Friday, July 3, 2026

மங்காத ‘வாவ்’!


அப்பா ரோலுக்கான ஜிப்பா, தப்பாமல் பொருந்துவது இவருக்குத்தான்.
கம்பீரம், கண்டிப்பு, கனிவு மூன்றையும் கொடுப்பதில் அப்படி ஒரு கச்சிதமான மிக்ஸ்!
பாத்திரத்தின் பாதியை முக பாவமே நிரப்பி விடும். மீதியை அந்தக் குரல்.
ரங்கா ராவ்...இன்று பிறந்த நாள்!
இவரை நினைத்தாலே போதும் அப்பாவின் வசனம் தானாக தோன்றிவிடும் வசனகர்த்தாவுக்கு!
ஏழை அப்பாவாக ரங்கா ராவ் என்றால் இ'ரங்கா'த மனமே இராது. 'படிக்காத மேதை'யில் அந்த ரங்கனோடு சேர்ந்து இந்த ரங்கா நம்மை உருக்கிய உருக்கம்!
அப்பழுக்கற்ற அப்பாவி மகளுக்கொரு வாழ்வமைத்துக் கொடுக்க முடியாமல் விரக்தி, வேதனை, தோல்வி, இயலாமை அத்தனையும் அழுத்த, மகள் சாவித்ரியிடம் வெடிப்பாரே கடைசிக் காட்சியில்… ‘கை கொடுத்த தெய்வத்'துக்கு அது எத்தனை கை கொடுத்தது!
நளினமாகப் பொருந்திக் கொண்டார் நரசிம்ம பல்லவராக, 'பார்த்திபன் கனவி'ல். ‘அன்னை’யில் ஆனானப்பட்ட பானுமதியை சமாளிக்கும் விதமே அலாதி…
கேரக்டர் இவருக்குள் நுழைகிறதா, இவர் கேரக்டருக்குள் நுழைகிறாரா.. அது அந்த கேரக்டருக்குத்தான் வெளிச்சம்.
'அப்பப்பா!' என்கிற அளவுக்கு அந்த அப்பாக்களிடையேயும் எத்தனை வெரைட்டி கொடுத்தார்! . ‘இருவர் உள்ளத்’தின் கண்டிப்பான ஜட்ஜ் அப்பாவிலிருந்து , ‘எங்க வீட்டுப் பிள்ளை’யின் அசட்டு செல்வந்தர் அப்பா வரை!
மிஸ் பண்ணக்கூடாத படம் ‘மிஸ்ஸியம்மா’. கல்யாணமே ஆகாத ஜெமினி சாவித்திரி ஜோடியின் ‘கணவன் மனைவி’ ஊடலைத் தீர்த்துவைக்க இவரு தவிக்கிற தவிப்பு! அந்த ‘மாயாபஜார்’ கடோத்கஜனா இவர்?
நாயகனுக்கு (சிவாஜி) நெஞ்சுவலி. டாக்டருக்கு போன் பறக்கிறது. ஏற்கெனவே ஜோசியர் கெடு வைத்த நேரம் வேறு நெருங்குகிறது. கொஞ்ச நேரத்தில் தான் செத்துப் போய்விடுவோம் என்ற நிச்சயமான பயத்தில் சிவாஜியும் சுற்றியுள்ளவர்களும் கதி கலங்க...
அப்போது கதவு திறக்கிறது. என்டர் எமன்! "எம்மா, எமன் வந்துட்டான்!" என்று அவர் அலற.. விடமாட்டேன்னு தாய் கதற..
"எல்லாருமா சேர்ந்து 'என்' உயிரை வாங்கிடுவீங்க போலிருக்கே? விலகுங்க, நான் டாக்டர்!"
நாடகத்திலிருந்து நேராக எமன் வேடத்தில் வந்து இறங்கும் ரங்கா ராவ் கிளப்பும் சிரிப்பலை! காமெடியிலும் தூள்! ('செல்வம்')
ரங்கா ராவ்! மனதில் மங்காத ‘வாவ்’!

