Sunday, July 6, 2025

அணில் சொன்ன சேதி..

அணில் சொன்ன சேதி..
கே பி ஜனார்த்தனன் (‘சுட்டி விகடன்' 31-8-07)
அணில் சொன்ன சேதி கேட்டு மிருகங்கள் கவலையில் உறைந்து போய் நின்றன.
“நிஜமாவா?” என்றது மான்.
“ஐயையோ, அப்படியா?” என்றது முயல்.
“சே, என்னைவிட தந்திரசாலியா இருக்கிறாங்களே?” வியந்தது நரி.
யானை மட்டும் மீண்டும் அணிலிடம் விசாரித்தது.
“நீ கேள்விப்பட்டதை மறுபடியும் தெளிவாக சொல்லு!”
“இந்த பூமியிலே இனி வாழ முடியாது, செவ்வாய்க் கிரகத்திலே எல்லா வசதிகளையும் உருவாக்கிக்க முடியும், பூமிக்கு இனி குட்பை சொல்லிவிட வேண்டியதுதான்னு மனிதர்கள் பேசிக்கொண்டதை நான் கேட்டேன்,” என்று அணில் சொன்னதைக் கேட்டு மிருகங்கள் சோகத்தில் ஆழ்ந்து போயின.
சந்தனக் காட்டில் எல்லா மிருகங்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தன. நகரில் உள்ள விஞ்ஞானிகளின் ஆய்வுக்கூடத்திற்கு தினமும் சென்று அணில் தகவல்களை திரட்டி வரும். அணிலுக்கு அங்கு ராஜ மரியாதை!
விஞ்ஞானிகள் கொடுக்கும் பழம் கொட்டைகளைத் தின்றுவிட்டு அங்கேயே சுற்றி வரும். அப்போது காதில் விழும் சேதிகளை காட்டுக்கு வந்து மற்ற மிருகங்களிடம் சொல்லும். இதனால் அணில் மீது மற்ற விலங்குகளுக்கும் அலாதியான பிரியம். சில நாட்களாக அணில் சொன்ன சேதிகள் மற்றவைகளைக் கவலையடையச் செய்தது. வேற்றுக் கிரகங்கள் பற்றிய மனிதர்களின் ஆராய்ச்சி, அங்கே குடியேற அவர்கள் திட்டமிடுவது பற்றி விலங்குகள் பரபரப்பாக பேசிக்கொண்டன. இப்போது ஒரேயடியாக பூமியை விட்டு மனிதர்கள் செவ்வாயில் குடியேறப் போகிறார்கள் என்று அணில் சொன்னதைக் கேட்டு மிருகங்கள் கவலை கொண்டன.
“எதற்காக இந்த அழகிய பூமியை விட்டுப் போறாங்க?” வினவியது முயல்.
“அதுவா? அவங்க இந்த பூமியை ஏற்கனவே பாழ் படுத்திட்டாங்க. இயற்கையின் சுழற்சியையும் கெடுத்துட்டாங்க. இதுக்கு மேலே இங்கே இருக்கிறது ஆபத்துன்னு வேற இடத்துக்கு போறாங்க.”
“நாமும் அவங்களோடு போக முடியாதா?” கேட்டது மான்.
