Thursday, July 2, 2026

கோப்பு நிறைய...


காஞ்சனா கேட்கிறார் குட்டிப் பெண் மஞ்சுளாவிடம். "Tell me why a man is great?"
"A man is great because he alone can laugh at others and at himself." என்று பதில் வருகிறது.
'சாந்தி நிலையம்' படத்தில் வரும் கலகலப்பான இந்த டயலாக் நினைவிருக்கிறதா?
52 வருடங்களுக்கு முன் எழுதியவர்...
சித்ராலயா கோபு! சிரிப்பு ஆள் ஐயா கோபு என்று சொல்லி விழுந்து விழுந்து சிரித்தோம். மகிழ்ந்தோம்.
ஜோக் எல்லாம் சும்மா க்ளாஸா இருக்கும். தமிழ்த் திரைக்கு ஶ்ரீதரும் இவருமாக அளித்த நகைச்சுவை வண்ணம் கொஞ்சமா?
கட்ட பொம்மன் வசனத்தை எப்படி உணர்ச்சி பொங்கக் கேட்டார்களோ அதேபோல ‘கல்யாண பரிசு’ வசனங்களை சிரிப்பு பொங்க மீண்டும் மீண்டும்!
‘காதலிக்க நேரமில்லை’ பற்றி சொல்லவே வேண்டாம். எழுதுவதற்கு இடமில்லை, அதில் வரும் நல்ல நகைச்சுவை அத்தனையையும் எடுத்து!
காமெடி படத்தில் டயலாக் சற்று சீரியஸான விஷயம். கதையைக் கொண்டு செல்வதாவும் இருக்கணும். எழும் கேள்விகளை இயல்பாக விளக்குவதாகவும்! சங்கீதம் மாதிரி டயலாகிலேயும் ஒரு ப்ராக்ரஷன் உண்டு. ஒன்றிலிருந்து ஒன்று இயற்கையா வரணும். அதே சமயம் கதைக்குத் தேவையில்லாமல் இருக்கக்கூடாது. இந்த இலக்கணத்துக்கு எடுத்துக் காட்டாக 100% சரியாக அமைந்த படம் ‘காதலிக்க நேரமில்லை’.
ஊட்டி வரை உறவு, கலாட்டா கல்யாணம், சுமதி என் சுந்தரி என்று நிறைய படங்களில் தன் வசனத்தால் நம் விசனம் துடைத்தவர். காசேதான் கடவுளடா, அத்தையா மாமியா, ராசி நல்ல ராசி என டைரக் ஷனிலும் டிஸ்டிங்ஷன் காட்டினார்.
எல்லாவற்றிலும் என்னைக் கவர்ந்த அந்த ஒன்று… காமெடி, காதல், தத்துவம் என அவரது முழு வீச்சையும் மிகவும் ரசித்தது ‘சாந்தி நிலைய'த்தில்!
சாலையில் சந்திக்கும் கோப ஜெமினியிடம் காஞ்சனா சொல்லும் கோபு டயலாக்: “அந்தஸ்தில இருக்குற உங்கள மாதிரி பணக்காரங்க வாழ்க்கையில முன்னேற மேலே போகும்போது சந்திக்கறங்ககிட்ட கொஞ்சம் அன்பா நடந்துக்கணும். காரணம், கீழே வரும்போது மறுபடியும் அவங்களை சந்திக்க வேண்டியதா இருக்கும்!”
“அனுசூயா டீச்சர்னு வந்தாங்களே, அவங்களும் வேலையைவிட்டு போய்ட்டாங்களா?”ன்னு ஜெமினி கேட்க, நாகேஷ்: வந்தாளே அனுசூயா! புருஷனை விவாகரத்து பண்ணிட்டு, பெத்த இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு இங்க வந்தா. நம்ம வீட்டு குழந்தைகளைப் பார்த்தவுடனே அந்த குழந்தைகளே பெட்டர்னு புருஷனோட போயிட்டா!”