Thursday, July 2, 2026

கோப்பு நிறைய...


காஞ்சனா கேட்கிறார் குட்டிப் பெண் மஞ்சுளாவிடம். "Tell me why a man is great?"
"A man is great because he alone can laugh at others and at himself." என்று பதில் வருகிறது.
'சாந்தி நிலையம்' படத்தில் வரும் கலகலப்பான இந்த டயலாக் நினைவிருக்கிறதா?
52 வருடங்களுக்கு முன் எழுதியவர்...
சித்ராலயா கோபு! சிரிப்பு ஆள் ஐயா கோபு என்று சொல்லி விழுந்து விழுந்து சிரித்தோம். மகிழ்ந்தோம்.
ஜோக் எல்லாம் சும்மா க்ளாஸா இருக்கும். தமிழ்த் திரைக்கு ஶ்ரீதரும் இவருமாக அளித்த நகைச்சுவை வண்ணம் கொஞ்சமா?
கட்ட பொம்மன் வசனத்தை எப்படி உணர்ச்சி பொங்கக் கேட்டார்களோ அதேபோல ‘கல்யாண பரிசு’ வசனங்களை சிரிப்பு பொங்க மீண்டும் மீண்டும்!
‘காதலிக்க நேரமில்லை’ பற்றி சொல்லவே வேண்டாம். எழுதுவதற்கு இடமில்லை, அதில் வரும் நல்ல நகைச்சுவை அத்தனையையும் எடுத்து!
காமெடி படத்தில் டயலாக் சற்று சீரியஸான விஷயம். கதையைக் கொண்டு செல்வதாவும் இருக்கணும். எழும் கேள்விகளை இயல்பாக விளக்குவதாகவும்! சங்கீதம் மாதிரி டயலாகிலேயும் ஒரு ப்ராக்ரஷன் உண்டு. ஒன்றிலிருந்து ஒன்று இயற்கையா வரணும். அதே சமயம் கதைக்குத் தேவையில்லாமல் இருக்கக்கூடாது. இந்த இலக்கணத்துக்கு எடுத்துக் காட்டாக 100% சரியாக அமைந்த படம் ‘காதலிக்க நேரமில்லை’.
ஊட்டி வரை உறவு, கலாட்டா கல்யாணம், சுமதி என் சுந்தரி என்று நிறைய படங்களில் தன் வசனத்தால் நம் விசனம் துடைத்தவர். காசேதான் கடவுளடா, அத்தையா மாமியா, ராசி நல்ல ராசி என டைரக் ஷனிலும் டிஸ்டிங்ஷன் காட்டினார்.
எல்லாவற்றிலும் என்னைக் கவர்ந்த அந்த ஒன்று… காமெடி, காதல், தத்துவம் என அவரது முழு வீச்சையும் மிகவும் ரசித்தது ‘சாந்தி நிலைய'த்தில்!
சாலையில் சந்திக்கும் கோப ஜெமினியிடம் காஞ்சனா சொல்லும் கோபு டயலாக்: “அந்தஸ்தில இருக்குற உங்கள மாதிரி பணக்காரங்க வாழ்க்கையில முன்னேற மேலே போகும்போது சந்திக்கறங்ககிட்ட கொஞ்சம் அன்பா நடந்துக்கணும். காரணம், கீழே வரும்போது மறுபடியும் அவங்களை சந்திக்க வேண்டியதா இருக்கும்!”
“அனுசூயா டீச்சர்னு வந்தாங்களே, அவங்களும் வேலையைவிட்டு போய்ட்டாங்களா?”ன்னு ஜெமினி கேட்க, நாகேஷ்: வந்தாளே அனுசூயா! புருஷனை விவாகரத்து பண்ணிட்டு, பெத்த இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு இங்க வந்தா. நம்ம வீட்டு குழந்தைகளைப் பார்த்தவுடனே அந்த குழந்தைகளே பெட்டர்னு புருஷனோட போயிட்டா!”
தனியே நிற்கும் காஞ்சனாவிடம், ‘என்ன மாலதி, இருட்டைக் கண்டாலே பயப்படுவியே’ன்னு கேட்கும் ஜெமினியிடம், “வாழணும்கிற நம்பிக்கைகளும் ஆசைகளும் மனசில நிறைஞ்சி இருந்தப்ப நான் பயத்தை உணர்ந்தேன். ஆனால் இப்ப நான் இருட்டைக் கண்டு பயப்படறதில அர்த்தமே இல்லை.”
“என்ன திடீர்னு இந்த விரக்தி மனப்பான்மை?”
“என்னைப்போல அனாதைகள்கிட்ட நிரந்தரமாக உறவாடுவது விரக்தி ஒண்ணுதானே?”
“காலையில உன்னை கடுமையாக பேசிட்டேன், என்ன மன்னிச்சிடு மாலதி.”
“எப்பவுமே மன்னிப்பு கேட்கிறது அடுத்து செய்ய இருக்கிற தப்புக்கு அஸ்திவாரம்னுதான் நான் நினைக்கிறேன்!”

