Wednesday, May 27, 2026

பயங்கரமே நடிப்பாக ...



நடிப்பு பயங்கரமாக இருந்ததுன்னு சொல்லுவாங்க. பயங்கரமே நடிப்பாக இருந்தது அவருக்கு.
1957 இல் ‘The Curse of Frankenstein’ வந்தது. ரசிகர்கள் நெர்வஸ் ஆனார்கள். அவர் பிரபலம் ஆனார். 58 இல் ‘Horror of Dracula’. எல்லாரும் நடுங்கினார்கள். ஸ்டார் ஆனார்.
பிரபல டிராகுலா நடிகர் Christopher Lee… இன்று பிறந்த நாள்!
‘Star Wars’, ‘The Hobbit’ படங்களில் கலக்கியதோடு The Lord of the Rings இலும் வந்தார்.
முதல் ஜேம்ஸ் பாண்ட் படத்தில் Dr. No ஆக இவர்தான் நடித்திருக்க வேண்டும். எழுதிய Ian Fleming-ம் (இவருக்கு மச்சான்) விரும்பினாராம். ஆனால் வேறொருவருக்குப் போய்விட்டது. என்றாலும் ஒரு ஜேம்ஸ்பாண்ட் படத்தில் நடித்தார் வில்லனாக. ‘The Man with the Golden Gun.’
இவரது முக்கிய காஸ்ட்யூம்களில் ஒன்று - ரத்தம் ஒழுகும் பற்கள் - ஒரு ஐரிஷ் டெக்னீஷியனால் உருவாக்கப்படுவது.
கின்னஸில் இடம் பெற வைத்தது இவரது உயரம். ஆறடி ஐந்து அங்குலம். மிக உயரமான நடிகர் என்று! ஆரம்பத்தில் சாதாரண பாத்திரங்களில் நடிக்கும்போது அந்த உயரத்தினாலேயே துயரப்பட்டார், கூட நடித்த ஹீரோக்கள் எரிச்சல் பட்டதால்.
70 வருட ஸ்பானில் 230 படங்களில் நடித்தவரின் இன்னொரு ரிகார்ட் என்னவெனில் மிக அதிக காரக்டர்களில் நடித்தவர் என்பது.
ஷெர்லாக் ஹோம்ஸாக நடித்தது விசேஷம் என்றால் அது மட்டுமன்றி மைக்ராஃப்ட் ஹோம்ஸ், ஹென்றி பாஸ்கர்வைல் என்ற கானன் டாயில் கதாபாத்திரங்களாகவும்....
வஞ்சகமில்லா நடிப்பில் பஞ்சமில்லை காயங்களுக்கு! வளைந்தே காணப்படும் விரல், இவர் 1955 இல் எரால் ஃப்ளைனுடன் வாள் சண்டைக் காட்சியில் பட்ட காயம் சொல்லும். ‘The Mummy’ (1959) படத்தில் கண்ணாடிக் கதவுகளை உடைத்துக் கொண்டு பாய்ந்ததில் கழுத்தில் அடி. போதாததற்கு நடிகையைத் தூக்கிகொண்டு 80 அடிபோல நடந்ததில் தோள்களில் பாதிப்பு.
பத்து படங்களில் டிராகுலாவாக நடித்தவர் 1972ல் அதை நிறுத்தி விட்டார் இனியும் அப்படி நடிப்பதில் அர்த்தமில்லை என்று.
Quotes? ‘நடிப்பு என்பது உள்ளுணர்வு, கற்பனை, கண்டுபிடிப்பு மூன்றும் சேர்ந்தது. வெளியே கற்றுக் கொள்ள முடிவது எல்லாம் வெறும் அடிப்படை டெக்னிக்ஸ் மட்டுமே.’
‘ஹீரோவை போரடிக்காத கேரக்டராக காட்ட நீங்கள் ரொம்பவே சிரமப்பட வேண்டும். ஆனால் வில்லனில் விதவிதமான குணாதிசயங்களைக் காட்டலாம் உங்கள் கற்பனை திறனுக்கு ஏற்ப.

Sunday, May 24, 2026

குணசித்திர நடிகையாகவும்...