தனியே நிற்கும் காஞ்சனாவிடம், ‘என்ன மாலதி, இருட்டைக் கண்டாலே பயப்படுவியே’ன்னு கேட்கும் ஜெமினியிடம், “வாழணும்கிற நம்பிக்கைகளும் ஆசைகளும் மனசில நிறைஞ்சி இருந்தப்ப நான் பயத்தை உணர்ந்தேன். ஆனால் இப்ப நான் இருட்டைக் கண்டு பயப்படறதில அர்த்தமே இல்லை.”
“என்ன திடீர்னு இந்த விரக்தி மனப்பான்மை?”
“என்னைப்போல அனாதைகள்கிட்ட நிரந்தரமாக உறவாடுவது விரக்தி ஒண்ணுதானே?”
“காலையில உன்னை கடுமையாக பேசிட்டேன், என்ன மன்னிச்சிடு மாலதி.”
“எப்பவுமே மன்னிப்பு கேட்கிறது அடுத்து செய்ய இருக்கிற தப்புக்கு அஸ்திவாரம்னுதான் நான் நினைக்கிறேன்!”

குழந்தைகளைப் பற்றி காஞ்சனா ஜெமினியிடம் சொல்லும் அந்த ஆழமான அட்வைஸ்: “அவங்கள நீங்க கடுமையான நடத்தறதினால நீங்க வீட்டில் இல்லாத போது சுதந்திர உணர்ச்சியில விஷமங்களைக் கொஞ்சம் அதிகமாக செய்யறாங்கன்னு நினைக்கிறேன். குழந்தைங்க எப்போதுமே மலரைப் போல மிருதுவானவங்க. மலர்ல இருக்கிற முள்ளை நீக்க அதைத் தீயில போட்டால் கருகிவிடும் இல்லையா? வேறுவிதமா தானே எடுக்க முயற்சி செய்யறோம்? அதைப்போலத்தான் நாம குழந்தைகளை அவங்க போற போக்குல போய்த்தான் நம்ம வழிக்கு கொண்டு வரணும்!”
“மலருங்கறீங்க, முள்ளுங்கறீங்க, வாத்தியார் வேலைக்கு வர முன்னாலே எங்கேயாவது தோட்டவேலை பார்த்தீர்களா?” என்று நாகேஷ் கேட்பது அதையும் மென் காமெடிக்கு நகர்த்தும்!
சிகரமாக நாகேஷின் அந்த காலட்சேப காட்சி! “குறும்புக்கார கோவிந்தன், நம்ப கிருஷ்ணன் ஒரு நாளைக்கு உண்ணாவிரதம் இருந்தார்...(நாகேஷே பாடுகிறார்) உப்புமா ஒரு குண்டா! உருளைக்கிழங்கு போண்டா! காப்பி ஒரு அண்டா! குடிக்க டம்பளர் கொண்டா!... ஆப்பம் அறுபது! அதிரசம் அறுபத்தெட்டு!... பத்தாதா? இத்தனைக்கும் மேலே ஒரு தார் வாழைப்பழம் அதையும் சாப்பிட்டுட்டு உண்ணாவிரதம் இருந்தார்!” என்று தொடங்கி கோபியர் கதைக்கு வந்து “கோபியரே, கோபியரே, கேளுங்கோடி.. கோபாலகிருஷ்ணனை பாருங்கோடி! குளத்திலே குளிக்கையில் கண்ணன் புடவையை எடுத்தே ஓடிச் சென்றான்!... தம்மாத்துண்டு பயலுக்கு தில்லைப் பாத்தியா...?”ன்னு அமர்க்களப்படுத்துவாரே… அது!
கோபுவின் கையில் ஒரு கோப்பு. முழுக்க முழுக்க அதில் சிரிப்பு!

Wednesday, July 1, 2026

அழகிய பாணி ...


