Friday, May 1, 2026

ஆளுக்கொரு திசையில்...


நகரத்திலேயே பெரிய பணக்காரர் அவர். தன் பிரம்மாண்ட புதிய கடையை தொடங்குகிறார். ‘There is many a slip between the cup and the lip,’ என்று சொல்லும் நண்பரைச் சிரிக்கிறார், ‘எல்லாம் மனிதன் கையில்தான்,’ என்று. "அடுத்த வருடமே பெரிய பங்களா வாங்குவேன், உங்களையெல்லாம் காரில் ஏற்றிக் கொண்டு ..." என்று பெருமையுடன் மனைவியிடம் சொல்லும் கணமே இடிந்து விழுகிறது வீடு. பூகம்பம்! அவரும் அன்பு மனைவியும் மூன்று மக்களும் ஆளுக்கொரு திசையில் சிதறடிக்கப்படுகிறார்கள். மூத்த மகனைத் தேடிச் சென்ற இடத்தில் விடுதிக் காரனைத் தாக்கியதில் ஜெயிலுக்கு போகிறார். குடும்பத்தைப் பறிகொடுத்து குமுறும் உள்ளத்துடன் அலையும் அந்த 'வக்த்' படத்தின் லாலா கேதாரிநாத் வேடத்துக்கு அவரைவிட வேறு யாரால் அத்தனை பரிதாபத்தை ஊட்ட முடியும்? Ineffable!
பால்ராஜ் சஹானி... குண சித்திர நடிகர். இன்று பிறந்த நாள்!
‘Waqt’ அவருக்கு ஒரு மைல்கல். ”Yeh Meri Zohra Jabeen…” என்று மனைவியை வர்ணித்துப் பாடும் அழகாகட்டும், மகனைத் துன்புறுத்தியதை அறிந்ததும் வில்லன் ஜீவனிடம் காட்டும் ஆத்திரமாகட்டும், பீச் ஓரமாக கடலையைக் கொறித்தபடி விரக்தியுடன் நடப்பதாகட்டும்... ‘எல்லாமே காலத்தின் கையில்!’ என்று சொல்லும் படத்தின் ஜீவனை தன் கையில் அழகாகத் தாங்கி கொண்டிருப்பார்.
கல்லூரி ஆசிரியராகவும் லண்டனில் பி.பி.ஸி. அறிவிப்பாளராகவும் பணிபுரிந்தவர்... நாடக நடிகராக இருந்ததால் சினிமாவில் சிரமமின்றி சிறப்பாக…
சலில் சௌத்ரியின் கதையைத் தழுவி பிமல் ராய் எடுத்த கலைப் படம் 'Do Bigha Zamin' தான் பேர் சொன்ன அவரது முதல் பிரபல படம். கேன்ஸ் ஃபெஸ்டிவலில் சர்வதேச அவார்ட் வாங்கிய முதல் இந்தியப் படம். இந்தப் படத்திற்காக கொல்கத்தா தெருக்களில் ரிக் ஷா இழுத்துப் பழகுகிற அளவுக்கு நடிப்பில் ஈடுபாடு!
அடுத்து பேசப்பட்ட படம் 'Seema'. குழந்தையின் தலையை வருடியபடி அமைதியாக அமர்ந்து அவர் பாடும் சங்கர் ஜெய்கிஷனின் “Tu Pyaar Ka Saagar Ho..” நினைவுக்கு வருமே? அப்புறம் ‘Kabuliwala’ ரவீந்திரநாத் தாகூரின் கதை அது. நேஷனல் அவார்டும் ஃபிலிம் ஃபேர் மூன்று அவார்டும் வாங்கிய ‘Garm Hava’ மற்றொரு மிக முக்கியமான படம்.
'என் தங்கை' ஹிந்தி ரீமேக்கில் (‘Chhoti Bahen’) எம்ஜிஆர் வேடத்தில் நடித்த பால்ராஜ் நிறைய எழுதியிருக்கிறார். ஆங்கிலத்திலும். தேவ் ஆனந்த் நடித்து குருதத் இயக்கிய ‘Baazi’ படத்தின் திரைக்கதையும் கூட.

இன்னாடே, இன்னாடேன்னு...