படம்: தெய்வப் பிறவி.
பார்த்திருக்கும் பெண் வீட்டுக்குச் சென்று அவளைச் சந்தித்து வருவார் எஸ் எஸ் ராஜேந்திரன். போன இடத்தில் அவள் காபி எடுத்துத்தர, வெட்கப் போட்டியில் இருவர் தலையும் இடித்துக் கொள்ள..
வீட்டுக்கு வந்ததும் தம்பியை அக்கா பத்மினி விசாரிப்பாள். 'என்ன நெத்தியில வீங்கியிருக்கு?'
'அது வந்து..கேட்டு (gate) இடிச்சிடுச்சு!'
'கேட்டுத்தானே இடிச்சா? கேட்காம இடிக்கலியே?' என்பார் பத்மினி.
அந்தப் பெண்..
எம். என் ராஜம். இன்று பிறந்த நாள்.
1950 படங்களின் தவிர்க்க முடியாத நடிகர் எம். என். நம்பியார் என்றால் நடிகை எம். என் ராஜம்.
தமிழ் படங்களின் முதல் நட்சத்திர வில்லி அவர்தான். ரத்தக் கண்ணீர் காந்தாவை மறக்க முடியுமா?
உச்சரிப்பில் அப்படியொரு தெளிவு! சொல்லழகு மட்டுமல்ல, பல்லழகும்!
குணசித்திர நடிகையாகவும் முத்திரை பதித்தார். அரங்கேற்றம் படத்தில் அரளிக்காயை அரைக்கும்போது அந்த இறுகிய முகபாவம்! அதை மகள் பார்த்துவிட்டதும் அந்த பதைபதைப்பு! எத்தகைய பண்பட்ட நடிகை என்பதை சொல்லும் காட்சி.
பிரேம் நசீரிலிருந்து சிவாஜி வரை எல்லா நாயகர்களுடன்... நம்பியாரிலிருந்து வீரப்பா வரை எல்லா வில்லன்களுடன்... டி ஆர் ராமச்சந்திரனிலிருந்து தங்கவேலு வரை எல்லா காமெடியன்களுடன்… நடித்த ரேஞ்ச் விசாலமானது.
மணந்தவரை முன்பே நம் காதறியும். ஆம், ஏ.எல்.ராகவன்.

Saturday, May 23, 2026

என்னைக் கேளுங்கள்'...


