Saturday, June 27, 2026

எதை எப்படி...


Schindler’s List என்று சொன்னால் ஆஹா, ஆஸ்கார் வாங்கிய ஸ்பீல்பெர்க் படமாயிற்றே என்பீர்கள், Saving Private Ryan என்றால் ஓ,ரெண்டாவது ஆஸ்காரை ஸ்பீல்பெர்க் வாங்கிய படமாயிற்றே என்போம். ஆனால் அந்த ரெண்டு படத்துக்கும் ஒருவர் சிறந்த ஒளிப்பதிவாளர் ஆஸ்கார் வாங்கினார் என்பதும் ஓசைப்படாமல் அவையிரண்டும் சென்ற நூற்றாண்டின் தலை சிறந்த ஒளிப்பதிவுக்கான படங்களில் சேர்ந்து கொண்டன என்பதும் நாமறியோம்.
அவர்… யானஸ் கவின்ஸ்கி. (Janusz Kavinski) உலகின் டாப் 10 ஒளிப்பதிவாளர்களில் ஒருவர். இன்று பிறந்தநாள்!
அமெரிக்கன் ஃபில்ம் இன்ஸ்டிட்யூட்டில் தன் மாஸ்டர் டிகிரியை வாங்கிக் கொண்டவர் ‘Wild Flower’ என்ற டிவி படத்தில் ஒளியோடும் நிழலோடும் விளையாடியதைப் பார்த்து பிரபல Steven Spielberg தன்னோடு இணைத்துக் கொண்டார்.
“பார்த்தால் பிரமிக்கிற மாதிரி இமேஜ்களை அமைக்க வேண்டும் என்ற நோக்கம் எப்போதும் இருக்கும், ஆனால் கடைசியில் என் தலையாய கவனம் எல்லாம் அந்தக் காட்சியின் கதை ஓட்டத்திற்கு நேர்மையாக இருக்கும்படி பார்த்துக் கொள்வதுதான்,” என்று அவர் சொல்வது ஒளிப்பதிவாளர்களுக்கான பாட வரிகள்.
இதை அவர் எப்படிச் சாதிக்கிறார் என்றால் அந்தக் காட்சியின் கதையை அழுத்தமாகக் பிரதிபலிக்கிற மாதிரி, அந்தக் காட்சியில் நடிகர்கள் பிரதிபலிக்கும் உணர்ச்சிக்கு அடிக்கோடு இடுகிற மாதிரி தன் ஒளிப்பதிவை வைத்துக்கொள்கிறார். வேறெப்படி? நீங்களே சொல்லுங்க.
காமிராவை கவனிக்கிற மாதிரியெல்லாம் வைத்துக் கொள்ள மாட்டார். கண் எப்படி அந்த நேரம் பார்க்க வேண்டியதைப் பார்க்கிறதோ அப்படிச் சென்றுகொண்டிருக்கும் அவரது கேமரா. நின்று பார்த்து ரசித்து விட்டு வருகிற மாதிரி ஒரு திருப்தியைக் கொடுத்துவிடுவார் நமக்கு. ஒரு டைரக்டருக்கு இதைவிட வேறென்ன உதவி வேண்டும்?
வெறுமே துரத்திக்கொண்டு ஓடாது காமிரா. துரத்திக்கொண்டு ஓடுவதைப் பார்க்கும்போது நீங்கள் எதை எப்படிப் பார்ப்பீர்களோ அதை அப்படிப் பார்க்கும். ஒரு ரசிகனுக்கு இதைவிட வேறென்ன வேண்டும்?
கேமராவை ரசிக்க இவர் படம் பார்க்க வேண்டாம். படத்தை ‘மேலும் மேலும் ரசிக்க’ இவர் படம் பார்க்க வேண்டும்! Backlighting ஐக் கொட்டிக் கொடுத்து காட்சிகளைத் தட்டிக் கொடுப்பார். வழக்கமான 180 டிகிரி ஷட்டருக்குப் பதிலாக 90, 45 டிகிரி உபயோகிப்பதன் மூலம் இன்னும் நறுக்காக யதார்த்தமாக...
