Friday, December 20, 2019

அதிர்ஷ்ட சக்கரம்...

மாமாவின் குதிரை வண்டிக் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் அவர். வண்டியின் எதிர்காலம் சக்கரத்திலும் சக்கரத்தின் எதிர்காலம் ரப்பரிலும் இருக்கிறது என்றும் கண்டுகொண்டார் அவர். ஓசைப்படாமல் ஒரு பேடண்ட் வாங்கிக் கொண்டார் ரப்பர் டயருக்கு.   நடத்த ஆரம்பித்த தன் குதிரை வண்டிக் கம்பெனியை 20000 டாலருக்கு விற்று டயர் கம்பெனி தொடங்கினார். உருள ஆரம்பித்தது எதிர்காலம். உயரத்தில் கொண்டு சேர்த்தே ஓய்ந்தது.

ஓடிவந்து பார்த்த ஹென்றி ஃபோர்ட் ஒரு ஜயண்ட்  சைஸ் ஆர்டர் கொடுக்க சுழன்றது அதிர்ஷ்டச் சக்கரம். 

ரிம்மோடு சேர்த்து கழற்றும் டயரை இவர் கண்டு பிடித்தாரோ, ஸ்பேர் டயர் பிறந்ததோ.. ட்ரிம்மாக வளர்ந்தது Firestone Tyre கம்பெனி.

ரப்பர் விலை உயர்ந்தபோது தளராமல் கண்ட தீர்வு: சொந்த ரப்பர் ப்ளாண்டேஷன்.

1967 இல் அமெரிக்காவின் மாபெரும் பிசினஸ்மேன்…

64 வது வயதில் தன் டயர் கம்பெனியிலிருந்து ரிடயரானார்.

Harvey Firestone.. இன்று பிறந்தநாள்!

Thursday, December 19, 2019

அப்பாவிடம் வாங்கிய 500 டாலர்..


அப்பாவிடம் வாங்கிய 500 டாலரில் ‘Firelight’ என்றொரு படத்தை எடுத்தார் அந்த இளைஞர். இப்ப அவரது லேட்டஸ்ட் படம் (Ready Player One) மூணே வார வசூல் 500 மில்லியன் டாலர். 
Steven Spielberg... இந்தமாதம் பிறந்த நாள்!
‘Jaws’ -ல் வாயைப்பிளந்து கொண்டு வந்த சுறாமீனை வாயைப் பிளந்து கொண்டு பார்த்தோம்.E.T.- யில் கை நீட்டிய அந்த U.F.O -வோடு கை குலுக்கினோம். Jurassic Park -ல் உலாவினோம். எங்கெங்கோ அழைத்துப் போனார் நம்மை.
காமெடி கார்ட்டூன் படமும் (Tin Tin) எடுப்பார். வரலாறும் (Lincoln) எடுப்பார். ஒரு motivation கிடைக்கணும் அந்த சப்ஜெக்டில், உடனே எடுக்கத் தொடங்கி விடுவேன் படத்தை என்பார்
அந்தக் காலத்தில் அனைவரையும் சீட் நுனியில் உட்கார வைத்ததே, Detective Columbo டி வி செரீஸ்? அது இவர் இயக்கியதுதான்.... 21 வயது பையனா என்னை டைரக்ட் பண்ணுவதுன்னு ஆதங்கப்பட்ட நடிகை Joan Crawford நாலைந்து ஸீனில் இவர் திறமையைப் பார்த்துவிட்டு புரொட்யூஸருக்கு நன்றி சொன்னாராம்.
எத்தனையோ ஜனரஞ்சக ஹிட் கொடுத்தாலும், 32 ஆஸ்காரை அவர் படங்கள் வாங்கிக்கொண்டாலும், இயக்குநருக்கான ஆஸ்கார் இவருக்குக் கிடைத்ததென்னவோ ரெண்டாம் உலகப்போரை வைத்து எடுத்த ரெண்டு படங்களுக்குத்தான். ‘Saving Private Ryan’ & எல்லா நல்லபட list-லும் இடம் பெறும் ‘Schindler’s List’
பத்து பில்லியனைத் தாண்டிவிட்டது அவரது படங்களின் கலெக்‌ஷன். அவரது மதிப்பும் மூன்றரை பில்லியனை! Universal Theme Park - இன் ஒவ்வொரு டிக்கட் காசிலிருந்தும் ஒரு துளி அவருக்குப் போகிறதாம்.
><><

Thursday, August 29, 2019

அங்கும் இங்கும்.. (நிமிடக்கதை)

