Saturday, June 13, 2026

‘ரோல்' மாடல் ...


ஷெர்லாக் ஹோம்ஸ் & வாட்ஸனை வைத்து நிறைய ஜோக்குகள் உலாவுவது உண்டு. அதில் ஒன்று.
பக்கத்து காட்டில் உலா போன ஷெர்லாக் ஹோம்ஸும் வாட்ஸனும் அங்கே டெண்ட் அடித்து தங்கினார்கள். ராத்திரி 3 மணிக்கு கண்விழித்த ஹோம்ஸ் வாட்ஸனை எழுப்பினார். “வாட்ஸன், மேலே பாருங்கள். உங்களுக்கு என்ன தெரிகிறது?”
“நட்சத்திரங்கள் அழகாக அணிவகுத்திருக்கின்றன.”
“வேறென்ன தெரிகிறது?”
“நிலா இன்றைக்கு மிக அழகாக இருக்கிறது.”
“வேறென்ன தெரிகிறது?”
“ஒன்றும் தெரியவில்லையே?”
“நல்லா பாருங்க, நம்ம டெண்டை யாரோ தூக்கிட்டுப் போயிட்டாங்க!”
><><
ஹோம்ஸ் கதைகளிலும் துணுக்குகளிலும் அடிக்கடி சொல்லப்படும் ஒரு சம்பாஷணை..
“எப்படி கண்டுபிடித்தீர்கள் அதை?” என்று கேட்பார் வாட்ஸன்.
“எலிமெண்டரி, மை டியர் வாட்ஸன், எலிமெண்டரி!” என்று சொல்லிவிட்டு ஹோம்ஸ் விளக்குவார்.
ஆனால் ஒரிஜினல் ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளில் இந்த 'எலிமெண்டரி... மை டியர் வாட்ஸன், எலிமெண்டரி!' வரியே கிடையாது என்பார்கள்.
><><
எத்தனையோ பேர் ஷெர்லாக் ஹோம்ஸ் வேடத்தில் நடித்தாலும் இவரை மறக்க முடியாது. திரையின் ஹோம்ஸுக்கு அட்டகாசமான ‘ரோல்' மாடல் கொடுத்தது இவர்தான்! நடித்த 14 படங்களும் ரசிகர்களின் ஃபேவரிட்.
Basil Rathbone...இன்று பிறந்த நாள்!
மௌனப் படக் காலத் திரையில் ஆரவாரம் ஏற்படுத்திய இவர், முதலில் கலக்கியது நாடக மேடையை. ஷேக்ஸ்பியர் நாடகங்களில் இவர் நடிக்காத முக்கிய கதாபாத்திரமே இல்லை. (23 நாடகம், 52 பாத்திரம்)
தெளிவான உச்சரிப்பு! ஓங்கி ஒலிக்கும் குரல்! மேலும் பிரகாசிக்க வசதியாக பேசும் படம் வந்திட, காசும் சம்பாதித்தார். ஹரர் படங்களும் சரித்திரப் படங்களும்.
திரையில் Errol Flynnதான் ஜெயிப்பார். கதாநாயகன் ஆயிற்றே? ஆனால் வில்லனாக வரும் இவர்தான் வாள் சண்டை போடுவதில் திறமைசாலி வெளியே.
ஒரு கட்டத்தில் சீன் கானரி போலவே இவருக்கும் ஷெர்லாக் ரோல் அலுத்துப் போக, (வெளியே இறங்கினால் ‘ஹலோ பேஸில்!’ சொல்லலை, ‘ஹலோ ஷெர்லாக்!’ தான் சொன்னாங்க என்கிறார்.) நிறுத்திவிட்டு மறுபடியும் ஃபான்டஸி, ஹரர் படங்களில் இறங்கினார்.
சின்ன வயதில் இவரது குடும்பம் ஆப்பிரிக்காவிலிருந்து இங்கிலாந்துக்கு கப்பல் வருவதற்கு டிக்கெட் புக் பண்ணி இருந்தபோது... அந்தக் கப்பல் மூழ்கி விடுவதாக அம்மா கண்ட கனவு! வேறு கப்பலுக்கு மாற்றி வந்தார்கள். அதேபோல் அந்த கப்பல் மூழ்கி விட்டது. அதிலிருந்து இவருக்கு E.S.P. -இல் அபார நம்பிக்கை!

