Monday, May 18, 2026

உலகின் தலை சிறந்த ...


உலகம் சுற்ற வேண்டும் என்பதுதான் ஜார்ஜின் லட்சியம். ஆனால் தன் ஒரே கிராமத்தை விட்டு போக முடியாத நிலை. அப்பா விட்டுச்சென்ற வங்கியை நடத்தியாக வேண்டும். இல்லாவிட்டால் ஊரை விழுங்கி ஏப்பம் விடக் காத்திருக்கும் வட்டி கடைக்காரன் பாட்டர் கைக்குப் போய்விடும். பொறுப்பை ஏற்கிறான். என்ன துரதிர்ஷ்டம், பேங்க் பணத்தை அவர் மாமா தவறவிட அது பாட்டர் கைக்கு போய்விடுகிறது. பணத்தை வைத்தாக வேண்டும் பேங்கில், இல்லாவிடில் போலீஸ்தான்.
செத்துப் போவதுதான் ஒரே வழி என நினைக்கிறான். குடும்பமும் தன் இன்சூரன்ஸ் பணத்தை வைத்துக்கொண்டு சந்தோஷமாக இருக்கும் என்று பாலத்திலிருந்து ஆற்றில் குதிக்கிறான். அவனை அழைத்துப் போக வந்திருக்கும் தேவதை க்ளாரென்ஸ், அவன் உலகில் இல்லாவிடில் என்னவெல்லாம் ஆகியிருக்கும், ஆகும் என்று அவனுக்கு வரிசையாகக் காட்டுகிறது. எல்லாம் பாட்டர் கைக்குப் போய் அந்தக் கிராமமே குட்டிச் சுவராகிறது. அவன் குடும்பம் அல்லாடுகிறது. எல்லாம் பார்த்தவன் நான் வாழணும் வாழணும் என்று கத்துகிறான், பாலத்தின் மேலிருந்து. ஓடிவரும் போலீஸ் நண்பர் அவன் உதட்டிலிருக்கும் பழைய வடுவைக் காட்ட இன்னும் உயிரோடிருப்பதை அறிந்து வீட்டுக்கு ஓடுகிறான். ஊர்மக்கள் அனைவருமே அவன் வீட்டுக்கு வந்திருக்கின்றனர் அவரவருக்கு முடிந்த தொகையுடன், அவனைக் காப்பாற்ற. வாழ்க்கைக்குத் திரும்புகிறான். தேவதை தன் சிறகுகளை, பதவி உயர்வு, பெறுகிறது.
உலகின் தலை சிறந்த படங்களில் ஒன்றான ‘It’s a Wonderful Life (1946)
தயாரித்து இயக்கியவர் உலகப் புகழ் பெற்ற இத்தாலிய அமெரிக்க இயக்குநர்...
Frank Capra… இன்று பிறந்த நாள்!
ஆறு முறை நாமினேஷன் பெற்று மூன்று முறை பெஸ்ட் டைரக்டர் ஆஸ்கார் வாங்கியவர். (‘It Happened One Night’, ‘Mr Deeds Goes to Town’, ‘You Can’t Take It with You.’)
கேப்ராவுக்குப் பிடித்த படமும் இதுதான். ஜார்ஜ் பாத்திரத்தில் வெளுத்து வாங்கியவர், அவர் தான் நடிக்க வேண்டுமென்று கேப்ரா விரும்பிய, ஜேம்ஸ் ஸ்டீவர்ட்.
இந்தக் கதையைத் தழுவி தமிழிலும் ஒரு படம் வந்தது 1954 இல். ‘முதல் தேதி.’ அந்த அசத்தலான ரோலில் உருக்கமான நடிப்பைத் தந்தவர்.. வேறு யார், சிவாஜிதான்.
இந்த 135 நிமிடப் படத்துக்கு உபயோகித்த ஃபிலிம் சுருள் 3,50,000 அடி. போட்ட கிராமத்து ஸெட் பரப்பு 89 ஏக்கர்.
அமெரிக்கன் ஃபில்ம் இன்ஸ்டிட்யூட் No.1 All Time Inspirational Movie யாகத் தேர்ந்தெடுத்த இந்தப் படத்தைக் கதையாகமுதலில் எழுதிய Philip Stern, யாருமே பப்ளிஷ் செய்யத் தயாராக இல்லாததால் சின்ன புக் லெட் ஆக 200 பிரதி அடித்து கிறிஸ்துமஸ் வாழ்த்தாக அனுப்பி வைத்தாராம் நண்பர்களுக்கு.

