Showing posts with label அன்புடன் ஒரு நிமிடம். Show all posts
Showing posts with label அன்புடன் ஒரு நிமிடம். Show all posts

Saturday, April 18, 2020

அந்த வித்தியாசம்...(நிமிடக் கதை)

சாயங்காலம்தான் போக முடிந்தது அந்தக் கிரகப்பிரவேச நிகழ்ச்சிக்கு.  ரொம்பகாலமாக அவர் குடும்பத்துக்கு பழக்கமானவர் கொத்தனார் முருகேசன்.  புது வீடு கட்டியிருந்தார்.
காலையிலேயே எல்லாரும் வந்துவிட்டுப் போயிருந்தனர். டிபனை முடித்துவிட்டு அவருடன் அமர்ந்து பேசலானார் சாத்வீகன். முருகேசனின் மனைவி பரிசுப் பொருட்களை எடுத்து ஒவ்வொன்றாகப் பிரித்தவள், ”அட, சூப்பராயிருக்கே...” அழகான மயில் சிற்பம். 
”ஆஹா, யாரோட கிஃப்ட் அது?” 
”உங்க மருமகன் சந்திரன்தான்... ஐநூறு ரூபாயாவது இருக்கும்.”
”பரவாயில்லையே? ஆமா, மாணிக்கமும் வந்தான் இல்லையா? அவன் என்ன..” 
”ஏதோ கவர் நீட்டின மாதிரி இருந்தது...”  அதை எடுத்தாள். நூறு ரூபாய்த் தாள் ஒன்று.
”பார்த்தீங்களா சார்,” என்றார் முருகேசன் சாத்வீகனிடம். ”ரெண்டு பேருமே என் மருமகன்கள்தான்.  சந்திரன் வேலை பார்க்கிறது ஒரு கம்பெனியில் கிளார்க்காக. மாணிக்கம் சூபர்வைசர் வேலை. ரெண்டு பேருக்குமே மாசம் இருபதாயிரம் வருமானம் வருது. ஆனா பாருங்க, அவன் ஐநூறு ரூபா மதிப்புக்கு கிஃப்ட் கொண்டுவந்திருக்கான். இவன் என்னடான்னா வெறும் நூறு. அந்த மனசு வித்தியாசத்தைப் பாருங்க.” தொடர்ந்து மாணிக்கத்தை விமரிசித்தார். “ரெண்டு பேரின் அன்பின் அளவை, அக்கறையின் அளவை இது காட்டுது.” 
”வெய்ட், வெய்ட்,” என்றார் இவர். ”பரிசுப் பொருளை வைத்து அன்பையோ அக்கறையையோ மதிப்பிடுவது சரியில்லை. தவிர, நேரத்தின் மதிப்பும் ஆளுக்கு ஆள் வேறுபடுவது. அதைவைத்தும் ஒப்பிடலாகாது. அது ஒருபுறமிருக்க, நீங்க மதிப்பிட்ட கணக்கும் சரியில்லை. முக்கியமான ஒரு விஷயத்தை மறந்திட்டீங்களே?”
”என்ன சொல்றீங்க?”
”கம்பெனியில் வேலை பார்க்கிற சந்திரனுக்கு மாத சம்பளம். இன்னிக்கு ஒரு நாள் லீவு எடுத்தாலும் அவன் சம்பளம் குறையாது. ஆனால் மாணிக்கம் தின சம்பளம் பெறுபவனாச்சே.. இன்னிக்கு அவனுக்கு எழுநூறு ரூபாய் இழப்பு.  ஆக, அவன் இந்த ஃபங்க்‌ஷனுக்காக செலவிட்டதுதானே அதிகம் என்றாகிறது?” 
அவசரப்பட்டு பேசிவிட்டதை அவர் உணர்ந்தார்.  
><><><
('அமுதம்' மே, 2016 இதழில் வெளியானது. 'அன்புடன் ஒரு நிமிடம்.')


