Friday, August 28, 2026

மின்னல் போலாகும் ...


1.ராகத்துக்கு ஏற்றபடியும், 2.டப்பிங் வாயசைப்புக்கு பொருத்தமாகவும் 3.மூலப் பாட்டின் அதே பொருள் வரும்படியும் எழுத வேண்டும் அந்தப் பாடலை...
"சோட்டீ ஸி யே ஜிந்தகானி ரே
சார் தின் கி ஜவானி தேரி ஹாயரே
ஹாய் கம் கி கஹானி தேரி..."
இதுவே முகேஷ் பாடிய மூலப் பாட்டு. ராஜ் கபூரின் பிரபல ’ஆ’ இந்திப் படத்தில் ராஜ் காதல் தோல்வியில் பாடுவது. ’அவன்’ என்று தமிழில் டப்பிங் ஆகி அதுவும் ஹிட்.
எத்தனை அழகாக எழுதினார் பாருங்க.. அதைவிட அழகாகவே...
‘மின்னல் போலாகும் இந்த வாழ்க்கையே
வான் வில் போலவே இளமை ஆனதே
ஆம் துன்பக்கதை உனதே...’
எழுதியவர் கம்பதாசன். 1950'களின் அருங்கவி.

அதே படத்தில் இன்னும் சில மனம் தொடும் பாடல்கள்:
"கல்யாண ஊர்வலம் வரும்... உல்லாசமே தரும்..
மகிழ்ந்து நான் ஆடிடுவேன்.."

"ஏகாந்தமாம் இம்மாலையில்
எனை வாட்டுது உன் நினைவே..."

"உன் பேரைக் கேட்டேன்
தென்றல் தனில் நான்
கண்டாலே ஆடும் நெஞ்சம் தை தை தை..."

"கண் காணாததும் மனம் கண்டுவிடும்
வான் சந்த்ரன் வலம் வரலாச்சே
உடல் எங்கும் பொங்கும் கனலாச்சே..."

இவரது பெயர் சொல்லும் மாபெரும் பாடல் 'ஞான சௌந்தரி' யின் "ஆதியே இன்ப ஜோதி...அருள் தாரும் தேவ மாதாவே..." ஸ்ரீதர் வசனம் எழுதிய 'மாமன் மகள்' படத்தில் வரும் அந்த பிரபல சோகப் பாடலை ("ஆசை நிலா சென்றதே... அபலை கண்ணீரில் நீந்துதே...") தவிர நௌஷத் இசையமைத்த 'மொகலே ஆஸம்' தமிழில் 'அக்பர்' என்று வந்தபோது இவர் எழுதினார் "கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே.. நிலா வீசும் வானில் மழை சூழலாச்சே.. "

நடிகராக நினைத்து அப்புறம் கதை வசனம் எழுதி பின் பாடலாசிரியராக பரிமளித்தார். 'வானரதம்' படத்துக்கு இவர் எழுதிய பாடலை லதா மங்கேஷ்கரே பாடினார் என்றால், "பார்த்தால் பசி தீரும்.." என்று பி யூ சின்னப்பா 'மங்கையர்க்கரசி'யில் பாடியது இவர் பாடல்தான்.

Monday, August 24, 2026

வாழ்க்கை என்பதே...


சில மேற்கோள்கள்...
‘வாழ்க்கை என்பதே ஒரு மேற்கோள்தான்.’
‘நிலவும் அமைதியை மேம்படுத்த முடியும் என்றால் மட்டுமே பேசு!’
‘உன்னுடன் நான் இருப்பதையும் உன்னுடன் நான் இல்லாததையும் வைத்தே நேரத்தை என்னால் கணக்கிட முடிகிறது.’
‘நடக்கக் கூடியதாகவோ நடக்கிறாற் போலவோ இல்லை நிஜம்.’
‘எழுத்து என்பது வழி நடத்தப்படும் கனவுக்கு மேல் வேறில்லை.’
‘புத்தகம் என்பது தனிப்பட்ட ஒன்றல்ல. அது ஓர் உறவு.எத்தனையோ உறவுகளுக்கு அச்சாணி.’
‘மனிதனின் எளிமையை விட மிகவும் சிக்கலானது உலக இயந்திரம்.’
சொன்னவர்...Jorge Luis Borges. பிரபல ஸ்பானிஷ் எழுத்தாளர்.
இன்று பிறந்த நாள்.
எதையும் மறக்காத பேர்வழியைப் பற்றி இவர் எழுதிய சிறுகதை எவராலும் மறக்க முடியாதது: 'Funes, the Memorious'

Sunday, August 23, 2026

முழுமையாக ஒரு வார்த்தை...

