Wednesday, May 6, 2026

ஏராளம் பஞ்ச் ...


‘Jab We Met’ படத்தின் கடைசிக் காட்சி. படுத்திருக்கும் தாத்தா, பேத்தி கரீனா கபூரின் ரெட்டைக் குழந்தைகளிடம் சொல்வார், “உங்கம்மாவும் அப்பாவும் எங்கிட்ட திரும்பத் திரும்ப பொய் சொன்னாங்க, ஆனா அவங்க காதலைக் கண்ணிலிருந்தே கண்டு பிடிச்சிட்டேன் நான்!” அந்தத் தாத்தா யாரென்று தெரிகிறதா?
இந்தியாவின் சூபர்மேன்... மல்யுத்தத்தில் ஒருபோதும் தோற்காத ரெக்கார்டை கொண்டவர்… சினிமாவின் நிஜ ஹீரோ.
டயலாகில் அல்லாது நிஜமாகவே ஏராளம் பஞ்ச் விட்ட தாராசிங்!
இன்று பிறந்த நாள்.
203 கிலோ ஆன, ஆனானப்பட்ட கிங்காங்கை அசால்ட்டாக தலைக்குமேல் தூக்கிச் சுழற்றி வீசியவர். அந்த ஃபைட்டில், கிங் சைடில் கிங் சைஸுக்கு பெட் கட்டினவங்க அதிகம். ஆனால் கடைசியில் அவர் உதவிக்கு ரெஃப்ரீயை நோக்கிக் கத்த வேண்டியதாயிற்று.
அந்த நாட்களில் தாராசிங் Vs கிங் காங் என்றாலே போதும், எள் போட்டால் லெவலுக்கு கூட்டம் களைகட்டிவிடும். (நம்ம ஊரில் அந்த மல் யுத்தங்களை நடத்தியதில் ஒருவர் சின்ன அண்ணாமலை.)
பயில்வானி என்ற பல நூறாண்டு பழமை வாய்ந்த கலையைப் பயின்று வந்தவரை வெல்வாரில்லை. வந்தாரா, வென்றாரா, சென்றாரா என்றிருப்பார். (‘தாரா’ என்ற வார்த்தைக்கு ராஜா என்றல்லவா அர்த்தம்?)
இந்த 53 இஞ்ச் நெஞ்சுக்கு ஆறடி ரெண்டு அங்குல உயர 'வின்னர் ஃபார்எவர்' வந்தது விவசாய குடும்பத்தில் இருந்து. இந்தியா சாம்பியன்.. காமன்வெல்த் சாம்பியன்.. கடைசியில் உலகச் சாம்பியன், 1968 இல் அமெரிக்க வீரரை (Lou Thesz) வென்று!
தயாரிப்பாளர்கள் அழைக்க மேடையிலிருந்து திரைக்கு... அத்தனை பாட்டுக்களும் ஹிட்டான (Laxmikant Pyarelal) ’புயல் வந்தது' (‘Aaya Toofan’) போன்ற படங்களின் மூலம் புயலாக வந்தார். மும்தாஜுடன் ஹீரோவாக ராஜேஷ் கன்னா அதிகபட்சம் 10 படங்களில் நடித்திருப்பார், ஆனால் 16 படங்களில் அவருடன் ஹீரோவாக நடித்தவர் இவர். செகண்ட் லெவல் படங்களில் ஃபர்ஸ்ட் லெவல் சம்பளம் வாங்கினார்கள் அவரும் மும்தாஜும்.
ஹெர்குலிஸ் ஃபிகர் எப்படி இருக்கும் என்று கேட்டால் தாராளமாக சொல்லிவிடலாம் தாராசிங் மாதிரி இருக்கும் என்று . Incidentally அவர் Hercules ஆகவும் நடித்தார். Anand படத்தில் தகராறு பண்ணும் பசங்களிடமிருந்து தன்னைக் காப்பாற்ற ராஜேஷ் கன்னா அழைத்து வருவாரே அது தாராசிங்கைத்தான்!
பிரபல 'ராமாயணா' டிவி தொடரில் இவர் ஹனுமானாக வந்தது அனுமானிக்க முடியாத புகழ் தந்தது.
தம்பி ரந்தாவாவும் ஒரு மல்யுத்தர் & நடிகர். ‘ஜானி மேரா நாம்’ அல்லது ‘ராஜா’வில் பார்த்திருப்பீர்களே இவரை?
கால் நூற்றாண்டுக்கு மல்யுத்த மேடைகளின் ராஜாவாக வலம் வந்தவர் 1983-இல் அவார்ட் வாங்கிய கையோடு மேடைக்கு குட்பை சொன்னார்.

