Tuesday, April 21, 2026

கற்பனை உலகு...


எந்த ஒரு மீட்டிங்கிலும் சரி, கூட்டத்தை நோக்கி, உங்களில் பள்ளிநாட்களில் ‘Jane Eyre’ படிக்காதவர்கள் விரல் உயர்த்துங்கள் என்று சொன்னால் விரல் உயர்த்தியவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அத்தனை புகழ் பெற்ற அந்த (துணைப்பாடக்) கதையை எழுதியவர்
Charlotte Bronte... இன்று பிறந்த நாள்.
கதையில் ஜேன் படும் துன்பங்களுக்குக் கொஞ்சமும் குறைந்ததல்ல, அதனை உருவாக்கியவர் வாழ்க்கையில் பட்டது. சின்னவயதில் கொண்டு விடப்பட்ட பள்ளி விடுதியில் சார்லெட்டும் 4 சகோதரிகளும் சந்தித்த கஷ்டங்கள்! தங்களில் இருவரைப் பறிகொடுத்தே மீண்டார்கள்
சார்லட்டுக்கு 10 வயது இருக்கும்போது அப்பா சில படை வீரர் பொம்மைகளை வாங்கி வந்தார். சகோதரிகள் அந்த பொம்மைகளுக்கு பெயரும், குணமும், உலவிட ஓர் உலகமும் கொடுத்தார்கள். அந்தக் கற்பனை உலகுக்கு Angria என்று பெயரிடப்பட்டது. அவர்களை வைத்து கதையும் கவியும் புனைந்தார்கள்.
ஆம், வாழ்வின் சோகத்திலிருந்து இலக்கியம்தான் அவர்களை வெளியில் எடுத்து சென்றது. பெண்கள் பெயரில் எழுதினால் வரவேற்பில்லை (ஆம் அப்படி ஒரு காலம் இருந்தது!) என்பதால் ஆண் புனைபெயர்களில் அவர்கள் எழுதினார்கள். அவர்களே வெளியிட்ட முதல் கவிதைத் தொகுப்பு இரண்டு பிரதிகள்தாம் விற்றது என்றாலும் சோர்ந்து போகவில்லை.
சார்லட் அனுப்பி வைத்த கவிகளைப் பார்த்து அவர் திறமையை ஒப்புக்கொண்ட கவிஞர் Robert Southey, ஆனாலும் இதற்கெல்லாம் ஏது பெண்களாகிய உங்களுக்கு நேரம்? வேண்டாமே, என்று பதில் எழுதியதையும் பொறுத்துக் கொண்டார்.
எழுதிய முதல் நாவல் 9 முறை திரும்பி வந்தது. அடுத்ததுதான் Jane Eyre. உடனடி ஹிட்! by Currer Bell என்று வெளியிட்ட பப்ளிஷருக்கு அடுத்த வருடம் தான் தெரிந்தது அது பெண் என்று. மற்றொரு சகோதரியின் நாவலுக்கும் மகத்தான வரவேற்பு. ஆம், ‘Wuthering Heights’ எழுதிய Emily Bronte தான் அவர்.
தந்தையின் உடல்நிலை, தம்பியின் கடன் என்று பல தடைகள், அவர் தனக்கு ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள. தம்பியையும் இரு சகோதரிகளையும் ஒரே வருடத்தில் பறி கொடுத்தார். மூன்று முறை தனக்கு வந்த ப்ரப்போசல்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் போனவருக்கு இறுதியில் அந்த வாய்ப்பு கூடும்போது வயது 37 ஆகியிருந்தது. மாதங்களே நீடித்தது மண வாழ்க்கை. மறைந்தார் 38வது வயதிலேயே, தன் அம்மாவைப் போல.
இரண்டு Quotes ...
‘பகைமையை வளர்க்கவோ மற்றவர் தவறுகளை பட்டியலிடவோ
நேரமில்லாத அளவுக்கு வாழ்க்கை எனக்கு மிகச் சிறியதாகத் தோன்றுகிறது.’
‘மனித இதயத்தில் ரகசியப் புதையல்கள் உண்டு. காப்பாற்றும் ரகசியங்களில். மூடி வைத்த மௌனத்தில். நினைவுகள், நம்பிக்கைகள், கனவுகள், சந்தோஷங்கள்... சொல்லிவிட்டால் அவற்றின் வசீகரம் நொறுங்கி விடும்!’