ஏழு வயது இருக்கும் அந்த சிறுமிக்கு. கார் ஒன்று மோதியதில் இடுப்பில் எலும்பு முறிவு. நடப்பதே கஷ்டம் என்றார் டாக்டர். பொய்யாக்கி ஒரே வருடத்தில் நடந்து காட்டினார். ஆனாலும் உயரம் குறைந்துபோன ஒரு காலை, ஷூவில் உயரம் வைத்து சரி பண்ணி நடக்க வேண்டியதாயிற்றாம். தோழிகளின் கிண்டல் எத்தனை வேதனையாக இருந்திருக்கும் அந்த பெண்ணுக்கு? ஆனால் பின்னாளில் அவரொரு மூவி ஸ்டார் ஆனபோது அதுவே அவரது அழகிய பாணி ஆகிவிட்டது.
அவர் Susan Hayward...
உலகம் முழுவதும் சொல்லப்படவேண்டிய உண்மைக் கதை இது என்ற ஆல்பர்ட் காம்யூவின் அழுத்தமான முன்னுரை வரிகளுடன் ஆரம்பிக்கிறார்கள் அந்தப் பிரபல படத்தை. ‘I Want to Live.’ வேதனையான குழந்தைப்பருவம், வீணான மணவாழ்க்கை, வேண்டாத சகவாசம் , எல்லாமாகச் சேர்ந்து அவளை ஒரு கொலைக் குற்றத்தில் சிக்க வைக்கிறது. மரண தண்டனை. நாற்காலியில் அமரும் கடைசி நிமிடம் வரை அவளது போராட்டம்.. அவள் படும் பாடு.. அவளுடன் சேர்ந்து நாம் படும் பாடு.. அத்தனை அற்புதமாக நடித்திருந்தார் சுஸன். அதுவரை நாமினேட் ஆவதும் நழுவிப் போவதுமாக நாலு முறை இருந்த ஆஸ்கார், நச்சென்று வந்து விழுந்துவிட்டது கையில். தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம் பார்க்க வேண்டிய படங்கள் லிஸ்ட் லிஸ்டில்.
'Gone with the Wind' படத்திற்காக நாடெங்கும் நடந்த நாயகி தேர்வில் தோற்றவர். ஆனால் தேர்வான Vivien Liegh பெற்ற நட்சத்திர அந்தஸ்தை அடுத்த பத்து வருடங்களிலேயே இவரும் அடைந்துவிட்டார். நடிப்பும் க்ளாமரும் நல்லதொரு விகிதத்தில் கலந்து அளித்த நடிகை.
The Conqueror படத்தில் நடிக்கும் போதுதான் கேன்சர் வந்து இவரைக் கொண்டது. அந்தப் படத்தில் நடித்த JohnWayne -ம் டைரக்டரும் கேன்சரிலேயே முடிவு கொண்டனர்.
Quotes?
‘வாழ்க்கை ஒரு போராட்டம் என்பதை மிகச் சின்ன வயதிலேயே அறிந்துகொண்டேன் நான். குடும்பம், சுற்றுப்புறம் எல்லாமே வறுமை. வறுமை. வாழ்க்கையின் எல்லா அவலங்களில் இருந்தும் நான் விடுபட, சினிமா தியேட்டர் தான் ஒரே வழியாக இருந்தது. நிறையப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று அப்போது தான் தீர்மானித்தேன். ஒரு உறுதியான பெண்மணியாக நான் உருவெடுத்தது அங்கேதான்.’
‘ஓய்வாக உட்கார்ந்ததே இல்லை நான். அது எப்படி என்றுகூட எனக்குத் தெரியாது. தெரிந்துகொள்ள விரும்பவும் இல்லை. வாழ்க்கை மிகச் சின்னது, ஓய்வெடுக்க முடியாத அளவுக்கு!

ஆடாத மனமும் ஆடும்...


‘பக்கயிந்தி அம்மாயி’.. 1953 இல் வந்த தெலுங்குப் படம். எதிர் மாடியில் தரிசனம் தரும் அஞ்சலி தேவியோ கானப் பிரியை. காதலிக்கும் ரேலங்கிக்கோ பாட வராது. நண்பர்கள் ஒரு பாடகரை அழைத்து வருகிறார்கள். கட்டிலில் அமர்ந்து ரேலங்கி வாயசைக்க, கட்டிலுக்குக் கீழே அமர்ந்து ஆக்சுவலாகப் பாடுவார் அந்த பாடகர். பாடகராக நடித்ததும் பாடியதும்..