மூன்று முறை படமாக...


முன்பெல்லாம் ஷூட்டிங் நடக்கும்போது அது அவுட்டோராக இருந்தாலும் சரி, இன்டோராக இருந்தாலும் சரி துளி சத்தம் கேட்கக் கூடாது, டயலாக் தவிர! மைக் கவ்வி விடும். காக்காய் கத்தினாலே ரீடேக் தான்.
ஆனா இப்பல்லாம் ஷூட்டிங் நடக்கிறப்ப எந்த சத்தம் எழுந்தாலும் கவலை இல்லை. க்யூட் சப்தம்னாலும் ம்யூட் தான். பேச்செல்லாம் டப்பிங்கில் பார்த்துக் கொள்ளலாம். நடிகர்களுக்கு வசதி. நாடகம் மாதிரி ப்ராம்ப்ட் கூட பண்ணலாம்.
ஆனால் முன்புக்கும் முன்பொரு காலத்தில், அதாவது மௌனப் படங்கள் வந்த காலத்தில் நிலைமை வேறு. எந்த சத்தம் போட்டாலும் ஃபிலிமில் விழாது. ஏன்னா அந்த வசதி இல்லை. அதனால் இருந்த கஷ்டம் அதிகம். ஃபிலிமில் டயலாக் ஒலிப்பதிவு ஆகாது. பத்துப் பதினைந்து ஷாட்டுகளுக்கு ஒரு முறை வசனத்தில் எஸென்ஷியல் ஒரு வரியை கார்டு போடுவார்கள். மிச்சம் எல்லா வசனத்தையும் நடிப்பில் காட்டவேண்டும். அழுவதையும் சிரிப்பதையும் தவிர அத்தனை எமோஷனும் சவால்தான்.
அந்தவிதமான மௌனப் போர்ட்ரேயலில் ஜெயித்து சக்கைப்போடு போட்டவர்களில் மகத்தானவர் சார்லி சாப்ளின். (எந்த அளவுக்கு என்றால் மௌனித்த படங்கள் பேச ஆரம்பித்தபோது அதில் நடிக்க விருப்பமே வரவில்லையாம்.) அடுத்தபடியாக அந்த சைலன்ட் எராவில் சக்கை போடு போட்ட ஹீரோ..
Rudolph Valentino…(1895 - 1926) இன்று பிறந்த நாள்!
இத்தாலியில் இருந்து ஹாலிவுட்டுக்கு இடம் பெயர்ந்தவர். ஆரம்பத்தில் காசின்றி ரோடுகளில் நடமாடியவர் அதன்பின் ஓட்டல்களில் நடனமாடினார். அப்புறம் சின்ன சின்ன வேடங்கள்.
‘The Four Horsemen of the Apocalypse’ படத்துக்கு திரைக்கதை எழுதிய பெண் (June Mathis) இவரை சிலாகித்து சிபாரிசித்து ஹீரோ வேடம் வாங்கிக்கொடுத்து இவர் வாழ்க்கைக் கதையை எழுதினார்.
அதிவிரைவில் மாஸ் ஹீரோ ஆகிவிட்டார். Tango டான்ஸை இவர்தான் அறிமுகப்படுத்தினார் ஹாலிவுட்டுக்கு என்பார்கள். பத்து லட்சம் டாலர் மொத்த வசூல் வந்த முதல் படங்களில் இவருடையதும்….
பரபரப்பான படோபடோப வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு புகழின் உச்சத்தில் தன் முப்பதுகளின் துவக்கத்தில் மறைந்தார். அதிர்ச்சியுடன் அடக்கத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலும் பெண் ரசிகைகள்.
இவரது வாழ்க்கை மூன்று முறை படமாக, அதில் ஒன்றில் நடித்தவர் பிரபல Franco Nero.