அன்புடன் ஒரு நிமிடம் - 134

"ஒரு பக்கம் மட்டுமே கேட்டு ஒரு முடிவுக்கு வர்றது, அவங்க எத்தனை வேண்டியவங்களா இருக்கட்டும், ரிஸ்க்தான் இல்லையா?" என்றார் வாசு.
"என்ன நடந்திச்சு? யார் அது?" என்றாள் ஜனனி.
"ஒருத்தரில்லை, ரெண்டுபேர்.  சொல்றேன். முதல்ல நம்ம சேகர். கொஞ்ச நாளாவே சொல்லிட்டிருந்தான்... அவன் வீட்டு முன் போர்ஷனை வாடகைக்கு விட்டால் கொஞ்சம் சேமிப்பாகும்னு எவ்வளவோ முயற்சி பண்ணியும் சரியான ஆட்கள் கிடைக்கலேன்னு... காரணம் வர்ற எந்தக் குடும்பத்தையுமே மைதிலிக்கு பிடிக்கலேன்னு... நானும் வேலை மெனக்கெட்டு அவனுக்கு பல யோசனைகளை சொல்லியிருக்கேன். நேத்து மைதிலியோடு அதைப்பத்திப் பேச சந்தர்ப்பம் கிடைச்சப்பதான் தெரிஞ்சது நடந்ததே வேறேன்னு.’
”என்ன சொன்னாள்?”
”அவளுக்கு  ஒண்ணும் பிடிக்காம போகலியாம். துணைக்கு ஒரு குடும்பம் இருந்தால் நல்லதுன்னு நினைக்கிறாள் அவள். ஆனா சேகர்தான் அதை கௌரவக் குறைச்சல்னு நினைச்சு அதையும் இதையும் சொல்லி தள்ளிப் போடறானாம். தயங்கறானாம். என்னத்தை சொல்ல?”
”அடுத்ததை!” என்றாள்.
அவளை முறைத்துவிட்டு தொடர்ந்தார்.
”அடுத்தது நம்ம கண்ணன்.. ஊரிலிருக்கிற அவங்க அப்பா அம்மாவை உன்னோட  இங்கேயே வெச்சுக்கலாமே, உதவியா இருக்குமேன்னு கேக்கிறப்பல்லாம், இங்கே எங்களுக்கு எந்த உதவியும் தேவையில்லை, வந்தால் அவங்களையும் சேர்த்து கவனிச்சுக்க நம்மால முடியாது, அவங்க அங்கேயே இருந்துக்கறதுதான் சரிப்பட்டு வரும்னு எப்பவும் சொல்வான். நானும் அதை நம்பினேன். நேத்து அவங்கப்பாவை ஊரிலே பார்த்தப்பதான் தெரிஞ்சது விஷயம். இவன் கூப்பிட்டுட்டுதான் இருக்கானாம் வற்புறுத்தி. அவங்கதான் டவுன் நமக்கு ஒத்துவராதுன்னு வரலையாம். வீணா ஜம்பத்துக்கு என்கிட்ட அப்படி சொல்லியிருக்கான்... அதான் சொன்னேன்.  எத்தனை பழகினவங்களாயிருக்கட்டும். அவங்க சொல்றதை அப்படியே நம்பிவிடக் கூடாது... ஒரு விஷயத்தை சொல்றது அவங்க விருப்பப்படியோ அல்லது சுய நல நோக்கத்திலோதான். இந்த பாயிண்டைத் தெரிஞ்சுக்க  எனக்கு இத்தனை நாளாயிருக்கு.”
”அதாவது, தப்பான பாயிண்டை!”
”என்னசொல்றே நீ?”
”பின்னே என்ன சொல்றது... சேகர் சொன்னது பொய்யாக இருக்கலாம். தன் ஈகோவுக்காகவோ இமேஜுக்காகவோ அப்படி ஒரு சப்பைக்கட்டு கட்டியிருக்கலாம். அதே சமயம் கண்ணன் மேட்டரை எடுத்திக்கிட்டா அவங்கப்பா சொன்ன மாதிரி தான் நடந்திருக்கணும்னு எப்படி தீர்மானிக்கப் போச்சு? கண்ணன் சொன்னது உண்மைதான். மகனை விட்டுக் கொடுக்காமல் அவங்க பேசியிருக்காங்க. என்ன இருந்தாலும் பெத்தவங்க இல்லையா... மூணாம் மனுஷனான உங்ககிட்டே எப்படி மகனை விட்டுக் கொடுப்பாங்க? மைதிலிக்கு நீங்க சித்தப்பா. அதனால அவள் மனசிலிருக்கிறதை மறைக்காம சொல்லிட்டா. இல்லேன்னா அவளும் தன் கணவனை விட்டுக் கொடுத்துப் பேசியிருக்க மாட்டாங்கன்னுதான் நினைக்கிறேன்.”
”நீ என்ன சொல்ல வர்றே, நான் இப்ப கண்டுபிடிச்சது..”
”இப்படி எதையும் கண்டு பிடிக்காதீங்கன்னுதான்..”
><><
('அமுதம்' டிச.2015 இதழில் வெளியானது)

Thursday, August 22, 2019

அந்த 20 நிமிடம்... (நிமிடக்கதை)

அன்புடன் ஒரு நிமிடம் -133

சென்னைக்கு வந்திருந்தனர் வினோதும் தியாகுவும். வரிசையாக வேலைகளை முடித்துவிட்டு மாலையில் ரூமுக்கு வந்தபோது மணி ஐந்து முப்பது. 