காரிருளில் மிதந்து வருகிறது காதலனின் பாட்டு. அந்த மீனவப் பெண் காதில் பட்டுத் தெறிக்கிறது. இதயத்தில் தைக்கிறது. தாள முடியாமல் தன் காதைப் பொத்திக் கொள்கிறாள். மயக்கும் அந்தக் குரலிருந்து மீள முடியாமல்!
“மானச மைனே வரு… மதுரம் நுள்ளித் தரு…” ‘செம்மீன்' மலையாளப் படத்தின் செம்மையான சீன். அந்த மெஸ்மெரிசக் குரல்!
மன்னா டே! இன்று பெர்த் டே!
இன்னாடே, இன்னாடேன்னு இனிமையா பாட்டுக்களைக் கொடுத்தவர்.
ஹிந்தி பின்னணி உலகின் டாப் 5 M களில் ஒருவர். (Mohamad Rafi, Mukesh, Mahendra Kapoor, Manna Dey, Talat Mehmood) க்ளாஸிகல் இசை பயின்றவர். ராஜ் கபூருக்கும் பாடியிருக்கிறார், ரிஷி & ரந்திர் கபூருக்கும்!
நாம் விரும்பிக் கேட்கும் ரஃபி விரும்பிக் கேட்பது இவர் பாடல்களைத்தான் (என்பாராம் ரஃபி.)
1942. டிகிரியை வாங்கிய கையோடு உதவி இசையமைப்பாளராக ஆரம்பித்தவர் நடிகை சுரையாவுடன் பாடிய பாட்டு ஹிட்டாக, பின்னணி பாடகர் ஆனார். 50 களும் 60 களும் பொற்காலம். 1957 -இல் மட்டும் 95 இந்திப் பாடல்கள்.
எதிர் வீட்டுப் பெண்ணுக்கு பாட்டு என்றால் உயிர். காதலிக்கிற இவனுக்கோ கானம் வராது. கட்டிலுக்கு அடியில் இருந்து நண்பன் பாட, வாய் அசைக்கிறான். காதல் கை கூடும் போதும் களத்தில் குதிக்கிறார் அவளது பாட்டு வாத்தியார். போட்டிப் பாட்டு ஆரம்பம். தாவி தவ்விக் குதித்துப் பாடி, மாடி ஜன்னலுக்கு வந்துவிடுகிறார் வாத்தியார் மெகமூத். அசத்தலாக அவருக்குப் பின்னணி பாடியவர் மன்னாடே. Padosan (இந்தி ‘அடுத்த வீட்டுப் பெண்') இல் ‘Ek Chatur Naar..’
How versatile a singer he was… என்பதைச் சொல்லும் (பாடும்) பாடல் ஒன்று உண்டு. கேட்கக் காது போதாது ரகம். Roshan இசையமைத்த ‘Laga Chunri Mein Daag..' (Dil Hi To Hai) (லிங்க் கீழே) சங்கதிகளும் கமகங்களும் பொங்கி வழியும் அந்தப் பாடலை மிக என்றால் மிக அற்புதமாக.... High ptch பாடும்போது இன்னும் மிருதுவாகும் குரல்!
ராஜ்கபூரின் மிகப் புகழ் பெற்ற வேகப் பாடல்களையும் சோகப் பாடல்களையும் இவர்தான் பாடியிருப்பார். கேட்டுச் சலிக்காத ‘Dil Ka Hal Sune Dilwala..’‘Mud Mudke na Dekh…’ (Shree 420) ‘Ae Bhai Jara Dekh ke Chalo..’ (Mera Naam Joker)
ஒரே ஒரு முறை கேட்டுப் பாருங்க, அந்த "ஆஜா ஸனம்.. மதுரு சாந்த்னி மே ஹம்.." (Chori Chori)) பாடலை! நானோ செ.மீ. அகலம் கூட இராத அந்த மிக மெல்லிய குரலை! அசராதிருக்க வாய்ப்பில்லை. (லிங்க் கீழே)
‘Waqt’ படத்தில் பால்ராஜ் சாஹ்னி கிரஹப்பிரவேச விழாவில் தன் மனைவியை வர்ணித்து பாடும் ‘Yeh Mere Zohra Jabhi…’ பாடலில் இவர் குரல் ஒரு ஜாலியான இனிமையை வழங்கும் என்றால் ‘Mere Huzoor’ படத்தில் ராஜ் குமார் பாடுவதாக வரும் ‘Jhanak Jhanak Tore Bhaje..’ சரணத்தில் இன்னும் இன்னும் என்று இறங்கிக் கொண்டே போகும்போது சிலிர்க்கும்.
Sholay யில் அந்த ‘Yeh Dosti..’ Bobby யில் இந்த ‘Na Mangoon Sona Chandi..’ சொல்லிக் கொண்டே இருக்கலாம் அவர் பாடல்களைக் கேட்டுக்கொண்டே...

Thursday, April 30, 2026

அறிவியலின் அந்தப்புரங்களில்...


