Wednesday, September 16, 2026

கின்னஸ் பதினொன்று...


அது ஒரு மேஜிக் ஷோ. 1300 பவுண்டு எடையுள்ள இரும்புக் கம்பிகள் மேலே தொங்குகின்றன. பிணைத்திருக்கும் கயிறு 90 செகண்டில் எரிந்து துண்டிக்கப்பட்டு விடும். அவரது கை கால்களை விலங்கிட்டு இரும்புக் கம்பிகளுக்கு நேர் கீழாக இருக்கும் ஒரு பெட்டிக்குள் அடைத்து விடுகின்றனர். உடலைச் சுற்றிக் கட்டிய இரும்புச் சங்கிலியை பெட்டிக்கு கீழே பிணைத்து விடுகின்றனர். கை கால் விலங்குகளை இணைத்திருக்கும் இரும்புச் சங்கிலியை இருபுறமும் இழுத்துப் பிடித்தபடி நிற்கின்றார் இருவர். 90 செகண்டுக்குள் வெளிவரவில்லையானால் மேலிருந்து விடுபடும் கிராதகக் கம்பிகள் கிழித்துவிடும் உடலை. பெட்டியை திரை மூட, கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்!...
கைவிலங்குடன் கட்டிய சங்கிலி உலுக்கப்படுவது தெரிகிறது. சில செகண்டுகளில் அது கீழே விழுகிறது. அடுத்து கால் விலங்குச் சங்கிலி. இழுத்து உலுக்கப்பட்டு வெளியே விழுகிறது. 60 செகண்ட் தாண்டியாயிற்று. கீழே இழுத்துக் கட்டியிருக்கும் சங்கிலியை இழுப்பது தெரிகிறது. அது வரவில்லை. நேரம் பறக்கிறது. ஆயிற்று. 88.. 89... 90...
படார்! செங்குத்தாய் விழுகின்றன கம்பிகள். அரங்கம் ஷாக்கில் அமைதி! அடுத்த விநாடி திரையை விலக்கிக்கொண்டு கம்பிகளின் மேலான பலகையிலிருந்து எழுந்திருக்கிறார். சிரித்தபடியே கை காட்டுகிறார். கைத்தட்டலில் அரங்கம் அதிர்கிறது.
David Copperfield.. உலகின் இணையற்ற மேஜிக் நிபுணர். இன்று பிறந்த நாள்!
கின்னஸ் ரெக்கார்டா? பதினொன்று! Emmy அவார்டா? இருபத்தி ஒன்று! உலகின் மிகப் பணக்கார, மிக வெற்றிகரமான மேஜிக் நிபுணர்!
நூற்றாண்டின் தலைசிறந்த மேஜிக் நிபுணராக The Society of American Magicians இவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறது..

'Terror Train' என்ற படத்திலும் வருவார் மேஜிக் நிபுணராகவே.. 

Thursday, September 10, 2026

பிரபல பஞ்ச் டயலாக்...

