Sunday, May 24, 2026

குணசித்திர நடிகையாகவும்...


படம்: தெய்வப் பிறவி.
பார்த்திருக்கும் பெண் வீட்டுக்குச் சென்று அவளைச் சந்தித்து வருவார் எஸ் எஸ் ராஜேந்திரன். போன இடத்தில் அவள் காபி எடுத்துத்தர, வெட்கப் போட்டியில் இருவர் தலையும் இடித்துக் கொள்ள..
வீட்டுக்கு வந்ததும் தம்பியை அக்கா பத்மினி விசாரிப்பாள். 'என்ன நெத்தியில வீங்கியிருக்கு?'
'அது வந்து..கேட்டு (gate) இடிச்சிடுச்சு!'
'கேட்டுத்தானே இடிச்சா? கேட்காம இடிக்கலியே?' என்பார் பத்மினி.
அந்தப் பெண்..
எம். என் ராஜம். இன்று பிறந்த நாள்.
1950 படங்களின் தவிர்க்க முடியாத நடிகர் எம். என். நம்பியார் என்றால் நடிகை எம். என் ராஜம்.
தமிழ் படங்களின் முதல் நட்சத்திர வில்லி அவர்தான். ரத்தக் கண்ணீர் காந்தாவை மறக்க முடியுமா?
உச்சரிப்பில் அப்படியொரு தெளிவு! சொல்லழகு மட்டுமல்ல, பல்லழகும்!
குணசித்திர நடிகையாகவும் முத்திரை பதித்தார். அரங்கேற்றம் படத்தில் அரளிக்காயை அரைக்கும்போது அந்த இறுகிய முகபாவம்! அதை மகள் பார்த்துவிட்டதும் அந்த பதைபதைப்பு! எத்தகைய பண்பட்ட நடிகை என்பதை சொல்லும் காட்சி.
பிரேம் நசீரிலிருந்து சிவாஜி வரை எல்லா நாயகர்களுடன்... நம்பியாரிலிருந்து வீரப்பா வரை எல்லா வில்லன்களுடன்... டி ஆர் ராமச்சந்திரனிலிருந்து தங்கவேலு வரை எல்லா காமெடியன்களுடன்… நடித்த ரேஞ்ச் விசாலமானது.
மணந்தவரை முன்பே நம் காதறியும். ஆம், ஏ.எல்.ராகவன்.

Saturday, May 23, 2026

என்னைக் கேளுங்கள்'...