“ஊஹூம்! அவங்க தங்களைக் காப்பாத்திக்கத்தான் நினைக்கிறாங்களே தவிர நம்மளைப் பத்தி யோசிக்கவே இல்லை.”
“அப்போ நாம என்ன பண்றது?”
“நாம இங்கேயே அழிய வேண்டியதுதான்.”
அன்று முழுவதும் எந்த விலங்கும் எதுவுமே சாப்பிடவில்லை அடுத்த நாளும் அணில் ஆய்வுக்கூடத்திற்கு விரைந்தது சில தகவல்களுடன் மாலை காட்டுக்கு திரும்பியது.
“நம்மையும் அழைத்துச்செல்ல அவங்க தீர்மானம் பண்ணிட்டாங்க,” என்று அணில் சொன்னவுடன் விலங்குகள் ரொம்பவும் ஆர்வமாயின.
“அப்படியா?” என்று மயில் கேட்க, “உண்மையாகவே நம்மை அழைச்சிட்டுப் போறாங்களா?” என்றது ஆமை.
“ஆமா. அந்தக் கிரகத்திலும் நாம அவங்களுக்குத் தேவைன்னு நினைக்கிறாங்க, அதனாலதான்!”
“அட, புரிஞ்சிக்கிட்டாங்களா?”
“ஆமாம்! பொதி சுமக்கவும், பால் கறக்கவும் குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டவும்னு இப்படிப் பல விஷயங்களுக்கு அவங்களுக்கு நாம தேவை. அதனால நம்மையும் அங்கே கொண்டு போறாங்க. இனி நாம கவலைப்பட வேண்டாம்.” இதைக் கேட்டு எல்லா விலங்குகளும் மகிழ்ந்தன.
மறுநாள் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டே வந்தது அணில்
“அவங்களுக்கு நாம தேவைதான். ஆனால் நம்மை அழைச்சிட்டுப் போகாமலேயே அந்தத் தேவைகளைப் பூர்த்தி செஞ்சுக்குவாங்களாம்!” எல்லாரும் விழிக்க அணில் விளக்கியது.
“தங்களுக்குத் தேவையான விலங்குகளை குளோனிங் முறையில் உருவாக்கிக்குவாங்களாம்!”
அதைக்கேட்டு எல்லாரும் அசந்து போய் நிற்க, மூத்த விலங்கான யானை பேச ஆரம்பித்தது.
“எனக்கென்னவோ இது வருத்தப்பட வேண்டிய விஷயமா தெரியலே! நிஜமாகப் பார்த்தால் நாம் சந்தோஷப்படணும். இதைக் கொண்டாடணும்!”
“என்ன சொல்றீங்க?” கேட்டது நரி.
“இதோ பாருங்க, மனுஷங்கதான் பூமியைத் பாழ் படுத்தினது. அவங்க இங்கேயிருந்து போயிட்டா அப்புறம் இயற்கை தன் இயல்பு நிலைக்கு வந்துடும். பூமி மறுபடியும் ஒழுங்காயிடும். அதனால அவங்க நம்மையும் தங்களோட கூட்டிப்போக நினைத்தால்தான் நாம கவலைப்படணும்,” என்று யானை நிதானமாகச் சொன்னது.
இதைக்கேட்டு மற்ற விலங்குகள் மகிழ்ச்சி அடைந்தன.

