Sunday, September 6, 2026

பால்வெளியின் வான்மதி...


அவர் ஒரு பெண் எழுத்தாளர். தெலுங்கில் அவர் எழுதிய ‘அத்தகாரி கதாலு’ என்ற சிறுகதைத்தொகுதி சாகித்ய அகாடமி பரிசு பெற்றது. அதன் சில கதைகள் குமுதத்தில் ‘அத்தகாரு’ என்று தமிழில் வெளியானது என்றால் எத்தனை பேருக்கு தெரியும் அவரை என்று தெரியாது. ஆனால் பானுமதி என்றால் அத்தனை பேருக்கும் நினைவு வந்துவிடும் அவரை.
ஆம், இந்தப் பக்கம் தலை சிறந்த நடிகைகளில் ஒருவர். அந்தப் பக்கம் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவர்.
பி. பானுமதி. வெண் திரை பால்வெளியின் வான்மதி.
இன்று பிறந்தநாள்! (1924-2005)
‘வான் மீதிலே… ‘ என்று ராமராவ் முதல் வரியைப் பாடியதும் கிளையில் கையூன்றி நிற்கும் பானுமதி முகத்தைத் தாழ்த்தி உடலைப் பின்னிழுத்தபடியே, கண்களை உயர்த்தி, ஒரு பார்வையை வீசுவார் பாருங்கள், ஒரு நாயகி தன் களையை வெளிப்படுத்தும் கலையை அந்த ஐந்து விநாடி ஷாட்டில் கற்றுக் கொள்ளலாம்.
பாத்திரங்களைப் படைக்கும் எழுத்தாளர் என்பதாலோ என்னவோ பாத்திரங்களை புரிந்துகொண்டு காத்திரமான நடிப்பை வழங்கி விடுவார்.
‘அறிவாளி’ படத்தை ஷேக்ஸ்பியர் பார்த்தால், ஆஹா, இந்த நடிகை மட்டும் நடிப்பதாக இருந்தால் எத்தனை ‘Taming of the Shrew’ களை எழுதியிருக்கலாம்! என்பார்.
ஹாஸ்டல் மாடி பால்கனியிலிருந்து, கீழே சிவாஜி பாடும் ‘வெண்ணிலா ஜோதியே வீசுதே..’வுக்கு சந்திராவாக வெட்கப்பட்டு விட்டு, அந்தப் பக்க பால்கனிக்கு ஓடி, கீழே டி. ஆர். ராமச்சந்திரன் பாடும் ‘திண்டாடுதே என் கண்களே..’வுக்கு மாடர்ன் அபிநயம் காட்டி, ஒரே ஆள் இரண்டு நபராக அசத்துவார் பாருங்கள், தியேட்டர் அதிரும். ஆம், The Fabulous Senorita வில் Estelita வாக நடித்த Estelita வை விட Fabulous ஆக நடித்திருந்தார் ‘மணமகன் தேவை’யில்.
பீறிட்டுக்கொண்டு கிளம்பும் நடிப்பு அவருடையது. நம் நாட்டின் இன்க்ரிட் பெர்க்மன். ‘Gaslight’ (1944) இல் அவர் செய்ததை அனாயாசமாக ரங்கோன் ராதாவில்… கடைசி சீனில் அவரைப்போல் ஒரு வீல் அலறல் விட்டதும், படத்தில் அது கட்டாகி விட்டதும் அப்போது ஒரு பத்திரிகையில் படித்த ஞாபகம்.
அப்புறம் அந்த நடிப்பின் எல்லை.. ‘அன்னை.’ “உன் பிள்ளையை அடிக்க நான் யாரு?” என்று சௌகார் விலகும்போது, அவன் தன் பிள்ளை இல்லை என்று தான் உணருவதையும் அதை நமக்கு உணர்த்துவதையும் ஒரே பார்வையில் வெளிப்படுத்துவார். “என் புள்ளே இல்லே, நான் பெரியம்மா, தப்பு எம்மேலதான், மன்னிச்சுக்க, என் புள்ளே இல்லே, நான் பெரியம்மா, இது உம்பிள்ளே, நீ அடி, கொல்லு, என்ன வேணாலும் பண்ணிக்கோம்மா, உன் புள்ளையாச்சு, நீயாச்சு, நான் பெரியவ, நான் பெரியவ..” என்று நகரும்போது ஒரு நடிகை வசனம் பேசுவதையா பார்க்கிறோம்? ஒரு வளர்ப்புத் தாயின் மனத் தளர்வும் வேதனையும் மட்டுமே அல்லவா தெரிகிறது?
ரோல் எதுவானாலும் ஒரு கை பார்த்து விடுவார். ‘Let me try…’ என்று சங்கர் கணேஷ் இசையில் அந்த ஆங்கிலப் பாடலையும்!(‘பத்து மாத பந்தம்’). ‘Meet my son…’ இன்னொரு அழகுப் பாடல் ‘எடுப்பார் கைப்பிள்ளை’யில்.
‘லட்டு லட்டு மிட்டாய் வேண்டுமா..’ நாலு மொழிப் பாடலிலிருந்து ‘அன்னை என்பவள் நீதானா…’ வரை லட்டு லட்டாக பாடல்கள்.
அஷ்டாவதானி என்றால் அதான் எனக்கு தெரியுமே என்பீர்கள். என்ன அந்த எட்டு என்றால்? எழுத்தாளர், டைரக்டர், பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர், எடிட்டர், ஸ்டூடியோ அதிபர், நடிகை. (முதல் பெண் சூபர் ஸ்டார்.)
இவர் நடிப்பில் ஒரு இயல்பான குறும்பு கலந்திருக்கும். ‘ஏரு பூட்டி ஜோரு காட்டும் …’ ('ம.பெ.மகராசி') பாடலில் அந்தக் குறும்பை நாணத்துடன் சரிவிகிதத்தில் வழங்கியிருப்பார்.
‘கள்வனின் காதலி’யில் கல்கியின் கல்யாணியை அப்படியே கண்முன் கொண்டு வந்ததை நாலு வரி சொல்லலாமென்றால் ‘அம்பிகாபதி, ‘அலிபாபா’, ‘மதுரை வீரன்', ‘கானல் நீர்' எல்லாமாக சேர்ந்து நாற்பது வரி ஆகிவிடும்

