Wednesday, April 22, 2026

ஒளிப்பதிவாளர்களின் ஒளிப்பதிவாளர்...

 


‘மாயாபஜார்’ படத்தில் கடோத்கஜ ரங்கராவ் லட்டு விழுங்கும் காட்சி நினைவிருக்கிறதா? எந்த வசதியும் இல்லாத அந்தக் காலத்தில் எப்படி எடுத்தார் என்று எல்லாரையும் புருவம் உயர்த்த வைத்தார் அவர்.

ஒளிப்பதிவாளர் மார்கஸ் பார்ட்லி... இன்று பிறந்தநாள்!
“ஆஹா இன்ப நிலாவினிலே..” பாடலில், இந்திய சினிமாவிலேயே முதல் முதலாக, முற்பகலில் படமாக்கிய காட்சிக்கு தன் லைட்டிங்கால் மூன் லைட் எஃபெக்ட் கொண்டு வந்திருப்பார்! அதில் ஸ்பெஷலிஸ்ட்.
கதையை கேட்டுத் தெரிந்து கொண்டு கதைக்கேற்ற ஒளிக் கலவையை அளிப்பவர். பர்ஃபெக்‌ஷன் இவர் மூச்சு. ரிசல்ட் வேண்டுமானால் இவர்தான் என்று தேடிவந்தார்கள்.
பானுமதியின் முதல் படமான ‘சுவர்க்க சீமா’தான் இவர் தடம் பதித்த முதல் படம். திறமையால் ‘விஜயா வாஹினி'யின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராகி மிஸ்ஸியம்மா, குணசுந்தரி, பாதாள பைரவி, மாயா பஜார் என்று ‘படம் பதித்தார்’.
Cannes International Film Festival -இல் பிரபல ‘செம்மீன்’ படத்துக்காக பெஸ்ட் ஃபோட்டோகிராபியின் தங்கப் பதக்கம் வாங்கி பெருமை சேர்த்தார். ஜெமினியில் பணி புரிந்து கொண்டிருந்த இவரை ‘செம்மீனு'க்காக டைரக்டர் ராமு காரியாட் விரும்பிக் கேட்டு அழைத்துச் சென்றார். கடற்கரைக் காட்சிகள் கண்ணில் ஒற்றிக் கொள்கிறாற்போல இருக்கும். மணலில் நண்டு ஊர்வதிலிருந்து மறையும் சூரியனின் கிரண வண்ணம் வரை! ‘Ryan’s Daughter’-இன் அட்லாண்டிக் போல 'செம்மீனி'ல் அரபிக் கடலின் இரண்டு மைலுக்கு 60 அடி உயர்ந்த்தெழும் அலகளைப் படம் பிடிக்க விரும்பினாராம், நடக்கவில்லை.
நாம் இவரது ட்ரீட்டை மிஸ் பண்ணினது ‘எங்க வீட்டு பிள்ளை’ படத்தில். அப்போது இவர் ஒளிப்பதிவு பற்றி மேலும் படிக்க வெளிநாட்டுக்குப் போய் இருந்தாராம். ஆனால் இந்திப் பதிப்பான ‘ராம் அவுர் ஷியாம்’ இவர்தான் பண்ணியிருப்பார். ஸ்ரீதர் இந்தியில் ‘பாலும் பழமும்’ (‘Saathi’) இயக்கியபோது கேமராவை இயக்க அழைத்தது இவரை.
என்றென்றும் மறக்க முடியாத மற்றொன்று ‘சாந்தி நிலையம்.’ 'இயற்கை என்னும் இளைய கன்னி..’ பாடல் இறுதியில் காமிரா மேலே, மேலே, மேலே சென்று முடிவது ரம்மியமாக இருக்கும். ‘வண்ண வண்ணப் பூவில் காயை வைத்தவன்..’ வரியில் வட்ட மரத்தைச் சுற்றி காமிரா வளைந்திறங்கும் அழகு ஒன்று போதும், எப்படியெல்லாம் படப்பிடிப்பில் நூதனம் சேர்க்கலாம் என்பதைக் கற்றுக் கொடுக்க. அந்த ராட்சத பலூன் காட்சிகளை யாரால் மறக்க முடியும்? பலரும் எதிர்பார்த்த மாதிரி நேஷனல் அவார்ட், ஸ்டேட் அவார்ட் இரண்டும் கிடைத்தது அந்தப் படத்தின் ஒளிப்பதிவுக்கு. 1989 இல் கிடைத்தது தமிழக அரசின் ராஜா சாண்டோ அவார்ட்.
ஒற்றை நெகடிவில் ஏழு மாஸ்கிங் எடுத்தவர். ஸாஃப்ட் லைட்டிங்கின் முன்னோடியாக இவரைக் கருதுகிறார் பி.சி.ஶ்ரீராம். “கலரும் டெக்ஸ்சரும் சரியாகவும் அழகாகவும் இருக்கும்!”
காமிரா தானிருப்பது தெரியாமல் காட்சியையும் கதையையும் வலுப்படுத்த வேண்டும் என்பார் மார்கஸ் பார்ட்லி. “ஆஹா, நல்ல ஷாட் என்றால் போச்சு என்று அர்த்தம்!”
ஒரு வரியில் சொன்னால் ஒளிப்பதிவாளர்களின் ஒளிப்பதிவாளர்!