இவர் என் வாழ்வோடு கலந்தவர். கதைகள் படிக்க ஆரம்பித்த காலத்தே என் கருத்தையெல்லாம் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டவர். ‘கல்கண்டு’ படிக்காமல் கண்ணுறங்கியதில்லை. வடக்கே பாபுராவ் படேல் போல இங்கே இவர் ’கேள்வி பதிலு’க்காகவே ('என்னைக் கேளுங்கள்') ஒரு பெரும் வாசக வட்டம்...
சங்கர்லால்! இதை இங்கர்சால் பேரிலிருந்த மதிப்பில் வைத்ததாக அவர் குறிப்பிட்ட ஞாபகம். சங்கர்லால்தான் எங்கள் எல்லாருக்கும் ஷெர்லாக் ஹோம்ஸ். சங்கர்லால் மனைவி இந்திரா, டீ (தேனீர் என்றே குறிப்பிடுவார்) போட்டுத்தரும் மாது, உதவிப் பையன் கத்திரிக்காய் என்ற அந்தக் குடும்பமே எல்லாருக்கும் ஃபேவரிட்.
1950 களில் வந்த தொடர். ‘நிழல் மனிதன்’. பயங்கரமான திருடனான நிழல் மனிதனை எப்படியாவது பிடிக்க வேண்டிய ஆகக் கடின அஸைன்மெண்டை பிரபல துப்பறியும் நிபுணர் சங்கர்லாலுக்கு அளிக்கிறார் உதவிப் போலீஸ் கமிஷனர் வஹாப்.
ஒரு ரெஸ்டாரண்டில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அந்த நபரிடம் ஒரு பெரியவர் வந்து, தான் ஒரு திருடன் என்றும் தன்னைப் பிடிக்க போலீஸ் வெளியே நிற்கிறது என்றும் சொல்கிறார்.. நீங்கதான் நிழல் மனிதன்னு எனக்குத் தெரியும், எப்படியாவது என்னைக் காப்பாத்துங்க, என்று அவர் கெஞ்ச அவன் பயப்படாதே சொல்கிறான்.
’பேசாமல் என் பின்னால் வா,’ என்றவன் ஒரு அட்டையை எடுத்து அதில் ‘நான்தான் நிழல்மனிதன்’ என்று எழுதி தன் கழுத்தில் மாட்டிக் கொண்டு வாசல் நோக்கி நடக்கிறான். போலீசும் மற்றவர்களும் அசந்து அப்படியே நிற்க, அவர் அவனுடன் நடந்து சென்று காரில் ஏறுகிறார். அடைக்கலமாகும் அந்தப் பெரியவர் அவனுடன் சேர்ந்துகொள்ள அவர்தானே சங்கர்லால் என்று ஆவல் சிந்திக் குவிந்த ஆயிரமாயிரம் கடிதங்கள்!
தமிழ்வாணன்! - சொல்லிக்கொண்டே இருக்கலாம்...
திருப்பங்களுடன் தொடர்களை அமைத்துச் செல்வதில், 100 கிராம் சுவாரசியத்துக்கு 150 கிராம் ஆவலை கலந்து கொடுப்பதில் நிகரில்லாதவர்.
கல்கண்டில் 1950களில் ’கண்ணம்மா’ என்றொரு தொடர் எழுதினாரே, அதில் ஒரு அத்தியாயத்தில் ’தொடரும்’ பகுதிக்கான அந்தப் பத்தி இன்னும் என் மனதில் ஒரு அபாரமான எழுத்தாக நிற்கிறது.
சிரமங்களை சந்தித்துவரும் ஏழைச் சிறுமியான கண்ணம்மா அந்த அத்தியாயத்தில் கவலையுடன் வீடு திரும்பிக் கொண்டிருப்பாள். இனி அந்தப் பாரா இப்படி செல்லும்: ‘...என்ன செய்வது என்று யோசித்தபடியே தன் தெருவுக்குள் நுழைந்தாள் கண்ணம்மா. தன் வீட்டுக்கு பக்கத்து வீடு தீப்பிடித்து எரிவதையும் கூச்சலும் பரபரப்புமாக சிலர் ஓடுவதையும்பார்த்தாள். எங்கும் புகை. அருகில் நெருங்க நெருங்கத்தான் எரிவது பக்கத்து வீடு அல்ல தன் வீடு என்று தெரிந்தது அவளுக்கு. (தொடரும்)
கல்கண்டில் முழு எழுத்துக்கும் பொறுப்பேற்ற நேரத்திலும் குமுதத்தில் இவரின் சித்திரக்கதைத் தொடர் வெளியாகி வாராவாரம் கலக்கிற்று. சிறுவயதில் வீட்டைவிட்டு ஓடிய சிறுவன் வளர்ந்து, மாறுவேடத்தில் வந்து அந்த குடும்பத்துக்கே உதவும்போது அவன் உண்மையை சொல்லவேண்டுமே என்று வாசகர்கள் தவித்த தவிப்பு!
அவர் இயற் பெயரை ஊகிக்க எத்தனையோ வாசகர்கள் முயன்றார்கள். ‘உங்க பெயரைக் கண்டு பிடித்து விட்டேன். ராமசாமி தானே உங்கள் பெயர்? என்ற வாசகருக்கு தமாஷாக பதிலளித்தார்: ‘பாதி சரி..’
திடீரென விகடனில் அறிவிப்பு. ”தமிழ்வாணன் எழுதும் ’மணிமொழி நீ என்னை மறந்துவிடு!’ தொடர்கதை ஆரம்பம்..." பெற்ற வரவேற்பு கலக்கிற்று. மாயா ஓவியம் மனதில் இன்னும்!
எழுதாத ஜானர் இல்லை. இறங்காத துறை இல்லை. 'காதலிக்க வாங்க!' அவர் எடுத்த படம்தான்.
அவர் இன்ட்ரட்யூஸ் பண்ணிய 'இன்சுவை' 'தமிழ் பல்பொடி' எல்லாம் ஏக பாப்புலர் அப்போது...
தமிழ்வாணன்... மே 22. பிறந்த நாள்.

Wednesday, May 20, 2026

அதே ஜன்னல் ஓரம்...


