Sunday, August 30, 2026

அதுவும் அன்றே ...


"என்ன குற்றம் கண்டீர்?" என்கிறார் சிவாஜி.
"பொருளில்தான் குற்றம்! சொல்லில் குற்றமில்லை," என்கிறார் சிவாஜி.
என்ன இது? அதை சொல்வது ஏ பி நாகராஜன் அல்லவா?
இல்லை, அவர் வசனம் மட்டுமே.
சிவனும் சிவாஜியே; நக்கீரனும் சிவாஜியே.
"இங்கு எல்லாமே நீர் தானா?" என்பாரே நாகேஷ், திருவிளையாடலில்... அதுபோல.
ஆம், அங்கு இருவருமே அவர்தான்.
அதுவும் அன்றே (1956) நடித்துவிட்டார்..
படம்: 'நான் பெற்ற செல்வம்' அதில் வரும் டிராமா காட்சி! (லிங்க் கீழே)
டபிள் ரோலில் கலக்கியிருப்பார் சிவாஜி. சிவனாகவும் நக்கீரராகவும்.
இரு குரலிலும் ஒரு distinct difference காட்டி திகைக்க வைத்திருப்பார். அது போனஸ்!

 

Saturday, August 29, 2026

வள்ளலாக வாழ்ந்தவர்...


மனசில எந்தக் கவலைதான் இருக்கட்டும், ஒரு மூணு நிமிட் கமிட் பண்ணி இதைக் கேட்டால், அப்புறம் அதைத் தேட வேண்டியிருக்கும்...
நினைத்தாலே சிரிப்பு வந்துவிடும்! சிரிப்பின் சிறப்பை சிரிப்பால் நிரப்பிச் சொல்லும் பாட்டு.
சங்கீத சிரிப்பு, சாகசச் சிரிப்பு என வகை வகையாய் சிரித்துக் காட்டி…
பாட்டு முடியும்போது நாமே சிரிப்பில் மாட்டிக் கொண்டு விடுவோம்.
ரிகார்டிங்கின்போது கூட இருந்தவர்கள் எப்படித்தான் சிரிக்காமல் இருந்தார்களோ?
"சிரிப்பு! அதன் சிறப்பை சீர் தூக்கிப்
பார்ப்பது நமது பொறுப்பு!"
...என்று தொடங்கும் அந்த என் எஸ் கிருஷ்ணன் பாடல் வந்தது சிவாஜி பத்மினி நடித்த 'ராஜா ராணி' படத்தில்.. சிரித்துக் கலக்கிவிடுவார் என். எஸ். கே!

கலைவாணர்! .. கடைசி வரை வள்ளலாகவே வாழ்ந்தவர்.

><><><

 

Friday, August 28, 2026

மின்னல் போலாகும் ...


1.ராகத்துக்கு ஏற்றபடியும், 2.டப்பிங் வாயசைப்புக்கு பொருத்தமாகவும் 3.மூலப் பாட்டின் அதே பொருள் வரும்படியும் எழுத வேண்டும் அந்தப் பாடலை...
"சோட்டீ ஸி யே ஜிந்தகானி ரே
சார் தின் கி ஜவானி தேரி ஹாயரே
ஹாய் கம் கி கஹானி தேரி..."
இதுவே முகேஷ் பாடிய மூலப் பாட்டு. ராஜ் கபூரின் பிரபல ’ஆ’ இந்திப் படத்தில் ராஜ் காதல் தோல்வியில் பாடுவது. ’அவன்’ என்று தமிழில் டப்பிங் ஆகி அதுவும் ஹிட்.
எத்தனை அழகாக எழுதினார் பாருங்க.. அதைவிட அழகாகவே...
‘மின்னல் போலாகும் இந்த வாழ்க்கையே
வான் வில் போலவே இளமை ஆனதே
ஆம் துன்பக்கதை உனதே...’
எழுதியவர் கம்பதாசன். 1950'களின் அருங்கவி.

அதே படத்தில் இன்னும் சில மனம் தொடும் பாடல்கள்:
"கல்யாண ஊர்வலம் வரும்... உல்லாசமே தரும்..
மகிழ்ந்து நான் ஆடிடுவேன்.."

"ஏகாந்தமாம் இம்மாலையில்
எனை வாட்டுது உன் நினைவே..."

"உன் பேரைக் கேட்டேன்
தென்றல் தனில் நான்
கண்டாலே ஆடும் நெஞ்சம் தை தை தை..."

"கண் காணாததும் மனம் கண்டுவிடும்
வான் சந்த்ரன் வலம் வரலாச்சே
உடல் எங்கும் பொங்கும் கனலாச்சே..."

இவரது பெயர் சொல்லும் மாபெரும் பாடல் 'ஞான சௌந்தரி' யின் "ஆதியே இன்ப ஜோதி...அருள் தாரும் தேவ மாதாவே..." ஸ்ரீதர் வசனம் எழுதிய 'மாமன் மகள்' படத்தில் வரும் அந்த பிரபல சோகப் பாடலை ("ஆசை நிலா சென்றதே... அபலை கண்ணீரில் நீந்துதே...") தவிர நௌஷத் இசையமைத்த 'மொகலே ஆஸம்' தமிழில் 'அக்பர்' என்று வந்தபோது இவர் எழுதினார் "கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே.. நிலா வீசும் வானில் மழை சூழலாச்சே.. "

நடிகராக நினைத்து அப்புறம் கதை வசனம் எழுதி பின் பாடலாசிரியராக பரிமளித்தார். 'வானரதம்' படத்துக்கு இவர் எழுதிய பாடலை லதா மங்கேஷ்கரே பாடினார் என்றால், "பார்த்தால் பசி தீரும்.." என்று பி யூ சின்னப்பா 'மங்கையர்க்கரசி'யில் பாடியது இவர் பாடல்தான்.