உடனே குளியலறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டான் வினோத்.

”சீக்கிரம், சீக்கிரம்! ஐந்து நிமிஷம்தான் என்ன?” என்றான் தியாகு.

”என்னது, நான் குளிச்சிட்டு வர சரியா பதினஞ்சு நிமிஷம் ஆகும்! தெரிஞ்சதா?”

”டேய், அதெல்லாம் எப்படி முடியும்? இப்பவே கிளம்பினாத்தான் ஒன்பது மணிக்குள் ஷாப்பிங்கை முடிச்சிட்டு சாப்பிட்டு படுத்து அதிகாலை நாலு மணிக்கு  ட்ரையினைப் பிடிக்க முடியும். மறந்துட்டியா?”

”நோ வே,” என்றபடி பாத்ரூமுக்குள் நுழைந்தவன் பதினைந்து என்றால் சரியாக பதினைந்தாவது நிமிடம்தான் குளித்துமுடித்து வெளியே வந்தான்.

”என்னடா இப்படி பண்ணிட்டே?” என்றான் ஆட்டோவில் ஏறியதும் தியாகு

”காரணம் இருக்கு. நீயே யோசிச்சுப்பார். காலையிலேர்ந்து அலையறோம். ஆட்டோ பஸ்னு வேர்க்க விறுவிறுக்க...கம்பெனி மீட்டிங் அது இதுன்னு  தொடர்ந்தாப்பல பல வேலைகள்.  உடலுக்கு எத்தனை அலுப்பு! களைப்பு! இங்கே மட்டுமில்லே, ஊரிலேர்ந்தாலும் தினமும் இப்படி அடுத்தடுத்து வேலைகள் கொடுத்துட்டே இருப்பதில் உடம்பு எத்தனை சூடாகும்? களைப்பாகும்? அந்த அலுப்பையும் களைப்பையும் சூட்டையும் தணிக்க பதினஞ்சு நிமிஷம் ஒதுக்கி குளிர்ந்த நீரில் குளிப்பது வைடல் ஃபார் அவர் ஹெல்த்! எதை செய்யாவிட்டாலும் இதை மட்டும் நான் ஒரு நாளும் செய்யத் தவறினதே இல்லை. தவறவே மாட்டேன்.”

”அட, நான் இதை இப்படி நினைச்சுப்பார்த்ததில்லை. இனி நானும் இதை கடைப்பிடிக்கணுமே!”

ஷாப்பிங் முடிந்து வந்ததும் தியாகு ஐபாட் எடுத்தான், காதில் இயர் போனைச் செருகிக் கொண்டான். ”இருபது நிமிஷம் டிஸ்டர்ப் பண்னாதே,” என்றபடி சாய்ந்து கொண்டான் அந்த ஒடுங்கிய பால்கனி  செயரில், ”எனக்கு மியூசிக் கேட்கணும்.”

பிற்பாடு சாப்பிட செல்லும்போது சொன்னான், ”ஒரு நாளில் நம் உடம்பு எத்தனை சூடாகுது, களைப்பாகுதுன்னு சொன்னாயல்லவா? அதே போல தினசரி நாம் கொள்ளும் கோபதாப உணர்வுகளாலும் டென்ஷன்களாலும் நம்ம மனசு எத்தனை சூடாகுது, களைப்பாகுதுன்னு எண்ணிப் பார்த்தேன். தினமும் அந்தக் களைப்பைப் போக்கி அதை கூல் படுத்திட தவறக்கூடாது இல்லையா ? அதற்குத்தான் இந்தக் கட்டாய இருபது நிமிஷம் ஒதுக்கினேன். இந்த இருபது நிமிஷம் நல்ல மியூசிக்கைக் கேட்பது அல்லது சிறந்த ஓர் ஆன்மிக புத்தகத்தைப் படிப்பது என்று வைத்துக்கொண்டால் மனசுக்கு புத்துணர்ச்சி உண்டாகிவிடும். அதான்.”

”நானும் இதைக் கடை பிடிக்கணுமே!” என்றான் வினோத்.

><><

Monday, August 12, 2019

அவர்கள்... (நிமிடக்கதை)

அன்புடன் ஒரு நிமிடம் - 132

கடைத்தெருவில் சம்பத்தை சந்தித்த சாத்வீகன் புருவங்கள் உயர்ந்தன.

”சௌக்கியமா அங்கிள்?” என்றபடியே வந்தவனிடம், ”ஆ, சம்பத்! உன்னை எதிர்பார்க்கலை நான். இப்ப பசங்களுக்கு லீவாச்சே? எங்கானும் அழைச்சிட்டுப் போயிருப்பேன்னு...” என்றார்

”அதை ஏன் கேக்கறீங்க?” என்று அவரை நிழலுக்கு அழைத்தவன், ”அழைச்சிட்டுத்தான் போகணும். முடியலே.”

