Sunday, August 23, 2026

முழுமையாக ஒரு வார்த்தை...

முழுமையாக ஒரு வார்த்தை...

கே.பி.ஜனார்த்தனன்

(’அமுதம்’ ஏப்.2012 இதழில் வெளியான 'அன்புடன் ஒரு நிமிடம்-2')




"என்ன ஞாபகம் வெச்சாலும் spelling மறந்துடுது!” அலுத்துக் கொண்டான் பரசு, “Complimentary, Complementary இந்த ரெண்டு வார்த்தையும் குழப்புது என்னை.”

“ரொம்ப சுலபம்,” என்றார் வாசு.  அப்பா.  ”Complimentary என்பது வாழ்த்துவது. Complementary ன்னா முழுமையாக்குவதுங்கற அர்த்தத்தில் வருவது. முழுமைக்கு என்ன வார்த்தை? Complete. அதனால Comple என்று L-க்கு பதிலாக E வருது, அப்படி ஞாபகம் வெச்சுக்கலாமே? தவிர அது ஒரு அழகான வார்த்தையும் கூட. ஒன்றையொன்று முழுமையாக்குவது. வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கிற எந்த சம்பத்துமே வாழ்க்கையை முழுமையாக்குவதாக இருக்கவேண்டும். அப்பதானே அழகு? பயன்?"

சுவாரசியம் தட்டிற்று இவனுக்கு.

”கணவனும் மனைவியும் எடுத்துக்கொண்டால் இவனிடம் இல்லாத சில நல்ல குணங்கள் அவளிடமும் அவளிடமில்லாத சில அவனிடமும் என அமைந்தால் அந்த அளவில் அது Complementary தானே?"

"கண்டிப்பா."

"கூட்டுக் குடும்ப காலத்தில் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா என்று குடும்பம் என்ற அமைப்பு முழுக்க முழுக்க மொத்ததில் Complementary ஆக அமைந்திருந்ததால் குழந்தைகளுக்கு வாழ்வில் அதுவே அவர்களின் மாபெரும் இயங்கு முன்னேற்றத் தளமாக இருந்தது. இப்ப அதை நாமே ஒதுக்கிவைத்துவிட்டு அங்கும் இங்கும் அலைந்து திரிந்து அந்த Complementary- யின் ஒவ்வொரு அங்கமாக சேகரிக்க வெளியில் ஓடுகிறோம். அப்ப தாத்தா படம் வரையக் கற்றுக் கொடுப்பார். எப்படி? ஆர்வத்தோடு கற்றுக்கொள்கிற மாதிரி. பாட்டி பழமொழியில் தொடங்கி பக்திப் பாடல் படிக்க வெச்சு ப த நி ச வரை சொல்லிக் கொடுப்பார். சித்தப்பா இலக்கணம், மாமா பேட்மிண்டன்... எல்லாம் ஒரே இடத்தில் நடந்திரும். இப்ப நாம அவனை அழைச்சிட்டு நீச்சல் கிளாஸ், மியூசிக் கிளாஸ், டிராயிங் கிளாஸ் அப்படீன்னு பேட்டைவிட்டு பேட்டை அலையறோம்...’

”அட, ரொம்ப யோசிக்க வைக்கிறீங்களே?”

”அத்தனைக்கத்தனை நல்லது. அந்த ரெண்டு வார்த்தைகளும் மறக்காது இல்லையா?”

கேட்டுக் கொண்டிருந்த தாத்தா தனக்குள்.. ’ஆஹா யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க! இனி நல்லதுதான் நடக்கும்.’

><><



Saturday, August 22, 2026

வில்லனுக்கும் காமெடியனுக்கும் இடையிலான...