யாரும் மறக்காத...


அந்தப் படத்தை யாரும் மறந்திருக்க முடியாது. ஜீவனாம்சம் கொடுக்கத் திணறிக் கொண்டிருக்கும் தன் காதலனை மணம் செய்து கொள்ள பணம் வேணும். கம்பெனியில் நம்பி ஒப்படைத்த நாற்பதினாயிரம் டாலரை அபேஸ் பண்ணிக் கொண்டு காரில் விரைகிறாள் அவள். மழை, புயல்.. மோட்டல் ஒன்றில் தங்க வேண்டியதாகிறது. நார்மல் அல்லாத நார்மன் தான் அதன் ஓனர். ஷவரில் குளிக்கும் போது மெல்லக் கொல்லப் படுகிறாள்... ஆம், அதேதான். ‘Psycho.’
ஹிட்ச்காக்கின் ஹிட் டாக்கி.
‘மெயின் பிக்சர் ஆரம்பித்தபின் யாரும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்’ என்று தியேட்டர்களில் அறிவிக்கப்பட்ட அந்தப் படத்தில் ஹீரோயினாக வந்தவர்...
Janet Leigh... இன்று ( July 6) பிறந்த நாள்.
அந்த சின்னதானாலும் முக்கியமான வேடத்திற்கு ஆஸ்கார் நாமினேஷன் பிளஸ் கோல்டன் க்ளோப் அவார்ட் கிடைத்தது. ஒரு வாரம் எடுக்கப்பட்டது அந்த ஷவர் காட்சி. நடிக்கும்போது தெரியவில்லை ஆனால் அதை திரையில் பார்த்ததும்? ஷவரில் குளிப்பதையே நிறுத்திவிட்டார்.
பிற்பாடு ‘Hitchcock’ என்று படம் எடுத்தபோது அதில் இவராக நடித்தது நடிகை Scarlett Johansson.
‘Houdini’ படத்தில் நடிக்கும்போது கணவர் Tony Curtis -ஐ விட இவர் பிரபலமாக இருந்தார். ஆனாலும் அவர் பெயரை முதலில் போட வைத்தார்.
தம்பதிகள் சேர்ந்து நடித்த படங்களில் முக்கியமானது The Vikings. இந்த தம்பதிக்கு பிறந்தவர் தான் Jamie Lee Curtis. அவரும் பிரபல நடிகை (‘True Lies’)
அந்த ப்ரஃபசரிடம் படிக்கிற மாணவி ஒருத்தி அவரை முத்தமிட்டுவிட, பார்க்கும் அவர் மனைவி பத்ரகாளியாகிறாள். தப்பிக்க, தான் ஒரு சீக்ரட் போலீஸ் என்று ஒரு பொய் சொல்கிறார். அது யாரடா என்று நிஜப் போலீஸ் துரத்த… காமெடி ரகளை! கணவர் டோனியுடன் நடித்த ‘Who Was That Lady?’
பிரபல டைரக்டர் நடிகர் Orson Welles இன் ‘Touch of Evil’ படத்தில் நடித்தது பெருமிதம் தரும் அனுபவம்.

கவலைகளை உன்னிடத்தில் ...


பேச்சிழந்த சிறுவன் ராமு... நம்பிக்கையிழந்த தந்தை ஜெமினி... தாளாமல் கடலில் விழலாம் என்று அலைகளில் இறங்க... தூரத்தில் ஒலிக்கிறது பாடும் குரல், கோவிலிலிருந்து.
“கண்ணன் வந்தான்.. அங்கே கண்ணன் வந்தான்!
ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்."
கால்கள் தம்மையறியாமல் இழுத்துச் செல்கிறது சன்னதிக்கு."பசிக்கு விருந்தாவான், நோய்க்கு மருந்தாவான், பரந்தாமன் சன்னதிக்கு!"
அங்கே குருக்கள் நாகையா பாடிக் கொடிருக்கிறார்.
"..கேட்டவர்க்கு கேட்டபடி கண்ணன் வந்தான்!
கேள்வியிலே பதிலாக கண்ணன் வந்தான்!"
கண்ணன் எப்படியெல்லாம் வந்தான் என்பதை கண்ணதாசனைவிட யாரால் அத்தனை அழகாகச் சொல்ல முடியும்?
எங்கோ ஒரு மதகு திறந்து, ஒரு திவலை விடாமல் மனக் கவலை வடிந்துவிட்ட மாதிரி…தானாய் ஓர் ஊற்று சுரந்து அன்பு வெள்ளம் நிறைந்து பெருக்கெடுத்தாற்போல உணர்ந்து…
இப்போது ஜெமினியும் சேர்ந்து பாடுகிறார்.
"கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும்!
காவல் என்னும் கைநீட்டிக் காக்க வேண்டும்!"
கனிவும் ஏக்கமுமாக அவர் குரலும் (டி.எம்.எஸ்.) அன்பும் ஆதரவுமாக இவர் குரலும்... (சீர்காழி)
உருகி உருகி பாடுகிறார்கள். மருகி மருகி கேட்கிறோம்.. படம்? 'ராமு.'
அந்தக் கடைசி வரிகள்! விஸ்வநாதனின் இசை இங்கே விஸ்வரூபம் எடுக்கிறது.
"கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா!
கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா..!"
எல்லோருடைய உள்ளமுமே வேண்டுவதல்லவா அது!

><><><