Thursday, April 30, 2026

அறிவியலின் அந்தப்புரங்களில்...


ஒன்றிலிருந்து நூறு வரை உள்ள எண்களின் கூட்டுத் தொகையை சொல்லுங்கன்னு கேட்டால் ஒன்றிலிருந்து பத்து நிமிடமாவது எடுத்துக்கொள்கிறீர்கள் இல்லையா? ஒரு நிமிடம் கூட எடுத்துக் கொள்ளவில்லை அந்தப் பையன். அசந்து விட்டார் ஆசிரியர். எப்படி? இறுதி பாராவில்.
கணிதத்தில் ஏற்பட்ட ஏகப்பட்ட முன்னேற்றங்களுக்கு காரணமான இந்த ஜெர்மானியர் ஆகப்பெரிய கணித மேதை என்று அழைக்கப்படுகிறார். ஆனாலும் பாவப்பட்ட அம்மாவுக்கு அவரைப் படிக்க வைக்க வசதியின்றி பிரன்ஸ்விக் பிரபுவை உதவி கேட்க வேண்டியதாக இருந்தது.
Carl Friedrich Gauss (1777 - 1855)..... இன்று பிறந்த நாள்! (எழுதப் படிக்கத் தெரியாத அம்மா சொன்ன குறிப்பை வைத்து ‘கணக்குகளை’ப் போட்டு அவரே கண்டுபிடித்தாராம் தன் பிறந்த நாளை என்பாங்க!)
மூன்று வயதில் அப்பா போட்ட தப்புக் கணக்கு ஒன்றைத் திருத்தியது அவர் காட்டிய பல ஆச்சரியங்களில் ஒன்று. ப்ரைம் நம்பர்கள் தோன்றும் முறையை கண்டுபிடித்தது 15 வயதில் என்றால் 19 வயதில் பதினேழு கட்ட ரெகுலர் polygon-ஐ வெறும் காம்பஸ், ஸ்கேல் வைத்துப் போட்டுக் காட்டினார்.
Fundammental Theory of Algebra வை நிருபித்த போது வயது 22. அடுத்த 2 வருடத்தில் கணித உலகை பல அடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் சென்ற ’Disquistiones Arithmmeticae’ புத்தகத்தை எழுதினார்.
Least square method-ஐ வரையறுத்ததோடு அதை வைத்து வரைந்து, விரைந்து கண்டுபிடித்தார் விண்வெளியில் சஞ்சரிக்கும் கிரகங்களின் சுற்றுப்பாதையை அளவிடுவதை. அறிவியலின் ராணி கணிதம் என்றவர் அந்தக் கணிதத்தின் ராணி என்ற நம்பர் தியரியில் புகுந்து விளையாடினார்.
மின்னல் மாதிரி ஒரே ஒரு முறை கண்ணில் பட்டுச் சென்ற Ceres உபகிரகம் அப்புறம் எப்போ அப்பியர் ஆகும்னு சொன்னாரோ அப்போ தப்பாமல் ஆனது அது! சுமார் 200 வருடத்திற்கு முன் Modular Arithmetic இல் அவர் எழுதியது இன்று கம்ப்யூட்டர் சயின்ஸில் உதவுகிறது..
அறிவியலின் அந்தப்புரங்களில் ஒன்றிலிருந்து ஒன்றாக சுற்றித் திரிந்தவர் மின்காந்தத் தோட்டத்தில் சாதித்ததை நாம் மறந்து விடவில்லை. மேக்னெட்டிக் இண்டக் ஷனை அளப்பதற்கான யூனிட்டுக்கு Gauss என்று இவர் பெயர் தான் இட்டிருக்கிறோம் இல்லையா?
தன் வழிமுறைகளை விலாவாரியாக எழுதி வைத்துவிட்டு போகாதது, தன் பசங்களை அறிவியல் பக்கம் வரவேண்டாம் என்று அறிவுறுத்தியதையெல்லாம் சொல்வார்கள், அதையெல்லாம் ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டாமே? மேதைகளின் பாதைகளில் வாதைகள் ஆயிரம் இருக்கலாம்…
Quotes?
‘அறிவது அல்ல, கற்றுக்கொள்வதே; அடைவது அல்ல, முயற்சிப்பதே; அங்கே இருப்பது அல்ல, அங்கே செல்வதே ஆகப் பெரும் சந்தோஷம் தருவது!’
‘ஒரு விஷயத்தைத் தெளிந்தறிந்து சோர்ந்தவுடன் அதிலிருந்து விலகுகிறேன், மறுபடியும் அறியாமையின் இருளுக்குள் செல்ல.’
‘ஒருபோதும் திருப்தி அடையாததே மனிதனின் இயல்பு. ஒன்றைக் கட்டி முடித்தான் என்றால் அதில் அமைதியாக உறைவதில்லை, அடுத்ததைக் கட்டத் தொடங்குகிறான்.’
‘மிகக்குறைந்த வார்த்தைகளில் எத்தனை அதிகம் சொல்ல முடியுமோ அத்தனை சொல்லும் வரை நான் திருப்தி அடைவதில்லை. சுருக்கமாக எழுதுவது, நீளமாக எழுதுவதைவிட அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது.’
விடை: அவன் செய்ததெல்லாம் 50 -ஐ 101 ஆல் பெருக்கியதுதான். அத்தனை எண்களையும் 1+100, 2+99, 3+98 இப்படி அடுக்கிக் கொண்டே வந்தால் மொத்தம் ஐம்பது 101 கள் தானே வரும்? அப்புறம் என்ன, ஐந்தே விநாடியில் பெருக்கி சொல்ல வேண்டியதுதானே, 5050 என்று?