நம் ஏ.எம்.ராஜா… இன்று பிறந்த நாள்!
தென்னிந்திய சினிமாவில் தென்றலாக நுழைந்தவர்… தன் இசையால் தென்றலை வீசவும் செய்தவர். இவரது பாடகர் பகுதியை பற்றி அதிகம் சொல்லவா இசையமைப்பாளர் பகுதியை பற்றி அதிகம் சொல்லவா? மயக்கத்தைத் தவிர்க்க முடியாது, இரண்டிலும் ஏகத்துக்கு சாதித்திருப்பதால்.
'கல்யாண பரிசு' படத்தின் வெற்றிக்கு ஒரு தூணாக நின்றது, பட்டுக்கோட்டையாரின் எட்டுப் பாடல்களுக்கு ஏ.எம்.ராஜா தந்த இசைப் பரிசு.
“காலையும் நீயே.. மாலையும் நீயே..” என்று கேட்டுக்கொண்டே இருக்கலாம் இன்றைக்கும் அதன் பாடல்களை. ஆம் இசைக்கென்றே அவதரித்த படம்.. ‘தேன்நிலவு.’
கர்நாடக இசை, மேற்கத்திய இசை இரண்டும் இரண்டு கைகளில்! ஆடிப்பெருக்கின் இசை சொல்லும். “தனிமையிலே இனிமை காண முடியுமா..” “காவேரி ஓரம்…”
இவருடைய progression (பல்லவிக்கும் சரணத்துக்கும் இடையே வரும் இசை) கனகச்சிதமாக, மிகச் சரியான வாத்தியங்கள் கொண்டு ஏராளம் வயலின்களுடன் ஒரு முழுமையான orchestration ஆக இருக்கும். “மலரே மலரே தெரியாதோ…” (தேன் நிலவு) பாடலிலும் சரி, “புரியாது.. வாழ்க்கையின் ரகசியம் புரியாது..” (ஆடிப்பெருக்கு) பாடலிலும் சரி அதைத் தெளிவாகப் பார்க்கலாம். ஒரு சின்ன மாற்றம் கூட செய்வதை விரும்ப மாட்டார் என்பார்கள் என்றால் அந்த அளவு ஒரு பர்ஃபெக் ஷனுடன் அது இருக்கும்.
பி.பி. ஸ்ரீனிவாஸின் மிக இனிமையான பாடல்களில் ஒன்று இவர் இசையில் அமைந்த “பண்ணோடு பிறந்தது தாளம்…” (விடிவெள்ளி) சீர்காழி கோவிந்தராஜனின் முத்துக்களில் ஒன்று “அன்னையின் அருளே வா..” அதுவும் இவர் இசையமைத்ததே. (‘ஆடிப்பெருக்கு').
இசையமைத்த ‘அன்புக்கோர் அண்ணி’ யில்தான் அந்த ஒரு நாள் விடாமல் ஒலித்த சூப்பர் ஹிட். “ஒரு நாள்.. இது ஒரு நாள்.. உனக்கும் எனக்கும் இது திருநாள்..”
“ஆடாத மனமும் ஆடுதே..” என்றிவர் பாடினால் ஆடாத மனமும் ஆடும்! “பாட்டு பாட வா..” என்று பாடினால் பாடாத வாயும் பாடும். “வாராயோ வெண்ணிலாவே..” பாடலின் அந்தக் குழைவு! “அதிமதுரா.. அனுராகா..” பாடலோ அதிமதுரம்! “பிருந்தாவனமும் நந்தகுமாரனும்..” விருந்தானது காதலர்களுக்கு அப்போது. “எல்லாம் உனக்கே தருவேனே.. இனிமேல் உரிமை நீதானே…” பெண்களின் மனதை அள்ளிக் கொண்டது.
வளமான குரல் இருந்ததால் வாய்ப்புக்காக ரொம்ப சிரமப்படத் தேவை இருக்கவில்லை. எடுத்த எடுப்பிலேயே ஜெமினி படம், கே.வி. மகாதேவனின் ‘குமாரி' என்று பாட ஆரம்பித்து ஹெலிகாப்டராக உயர்ந்தார். இங்கிருந்து இந்திக்குப் போன முதல் பாடகரும் இவர்தான்.
