Saturday, May 23, 2026

என்னைக் கேளுங்கள்'...


இவர் என் வாழ்வோடு கலந்தவர். கதைகள் படிக்க ஆரம்பித்த காலத்தே என் கருத்தையெல்லாம் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டவர். ‘கல்கண்டு’ படிக்காமல் கண்ணுறங்கியதில்லை. வடக்கே பாபுராவ் படேல் போல இங்கே இவர் ’கேள்வி பதிலு’க்காகவே ('என்னைக் கேளுங்கள்') ஒரு பெரும் வாசக வட்டம்...
சங்கர்லால்! இதை இங்கர்சால் பேரிலிருந்த மதிப்பில் வைத்ததாக அவர் குறிப்பிட்ட ஞாபகம். சங்கர்லால்தான் எங்கள் எல்லாருக்கும் ஷெர்லாக் ஹோம்ஸ். சங்கர்லால் மனைவி இந்திரா, டீ (தேனீர் என்றே குறிப்பிடுவார்) போட்டுத்தரும் மாது, உதவிப் பையன் கத்திரிக்காய் என்ற அந்தக் குடும்பமே எல்லாருக்கும் ஃபேவரிட்.
1950 களில் வந்த தொடர். ‘நிழல் மனிதன்’. பயங்கரமான திருடனான நிழல் மனிதனை எப்படியாவது பிடிக்க வேண்டிய ஆகக் கடின அஸைன்மெண்டை பிரபல துப்பறியும் நிபுணர் சங்கர்லாலுக்கு அளிக்கிறார் உதவிப் போலீஸ் கமிஷனர் வஹாப்.
ஒரு ரெஸ்டாரண்டில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அந்த நபரிடம் ஒரு பெரியவர் வந்து, தான் ஒரு திருடன் என்றும் தன்னைப் பிடிக்க போலீஸ் வெளியே நிற்கிறது என்றும் சொல்கிறார்.. நீங்கதான் நிழல் மனிதன்னு எனக்குத் தெரியும், எப்படியாவது என்னைக் காப்பாத்துங்க, என்று அவர் கெஞ்ச அவன் பயப்படாதே சொல்கிறான்.
’பேசாமல் என் பின்னால் வா,’ என்றவன் ஒரு அட்டையை எடுத்து அதில் ‘நான்தான் நிழல்மனிதன்’ என்று எழுதி தன் கழுத்தில் மாட்டிக் கொண்டு வாசல் நோக்கி நடக்கிறான். போலீசும் மற்றவர்களும் அசந்து அப்படியே நிற்க, அவர் அவனுடன் நடந்து சென்று காரில் ஏறுகிறார். அடைக்கலமாகும் அந்தப் பெரியவர் அவனுடன் சேர்ந்துகொள்ள அவர்தானே சங்கர்லால் என்று ஆவல் சிந்திக் குவிந்த ஆயிரமாயிரம் கடிதங்கள்!
தமிழ்வாணன்! - சொல்லிக்கொண்டே இருக்கலாம்...
திருப்பங்களுடன் தொடர்களை அமைத்துச் செல்வதில், 100 கிராம் சுவாரசியத்துக்கு 150 கிராம் ஆவலை கலந்து கொடுப்பதில் நிகரில்லாதவர்.
கல்கண்டில் 1950களில் ’கண்ணம்மா’ என்றொரு தொடர் எழுதினாரே, அதில் ஒரு அத்தியாயத்தில் ’தொடரும்’ பகுதிக்கான அந்தப் பத்தி இன்னும் என் மனதில் ஒரு அபாரமான எழுத்தாக நிற்கிறது.
சிரமங்களை சந்தித்துவரும் ஏழைச் சிறுமியான கண்ணம்மா அந்த அத்தியாயத்தில் கவலையுடன் வீடு திரும்பிக் கொண்டிருப்பாள். இனி அந்தப் பாரா இப்படி செல்லும்: ‘...என்ன செய்வது என்று யோசித்தபடியே தன் தெருவுக்குள் நுழைந்தாள் கண்ணம்மா. தன் வீட்டுக்கு பக்கத்து வீடு தீப்பிடித்து எரிவதையும் கூச்சலும் பரபரப்புமாக சிலர் ஓடுவதையும்பார்த்தாள். எங்கும் புகை. அருகில் நெருங்க நெருங்கத்தான் எரிவது பக்கத்து வீடு அல்ல தன் வீடு என்று தெரிந்தது அவளுக்கு. (தொடரும்)
கல்கண்டில் முழு எழுத்துக்கும் பொறுப்பேற்ற நேரத்திலும் குமுதத்தில் இவரின் சித்திரக்கதைத் தொடர் வெளியாகி வாராவாரம் கலக்கிற்று. சிறுவயதில் வீட்டைவிட்டு ஓடிய சிறுவன் வளர்ந்து, மாறுவேடத்தில் வந்து அந்த குடும்பத்துக்கே உதவும்போது அவன் உண்மையை சொல்லவேண்டுமே என்று வாசகர்கள் தவித்த தவிப்பு!
அவர் இயற் பெயரை ஊகிக்க எத்தனையோ வாசகர்கள் முயன்றார்கள். ‘உங்க பெயரைக் கண்டு பிடித்து விட்டேன். ராமசாமி தானே உங்கள் பெயர்? என்ற வாசகருக்கு தமாஷாக பதிலளித்தார்: ‘பாதி சரி..’
திடீரென விகடனில் அறிவிப்பு. ”தமிழ்வாணன் எழுதும் ’மணிமொழி நீ என்னை மறந்துவிடு!’ தொடர்கதை ஆரம்பம்..." பெற்ற வரவேற்பு கலக்கிற்று. மாயா ஓவியம் மனதில் இன்னும்!
எழுதாத ஜானர் இல்லை. இறங்காத துறை இல்லை. 'காதலிக்க வாங்க!' அவர் எடுத்த படம்தான்.
அவர் இன்ட்ரட்யூஸ் பண்ணிய 'இன்சுவை' 'தமிழ் பல்பொடி' எல்லாம் ஏக பாப்புலர் அப்போது...
தமிழ்வாணன்... மே 22. பிறந்த நாள்.