Tuesday, April 28, 2026

மூன்று முறை சிறந்த நடிகர்...


ஆஸ்கார் சரித்திரத்திலேயே மூன்று முறை சிறந்த நடிகர் ஆஸ்கார் வாங்கிய ஒரே ஒருவர் தான் உண்டு. மார்லன் பிராண்டோ? இல்லை. ஸ்பென்சர் டிரேஸி? டஸ்டின் ஹாஃப்மேன்? ரிச்சர்ட் பர்ட்டன்? பீட்டர் ஓ டூல்? பால் நியூமேன்? இவங்க யாரும் இல்லை.
Daniel Day-Lewis ஆம், ஆறு முறை நாமினேஷன் பெற்று மூன்று முறை அகாடெமி அவார்ட். (My Left Foot 1990, There will be Blood 2008, Lincoln 2013)
இந்தத் தலைமுறையின் உலகச் சிறந்த நடிகராக கருதப் படுகிறவர்... இன்று பிறந்த நாள்!
ரிச்சர்ட் அட்டன்பரோவின் ‘காந்தி’யில் நடித்தவர். ஸ்பீல்பர்க்கின் 'லிங்கனிலு'ம்!
ஏற்றுக் கொண்டதெல்லாம் பெரும்பாலும் உணர்ச்சிகரமான, ஆர்ப்பரிக்கிற ரோல்கள். ராயல் ஷேக்ஸ்பியர் கம்பெனியில் நாடக நடிகராக இருந்து வந்தவர், நாடகத்தின் நேரடி த்ரில்லை திரையில் அனுபவிக்க வைத்து விடுவார்.
ஆக்ரோஷமாக கத்துவதில் ஓர் அழகு, அழகாக உச்சரிப்பதில் ஓர் அமரிக்கை, அமரிக்கையாக காதலிப்பதில் ஒரு ஸ்டைல்!
சிறுவயதில் மற்ற பசங்களால் கேலி செய்யப்படுவதைத் தவிர்த்து தன் நேரத்தை மிமிக்ரி செய்வதில் செலவழித்ததுதான் நடிகர் ஆவதற்கு அடித்தளமிட்டது.
வெரைட்டி தான் இவர் forte. ரொம்பவே ஸெலக்டிவ், கேரக்டர்களைத் தேர்ந்தெடுப்பதில். விதவிதமான கதாபாத்திரங்களிடையே வித்தியாசத்தை அனாயாசமாக காட்டுவார்.
நடிப்பில் துடிப்பைக் கொண்டுவர இவர் எடுத்துக் கொள்ளும் சிரமத்திற்கு எல்லை இல்லை. ‘The Ballad of Jack and Rose’ படத்தில் மனைவியைப் பிரிந்து பதின்ம வயது மகளுடன் தனியே வாழும் கேரக்டருக்காக இவர் மனைவியை விட்டு தனியே வசித்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ‘Gangs of NewYork’ படத்தில் நடிக்கும்போது ஷூட்டிங் நாட்கள் முழுக்க நியூயார்க் பாஷையிலேயே பேசிக்கொண்டிருப்பார். படத்தில் நடித்து முடித்தபின் பாத்திரத்திலிருந்து வெளி வருவதற்கு பல மாதங்கள் எடுத்துக் கொள்வாராம்.
பிரபல நாடகாசிரியர் ஆர்தர் மில்லர் நாடகம் அது. ‘The Crucible’. அந்தப் படத்தில் நடிக்கும் போதுதான் அவர் மகளை காதலித்து மணந்தார்.
காவியம் அது. Cerebral palsy நோய் வாய்ப்பட்ட பையன். இடது காலை மட்டுமே சரியாய் இயக்க முடிகிறவன். எல்லாராலும் உதாசீனப் படுத்தப்பட்டவனை அரவணைக்கும் அன்னைக்கு அவனிடம் நம்பிக்கை. ஓவியனாக, எழுத்தாளனாக உருவாகிறான். ‘My Left Foot’ படத்தில். உலகின் தலைசிறந்த நூறு நடிப்புக்களில் 11-வதாக பிரிமியர் பத்திரிகை அதைத் தேர்ந்தெடுத்ததில் ஆச்சரியமில்லை.
2017-இல் 'Phantom Thread’ படத்தில் நடித்ததோடு திரைக்கு End Card போட்டார்.
சொன்னது: ‘உங்களுக்கென்று ஒரு ரிதம் இருக்கும். அதைக் கண்டு கொள்வதுதான் உங்களை அறிந்து கொள்வதில் ஒரு முக்கியமான விஷயம். என்னுடைய ரிதம் கொண்டுதான் நான் நடிக்கிறேன்..’