அது யாரய்யா அசட்டு அப்பாவியா என்றால் அதுதான் டி. எஸ். பாலையா!
வேறு யாரய்யா முகத்தில் டன் டன்னாக அசடு வழிய விடுவதில் வல்லவர்?
அந்தக் காதலிக்க நேரமில்லை விஸ்வநாதனாக வேறு யாரையாவது நம்மால் நினைக்க முடியுமா பாலையாவைத் தவிர? வெறும் ரீயாக்‌ஷனை வைத்துக்கொண்டே ஐந்து நிமிடம் அந்தக் காட்சியை ஹாஸ்யத்தின் உச்சத்துக்குக் கொண்டுபோய் விடுவாரே நாகேஷ் கதை சொல்லும்போது!
பாலையா அந்த கேரக்டருக்கு கொடுத்த பாலிஷ் நமக்கு ஒரு பிளஸண்ட் சர்ப்ரைஸ்! ஹீரோக்கள் அவரை ஏமாற்றுவதான கதையை, அவர் ஏமாறுவதான கதையாக மாற்றும் அளவுக்கு அட்டகாசமாக அவர் நடிப்பு!
எம்ஜிஆர் அறிமுகமான சதிலீலாவதி படத்தில் அறிமுகமான இவர், வில்லனுக்கும் காமெடியனுக்கும் இடையிலான ஒரு வகை காரக்டரை திரைக்கு சுவாரசியமாக அறிமுகப்படுத்தினார்.
'இன்னிக்கு வெள்ளிக் கிழமை, வாளைத் தொடமாட்டேன்'னு மதுரை வீரனிடம் காட்டும் பொய் மிடுக்கும் சரி, பிள்ளைகளின் பாமா விஜய ஸ்டார் மோகத்தைக் கண்டிக்கும் மெய் மிடுக்கும் சரி என்னவொரு ரேஞ்ச் அஃப் ஆக்டிங்!
கொலைப் பழியை ஏவிஎம் ராஜன் மீது சுமத்தி ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு, தன் மனைவி மகளைப் பறிகொடுத்தபின் மனம் திருந்தும் கேரக்டர், கே எஸ் கோபாலகிருஷ்ணனின் ‘என்னதான் முடிவு?’ படத்தில். பழிவாங்கத் துடிக்கும் ராஜன் முன்னால், ‘உன் கையால் சாகத்தான் காத்திருந்தேன்,’ என்று அமைதியாக வந்து நிற்கும் க்ளைமாக்ஸில் மன்னிப்பை ஆடியன்ஸிடமிருந்தும் வாங்கிவிடுவார்.
சந்தர்ப்ப சூழ்நிலையால் தன் குழந்தையை வேலைக்காரி குழந்தையாகவும் அவள் குழந்தையைத் தன் குழந்தையாகவும் பார்க்க வேண்டிய சூழ்நிலை அம்மா எம் வி ராஜம்மாவுக்கு. அவரது பிடிவாதம் பிடித்த கணவராக அமர்க்களப் படுத்தியிருப்பார். எல். வி. பிரசாத்தின் ‘தாயில்லாப் பிள்ளை’யில்.
ஜெயகாந்தன் கதையில் நடித்தது ‘யாருக்காக அழுதான்?’ படத்தில். குடிகாரனின் பணத்தை எடுத்து வைத்துக்கொண்டு அப்பாவி நாகேஷ் மீது பழியைப் போட்டுவிட்டு உள்ளுக்குள் வதைபடும் அந்த கேரக்டருக்கு 100 சதம் உயிர் கொடுத்திருப்பார்.
பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாமல் நடந்ததை சொல்லவும் முடியாமல் பரிதவிக்கும் கேரக்டர் என்றால் இவருக்கு பீட்சா சாப்பிடுற மாதிரி. இவருக்காகவே எழுதப்பட்டதோ என்று சில சமயம் தோன்றும். ‘ஊட்டி வரை உறவு.’
துளி பிசிறு இல்லாமல் கான்ட்ராஸ்ட் காட்டுவதில் மன்னர். சபையில் காட்டிய கர்வத்துக்கு சற்றும் குறையாமல், ‘சற்று முன்பு ஒரு தேவகானம் கேட்டதே?’ என்று பிரமிப்பை உதிர்த்தபடி தன் செருக்குச் சட்டையைக் கழற்றிப் போடும் அந்த நயம்! (திருவிளையாடல்)

Aug. 23. பிறந்த நாள்! 