Monday, May 4, 2026

தன்னை விட்டு வெளியே...


அமெரிக்க கல்வியின் தந்தை என்று அவர் அழைக்கப்படுகிறார். ‘கல்வி என்பது அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டிய ஒன்று, தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு,’ என்று ஆயிரத்தி எண்ணூறுகளில் பேசியவர். "வறுமையை ஒழிக்கவும் குற்றங்களைக் குறைக்கவும் அதுவே உதவும்."
Horace Mann… (1796 - 1859) இன்று பிறந்த நாள்!
இளமையில் வறுமையில் உழன்றவர் பயின்றது பெரும்பாலும் நூலகங்களில்..
ஸ்கூல் சிஸ்டம் ஆரம்பித்து வைத்தவர்களில் முக்கியமானவர். ஒரு கிளாஸில் எல்லா மாணவர்களும் என்பதில் தொடங்கியது வயதுக்குத் தகுந்தபடி தனித்தனி கிளாஸ் என்று வளர்ந்தது.
இந்த ஹோம் வொர்க்! கண்டுபிடிச்சது யாருன்னு குமுறுவாங்க சில பசங்க. அது இவரு இல்லீங்க. ஆனா அதை ஒரு முக்கியமான விஷயமா கொண்டு வந்ததில் இவர் பங்கு இருக்கு...
ஊர்ஸெஸ்டர் என்ற ஊரில் அமெரிக்காவின் முதல் மனநல மருத்துவமனை ஏற்பட்டதன் பின்னால் இவரது உழைப்பு மிக.
மாணவர்களுக்கு அவர் சொன்னது: ‘மனிதகுலத்துக்கு ஏதேனும் வெற்றி தராமல் மரணம் அடைய வெட்கப்படுங்கள்!’
இன்னும் சொன்னவை: ‘புத்தகங்கள் இல்லாத வீடு ஜன்னல்கள் இல்லாத அறையை போன்றது.’
'காணவில்லை! நேற்று சூரியோதயத்துக்கும் அஸ்தமனத்துக்கும் இடையில் இரண்டு பொன் மணி நேரம். அறுபது வைர இழைகளால் ஆனது. கண்டுபிடிப்பவர்களுக்கு எந்த பரிசும் கிடையாது. அவை காணாமல் போனது போனதுதான்.'
‘மற்றவர்களுக்கு நாம் செய்யும் ஆகப் பெரிய சேவை, அவர்கள் தங்களுக்குத் தாங்களே உதவிக் கொள்ளச் செய்வதுதான்.’
‘வாழும்போது செய்யும் தர்மம் சாகும்போதும் செய்யும் தர்மத்தை விட வித்தியாசமானது. இது தாராள மனதுடன் பரோபகார சிந்தையில் எழுவது. மற்றது பயத்தில் அல்லது கௌரவத்தில் எழுவது.’
‘மாணவனிடம் கற்றுக் கொள்ளும் ஆர்வத்தை உருவாக்காமல் ஓர் ஆசிரியர் கற்றுக் கொடுக்க முயற்சிப்பது குளிர்ந்த இரும்பில் சுத்தியலால் அடிப்பது போல.’
‘பழக்கம் என்பது ஒரு கயிறு. தினம் ஒரு இழையாக பின்னுகிறோம், கடைசியில் அதை அறுக்க முடியாத அளவுக்கு.’
‘தன்னை விட்டு வெளியே செல்கிற இதயம் இன்னும் பெரிதாகி இன்பத்தால் நிரம்புகிறது. அக வாழ்க்கையின் மிகப்பெரும் ரகசியம் இதுதான். மற்றவர்களுக்கு ஏதேனும் செய்வதன் மூலம் நமக்கு நாம் பெரும் நல்லது செய்கிறோம்.'