குழந்தைகளைப் பற்றி காஞ்சனா ஜெமினியிடம் சொல்லும் அந்த ஆழமான அட்வைஸ்: “அவங்கள நீங்க கடுமையான நடத்தறதினால நீங்க வீட்டில் இல்லாத போது சுதந்திர உணர்ச்சியில விஷமங்களைக் கொஞ்சம் அதிகமாக செய்யறாங்கன்னு நினைக்கிறேன். குழந்தைங்க எப்போதுமே மலரைப் போல மிருதுவானவங்க. மலர்ல இருக்கிற முள்ளை நீக்க அதைத் தீயில போட்டால் கருகிவிடும் இல்லையா? வேறுவிதமா தானே எடுக்க முயற்சி செய்யறோம்? அதைப்போலத்தான் நாம குழந்தைகளை அவங்க போற போக்குல போய்த்தான் நம்ம வழிக்கு கொண்டு வரணும்!”
“மலருங்கறீங்க, முள்ளுங்கறீங்க, வாத்தியார் வேலைக்கு வர முன்னாலே எங்கேயாவது தோட்டவேலை பார்த்தீர்களா?” என்று நாகேஷ் கேட்பது அதையும் மென் காமெடிக்கு நகர்த்தும்!
சிகரமாக நாகேஷின் அந்த காலட்சேப காட்சி! “குறும்புக்கார கோவிந்தன், நம்ப கிருஷ்ணன் ஒரு நாளைக்கு உண்ணாவிரதம் இருந்தார்...(நாகேஷே பாடுகிறார்) உப்புமா ஒரு குண்டா! உருளைக்கிழங்கு போண்டா! காப்பி ஒரு அண்டா! குடிக்க டம்பளர் கொண்டா!... ஆப்பம் அறுபது! அதிரசம் அறுபத்தெட்டு!... பத்தாதா? இத்தனைக்கும் மேலே ஒரு தார் வாழைப்பழம் அதையும் சாப்பிட்டுட்டு உண்ணாவிரதம் இருந்தார்!” என்று தொடங்கி கோபியர் கதைக்கு வந்து “கோபியரே, கோபியரே, கேளுங்கோடி.. கோபாலகிருஷ்ணனை பாருங்கோடி! குளத்திலே குளிக்கையில் கண்ணன் புடவையை எடுத்தே ஓடிச் சென்றான்!... தம்மாத்துண்டு பயலுக்கு தில்லைப் பாத்தியா...?”ன்னு அமர்க்களப்படுத்துவாரே… அது!
கோபுவின் கையில் ஒரு கோப்பு. முழுக்க முழுக்க அதில் சிரிப்பு!