இவரது படங்களைப் பாருங்கள். பனி மூட்டங்களையும் பலகணி வழி பாயும் ஒளிக்கற்றைகளையும் கொண்டு தன் காட்சிகளைப் பின்னியிருப்பார். எந்தக் கோணத்தில் காட்டினால் ஏற்படுத்த வேண்டிய உணர்ச்சி அப்படியே ஏற்படுமோ அந்தக் கோணத்தில்... நடிகர்கள் மீது பாய வேண்டிய ஒளியையும் நிழலையும் எங்கே எத்தனை வேண்டுமா அங்கே அத்தனை துளி பிசகாமல்... ஒளிப்பதிவு என்றாலே நிழலுக்கும் ஒளிக்கும் உண்டான விகிதம்தானே?
நடிகர்களில் எங்கே, எப்படி நிறுத்துவார் என்று தெரியாது, ஆனால் பார்க்கிறபோது அழகாக இருக்கும். முகம் ஒரு புறம் திரும்பும்போது காமிரா இன்னொருபுறம் திரும்பும் அழகு… ‘Catch Me If You Can’ படத்தில் Leonardo DiCaprio ஃபிரேமுக்கு ஃபிரேம் விசேஷ அழகுடன் ஜொலிப்பதை எப்படி மறக்க முடியும்?

ஆர் அவர்?


அப்பாவைத்தான் புக் பண்ண வந்தார் மெஹமூத் தன் படத்துக்கு இசையமைக்க. ஆனால் அவரிடம் தேதி இல்லை. ஹாலில் தபேலா வாசித்துக்கொண்டிருந்த மகனைப் பார்த்தார். சட்டென்று அவரை புக் செய்து விட்டார். இசைப் பேரலையொன்றை இயக்கி விட்டிருக்கிறோம் என்று அப்போது அவருக்குத் தெரியாது. படம் ‘Chote Nawab.' பாடல்கள் வெற்றி.

ஆர்ப்பரிக்கும் இசை! ஆர் அது? என்று எல்லாரும் பார்க்க ஆரம்பித்த அவர் ஆர். டி. பர்மன். இன்று பிறந்த நாள்!
அந்தக் குழந்தை முகம்! அதன் பின்னே ஒரு இசைமேதை.. ‘Pancham’ இவர் செல்லப் பெயர். அஞ்சாவது நோட். பஞ்சமி.
மெஹ்மூதின் அடுத்த ‘Bhoot Bangla’ வில் கலக்கிவிட்டார். ‘Aavo Twist Karen…’’வும் ‘Pyar Karta Jaa..’ வும் இளைஞர்களை அப்படி ஈர்த்தன என்றால் ‘O Mere Pyar Raja...’ உருக வைத்தது.
அப்புறம் ‘மூன்றாம் வீடு’ (Teesri Manzil) வந்தது. முதலிடத்துக்கு இவர் போனார். ‘Aajaa Aajaa…’ என்று ஷம்மி கபூர் பாட, ரசிகர்கள் ஆட, இசை உலகம், 'இது என்னடா புது மாதிரி துள்ளலிசையென்று துள்ளி எழுந்து உட்கார்ந்தது. ‘தம் மோரா தம்… ‘ வந்ததும் 1971 -ன் இசைக் கோப்பையைத் தனதாக்கிக் கொண்டது. ராஜேஷ்கன்னா வந்து சேர்ந்து கொள்ள கிஷோர் குமாருடன் ஹிட்டுக்களை இசைத் தட்டுக்களில் அடுக்கினார்.
Electronic Rock -ம் Jazz -ம் அவர் இசையில் விளையாட, சங்கர் ஜெய்கிஷன், நய்யாரெல்லாம் தந்து கொண்டிருந்த கலகலப்பான இசையை அடுத்த படிக்கு எடுத்துச் சென்றார்.
