏதாச்சும் வேலை கிடைக்காதான்னு யோசித்து… முயற்சி பண்ணினதில் இங்கேயே ஒரு வேலை கிடைச்சது. அந்த வேலையிலிருந்த ஆள் நாலு நாள் லீவு போட்டப்ப ஹெல்புக்கு வந்தவர் அதை இன்னும் அழகா பார்த்துக்கிட்டதை பார்த்து நிர்வாகமே அதை அவருக்குக் கொடுத்திட்டது. அவரும் ஜம்முனு ஏத்துக்கிட்டார். பக்கத்தில ஒரு சின்ன வீட்டை வாடகைக்கும் பார்த்துட்டார். யாரும் தேவையில்லேன்னு தீர்மானிச்சிட்டார்.”
“இது இது… உங்களுக்கே நல்லாருக்கா? சரி சரி, நான் பண்ணினது தப்புத்தான். வாங்கப்பா வீட்டுக்கு.”
“ஸாரி,” என்றார் மானேஜர் ரவிகாந்தன், “தட்ஸ் ஆல் தேர்ஸ் அபவுட் இட், யூ கேன் ஃபர்கெட் த ப்ராப்ளம்.”
><><><



Friday, May 29, 2026

ஏழு கதவுகளை...


செல் போன்கள் டவரின் ஸிக்னலைப் பிடிப்பது போல, நம் உடலின் செல்களும் ஹார்மோன்களை சிக்னல் பிடித்து செல்லுக்குள் இருக்கும் G Protein க்கு அனுப்பும் மாலிக்யூல்களை வைத்திருக்கின்றன. GPCR என்று பேர் (G Protein Coupled Receptor)
அது எப்படி வேலை செய்கிறது என்று ஆராய்ந்து சக விஞ்ஞானியுடன் நோபல் பரிசு பெற்றவர் அவர்.
Brian Kobilka.. இன்று பிறந்த நாள். வாழும் விஞ்ஞானியை வாழ்த்துவோம்!
வந்திருக்கும் தயாரிப்பாளரை அளவெடுத்து நடிகருக்கு ஐடியா கொடுக்கும் மேனேஜர் போல இந்த GPCRகள். சூழலை அறிந்து செல் தன்னை அடாப்ட் செய்ய வைப்பவை.
நாம் உபயோகிப்பதில் பாதி மருந்துகளை இந்த வழியில்தான் பிரயோகித்து செல்களை குறிப்பிட்டபடி செயல்பட வைக்கிறார்கள்.
ரெஸப்டர்களை முதலில் ஆராய்ந்ததில் அவை தம்முள் ஏழு கதவுகளை வைத்திருப்பது தெரிந்தது.
அடுத்து இவர் கையில் எடுத்துக் கொண்டது அட்ரினலினை உணர்ந்தறியும் ரெஸப்டரை. (அதாங்க, உணர்வைப் பொறுத்து இதயத்துடிப்பை எகிற வைக்கிறதே அது). அந்த ஹார்மோன் ஒரு ரெஸப்டரைத் தூண்டி சிக்னல் அனுப்புவதை இவர் கையும் கடத்தலுமாக HD லெவலுக்கு படம் பிடித்தார். உபயோகித்தது X Ray Crystallography-யை.
கண்டு பிடித்தது அதன் அமைப்பை. அதை உருவாக்கும் DNA செயினை முழுசாக அளவெடுத்தார். தொடர்ந்து பல ரெஸப்டரின் ஜாதகம் கிடைத்தது.
எங்கே உதவுகிறது இது? பக்க விளைவு இல்லாத மருந்துகள்! குறிப்பிட்ட ரெஸப்டரைக் கண்டு பிடித்து அதை மட்டும் தொடர்பு கொள்ளும் மருந்துகளை உருவாக்க எத்தனை உதவி!
‘Science’ பத்திரிகையில் ‘Breakthrough of the Year Award’ போட்டியில் ரெண்டாவது இடம் பெற்றது இவர் கண்டுபிடிப்பு.

Thursday, May 28, 2026

இத்தனை அழகா..?