”ஏன் வரமாட்டேங்கறாங்களா?”

”அவங்க துடிக்கிறாங்க. என்னாலதான் அழைச்சிட்டுப் போக முடியலே.”

”புரியறாப்பல...”

”அவங்க இந்த முறை கிராமத்துக்குப் போகணும்னு ஆசைப்படறாங்க, அதான்.. நேச்சர் பத்தி நிறைய பார்க்கிறாங்க, கேள்விப் படறாங்க. வயல்காடு, மலையோரம், தென்னந்தோப்பு, சிற்றாறு, குளம் இப்படி ஒரு வாரம் தங்கி அனுபவிக்கணுமாம்.” 

”கூட்டிப்போக வேண்டியதுதானே உங்க ஊருக்கு?”

”அங்கேதான் வீடு இல்லையே... லாட்ஜும் கிடையாது. எங்கே போய்த் தங்குவேன்?”

”என்னப்பா இப்படி சொல்லிட்டே? அங்கே உனக்கு நிறைய சொந்தக்காரங்க இருக்கிறாங்களே? அவங்க வரசொல்லி அழைச்சிருப்பாங்களே வருஷா வருஷம்? இந்த வருஷம் ஜம்முன்னு போய் இறங்கிட வேண்டியதுதானே?”

”யாருமே அழைக்கலே. அதான் பிராப்ளம்!”

”என்னது?”

”ஆமா. இத்தனைக்கும் ஊரிலேர்ந்து எங்க வீட்டுக்கு வந்து தங்காதவங்க கிடையாது. ஆனா ஒருத்தராவது நம்மைக் 
கூப்பிடணுமே? ஒருத்தருக்கும் அந்தளவு அன்பு, பாசம் இல்லே. எல்லாம் வேஷம்.” 


”தெரியும். நான் ஒரிரு தடவை  உன் வீட்டில் சொந்தக்காரங்களைப் பார்த்திருக்கேன்.” நினைவு கூர்ந்தார் அந்த நாட்களை. 

”எல்லாம் வேஷம் போடற ஆட்கள், மாமா.”

யோசித்த இவரோ மறுத்தார் தலையைப் பலமாக ஆட்டி. ”உன் கிராமத்து சொந்தக்காரங்களை அப்படி சட்டுனு தவறா எடை போட்டுடாதே, எனக்குப் புரியுது ஏன்னு.”

”ஏன்?”

”அவங்க பயப்படறாங்க....நினைவு படுத்திப் பாரு. இங்கே உன் வீட்டில் வந்து தங்கியபோது நீங்க எப்படி வாழறீங்கன்னு 
அவங்க பிரமிப்போட கவனிக்கிறாங்க. உங்க வாழ்க்கை முறை அவங்களை திகில் படுத்தியிருக்கு. அதான் தயங்கறாங்க உங்களை அங்கே அழைக்க.’ 

”அப்படி என்ன தயக்கம்?”

”ஆமா. அது குக்கிராமம். ஓட்டு வீட்டிலே வாழறாங்க. நீங்க வந்தா அவங்களால உங்களை திருப்தியா கவனிச்சுக்க முடியுமான்னு பயம். உங்களால ஏ. சி. இல்லாம தூங்க முடியுமா, தூசியில புழங்க முடியுமா, புழுதி கிளம்பும் மண் சாலையில நடக்க முடியுமா, கலங்கின ஆற்று வெள்ளம் ஒத்துக் கொள்ளுமா, இண்டர்நெட் இல்லாம இருக்க முடியுமா, ஷாப்பிங் மால் ஏதுமில்லாம பொழுது போகுமா, பர்கர் பீட்சாவை மறக்கமுடியுமா... இப்படி பல சந்தேகங்கள். அதான் அந்தத் தயக்கம்.”

”அப்படீங்கறீங்க?”

”ஆமா,” என்றவர், ”நீ மட்டும் அங்கே வர விரும்பறோம்னு சொல்லு. அப்புறம் பாரேன் அவங்க துள்ளிக் குதிக்கிறதை!” 

”இதோ இன்னிக்கே போன் பண்றேன்,” என்று சென்றவன் அடுத்தவாரம் அங்கிருந்து உற்சாகமாக பேசினதைக் கேட்டு சந்தோஷமடைந்தார் தன் ஊகம் சரியானதில். 

