Friday, July 10, 2026

இன்னும் நிறைய ...


‘மேலிருந்து குதிக்கும் போது ஒரு வலையை கண்டு கொள்வேன் என்றுதான் நம்பினேன். மாறாக என்னால் பறக்க முடியும் என்று அறிந்து கொண்டேன்.’
இந்த அருமை வாசகம் சொன்னவர் John Calvin ( 1509 - 1574) பிரெஞ்சு தத்துவ ஞானி. இன்று பிறந்த நாள்!
இன்னும் நிறைய முத்துக்களை உதிர்த்திருக்கிறார்.
‘ஒருவர் எந்த மாதிரி இருந்தாலும் அவரை நாம் நேசிக்க வேண்டும், ஏனெனில் நாம் கடவுளை நேசிக்கிறோம்.’
‘எல்லா மனிதர்களுமே சந்தோஷத்தை தேடுகிறார்கள், ஆனால் நூற்றில் ஒருவன் கூட அதை கடவுளிடம் தேடுவதில்லை.’
‘உண்மையைத் தியாகம் செய்து வாங்க வேண்டியது அல்ல அமைதி.’
‘அடக்கம் என்பது உண்மையான அறிவின் தொடக்கம்.’
‘மனிதனின் அழிவுக்கு நிச்சயமான வழி அவன் தனக்குக் கீழ்ப்படிவதுதான்.’
‘பிரார்த்தனை விஷயங்களை மாற்றாது; கடவுள் மாற்றுகிறார் நம் பிரார்த்தனையின் பதிலாக.’
'கடவுளை அறிந்து கொள்வதில் தொடங்காமல் எந்த அறிவும் இல்லை.'
‘செல்வத்தால் கண்கள் மறைக்கப்படுவதைவிட ஆபத்தானது வேறேதுமில்லை.’
‘நம் நம்பிக்கை குறைவாக இருக்கும்போது அது அதிகரிக்கவும், உறங்கிக் கிடக்கும் போது விழிக்கவும், ஊசலாடும் போது அதை உறுதிப்படுத்தவும், பலவீனமாக இருக்கும்போது பலப்படுத்தவும், தூக்கி எறியப்படும் போது அதை எடுத்து வளர்க்கவும் செய்யும்படி கடவுளைக் கேட்டுக் கொள்ள வேண்டும்.’

Wednesday, July 8, 2026

எண் கைப் பூதம்...


I Q test என்று ஒன்று வைக்கிறார்களே, அவரவர் திறமையை அங்குலம் சுத்தமாக அளந்து சொல்ல? அதை ஆரம்பித்து வைத்தவருக்கு இன்று பிறந்த நாள்! Alfred Binet... (1857 - 1911)
சட்டம் பயின்ற இந்த பிரெஞ்சுக்காரர் சட்டென்று அதை உதறக் காரணமாயிருந்தது ஹிப்னாஸிஸ் பற்றி அவர் படித்த ஒரு புத்தகம். சைகாலஜியில் பையக் காலை வைத்தார். தானே பயின்றார். இருநூறு புத்தகம் எழுதியது அதில்தான்.
பள்ளியில் கற்றுக் கொடுப்பதை சரிவர புரிந்து கொள்ள முடியாத மாணவர்களை கண்டெடுத்து தனியே பயிற்சி கொடுக்க, ஒரு டெஸ்ட் தயாரிக்கச் சொல்லிவந்தது ஓர் வேண்டுகோள் அரசிடமிருந்து அவருக்கு. நண்பர் சைமனுடன் சேர்ந்து முதலாவது ஐ.க்யூ. டெஸ்டை அவர் தயாரித்த வருடம் 1905.
அதை அடியொற்றி ஏகப்பட்ட இன்டெலிஜென்ஸ் டெஸ்ட் வந்து விட்டன. பத்து வருடத்தில் அமெரிக்காவில் காலை வைத்த இவரது டெஸ்ட், ஸ்டான்ஃபோர்டு யுனிவர்சிட்டியால் வார்த்தெடுக்கப்பட்டு இன்றளவும் பாப்புலர்.
'இப்படி எல்லாம் ஒன்றும் புத்திசாலித்தனத்தை ஒரு நம்பருக்குள் கொண்டுவந்துவிட முடியாது, பல்வேறு திறமைகளை உள்ளடக்கியது அது, காலம் சூழ்நிலை மோடிவேஷன் போன்ற ஏகப்பட்ட காரணங்கள் அதை எளிதாக மாற்றிவிடும், ஒரே மாதிரி பின்னணியில் உள்ள குழந்தைகளையே ஒப்பிட இயலும்' என்ற கருத்தையும் அவரே விட்டு சென்றிருக்கிறார்.
உதா ஒன்று: பெற்றெடுத்து ஒரே வீட்டில் வளர்க்கப்பட்ட சகோதர சகோதரிகளின் ஐ. க்யூ., தத்தெடுத்து ஒரே வீட்டில் வளர்க்கப்பட்டவர்களைவிட அதிக ஒற்றுமையாக இருக்குமாம். இப்படி நிறைய கண்டுபிடித்திருக்கிறார்கள் இப்போது.
ஆக, ஐ க்யூவை ஒரு ஹைக்கூவாக சொன்னால்…
‘எண் பாட்டிலில்
அடைக்க முடியவில்லை அதை.
எண் கைப் பூதம்.’

