Wednesday, June 24, 2026

கதையின் அடிநாதத்தை...


சிலர் இருக்கிறாங்க. அவங்களை நாம சந்திச்சே இருக்க மாட்டோம். ஆனா நம்ம வாழ்க்கையில அவங்க வெகுவா ஊடுருவியிருப்பாங்க. இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு எடுத்துக்குவாங்க. உற்சாகத்தையும் ஆறுதலையும் அள்ளி வழங்கி இருப்பாங்க. ஆ, நீங்களே சொல்லிட்டீங்களே.. அவரு தாங்க...
கண்ணதாசன்... இன்று பிறந்த நாள்!
‘அவரு எழுதின பாடல்கள்ல உங்களுக்குப் பிடிச்ச ஒரு பாடல் சொல்ல முடியுமா?’ன்னு கேளுங்க.
உடனே மனசில ஓடறதிலேருந்து ஒரே ஒரு பாட்டை செலக்ட் பண்றதுக்குள்ளே முழி பிதுங்கிரும்.
யோசிக்க ‘ஒரு நாள் போதுமா?’
எந்தப் படமா இருக்கட்டும், கதையின் அடிநாதத்தை சில அடிகளில் தன் பாடலில் கொண்டு வந்து விடுவார். அதுதான் அவருடைய ஸ்பெஷாலிட்டி: படத்தின் ஒன் லைன் பாடலில்!
"தூக்கி வளர்த்தவள் தாயென்றால் அதை
ஆக்கிக் கொடுத்தவள் பேரென்ன?
வாங்கிய தாய்க்கே மகனென்றால் அதைத்
தாங்கிய தாயின் உறவென்ன?"
‘அன்னை’ படக்கதையை இதைவிட க்ளாஸிக்காக எப்படிச் சொல்ல முடியும்?
வானம்பாடி படத்தின் சுருக் இதோ இந்தப் பாடல் வரிகளில். (காதல் தோல்வியில் இருக்கும் கதாநாயகனுடன் கவியரங்கத்தில் போட்டியிடுகிறாள் தோழி... அவன் கேட்க அவள் பதில்.)
‘காதலித்தாள், மறைந்து விட்டாள், வாழ்வு என்னாகும்?”
‘அன்பு காட்டுகின்ற வேறிடத்தில் காதல் உண்டாகும்.’
‘ஒரு முறைதான் காதல் வரும் தமிழர் பண்பாடு.’
‘அந்த ஒன்று எது என்பதுதான் கேள்வி இப்போது.’
‘வருவதெல்லாம் காதலித்தால் வாழ்வதெவ்வாறு?’
‘தன் வாழ்க்கையையே காதலித்தால் புரியும் அப்போது.’
ஒன் லைனில் என்ன, சில சமயம் இரண்டொரு வார்த்தையிலேயே சொல்லிவிடுவார். படத்தின் கதையை. இதோ உதா.
“எங்கிருந்தாலும் வாழ்க..”
(’நெஞ்சில் ஒரு ஆலயம்’ : காதலித்தவள் எங்கிருந்தாலும் அவள் வாழவேண்டுமென்று எண்ணி அவள் கணவனைக் காப்பாற்றுகிறான் தன் உயிரைவிட்டு.)
நவரசமும் அபிநயம் பிடிக்கும் அவர் பாடல்களில்.. ‘பேசுவது கிளியா..’ என்று கொஞ்சும்! ‘வீடுவரை உறவு…’ என்று அஞ்சும்!
பறக்க ஆரம்பித்துவிட்டால் போதும். நாம்'பாட்டு’க்கு பறந்து கொண்டேயிருக்கலாம் மனதில். கடைசி வார்த்தை வரைக்கும்!. "காதல் சிறகை காற்றினில் விரித்து வானவீதியில் பறக்கவா..."
அள்ள அள்ள வந்து கொண்டே…
‘சொன்னாலும் வெட்கமடா..
சொல்லாவிட்டால் துக்கமடா…
துக்கமில்லாமல் வெட்கமில்லாமல்
வாழுகிறேன் ஒரு பக்கமடா…’ (முத்து மண்டபம்)
‘ஊரெங்கும் தேடினேன் ஒருவரைக் கண்டேன்..
அந்த ஒருவரிடம் தேடினேன், உள்ளத்தைக் கண்டேன்..
உள்ளமெங்கும் தேடினேன், உறவினைக் கண்டேன்..
அந்த உறவினிலே மூழ்கினேன் பிரிவினைக் கண்டேன்..’ (தேன் நிலவு)
இலக்கியத்துக்கும் சாதாரண ரசிகனுக்கும் இடையே உள்ள தூரத்தை யாராவது இத்தனை டெஸிமலுக்குக் குறைத்திருப்பார்களா என்றால் இல்லை.
"நீரோடும் வைகையிலே..நின்றாடும் மீனே…" பாடலில் ஒரு வரி.
"உன் ஒருமுகமும் திருமகளின் உள்ளமல்லவா...?"
"உங்கள் இரு முகமும் ஒரு முகத்தின் வெள்ளமல்லவா..?"
ஒரு முகத்தின் வெள்ளம் என்றால்? நதியும் கடலும் சங்கமிக்கும் இடத்தை பொழி முகம் (Estuary) என்பார்கள். சங்க முகம் என்றும் சொல்வதுண்டு. அந்த முகம்! அதில் ஒன்றாய்ப் பாயும் இரு வெள்ளம்!
கவிதையிலும் ஓர் காவிய நயம்..
மதுரைவீரன், மன்னாதி மன்னன், மகாதேவி, மாலையிட்ட மங்கை, ரத்தத் திலகம், இல்லற ஜோதி, கவலை இல்லாத மனிதன்... மனதில் தடம்பதித்த படங்களையும் எழுதினார்.
'மணந்தால் மகாதேவி; இல்லையேல் மரணதேவி!' தமிழ் திரையின் முதல் பிரபல பஞ்ச் டயலாக் அதுவே! அதுவும் வில்லனுக்கு!
காலம் அவருக்கு எத்தனையோ பரிசுகளை வழங்கி இருக்கலாம் ஆனால் காலத்துக்கு அவர் வழங்கிய பரிசு அவை எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டு விடக்கூடியது. ‘சிவகங்கைச் சீமை’ என்ற அவர் தயாரித்த படம். காலத்துக்கும் நிற்கும் காவியம்.
எத்தனையோ சொல்லலாம். ஆனால் இந்த ஒரு பாட்டு போதுமே? அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும்!
“ஓஹோஹோஹோ மனிதர்களே,
ஓடுவதெங்கே சொல்லுங்கள்!
உண்மையை வாங்கி, பொய்களை விற்று,
உருப்பட வாருங்கள்!
1
அழுகிப் போனால் காய்கறி கூட சமையலுக்காகாது
அறிவில்லாதவன் உயிரும் மனமும் ஊருக்கு உதவாது
உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது
உளறித் திரிபவன் வார்த்தையிலே ஒரு உருப்படி தேறாது.
காலம் போனால் திரும்புவதில்லை, காசுகள் உயிரை காப்பதும் இல்லை...
2
அடிப்படை இன்றி கட்டிய மாளிகை காற்றுக்கு நிற்காது
அழகாய் இருக்கும் காஞ்சிரம் பழங்கள் சந்தையில் விற்காது
விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது
விளக்கிருந்தாலும் எண்ணெய் இல்லாமல் வெளிச்சம் கிடைக்காது.
கண்ணை மூடும் பெருமைகளாலே, தம்மை மறந்து வீரர்கள்போலே...
3
ஒதிய மரங்கள் பெருத்திருந்தாலும் உத்திரம் ஆகாது
உருவத்தில் சிறியது கடுகானாலும் காரம் போகாது
படிப்பதனாலே தெளிவுள்ள மனசு பாழ் பட்டுப் போகாது
பாதையை விட்டு விலகிய கால்கள் ஊர் போய் சேராது.
காற்றைக் கையில் பிடித்தவன் இல்லை, தூற்றித் தூற்றி வாழ்ந்தவரில்லை…”
('படித்தால் மட்டும் போதுமா?')