பிரிக்க முடியாதது? என்று கேட்டால் துள்ளிக் குதித்துக் கொண்டு வரும் பதில்: ஜெமினியும் இவர் குரலும். பாடகரே நடிகராக இருந்த காலம் மாறி நடிக்க மட்டும் நடிகர்கள் வந்தபோது ஜெமினி கணேசன் குரலின் இனிய பாதியாக இவர் இருந்ததை மறக்க முடியுமா? வேறு யாருக்காவது ராஜா பாடினால், 'அட, ஜெமினி இந்த நடிகருக்கு பின்னணி பாடியிருக்கிறாரே?' என்று ஒரு கணம் நாம் தடுமாறும் அளவுக்கு!
“கண்களின் வார்த்தைகள் புரியாதோ..” (களத்தூர் கண்ணம்மா) “தங்க நிலவில் கெண்டை இரண்டும்..” (திருமணம்) “வாடிக்கை மறந்ததும் ஏனோ..” என்று ராஜா-ஜெமினி இனிமை லிஸ்ட் பெருமை மிக்கது.
எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினி, என்டிஆர், நாகேஸ்வரராவ், ராஜ்குமார், சத்யன், பிரேம் நசீர் என்று நாலு மொழி நாயகர்களின் நாவசைப்புக்கும் பாடிக்கொண்டிருந்தவர். சிவாஜிக்கு “என்ன என்ன இன்பமே..” (அன்பு) “இடை கையிரண்டில் ஆடும்..” (விடிவெள்ளி) “திரைபோட்டு நாமே..” (ராஜா ராணி) “யாழும் குழலும் உன் மொழி தானோ..” (கோடீஸ்வரன்) என்றால் எம்ஜிஆருக்கு “கண்மூடும் வேளையிலே..” (மகாதேவி) “மாசிலா உண்மை காதலே..” “பேசும் யாழே பெண்மானே…” (நாம்) “மயக்கும் மாலைப் பொழுதே நீ போ..” (குலேபகாவலி)
அதுபோன்ற ஒரு மதுரமான குரலை ஆண்டவன் தேர்ந்தெடுத்து அவருக்குக் கொடுத்தது, வேறென்ன, நம்மைச் சில வருடங்கள் மகிழ்விக்கத்தான்! எத்தகைய சால மென் குரல் என்பதை எந்த பின் வாத்தியமும் இல்லாமல் வெறும் குரலில் ஆரம்பிக்கும் இவரது சில பாடல்களில் உணர்கின்றோம். “கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்..” (மீண்ட சொர்கம்) என்று ஆரம்பிக்கும் போது! “காலையும் நீயே மாலையும் நீயே..” (தேன் நிலவு) “சிங்காரப் பைங்கிளியே பேசு..” (மனோகரா)
‘இல்லற ஜோதி’யில் “களங்கமில்லா காதலிலே..” பாடலில் “நினைவிலே பேதமில்லை..” என்று இவர் என்ட்ரி ஆகும்போது ஏற்படும் சிலிர்ப்பு இருக்கிறதே, அதை உலகில் வெகு சில குரல்கள் தான் கொடுக்க முடியும்! அதேபோல் “இதய வானின் உதய நிலவே..” பாடலில் “இருளகற்றும் ஒளியென்றென்னை எண்ணும் நீயாரோ..” என்றும்! "தேன் உண்ணும் வண்டு.." பாடலில் "வீணை இன்ப நாதம்.." “மயக்கும் மாலைப் பொழுதே நீ போ..” வில் அந்த மயக்கும் என்ட்ரி “பன்னீர் தெளிக்க பனி பெய்யுமே..”
ஜாலி பாடல்களிலும் கலீர் கலீரென ஒலிக்கும் குரல்.. “கொடுத்துப் பார் பார் உந்தன் அன்பை..” “ஓஹோ எந்தன் பேபி..”