Tuesday, April 21, 2026

கற்பனை உலகு...


எந்த ஒரு மீட்டிங்கிலும் சரி, கூட்டத்தை நோக்கி, உங்களில் பள்ளிநாட்களில் ‘Jane Eyre’ படிக்காதவர்கள் விரல் உயர்த்துங்கள் என்று சொன்னால் விரல் உயர்த்தியவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அத்தனை புகழ் பெற்ற அந்த (துணைப்பாடக்) கதையை எழுதியவர்
Charlotte Bronte... இன்று பிறந்த நாள்.
கதையில் ஜேன் படும் துன்பங்களுக்குக் கொஞ்சமும் குறைந்ததல்ல, அதனை உருவாக்கியவர் வாழ்க்கையில் பட்டது. சின்னவயதில் கொண்டு விடப்பட்ட பள்ளி விடுதியில் சார்லெட்டும் 4 சகோதரிகளும் சந்தித்த கஷ்டங்கள்! தங்களில் இருவரைப் பறிகொடுத்தே மீண்டார்கள்
சார்லட்டுக்கு 10 வயது இருக்கும்போது அப்பா சில படை வீரர் பொம்மைகளை வாங்கி வந்தார். சகோதரிகள் அந்த பொம்மைகளுக்கு பெயரும், குணமும், உலவிட ஓர் உலகமும் கொடுத்தார்கள். அந்தக் கற்பனை உலகுக்கு Angria என்று பெயரிடப்பட்டது. அவர்களை வைத்து கதையும் கவியும் புனைந்தார்கள்.
ஆம், வாழ்வின் சோகத்திலிருந்து இலக்கியம்தான் அவர்களை வெளியில் எடுத்து சென்றது. பெண்கள் பெயரில் எழுதினால் வரவேற்பில்லை (ஆம் அப்படி ஒரு காலம் இருந்தது!) என்பதால் ஆண் புனைபெயர்களில் அவர்கள் எழுதினார்கள். அவர்களே வெளியிட்ட முதல் கவிதைத் தொகுப்பு இரண்டு பிரதிகள்தாம் விற்றது என்றாலும் சோர்ந்து போகவில்லை.
சார்லட் அனுப்பி வைத்த கவிகளைப் பார்த்து அவர் திறமையை ஒப்புக்கொண்ட கவிஞர் Robert Southey, ஆனாலும் இதற்கெல்லாம் ஏது பெண்களாகிய உங்களுக்கு நேரம்? வேண்டாமே, என்று பதில் எழுதியதையும் பொறுத்துக் கொண்டார்.
எழுதிய முதல் நாவல் 9 முறை திரும்பி வந்தது. அடுத்ததுதான் Jane Eyre. உடனடி ஹிட்! by Currer Bell என்று வெளியிட்ட பப்ளிஷருக்கு அடுத்த வருடம் தான் தெரிந்தது அது பெண் என்று. மற்றொரு சகோதரியின் நாவலுக்கும் மகத்தான வரவேற்பு. ஆம், ‘Wuthering Heights’ எழுதிய Emily Bronte தான் அவர்.
தந்தையின் உடல்நிலை, தம்பியின் கடன் என்று பல தடைகள், அவர் தனக்கு ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள. தம்பியையும் இரு சகோதரிகளையும் ஒரே வருடத்தில் பறி கொடுத்தார். மூன்று முறை தனக்கு வந்த ப்ரப்போசல்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் போனவருக்கு இறுதியில் அந்த வாய்ப்பு கூடும்போது வயது 37 ஆகியிருந்தது. மாதங்களே நீடித்தது மண வாழ்க்கை. மறைந்தார் 38வது வயதிலேயே, தன் அம்மாவைப் போல.
இரண்டு Quotes ...
‘பகைமையை வளர்க்கவோ மற்றவர் தவறுகளை பட்டியலிடவோ
நேரமில்லாத அளவுக்கு வாழ்க்கை எனக்கு மிகச் சிறியதாகத் தோன்றுகிறது.’
‘மனித இதயத்தில் ரகசியப் புதையல்கள் உண்டு. காப்பாற்றும் ரகசியங்களில். மூடி வைத்த மௌனத்தில். நினைவுகள், நம்பிக்கைகள், கனவுகள், சந்தோஷங்கள்... சொல்லிவிட்டால் அவற்றின் வசீகரம் நொறுங்கி விடும்!’