மூன்றாமவர்…


1. வட்டத்தை வரைந்து விடலாம், ஆனா ஓவல் ஷேஃபை எப்படி சரியாக வரைவது? விழித்துக் கொண்டிருந்தார் அந்தக் கலைஞர். அப்ப அவரைச் சந்தித்த பையனுக்கு 14 வயதிருக்கும். ஆவலுடன் ஆராய்ந்து, ஓவலுடன் எலிப்ஸ் முதலான எல்லா வளைவுகளையும் ஒரு பின்னையும் நூலையும் பிடித்து எப்படி வரைவது என்று பின்னி விட்டான் ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையை. எடின்பர்க் யூனிவர்சிட்டியில் அது பப்ளிஷ் ஆனது. அந்தச் சிறுவன்…
2. கையில் இருக்கும் மொபைல், காதில் ஒலிக்கும் ரேடியோ, காணும் டி.வி. எல்லாம் சர்வ சாதாரணமாக இருக்கிறது இப்போது நமக்கு. இவற்றுக்கெல்லாம் ஆதார வித்திட்டவர் அதிகம் அறியப்படாமலேயே இருக்கிறார் இன்னும். ஆம். ஒளி, மின்சாரம், காந்தம் மூன்றுக்கும் இடையே ஒரு தொடர்பு இருக்கிறது என்று முதன் முதலில் அறிவித்த அந்த வித்தகர்…
3. அறிவியலில் முதல் மூவர் வரிசையில் ஐன்ஸ்டீன், நியூட்டனை அறிவீர்கள். மூன்றாமவர்…
4. முதல் வண்ணப் புகைப்படத்தை வழங்கியவர்...
James Clerk Maxwell... இன்று பிறந்த நாள்!
‘அறிவியலின் தந்தை’.. ‘ஒளியின் தந்தை’… அவரை எடை போட்டவர்கள் அளித்த அடை மொழிகள்!
மின்காந்த வீச்சு என்ற இயற்கையின் மாபெரும் பெட்டகத்தை திறந்து வைத்தார் இவர். ரேடியோ அலைகளில் தொடங்கி எத்தனையோ அலைகள் அதிலிருந்து எழுந்தன. அந்த எலக்ட்ரோ மேக்னடிஸம் தியரி! அதன் சமன்பாடுகளை வைத்துத்தான் ஐன்ஸ்டீன் தன் ஸ்பெஷல் தியரி அஃப் ரிலேட்டிவிட்டியைக் கண்டுபிடித்தார்.
‘இவருடன் தொடங்கியது அறிவியலின் புதிய சகாப்தம்,’ என்றார் ஐன்ஸ்டீன், ‘நியூட்டன் காலத்துக்கு பிறகு அறிவியலில் நேர்ந்த மிகச் சிறப்பான, மிகப் பிரயோஜனமான கண்டுபிடிப்புகள் இவருடவையே.’
ஆராய்ந்து சொன்ன மற்றொன்று, சனியைச் சுற்றியுள்ள வட்டங்கள் துகள்களே என்பது.
இந்த விஞ்ஞானிக்குள் ஒரு கவிஞரும் இருக்கிறார். சாம்பிளுக்கு 'மனைவிக்கு' என்ற ஒரு கவிதையின் தொடக்கம்:
‘இந்தத் தனி அறையிலிருந்து கிளம்பி அடிக்கடி
நிலம் மேலும் நீர் மேலும் பறக்க விரும்புகிறேன்,
இருளைக் கிழித்து துயரைத் துளைத்து
என்னை உன்னுடன் இணைக்க…’
48 வருடங்களே வாழ்ந்த இவர் நாலைந்து வருடங்கள் கூட வாழ்ந்திருந்தால் ஏகப்பட்ட விஞ்ஞானிகளுக்கு வேலை இல்லாமல் இருந்திருக்கும் என்பார்கள்.

Thursday, June 11, 2026

மூன்று மொழிகளில்...


