Thursday, May 18, 2023

200 பிரதி....


உலகம் சுற்ற வேண்டும் என்பதுதான் ஜார்ஜின் லட்சியம். ஆனால் தன் ஒரே கிராமத்தை விட்டு போக முடியாத நிலை. அப்பா விட்டுச்சென்ற வங்கியை நடத்தியாக வேண்டும். இல்லாவிட்டால் ஊரை விழுங்கி ஏப்பம் விடக் காத்திருக்கும் வட்டி கடைக்காரன் பாட்டர் கைக்குப் போய்விடும். பொறுப்பை ஏற்கிறான். என்ன துரதிர்ஷ்டம், பேங்க் பணத்தை அவர் மாமா தவறவிட அது பாட்டர் கைக்கு போய்விடுகிறது. பணத்தை வைத்தாக வேண்டும் பேங்கில், இல்லாவிடில் போலீஸ்தான்.

செத்துப் போவதுதான் ஒரே வழி என நினைக்கிறான். குடும்பமும் தன் இன்சூரன்ஸ் பணத்தை வைத்துக்கொண்டு சந்தோஷமாக இருக்கும் என்று பாலத்திலிருந்து ஆற்றில் குதிக்கிறான். அவனை அழைத்துப் போக வந்திருக்கும் தேவதை க்ளாரென்ஸ், அவன் உலகில் இல்லாவிடில் என்னவெல்லாம் ஆகியிருக்கும், ஆகும் என்று அவனுக்கு வரிசையாகக் காட்டுகிறது. எல்லாம் பாட்டர் கைக்குப் போய் அந்தக் கிராமமே குட்டிச் சுவராகிறது. அவன் குடும்பம் அல்லாடுகிறது. எல்லாம் பார்த்தவன் நான் வாழணும் வாழணும் என்று கத்துகிறான், பாலத்தின் மேலிருந்து. ஓடிவரும் போலீஸ் நண்பர் அவன் உதட்டிலிருக்கும் பழைய வடுவைக் காட்ட இன்னும் உயிரோடிருப்பதை அறிந்து வீட்டுக்கு ஓடுகிறான். ஊர்மக்கள் அனைவருமே அவன் வீட்டுக்கு வந்திருக்கின்றனர் அவரவருக்கு முடிந்த தொகையுடன், அவனைக் காப்பாற்ற. வாழ்க்கைக்குத் திரும்புகிறான். தேவதை தன் சிறகுகளை, பதவி உயர்வு, பெறுகிறது.
உலகின் தலை சிறந்த படங்களில் ஒன்றான ‘It’s a Wonderful Life (1946)
தயாரித்து இயக்கியவர் உலகப் புகழ் பெற்ற இத்தாலிய அமெரிக்க இயக்குநர்...
Frank Capra… இன்று பிறந்த நாள்!
ஆறு முறை நாமினேஷன் பெற்று மூன்று முறை பெஸ்ட் டைரக்டர் ஆஸ்கார் வாங்கியவர். (‘It Happened One Night’, ‘Mr Deeds Goes to Town’, ‘You Can’t Take It with You.’)
கேப்ராவுக்குப் பிடித்த படமும் இதுதான். ஜார்ஜ் பாத்திரத்தில் வெளுத்து வாங்கியவர், அவர் தான் நடிக்க வேண்டுமென்று கேப்ரா விரும்பிய, ஜேம்ஸ் ஸ்டீவர்ட்.
இந்தக் கதையைத் தழுவி தமிழிலும் ஒரு படம் வந்தது 1954 இல். ‘முதல் தேதி.’ அந்த அசத்தலான ரோலில் உருக்கமான நடிப்பைத் தந்தவர்.. வேறு யார், சிவாஜிதான்.
இந்த 135 நிமிடப் படத்துக்கு உபயோகித்த ஃபிலிம் சுருள் 3,50,000 அடி. போட்ட கிராமத்து ஸெட் பரப்பு 89 ஏக்கர்.
அமெரிக்கன் ஃபில்ம் இன்ஸ்டிட்யூட் No.1 All Time Inspirational Movie யாகத் தேர்ந்தெடுத்த இந்தப் படத்தைக் கதையாகமுதலில் எழுதிய Philip Stern, யாருமே பப்ளிஷ் செய்யத் தயாராக இல்லாததால் சின்ன புக் லெட் ஆக 200 பிரதி அடித்து கிறிஸ்துமஸ் வாழ்த்தாக அனுப்பி வைத்தாராம் நண்பர்களுக்கு.

Tuesday, May 16, 2023

முதல் படமே...

 


‘For Your Eyes Only’(James Bond) படத்தில் நடித்துக் கொண்டிருந்த மனைவி Cassandra Harris ஐப் பார்க்க செட்டுக்கு வந்தார் அந்த நடிகர். அவர் சம்மதிச்சா என் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் அவர்தான் என்றாராம் தயாரிப்பாளர் Albert Broccoli.

அந்த நடிகர் Pierce Brosnan. இன்று பிறந்தநாள்!
ஆனால் நடிகர் விரும்பியும் அது கைகூடவில்லை அப்போது. 'The Living Daylights' -இல் நடிக்க முடியாது போயிற்று, பிரபல ‘Remington Steele’ சீரியலில் காண்ட்ராக்டில் நடித்துக் கொண்டிருந்ததால்! இவரைவிட வருந்தியது இவர் மனைவி.
1995. 'Golden Eye'-இல் தொடங்கி நச்சென்று நாலு படம். 'Tomorrow Never Dies', 'The World is not Enough', 'Die Another Day'.
Sean Connery க்குப் பின் ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்துக்கு ஒரு தனி ஸ்டைலை கொடுத்த நடிகர் இவர்தான் என்று நினைக்கிறேன். அவருக்குப் பிடித்த பாண்ட் நடிகரும் கானரிதான். அதனால் ரோல் நல்ல சவாலாக இருந்ததாம்.
வாயின் வலது மேல் ஓரமாக வடு ஒன்று இருக்கும். புண்ணியம் கட்டிக் கொண்டது 'Tomorrow Never Dies' படத்தின் சண்டைக் காட்சி!
உலகின் 50 அழகிய மனிதர்களில் ஒருவராக People’s Magazine தேர்ந்தெடுத்தது இவரை. (1991).
‘நான் முதன் முதலில் பார்த்த படமே ஜேம்ஸ்பாண்ட் படம்தான்!’ என்கிறார். 'Goldfinger'. நடிகராக வேண்டும் என்ற ஆசையைத் துளிர்க்க விட்டதும் அந்தப் படம்தான். அப்பா பிரிந்து சென்று விட்டதால் அதீத அன்புடன் அம்மாவால் வளர்க்கப் பட்டவர். பதினொரு வயதிலேயே ஆறடி உயரம்.
தவிர, நிறைய வெற்றிப் படங்கள்! ‘Dante’s Peak’, ‘The Thomas Crown Affair,’ பிரபல Roman Polanski யின் ‘The Ghost Writer.’ அப்புறம் 2017 இல் The Foreigner. (Jackie Chan உடன்) மிகப் பிடித்திருந்ததாம் 'Mrs. Doubtfire' இல் நடித்தது.
Quote? ‘வெற்றியை விரும்பினேன் அதற்காக உழைத்தேன் கொஞ்சம் திறமை இருந்தது. தீட்டிக் கொண்டேன். அதிர்ஷ்டமும் சேர்ந்துகொண்டது.’