Panchayat.’ டி.வி. ட்ராமா தொடர்… (Amazon Prime)
அந்தக் குக் குக்கிராமத்துக்கு பஞ்சாயத்து செகரெட்டரியாக ஹீரோ வந்து சேரும்போது நம் மனதில் காதல், மோதல், காமெடின்னு பல ஒன்லைன்கள் உதிக்க, நடப்பது என்ன? எல்லாம் அமைதியாக, எல்லோரும் அவரவர் ஆக. இயல்பாக எழும் பிரசினைகள்! அழகாக வந்து விழும் முடிச்சுக்கள்! இழையோடும் நகைச்சுவை!
பல ஆயிரம் ‘ஒரே’ படங்களைப் பார்த்துப் பார்த்து பார்முலாக்களை ஏற்றிவிட்டிருக்கிற மனது சற்றுத் துவளுகிறது. சற்றே நேரத்தில், இந்த ‘பார்முலா இல்லாமை’ இத்தனை அழகா என்று வியந்து போகிறோம்!
ஹீரோவுடன் அந்த கிராமத்துக்குள் நுழைந்து ஒவ்வொருத்தரையா சந்திச்சிட்டே வர்றோம். கொஞ்ச நேரத்துல பார்த்தால், அந்தப் பஞ்சாயத்து பிரசிடெண்ட் வீட்டில திண்டில நாமும் உட்கார்ந்து இருக்கிறோம். எப்படி வந்தோம்னே தெரியல. அப்படி ஒரு இயல்பான மூவ்மெண்ட்.
ஹீரோவின் பெர்ஸ்பெக்டிவில் தொடங்கிச் சென்றது, கொஞ்ச நேரத்தில் எல்லாருடைய பார்வையிலும் நகர்கிறது. ஹீரோயின்னு ஒருத்தர் இல்லாம எட்டு எபிசோட்... ஆஹா நாம் காண்பது என்ன எபிசோடா அல்லது எபிக்கா?
எத்தனை இன்னஸண்ட் ஆக இருக்கிறதோ அத்தனை விவரமாக! எத்தனை எளிமையாக இருக்கிறதோ அத்தனை ஆழமாக!
12 சோலார் விளக்கு எங்கே போடணும்ன்னு தீர்மானிச்சாச்சு. 13-வதுக்காகத்தான் இந்த மீட்டிங் என்று ஆரம்பிக்கிறது ஒரு எபிஸோட். ஹீரோவுக்கு படிக்க லைட் வேணும். பஞ்சாயத்து ஆபீஸ் முன்னால் போடச் சொல்ல, பேய் பிடிக்கிற மரத்தின் பக்கத்துல போட்டா ஊரார் பயம் அகன்று வோட்டு குவியுமேன்னு பிரசிடெண்ட் சொல்ல... ஒரே வழி, வேறே வழியில அந்த பயத்தை அகற்றறதுதான்னு ஹீரோ பேயின் பூர்வாங்கத்தை தூர் வாங்கக் கிளம்புவதும் சந்திக்கும் இயல்பான வினோதங்களும் சந்திப்பவர்களின் வினோதமான இயல்புகளும்... கச்சிதமான கதை வட்டம்.
நேர்த்தியா இழை பின்னின பட்டுச் சேலை மாதிரி கதைகள். பாந்தமாப் போட்ட பார்டர் மாதிரி ஊடாடும் காமெடி. அந்தந்த எபிசோடின் மையக் கதைக்கு சம்பந்தமில்லாம ஒரு வார்த்தை, வசனம் வரணுமே? என்னா கவனம்யா!
யாருய்யா அது அந்த பஞ்சாயத்து பிரசிடெண்ட் கணவர்? பாலையாவை பார்வையிலேயும் ரங்காராவை வார்த்தையிலேயும் கொண்டு வருகிறார். நட்புக்கும் குடும்பத்துக்கும் இடையே, பாலிடிக்ஸ்க்கும் நியாயத்துக்கும் இடையே புருவத்தை நெறிப்பது சுவாரசியமாகவும் அழகாகவும் இருக்கிறது.
டௌரி வாங்கமாட்டேன்னு சொல்லும் ஹீரோவை வரனாக்க ஆசை அவருக்கு. அவன் சொல்ற மாதிரி ஒரு லட்சம் ஸாலரி வாங்குவானா? பரிட்சையில தேறணும்னா பிரைய்ன் வேணும்கிறாளே மனைவி? இருக்கா பார்த்துடுவோம்னு கேள்வியைக் கொடுத்து யுவர் டைம் ஸ்டார்ஸ் நவ் சொல்லும் பிரசிடெண்டு புருஷன்! அவர் குழம்பும்போது கூடவே குழம்புகிறோம். தவிக்கும்போதும் கூடவே நாமும்.
எல்லாவற்றுக்கும் சிகரம் வைக்கிற மாதிரி அந்த கடைசி எபிசோட். ஒண்ணுமே சொல்ல வேண்டாம் அதைப் பத்தி. பார்த்துத்தான் ரசிக்கணும்.
எந்த இடத்திலும் தன்பால் கவனம் ஈர்க்காத கேமரா! அதுதானே நல்ல கேமரா மேனுக்கு இலக்கணம் என்பார் பிரபல காமிராமேன் மார்கஸ் பார்ட்லி?
நாடகத்தனமான நடிப்பு மருந்துக்குக் கூட இல்லையே என்று வருந்துகிறவங்களுக்கு ஆறுதலாத் தேடினால் ரிங்குவின் அம்மா பாத்திரம் மட்டும் ஆங்காங்கே சற்று ஆறுதல் வழங்குகிறது.
அத்தனை விஷயங்களும் மாற்றாத அவன் மனதை மாற்ற வரும் பெண் , ஆமா நாம தேடிக்கொண்டே இருந்த பெண் வருகிறாள்... எப்போ? அது சஸ்பென்ஸ்!
மொத்தத்துல நாம எதைப் பார்த்தெல்லாம் இதுவரை கைதட்டிட்டு, ரசிச்சிட்டு இருந்திருக்கோம்னு நாண வெச்சிடுது. எபிசோட் எட்டையும் பார்த்தபின் பழகிய நிஜ மனிதர்களைப் பிரியும் உணர்வு தோன்றுவது தொடருக்கும் வெற்றி, நமக்கும் திருப்தி என்கிறது.