சின்னஞ்சிறு கிளியே...


“சின்னஞ்சிறு கிளியே.. கண்ணம்மா.. செல்வக் களஞ்சியமே…”
பாரதியாரின் அந்தப் பாடலுக்கு அதைவிடச் சிறந்த இசையை யாரும் அளிக்க முடியாது. ராகமாலிகையில் அமைந்த அந்தப் பாடலில் ஒன்றிலிருந்து அடுத்ததற்கு ராகம் மாறும் அழகே அழகு! அந்த காலத்து பாடல்களின் ஆகச் சிறந்த பாடல்களில் ஒன்றானது அது. (‘மணமகள்')
தந்தவர் இசை மேதை சி. ஆர். சுப்பாராமன்… இன்று பிறந்தநாள்.
மூன்று கட்டங்களாக மேலெடுத்துச் செல்லப்பட்ட தமிழ்த் திரையிசையின் முதலாவதில் முக்கியமானவர்.
ராஜேஸ்வரராவ் வர முடியாததால் எச்.எம்.வி. இவரை அழைத்து செஞ்ச படம் ‘செஞ்சு லஷ்மி’. முதல் படத்திலேயே தன் முத்திரையைப் பதித்து விட்டார். இசையமைத்த பத்து வருடத்தில் புரிந்த சாதனை சொல்லப் பத்தாது.
மனதில் என்றும் ஒலித்துக் கொண்டிருக்கும் அந்த தேவதாஸ் பாடல்கள்:
“உலகே மாயம்.. வாழ்வே மாயம்..”
“துணிந்த பின் மனமே..”
“ஓ.. ஓ.. தேவதாஸ்..” அழியாப் புகழை அளித்தன அவருக்கு.
‘லைலா மஜ்னு’, ‘காதல்' ‘சண்டிராணி’ என்று பானுமதி தயாரித்த படங்களுக்கும் வரிசையாக இசையமைத்தவர் தானும் ஒருவரானார் ‘தேவதாஸ்' படத்தில்.
சுண்டி இழுக்கும் பார்வையுடன் ஒய்யாரமாக மரத்தில் சாய்ந்தபடி பானுமதி நிற்க என். டி. ராமராவ் ஸ்டைலாகப் பாடுவாரே…“வான்மீதிலே.. இன்பத் தேனாறு பெய்யுதே..” (‘சண்டிராணி')
வயலின் வாசிக்க வந்த அந்த இளைஞரின் திறமையைப் பார்த்து தன் அசிஸ்டண்டாக்கிக் கொண்டார்: டி.கே.ராமமூர்த்தி. மற்றொரு அசிஸ்டண்ட் ஆனவர் எம்.எஸ். விஸ்வநாதன்.
எம்.எல்.வசந்தகுமாரியை அறிமுகப்படுத்திய இவர் கண்டசாலாவை தமிழுக்கு அழைத்து வந்தார்.
ஆரோக்கியம் மட்டும் இருந்திருந்தால் அனைவரையும் பின்னுக்குத் தள்ளி பல பத்தாண்டுகளுக்கு நம்பர் ஒன் இசையமைப்பாளராகத் திகழ்ந்திருப்பார்.. தன் 36 வது வயதில் உலகை..
அன்பர்கள் அறிந்ததே: இசையமைப்பாளர் சங்கர் (சங்கர் கணேஷ்) இவரது தம்பி.

Saturday, May 16, 2026

ஜம்மென்று ஒலிக்கும் அந்தக் குரல்...