Wednesday, May 20, 2026

அதே ஜன்னல் ஓரம்...


விபத்தில் அடிபட்டு தன் ஒரு காலில் கட்டுப்போட்டுக் கொண்டு வீல் சேரில் நாளை ஓட்டுகிறார் போட்டோகிராபர் ஜெஃப். அவ்வப்போது வந்து பார்க்கும் காதலியும் நர்சும்... நேரம் போகணுமே? அபார்ட்மெண்ட் ஜன்னலோரம் பைனாகுலரில் எதிர் ஜன்னல்களில் மற்றவர்கள் வாழ்க்கையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவருக்கு உதிக்கிறது ஒரு விபரீத சந்தேகம். இடி மழையின் இடையே கேட்டதே ஒரு சின்ன அலறல், என்ன அது? நோயாளி மனைவியைக் கவனித்துக் கொண்டிருக்கும் அந்த வீட்டுக்காரன், தோர்வால்ட், நீளக் கத்தி ஒன்றை கழுவுகிறானே ஏன்? ஒரு பெரிய ட்ரங்கு பெட்டியை வீட்டிலிருந்து அவன் நகர்த்துவது எதற்காக இருக்கும்? சத்தமில்லாமல் மனைவியை காலி பண்ணி விட்டான் என்று சந்தேகம்! துப்பறியும் நண்பனிடம் சொன்னால், விசாரித்து, அவள் ஊருக்குப் போயிருப்பதாகத் தெரிகிறது என்கிறான்.
பக்கத்து வீட்டுக்காரர் நாயை யாரோ கொன்றுவிட ஜெஃப்புக்கு மட்டும் சந்தேகமே இல்லை அது அவன் தான் என்று. ‘உடலை புதைத்த இடத்தை நாய் தோண்ட ஆரம்பித்திருக்கும், அதான்!’ பொய்யாக ஒரு போன் கால் கொடுத்து அவனை வீட்டிலிருந்து அப்புறப்படுத்துகிறார். அந்த நேரத்தில் காதலி சுவர் ஏறி குதித்து அவன் வீட்டில் நுழைந்து ஆராய்கையில் அவன் வந்துவிடுகிறான். காதலியை காப்பாற்றணுமே? வேறு வழியின்றி போலீஸுக்கு போன் செய்கிறார் ஜெஃப். அவர்கள் வந்து அவளைப் பிடிக்க, விரல்களைப் பின்புறமாக வைத்து ஜெஃப்புக்கு சைகை காட்டுகிறாள் காதலி. விரலில் தோர்வால்டின் மனைவியின் கல்யாண மோதிரம். பார்த்துவிடுகிறான் தோர்வால்ட் இவர் பார்ப்பதை.
அடுத்து என்ன? ஜெஃப்பைத் தீர்த்துக்கட்ட இரவில் அவர் வீட்டில் நுழைகிறான் அவன். தன் காமிராவின் ஃபிளாஷ்களை அவன் முகத்தில் அடித்துத் தப்ப முயல்கிறார் வீல் சேர் ஜெஃப். முடியவில்லை. தள்ளி விடுகிறான் அவரை ஜன்னல் வழியே. சரியாக போலீஸ் வந்து சேர, மாட்டிக் கொள்கிறான். கொலை செய்ததை ஒப்புக் கொள்கிறான்.
கடைசி காட்சி: அதே ஜன்னல் ஓரம். அதே வீல்சேரில் ஜேம்ஸ். ‘இரண்டு காலிலும்’ கட்டுப் போட்டுக் கொண்டு!
