Saturday, April 25, 2026

நெஞ்சில் குடியிருக்கும்...


“நெஞ்சில் குடியிருக்கும், அன்பருக்கு நானிருக்கும்
நிலைமை என்னவென்று தெரியுமா?”
இந்த ‘இரும்புத் திரை’ சூப்பர் ஹிட்டுக்கு இசையமைத்தவர் யாரென்று தெரியுமா?
எஸ் வி வெங்கட்ராமன். இன்று பிறந்தநாள்!
1948 -இல் சிட்டாடலின் ‘ஞானசௌந்தரி’ வெளியானபோது அந்தப் படத்தின் பாடல் ஒன்று பிரபலமாகி எங்கும் ஒலித்தது நினைவிருக்கும்: “அருள் தாரும் தேவமாதாவே! ஆதியே, இன்ப ஜோதியே!” இவர் இசையே.
பி யு சின்னப்பா, தண்டபாணி தேசிகர், டி ஆர் மகாலிங்கம், எம் எஸ் சுப்புலஷ்மி, எம் எல் வசந்தகுமாரி, பட்டம்மாள்… இவர் இசையில் பாடாத சங்கீத பிரபலம் இல்லை.
புகழ் சேர்த்த படம், ‘மீரா.’ 11000 அடியில் 20 பாடல். அனைத்தும் எம்.எஸ். அதிலொன்று கல்கி எழுதிய ‘காற்றினிலே வரும் கீதம்..’ ‘Toot Gayi Man Bina..’ என்ற இந்திப் பாடலிசையின் இன்ஸ்பிரேஷனில் அமைத்த பிரசித்தி பெற்ற சிந்து பைரவி ராக பாடல். மற்றொன்று, கேட்டாலே உருகும் ‘பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த அந்த நாளும் வந்திடாதோ..?’
'வாராய் என் தோழி..' வருவதற்கு முன் கல்யாணங்களில் தவறாது ஒலித்த ‘புருஷன் வீட்டில் வாழப் போற பெண்ணே, தங்கச்சி கண்ணே..’ இவரது இசைப் ‘பண்’ணே! அந்த ‘பானை பிடித்தவள் பாக்கியசாலி’யின் மற்றொரு பாடல் ‘சோலைக்குள்ளே குயிலு குஞ்சு..சும்மா சும்மா கூவுது!’
‘சிங்காரப் பைங்கிளியே பேசு!’ என்றொரு பாடல் ஏ எம் ராஜாவின் தேன் குரலில் ஒலிக்குமே, ‘மனோகரா’வில்? அது!
ஸ்ரீதர் வசனம் எழுதிய ஜெமினி நடித்த ‘மாமன் மகள்’ படத்தில் ‘ஆசை நிலா சென்றதே.. அபலைக் கண்ணீரில் நீந்தியே!’ நாயகியின் விக்கித்துப் போன சோகம் ஜிக்கியின் குரலில். (கால் நிமிடத்துக்கு ஷெனாயுடன் தொடங்கும் அந்தப் பாடலின் orchestration ஒரு ட்ரெண்ட் ஸெட்டர்!) அது உங்கள் நினைவுக்கு வராவிட்டாலும் அதே படத்தில் சந்திரபாபு பாடிய ‘கோவா மாம்பழமே, மல்கோவா மாம்பழமே!’ மறக்காதே?
அந்தக் கால சிவாஜி பாடல்களின் எந்த லிஸ்டிலும் தவறாது தலை நீட்டும் ‘பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா?’(‘மருத நாட்டு வீரன்) ‘அறிவாளி’ படத்தில் ‘ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும்..’
சோழவந்தானில் பிறந்தவர் நாற்பதுகளில் இசை ஆளவந்தார். மாஸ்டர் என்று அழைக்கப்பட்ட ஐந்து இசையமைப்பாளர்களில் ஒருவர்.
ஐந்து வயதிலேயே அழகாக பாடுவார் தியாகராஜ கீர்த்தனைகளை. சங்கீத ஆசையில் சென்னை வந்தார். நாடக மேடையில் இசையமைத்ததோடு நாலைந்து படங்களிலும் நடித்தார். ஏற்பட்ட விபத்தில் படுக்கை வாய்ப்பட்டு நொந்தவருக்கு ‘நந்த குமார்’ படத்துக்கு இசை வாய்ப்பை இசைவாய்த் தந்தது ஏவிஎம்.

புகை என்றால் பகை...