Saturday, May 13, 2023

அம்மாவே முதல் குரு...


எட்டு வயதிலேயே பாட்டுப் போட்டியில். தங்க மெடலை எட்டிவிட்டார் என்பதும், 14 வயதிலேயே தனிக் கச்சேரி நடத்தி விட்டார் என்பதும் நாம் தெரிந்துகொண்டு பிரமிக்கும் விஷயம். ஆனால் எப்படி அவர் பாட்டைக் கேட்டதும் ஒரு உற்சாகம் மனதில் தோன்றுகிறது என்பது தெரியாமலேயே பிரமிக்கும் விஷயம்.

அருணா சாய்ராம். May 13. பிறந்த நாள்!
இசைக் குடும்பம். அம்மாவே முதல் குரு. அம்மா ஆலத்தூர் சகோதரர்களின் சிஷ்யை. அப்பா வீட்டில் அழைத்து வராத கலைஞர் இல்லை. அவர்களில் சங்கீத கலாநிதி பிருந்தா அறிமுகமாக, அவரிடம் இசை பயின்றார். குரலில் உணர்வையும் புதுமையையும் கொண்டு வர துணை புரிந்தவர் ஒரு ஜெர்மானியர். (Eugene Rabine)
லண்டன் ராயல் ஆல்பர்ட் ஹாலில் நடக்கும் BBC Proms, அப்புறம் பாரிஸ், நியூயார்க் என்று உலக அளவில் ஒலித்த பாடல்கள் இவருடையவை. தென்னிந்திய கர்நாடக சங்கீதத்தின் சுகந்தம் உலக அளவில் வீச இவரும் காரணம். சங்கீத கலாநிதி பட்டம், பத்மஶ்ரீ விருது...
ஏற்றமும் இறக்கமும் அந்த கணீர்க் குரலில் இசைந்து வரும் கம்பீரம்! கனிவும் உருக்கமும் அந்தக் காந்தக் குரலில் கலந்து வரும் பிரவாகம்!
"ஹிமகிரி தனயே ஹே..." என்று தொடங்கும் போது மனசை அப்படியே இழுத்துச் செல்லும்.
'ஸ்வாகதம் கிருஷ்ணா..' பாடலில் 'மதுரா புரி...' 'மது ராபுரி...' என்று பாடுகையில் அவர் அழைத்துச் செல்லும் இரண்டு அழகிய மதுராபுரியில் எதில் திளைக்க?
'வெங்கடரமணனே பாரோ..' பாடலும் சரி 'தசரத ராம கோவிந்தா..' பாடலும் சரி சரியான பிரார்த்தனை மனநிலைக்கு அழைத்துச் செல்லும்.
"எனகுவானே ரங்கா... நினகுவானே..." பாடும் போதும் காதருகே புஷ்பக விமானம் புறப்படுகிறாற்போல இருக்கிறதென்றால் "லலிதலவங்க லதா பரிசீலன..." பாடும்போது அந்த விமானம் அழகாய் தரையிறங்குகிற மாதிரி...
'எப்படி பாடினரோ?' பாடலை மற்றவர்கள் எப்படி பாடினரோ, இவர் பாடும்போது இப்படியும் பாடலாமோ கனிவாக என்று..
'இகோ நம்ம ஸ்வாமி... 'தருவது ஒருவித இதம் என்றால், மறவாமல் கேட்பது, 'பிறவா வரம் தாரும் பெம்மானே..'
கேட்க மனம் சிறகடிக்கும் மற்றொரு பாடல் 'காக்கை சிறகினிலே...' இவருக்குப் பிடித்த பிருந்தாவன சாரங்காவாயிற்றே அது?
"பக்கத்து வீட்டு பெண்ணை அழைப்பான், முகாரி ராகம் பாடச்சொல்லி வம்புக்கு இழுப்பான்.. எனக்கது தெரியாதென்றால்..., நெக்குருக கிள்ளி விட்டு..., அவள் விக்கி விக்கி அழும் போது..., இது தாண்டி முகாரி என்பான்!" என்று அவர் பாடும்போது ('விஷமக்காரன் கண்ணன்..' பாட்டில்) அந்த நாட்டுப்புறப் பாடலின் முழு அழகும் முன்னால் வந்து நிற்கும்.
சிகரமாக.. எல்லார் காதுகளிலும் நர்த்தனமாடும் அவரது 'காளிங்க நர்த்தன தில்லானா...'
'எப்போதும் இசையிலேயே ஆழ்ந்திருக்க விரும்புகிறேன்.' என்னும் அவர் சொல்வது, 'இலக்கணம் என்று இருந்தாலும் ராகம் பெரும்பாலும் உணர்வு பூர்வமானது. நம்பிக்கையுடனும் நேச பாவத்துடனும் பாடும்போது அது கேட்பவரை சென்றடைகிறது. கேட்பவர் அந்த உணர்வை திருப்பி அனுப்ப, பல முறைஅங்கும் இங்கும் பரிமாறப்பட்டு, அது நம்மை மேம்படுத்தும் அனுபவமாகிறது. அதில் எல்லாவற்றையும் நாம் மறக்கிறோம்!'

Tuesday, May 9, 2023

பல்லவி பாடவைக்கும் முகம்...


அன்புள்ள தன் அப்பாவையும் அழகிய தன் கிராமத்தையும் அடியோடு நேசிக்கிறாள் பானு. அவர்களை விட்டு அவள் அந்தண்டை இந்தண்டை நகருவதாயில்லை. ஆனால் அக்காவைப் பெண் பார்க்க யூ.எஸ்சிலிருந்து வந்தவனின் அழகிய தம்பியோ அவள் உள்ளத்தை அஸால்டாக அள்ளிக் கொண்டு விடுகிறான். சின்னச் சின்ன அவள் குறும்புகள் அவனையும், பெரிய பெரிய அவன் திறமைகள் அவளையும் கவர...