ஸ்வர வர்ண லதா....


“ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்தி"ருக்கும் யேசுதாஸ் குரலுக்கு “மாமரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும் பார்த்திருந்து..” என்று எசப்பாட்டு கொடுக்க இவர் குரல் தான் பொருத்தம். வீணைத் தந்தியின் மென்மையுடன் போட்டியிடும் அளவுக்கு ஒடுங்கியெழும் குரலில் ‘நான் மாமரத்தின் கீழிருந்து..’வை அவர் பாடும் நேர்த்தி! அந்த “உன்னாலே தூக்கம் போயாச்சு, உள்ளார ஏதேதோ ஆயாச்சு!” போயாச்சு -வை அவர் இழுக்கிற இழுப்பில் நம் கவலையெல்லாம் போயாச்சு! “மாமன் நினைப்பில் சின்னத் தா...யிதான்,” என்று இழுத்துப் பாடிவிட்டு “மாசக் கணக்கில் கொண்ட நோ...யிதான்” பாடும்போது நானோ மீட்டர் குறையாது.
ஸ்வர்ணலதா! இன்று பிறந்தநாள். ஸ்வர வர்ண லதா....
இசைக் குடும்பம். இசை பயின்றவர். 3 வயதில் பாட ஆரம்பித்தவர். note உணர்ந்து noteworthy ஆகப் பாடக் கேட்கணுமா?
இவர் பாடல்களில் போவோமா ஒரு ஊர்கோலம்? “போவோமா ஊர்கோலம்.. பூலோகம்ம்ம்ம்ம்ம்…” எத்தனை ம்முக்கு நீண்டாலும் குறையாத மென்மை, உம் போட்டு கேட்க வைக்கும்.
எந்தப் பாட்டு? ‘காட்டு குயில் பாட்டு’ச் சொல்லவா? ‘கானங்கருங்குயிலை கச்சேரிக்கு வரச்’ சொல்லவா? ‘அக்கடா’ன்னு இவர் தொடங்கினால் ‘துக்கடா’ன்னு நாம விட முடியாம கட்டிப் போட்டு விடும் பாடல்கள்!
மாஸ்டர்பீஸ் “என்னுள்ளே..!" ஒரு பூ விரிவதைப் போல அந்த குரல் மெல்ல எழுகிறது. “என்னுள்ளே.. என்னுள்ளே..” என்று ராகத்தின் ஜீவனுக்குள் இட்டுச்செல்லும் குரல்! “கூடு விட்டு கூடு.. ஜீவன் பாயும் போது..” இந்த வரி! குரலின் சிலிர்ப்பில் தனிமையின் தவிப்பை உணர வைக்க முடியுமா? முடிகிறது. அடுத்த வரியில் அவரே பாடுவது போல ‘ஒரு வார்த்தை இல்லை கூற!’
“மாலையில் யாரோ..”வில் “நெஞ்சமே பாட்டெழுது, அதில் நாயகன் பேரெழுது..” என்று உச்ச ஸ்தாயியில் பாடும்போது எந்த உயரத்துக்கு எடுத்துச் செல்லணுமோ அதுவரை எடுத்துச் சென்று நிறுத்துகிறார். அதற்கு ஒரு அங்குலம் கூட மேலெழாமல்… மூன்று முறையும்… awesome! அந்த மாபெரும் இசைக் கோலத்துக்கு முழு நியாயமும் வழங்கியிருப்பார் தான் பாடிய விதத்தால்.