Wednesday, July 1, 2026

அழகிய பாணி ...


ஏழு வயது இருக்கும் அந்த சிறுமிக்கு. கார் ஒன்று மோதியதில் இடுப்பில் எலும்பு முறிவு. நடப்பதே கஷ்டம் என்றார் டாக்டர். பொய்யாக்கி ஒரே வருடத்தில் நடந்து காட்டினார். ஆனாலும் உயரம் குறைந்துபோன ஒரு காலை, ஷூவில் உயரம் வைத்து சரி பண்ணி நடக்க வேண்டியதாயிற்றாம். தோழிகளின் கிண்டல் எத்தனை வேதனையாக இருந்திருக்கும் அந்த பெண்ணுக்கு? ஆனால் பின்னாளில் அவரொரு மூவி ஸ்டார் ஆனபோது அதுவே அவரது அழகிய பாணி ஆகிவிட்டது.
அவர் Susan Hayward...
உலகம் முழுவதும் சொல்லப்படவேண்டிய உண்மைக் கதை இது என்ற ஆல்பர்ட் காம்யூவின் அழுத்தமான முன்னுரை வரிகளுடன் ஆரம்பிக்கிறார்கள் அந்தப் பிரபல படத்தை. ‘I Want to Live.’ வேதனையான குழந்தைப்பருவம், வீணான மணவாழ்க்கை, வேண்டாத சகவாசம் , எல்லாமாகச் சேர்ந்து அவளை ஒரு கொலைக் குற்றத்தில் சிக்க வைக்கிறது. மரண தண்டனை. நாற்காலியில் அமரும் கடைசி நிமிடம் வரை அவளது போராட்டம்.. அவள் படும் பாடு.. அவளுடன் சேர்ந்து நாம் படும் பாடு.. அத்தனை அற்புதமாக நடித்திருந்தார் சுஸன். அதுவரை நாமினேட் ஆவதும் நழுவிப் போவதுமாக நாலு முறை இருந்த ஆஸ்கார், நச்சென்று வந்து விழுந்துவிட்டது கையில். தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம் பார்க்க வேண்டிய படங்கள் லிஸ்ட் லிஸ்டில்.
'Gone with the Wind' படத்திற்காக நாடெங்கும் நடந்த நாயகி தேர்வில் தோற்றவர். ஆனால் தேர்வான Vivien Liegh பெற்ற நட்சத்திர அந்தஸ்தை அடுத்த பத்து வருடங்களிலேயே இவரும் அடைந்துவிட்டார். நடிப்பும் க்ளாமரும் நல்லதொரு விகிதத்தில் கலந்து அளித்த நடிகை.
The Conqueror படத்தில் நடிக்கும் போதுதான் கேன்சர் வந்து இவரைக் கொண்டது. அந்தப் படத்தில் நடித்த JohnWayne -ம் டைரக்டரும் கேன்சரிலேயே முடிவு கொண்டனர்.
Quotes?
‘வாழ்க்கை ஒரு போராட்டம் என்பதை மிகச் சின்ன வயதிலேயே அறிந்துகொண்டேன் நான். குடும்பம், சுற்றுப்புறம் எல்லாமே வறுமை. வறுமை. வாழ்க்கையின் எல்லா அவலங்களில் இருந்தும் நான் விடுபட, சினிமா தியேட்டர் தான் ஒரே வழியாக இருந்தது. நிறையப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று அப்போது தான் தீர்மானித்தேன். ஒரு உறுதியான பெண்மணியாக நான் உருவெடுத்தது அங்கேதான்.’
‘ஓய்வாக உட்கார்ந்ததே இல்லை நான். அது எப்படி என்றுகூட எனக்குத் தெரியாது. தெரிந்துகொள்ள விரும்பவும் இல்லை. வாழ்க்கை மிகச் சின்னது, ஓய்வெடுக்க முடியாத அளவுக்கு!