விழுந்து விடக் கூடாது, விழுந்து விடக் கூடாது என்ற அவள் எச்சரிக்கையை உள்ளம் காதில் போட்டுக் கொண்டால்தானே? 'தொபீர்'!
கட்டினா விட்டுப் போகணுமே எல்லாத்தையும்? ஒரு சின்னக் காரணம்! ஒண்ணே ஒண்ணு கிடைச்சாப் போதும் இவன் லாயக்கில்லேன்னு ஒதுக்கிரலாம்னு அலயறா. அலை பாயறா. கிடைச்சாத்தானே? தவிக்கிறாள். .. நம்மையும் தவிக்க விடுகிறாள்.
பானுவாக வந்து பாடாய்ப் படுத்துகிறவர்... பல்லவி, சாய் பல்லவி.
படம்: 'Fidaa' (தெலுங்கு)
அழகான அடுத்த வீட்டு பெண் லுக். சிரிப்பில் யார் மனமும் திக் திக்!
அவன் கேட்டான்னு அம்மா சொல்ல, மழையில நனைஞ்சுட்டே போய் அடுத்த வீட்டிலேர்ந்து ஊறுகாய் வாங்கிட்டு வந்தால், அதுக்குள்ளே சாப்பாட்டை விட்டு எந்திரிச்சிட்டானேன்னு அழகாக முழிப்பதும், அப்புறமா ‘நீதானே எனக்கு கிராமத்தை சுத்திக் காட்டணும்?’னு கேட்டவனை, பையா உனக்கு படா பேட் டைம்னு, ‘அதுக்கென்ன, கோவிலுக்கு போகலாமே!’னு சொல்வதும்..
பாவம், அவ சொன்ன மாதிரி அதுக்காக அதிகாலை 3 மணிக்கே எழுந்து அவன் பச்சத் தண்ணியில தலை குளிச்சிட்டு பஞ்சகச்ச வேஷ்டியை சுத்திட்டு, வீட்டை சுத்தி சுத்தி வர, அவள் சுகமா தூங்கிவிட்டு, மறுநாள் அவன் கிராஸ் பண்ண, ‘நீ மட்டும் என்னை ஊறுகாய்க்கு அலைய விடலையா?’ன்னு மடக்கறதும்.. ‘அடப்பாவி! அத்தைகிட்ட சொல்லவா?’ என்றதும் அவனின் அதிகாலைக் கிணற்றடிக் குளியல் போட்டோக்களை நீட்டுவதும்.. "நான் பானுமதியாக்கும்!"னு ஓடுவதும்... அவர் முகத்தின் ஒவ்வொரு மில்லி மீட்டரிலும் கொப்புளிக்கும் குறும்பு!
பல்லவி பாடவைக்கும் முகம்! எந்த அளவு உற்சாகத்தை கொட்டுகிறதோ அந்த அளவுக்கு தோல்வியுற்ற காதலின் மன அழுத்தத்தையும் காட்டுகிறது அதே முகம்! ஏறுமுகம்தான் இனி நடிப்பில்!
Filmfare, SIIMA சிறந்த நடிகை அவார்ட்...
சாய் பல்லவி... இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Monday, May 8, 2023

காதல் க(வி)தை...

 



கவிஞர் இருவரின் காதல் க(வி)தை..

இங்கே இளைஞன் ராபர்ட். எழுதியவற்றுக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால் தன் கவிதைகளுக்கு ஓர் அங்கீகாரத்தை ஏற்படுத்திவிட முயன்று கொண்டிருக்கிறான். நல்ல ஒரு இடம் மெல்ல எழும் வேளை..
அங்கே எலிசபெத். 12 வயதிலேயே தன் கவிதைகளை எழுத ஆரம்பித்தவள். என்னவொரு சோகமெனில், குதிரையிலிருந்து தவறி விழுந்து முதுகில் அடி. டி.பி.யும் சேரவே, முழு நேர நோயாளியாக அறைக்குள்ளேயே வாசம். தண்ணீரில் மூழ்கி இறந்த தம்பியின் சோகம். எல்லாம் மறக்க எழுதினாள். மொழி நயம்! புதுமையான எண்ணங்கள்! துணிச்சலான கருத்துக்கள்! பிரபலமாகிவிட்டிருந்தாள். தன் தொகுப்பொன்றில் ராபர்டின் கவிதைகளைப் பற்றி குறிப்பிட...
நன்றி தெரிவித்து கடிதம் எழுதினார் ராபர்ட். அவள் கவிதைகளின் மீதான தன் ஹார்ட்டின்களையும் சேர்த்து. ‘என் இதயபூர்வமாக நேசிக்கிறேன் உங்கள் கவிதைகளை..’ என்று தொடங்கிற்று அது. தொடர்ந்தது நட்பு. 2 வருடத்தில் 600 கடிதங்கள்! அவளது நண்பர் (Kenyon) உதவியால் ஒரு கோடை நாளில் சந்தித்தார்கள். கல்யாணம் என்றாலே பிடிக்காத கண்டிப்பான அப்பாவின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் இருப்பவள். ரகசியமாகவே சந்திப்பு. காதலுக்கு இதைவிட கிரியா ஊக்கி உண்டா? மலர்ந்தது.
ஆற்றொணா துயரிலிருந்து தன்னை மீட்டவர் மேல் மாற்றொணா அன்பு. ஆனாலும் ஆயிரம் தயக்கம் எலிஸபெத் மனதில். அனுதாபத்தில் வந்த காதலா? நீடிக்குமா? அப்பால் வருந்த நேருமா? 6 வயது அதிகம் இல்லையா அவளுக்கு? அப்பாவின் ஆதரவில் இருக்கும் நோயாளியாயிற்றே நான்? ஆனால் ராபர்ட் திடம் தந்தார். காதலில் விளைந்த அவள் கவிதைகள் பல. அதிலொன்று பிற்பாடு காதல் இலக்கியமானது. “எப்படியெல்லாம் உன்னைக் காதலிக்கிறேன்? எண்ணப் போகிறேன் அந்த வழிகளை!...” 14 வரி ஸானட்.
அவளைக் கவனிக்கும் தாதி சாட்சியாக வர, ஒரு செப்டம்பர் 12 இல் ரகசியமாய் திருமணம் செய்து கொண்டனர். பாரிசில் தேனிலவு முடிந்த கையோடு டாக்டர்கள் ஏற்கெனவே சொல்லியபடி, (அப்பா செய்ய மறுத்தது) வெப்பமான இத்தாலிக்கு அழைத்துச் சென்று ஃப்ளாரன்ஸில் குடியமர்த்தினார் ராபர்ட். அப்பா கடைசி வரை பேசவேயில்லை.