எம். எல். வசந்தகுமாரியிலிருந்து (“இன்பக் குயில் குரல் இனிமை..” - மனிதனும் மிருகமும்) ஜமுனாராணி வரை (“சந்தோஷமே தான் சங்கீதமாக..” - சந்தானம்) சேர்ந்து பாடியவர். ஜி. ராமநாதன் முதல் சங்கர் கணேஷ் இசையில் வரை…
ராஜா - ஜிக்கி தாம் ஐம்பதுகளில் பிரபல பின்னணி ஜோடி. “அழகு நிலாவின் பவனியிலே..” இந்தப் பாடலைத் தொடர்ந்து வாழ்விலும் இணைந்தது அந்த ஜோடி.
ஒரிரு வரி பாடினாலும் உள்ளம் கவரும் குரல். “வெண்ணிலா நிலா.. என் கண்ணல்லவா கலா..” என்று இரு வரிதான் பாடுவார் ‘ஆரவல்லி'யில் “சின்னப் பெண்ணான போதிலே..’’ போதாதா? சில பாடல்களை இவர் பாடினால் கேட்போருக்கு ஏற்படும் உணர்வு மிகப் பிரத்தியேகமானது. அதற்கு உதாரணம் “என் நெஞ்சின் பிரேம கீதம்..” (பணம் படுத்தும் பாடு)
.எத்தனைக்கெத்தனை காதல் பாட்டுக்கு மன்னனோ அத்தனைக்கத்தனை சோகப்பாட்டுக்கும் அரசன். “மின்னல் போல் ஆகும் இந்த..” “அன்பே.. நீ அங்கே..” “என் காதல் இன்பம் இதுதானா..” “அன்பே வா..அழைக்கின்றதெந்தன் மூச்சே..” “உன்னைக் கண்டு நான் வாட…” எல்லாவற்றுக்கும் மேலே மனம் பிழியும் சோகம் வழியும் அந்தப் பாடல்.. “வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே..” (மல்லிகா)
Re entry சில ஹிட்கள் பாடத் தந்தது. 'ரங்கராட்டினம்' படத்தில் வி. குமார் இசையில் “முத்தாரமே உன் ஊடல் என்னவோ..” சங்கர் கணேஷ் இசையில் 'அன்பு ரோஜா'வில் “ஏனடா கண்ணா..”
“மலரே ஓ மலரே..” வெகு காலத்துக்குப்பின் இவர் இசையில் வந்த ‘வீட்டு மாப்பிள்ளை’யில் அந்த அசத்தும் பாடல்! 'நீ என் மலரல்ல..' எனும்போது என்னவொரு எழுச்சியும் வேகமும் அந்தக் குரலில்!
‘அம்மா என்னு ஸ்திரி’ மலையாள படத்துக்கு இசையமைத்தார். ‘பார்யா’ ‘அடிமைகள்’.. என்று ஜி. தேவராஜன் இசையில் ஏராளம் பாடல்கள் பாடினார் மலையாளத்தில்! “தாழம்பூ மணம் உள்ள தணுப்புள்ள ராத்திரியில்..” அங்கே சூபர்ஹிட்.
சில பாடல்களை இவர் தான் பாட முடியும் அத்தனை மென்மையாக… “பூவில் வண்டு போதை கொண்டு..” (அன்பு எங்கே) “போதும் உந்தன் ஜாலமே..” (கடன் வாங்கி கல்யாணம்) “புதுமை நிலா அங்கே..” (கோமதியின் காதலன்)
ஒரு பாட்டின் உருக்கத்தை பாடகர் எத்தனை அப்லிஃப்ட் செய்ய முடியும்? சி. என். பாண்டுரங்கன் இசையில் ‘எதிர்பாராதது' படத்தில் இவர் பாடிய “சிற்பி செதுக்காத பொற்சிலையே..” யைக் கேளுங்கள்.
மிகப் பெரும் மியூசிக் டைரக்டராகத் திகழ்ந்திருக்க வேண்டியவர். தன்னுடைய straightforwardness காரணமாக வாய்ப்புகளைத் துறந்ததாக சொல்லுவார்கள். இழந்தது நாம்.