Monday, April 13, 2026

புருவமுயர் எதுகை...


"இரை போடும் மனிதருக்கே
இரையாகும் வெள்ளாடே...
இதுதான் உலகம், வீண்
அனுதாபம் கண்டு நீ
ஒருநாளும் நம்பிடாதே…!"
- அவரெழுதிய பாடல்களில் ஒன்று.
குறுகிய காலமே என்றாலும் கோலோச்சியிருக்கிறார் திரையுலகில் 'பாட்டுக் கோட்டை'யாக...
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்... இன்று பிறந்தநாள்!
கவிதையை பாடலாகத் தந்தவர்!
எம். எஸ். விஸ்வநாதனை அசத்திய அவரின் நாலு வரிகள்: ('பாசவலை')
"குட்டி ஆடு தப்பி வந்தால் குள்ள நரிக்கு சொந்தம்
குள்ள நரி மாட்டிக் கிட்டா கொறவனுக்கு சொந்தம்"
காய்ச்சலில் படுத்திருக்கும் தங்கையின் காதலனை தூங்கவைக்கப் பாடுகிறாள் தானும் அவனைக் காதலிக்கும் தமக்கை. இசைக்கும் சரி, காதலுக்கும் சரி, பொருத்தமாக அந்தப் பல்லவியை!
"துள்ளாத மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள் சொல்லும்
இல்லாத ஆசையைக் கிள்ளும்
இன்பத் தேனையும் வெல்லும்." ('கல்யாணப் பரிசி'ல்.)
முரளி அல்ல, சந்திரபாபு ஆயிற்றே.. ஆகவே பளிச்சென்று சொல்லுகிறார் தன் காதலை!
"...கண்ணுக்குள்ளே வந்து கலகம் செய்வதும் எதுக்காக? மெள்ளக்
காதுக்குள்ளே உந்தன் கருத்தைச் சொல்லிடு முடிவாக!"
"உனக்காக, எல்லாம் உனக்காக.." பாடலில். ('புதையல்')
'உன்னை நினைக்கையிலே, கண்ணே..' பாடலில் அந்த வர்ணனை:
"பொன்னை உருக்கிய வார்ப்படமே... அன்பு
பொங்கிடும் காதல் தேன் குடமே."
தத்துவப் பாடல்களில் முத்துக்களைக் கொடுத்திருக்கிறார் என்றால் அவரின் பக்தி வரிகள் பரவசமூட்டும். பிரபல 'தில்லை அம்பல நடராஜா..' பாடலில் தொடக்க வரிகள்..
"கங்கை அணிந்தவா.. கண்டோர் தொழும் விலாசா..
சதங்கையாடும் பாத விநோதா.. லிங்கேஸ்வரா..
நின் தாள் துணை நீ தா."
திரைப் பாடல் வரிகளுக்கு ஒரு கவர்ந்திழுக்கும் வடிவமைப்பு கொடுத்தவர். புருவமுயர் எதுகையிலும் இயல்பு நவில் இயைபிலும் வரிகளின் இறுதியை அவர் வரையும் விதமே அலாதி:
"காதலிலே தோல்வியுற்றாள் கன்னி ஒருத்தி..
கலங்குகின்றாள் அவனை நெஞ்சில் நிறுத்தி."
"வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே..
நாடி நிற்குதே அனேக நன்மையே!"
"துடிக்கும் வாலிபமே
நொடிக்குள் போய்விடுமே.."
"சீமான்கள் கொண்டாடும் மேடை
செண்டாலே காற்றெல்லாம் வாடை
சிரிப்பெல்லாம் வெவ்வேறு ஜாடை.."
"மனிதனாக வாழ்ந்திட வேணும், மனதில் வையடா..
வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கையடா."
"ஆடைகட்டி வந்த நிலவோ? - கண்ணில்
மேடை கட்டி ஆடும் எழிலோ?"
அப்புறம் அவரின் அந்த முத்திரை வரிகள்...தறியில் நெய்து கொண்டே பத்மினி பாடும்..
"சின்னச் சின்ன இழை பின்னிப் பின்னி வரும்
சித்திரக் கைத்தறிச் சேலையடி..
நம்ம தென்னாட்டில் எந்நாளும்
கொண்டாடும் வேலையடி."

Thursday, April 9, 2026

புரியாத, புதிர் இல்லை...