மனைவியின் கவிதைகளுக்கு மவுசு ஏற்பட உழைத்தார் இவர். அவளும் அதுபோல். இருவர் எழுத்திலும் முன்னேற்றம். Wordsworth மறைந்தபோது அவைக் கவிஞர் இடத்துக்கு Tennyson, எலிஸபெத்துடன் போட்டியிட வேண்டியதாயிற்று. Aurora Leigh என்ற தன் மிகப் பெரும் கவிதை நாவலை அப்போதுதான் எழுதினார்.
ஆரோகணத்திலிருந்து அவரோகணத்துக்கு வந்த ஆரோக்கியம்… 1861. மணவாழ்வின் 15 வது வருடம்.. மெலிவுற்று நலிவுற்று கணவன் மடியிலேயே உயிர் விட்டார். ஆனந்தப் புன்னகையொன்று அவள் முகத்தில்.. ‘பியூட்டிஃபுல்!’ என்றொரு வார்த்தை உதடுகளில். கடைசி வார்த்தை!
Robert Browning and Elizabeth Barrett...

அப்பாவின் நூலகம்...

 


ஹேம்லின் நகரத்தில் கெலிக்க முடியாத எலித்தொல்லை. எதுவும் பலிக்கவில்லை. என்னிடம் விடுங்கள் என்று வந்தார் அந்த பைப் வாசிப்பவர். 40000 ரூபாய் பேசுகிறார்கள். அவன் பைப் எடுத்து வாசிக்க, அத்தனை எலிகளும் கேட்டுக் கிறங்கி அவன் பின்னால் பைப் லைனாக அணிவகுத்தன. அப்படியே அழைத்து சென்று ஆற்றில் நடந்து எலிகளை மூழ்க வைத்தான். எலிகள்தான் எலிமினேட் ஆயாச்சே? 2000 தான் தருவேன் என்கிறார்கள். அவன் மறுபடியும் பைப்பை வாசிக்கிறான். கேட்டு மயங்கிய அந்த ஊர் குழந்தைகள் அவனைத் தொடர அழைத்துச் செல்கிறான் காட்டுக்கு...

‘The Pied Piper of Hamelin’ - பிரபலமானஇந்தக் கவிதையை எழுதியவர் ...
Robert Browning.. பிரசித்தி பெற்ற ஆங்கிலக் கவிஞர். May 7. பிறந்த நாள்.
நோய்வாய்ப்பட்ட அவருடைய பப்ளிஷர் நண்பர் மகன், நேரம் போகாமல் படம் வரைவதற்கு ஒரு கதை கேட்டபோது இவர் கவிதையாக சொன்னதுதான் இந்தக் கதை.
அப்பா வைத்திருந்த 7000 புத்தக லைப்ரரி ஆர்வத்தை கிளப்ப, சின்ன வயதிலேயே தீர்மானித்துவிட்டார் கவிஞராக வேண்டும் என்று.
கவிதாயினி Elizabeth Barrette மீதான காதல் ஒரு காவியக் கதை.
ஆழமான வரிகளை வரைந்தவர். சில இதோ...
‘எட்டுவதற்கு மேலாக இருக்க வேண்டும் மனிதன் அடைவது; சொர்க்கம் என்று ஒன்று இருப்பது வேறு எதற்காக?’
'பளிங்கு என்று இளமை நினைத்ததை, பனித்துளி என்று கண்டுபிடிக்கிறது முதுமை!'
‘எளிய அழகு மட்டுமே உங்களுக்கு கிடைத்தது வேறு எதுவும் கிடைக்கவில்லை என்றால் கடவுள் உருவாக்கிய மிகச்சிறந்தது உங்களுக்கு கிடைத்திருக்கிறது என்று அர்த்தம்!’
‘எவ்வளவு வருத்தமாக, எவ்வளவு மோசமாக எவ்வளவு கிறுக்குத் தனமாக இருந்தது! ஆனால் எப்படி அது இனிமையாக இருந்தது?’

>><<>><<

நிஜத்திலும் ஹீரோ...


 ‘Jab We Met’ படத்தின் கடைசிக் காட்சி. படுத்திருக்கும் தாத்தா, பேத்தி கரீனா கபூரின் ரெட்டைக் குழந்தைகளிடம் சொல்வார், “உங்கம்மாவும் அப்பாவும் எங்கிட்ட திரும்பத் திரும்ப பொய் சொன்னாங்க, ஆனா அவங்க காதலைக் கண்ணிலிருந்தே கண்டு பிடிச்சிட்டேன் நான்!” அந்தத் தாத்தா யாரென்று தெரிகிறதா?