('அமுதம்' டிச.2015 இதழில் வெளியானது)

Saturday, August 3, 2019

அந்த சந்தோஷமும்...(நிமிடக்கதை)

அன்புடன் ஒரு நிமிடம் - 131

வாசு வீட்டுக்குள் நுழைந்த போது மணி நாலு. பெயிண்ட் அடிக்க வந்தவர்கள் கையில் கேன்களை எடுத்துக் கொண்டு ஹாலுக்குள் நுழைந்திருந்தனர். அப்போதுதான் டீ குடித்துவிட்டு வந்திருந்த திருப்தி முகத்தில் ஒளியிட்டது.
ஜனனியிடம் சொல்லிவிட்டுப் போயிருந்தார், நாலு மணிக்கு டீக்கு பணம் கொடுத்துவிடு என்று. கொடுத்திருக்கிறாள் கரெக்டாக.  
”டீ சாப்பிட்டிட்டு வந்தவுடன் அவங்க கிட்ட ஒரு உற்சாகம் தொற்றிக்கிச்சு பார்த்தியா ஜனனி?” 
”ஆமா. ரொம்பவே. அதைப் பார்த்து நமக்கொரு சந்தோஷம் வருது,” என்றவள், ”இப்பதான் நான் போட்டுக் கொடுத்தேன்,”
”என்னது, நீயா?” சுர்ரென்று கோபம் மேலிட்டது. காட்டிக் கொள்ளவில்லை. இப்ப வேண்டாம். அவள் மூடைக் கெடுக்க வேண்டாம்.
ஆனால் அடுத்த  நிகழ்வில் அவராலேயே கட்டுப்படுத்த முடியவில்லை கோபத்தை.
கண்ணாடி பதித்திருந்த ட்ராயிங்க் டேபிளை காட்டி எப்படியிருக்கு என்றாள்.
பள பளவென்று அழகாக மின்னிற்று. ஒரு கம்பீரம் வந்து ஏறிக் கொண்டிருந்தது. 
”ஆஹா! நாம உபயோகிக்கிற டேபிளை நல்லா துடைச்ச பிறகு பார்த்தா எத்தனை சுகமா இருக்கு!"
”ஆமாங்க,” ஆமோதித்தாள். 
”செண்பகத்துக்கு ஏதாச்சும் தனியா காசு கொடு.” வேலை செய்யும் பெண் அழகாகத் துடைத்ததில்   அவருக்கு திருப்தி. 
”ஐயோ நான்தான் துடைச்சேன்.” 
”நீயா? உனக்கு ஏன் இந்த வேலையெல்லாம்? வயசாச்சேன்னு கொஞ்சம் கூட பொறுப்பில்லாம ... அதான் இதையெல்லாம் செய்யத்தான் அவங்க இருக்கிறாங்களே, அப்புறம் நாம ஏன் செய்யணும்? சொன்னா கேக்கிறதேயில்லை.” படபடவென்று பொரிந்து தள்ளிவிட்டார்.
”நான் ஒண்ணு சொல்லட்டுமா... எனக்கு கொஞ்சம் ஆசை அதிகம். அதனாலதான் நானே துடைச்சேன்.”
”என்னது?”
’இப்ப நீங்க சொன்னதுதான். இந்த டேபிளை நல்ல சுத்தமா துடைத்தபின் பார்க்கிறது சுகம் தானே?” 
”ஆமா.”
”எனக்கு துடைக்கிற சுகமும் வேணும்!”
”என்னது?”
”ஆமா. நாம உபயோகிக்கிற டேபிளை  விதம் விதமா அழகா கிளீன் பண்றதும் ஒரு சுகம் தான். எனக்கு அதும் வேண்டியிருக்கு.”
”ஓஹோ?”
”நேத்து அவங்களுக்கு டீ போட்டுக் கொடுத்ததும் அப்படித்தான். அவங்களுக்கு டீ கொடுக்கிறது ஒரு திருப்தின்னா அதை நானே என் கையால் தயாரிச்சுக் கொடுக்கிறதிலே இன்னொரு திருப்தி ஏற்படுது. அதும் எனக்கு வேணும். நான் டபிள் சந்தோஷம் அடையறதில ஏன் நீங்க வருத்தப் படறீங்க?”
அவளை அவர் பார்த்ததில் ஒரு பெருமை வந்து தொற்றிக் கொண்டது.
>><<
('அமுதம்'நவ. 2015 இதழில் வெளியானது)

Saturday, July 27, 2019

அதற்கேற்ப... (நிமிடக்கதை)