விபத்தில் அடிபட்டு தன் ஒரு காலில் கட்டுப்போட்டுக் கொண்டு வீல் சேரில் நாளை ஓட்டுகிறார் போட்டோகிராபர் ஜெஃப். அவ்வப்போது வந்து பார்க்கும் காதலியும் நர்சும்... நேரம் போகணுமே? அபார்ட்மெண்ட் ஜன்னலோரம் பைனாகுலரில் எதிர் ஜன்னல்களில் மற்றவர்கள் வாழ்க்கையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவருக்கு உதிக்கிறது ஒரு விபரீத சந்தேகம். இடி மழையின் இடையே கேட்டதே ஒரு சின்ன அலறல், என்ன அது? நோயாளி மனைவியைக் கவனித்துக் கொண்டிருக்கும் அந்த வீட்டுக்காரன், தோர்வால்ட், நீளக் கத்தி ஒன்றை கழுவுகிறானே ஏன்? ஒரு பெரிய ட்ரங்கு பெட்டியை வீட்டிலிருந்து அவன் நகர்த்துவது எதற்காக இருக்கும்? சத்தமில்லாமல் மனைவியை காலி பண்ணி விட்டான் என்று சந்தேகம்! துப்பறியும் நண்பனிடம் சொன்னால், விசாரித்து, அவள் ஊருக்குப் போயிருப்பதாகத் தெரிகிறது என்கிறான்.
பக்கத்து வீட்டுக்காரர் நாயை யாரோ கொன்றுவிட ஜெஃப்புக்கு மட்டும் சந்தேகமே இல்லை அது அவன் தான் என்று. ‘உடலை புதைத்த இடத்தை நாய் தோண்ட ஆரம்பித்திருக்கும், அதான்!’ பொய்யாக ஒரு போன் கால் கொடுத்து அவனை வீட்டிலிருந்து அப்புறப்படுத்துகிறார். அந்த நேரத்தில் காதலி சுவர் ஏறி குதித்து அவன் வீட்டில் நுழைந்து ஆராய்கையில் அவன் வந்துவிடுகிறான். காதலியை காப்பாற்றணுமே? வேறு வழியின்றி போலீஸுக்கு போன் செய்கிறார் ஜெஃப். அவர்கள் வந்து அவளைப் பிடிக்க, விரல்களைப் பின்புறமாக வைத்து ஜெஃப்புக்கு சைகை காட்டுகிறாள் காதலி. விரலில் தோர்வால்டின் மனைவியின் கல்யாண மோதிரம். பார்த்துவிடுகிறான் தோர்வால்ட் இவர் பார்ப்பதை.
அடுத்து என்ன? ஜெஃப்பைத் தீர்த்துக்கட்ட இரவில் அவர் வீட்டில் நுழைகிறான் அவன். தன் காமிராவின் ஃபிளாஷ்களை அவன் முகத்தில் அடித்துத் தப்ப முயல்கிறார் வீல் சேர் ஜெஃப். முடியவில்லை. தள்ளி விடுகிறான் அவரை ஜன்னல் வழியே. சரியாக போலீஸ் வந்து சேர, மாட்டிக் கொள்கிறான். கொலை செய்ததை ஒப்புக் கொள்கிறான்.
கடைசி காட்சி: அதே ஜன்னல் ஓரம். அதே வீல்சேரில் ஜேம்ஸ். ‘இரண்டு காலிலும்’ கட்டுப் போட்டுக் கொண்டு!
ஹிட்ச்காக்கின் பிரபல ‘Rear Window’’வில் ஜெஃப் ஆக வந்து, அந்த வீல் செயரில் நம்மையும் நகர வைத்தவர்...
James Stewart.. இன்று பிறந்த நாள்!
ஒரு மில்லியனில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் 36 மில்லியன் குவித்தது. (ஏன் எல்லோரும் சினிமா எடுக்க ஓடுகிறார்கள் என்று புரிகிறதா?)
‘பின் ஜன்னல்' தவிர இவர் பின்னியெடுத்த படம், ‘என்னவொரு அற்புதம், வாழ்க்கை!’ (‘What A Wonderful Life’) துடிப்பான நடிப்பு!
ஹிட்ச்காக்கின் ‘Vertigo’விலும் ஹீரோ இவரே. உயரம் என்றால் துயரம் அவருக்கு அதில். ‘Rope’ என்ற ஒரே ஷாட் ஹிட்ச்காக் படத்திலும்!
கையில் அடுத்த வேலைக்கான கட்டிடக் கலை டிகிரியை வைத்திருந்தவர், ஆரம்பத்தில் கலக்கியது கௌபாய் படங்களில். ஒரே தொப்பியுடன் என்பது விசேஷம்.
1934 இல் ‘Art Trouble’ முதல் படத்தில் நடித்தபோது டைட்டிலில் பெயர் வரவில்லை. ஆனால் 32 வயதில் ஆஸ்கார் வாங்கி விட்டார். ‘The Philadelphia Story’ க்காக வாங்கிய அந்த ஆஸ்காரை அப்பாவின் இரும்பு கடையில் பார்க்க வைத்திருந்தார்.
இரண்டாம் உலகப்போர். அப்போது இவர் பிரபல நடிகர். அழைப்பு வரவே, குறைந்த 5 பவுண்டை நிறைய சாப்பிட்டு சரியாக்கிவிட்டு ஏர் ஃபோர்ஸில் சேர்ந்தார். அப்படி என்ன எழுதினாரோ தெரியவில்லை, அப்பா அப்போது கொடுத்த கடிதத்தை தப்பாமல் பாக்கெட்டில் வைத்திருந்தாராம் கடைசிவரை. பிரிகேடியர் ஜெனரல் ஆன ஒரே நடிகர்!
திலீப் குமாருக்கும் இவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு 40 வயதுக்கு மேல் திருமணம் செய்து கொண்டவர்கள்.
அமெரிக்கன் பிலிம் இன்ஸ்டியூட் இவருக்கு அளித்தது 50 திரை சாதனையாளர்களின் மூன்றாவது ரேங்க் என்றால், பிரிமியம் மேகஸின் அளித்தது மாபெரும் நடிகர்களில் ஒன்பதாவது இடம்.
Quote?
‘I don't act, I react….பாத்திரங்களுக்கு உள்ளேபோய் குழப்பம் ஏற்படுத்திக் கொள்வதில்லை நான். கொஞ்சம் கொஞ்சம் மாற்றி, நான் ஆகவே எல்லா படத்திலும் வருகிறேன்!’