ஹிட்ச்காக்கின் பிரபல ‘Rear Window’’வில் ஜெஃப் ஆக வந்து, அந்த வீல் செயரில் நம்மையும் நகர வைத்தவர்...
James Stewart.. இன்று பிறந்த நாள்!
ஒரு மில்லியனில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் 36 மில்லியன் குவித்தது. (ஏன் எல்லோரும் சினிமா எடுக்க ஓடுகிறார்கள் என்று புரிகிறதா?)
‘பின் ஜன்னல்' தவிர இவர் பின்னியெடுத்த படம், ‘என்னவொரு அற்புதம், வாழ்க்கை!’ (‘What A Wonderful Life’) துடிப்பான நடிப்பு!
ஹிட்ச்காக்கின் ‘Vertigo’விலும் ஹீரோ இவரே. உயரம் என்றால் துயரம் அவருக்கு அதில். ‘Rope’ என்ற ஒரே ஷாட் ஹிட்ச்காக் படத்திலும்!
கையில் அடுத்த வேலைக்கான கட்டிடக் கலை டிகிரியை வைத்திருந்தவர், ஆரம்பத்தில் கலக்கியது கௌபாய் படங்களில். ஒரே தொப்பியுடன் என்பது விசேஷம்.
1934 இல் ‘Art Trouble’ முதல் படத்தில் நடித்தபோது டைட்டிலில் பெயர் வரவில்லை. ஆனால் 32 வயதில் ஆஸ்கார் வாங்கி விட்டார். ‘The Philadelphia Story’ க்காக வாங்கிய அந்த ஆஸ்காரை அப்பாவின் இரும்பு கடையில் பார்க்க வைத்திருந்தார்.
இரண்டாம் உலகப்போர். அப்போது இவர் பிரபல நடிகர். அழைப்பு வரவே, குறைந்த 5 பவுண்டை நிறைய சாப்பிட்டு சரியாக்கிவிட்டு ஏர் ஃபோர்ஸில் சேர்ந்தார். அப்படி என்ன எழுதினாரோ தெரியவில்லை, அப்பா அப்போது கொடுத்த கடிதத்தை தப்பாமல் பாக்கெட்டில் வைத்திருந்தாராம் கடைசிவரை. பிரிகேடியர் ஜெனரல் ஆன ஒரே நடிகர்!
திலீப் குமாருக்கும் இவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு 40 வயதுக்கு மேல் திருமணம் செய்து கொண்டவர்கள்.
அமெரிக்கன் பிலிம் இன்ஸ்டியூட் இவருக்கு அளித்தது 50 திரை சாதனையாளர்களின் மூன்றாவது ரேங்க் என்றால், பிரிமியம் மேகஸின் அளித்தது மாபெரும் நடிகர்களில் ஒன்பதாவது இடம்.
Quote?
‘I don't act, I react….பாத்திரங்களுக்கு உள்ளேபோய் குழப்பம் ஏற்படுத்திக் கொள்வதில்லை நான். கொஞ்சம் கொஞ்சம் மாற்றி, நான் ஆகவே எல்லா படத்திலும் வருகிறேன்!’

Monday, May 18, 2026

உலகின் தலை சிறந்த ...