அந்த அசத்தல் பாட்டு! “ஆட்டமா தேரோட்டமா?” ஆடறேன், வலை போடறேன் என்று வார்த்தைகளை இசைவாக, இசையால் முடிச்சுப் போடும் ஸ்டைல்! இவருக்காகவே இசையமைத்ததோ என்று திகைக்க வைக்கும் பாடல் அது. அந்த ஓங்கி ஒலிக்கும் ‘ராக்கம்மா’வில் “அட, ராசாவே பந்தல் கட்டு, புது ரோசாப்பூ மாலை கட்டு…” வை எப்படித்தான் சற்றும் டோன் குறையாமல் கிசு கிசுப்பாகப் பாட முடிகிறதோ?
சொல்ல வேண்டியதில்லை. “போறாளே பொன்னுத்தாயி...” பற்றி. நேஷனல் அவார்டே கிடைத்துவிட்டது. ஜானகிக்கு ஒரு ‘தூரத்தில் நான் கண்ட இதயம்..’ என்றால் இவருக்கு ஒரு ‘எவனோ ஒருவன் வாசிக்கிறான்.’
மாசி மாசம் பாடலில் ‘ஆகா பிரமாதம்’ சொல்ல வைக்கும் அந்த "ஆசை ஆகா ப்ரமாதம் ... மோக கவிதா ப்ரவாகம் !" அடுத்து “உலகம் உறங்குது, மயங்குது, ஆஹாஹா…” என்று இழுப்பது, ஆஹாஹா! அருண்மொழியுடன் ‘சக்தி வேலி'ல் 'மல்லிகை மொட்டு மனதைத் தொட்டு…'விட்ட பாடல்!
எஸ் பி பியுடன் போட்டி போட்டு இனிமையை வீசுவார் “என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன்” பாடலில். கார்த்திக்குடன் “ஒன்னப்புதட்டு புல்லாக்கு..” பாடலில் (சின்ன ஜமீன்) “பொழுதன்னிக்கும் குழந்தையைப்போல் இருந்திட்டயே..” வரியில் அப்படியே எம் எஸ் ராஜேஸ்வரியின் குழைவு கொஞ்சும்.
ராவை அவர் உச்சரிக்கும் ரகங்களில் “ர்ர்ராஜாவைப் போல் ஐயராத்துப் பிள்ளை” தனி ரகம். “மாசி மாசத்"தில் “நாளை எண்ணி நான் காத்திருந்தேன், மாமன் உனக்குத்தானே!”வில் உனக்குத்தானேவை அவர் ஒலிக்கும் பாங்கு தனி... “சந்திரரே வாரும்..” பாடும் அழகைக் கண்டு ‘அந்தி வானம் தந்தனத்தோ பாடும்’. வளமான “விடலைப் புள்ளை நேசத்துக்கு..” ராகத்துக்கு இவர் குரல் தனி சோபை தரும். ரஹ்மானின் “முகாப்லா..” பாடலின் வித்தியாச ராகம் இவரிடமிருந்து ஒரு வித்தியாச குரலை கொண்டு வந்திருக்கும்.
அப்புறம் இவருக்காகவே பிறந்த பாடல் ஒன்று உண்டு. “ஆத்தோரம் தோப்புக்குள்ளே..” ('பாஞ்சாலங்குறிச்சி') இந்தப் பாட்டை யாராலும் ஒரு முறை கேட்க முடியாது, ஆமாம், நிறுத்த முடியாது நூறு முறை கேட்கிற வரை. பிழிந்து விடும் இதயத்தை. கழுகு கவ்வும் இரையாக கொண்டு போகப்பட்டு விடுகிறோம் பாட்டோடு.

“மேகாத்து மூலையில மேகம் கருக்கையில சுக்குத் தண்ணி வெச்சுத் தர ஆசைப் பட்டேன்..” இப்படி நாயகியின் ஒவ்வொரு ஆசையையும் அவர் பாட, வரிக்கு வரி நம் உணர்வு பிசையப்பட, "அத்தனையும் பொய்யாச்சு ராசா.."ன்னு சொல்லும்போது குரலின் சோகம் உலுக்கும். “ஒத்தயிலே நிற்குதிந்த ரோசா..”ன்னு முடிக்கும்போது அப்படியே நிற்கிறோம் அவரை இழந்து விட்டோமே என்று...