“ஓ.. தேவதாஸ்..” என்று 17 வயது சாவித்திரி பாடிக்கொண்டே வரும்போது கூடவே நுழைந்த 15 வயது குரல் இவருடையது. அதற்கு முன்பே 7 வயதிலேயே ‘தியாகய்யா’ தெலுங்குப் படத்தில் பாட ஆரம்பித்திருந்தார்.
ஜமுனா ராணி... ஜம்முனு ஒலிக்கும் அந்தக் குரல்... இன்று பிறந்தநாள்!
இந்த வயலின் குரலுக்கு சொந்தக்காரரின் அம்மா ஓர் வயலினிஸ்ட். தந்தை ஆபீஸர் தனியார் நிறுவனத்தில். கிட்டத்தட்ட 6000 பாடல்கள். 1950, 60 களில் அனைத்து இசையமைப்பாளர்கள் பாடல்களிலும்..
முத்திரை பதித்த முதல் பெரிய ஹிட் ‘குலேபகாவலி’யில். கெஞ்சலும் கொஞ்சலுமாக அந்தப் பாட்டு! “ஆசையும்… (விக்கல்) என் நேசமும்..” அந்த அட்டகாசமான பாடலை இந்திப் பதிப்பிலும் அதே அழகுடன் பாடியிருந்தார். (“Aaj Tu In Nainan…”) இப்போது கேட்டாலும் குரலின் வசீகரம் தனியே தெரியும்.
அதே ராஜ சுலோசனா “ஆசை அன்பெல்லாம் கொள்ளை கொண்ட நேசா.. பேசும் ரோஜா என்னைப் பாரு ராஜா!” என்று ‘ஆசை’ படத்தில் அழகாய் ஆடிக்கொண்டே வருவதும் இவர் பாட்டு தான்.
நீங்கள் "பாட்டொன்று கேட்டு பரவசமானால்..." அது அனேகமாக ‘பாசமலரி’ல் இவர் பாடியதாக இருக்கும்.
'அன்பு எங்கே’யில் “பூவில் வண்டு போதை கொண்டு தாவு”வது இவர் குரலினிமையாலும் இருக்கலாம். ‘மாலையிட்ட மங்கை’யில் பாடிய “செந்தமிழ் தேன்மொழியாள்..” நீண்ட காலத்துக்கு அந்தத் தேன்மொழியை நினவில் வைத்திருந்தோம்.
மூன்று பாடகிகள் பாடும் “யாரடி நீ மோகினி” பாடலில் இவர் குரல் தன் தனித்தன்மையால் கவரும். “தேன் வேணுமா? நான் வேணுமா?”

‘கவலை இல்லாத மனிதனி'ல் இவரது “காட்டில் மரம் உறங்கும்..” கானத்தில் மனம் கிறங்கும்.
‘ராணி சம்யுக்தா’ வில் உருக்கமாகப் பாடினார் ஒரு பாடல்: “சித்திரத்தில் பெண்ணெழுதி..” கேட்டால் மறக்க முடியாதது.
லிஸ்டில் டாப் சாங் திக்கனைத்தும் ஒலித்த “மாமா.. மாமா.. மாமா..”தான்.(‘குமுதம்') “சிட்டுப் போல பெண்ணிருந்தா வட்டமிட்டு சுத்தி சுத்தி..” சூபர் ஹிட்! தெலுங்கிலும்!
சந்திரபாபுவுடன் இவர் டூயட்கள் தனி களை கட்டும். “குங்குமப் பூவே…”யானாலும் சரி, "தடுக்காதே.."யானாலும் சரி! ‘பாண்டித் தேவன்’ படத்தில் ச.பாபுவுடன் "நீயாடினால்..." பாடலில் அந்த பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரத்தின் வரிகளை இவர் பாடும் அழகு இருக்கிறதே..
“சீமான்கள் கொண்டாடும் மேடை..
செண்டாலே காற்றெங்கும் வாடை...
சிரிப்பெல்லாம் வெவ்வேறு ஜாடை..."
நாயகன் நாயகி டூயட்டுகளில் ஞாபகம் அகல மறுப்பவை.. மனதை உருக்கும் ‘மன்னாதி மன்னன்’ பாட்டு! “நீயோ நானோ யார் நிலவே?” ‘செல்வம்’: “எனக்காகவா.. நான் உனக்காகவா?” ‘கொடுத்து வைத்தவள்’: “பாலாற்றில் சேலாடுது..”
‘அத்திக்காய்..’ பாடலில் “ஏலக்காய் வாசனைபோல் எங்கள் உள்ளம் வாழக்காய்..” என்று இவர் எண்ட்ரி ஆவது நினைவிருக்கா? அதோடு “ஆதிமனிதன் காதலுக்குப் பின்..”
நீண்ட இடைவெளிக்குப் பின் “நான் சிரித்தால் தீபாவளி..” என்று மறுபடியும் அவர் பாட்டொன்று கேட்ட பரவசத்தைத் தந்தார்.