அல்ரெடி ‘Chalti Ka Naam Gadi’ யிலிருந்தே அப்பாவின் சில படங்களுக்கு அசிஸ்டன்ட் ஆக வேலை பார்த்தவர். தேவ் ஆனந்தின் பிரபல பாடல் ‘Hey Apna Dil..’ பாட்டில் மவுத் ஆர்கன் வாசித்திருக்கிறார்.
சின்ன வயதில் நண்பர்களுடன் சினிமா பார்த்துக்கொண்டிருந்தபோது அந்தப் பாடலை கேட்டதும் துள்ளி எழுந்து ஹேய், அது என் டியூன் என்று ஆர்ப்பரித்தார். இவர் வாசித்துக்கொண்டிருந்த ட்யூனைக்கேட்ட அப்பா அதை தன் படத்தில் போட்டிருக்கிறார். அதைவிட வேறு என்ன ஆனந்த அங்கீகாரம் வேண்டும் அவருக்கு?
9 வயதில் இவர் போட்ட டியூனைத்தான் ‘Aye Meri Topi…’ என்று தேவ் ஆனந்த் பாடினாராம் ‘Funtoosh’ படத்தில். Pyaasa படத்தில் வந்த ‘Sar Jo Tera Chakraya…’ பாடலும் இவர் ஆரம்பப் பாடல்களில் ஒண்ணுன்னு சொல்வாங்க.
ஒவ்வொருத்தர் டேஸ்டுக்கும் அவரிடம் ஒரு பாட்டு இருக்கும். உங்களுக்கு ‘Tere Bina Zindagi Se Koi...’ பிடிக்கும் என்றால் எனக்கு 'Goyake Chunanche..’ உயிர். அவளுக்கு ‘O Mere Sona Re..’ ஃபேவரிட் என்றால் இவனுக்கு ‘Hum Dono Do Premi..’ பிரியம். ‘எப்படி போட்டேன் என்று தெரியாது, அதுவாக அமைந்தது..’ என்பார் எப்போதும் அடக்கமாக.
நீங்களே பாடுங்க என்று ரமேஷ் சிப்பி சொல்லி இவர் பாடிய ‘மெஹபூபா மெஹபூபா…’ அத்தனை பெரிய ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கவில்லை. அதற்கொரு குரல் வைத்திருந்தார் என்றால் அமிதாப்புக்கு இன்னொரு குரல் வைத்திருந்தார். ‘Pukar’ படத்தில்அமிதாப், ரந்திர் சேர்ந்து பாடும் அந்த ‘Buchke Rehna Re Baba..’ பாடலில் எது கிஷோர் எது ஆர்.டி. என்று கண்டு பிடிப்பது மகா கடினம்.
70 களில் வருஷா வருஷம் நாமினேஷன் பெற்றாலும் filmfare அவார்டை வாங்கியது 1983 இல் கமல் நடித்த ‘Sanam Teri Kasam’ படத்தில் தான்.
அப்படி ஒரு டைட்டில் இசையை யாருமே போட்டதில்லை. திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டே இருக்கலாம். ஆம், ‘ஷோலே’ படத்தில் வரும் இசையைத்தான் ஷொல்கிறேன். ரயில்வே ஸ்டேஷனில் ஆரம்பித்து மெல்ல அந்தக் கிராமம் முழுவதையும் சுற்றிக் காட்டும் அந்த இசை படத்தின் tone -ஐ அற்புதமாக கொடுத்துவிடும்.
எப்போதும் இசையே சிந்தனை. ஃப்ளைட்டில் சென்றுகொண்டிருந்தபோது முணுமுணுத்த டயூனை கவனித்த ராஜேஷ் கன்னா பிற்பாடு ஞாபகமாக அதைக் கேட்டு வாங்கினாராம் ‘Kati Patang’ படத்துக்காக. பாடல், ‘Yeh Jo Mohabbat Hai..’