முழுமையாக ஒரு வார்த்தை...

கே.பி.ஜனார்த்தனன்

(’அமுதம்’ ஏப்.2012 இதழில் வெளியான 'அன்புடன் ஒரு நிமிடம்-2')




"என்ன ஞாபகம் வெச்சாலும் spelling மறந்துடுது!” அலுத்துக் கொண்டான் பரசு, “Complimentary, Complementary இந்த ரெண்டு வார்த்தையும் குழப்புது என்னை.”

“ரொம்ப சுலபம்,” என்றார் வாசு.  அப்பா.  ”Complimentary என்பது வாழ்த்துவது. Complementary ன்னா முழுமையாக்குவதுங்கற அர்த்தத்தில் வருவது. முழுமைக்கு என்ன வார்த்தை? Complete. அதனால Comple என்று L-க்கு பதிலாக E வருது, அப்படி ஞாபகம் வெச்சுக்கலாமே? தவிர அது ஒரு அழகான வார்த்தையும் கூட. ஒன்றையொன்று முழுமையாக்குவது. வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கிற எந்த சம்பத்துமே வாழ்க்கையை முழுமையாக்குவதாக இருக்கவேண்டும். அப்பதானே அழகு? பயன்?"

சுவாரசியம் தட்டிற்று இவனுக்கு.

”கணவனும் மனைவியும் எடுத்துக்கொண்டால் இவனிடம் இல்லாத சில நல்ல குணங்கள் அவளிடமும் அவளிடமில்லாத சில அவனிடமும் என அமைந்தால் அந்த அளவில் அது Complementary தானே?"

"கண்டிப்பா."

"கூட்டுக் குடும்ப காலத்தில் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா என்று குடும்பம் என்ற அமைப்பு முழுக்க முழுக்க மொத்ததில் Complementary ஆக அமைந்திருந்ததால் குழந்தைகளுக்கு வாழ்வில் அதுவே அவர்களின் மாபெரும் இயங்கு முன்னேற்றத் தளமாக இருந்தது. இப்ப அதை நாமே ஒதுக்கிவைத்துவிட்டு அங்கும் இங்கும் அலைந்து திரிந்து அந்த Complementary- யின் ஒவ்வொரு அங்கமாக சேகரிக்க வெளியில் ஓடுகிறோம். அப்ப தாத்தா படம் வரையக் கற்றுக் கொடுப்பார். எப்படி? ஆர்வத்தோடு கற்றுக்கொள்கிற மாதிரி. பாட்டி பழமொழியில் தொடங்கி பக்திப் பாடல் படிக்க வெச்சு ப த நி ச வரை சொல்லிக் கொடுப்பார். சித்தப்பா இலக்கணம், மாமா பேட்மிண்டன்... எல்லாம் ஒரே இடத்தில் நடந்திரும். இப்ப நாம அவனை அழைச்சிட்டு நீச்சல் கிளாஸ், மியூசிக் கிளாஸ், டிராயிங் கிளாஸ் அப்படீன்னு பேட்டைவிட்டு பேட்டை அலையறோம்...’

”அட, ரொம்ப யோசிக்க வைக்கிறீங்களே?”

”அத்தனைக்கத்தனை நல்லது. அந்த ரெண்டு வார்த்தைகளும் மறக்காது இல்லையா?”

கேட்டுக் கொண்டிருந்த தாத்தா தனக்குள்.. ’ஆஹா யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க! இனி நல்லதுதான் நடக்கும்.’

><><