ஒன்றிலிருந்து நூறு வரை உள்ள எண்களின் கூட்டுத் தொகையை சொல்லுங்கன்னு கேட்டால் ஒன்றிலிருந்து பத்து நிமிடமாவது எடுத்துக்கொள்கிறீர்கள் இல்லையா? ஒரு நிமிடம் கூட எடுத்துக் கொள்ளவில்லை அந்தப் பையன். அசந்து விட்டார் ஆசிரியர். எப்படி? இறுதி பாராவில்.
கணிதத்தில் ஏற்பட்ட ஏகப்பட்ட முன்னேற்றங்களுக்கு காரணமான இந்த ஜெர்மானியர் ஆகப்பெரிய கணித மேதை என்று அழைக்கப்படுகிறார். ஆனாலும் பாவப்பட்ட அம்மாவுக்கு அவரைப் படிக்க வைக்க வசதியின்றி பிரன்ஸ்விக் பிரபுவை உதவி கேட்க வேண்டியதாக இருந்தது.
Carl Friedrich Gauss (1777 - 1855)..... இன்று பிறந்த நாள்! (எழுதப் படிக்கத் தெரியாத அம்மா சொன்ன குறிப்பை வைத்து ‘கணக்குகளை’ப் போட்டு அவரே கண்டுபிடித்தாராம் தன் பிறந்த நாளை என்பாங்க!)
மூன்று வயதில் அப்பா போட்ட தப்புக் கணக்கு ஒன்றைத் திருத்தியது அவர் காட்டிய பல ஆச்சரியங்களில் ஒன்று. ப்ரைம் நம்பர்கள் தோன்றும் முறையை கண்டுபிடித்தது 15 வயதில் என்றால் 19 வயதில் பதினேழு கட்ட ரெகுலர் polygon-ஐ வெறும் காம்பஸ், ஸ்கேல் வைத்துப் போட்டுக் காட்டினார்.
Fundammental Theory of Algebra வை நிருபித்த போது வயது 22. அடுத்த 2 வருடத்தில் கணித உலகை பல அடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் சென்ற ’Disquistiones Arithmmeticae’ புத்தகத்தை எழுதினார்.
Least square method-ஐ வரையறுத்ததோடு அதை வைத்து வரைந்து, விரைந்து கண்டுபிடித்தார் விண்வெளியில் சஞ்சரிக்கும் கிரகங்களின் சுற்றுப்பாதையை அளவிடுவதை. அறிவியலின் ராணி கணிதம் என்றவர் அந்தக் கணிதத்தின் ராணி என்ற நம்பர் தியரியில் புகுந்து விளையாடினார்.
மின்னல் மாதிரி ஒரே ஒரு முறை கண்ணில் பட்டுச் சென்ற Ceres உபகிரகம் அப்புறம் எப்போ அப்பியர் ஆகும்னு சொன்னாரோ அப்போ தப்பாமல் ஆனது அது! சுமார் 200 வருடத்திற்கு முன் Modular Arithmetic இல் அவர் எழுதியது இன்று கம்ப்யூட்டர் சயின்ஸில் உதவுகிறது..
அறிவியலின் அந்தப்புரங்களில் ஒன்றிலிருந்து ஒன்றாக சுற்றித் திரிந்தவர் மின்காந்தத் தோட்டத்தில் சாதித்ததை நாம் மறந்து விடவில்லை. மேக்னெட்டிக் இண்டக் ஷனை அளப்பதற்கான யூனிட்டுக்கு Gauss என்று இவர் பெயர் தான் இட்டிருக்கிறோம் இல்லையா?
தன் வழிமுறைகளை விலாவாரியாக எழுதி வைத்துவிட்டு போகாதது, தன் பசங்களை அறிவியல் பக்கம் வரவேண்டாம் என்று அறிவுறுத்தியதையெல்லாம் சொல்வார்கள், அதையெல்லாம் ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டாமே? மேதைகளின் பாதைகளில் வாதைகள் ஆயிரம் இருக்கலாம்…
Quotes?
‘அறிவது அல்ல, கற்றுக்கொள்வதே; அடைவது அல்ல, முயற்சிப்பதே; அங்கே இருப்பது அல்ல, அங்கே செல்வதே ஆகப் பெரும் சந்தோஷம் தருவது!’
‘ஒரு விஷயத்தைத் தெளிந்தறிந்து சோர்ந்தவுடன் அதிலிருந்து விலகுகிறேன், மறுபடியும் அறியாமையின் இருளுக்குள் செல்ல.’
‘ஒருபோதும் திருப்தி அடையாததே மனிதனின் இயல்பு. ஒன்றைக் கட்டி முடித்தான் என்றால் அதில் அமைதியாக உறைவதில்லை, அடுத்ததைக் கட்டத் தொடங்குகிறான்.’
‘மிகக்குறைந்த வார்த்தைகளில் எத்தனை அதிகம் சொல்ல முடியுமோ அத்தனை சொல்லும் வரை நான் திருப்தி அடைவதில்லை. சுருக்கமாக எழுதுவது, நீளமாக எழுதுவதைவிட அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது.’
விடை: அவன் செய்ததெல்லாம் 50 -ஐ 101 ஆல் பெருக்கியதுதான். அத்தனை எண்களையும் 1+100, 2+99, 3+98 இப்படி அடுக்கிக் கொண்டே வந்தால் மொத்தம் ஐம்பது 101 கள் தானே வரும்? அப்புறம் என்ன, ஐந்தே விநாடியில் பெருக்கி சொல்ல வேண்டியதுதானே, 5050 என்று?