Tuesday, September 1, 2026

சொல்லாமல் கொள்ளாமல்...


சொல்லாமல் கொள்ளாமல்…

கே.பி.ஜனார்த்தனன் 


 காலிங் பெல் ஒலித்தது. எட்டிப் பார்த்தார் ராகவ். கேட்டுக்கு வெளியே கிஷோர் நின்றிருந்தான். சற்று தாமதமாகவே கதவைத் திறந்தார்.

“என்ன மாமா, என்ன பண்ணிட்டிருந்தீங்க? எத்தனைவாட்டி பெல்லை அமுத்துறது?”
“இல்லேடா, இங்கே ஒரு பேஜார் வேலையில் அகப்பட்டு முழி பிதுங்கிட்டிருக்கேன். உட்காரு, என்ன தலை எல்லாம் கலைஞ்சிருக்கு?”

 அவன் ஏதோ சொல்ல வாயெடுக்கு முன் ”ஆ, உன்கிட்ட ஐடியா கேட்கலாமே? ஒரு வெப்சைட் போட்டி. பக்கத்து வீட்டு பையன் என்னை கலந்துக்கச் சொன்னான். ரெண்டே வரியில் எழுதணும்  ‘To whom do you want to thank before you die and why?’ அப்படிங்கிற கேள்விக்கு பதில். எப்படி எழுதறதுன்னு தலையை பிச்சிட்டு…”

“ஓ வந்து… அது இப்ப…”

“ஒரு நிமிஷம்தான். இந்த கேள்விக்கு நீ பதில் சொல்றதாயிருந்தா என்ன சொல்லுவே?”

