Monday, April 27, 2026

தந்திக்குப் பிந்தி...


1825. வாஷிங்டனில் அமர்ந்து அந்த ஜெனரலின் உருவப்படத்தை அமைதியாக தீட்டிக் கொண்டிருந்தார் அந்த ஓவியர். இளம் மனைவிக்குத் திடீர் நோய் என்று தந்தை அனுப்பிய கடிதம் வந்தது குதிரைத் தபாலில். விரைந்தார் ஊருக்கு. சேதி கிடைக்குமுன்பே இறந்துவிட்ட மனைவியின் முகத்தைக் கூட பார்க்க முடியவில்லை. செய்தி வந்து சேர நாட்கள் ஆனதே காரணம். மாளாத சோகத்திலிருந்து மீளாத அவர் மனதில் ஒரு வைராக்கியம் பிறந்தது. ‘துரிதம் உண்டாக்குவேன் கடிதம் செல்ல!’
நிகழ்வு 2. கப்பலில் திரும்பிக் கொண்டிருக்கிறார் அவர், ஐரோப்பாவிலிருந்து. சக பயணியான அமெரிக்க விஞ்ஞானி, எலெக்ட்ரோ மேக்னெடிஸத்தில் ஐரோப்பாவில் நடத்திய சோதனைகளைப் பற்றிச் சொல்லுகிறார். இவர் மூளையில் பளிச்! ‘தொலை தூரத்துக்கு சிக்னலைக் கொண்டு செல்ல உபயோகிக்கலாமே இதை?’ முயன்றார். தந்தியை முந்தி சிந்தித்தவர்கள் 36 வருடமாக 26 கம்பிகளுடன் போராடிக் கொண்டிருக்க, ஒரே கம்பிக்குள் கொண்டு வந்தார். அந்த Code -ஐ எழுதினார் Morse.
Samuel Morse…. இன்று பிறந்த நாள்!
Patent கிடைத்தாலும் patronage கிடைக்கவில்லை. ஆறு வருடம் போராடி அரசின் நிதி உதவி பெற்று அமைத்தார் ஒரு ஐம்பது மைலுக்குத் தந்திக் கம்பங்களை. உதவிக்கு போராடிய பேடண்ட் அதிகாரி மகள் அந்த பைபிள் வாசகத்தை சொன்னாள் முதல் தந்தியாக! ‘What hath God wrought?’
தந்திக்குப் பிந்திய விளைவுகள் அமோகம். சேதிகள் புறாக்களாகப் பறந்தன. யுத்தத்திலும் சத்தமில்லாமல் உதவிற்று சத்தமிட்டு! நிகழ்வுகளில் ஒன்று: லண்டனில் தன் காதலியை கொன்று விட்டு தப்பி ஓடுகிறான் ரயிலில் ஒருவன். தந்தியில் அடையாளம் கொடுக்கப்பட்டு அவன் இறங்கும் போது தயாராக அதிகாரிகள் ரயில்வே ஸ்டேஷனில்!
அடுத்த 30 வருடத்துக்குள் அமெரிக்கா நெடுகிலும் நீண்ட தந்திக் கம்பி, அட்லாண்டிக்கையும் நீந்திச் சென்றது ஐரோப்பாவுக்கு. முதல் டெலிக்ராமை விக்டோரியா ராணி தந்தியித்தார் அமெரிக்க அதிபர் Buchanan -க்கு.
ஆங்காங்கே போட்டிக் கம்பங்களை நாட்டிய கம்பெனிகளிடமிருந்து போராடிப் பெற வேண்டியதாயிற்று உரிமைகளை. கப்பலில் வந்த விஞ்ஞானியும்கூட சொந்தம் கொண்டாட, சக பயணிகளின் சாட்சியால் ஜெயித்தார். மில்லியன்களை சந்தித்தார். ஐரோப்பாவில் மட்டும் கிடைத்தது 400000 ஃப்ராங்குகள். (இவருக்குப் 18 வருட முன்பே வேறொருவர் கண்டுபிடித்துவிட்டார் தந்தியை என்றொரு 'வதந்தி'யும் உண்டு.)
சூபர் ஹிட் படம், A Beautiful Mind, அதில் Priceton University யில் வரவேற்று பேசும் புரஃபசர் ‘உங்களில் யார் மோர்ஸ் ஆகப் போகிறீர்கள்?’ என்பார்.
மரிப்பதற்குப் பத்து மாத முன் அவர் சிலையொன்றை நிறுவி, ஆதரவாளர்கள் நடத்திய விழாவில் கலந்துகொண்ட மோர்ஸ், உலக முழுதுக்கும் ஒரு தந்தியைக் கொடுத்தார்: ‘குட் பை!’.