1952. அந்தப் படத்தின் டைரக்டருக்கு கடைசி அசிஸ்டன்டாக வந்து சேர்ந்தார் அவர். கதாநாயக நடிகருக்கு நெருங்கிய நண்பரானார். 13 வருடங்களுக்கு பின் இவரை வைத்து ஒரு பிரமாண்ட படத்தை தான் டைரக்ட் செய்வோம் என்று அவருக்கும், தனக்கு ஒரு வித்தியாசமான படத்தைத் தரப்போகிறார் அவர் என்று இவருக்கும் அப்போது தெரியாது. ‘அன்பே வா’வென்று வரவேற்றார்கள் ரசிகர்கள் அந்த படத்தை. அந்த டைரக்டர்...
A. C..திருலோகசந்தர். இன்று பிறந்த நாள்.
போரில் குண்டடிபட்ட ஜெமினியை ஐம்பது மைல் சுமந்து காப்பாற்றிவிட்டு, தான் சரணடையும் சிவாஜி, பிற்பாடு அவர் குடும்பத்தையும் சுமக்கிறார். அதற்காகத் தன் காதலையும் வாழ்க்கையையும் தியாகம் செய்யக்கூட தயாராகிறார். யாராலும் மறக்க முடியாத கதையைப் ‘பார்த்ததில்’ நம் கதைப் ‘பசி தீர்ந்தது’. ஆம், அவர் எழுதிய கதைதான் அது. அதற்கு முன்பே அவர் ‘விஜயபுரி வீரன்’ கதையை கொடுத்திருந்தார் சிட்டாடல் ஜோசப் தளியத்துக்கு.
முதல் டைரக்‌ஷன் ‘வீரத்திருமகனை’யே வித்தியாசமான கோணங்களில் படமாக்கினார் திரிலோக். S.பாலச்சந்தரிடம் பயின்றவர்ஆயிற்றே? தடாகத்தில் மிதக்கும் தாமரைப்பூக்களில் சச்சுவும் தோழிகளும் ஆடும் அந்த நடனத்தை, நீரில் அரை அடி மூழ்கி மிதக்கும் மரத்தில் அவற்றை அமைத்து, அற்புதமாக படமாக்கி இருந்தார்க்கள்.
நடிப்பின் டிக்ஷனரியை மூன்று மொழிகளில் வெளியிட அவருக்குத்தான் வாய்ப்புக் கிடைத்தது. பிரமாதமாகப் பிரிண்ட் போட்டுக் கொடுத்துவிட்டார். ஆம், ‘தெய்வமகன்’. சத்தான சுமார் 10 காட்சிகளில் படத்தை முத்தாகக் கொடுத்துவிட்டார் இந்த வித்தகர். ஆஸ்கார் பிறமொழி அவார்டுக்கு முதல் தென்னிந்திய entry!
சுமார் 25 படங்கள் சிவாஜியை இயக்கினார். ‘எங்கிருந்தோ வந்தாள்’ படத்தை வேறு யார் இவ்வளவு கம்பீரமாக தந்திருக்க முடியும்?
Subtle humour ஒன்று இவர் காட்சிகளில் இழையோடும். ‘தங்கை’ படத்தில் தாராளமாகப் பார்க்கலாம் அதை. அதில் ACTION ஹீரோவாக சிவாஜியை மாற்றினார் A.C.T.
'நானும் ஒரு பெண் படத்தில் இரவில் யாருக்கும் தெரியாமல் டயாபட்டிக் ரங்காராவ் இனிப்பு சாப்பிட வரும் போது, மருமகள் விஜயகுமாரி மடக்கி அந்த இனிப்பை வார்த்தையில் கொடுக்கும்போது நெகிழ்வையும், அழகின்மையால் புறக்கணிக்கப்பட்ட தெய்வ மகன் சிவாஜி, தன் அழகு அன்னையைத் தூர இருந்து, பார்த்து வணங்கும் போது உருக்கத்தையும் வினாடிகளுக்குள் நம்மிடம் பிறப்பித்த திறமைசாலி! எல்லாமே வித விதமான படங்கள்! 'ராமு'வும் 'பாபு'வும் ஒரு ரகமென்றால் 'இரு மலர்களு'ம் 'அவன்தான் மனிதனு'ம் மற்றொரு. 'தெய்வமகனு'ம் 'எங்கிருந்தோ வந்தாளு'ம்… 'எங்க மாமா'வும் 'அன்பளிப்பு'ம்… 'அதே கண்களு'ம் 'என் தம்பி'யும்… 'பைலட் பிரேம்நாத்'தும் 'டாக்டர் சிவா'வும்…