அன்புடன் ஒரு நிமிடம்...130

வழக்கமான சத்தம்தான். ஆனாலும் இன்றைக்கென்னவோ சற்று அதிகமாக கஷ்டப் படுத்திற்று வாசுவை. அவரிருந்த கவலை சூழ்நிலையில்.
எழுந்து கிச்சனுக்கு வந்தார். பேசினில் பாத்திரங்களை அலசிக் கொண்டிருந்தாள் ஜனனி. 
ஒரு நிமிடம் கவனித்தார். குழாயில் தண்ணீர் வேகமாகப் பாய்ந்து கொண்டிருந்தது. அதற்கேற்ப பாத்திரங்களை படபடவென்று வேகமாகக் கழுவிக் கொண்டிருந்தாள். 
பார்க்கப் பார்க்க அவருக்கு எரிச்சல் எகிறிற்று. இதென்ன இவள். குழாயின் வேகத்தை  குறைப்பதை விட்டுவிட்டு...  இப்படி மாய்ந்து மாய்ந்து போராடிக் கொண்டிருக்கிறாள்!
அதற்குள் அவள் வேலையை முடித்துவிட்டாள். திரும்பியவள் வாசுவைப் பார்த்ததும், “என்ன, ஏதோ பிரச்சினை என்று தலையை உடைச்சிட்டு அறையிலே இருந்தீங்க, இங்கே எப்படி...”
“நீ கிளப்பிய சத்தத்தில எழுந்து வந்தேன்...இப்படி ஸ்பீடாகவா தண்ணியை திறந்து விடறது?”
”அதிருக்கட்டும், என்ன பிரசினை?”
“வேறென்ன, இந்த வருஷம் கம்பெனி பர்ஃபாமன்ஸ் ரொம்ப மந்தம். பாதி வேலை கூட முடியலே. இத்தனைக்கும் நானே ரெண்டு நாள் உட்கார்ந்து என் கீழே இருக்கிற நாலு அஸிஸ்டண்ட் மேனேஜருக்கும் ஒவ்வொருத்தரும் தங்கள் வேலைக்கான ஷெட்யூலை எப்படி நாளுக்கு நாள், ஏன் , மணிக்கு மணி தயாரிச்சு செயல்படறதுன்னு கத்துக் கொடுத்திருக்கேன். அவங்களும் அப்படித்தான் செய்யறதா சொல்றாங்க. ஆனா காலாண்டு முடிவில் பார்த்தா ரிசல்ட் ரொம்பக் கம்மியாயிருக்கு. கேட்டால் ஷெட்யூல் போட்டுத்தான் செயல்படறோம்னு சொல்றாங்க. நானும் அவங்களிடம் எத்தனையோ முறை அழைத்து சொல்லிப் பார்த்தாச்சு. நோ யூஸ்.  எனக்கு டென்ஷன் வருமா வராதா? இத்தனைக்கும் அவங்க யாருமே வேலை பார்க்கத் தயங்காதவங்கதான்.”
ஜனனி சிரித்தாள். ”முக்கியமான விஷயத்தை நீங்க செய்யலியே?”
”என்ன அது?”
”வேலை பார்க்க அவங்க தயங்கலே. சரி. ஆனா அவங்க வேலை பார்க்கிற ஸ்பீட்? அது முக்கியம் இல்லையா? அந்த ஷெட்யூலை அவங்க பக்கத்தில உட்கார்ந்து நீங்களும் சேர்ந்து போடுங்க. அதன் வேகத்தை அதிகரியுங்க. அந்த வேகத்துக்கேற்ப அவங்க இயங்கியாகணும். இயங்குவாங்க. அப்ப தன்னால  ரிசல்ட் முன்னேறும்.  இப்ப நான் ஏன் இந்த குழாயை ஸ்பீடா தண்ணி வர்ற மாதிரி திறந்து வெச்சிருக்கேன்? அப்பதான் என் கை வேகமா இயங்கும். நான் சீக்கிரம் இந்த வேலையை முடிப்பேன். முடிச்சிட்டு அடுத்த விஷயத்துக்குப் போகணும் நான். அது மாதிரிதான். நீங்க வேலையை அசைன் பண்றப்ப கூடவே அந்த வேலைக்கான ஸ்பீடையும்  அசைன் பன்ணிட்டா எல்லாம் சரியாயிடும்.”
மனதில் எழுந்த இரண்டு கேள்விகளுக்கும் ஒரே நேரத்தில் ஒரே விடை கிடைத்த திருப்தி அவர் முகத்தில்.  
><><
('அமுதம்' நவ.2015 இதழில் வெளியானது)

Friday, July 19, 2019

அவள் - கவிதைகள்


539
நகர்கிறாய் நீ.
நாளை இன்னும் ஸ்பெஷலாகிறது 
எனக்கு.

540
ஒரு நொடியில் படம் பிடிக்கிறாய்
உள்ளத்தோடு என் உருவத்தை.
ஆயிரம் நொடியில் நான் வெறும்
உன் புருவத்தை.

541
மின்னலாகத் தெறிக்கிறாய்
கவிதையின் கடைசி வார்த்தையில்!

542
நினைக்காத தருணங்களிலும்,
எப்படி நினைக்க மறந்தேன் என
நினைக்கிறேன் உன்னை!

543
இன்னொரு பூமி
எங்கும் கிடையாது,
இன்னொரு நீயைப் போலவே.

544
என்ன அவசரம்?
முந்திக்கொண்டு சிரிக்கும் கண்கள்!

545
எல்லாருக்கும் உன் புன்னகை, 
புன்னகை.
எனக்கு மட்டும் தெரியும் அதிலொரு 
மென்நகை.

546
பாதம் பதித்தாய் வீட்டில்,
பதம் பதித்தேன் ஏட்டில்.

547
சின்னதா ஒரு மனம்..
என்னமா ஒரு குணம்!

548
வீசும் திசையறியா
விண் தென்றல் நீ!