இவர் என் வாழ்வோடு கலந்தவர். கதைகள் படிக்க ஆரம்பித்த காலத்தே என் கருத்தையெல்லாம் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டவர். ‘கல்கண்டு’ படிக்காமல் கண்ணுறங்கியதில்லை. வடக்கே பாபுராவ் படேல் போல இங்கே இவர் ’கேள்வி பதிலு’க்காகவே ('என்னைக் கேளுங்கள்') ஒரு பெரும் வாசக வட்டம்...
சங்கர்லால்! இதை இங்கர்சால் பேரிலிருந்த மதிப்பில் வைத்ததாக அவர் குறிப்பிட்ட ஞாபகம். சங்கர்லால்தான் எங்கள் எல்லாருக்கும் ஷெர்லாக் ஹோம்ஸ். சங்கர்லால் மனைவி இந்திரா, டீ (தேனீர் என்றே குறிப்பிடுவார்) போட்டுத்தரும் மாது, உதவிப் பையன் கத்திரிக்காய் என்ற அந்தக் குடும்பமே எல்லாருக்கும் ஃபேவரிட்.
1950 களில் வந்த தொடர். ‘நிழல் மனிதன்’. பயங்கரமான திருடனான நிழல் மனிதனை எப்படியாவது பிடிக்க வேண்டிய ஆகக் கடின அஸைன்மெண்டை பிரபல துப்பறியும் நிபுணர் சங்கர்லாலுக்கு அளிக்கிறார் உதவிப் போலீஸ் கமிஷனர் வஹாப்.
ஒரு ரெஸ்டாரண்டில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அந்த நபரிடம் ஒரு பெரியவர் வந்து, தான் ஒரு திருடன் என்றும் தன்னைப் பிடிக்க போலீஸ் வெளியே நிற்கிறது என்றும் சொல்கிறார்.. நீங்கதான் நிழல் மனிதன்னு எனக்குத் தெரியும், எப்படியாவது என்னைக் காப்பாத்துங்க, என்று அவர் கெஞ்ச அவன் பயப்படாதே சொல்கிறான்.
’பேசாமல் என் பின்னால் வா,’ என்றவன் ஒரு அட்டையை எடுத்து அதில் ‘நான்தான் நிழல்மனிதன்’ என்று எழுதி தன் கழுத்தில் மாட்டிக் கொண்டு வாசல் நோக்கி நடக்கிறான். போலீசும் மற்றவர்களும் அசந்து அப்படியே நிற்க, அவர் அவனுடன் நடந்து சென்று காரில் ஏறுகிறார். அடைக்கலமாகும் அந்தப் பெரியவர் அவனுடன் சேர்ந்துகொள்ள அவர்தானே சங்கர்லால் என்று ஆவல் சிந்திக் குவிந்த ஆயிரமாயிரம் கடிதங்கள்!
தமிழ்வாணன்! - சொல்லிக்கொண்டே இருக்கலாம்...
திருப்பங்களுடன் தொடர்களை அமைத்துச் செல்வதில், 100 கிராம் சுவாரசியத்துக்கு 150 கிராம் ஆவலை கலந்து கொடுப்பதில் நிகரில்லாதவர்.
கல்கண்டில் 1950களில் ’கண்ணம்மா’ என்றொரு தொடர் எழுதினாரே, அதில் ஒரு அத்தியாயத்தில் ’தொடரும்’ பகுதிக்கான அந்தப் பத்தி இன்னும் என் மனதில் ஒரு அபாரமான எழுத்தாக நிற்கிறது.
சிரமங்களை சந்தித்துவரும் ஏழைச் சிறுமியான கண்ணம்மா அந்த அத்தியாயத்தில் கவலையுடன் வீடு திரும்பிக் கொண்டிருப்பாள். இனி அந்தப் பாரா இப்படி செல்லும்: ‘...என்ன செய்வது என்று யோசித்தபடியே தன் தெருவுக்குள் நுழைந்தாள் கண்ணம்மா. தன் வீட்டுக்கு பக்கத்து வீடு தீப்பிடித்து எரிவதையும் கூச்சலும் பரபரப்புமாக சிலர் ஓடுவதையும்பார்த்தாள். எங்கும் புகை. அருகில் நெருங்க நெருங்கத்தான் எரிவது பக்கத்து வீடு அல்ல தன் வீடு என்று தெரிந்தது அவளுக்கு. (தொடரும்)
கல்கண்டில் முழு எழுத்துக்கும் பொறுப்பேற்ற நேரத்திலும் குமுதத்தில் இவரின் சித்திரக்கதைத் தொடர் வெளியாகி வாராவாரம் கலக்கிற்று. சிறுவயதில் வீட்டைவிட்டு ஓடிய சிறுவன் வளர்ந்து, மாறுவேடத்தில் வந்து அந்த குடும்பத்துக்கே உதவும்போது அவன் உண்மையை சொல்லவேண்டுமே என்று வாசகர்கள் தவித்த தவிப்பு!
அவர் இயற் பெயரை ஊகிக்க எத்தனையோ வாசகர்கள் முயன்றார்கள். ‘உங்க பெயரைக் கண்டு பிடித்து விட்டேன். ராமசாமி தானே உங்கள் பெயர்? என்ற வாசகருக்கு தமாஷாக பதிலளித்தார்: ‘பாதி சரி..’
திடீரென விகடனில் அறிவிப்பு. ”தமிழ்வாணன் எழுதும் ’மணிமொழி நீ என்னை மறந்துவிடு!’ தொடர்கதை ஆரம்பம்..." பெற்ற வரவேற்பு கலக்கிற்று. மாயா ஓவியம் மனதில் இன்னும்!
எழுதாத ஜானர் இல்லை. இறங்காத துறை இல்லை. 'காதலிக்க வாங்க!' அவர் எடுத்த படம்தான்.
அவர் இன்ட்ரட்யூஸ் பண்ணிய 'இன்சுவை' 'தமிழ் பல்பொடி' எல்லாம் ஏக பாப்புலர் அப்போது...
தமிழ்வாணன்... மே 22. பிறந்த நாள்.