தன் முன் நின்ற அந்த வாலிபனைப் பார்த்தார் டைரக்டர் எல்லிஸ் ஆர் டங்கன். காங்கேயம் சொந்த ஊர். கம்பீரமான உருவம். வில் புருவங்களின் கீழே கூர்மையான கண்கள். எகத்தாளம் தூக்கி நிற்கும் உதடுகள். அந்த கணீர்க் குரல். கே.பி.சுந்தராம்பாளின் சிபாரிசு தேவையே இல்லை. எடுத்துக் கொண்டார் அந்த நடிகரை. படம் 'மணிமேகலை.' தொடர்ந்து கிடைத்த படம் 'உதயணன் வாசவதத்தை.' உதயமானார் ஒரு வில்லன்.
யாரப்பா அது கர்ஜிப்பது என்று எல்லாரையும் திரும்பிப் பார்க்க வைத்த
வீரப்பா...
பி.எஸ்.வீரப்பா... இன்று பிறந்த நாள்! (1911-1998)
'மணந்தால் மகாதேவி; இல்லையேல் மரணதேவி!' கண்ணதாசன் எழுதிய தமிழ்பட உலகின் மிகப் பிரபல பஞ்ச் டயலாக்கைப் பேசியவர்.
ஸ்ரீராம், ஜெமினி, சிவாஜி, எம்ஜிஆர், எஸ்.எஸ்.ஆர். என்று எல்லோருக்கும் 'சபாஷ்! சரியான போட்டி!'யாக வந்தவர். அவரே 'சபாஷ்' சொன்ன 'சரியான போட்டி' பத்மினி, வைஜயந்தியுடையது. ('வஞ்சிக்கோட்டை வாலிபன்') மறக்க முடியுமா அதை?
சிரித்தாலும் சிரித்தார் ஒரு 'ஹா ஹா ஹா!' வில்லன் என்றால் ஹா ஹா ஹா என்றுதான் சிரிக்கணும் என்று கிளம்பிய பல 'ஹா ஹா ஹா'க்களைத் தாங்க வேண்டியதாயிற்று. அவர்போல் ஒன்றும் வரவில்லை.
நடிகர் எத்தனை பிரபலமோ அதற்குச் சற்றும் பிரபலம் குறையாத புரொட்யூசர். ஆம், ஓங்கி ஒலித்த அந்த ‘ஆலயமணி'! அதை நமக்குத் தந்தவராயிற்றே? திலீப்குமார் நடித்து அது இந்தியிலும் ‘ஆத்மி'யானது.
தயாரிப்பை ஆரம்பித்தது ‘பிள்ளைக் கனியமுது' படத்தில். (அந்த "ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே..." பாடல்!) தொடர்ந்து ஜெமினியுடன் ‘வீரக்கனல்'. ‘ஆலயமணி’ ஒலித்தபின் ஒளிர்ந்தது ‘ஆனந்த ஜோதி' அப்புறம் “ஆறு மனமே ஆறு…” என்ற ‘ஆண்டவன் கட்டளை’... 'Woh Kaun Thi?' யைத் தமிழில் ‘யார் நீ?’ என்று தர, அதிரடி ஹிட், இந்தியைப் போலவே. ராம நாராயணன், எஸ் ஏ சந்திரசேகர், ராமராஜன் டைரக்‌ஷனில் சளைக்காமல் படங்களைத் தந்தவர்.

Sunday, September 6, 2026

பால்வெளியின் வான்மதி...