><><

Tuesday, June 18, 2019

அவள்... (கவிதைகள்)


529
திரும்பிப் பார்த்தாய்,
'என்'னைக் காணோம்!

530
சொல்லவே மாட்டேன் உன்னிடம்:
'மாத்தி யோசி.'

531
அன்பின் நுணுக்கங்கள்
அவள்போல் ஆரறிவார்?

532
உன்னை வர்ணிக்கையில் 
சிலிர்த்தன சொற்கள்!

533
சொல்லவும் தெரியவில்லை
சொல்லாதிருக்கவும் முடியவில்லை
வார்த்தையில்
நில்லாத உன் அன்பை.

534
உன் முகம்
என் நூல்.

535
நின்று மீள்கிற
நாநோ செகண்டில் உன் பார்வை
கொன்று துடிக்கிறது மனசு.


536
மெல்லத் துடிக்கிற இமையும்
விழியசையும் லாவகமும்
உன் கண் ரேகை எனக்கு.

537
காலை மலர்களை ரசிக்க வந்தால்
அவை உன்னைத் தேடிக் கொண்டிருந்தன
தங்களை ஒப்பிட.

538
மணம் வைத்தறியும் மலர் போல
மனம் வைத்தறிந்தேன் உன்னை.

><><><

Wednesday, June 12, 2019

அந்தக் கோணத்தில்...(நிமிடக் கதை)


"அப்படியா?" என்றார் சாத்வீகன், "நம்ம ஷண்முகமா?"
"ஆமா பெரியப்பா. என்னாலேயே தாங்க முடியலே... அப்படீன்னா பிள்ளைகள் என்ன பாடு படும்னு நீங்களே ஊகியுங்க.... நீங்கதான் எப்படியாவது என் கணவர்ட்ட எடுத்து சொல்லி...” கெஞ்சாக் குறையாக மாலினி.  சொந்தக்காரப் பெண். பக்கத்து தெரு.
”சொல்லிச் சரிப்படுத்த முடியாது இதை...” என்றவர் யோசித்தார். ”சரி, நான் பார்க்கிறேன். ஒரு வழி இருக்கு.”
மறு நாள் மாலை வாக் புறப்பட்டபோது  ஷண்முகத்தையும் அழைத்தார். பூங்காவில்  வழக்கமான பாதை. இவனிடம் பேசிக்கொண்டே நடை இரண்டு சுற்று முடிந்தபோது மணி ஆறு. அவர் எதிர்பார்த்த நண்பர் சொர்ணகுமார் வருவது தெரிந்தது. ”தெரியுமா  அவரை? புரஃபசர் சொர்ணகுமார். பெரிய ஸ்காலர். ரொம்பப் பிரபலம்.”
நெருங்கியதும் அவரிடம் இவனை அறிமுகம் செய்து வைத்தார். ”...ரொம்ப வேண்டிய பையன்.” கைகுலுக்கிக் கொண்டார்கள்.
”ஆச்சு, நாலு ரவுண்ட்! போதும் எனக்கு..  கொஞ்சம் உட்கார்றேன். நீ சாரோடு இன்னும் கொஞ்சம் நடந்துட்டு வரலாமே?”  என்றார் சாத்வீகன்.
”எஸ், வாங்க. Young as you are, I bet you can definitely take a few rounds more.” என்று சொர்ணகுமாரும் அழைக்க இருவரும் தொடர்ந்தார்கள். முடிந்ததும் அவர் விடை பெற்றுக் கொண்டு போய்விட்டார்.
அடுத்த நிமிடமே ஷண்முகம் இவரை சாடினான். ”நல்ல ஆள் கூட அனுப்பினீங்க என்னை... சே!”
”ஏன், என்ன ஆச்சு?”
”இப்படியா ஒரு மனுஷன் போர் அடிப்பார்?”
”என்ன பண்ணினார்?”
”ஒரே அட்வைஸ் மழை. இந்த முப்பத்தஞ்சு நிமிஷமும் அவர்தான் பேசினார்.”
”அப்படியா?” தெரியாதது போல...
”ஆமா. எங்கே வேலைன்னு கேட்டார் சொன்னேன் உடனே ஆபீஸில் எப்படி முன்னேறி எம் டி ஆகிறதுன்னு பொழிஞ்சு தள்ளிட்டார்.”
”ஓஹோ?’
”அப்புறம் எங்கே ஜாகைன்னார். சொன்னேன். அதுவா, கொசுத்தொல்லை இருக்குமேன்னு கேட்டு அதை எப்படி சமாளிக்கிறதுன்னு அடுத்த பத்து நிமிஷம் நான்ஸ்டாப்பா... அப்புறம் சாப்பாடைப் பத்தி ஏதோ கேட்டார். தொடர்ந்து ஹெல்தியா எப்படி சாப்பிடறதுன்னு பக்கம் பக்கமா வசனம்.”
”நல்ல விஷயங்கள் தானே சொல்லியிருக்கார்? நிறைய படிக்கிறவராச்சே? நிறைய பாயிண்ட் வெச்சிருப்பாரே...?
நல்லதுதானே?”
”ரொம்ப நல்லதுதான்.  ஆனா நான் பட்ட பாடு எனக்கில்ல தெரியும்?”
”ஓ அதுவா? அதுதான்  இவங்களை மாதிரி ஆட்களுக்கெல்லாம் பிரசினை. நாம இப்படி அட்வைஸாப் பொழியறது கேட்கிறவங்களுக்கு எவ்வளவு போரடிக்கும், சமயத்தில எத்தனை கஷ்டமா இருக்கும்னு கொஞ்சமும் யோசிக்கிறதில்லை. உன் இடத்தில் தன்னை வெச்சு ஒரு நிமிஷம் பார்த்திருந்தால்!  அப்படி செய்திருக்க மாட்டார் இல்லையா?”
ஒரு நிமிடம் யோசித்தவன், ”கரெக்ட். அந்தக் கோணத்தில் அவர் யோசித்திருக்க மாட்டார்னுதான் நினைக்கிறேன்.”
”அப்படி யோசித்தால் அவருக்கு இன்னொண்ணும் புரியும். இப்படி எப்பவும் எதுக்கும் அறிவுரைன்னு அடுக்கறதால முக்கியமான மிக அவசியமான அறிவுரை கூட  தன் எஃபெக்டை இழந்துரும்னும்.”
”அட, அதுகூட சரிதானே?” என்றபடி கிளம்பினான்.