வித்தியாசமாக எதையாவது வழங்கிக் கொண்டே இருப்பதுதான் அவரது இசை. ‘தனியே நாம் எதுவும் செய்ய விட்டால் தனியாக நம்மை கவனிக்க மாட்டார்கள்,’ என்பாராம். தேவ் ஆனந்தின் ‘Ishq Ishq Ishq’ படத்தில் ‘Wallah Kya Najara Hai..’ பாடல் பல்லவி முதல் வரியை அதே படத்தின் வேறிரு பாடலின் சரணங்களில் அழகாகக் கொண்டு வந்து முடிச்சிட்டிருப்பார்.
‘ஆர். டி. பர்மன் இன்றைக்கு இருந்தால் நான் அவர் பக்கத்திலேயே உட்கார்ந்து அவர் இசையமைப்பதைப் பார்த்துக் கொண்டே இருப்பேன் நாளெல்லாம்,’ என்கிறார் பிரபல பாடகர் அர்மான் மாலிக்.
Amar Prem படத்தில் அப்படி ஒரு கிளாசிக்கல் மியூசிக் கொடுத்திருப்பார். அந்த ‘Raina Beet Jaye..’ பாடலை ஆரால் மறக்க முடியும்?
கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்பதுபோல இவரது கார் கதவும் கானம் இசைக்கும். சோடா பாட்டில்களை உடைத்து, ‘Churaliya..’ (Yadon Ki Bharat) பாடலுக்கும், சீப்பை மேஜையில் உரசி ‘Tere Samne Wale... ‘ (‘Padosan’) பாடலுக்கும் என்று கையில் கிடைக்கிற வஸ்துக்களிலிருந்து விதவிதமான தாளங்கள்...மூச்சு வாங்குவதைக் கூட பாடலின் வீச்சு ஆகியிருப்பார், ‘Piya Tu...’ (‘Caravan’) பாடலில்! ‘Hoga Tumse Pyare Kaun..’ (Zamane Ko Dhikana Hai) பாடலில் ஊட்டி ரயில் விசிலை உசிதமாகக் கொடுத்திருக்கும் அழகே தனி!
கிஷோர்குமார்தான் இவரது ஆஸ்தான பாடகர் என்றாலும் ரபியின் மறு வருகையை ஜொலிக்க வைத்த பாடல்களில் பல இவருடையது. ‘Zamane Ko Dikhana Hai’ யில் வரும் ‘Pucho Na Yaar Kiya Hua ..’ பாடல் ஒன்று போதுமே?
‘அந்தப் பெண்ணை பார்த்தேன்.. அவள் ஒரு மலரும் ரோஜாவை போலே... கவிஞனின் கனவைப்போலே... காட்டின் மானைப்போலே... பௌர்ணமி இரவைப்போலே... வீணையின் ராகம்போல... காலையின் அழகைப்போலே… அலைகளின் விளையாட்டைப்போலே... ஆடும் மயிலைப்போலே... பட்டு நூலைப் போலே…’ என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போகும் அந்த ‘1942, A Love Story’ யின் ‘Ek Ladkhi Ko Dekha..’ பல்லவிகளை மட்டும் அடுக்கி என்னவொரு இசைச் சிலிர்ப்பு! Filmfare அவார்டுக்காக ஒரு பாடலை விட்டு விட்டுத்தான் மறைந்தார்.

Wednesday, June 24, 2026

கதையின் அடிநாதத்தை...


சிலர் இருக்கிறாங்க. அவங்களை நாம சந்திச்சே இருக்க மாட்டோம். ஆனா நம்ம வாழ்க்கையில அவங்க வெகுவா ஊடுருவியிருப்பாங்க. இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு எடுத்துக்குவாங்க. உற்சாகத்தையும் ஆறுதலையும் அள்ளி வழங்கி இருப்பாங்க. ஆ, நீங்களே சொல்லிட்டீங்களே.. அவரு தாங்க...