><><><

Wednesday, August 19, 2026

பறப்பது வசீகரமானது...


யார் இந்த முன்னேற்ற வாசகங்களைச் சொல்லியிருப்பார் என்று ஊகிக்க முடிகிறதா?
'பறக்கக் கற்றுக் கொள்வது வசீகரமானது அல்ல. ஆனால் பறப்பது வசீகரமானது'
'ரசிக்க முடிகிற வரையில் உங்கள் வேலையை நன்றாகவும் மனப்பூர்வமாகவும் நேர்மையான நோக்கத்துடன் செய்யுங்கள், வாழ்க்கை உங்களை ஒருபோதும் ஏமாற்றாது.’
‘ஒவ்வொரு மனிதரும், நிறுவனமும், ஏன், சமூகமும் ஒரு கட்டத்தை அடைந்தவுடன் தங்கள் நோக்கத்தை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் - புத்துணர்ச்சியூட்டிக்கொள்ள, புதிதாக கட்டமைத்துக் கொள்ள, மீண்டும் சிந்திக்க வேண்டும்.’
‘புதியவைகளை நோக்கித் தாவா விட்டால் நீங்கள் ஜீவிக்க முடியாது.’
‘உங்கள் போட்டியாளர் மீது எப்போதும் மதிப்பு வைத்திருங்கள், அவர்களை வியந்து பார்க்க வேண்டியதில்லை.’
‘நமக்கு வேண்டியது புத்திசாலித்தனமான இயந்திரங்கள் அல்ல, புரிந்துகொள்ள எளிதானவை. செயற்கை நுண்ணறிவு அல்ல, கூட்டு அறிவு.’
‘உங்களுக்கு என்று நீங்கள் வகுத்துக் கொள்ளும் பார்வை, நீங்கள் வாழ்க்கையை நடத்தும் விதத்தை வெகுவாக பாதிக்கிறது.’
‘தினமும் உங்களை புதுப்பித்துக் கொண்டே இருங்கள். சிலசமயம் வெற்றியடைவீர்கள், சிலசமயம் அடைவதில்லை. இரண்டின் சராசரி என்னவோ அதுதான் முக்கியம்.’
‘உலகில் இருக்கும் நிலையற்ற தன்மையை இன்னும் ஆழமாக உணர்ந்து கொண்டால், மனதில் ஒரு சமநிலையை வளர்த்துக் கொள்ள முடியும். வாழ்வின் உயர்வுகளும் வீழ்ச்சிகளும் திகைக்க வைக்காது. அப்போதுதான், சுற்றியுள்ளவர்களின் மீது ஆழமான பரிவையும் பச்சாதாபத்தையும் வளர்த்துக் கொள்ள முடியும்.’
‘எந்தப் பழக்கங்களால் முதலில் அவர்கள் வெற்றி பெற்றார்களோ அந்தப் பழக்கங்களையே மக்கள் மறந்துவிடச் செய்கின்றன வெற்றிகள்.’
‘நாம் செய்வது வேலை அல்ல, மற்றவர்களின் வாழ்க்கையை முன்னேற்றுவது என்பதை அறியும் போதுதான் அது மிகச் சிறந்த வேலை ஆகிறது.’
… சொன்னவர் Satya Nadella. மைக்ரோ ஸாஃப்ட் நிறுவனத்தின் சி. இ. ஓ. இவரின் பிரபல ‘Hit Refresh’ புத்தகம் படித்திருப்பீர்கள்...
இன்று பிறந்த நாள்!
வாழ்த்துக்கள்!