உலகம் சுற்ற வேண்டும் என்பதுதான் ஜார்ஜின் லட்சியம். ஆனால் தன் ஒரே கிராமத்தை விட்டு போக முடியாத நிலை. அப்பா விட்டுச்சென்ற வங்கியை நடத்தியாக வேண்டும். இல்லாவிட்டால் ஊரை விழுங்கி ஏப்பம் விடக் காத்திருக்கும் வட்டி கடைக்காரன் பாட்டர் கைக்குப் போய்விடும். பொறுப்பை ஏற்கிறான். என்ன துரதிர்ஷ்டம், பேங்க் பணத்தை அவர் மாமா தவறவிட அது பாட்டர் கைக்கு போய்விடுகிறது. பணத்தை வைத்தாக வேண்டும் பேங்கில், இல்லாவிடில் போலீஸ்தான்.
செத்துப் போவதுதான் ஒரே வழி என நினைக்கிறான். குடும்பமும் தன் இன்சூரன்ஸ் பணத்தை வைத்துக்கொண்டு சந்தோஷமாக இருக்கும் என்று பாலத்திலிருந்து ஆற்றில் குதிக்கிறான். அவனை அழைத்துப் போக வந்திருக்கும் தேவதை க்ளாரென்ஸ், அவன் உலகில் இல்லாவிடில் என்னவெல்லாம் ஆகியிருக்கும், ஆகும் என்று அவனுக்கு வரிசையாகக் காட்டுகிறது. எல்லாம் பாட்டர் கைக்குப் போய் அந்தக் கிராமமே குட்டிச் சுவராகிறது. அவன் குடும்பம் அல்லாடுகிறது. எல்லாம் பார்த்தவன் நான் வாழணும் வாழணும் என்று கத்துகிறான், பாலத்தின் மேலிருந்து. ஓடிவரும் போலீஸ் நண்பர் அவன் உதட்டிலிருக்கும் பழைய வடுவைக் காட்ட இன்னும் உயிரோடிருப்பதை அறிந்து வீட்டுக்கு ஓடுகிறான். ஊர்மக்கள் அனைவருமே அவன் வீட்டுக்கு வந்திருக்கின்றனர் அவரவருக்கு முடிந்த தொகையுடன், அவனைக் காப்பாற்ற. வாழ்க்கைக்குத் திரும்புகிறான். தேவதை தன் சிறகுகளை, பதவி உயர்வு, பெறுகிறது.
உலகின் தலை சிறந்த படங்களில் ஒன்றான ‘It’s a Wonderful Life (1946)
தயாரித்து இயக்கியவர் உலகப் புகழ் பெற்ற இத்தாலிய அமெரிக்க இயக்குநர்...
Frank Capra… இன்று பிறந்த நாள்!
ஆறு முறை நாமினேஷன் பெற்று மூன்று முறை பெஸ்ட் டைரக்டர் ஆஸ்கார் வாங்கியவர். (‘It Happened One Night’, ‘Mr Deeds Goes to Town’, ‘You Can’t Take It with You.’)
கேப்ராவுக்குப் பிடித்த படமும் இதுதான். ஜார்ஜ் பாத்திரத்தில் வெளுத்து வாங்கியவர், அவர் தான் நடிக்க வேண்டுமென்று கேப்ரா விரும்பிய, ஜேம்ஸ் ஸ்டீவர்ட்.
இந்தக் கதையைத் தழுவி தமிழிலும் ஒரு படம் வந்தது 1954 இல். ‘முதல் தேதி.’ அந்த அசத்தலான ரோலில் உருக்கமான நடிப்பைத் தந்தவர்.. வேறு யார், சிவாஜிதான்.
இந்த 135 நிமிடப் படத்துக்கு உபயோகித்த ஃபிலிம் சுருள் 3,50,000 அடி. போட்ட கிராமத்து ஸெட் பரப்பு 89 ஏக்கர்.
அமெரிக்கன் ஃபில்ம் இன்ஸ்டிட்யூட் No.1 All Time Inspirational Movie யாகத் தேர்ந்தெடுத்த இந்தப் படத்தைக் கதையாகமுதலில் எழுதிய Philip Stern, யாருமே பப்ளிஷ் செய்யத் தயாராக இல்லாததால் சின்ன புக் லெட் ஆக 200 பிரதி அடித்து கிறிஸ்துமஸ் வாழ்த்தாக அனுப்பி வைத்தாராம் நண்பர்களுக்கு.