இந்தியாவின் சூபர்மேன்... மல்யுத்தத்தில் ஒருபோதும் தோற்காத ரெக்கார்டை கொண்டவர்… சினிமாவின் நிஜ ஹீரோ.
டயலாகில் அல்லாது நிஜமாகவே ஏராளம் பஞ்ச் விட்ட தாராசிங்!
May 6. பிறந்த நாள்.
203 கிலோ ஆன, ஆனானப்பட்ட கிங்காங்கை அசால்ட்டாக தலைக்குமேல் தூக்கிச் சுழற்றி வீசியவர். அந்த ஃபைட்டில், கிங் சைடில் கிங் சைஸுக்கு பெட் கட்டினவங்க அதிகம். ஆனால் கடைசியில் அவர் உதவிக்கு ரெஃப்ரீயை நோக்கிக் கத்த வேண்டியதாயிற்று.
அந்த நாட்களில் தாராசிங் Vs கிங் காங் என்றாலே போதும், எள் போட்டால் லெவலுக்கு கூட்டம் களைகட்டிவிடும். (நம்ம ஊரில் அந்த மல் யுத்தங்களை நடத்தியதில் ஒருவர் சின்ன அண்ணாமலை.)
பயில்வானி என்ற பல நூறாண்டு பழமை வாய்ந்த கலையைப் பயின்று வந்தவரை வெல்வாரில்லை. வந்தாரா, வென்றாரா, சென்றாரா என்றிருப்பார். (‘தாரா’ என்ற வார்த்தைக்கு ராஜா என்றல்லவா அர்த்தம்?)
இந்த 53 இஞ்ச் நெஞ்சுக்கு ஆறடி ரெண்டு அங்குல உயர 'வின்னர் ஃபார்எவர்' வந்தது விவசாய குடும்பத்தில் இருந்து. இந்தியா சாம்பியன்.. காமன்வெல்த் சாம்பியன்.. கடைசியில் உலகச் சாம்பியன், 1968 இல் அமெரிக்க வீரரை (Lou Thesz) வென்று!
தயாரிப்பாளர்கள் அழைக்க மேடையிலிருந்து திரைக்கு... அத்தனை பாட்டுக்களும் ஹிட்டான (Laxmikant Pyarelal) ’புயல் வந்தது' (‘Aaya Toofan’) போன்ற படங்களின் மூலம் புயலாக வந்தார். மும்தாஜுடன் ஹீரோவாக ராஜேஷ் கன்னா அதிகபட்சம் 10 படங்களில் நடித்திருப்பார், ஆனால் 16 படங்களில் அவருடன் ஹீரோவாக நடித்தவர் இவர். செகண்ட் லெவல் படங்களில் ஃபர்ஸ்ட் லெவல் சம்பளம் வாங்கினார்கள் அவரும் மும்தாஜும்.
ஹெர்குலிஸ் ஃபிகர் எப்படி இருக்கும் என்று கேட்டால் தாராளமாக சொல்லிவிடலாம் தாராசிங் மாதிரி இருக்கும் என்று . Incidentally அவர் Hercules ஆகவும் நடித்தார். Anand படத்தில் தகராறு பண்ணும் பசங்களிடமிருந்து தன்னைக் காப்பாற்ற ராஜேஷ் கன்னா அழைத்து வருவாரே அது தாராசிங்கைத்தான்!
பிரபல 'ராமாயணா' டிவி தொடரில் இவர் ஹனுமானாக வந்தது அனுமானிக்க முடியாத புகழ் தந்தது.
தம்பி ரந்தாவாவும் ஒரு மல்யுத்தர் & நடிகர். ‘ஜானி மேரா நாம்’ அல்லது ‘ராஜா’வில் பார்த்திருப்பீர்களே இவரை?
கால் நூற்றாண்டுக்கு மல்யுத்த மேடைகளின் ராஜாவாக வலம் வந்தவர் 1983-இல் அவார்ட் வாங்கிய கையோடு மேடைக்கு குட்பை சொன்னார்.

Friday, May 5, 2023

முதல் கனவுக்கன்னி....


தமிழ் திரையின் முதல் கனவுக்கன்னி.அவர். படங்களின் டி ஆர் பி யை எகிற வைக்கிற ராஜகுமாரியாக இருந்தார் டி ஆர் ராஜகுமாரி. கூடவே எகிற வைத்தது ரசிகர்களின் எச் ஆரையும். (ஹார்ட் ரேட்)

டி ஆர் ராஜகுமாரி… இன்று பிறந்த நாள்!
மூன்று வருடம் ஓடிய ஹரிதாஸ் படத்தில் தனி முத்திரையைப் பதித்தார். ரசிகர்களை ரொம்ப இம்சித்த ரம்பாவாக ... ‘மன்மத லீலையை வெல்ல முடியாத’ நாயகன் எம் கே டி யின் ‘பாராமுகம் கொண்ட மதிவதன நீள் விழி’ ரம்பாவாக... ( இந்த இடத்தில் நிறுத்தி "ரம்பா!" "ஸ்வாமி!" )
‘கச்ச தேவயானி’யில் தேவயானியாக அறிமுகமானவர் பின்னாட்களில் புகழ்பெற்ற கதாநாயகியாகவும் மிகப்பெரிய தயாரிப்பாளர் ஆகவும் (தம்பி ராமண்ணாவுடன் ஆர் ஆர் பிச்சர்ஸ்) பரிமளித்தார்.
‘வாழப் பிறந்தவள்’ படத்தை முதலாவதாக தயாரித்தவர் வாழ்க்கையில் கடைசிவரை துணை தேடிக் கொள்ளவில்லை. தன் சினி கரீயரை குடும்பத்துக்கு என ஒதுக்கிவிட்டார். கட்டிய தியேட்டரின் பெயர் 'ராஜகுமாரி'
‘பவளக்கொடி’யில் பவளக்கொடியாக டி ஆர் மகாலிங்கத்துடன்.. ‘வனசுந்தரி’யில் வனசுந்தரியாக பி யூ சின்னப்பாவுடன்.. 'பணக்காரி'யில் பணக்காரியாக எம் ஜி ஆருடன்.. ‘தங்கப்பதுமை’யில் மாயமோகினியாக சிவாஜியுடன்…
‘சந்திரலேகா’ என்றால் போதுமே, மேற்கொண்டு சொன்னால் போரடிக்கும் உங்களுக்கு. அந்த முதல் பிரமாண்ட தமிழ் படத்தில் டாப் பில்லிங் அவருக்குத்தான்.
‘மனோகரா’வின் வசந்தசேனையை மறக்க முடியுமா? (போதும்.)
நாயகியாக… வில்லியாக.. பின் அம்மாவாக… ‘நீ பாடும் போது உமா பாடற மாதிரியே இருக்கு. பாடும்மா.. மறுபடியும் இந்த வீட்டில் ஆனந்தம் மலரட்டும்’னு வாஞ்சையுடன், அடைக்கலம் தேடி வந்த அந்த வஞ்சியிடம் (தேவிகா) சொல்லும் பரிவு! ‘வானம்பாடி’ அவருடைய மென்மையான நடிப்பை கானம் பாடியது.
எல்லாவற்றுக்கும் மேலாக அந்தப் படம்.. 'பாசம்'
‘காணாமல் போன பணத்துக்காக கைதான உன் சின்ன மகனின் நிலைக்கு காரணமான உன் காணாமல் போன மூத்த மகன் நான் தான்!’ என்று மகன் (எம் ஜி ஆர்) வந்து சொல்லும் அந்த காட்சி. ‘கோபியா நீ.. கோபி!” என்று பரவசத்துடன் புருவம் உயர்த்தி மகிழ்வுறுவதும் மறுநிமிடமே ‘யார் தப்பு செய்தாலும் தட்டிக் கேட்கிற நீயா இப்படி திருடனா வந்திருக்கே? என் முகத்திலே முழிக்காதே’ன்னு விரட்டுவதும் மறு நிமிடமே ஓடிச்சென்று அவன் கைகளைப் பற்றுவதும்.. கலங்கும் தாய் உள்ளத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விடுவார் முகம் மாறாத குரல் மீறாத தன் மிகையற்ற நடிப்பில்.
போதுமே!

Thursday, May 4, 2023

ஸ்லிம்முக்கு எதுகை...