புகை என்றால் தன் காதலனுக்குப் பகை என்பதால், தான் சிகரெட் பிடிப்பதை எப்படியாவது நிறுத்த வழி கேட்டு அந்த சைக்கோதெரபிஸ்டிடம் வருகிறாள் டெய்சி. அவர் அவளை ஹிப்னாடைஸ் செய்ததில் அவளுடைய முன் பிறவிகள் ஒவ்வொன்றுக்கும் உள்ளே போய் வருகிறாள். அதில் ஒன்றில் அவள் பிரபல நாட்டியக்காரி மெலிண்டாவாக இருந்திருக்கிறாள் என்று தெரிகிறது. மெலிண்டாவின் தீவிர அபிமானியான டாக்டர் மிரண்டார், இதாண்டா நான் தேடின பெண்ணென்று! உடனே டெய்சியை காதலிக்கிறார். அவளும் அவரை.
ஆனால் பாருங்கள் அவர் காதலிப்பது தன்னை அல்ல, தன்னுள் இருக்கும் மெலிண்டாவைன்னு தெரிய வந்ததும் - எந்தப் பெண்ணாவது சம்மதிப்பாளா? - உதறி விடுகிறாள். அவரோ விடாப்பிடியாக கெஞ்சுகிறார். மறுபடி தன்னுள்ளே சஞ்சரித்து வந்தவள் அவருக்கு அந்த சந்தோஷச் செய்தியை கொடுக்கிறாள்: “கவலைப்படாதீங்க, என் அடுத்த பிறவி லாரா உங்களைத் தான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாள் அம்பது வருஷத்துக்குப் பிறகு!”
‘On a Clear Day You can See Forever’ (1970) படத்தில் டெய்சியாக வந்து கலக்கியவர்…
Barbara Streisand. 24 April. பிறந்த நாள்..


ஹாலிவுட்டின் ஒரு பானுமதி. ஆம், பாடகியும் நடிகையும்!.. ஏன் டைரக்டரும் திரைக்கதாசிரியரும் கவிஞரும் தயாரிப்பாளரும் கூட. சென்ற நூற்றாண்டின் மிக அதிக ரெக்கார்டு விற்பனையான பாடகி!
நைட் கிளப் பாடகியாக துளிர்த்து, பிராட்வே நாடகங்களில் மிளிர்ந்து, டிவி சிரீஸில் ஒளிர்ந்து, திரைக்கு வந்தார் மனம் குளிர்ந்து. ஒமர் ஷரிஃபுடன் நடித்த முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான ஆஸ்கார்! பென்ஹர் புகழ் வில்லியம் வைலர் டைரக்ட் செய்த படமாச்சே? ஒரே படத்தில் நட்சத்திரமானார். அதே பிறந்தநாள் கொண்ட ஷர்லி மக்லீனுக்குப் போவதாயிருந்த ரோல் அது.
இவரின் ‘The Way We Were’ படப் பாடலை கேட்டால் மிகச் சிறிய விமானமொன்றிலேறி மிக உயரத்தில் வளைய வருவது the way you will feel! லிங்க் கீழே.
இவர் இயக்கிய ‘Yenti’ படத்தைப் பார்த்துவிட்டு புகழ்ந்து தள்ளிவிட்டார் ஸ்டீவன் ஸ்பீல்பர்க். வேறென்ன வேண்டும் திறமையை சொல்ல?
ஆஸ்கார், கிராமி, எம்மி, டோனி, கோல்டன் க்ளோப் என்று நடிப்பு, பாட்டு, நாடக மேடைக்கான அத்தனை டாப் அவார்டுகளையும் அள்ளிக் கொண்ட ஒரே நடிகை.
இவ்வளவும் சாதித்தவர் சொன்னது: நான் உருப்படுவேன்னு எங்க அம்மா நெனைக்கவே இல்லை.

அன்பின் பெருஞ்சொற்கள்...