அவன் குரல்... (30 Second Story)


“கடவுளே, வரம் வேண்டாம், உங்களுக்கு நனறி சொல்லணும்! நான் உங்களைப் பார்க்கணும்!”
வதங்கினான்.
வந்தார். "வரம் கேக்காம நன்றின்னு வந்தது நீ மட்டும்தான். அதான் காட்சி தந்தேன். சொல்லு. எதுக்கு நன்றி?"
"எத்தனையோ பிரசினை எனக்கு. ஆனா ஒவ்வொண்ணு வரும்போதும் எனக்கு உங்க அசரீரி கேட்குது. அதுபடி நடக்குது. நான் நார்மலாயிடறேன்."
"அசரீரியா? நான் எப்ப .."
"பிரசினை சமயத்தில ரோட்டில போறவங்க பேச்சோ, தூரத்தில கேட்கிற பாட்டு வரியோ, எதிரில ஒரு இடத்தில தெரியற வாசகமோ.. அது எனக்கு நான் என்ன செய்யணும்னு சொல்லுது. என் மேல கருணை வெச்சு நீங்க.."
"நில்லு நில்லு... அதிலெல்லாம் என் ஸிக்னேச்சர் தேடாதே. இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தை நடத்தறதுக்குள்ள... உங்களையெல்லாம் சமாளிக்கிறதுக்குள்ள எனக்கே முழி பிதுங்குது. இதில உங்களுக்கெல்லாம் அசரீரி வேறே அனுப்பணுமாக்கும்?"
"அப்படீன்னா…எனக்கு பிரசினை வரும்போதெல்லாம்..."
"நீதான் சமாளிக்கணும். அதுக்குத்தானே மூளையும் தந்துருக்கேன்? அப்ப அதை எடுத்துரவா?"
"அப்ப தற்செயல்தானா?"
"உன் செயலை யோசித்து செய்து உருப்படப்பாரு. And pray. அதான் என் பர்மனண்ட் அசரீரி. God is not for it, Got it?"
“Got it!” அமைதியானான்.
><><
- கே. பி. ஜனார்த்தனன்