ரண்மனையின் சம்பிரதாய கெடுபிடிகள் பிடிக்காத இளவரசி அவள். ரோம் வந்தபோது இரவில் வெளியே நடக்கும் கேளிக்கைகளை வேடிக்கை பார்க்க எட்டி குதித்து வெளியே வருகிறாள். லேட்டாக வேலை செய்த தூக்க மாத்திரைகளால் நடு ரோட்டில் குழம்ப, சந்திக்கும் ரிப்போர்ட்டர் கிரிகரி பெக், போதை என்று நினைத்து அந்தப் பேதையை பத்திரமாக தன் அறைக்கு அழைத்து சென்றதினால், இளவரசி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை கவர் செய்வதில் கோட்டை விடுகிறார். அவளேதான் அது என்றறிந்ததும், தனிப் பேட்டியே வாங்கி தருகிறேன் பார் என்று பத்திரிகை ஆசிரியரிடம் சவால் விட்டவர் ஊரைச் சுற்றி காட்டுகிறேன் என்று அவளை அழைத்துப்போகிறார். அவர்கள் அடித்த லூட்டிகளை உடன் அழைத்துச் சென்ற நண்பனைக் கொண்டு போட்டோவும் எடுத்து விடுகிறார். ஆனால் ஒரு பிரியம் பிறக்கவே கட்டுரையைப் பத்திரிகைக்குத் தர மறுக்கிறார். காதல் மலர்ந்தாலும் கடமை அழைக்க 'இளவரசி'க்கு திரும்புகிறாள் அவளும். இளவரசியின் ஃபேர்வெல் விழாவில் நண்பன் அந்த போட்டோக்களை அவளுக்குப் பரிசளிக்க, பை சொல்லி, தன் தனிமைக்கு திரும்புகிறார் ரிப்போர்ட்டர் பெக்.

படங்களுக்கெல்லாம் படமான ‘Roman Holiday’ கதை அது. ஆமாம், அதையொட்டி நாலைந்து படங்கள் வந்துவிட்டன தமிழில் மட்டுமே.
இளவரசியாக Audrey Hepburn.. இன்று பிறந்தநாள்!
ஸ்லிம்முக்கு எதுகை இவர். பிளஸ் அந்த துரு துரு கண்கள்! ஒரு லுக் விட்டார், அவ்வளவுதான், அந்தப் பார்வைக்கு ஆட்ரே ஹெபர்ன் லுக் என்றே பேர் வந்திட்டது!
கிரிகரி பெக் அப்போ டாப் ஸ்டார். ஷூட்டிங் தொடங்கி நடக்கும் போதே புதுமுகமான ஆட்ரே பெயரை தனக்கு இணையாக போட சொல்லிவிட்டார். பதறிய ஏஜென்டிடம், ‘ஆஸ்கார் வாங்கப் போகிறாள் பார்!’ என்றார். அப்படியே வாங்கினார் ஆட்ரே.
கடைசி காட்சியில் அழுகை வரவில்லை அவருக்கு. டைரக்டர் வில்லியம் வைலர்(Ben Hur) போலியாகப் போட்ட அதட்டலில் பொத்துக்கொண்டு வந்துவிட்டது.
Wait, அந்த ‘Wait Until Dark’ பத்தி சொல்லிடறேன்... அவளுக்கு கண் தெரியாது. தனியே இருக்கிறாள் வீட்டில். அங்கே கொள்ளையடிக்க மூன்று பேர் நுழைகிறார்கள். எப்படி தப்பிக்கிறாள்? வினாடிக்கு வினாடி த்ரில்! நுனி அல்ல, சீட்டுக்கு வெளியேவே வரவழைத்துவிடும் சஸ்பென்ஸ்! ஆஸ்கார் நாமினேஷன் வாங்குகிற அளவு அபாரமாக நடித்தார் ஆட்ரே.
அப்புறம் My Fair Lady. ப்ச்! வேறெதுவும் சொல்ல வேண்டாம். மனங்களை வாரி முடிந்து கொண்ட அந்த பூக்காரியை யாரால் மறக்க முடியும்?
ஜஸ்ட் 31 படங்கள்தான். முக்கிய கதாநாயகர்கள். பிரபல டைரக்டர்கள். ஏராளம் அவார்டுகள். யார் செய்வார்கள், உச்சத்தில் இருக்கும்போதே விலகிக் கொண்டதும், சொச்ச வருடங்கள் லத்தீன் அமெரிக்காவிலும் ஆப்பிரிக்காவிலும் உள்ள ஏழைக் குழந்தைகளுக்காக உழைத்ததும்.. கான்சர் வாரிக்கொண்டது வரை.
பிரபல பிரிட்டிஷ் பத்திரிகை நடத்திய உலகின் கண் கவர் பெண்களின் போட்டியில் நம்பர் ஒன்னாக வந்தார் என்றால் மற்றொரு போட்டியில் உலகின் இயற்கையான அழகிகளில் முதலாவதாக! 50 கிலோ தாஜ்மஹால் என்றிவரை வர்ணிக்க முடியாது. ஏன்னா 47 கிலோ தாண்டியதேயில்லை வாழ்நாளில், தான் வைராக்கியம் வைத்திருந்தபடியே.
சினிமாவால் பலரைப் பல்லைக் காட்ட வைத்திராவிட்டால் பல் ஆஸ்பத்திரியில் காட்ட வைத்திருப்பார், ஆம், முதலில் பல் டாக்டர் உதவியாளராகப் பயின்றிருந்தார்.
‘Cleopatra’ வுக்கு முதலில் யோசிக்கப்பட்டவர்.. ‘The Exorcist’ படத்தில் நடிக்கவில்லை, மகன்களுடன் இருக்கணும் என்று ரோமில் படப்பிடிப்பு வைக்கக் கேட்டதற்கு அவர்கள் சம்மதிக்காததால்.
இவர் பிரபலத்துக்கு ஒரு சாம்பிள், ‘Breakfast At Tiffany’s’ படத்தில் அணிந்த உடை சுமார் மில்லியன் டாலருக்கு ஏலம் போயிற்று.
Quotes? மூன்றும் முத்தானவை...
“அவங்க நடிக்கச் சொல்லும்போது எனக்கு நடிக்கத் தெரியலே. அவங்க பாடச் சொல்லும்போது எனக்குப் பாடத் தெரியலே. அவங்க ஆடச் சொல்லும் போது எனக்கு ஆடத் தெரியலே. அப்புறம் ஒரு ஆவேசத்தோட எல்லாத்தையும் கத்துக்கிட்டேன்.”
“ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம் வாழ்க்கையை அனுபவிப்பதுதான். சந்தோஷமாக இருப்பது! அது ஒண்ணுதான் விஷயம்!”
“எப்பவாவது உங்களுக்கு ஒரு உதவிக்கரம் தேவைப்பட்டால் அது உங்கள் தோளின் அற்றத்தில் இருக்கிறது என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வளர்ந்து வரும்போது உங்களுக்கு இன்னொரு கையும் இருப்பதை நினைவில் கொள்ளுங்கள். முதல் கரம் உங்களுக்கு உதவ. இரண்டாவது மற்றவர்களுக்கு உதவ.”