அவர் ஒரு பெண் எழுத்தாளர். தெலுங்கில் அவர் எழுதிய ‘அத்தகாரி கதாலு’ என்ற சிறுகதைத்தொகுதி சாகித்ய அகாடமி பரிசு பெற்றது. அதன் சில கதைகள் குமுதத்தில் ‘அத்தகாரு’ என்று தமிழில் வெளியானது என்றால் எத்தனை பேருக்கு தெரியும் அவரை என்று தெரியாது. ஆனால் பானுமதி என்றால் அத்தனை பேருக்கும் நினைவு வந்துவிடும் அவரை.
ஆம், இந்தப் பக்கம் தலை சிறந்த நடிகைகளில் ஒருவர். அந்தப் பக்கம் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவர்.
பி. பானுமதி. வெண் திரை பால்வெளியின் வான்மதி.
இன்று பிறந்தநாள்! (1924-2005)
‘வான் மீதிலே… ‘ என்று ராமராவ் முதல் வரியைப் பாடியதும் கிளையில் கையூன்றி நிற்கும் பானுமதி முகத்தைத் தாழ்த்தி உடலைப் பின்னிழுத்தபடியே, கண்களை உயர்த்தி, ஒரு பார்வையை வீசுவார் பாருங்கள், ஒரு நாயகி தன் களையை வெளிப்படுத்தும் கலையை அந்த ஐந்து விநாடி ஷாட்டில் கற்றுக் கொள்ளலாம்.
பாத்திரங்களைப் படைக்கும் எழுத்தாளர் என்பதாலோ என்னவோ பாத்திரங்களை புரிந்துகொண்டு காத்திரமான நடிப்பை வழங்கி விடுவார்.
‘அறிவாளி’ படத்தை ஷேக்ஸ்பியர் பார்த்தால், ஆஹா, இந்த நடிகை மட்டும் நடிப்பதாக இருந்தால் எத்தனை ‘Taming of the Shrew’ களை எழுதியிருக்கலாம்! என்பார்.
ஹாஸ்டல் மாடி பால்கனியிலிருந்து, கீழே சிவாஜி பாடும் ‘வெண்ணிலா ஜோதியே வீசுதே..’வுக்கு சந்திராவாக வெட்கப்பட்டு விட்டு, அந்தப் பக்க பால்கனிக்கு ஓடி, கீழே டி. ஆர். ராமச்சந்திரன் பாடும் ‘திண்டாடுதே என் கண்களே..’வுக்கு மாடர்ன் அபிநயம் காட்டி, ஒரே ஆள் இரண்டு நபராக அசத்துவார் பாருங்கள், தியேட்டர் அதிரும். ஆம், The Fabulous Senorita வில் Estelita வாக நடித்த Estelita வை விட Fabulous ஆக நடித்திருந்தார் ‘மணமகன் தேவை’யில்.
பீறிட்டுக்கொண்டு கிளம்பும் நடிப்பு அவருடையது. நம் நாட்டின் இன்க்ரிட் பெர்க்மன். ‘Gaslight’ (1944) இல் அவர் செய்ததை அனாயாசமாக ரங்கோன் ராதாவில்… கடைசி சீனில் அவரைப்போல் ஒரு வீல் அலறல் விட்டதும், படத்தில் அது கட்டாகி விட்டதும் அப்போது ஒரு பத்திரிகையில் படித்த ஞாபகம்.
அப்புறம் அந்த நடிப்பின் எல்லை.. ‘அன்னை.’ “உன் பிள்ளையை அடிக்க நான் யாரு?” என்று சௌகார் விலகும்போது, அவன் தன் பிள்ளை இல்லை என்று தான் உணருவதையும் அதை நமக்கு உணர்த்துவதையும் ஒரே பார்வையில் வெளிப்படுத்துவார். “என் புள்ளே இல்லே, நான் பெரியம்மா, தப்பு எம்மேலதான், மன்னிச்சுக்க, என் புள்ளே இல்லே, நான் பெரியம்மா, இது உம்பிள்ளே, நீ அடி, கொல்லு, என்ன வேணாலும் பண்ணிக்கோம்மா, உன் புள்ளையாச்சு, நீயாச்சு, நான் பெரியவ, நான் பெரியவ..” என்று நகரும்போது ஒரு நடிகை வசனம் பேசுவதையா பார்க்கிறோம்? ஒரு வளர்ப்புத் தாயின் மனத் தளர்வும் வேதனையும் மட்டுமே அல்லவா தெரிகிறது?
ரோல் எதுவானாலும் ஒரு கை பார்த்து விடுவார். ‘Let me try…’ என்று சங்கர் கணேஷ் இசையில் அந்த ஆங்கிலப் பாடலையும்!(‘பத்து மாத பந்தம்’). ‘Meet my son…’ இன்னொரு அழகுப் பாடல் ‘எடுப்பார் கைப்பிள்ளை’யில்.
‘லட்டு லட்டு மிட்டாய் வேண்டுமா..’ நாலு மொழிப் பாடலிலிருந்து ‘அன்னை என்பவள் நீதானா…’ வரை லட்டு லட்டாக பாடல்கள்.
அஷ்டாவதானி என்றால் அதான் எனக்கு தெரியுமே என்பீர்கள். என்ன அந்த எட்டு என்றால்? எழுத்தாளர், டைரக்டர், பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர், எடிட்டர், ஸ்டூடியோ அதிபர், நடிகை. (முதல் பெண் சூபர் ஸ்டார்.)
இவர் நடிப்பில் ஒரு இயல்பான குறும்பு கலந்திருக்கும். ‘ஏரு பூட்டி ஜோரு காட்டும் …’ ('ம.பெ.மகராசி') பாடலில் அந்தக் குறும்பை நாணத்துடன் சரிவிகிதத்தில் வழங்கியிருப்பார்.
‘கள்வனின் காதலி’யில் கல்கியின் கல்யாணியை அப்படியே கண்முன் கொண்டு வந்ததை நாலு வரி சொல்லலாமென்றால் ‘அம்பிகாபதி, ‘அலிபாபா’, ‘மதுரை வீரன்', ‘கானல் நீர்' எல்லாமாக சேர்ந்து நாற்பது வரி ஆகிவிடும்