Monday, June 22, 2026

விதை அவர் போட்டது...



கம்ப்யூட்டர் உலகின் நோபல் பரிசு என்பார்கள் அதை. ஒரு மில்லியன் டாலரும் கூகுளின் நிதி உதவியும். ‘டூரிங் அவார்ட்’ என்பது பெயர். யார் அந்த டூரிங்?
Alan Turing ...கம்ப்யூட்டர் சயின்டிஸ்ட். கணித மேதை… இன்று பிறந்த நாள்!
கம்ப்யூட்டரும் கையுமாக கம்பீரமாக உட்கார்ந்து இருக்கிறோம். உட்கார்த்தி வைத்தவர்களை கொஞ்சம் நினைவு படுத்திக் கொள்வோமே?
1936 இல் காலேஜில் படித்தபோது அவர் கையில் எடுத்ததுதான் அக்காலத்தில் பெரும் புதிராக இருந்த Decision Problem. அதை தீர்ப்பதற்காக, அப்போதுதான் அந்த Turing Machine-ஐ பேப்பரில் வரைந்தார். இன்றைய கம்ப்யூட்டர் விஞ்ஞானத்திற்கு அதுவே ஆதார வித்து. அதனால் தான் அவர் ஃபாதர் அஃப் கம்ப்யூட்டர் சயின்ஸ்.