ஒரு புதிர்.
ஆடு மேய்த்துக் கொண்டிருந்த அவர் தாத்தா, தானே கணிதமும் வானியலும் பயின்று தன்னை ஆசிரியராக்கிக் கொண்டார் என்றால் பேரன் என்ன கற்றுக் கொண்டிருப்பார்?
ஆமா, புதிர்களை உருவாக்குவதே அவர் ப்ரொஃபெஷனாயிற்று.
அவர் புரியாத, புதிர் ஒன்று இல்லை.

அவர் Henry Dudeney.. இன்று பிறந்த நாள். (1857)
புதிரெழுத ஆரம்பித்த வயது 9. புனை பெயரைப் (Sphinx) போலவே சிங்கம்தான் அதில். ஏன், உலகின் முதல் 'நம்பர் க்ராஸ்வர்ட்' இவர் தயாரித்ததுதான். தவிர, செஸ்ஸில் லேசில் செக் சொல்லமுடியாத 'கிங்'!
அக்காலத்தில் பிரபலமானது Haberdasher’s Puzzle. ஒரு சமபக்க முக்கோணத்தை 4 துண்டுகளாக வெட்டி ஒரு சதுரமாக்க வேண்டும், எப்படி? செய்து காட்டி Royal Societyயில் அப்ளாஸ் வாங்கினார்.
ஏற்கெனவே பிரபலமாயிருந்த Sam Loyd உடன் பழகி அவருக்கு அனுப்பிய புதிர்களை அவர் ஏன் தன் பேரில் வெளியிட்டார் என்பது 'புரியாத புதிர்' இவருக்கு.
டிட்பிட்ஸிலிருந்து ஸ்ட்ரேண்ட் மேகசைன் (30 வருஷம்) வரை புதிர் சப்ளை செய்த இவர் ஆர்தர் கானன்டாயிலின் நண்பர்.
'வார்த்தை - எண் புதிர்' இவர் ஸ்பெஷாலிடி. எழுத்துக்களான எண்களைக் கண்டு பிடித்தால் கணக்கு சரியாயிருக்கணும். இதோ ஒன்று.
S E N D +
M O R E
__________
M O N E Y
முடிகிறதா (அல்லது விடையை கமெண்டில்) பாருங்கள்!
ஒரு நல்ல பஸிலை தீர்க்க புத்தி கூர்மை, கணிதம், லாஜிக் மூன்றும் தேவை என்கிறார். கணிதத்தின் வளர்ச்சியில் puzzle solving முக்கியமான பங்கு வகிப்பதாயிற்றே?
புத்திசாலித்தனமாக குழந்தைகள் வளர அவர்களுக்கு புதிர்களில் ஆர்வத்தை ஏற்படுத்தலாமே?

Wednesday, February 18, 2026

16 வயதினிலே ...


16 வயதினிலே லேசான சினிமா ஆர்வத்துடன் ‘Andaz’ பட ஷூட்டிங் பார்க்க ஸ்டூடியோவுக்குள் நுழைந்த பெண்ணை, 'Barsaat' பட ஷூட்டிங்கிலிருந்த ராஜ் கபூர் பார்க்க, 'கண்டேன் என் ரெண்டாவது கதாநாயகியை!' என்று sign up செய்தார். இப்படியாக "ஜீயா பேகரார் ஹை ..." என்ற All India Hit பாடலைப் பாடிக்கொண்டே நுழைந்தார் படவுலகில்.
நிம்மி! கம்மியின்றி அழகை ஆண்டவன் அள்ளிக் கொடுத்த நிம்மி! இந்தித் திரையுலகின் முதல் அழகுப் பதுமை எனச் சொல்லலாம் இவரை. அப்பாவி கிராமப் பெண் வேடத்துக்கு அபாரமாக பொருந்தும் முகம். Incidentally, ‘குமுதம்' படத்தின் ரீமேக் 'Phooja Ki Phool’ -இல் சௌகார் வேடத்தில் இவரே.
லதா மங்கேஷ்கர் தமிழில் முதல் முதலாக பாடிய பாட்டு நினைவிருக்கிறதா? "நீ எந்தன் கண்ணாளன்.. கரை நோக்கி போகிறாய்..." (அந்த "தையாரே தையர..”)
படத்தில் அந்தக் காட்சியில் நிம்மி, என்னவொரு முகபாவம்! படம் 'Uran khatola'. (தமிழில் 'வானரதம்' திலீப் குமார்.)