அன்பின் பெருஞ்சொற்கள்... (அவர் வரிதான்)
யஷோ வின் ‘வரிகளில் படிந்த நிழல்.’ (கவிதைகள்) படித்தேன்.
ஒரு வருடத்திற்கு ரசித்துக் கேட்கிற கவிதைகளை ஒரே தொகுப்பாகக் கொடுத்துவிட்டார். முதலில் ஏற்படும் ஐயம் இதை விமர்சிக்கும் அளவுக்கு கவிதை ஞானம் எனக்கு இருக்கிறதா என்பது. சரி சிவாஜி நடிப்பை விமரிசனம் மாதிரி இது ஒரு ‘வியப்புசனம்’!
யதார்த்தத்தின் உலகத்திற்கும் பெரும் கனவின் அமானுஷ்ய வெளிகளுக்கும் இடையே அவரது நளினமான தாவல்களின் வேகம் அபாரம்.
தலைப்பு: 'மறுக்கும்.'
சிறகு வற்றி இறகுகள் சிதறிய
நில விள்ளலின் பாரமென கனக்கிறது
நேசத்தின் சொற்தின்ற விழிகள்
இமை திறந்து
பெருவெளிக் கூடடைய எத்தனிக்கையில்
விடியல் மறுக்கும் இரவாகிறாய்.
பிரியம், அன்பு, காதல், லயிப்பு எல்லாவற்றையும் சாதாரண சொற்களாக்கி விடுகின்றன, அவர் கையாண்டிருக்கும் அருஞ்சொற்றொடர்கள். 'எங்கேயும் செல்லாத வானத்’தையும் ‘கனவுகளின் சப்தங்களால் ஆன இரவை’யும் நினைக்கவே புல்லரிக்கிறது. அதற்குள் ‘மணித்துளிகளற்ற கணம்’, ‘இருளை உமிழ்ந்த நெடும் பகல்’, என்று சொல்லிக் கொண்டே போகிறார். ‘யாமத்தின் நீளம் அளக்கும் துயில்…’ என்னவொரு ஒயில் சொற்றொடரில்!
பிடித்து இழுத்து நிறுத்திடும் கவிதைகள்...
தலைப்பு: 'டி என் ஏ.'
போல ஒரு நீ
தேட சில வார்த்தை
அறியாமலிருக்க சிறு தூரம்
தவிக்க அவ்வெழுத்து
கேவ ஒரு கடுஞ்சொல்
அணைக்க உன் கவிதை
அதில் நீ
போல ஒரு நான்.
வானத்திலிருந்து வார்த்தைகளை எடுத்து தன் கானத்தில் கோர்க்கிறார். மிகச் சுருக்கமாகவும் மிக விரிவாகவும் அன்பின் போர்வைகளை ஏங்கும் என்பில் போர்த்துகிறார், தன் 'மீளவியலா' கவிதைகளால்!
இதோ ஒன்று!
தலைப்பு: 'யுகமாதல்'
கழியா நாழிகை நீ
களைத்த நிமிடமாய் நான்
யுகமாவாயா.
மணலாழி மனது.. கவிஞ வெறுமை.. கன்ன வெதுமை.. பிம்பத் திரிவு.. தீ இடை... பிரிச்செடுக்க முடியாத உரிச்சொற்றொடர்கள்! கவிதைகளுக்கு அவை highly complementing!
தரிசித்ததில்லை, ஆனால் தரிசிக்க விரும்புவோம் அவர் காட்டும் திசைகளில் கொட்டக் கொட்ட விழித்தபடி அமர்ந்திருக்கும் அழகுகளை.
‘அந்தகாரத்தின் ஒளிக்கீற்றாய் பயணிக்கும் வேகம் உனதன்பு…’ அன்பின் வீச்சை அட்டகாசமாக அளவிடுகிறார் மற்றொரு கவிதையில்!
தலைப்பு: 'என்னுள்ளே.'
ஒரு குழந்தையின் மொழியறிதலாய்
ஒவ்வொரு சொல்லாய்
உள்ளேகுகிறாய் நீ.
(மனத்தினுள் ஏகுபவனின் ஊடுருவலை குழந்தையின் ஒவ்வொரு சொல்லாய் மொழியறிதலை விட மென்மைப் படுத்த முடியுமா?)
கற்பனையின் எல்லை பிரமிக்க வைக்கிறது. ‘...அணுகி வான் பகிர முயலும் அல்காரிதத்தின் ஒன்றும் பூஜ்யமும் சுட்டிய இடங்களில் அமர மறுத்தால்’... என்ன ஆகும்?
அருவியாய் வந்துவிழும் உவமைகள்... ‘பாதியில் நின்று போன தீசிஸ்’, ‘அறிய முற்பட்ட முரண்’, ‘ஆர்வம் தொலைத்த உரையாடல்கள்’...
இசையை இசைக்கிற இவரின் சொற்கள் இசைக்கு மிக இசைவானவை. ‘மனதின் ஆழத்தில் சப்தித்துக் கொண்டே இருக்கும் எழுத்துக்கள் மறைத்த பேரிசை..’
வார்த்தைகள் ரத்தினங்கள். அறிவார், ஆகவே காதலில் ஆட்படுவதை ரத்தினச் சுருக்கமாக...
தலைப்பு: 'என்னை.'
என்னுள்ளே/ என்ன/ நிகழ்த்திக் கொண்டிருக்கிறாய்/ உன்னை.
அந்த அன்புலகிற்குள் அஸால்டாக அழைத்துப் போகிறார், ‘நம் பிணக்கை உடைக்க/ போதுமானதாயிருக்கிறது/ ஒரு அர்த்தமற்ற மீம்…’ என ஒரு கவிதையைத் தொடங்கும்போது.
ரசித்துப் படிக்க வேண்டிய கவிதைத் தொகுப்பு! அவரே சொல்கிற மாதிரி
‘கவிதைகள் அங்கேதான் இருக்கின்றன
அதற்கானவர்கள் மட்டும்
பயணித்துக் கொண்டே இருக்கிறார்கள்.'
(தலைப்பு: ‘வெவ்வேறாக.')
மிக ரசித்த கவிதை?
தலைப்பு: 'அல்லாது.'
மிஞ்சாப் பேராழி
தீவாரித் தழுவினாற் போலல்லாது
பனியின் துளியொன்றை
அபகரித்தாற்போல
கல.
><><