அவரே பத்து வருடத்துக்கு பின் கம்ப்யூட்டர் வடிவமைப்பில் இறங்கினார். பிளக் போர்டுகளில் இருந்த ப்ரோக்ராம் ஆணைகளை மெமரியில் வைத்துக் கொள்ள முடிகிற கம்ப்யூட்டரை முதன் முதலில் வடிவமைத்தார். அந்த 1946இரண்டாம் உலகப்போர் ரெண்டு வருஷம் முந்தியே முடிந்ததற்கு ஓர் முக்கிய காரணமாக இவரை சொல்கிறார்கள்.
என்ன செய்தார் இவர்? யுத்த சமயத்தில் கப்பல்களை அழிக்க உபயோகிக்கப்பட்ட எனிமா மெஷினின் மிகக் கடினமான சங்கேத மொழியைத் தகர்த்தறிவதற்கான வழியைக் கண்டுபிடித்தார். எந்த வார்த்தையின் முடிச்சையும் 15 நிமிடத்தில் அவிழ்த்து விடும் அது.
திரைமறைவில் ஒரு மனிதனும் ஒரு கம்ப்யூட்டரும் வீற்றிருக்க, இந்தப் பக்கமிருந்து நடுவர் ஒரு கேள்வியை வீசுகிறார். இருவரிடமிருந்தும் வரும் பதில்களைப் பார்த்து எது கம்ப்யூட்டர் என்று சொல்ல முடிந்தால் தோல்வி. சொல்ல முடியா விட்டால் அந்த கம்ப்யூட்டர் டெஸ்டில் தேறி விட்டது என்று அர்த்தம். என்ன அது? Artificial Intelligence Test! 1950இல் அவர் உருவாக்கிய இந்த டெஸ்ட் மாடல் தான் இன்றளவும் A. I. இன் I. Q. அளவை அளக்கப் பயன்படுகிறது.
பயாலஜியையும் விட்டுவைக்கவில்லை. சின்ன வயதிலேயே ஹாக்கி விளையாடப் போனால் அங்கே முளைத்திருக்கும் டெய்ஸிச் செடி எப்படி வளர்கிறதுன்னு பார்த்தபடியே நிற்பவராச்சே... தாவரங்களின் வளர்ச்சியில் எப்படி கணிதம் ஒளிந்திருக்கிறது என்பதைக் காட்டினார். மாட்டுக் கன்றின் உடலில் படர்ந்திருக்கும் நிறங்களின் வடிவமைப்புக்கு பின்னால் உள்ள கணித விதிகளையும்!
ஓட்டம் என்றால் நாட்டம்! கூட வேலை பார்ப்பவர்கள் பஸ்ஸில் வந்து சேர்வதற்குள் அந்தப் பத்து மைலையும் ஓடிக் கடந்து வந்து விடுவார். ஒலிம்பிக் மாரத்தான் டைமுக்கும் அதற்கும் ரொம்ப வித்தியாசம் கிடையாது. கேட்டால் வரும் பதில்: ‘நான் பார்க்கிற வேலை ரொம்ப மன அழுத்தம் தருவது, ஓடுவது ஒன்றுதான் அதிலிருந்து என்னை விடுவிப்பது!’
சொன்னவை: ‘எந்திரங்களால் சிந்திக்க முடியுமா? சற்றே சிந்தியுங்கள்.’
‘சற்று தூரத்துக்குத்தான் நாம் நம் எதிர் காலத்தை உற்று நோக்க முடியும் ஆனால் அதற்குள்ளாகவே நாம் செய்ய வேண்டியவை அனேகம் இருப்பதைப் பார்க்க முடியும்.'
'அது ஒரு மனிதன் என்று ஒரு மனிதனை நம்ப வைத்து விட்டால் அந்தக் கம்ப்யூட்டர் ஒரு புத்திசாலி என்று சொல்லத் தகுதியுடையது.’

பேசும் அந்த ஸ்டைல்...