அறிவியல் தேடல்...


‘எப்படி நாம் கடந்த காலத்தின் சந்ததியோ அதேபோல் வருங்காலத்தின் பெற்றோரும் நாம்தாம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.’
சொன்னவர் Herbert Spencer (1820 -1903)
அறிவியலாளர், தத்துவவாதி...பன்முக வித்தகர். இன்று பிறந்த நாள்!
அவர் காலத்தில் மிக அதிகம் பேசப்பட்டவர்.
சர்வ சகஜமாக இன்று நாம் பயன்படுத்தும் 'Survival of the Fittest' என்ற சொற்றொடரை அமைத்தவர் இவர்தான்.
இன்னும் சொன்னவை...
‘கல்வியின் முக்கிய குறிக்கோள் அறிவு அல்ல, செயல்பாடு.’
‘அறிவியல் தேடல்களுக்குள் இறங்காதவர்கள், அவற்றைச் சுற்றியுள்ள கவிதைகளைக் கொஞ்சமும் அறிய மாட்டார்கள்.’
‘நாம் மிகுந்த விருப்பத்துடன் தேடும் பொருட்கள், கிட்டும்போது அந்த அளவு சந்தோஷத்தைக் கொண்டு வருவதில்லை. பெரும்பாலான சந்தோஷங்கள் எதிர்பாராத இடங்களில் இருந்து வருகின்றன.’
‘நுண்கலைகளில் மிக உயர்ந்த இடத்தை இசைக்குத்தான் தர வேண்டும். எல்லாவற்றையும்விட அதுவே மனிதனின் ஆன்மாவைக் கட்டிக் காக்கிறது.’
‘அன்பு தான் வாழ்வின் முடிவு, ஆனால் அது முடிவில்லாதது. அன்பு தான் வாழ்வின் சொத்து ஆனால் செலவழிக்கத் தீராதது. அன்பு தான் வாழ்வின் பரிசு. அளிப்பதில் கிடைக்கும் பரிசு.’
‘ஒரு மனிதனின் அறிவு ஒழுங்கற்றதாக இருந்தால், அது எத்தனை அதிகம் இருக்கிறதோ அத்தனை குழப்பம் ஏற்படும்.’
‘பாரபட்சத்தை நாம் அனைவரும் எதிர்க்கிறோம் ஆனால் பாரபட்சம் நம் அனைவரிடமும் இருக்கிறது.’

என் கனவுகள்...


‘என் கனவுகள் எனக்கு மட்டுமே சொந்தமானவை. அவற்றிற்காக நான் வேறு யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை. துன்புறும்போது அவை எனக்குப் புகலிடம். தளையற்று இருக்கும்போது அவை என் ஆகப் பெரிய சந்தோஷம்.’
சொன்னவர்Mary Wollstnecraft…
பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட பெருமைமிகு எழுத்தாளர். 38 வயதிலேயே மறைந்த முக்கியமானவர்களில் ஒருவர். இன்று பிறந்த நாள்..
அவர் காலத்தைய ஆண்களின் மட்டற்ற சுதந்திரமும் அதிகாரமும் பெண்களுக்கு ஏற்படுத்திய சிரமங்களையும் பாதிப்பையும் தன் வாழ்க்கை அனுபவங்களில் உணர்ந்தவர், பெண்ணின் உரிமையை நிலைநாட்டத் துடித்தார்.
‘A Vindication of the Rights of Woman’ என்ற அவரது புத்தகம் பெண்ணுரிமைக்காக எழுந்த பெரும் ஆக்கங்களில் ஒன்று.
இவரே ஒரு பெரிய எழுத்தாளர் என்றாலும் Frankenstein எழுதிய மேரி ஷெல்லியின் அம்மா என்பது இன்னொரு விசேஷம்.
சொன்ன இன்னும் சில:
‘எளிமையும் நேர்மையும் சேர்ந்தே பயணிக்கும், ஏனெனில் இரண்டும் உண்மையை நேசிப்பதால் வருபவை.’
‘எந்த ஒரு மனிதனும் தீமையை தீமை என்று தெரிந்து தேர்ந்தெடுப்பதில்லை, அதை சந்தோஷம் என தவறாக நினைத்துக் கொள்கிறான், தான் தேடும் நன்மை என அதை நினைக்கிறான்.’
‘நான் உன்னிடம் விரும்பியதெல்லாம் உன் இதயமே, அது போய் விட்ட பின் உன்னிடம் எனக்கு கொடுப்பதற்கு இனி ஒன்றுமே இல்லை.’