அடுத்த மாதம் மாலினியை சந்தித்தபோது, எப்ப பார்த்தாலும் தன்னிடமும் பிள்ளைகளிடமும் எதுக்கெடுத்தாலும் அட்வைஸ், அட்வைஸ் என்று அலட்டிக்கொண்டிருந்த ஷண்முகம் இப்போதெல்லாம் தேவையான நேரத்தில் முக்கியமான அறிவுரையை மட்டுமே தருவதாக நன்றி தெரிவித்தாள்.
><><
அன்புடன் ஒரு நிமிடம் - 129 
('அமுதம்' அக். 2015 இதழில் வெளியானது)

Tuesday, June 4, 2019

உற்சாகத்துக்கு ஒரு பாடல்!


'பாலூற்றி உழவு செய்வார்...' என்று ஆரம்பிக்கிறது அந்தப் பாடல்.
தென்பாண்டி சீமையின் வளத்தை எத்தனை அழகாக...

அடுத்த வரிதான் அற்புதம்!
'பனிபோல் விதை நடுவார்..' என்னவொரு கற்பனை! இதைவிட சிறப்பா சொல்லமுடியுமா?


முதல் தடவை கேட்கிறப்ப ஒரு உற்சாகம் பிறக்கும். ரெண்டாம் முறை ஆஹான்னு.. மூணாவது எழுந்து ஆடத் தோணும்.. அப்படி ஒரு இசை!


படம்: பாகப் பிரிவினை
பாடல்: "தேரோடும் வைகை.. சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும்.. ஒயிலாட்டம்!"


முன்னே சிவாஜியும் சரோஜா தேவியும்..
பின்னே பீம்சிங்கும்விஸ்வநாதன் ராமமூர்த்தியும் மருதகாசியும்!

பீம்சிங் படம் என்றால் தவறாமல் அதில் ஒரு கோஷ்டி நடனம் இடம் பெறும். (தீர்க்கதரிசி. இப்ப அது இடம் பெறாத படமே இல்லை.)

எந்த ஷாட்டை எடுத்துப் பார்த்தாலும் சிவாஜியின் நடன அசைவுகள் படு கச்சிதமாக பாத்திரத்தின்  இயலாமையுடன் பொருந்திப்போகும்.

தேரோடும் ... எனும்போது பின்னால் சீறிப்பாயும் அந்த இசை!


சரணத்தில் வெள்ளந்தியாக எழுப்பும் வினாவும் சுள்ளென்று வந்து விழும் விடையும்…
'சித்திரை மாதம் முத்துக்கள் வித்து
திரும்பி இங்கே வருவதென்றே
சென்றவர் இன்னமும் வந்தில சேதி
தெரிந்து சொல்லடி ராமாயம்மா..'
என்று அவன் கேட்க,
'வித்த இடத்தில பத்தினிப் பொண்ணும்
விரித்த வலையில் விழுந்து விட்டார்
உன்னையும் என்னையும் மறந்து விட்டார்
உண்மையைச் சொல்லடி ராமாயம்மா...'
என்று அவள் பதில் சொல்ல..


இந்தப் பாடலின் பாணியில் வந்த ‘Jis Desh Mein Ganga Behti Hai’ படப் பாடலில் ('Hum bhi hain Tum bhi ho..) சங்கர் ஜெய்கிஷன், அவர்கள் ஸ்டைலில் பிச்சி உதறியிருப்பாங்க.

><><