விரல்களைச் சொடுக்கி, ‘முகாம்பா குஷ் ஹுவா!’ என்றபடி என்டர் ஆகும் Mr India நடிப்பு எல்லோரையும் குஷிப்படுத்தி விட்டது.
Amrish Puri… இன்று பிறந்தநாள்!
‘Meri Jung’ படத்தில் கோர்ட்டில் குஷ்பூவை இவர் விசாரிக்கும் காட்சி. பயந்த பெண்ணிடம் கனிவாக கர்ச்சீப்பை நீட்டி, கண்ணைத் துடைத்துக் கொள்ள விட்டு, ஈசியான சின்ன கேள்விதான் கேட்கப் போறேன்னு சொல்லி, மிருதுவுக்கும் மிருதுவான குரலில் கேட்பதும், இடையில் அப்ஜெக்ஷன் சொல்லும் அனில் கபூருக்கு சட்டென்று டோனை மாற்றி கண்டிப்பான குரலில் மறுப்பதும்... மறுபடி கனிவாக குஷ்பூவிடம் தொடருவதும்... தனக்கு வேண்டிய பாயிண்டை அவர் வாயிலிருந்து வரவழைத்ததும் குரலை உயர்த்தி மடக்குவதும்.. ஆஹா, Here is a real actor! என்று சொல்ல வைக்கும்.
Steven Spielberg வாயாலேயே உலக பெஸ்ட் வில்லன் பட்டம் வாங்கியவர். ‘Indiana Jones and the Temple of Doom’ இல் ‘அந்தக் கற்களை கீழே போட்டு விடுவேன்,’ என்று சொல்லும் ஹீரோவிடம் சர்வ அலட்சியமாக சொல்லும், ‘Drop them Doctor, They will be found. You will not!’ நினைவுக்கு வருதா?
Gunda raj படத்தில் அஜய் தேவ்கனை மிரட்டும் காட்சி. வெண்கல வாய்ஸ் ஒரு புறம் மிரட்டிக் கொண்டிருக்க, இமைக்காத கண்களில் விழிகள் உருள இந்த வில்லன் சீனை ஆக்கிரமித்து விடுவார். இவரைச் சமாளித்து ஹீரோக்கள் பஞ்ச் டயலாக் பேசுவதற்குள்...
அடிக்கடி வந்து அவார்ட் வாங்கிக் கொள்வார் Filmfare விழாவில். மொத்தம் பன்னிரெண்டு. 1993, 94, 96 மூன்று வருடங்களும் விசேஷம். Best Villain, Best Supporting Actor இரண்டும் இவரே.
Raaj Kumar -க்கு பிறகு இவர்தான் வசன உச்சரிப்புக்கு! With due modulation, of course! இருவருமே மோதிக் கொள்ளும் காட்சி ‘Surya’ படத்தில் வரும்.
ரவுண்ட் ட்ராலி ஷாட்டுக்கென்றே பிறந்தவர். சுற்றி வரும் காமிராவின் முன் சாய்த்த தலையுடன் ‘Dhivya Shakti’படத்தில் பேசும் அந்த ஸ்டைல் இவருக்கே வரும்.
நம் திரை உலக வழக்கப்படி பிற்பாடு நல்லவர் ரோலுக்கு வந்து விட்டார். Dilwale Dulhania…,China Gate, Virsat… காமெடி ரோலும் தனக்கு வரும் என்று காட்டியது ‘Sangram’ படத்தில். கமலஹாசனும் அவருடைய நளின பகுதியை Chachi 420 -இல் (‘அவ்வை ஷண்முகி’) ஜெமினி ரோலில் வெளிப்படுத்தினார்.
மறக்க முடியாதது மணிரத்னம் அளித்தது. ‘தளபதி’ ரஜினியை தன்னோடு அழைக்கிற காட்சியில் அளவான பாடி லேங்குவேஜில், குரலை ஏற்றி இறக்கி பேசுவது.. நல்லா இரு என்று சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடக்கும் கர்வம்.. . தேவராஜ் விடுதலையாகும் போது காட்டும் இறுக்கமான முகம்... அப்புறம் அந்த confrontation! படிக்கட்டுகளில் தேவராஜை நேருக்கு நேர் சந்திக்கும்போது…’நீ மாறவே இல்லே!’ நிறுத்தி அழுத்தமாக பேசுகிறார். அவர் ‘எதையுமே மறக்கலை’ என்றதும் ஒரு ரியாக் ஷனை முகத்தில் வடியவிடுகிறார். தலையை நிமிர்த்துகிறார். முகத்தை உயர்த்துகிறார். ‘நூறு வருஷம் வாழணும்!’ என்று தோளைத் தட்டுகிறார். பேசிக்கொண்டே உடல் அசைவுகள் காட்டுவது ஒரு ரகம் என்றால் அவசியமான இடத்தில் இடைவெளி விட்டு அந்த vital அசைவுகளைக் கவனிக்க வைப்பது இவர் ரகம். கேமிராவுக்கு முகம் காட்டும் consciousness இல்லாமல் பேசும் அந்த confidence!
முதல் ஸ்க்ரீன் டெஸ்டில் தோற்ற எத்தனையோ முக்கியமான நடிகர்களில் இவரும் ஒருவர். அண்ணன் மதன்புரி already, an established villain ஹிந்தி படவுலகில்.