கண்ணதாசன்... இன்று பிறந்த நாள்!
‘அவரு எழுதின பாடல்கள்ல உங்களுக்குப் பிடிச்ச ஒரு பாடல் சொல்ல முடியுமா?’ன்னு கேளுங்க.
உடனே மனசில ஓடறதிலேருந்து ஒரே ஒரு பாட்டை செலக்ட் பண்றதுக்குள்ளே முழி பிதுங்கிரும்.
யோசிக்க ‘ஒரு நாள் போதுமா?’
எந்தப் படமா இருக்கட்டும், கதையின் அடிநாதத்தை சில அடிகளில் தன் பாடலில் கொண்டு வந்து விடுவார். அதுதான் அவருடைய ஸ்பெஷாலிட்டி: படத்தின் ஒன் லைன் பாடலில்!
"தூக்கி வளர்த்தவள் தாயென்றால் அதை
ஆக்கிக் கொடுத்தவள் பேரென்ன?
வாங்கிய தாய்க்கே மகனென்றால் அதைத்
தாங்கிய தாயின் உறவென்ன?"
‘அன்னை’ படக்கதையை இதைவிட க்ளாஸிக்காக எப்படிச் சொல்ல முடியும்?
வானம்பாடி படத்தின் சுருக் இதோ இந்தப் பாடல் வரிகளில். (காதல் தோல்வியில் இருக்கும் கதாநாயகனுடன் கவியரங்கத்தில் போட்டியிடுகிறாள் தோழி... அவன் கேட்க அவள் பதில்.)
‘காதலித்தாள், மறைந்து விட்டாள், வாழ்வு என்னாகும்?”
‘அன்பு காட்டுகின்ற வேறிடத்தில் காதல் உண்டாகும்.’
‘ஒரு முறைதான் காதல் வரும் தமிழர் பண்பாடு.’
‘அந்த ஒன்று எது என்பதுதான் கேள்வி இப்போது.’
‘வருவதெல்லாம் காதலித்தால் வாழ்வதெவ்வாறு?’
‘தன் வாழ்க்கையையே காதலித்தால் புரியும் அப்போது.’
ஒன் லைனில் என்ன, சில சமயம் இரண்டொரு வார்த்தையிலேயே சொல்லிவிடுவார். படத்தின் கதையை. இதோ உதா.
“எங்கிருந்தாலும் வாழ்க..”
(’நெஞ்சில் ஒரு ஆலயம்’ : காதலித்தவள் எங்கிருந்தாலும் அவள் வாழவேண்டுமென்று எண்ணி அவள் கணவனைக் காப்பாற்றுகிறான் தன் உயிரைவிட்டு.)
நவரசமும் அபிநயம் பிடிக்கும் அவர் பாடல்களில்.. ‘பேசுவது கிளியா..’ என்று கொஞ்சும்! ‘வீடுவரை உறவு…’ என்று அஞ்சும்!
பறக்க ஆரம்பித்துவிட்டால் போதும். நாம்'பாட்டு’க்கு பறந்து கொண்டேயிருக்கலாம் மனதில். கடைசி வார்த்தை வரைக்கும்!. "காதல் சிறகை காற்றினில் விரித்து வானவீதியில் பறக்கவா..."
அள்ள அள்ள வந்து கொண்டே…
‘சொன்னாலும் வெட்கமடா..
சொல்லாவிட்டால் துக்கமடா…
துக்கமில்லாமல் வெட்கமில்லாமல்
வாழுகிறேன் ஒரு பக்கமடா…’ (முத்து மண்டபம்)
‘ஊரெங்கும் தேடினேன் ஒருவரைக் கண்டேன்..
அந்த ஒருவரிடம் தேடினேன், உள்ளத்தைக் கண்டேன்..