Tuesday, July 7, 2026

கனவுகளை நாடி...


அந்தப்படத்தில் ஐந்து புதிய இசை அமைப்பாளர்களை அறிமுகப்படுத்தினார் டைரக்டர் வசந்த். ‘ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே’ என்று சொல்ல வைத்தது ஒவ்வொரு பாட்டும். அதில் இதயத்தை "தொட்டுத் தொட்டுச் செல்லும்..." அந்தப் பாட்டை இசையமைத்ததோடு பாடியும் அசத்தி தமிழ் திரைக்கு அறிமுகமானார் அவர்.
இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம்... இன்று பிறந்த நாள்!
'அழகிய தீயே' தான் இவரை பிரபலமாக்கியது. பாடல்களும் சரி பின்னணி இசையும் சரி பாந்தமாக அமைந்த படம். “சந்தனப் பூங்காற்றே…” “விழிகளில் அருகினில்…” ரெண்டுமே கல்கண்டு ரகம். க்ளைமாக்ஸில் அந்த பின்னணி இசை! 'பூம்'!
இனி அவரின் அந்த அதி உன்னத முயற்சி. ‘ராமானுஜன்.’ 2014 இன் சிறந்த இசையாக ‘டெக்கான் மியூசிக்’ தேர்ந்தெடுத்த படம். க்ளாஸிகல் இசையும் வெஸ்டெர்னும் அந்தக் கதையின் காலத்திற்கேற்ப கலந்து ஓர் பவழ இசையைத் தவழ விட்டிருப்பார்.
“நாராயணா.. நாராயணா..” என்ற அந்தப் பாட்டை நீங்கள் ஒரு முறையாவது கேட்க வேண்டும். அடுத்து எத்தனை முறைகேட்பது என்பதை நீங்களே தீர்மானிப்பீர்கள். சுஹாசினி பாடி முடிந்து சின்ன இராமானுஜன் வந்து பாடும்போது பீட் மெல்லத் தாவி விட்டிருக்கும் முழு வெஸ்டர்னுக்கு. (லிங்க் கீழே)
உன்னி கிருஷ்ணன் பாடும் திருமழிசை ஆழ்வாரின் 'விண் கடந்த ஜோதியாய்..' பாடலாகட்டும், ("ஆறும் ஆறும் ஆறுமாய் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்...") ரமேஷே பாடும் நா. முத்துக் குமாரின்கனிவான 'துளி துளியாய்...' பாடலாகட்டும் கேட்க பரவசம்.

அப்புறம் அவரின் அந்த ஆகச் சிறந்த பாடல்... என்ன அதுன்னு கேட்பவருக்கு: “என்ன இது, என்ன இது என்னைக் கொல்வது?..." கமலின் ‘நள தமயந்தி'யில் சின்மயியுடன் இவரே பாடியது. சரணத்தின் கடைசி வரி பல்லவியின் முதல் வரியாக மாறும் அதிசயம்! பாடல் நின்ற பிறகும் நம் காதில் அந்த தனனதன ஃப்ளூட்! அந்த பிரில்லியண்ட் அரேஞ்ச்மெண்ட்! நான் ஸ்டாப்பாக ஒலிக்க விட்டு நாம் தூங்கிப் போகலாம் நல்ல கனவுகளை நாடி! (லிங்க் கீழே)
அதே படத்தில்தான் மாதவனும் ஷ்ருதிகாவும் ஆடும் அந்த அட்டகாச ஜாலி பாடலும்! "புக்காம் பொறந்தா மனுஷாளெல்லாம் ஒண்ணா சேருங்கோ… மாப்ளே பொண்ணில் யார்தான் சமர்த்து நன்னாப் பாருங்கோ.."
“ஜீவன் எங்கே …” ‘யூனிவர்சிடி’ படத்தில் வரும் பாடல். ஜீவனைத் தொட்டுச் செல்லும். இடையிசையில் அமர்க்களப் படுத்தியிருப்பார். 'ஜெர்ரி' படத்தின் ஹிட் "என் சுவாசத்தில் காதலின் வாசம் வீசவைத்ததாரோ.."
இவரின் பக்திப் பாடல் ஆல்பங்களில் எஸ். பி. பி. பாடிய "கிருஷ்ணா.. ஜனார்த்தனா..." அப்படியொரு உருக்கம்!