>><<>><<

கல்வியின் தந்தை...

அமெரிக்க கல்வியின் தந்தை என்று அவர் அழைக்கப்படுகிறார். ‘கல்வி என்பது அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டிய ஒன்று, தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு,’ என்று ஆயிரத்தி எண்ணூறுகளில் பேசியவர். "வறுமையை ஒழிக்கவும் குற்றங்களைக் குறைக்கவும் அதுவே உதவும்."

Horace Mann… (1796 - 1859) இன்று பிறந்த நாள்!


இளமையில் வறுமையில் உழன்றவர் பயின்றது பெரும்பாலும் நூலகங்களில்..
ஸ்கூல் சிஸ்டம் ஆரம்பித்து வைத்தவர்களில் முக்கியமானவர். ஒரு கிளாஸில் எல்லா மாணவர்களும் என்பதில் தொடங்கியது வயதுக்குத் தகுந்தபடி தனித்தனி கிளாஸ் என்று வளர்ந்தது.
இந்த ஹோம் வொர்க்! கண்டுபிடிச்சது யாருன்னு குமுறுவாங்க சில பசங்க. அது இவரு இல்லீங்க. ஆனா அதை ஒரு முக்கியமான விஷயமா கொண்டு வந்ததில் இவர் பங்கு இருக்கு...
ஊர்ஸெஸ்டர் என்ற ஊரில் அமெரிக்காவின் முதல் மனநல மருத்துவமனை ஏற்பட்டதன் பின்னால் இவரது உழைப்பு மிக.
மாணவர்களுக்கு அவர் சொன்னது: ‘மனிதகுலத்துக்கு ஏதேனும் வெற்றி தராமல் மரணம் அடைய வெட்கப்படுங்கள்!’
இன்னும் சொன்னவை: ‘புத்தகங்கள் இல்லாத வீடு ஜன்னல்கள் இல்லாத அறையை போன்றது.’
'காணவில்லை! நேற்று சூரியோதயத்துக்கும் அஸ்தமனத்துக்கும் இடையில் இரண்டு பொன் மணி நேரம். அறுபது வைர இழைகளால் ஆனது. கண்டுபிடிப்பவர்களுக்கு எந்த பரிசும் கிடையாது. அவை காணாமல் போனது போனதுதான்.'
‘மற்றவர்களுக்கு நாம் செய்யும் ஆகப் பெரிய சேவை, அவர்கள் தங்களுக்குத் தாங்களே உதவிக் கொள்ளச் செய்வதுதான்.’
‘வாழும்போது செய்யும் தர்மம் சாகும்போதும் செய்யும் தர்மத்தை விட வித்தியாசமானது. இது தாராள மனதுடன் பரோபகார சிந்தையில் எழுவது. மற்றது பயத்தில் அல்லது கௌரவத்தில் எழுவது.’
‘மாணவனிடம் கற்றுக் கொள்ளும் ஆர்வத்தை உருவாக்காமல் ஓர் ஆசிரியர் கற்றுக் கொடுக்க முயற்சிப்பது குளிர்ந்த இரும்பில் சுத்தியலால் அடிப்பது போல.’
‘பழக்கம் என்பது ஒரு கயிறு. தினம் ஒரு இழையாக பின்னுகிறோம், கடைசியில் அதை அறுக்க முடியாத அளவுக்கு.’
‘தன்னை விட்டு வெளியே செல்கிற இதயம் இன்னும் பெரிதாகி இன்பத்தால் நிரம்புகிறது. அக வாழ்க்கையின் மிகப்பெரும் ரகசியம் இதுதான். மற்றவர்களுக்கு

Monday, May 1, 2023

படத்தின் ஜீவன்...


நகரத்திலேயே பெரிய பணக்காரர் அவர். தன் பிரம்மாண்ட புதிய கடையை தொடங்குகிறார். ‘There is many a slip between the cup and the lip,’ என்று சொல்லும் நண்பரைச் சிரிக்கிறார், ‘எல்லாம் மனிதன் கையில்தான்,’ என்று. "அடுத்த வருடமே பெரிய பங்களா வாங்குவேன், உங்களையெல்லாம் காரில் ஏற்றிக் கொண்டு ..." என்று பெருமையுடன் மனைவியிடம் சொல்லும் கணமே இடிந்து விழுகிறது வீடு. பூகம்பம்! அவரும் அன்பு மனைவியும் மூன்று மக்களும் ஆளுக்கொரு திசையில் சிதறடிக்கப்படுகிறார்கள். மூத்த மகனைத் தேடிச் சென்ற இடத்தில் விடுதிக் காரனைத் தாக்கியதில் ஜெயிலுக்கு போகிறார். குடும்பத்தைப் பறிகொடுத்து குமுறும் உள்ளத்துடன் அலையும் அந்த 'வக்த்' படத்தின் லாலா கேதாரிநாத் வேடத்துக்கு அவரைவிட வேறு யாரால் அத்தனை பரிதாபத்தை ஊட்ட முடியும்? Ineffable!