யோசிக்கவேயில்லை. “எங்க அம்மாவுக்குத்தான் முதல்ல! லிஸ்ட் போட முடியாது அவங்க எனக்கு செய்திருப்பதை எல்லாம்! அப்புறம் எங்கப்பா..” என்று அவனாகவே அப்பாவுக்குத் தாவினான், “அவர் மட்டும் அந்த காலத்திலேயே எனக்கு அட்வென்ச்சர் கதைகளை படிச்சுக் காட்டவில்லையானால் நான் படிப்பில் இத்தனை ஆர்வத்தோடு வளர்ந்திருக்க மாட்டேன்.”
“அப்ப யாழினி?”
“ஆமாம். முதலிலேயே சொல்லியிருக்கணும். என் மனைவி இல்லாம நான் ஏது? அடுத்து என் தங்கை. அவளோட பாசம் நான் முன்னேற எத்தனை உதவியா இருந்திருக்கு! என் ப்ரண்ட் சீதாராமன். பிளஸ் டூவில் என் ஹை மார்க் ஸ்கோருக்கு அவனுக்கு நன்றி சொல்லணும். ராப்பகலா கூட இருந்து உழைச்சான்…”

 அவன் தொடர்ந்து சொல்ல… மாமா உட்கார்ந்தார்.

 “இலக்கணமும் கணக்கும் சொல்லித் தந்த ஆறுமுகம் சார், வேலையில் சேர்ந்தப்ப முதல் ப்ராஜெக்ட் லீடரா இருந்த மனோஜ் … கொஞ்சம் கஷ்டம்தான் மாமா. லிஸ்ட் வளந்துட்டேயிருக்கு. ஆஹா, எத்தனை பேர் என் வாழ்க்கையில் நான் நல்லாயிருக்க ஹெல்ப் பண்ணியிருக்காங்க? ஏன் உங்களால் அதை ஈசியா எழுத முடியலைன்னு புரியுது.” என்ன நினைத்தானோ, “வரேன் மாமா, வீட்டில் ஒரு வேலை, மறந்துட்டேன்!” போய்விட்டான்.


 போன் ஒலித்தது. “சித்தப்பா,” என்று அழைத்தாள் யாழினி. ”அங்கே வந்தாரா அவர்? என்னோட சண்டை போட்டுட்டு கோபத்தில் வெளியே போனாரு. அதான் கவலையா இருக்கு.”

“கவலைப்படாதே, இப்ப சரியாகியிருப்பான். அங்கேதான் வந்திட்டிருக்கான்,” என்றார் அவன் முகத்தில் அறிகுறி பார்த்து நோயை டயாக்னிஸ் செய்து உடனடியாக ஒரு திரைக்கதை எழுதி அதன்படி வைத்தியமும் பார்த்து அனுப்பிய ராகவ்.


(‘அமுதம்’ April 2012 இதழில் வெளியான ‘அன்புடன் ஒரு நிமிடம் -3’)

Sunday, August 30, 2026

அதுவும் அன்றே ...


"என்ன குற்றம் கண்டீர்?" என்கிறார் சிவாஜி.
"பொருளில்தான் குற்றம்! சொல்லில் குற்றமில்லை," என்கிறார் சிவாஜி.
என்ன இது? அதை சொல்வது ஏ பி நாகராஜன் அல்லவா?
இல்லை, அவர் வசனம் மட்டுமே.
சிவனும் சிவாஜியே; நக்கீரனும் சிவாஜியே.
"இங்கு எல்லாமே நீர் தானா?" என்பாரே நாகேஷ், திருவிளையாடலில்... அதுபோல.
ஆம், அங்கு இருவருமே அவர்தான்.
அதுவும் அன்றே (1956) நடித்துவிட்டார்..
படம்: 'நான் பெற்ற செல்வம்' அதில் வரும் டிராமா காட்சி! (லிங்க் கீழே)
டபிள் ரோலில் கலக்கியிருப்பார் சிவாஜி. சிவனாகவும் நக்கீரராகவும்.
இரு குரலிலும் ஒரு distinct difference காட்டி திகைக்க வைத்திருப்பார். அது போனஸ்!