அவன் குரல்... (30 Second Story)


“கடவுளே, வரம் வேண்டாம், உங்களுக்கு நனறி சொல்லணும்! நான் உங்களைப் பார்க்கணும்!”
வதங்கினான்.
வந்தார். "வரம் கேக்காம நன்றின்னு வந்தது நீ மட்டும்தான். அதான் காட்சி தந்தேன். சொல்லு. எதுக்கு நன்றி?"
"எத்தனையோ பிரசினை எனக்கு. ஆனா ஒவ்வொண்ணு வரும்போதும் எனக்கு உங்க அசரீரி கேட்குது. அதுபடி நடக்குது. நான் நார்மலாயிடறேன்."
"அசரீரியா? நான் எப்ப .."
"பிரசினை சமயத்தில ரோட்டில போறவங்க பேச்சோ, தூரத்தில கேட்கிற பாட்டு வரியோ, எதிரில ஒரு இடத்தில தெரியற வாசகமோ.. அது எனக்கு நான் என்ன செய்யணும்னு சொல்லுது. என் மேல கருணை வெச்சு நீங்க.."
"நில்லு நில்லு... அதிலெல்லாம் என் ஸிக்னேச்சர் தேடாதே. இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தை நடத்தறதுக்குள்ள... உங்களையெல்லாம் சமாளிக்கிறதுக்குள்ள எனக்கே முழி பிதுங்குது. இதில உங்களுக்கெல்லாம் அசரீரி வேறே அனுப்பணுமாக்கும்?"
"அப்படீன்னா…எனக்கு பிரசினை வரும்போதெல்லாம்..."
"நீதான் சமாளிக்கணும். அதுக்குத்தானே மூளையும் தந்துருக்கேன்? அப்ப அதை எடுத்துரவா?"
"அப்ப தற்செயல்தானா?"
"உன் செயலை யோசித்து செய்து உருப்படப்பாரு. And pray. அதான் என் பர்மனண்ட் அசரீரி. God is not for it, Got it?"
“Got it!” அமைதியானான்.
><><
- கே. பி. ஜனார்த்தனன்



Monday, April 20, 2026

புதிய பார்வை...


மனநிலை பாதிக்கப்பட்டவர்களை கைகளைப் பூட்டி அறைகளில் அடைத்து வதைகளுடன் கூடிய வைத்தியம் பார்த்தது அவரை வதைத்தது.
கதவுகளைத் திறந்து விட்டார். கலந்துபேசி, கை பற்றி, ஒரு தோழமை கொடுத்து... என்று மனோ தத்துவத்தில் புதிய அத்தியாயங்களை எழுதினார்.
'Father of Modern Psychiatry' என்று அழைக்கப்பட்ட Phillipe Pinel... இன்று பிறந்த நாள்!
மன அழுத்தம், சமூகத் தாக்கம், ஏன் உடலளவிலான பாதிப்பு கூட மனதில் பிழைகளை பிறழ்வுகளை ஏற்படுத்தலாம் என்றிவர் சொன்னது நிறைய மாற்றங்களை உண்டாக்கியது. புரிந்து உணர்ந்து குணப்படுத்தும் cognitive வழிகளைப் புகுத்தினார். நம்ம டாக்டர் V S ராமச்சந்திரனின் பிரபல 'Phantoms in the Brain' அன்பர்கள் நினைவுக்கு வரலாம்..
படித்த மருத்துவப்படிப்பு பாரிஸில் அங்கீகரிக்கப்படாததால் பல வருடங்கள் எழுத்தாளராக கழிக்க நேர்ந்தது. மனநிலை பாதித்து தற்கொலை செய்துகொண்ட நண்பரின் மறைவு இவரை மனநல மருத்துவத்தில் இறங்க வைத்தது.
இவர் வேலை பார்த்த மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று தேறி, அங்கேயே வேலைக்கு சேர்ந்திருந்த புஸின் என்பவரிடமிருந்து தயங்காமல் நிறைய கற்றுக்கொள்ளும் அளவு ஆர்வம் இந்த மன நலக் காவலருக்கு!