பால்ராஜ் சஹானி... குண சித்திர நடிகர். இன்று பிறந்த நாள்!
‘Waqt’ அவருக்கு ஒரு மைல்கல். ”Yeh Meri Zohra Jabeen…” என்று மனைவியை வர்ணித்துப் பாடும் அழகாகட்டும், மகனைத் துன்புறுத்தியதை அறிந்ததும் வில்லன் ஜீவனிடம் காட்டும் ஆத்திரமாகட்டும், பீச் ஓரமாக கடலையைக் கொறித்தபடி விரக்தியுடன் நடப்பதாகட்டும்... ‘எல்லாமே காலத்தின் கையில்!’ என்று சொல்லும் படத்தின் ஜீவனை தன் கையில் அழகாகத் தாங்கி கொண்டிருப்பார்.
கல்லூரி ஆசிரியராகவும் லண்டனில் பி.பி.ஸி. அறிவிப்பாளராகவும் பணிபுரிந்தவர்... நாடக நடிகராக இருந்ததால் சினிமாவில் சிரமமின்றி சிறப்பாக…
சலில் சௌத்ரியின் கதையைத் தழுவி பிமல் ராய் எடுத்த கலைப் படம் 'Do Bigha Zamin' தான் பேர் சொன்ன அவரது முதல் பிரபல படம். கேன்ஸ் ஃபெஸ்டிவலில் சர்வதேச அவார்ட் வாங்கிய முதல் இந்தியப் படம். இந்தப் படத்திற்காக கொல்கத்தா தெருக்களில் ரிக் ஷா இழுத்துப் பழகுகிற அளவுக்கு நடிப்பில் ஈடுபாடு!
அடுத்து பேசப்பட்ட படம் 'Seema'. குழந்தையின் தலையை வருடியபடி அமைதியாக அமர்ந்து அவர் பாடும் சங்கர் ஜெய்கிஷனின் “Tu Pyaar Ka Saagar Ho..” நினைவுக்கு வருமே? அப்புறம் ‘Kabuliwala’ ரவீந்திரநாத் தாகூரின் கதை அது. நேஷனல் அவார்டும் ஃபிலிம் ஃபேர் மூன்று அவார்டும் வாங்கிய ‘Garm Hava’ மற்றொரு மிக முக்கியமான படம்.
'என் தங்கை' ஹிந்தி ரீமேக்கில் (‘Chhoti Bahen’) எம்ஜிஆர் வேடத்தில் நடித்த பால்ராஜ் நிறைய எழுதியிருக்கிறார். ஆங்கிலத்திலும். தேவ் ஆனந்த் நடித்து குருதத் இயக்கிய ‘Baazi’ படத்தின் திரைக்கதையும் கூட.

>><<>><<

அந்த மெஸ்மெரிசக் குரல்!


காரிருளில் மிதந்து வருகிறது காதலனின் பாட்டு. அந்த மீனவப் பெண் காதில் பட்டுத் தெறிக்கிறது. இதயத்தில் தைக்கிறது. தாள முடியாமல் தன் காதைப் பொத்திக் கொள்கிறாள். மயக்கும் அந்தக் குரலிருந்து மீள முடியாமல்!

“மானச மைனே வரு… மதுரம் நுள்ளித் தரு…” ‘செம்மீன்' மலையாளப் படத்தின் செம்மையான சீன். அந்த மெஸ்மெரிசக் குரல்!
மன்னா டே! இன்று பெர்த் டே!
இன்னாடே, இன்னாடேன்னு இனிமையா பாட்டுக்களைக் கொடுத்தவர்.
ஹிந்தி பின்னணி உலகின் டாப் 5 M களில் ஒருவர். (Mohamad Rafi, Mukesh, Mahendra Kapoor, Manna Dey, Talat Mehmood) க்ளாஸிகல் இசை பயின்றவர். ராஜ் கபூருக்கும் பாடியிருக்கிறார், ரிஷி & ரந்திர் கபூருக்கும்!
நாம் விரும்பிக் கேட்கும் ரஃபி விரும்பிக் கேட்பது இவர் பாடல்களைத்தான் (என்பாராம் ரஃபி.)
1942. டிகிரியை வாங்கிய கையோடு உதவி இசையமைப்பாளராக ஆரம்பித்தவர் நடிகை சுரையாவுடன் பாடிய பாட்டு ஹிட்டாக, பின்னணி பாடகர் ஆனார். 50 களும் 60 களும் பொற்காலம். 1957 -இல் மட்டும் 95 இந்திப் பாடல்கள்.
எதிர் வீட்டுப் பெண்ணுக்கு பாட்டு என்றால் உயிர். காதலிக்கிற இவனுக்கோ கானம் வராது. கட்டிலுக்கு அடியில் இருந்து நண்பன் பாட, வாய் அசைக்கிறான். காதல் கை கூடும் போதும் களத்தில் குதிக்கிறார் அவளது பாட்டு வாத்தியார். போட்டிப் பாட்டு ஆரம்பம். தாவி தவ்விக் குதித்துப் பாடி, மாடி ஜன்னலுக்கு வந்துவிடுகிறார் வாத்தியார் மெகமூத். அசத்தலாக அவருக்குப் பின்னணி பாடியவர் மன்னாடே. Padosan (இந்தி ‘அடுத்த வீட்டுப் பெண்') இல் ‘Ek Chatur Naar..’
How versatile a singer he was… என்பதைச் சொல்லும் (பாடும்) பாடல் ஒன்று உண்டு. கேட்கக் காது போதாது ரகம். Roshan இசையமைத்த ‘Laga Chunri Mein Daag..' (Dil Hi To Hai) சங்கதிகளும் கமகங்களும் பொங்கி வழியும் அந்தப் பாடலை மிக என்றால் மிக அற்புதமாக.... High ptch பாடும்போது இன்னும் மிருதுவாகும் குரல்!
ராஜ்கபூரின் மிகப் புகழ் பெற்ற வேகப் பாடல்களையும் சோகப் பாடல்களையும் இவர்தான் பாடியிருப்பார். கேட்டுச் சலிக்காத ‘Dil Ka Hal Sune Dilwala..’‘Mud Mudke na Dekh…’ (Shree 420) ‘Ae Bhai Jara Dekh ke Chalo..’ (Mera Naam Joker)
ஒரே ஒரு முறை கேட்டுப் பாருங்க, அந்த "ஆஜா ஸனம்.. மதுரு சாந்த்னி மே ஹம்.." (Chori Chori)) பாடலை! நானோ செ.மீ. அகலம் கூட இராத அந்த மிக மெல்லிய குரலை! அசராதிருக்க வாய்ப்பில்லை.
‘Waqt’ படத்தில் பால்ராஜ் சாஹ்னி கிரஹப்பிரவேச விழாவில் தன் மனைவியை வர்ணித்து பாடும் ‘Yeh Mere Zohra Jabhi…’ பாடலில் இவர் குரல் ஒரு ஜாலியான இனிமையை வழங்கும் என்றால் ‘Mere Huzoor’ படத்தில் ராஜ் குமார் பாடுவதாக வரும் ‘Jhanak Jhanak Tore Bhaje..’ சரணத்தில் இன்னும் இன்னும் என்று இறங்கிக் கொண்டே போகும்போது சிலிர்க்கும்.
Sholay யில் அந்த ‘Yeh Dosti..’ Bobby யில் இந்த ‘Na Mangoon Sona Chandi..’ சொல்லிக் கொண்டே இருக்கலாம் அவர் பாடல்களைக் கேட்டுக்கொண்டே...

>><<>><<