உள்ளமெங்கும் தேடினேன், உறவினைக் கண்டேன்..
அந்த உறவினிலே மூழ்கினேன் பிரிவினைக் கண்டேன்..’ (தேன் நிலவு)
இலக்கியத்துக்கும் சாதாரண ரசிகனுக்கும் இடையே உள்ள தூரத்தை யாராவது இத்தனை டெஸிமலுக்குக் குறைத்திருப்பார்களா என்றால் இல்லை.
"நீரோடும் வைகையிலே..நின்றாடும் மீனே…" பாடலில் ஒரு வரி.
"உன் ஒருமுகமும் திருமகளின் உள்ளமல்லவா...?"
"உங்கள் இரு முகமும் ஒரு முகத்தின் வெள்ளமல்லவா..?"
ஒரு முகத்தின் வெள்ளம் என்றால்? நதியும் கடலும் சங்கமிக்கும் இடத்தை பொழி முகம் (Estuary) என்பார்கள். சங்க முகம் என்றும் சொல்வதுண்டு. அந்த முகம்! அதில் ஒன்றாய்ப் பாயும் இரு வெள்ளம்!
கவிதையிலும் ஓர் காவிய நயம்..
மதுரைவீரன், மன்னாதி மன்னன், மகாதேவி, மாலையிட்ட மங்கை, ரத்தத் திலகம், இல்லற ஜோதி, கவலை இல்லாத மனிதன்... மனதில் தடம்பதித்த படங்களையும் எழுதினார்.
'மணந்தால் மகாதேவி; இல்லையேல் மரணதேவி!' தமிழ் திரையின் முதல் பிரபல பஞ்ச் டயலாக் அதுவே! அதுவும் வில்லனுக்கு!
காலம் அவருக்கு எத்தனையோ பரிசுகளை வழங்கி இருக்கலாம் ஆனால் காலத்துக்கு அவர் வழங்கிய பரிசு அவை எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டு விடக்கூடியது. ‘சிவகங்கைச் சீமை’ என்ற அவர் தயாரித்த படம். காலத்துக்கும் நிற்கும் காவியம்.
எத்தனையோ சொல்லலாம். ஆனால் இந்த ஒரு பாட்டு போதுமே? அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும்!
“ஓஹோஹோஹோ மனிதர்களே,
ஓடுவதெங்கே சொல்லுங்கள்!
உண்மையை வாங்கி, பொய்களை விற்று,
உருப்பட வாருங்கள்!
1
அழுகிப் போனால் காய்கறி கூட சமையலுக்காகாது
அறிவில்லாதவன் உயிரும் மனமும் ஊருக்கு உதவாது
உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது
உளறித் திரிபவன் வார்த்தையிலே ஒரு உருப்படி தேறாது.
காலம் போனால் திரும்புவதில்லை, காசுகள் உயிரை காப்பதும் இல்லை...
2
அடிப்படை இன்றி கட்டிய மாளிகை காற்றுக்கு நிற்காது
அழகாய் இருக்கும் காஞ்சிரம் பழங்கள் சந்தையில் விற்காது
விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது
விளக்கிருந்தாலும் எண்ணெய் இல்லாமல் வெளிச்சம் கிடைக்காது.
கண்ணை மூடும் பெருமைகளாலே, தம்மை மறந்து வீரர்கள்போலே...
3
ஒதிய மரங்கள் பெருத்திருந்தாலும் உத்திரம் ஆகாது
உருவத்தில் சிறியது கடுகானாலும் காரம் போகாது
படிப்பதனாலே தெளிவுள்ள மனசு பாழ் பட்டுப் போகாது
பாதையை விட்டு விலகிய கால்கள் ஊர் போய் சேராது.
காற்றைக் கையில் பிடித்தவன் இல்லை, தூற்றித் தூற்றி வாழ்ந்தவரில்லை…”
('படித்தால் மட்டும் போதுமா?')