Thursday, August 29, 2019

அங்கும் இங்கும்.. (நிமிடக்கதை)

அன்புடன் ஒரு நிமிடம் - 134

"ஒரு பக்கம் மட்டுமே கேட்டு ஒரு முடிவுக்கு வர்றது, அவங்க எத்தனை வேண்டியவங்களா இருக்கட்டும், ரிஸ்க்தான் இல்லையா?" என்றார் வாசு.
"என்ன நடந்திச்சு? யார் அது?" என்றாள் ஜனனி.
"ஒருத்தரில்லை, ரெண்டுபேர்.  சொல்றேன். முதல்ல நம்ம சேகர். கொஞ்ச நாளாவே சொல்லிட்டிருந்தான்... அவன் வீட்டு முன் போர்ஷனை வாடகைக்கு விட்டால் கொஞ்சம் சேமிப்பாகும்னு எவ்வளவோ முயற்சி பண்ணியும் சரியான ஆட்கள் கிடைக்கலேன்னு... காரணம் வர்ற எந்தக் குடும்பத்தையுமே மைதிலிக்கு பிடிக்கலேன்னு... நானும் வேலை மெனக்கெட்டு அவனுக்கு பல யோசனைகளை சொல்லியிருக்கேன். நேத்து மைதிலியோடு அதைப்பத்திப் பேச சந்தர்ப்பம் கிடைச்சப்பதான் தெரிஞ்சது நடந்ததே வேறேன்னு.’
”என்ன சொன்னாள்?”
”அவளுக்கு  ஒண்ணும் பிடிக்காம போகலியாம். துணைக்கு ஒரு குடும்பம் இருந்தால் நல்லதுன்னு நினைக்கிறாள் அவள். ஆனா சேகர்தான் அதை கௌரவக் குறைச்சல்னு நினைச்சு அதையும் இதையும் சொல்லி தள்ளிப் போடறானாம். தயங்கறானாம். என்னத்தை சொல்ல?”
”அடுத்ததை!” என்றாள்.
அவளை முறைத்துவிட்டு தொடர்ந்தார்.
”அடுத்தது நம்ம கண்ணன்.. ஊரிலிருக்கிற அவங்க அப்பா அம்மாவை உன்னோட  இங்கேயே வெச்சுக்கலாமே, உதவியா இருக்குமேன்னு கேக்கிறப்பல்லாம், இங்கே எங்களுக்கு எந்த உதவியும் தேவையில்லை, வந்தால் அவங்களையும் சேர்த்து கவனிச்சுக்க நம்மால முடியாது, அவங்க அங்கேயே இருந்துக்கறதுதான் சரிப்பட்டு வரும்னு எப்பவும் சொல்வான். நானும் அதை நம்பினேன். நேத்து அவங்கப்பாவை ஊரிலே பார்த்தப்பதான் தெரிஞ்சது விஷயம். இவன் கூப்பிட்டுட்டுதான் இருக்கானாம் வற்புறுத்தி. அவங்கதான் டவுன் நமக்கு ஒத்துவராதுன்னு வரலையாம். வீணா ஜம்பத்துக்கு என்கிட்ட அப்படி சொல்லியிருக்கான்... அதான் சொன்னேன்.  எத்தனை பழகினவங்களாயிருக்கட்டும். அவங்க சொல்றதை அப்படியே நம்பிவிடக் கூடாது... ஒரு விஷயத்தை சொல்றது அவங்க விருப்பப்படியோ அல்லது சுய நல நோக்கத்திலோதான். இந்த பாயிண்டைத் தெரிஞ்சுக்க  எனக்கு இத்தனை நாளாயிருக்கு.”
”அதாவது, தப்பான பாயிண்டை!”
”என்னசொல்றே நீ?”
”பின்னே என்ன சொல்றது... சேகர் சொன்னது பொய்யாக இருக்கலாம். தன் ஈகோவுக்காகவோ இமேஜுக்காகவோ அப்படி ஒரு சப்பைக்கட்டு கட்டியிருக்கலாம். அதே சமயம் கண்ணன் மேட்டரை எடுத்திக்கிட்டா அவங்கப்பா சொன்ன மாதிரி தான் நடந்திருக்கணும்னு எப்படி தீர்மானிக்கப் போச்சு? கண்ணன் சொன்னது உண்மைதான். மகனை விட்டுக் கொடுக்காமல் அவங்க பேசியிருக்காங்க. என்ன இருந்தாலும் பெத்தவங்க இல்லையா... மூணாம் மனுஷனான உங்ககிட்டே எப்படி மகனை விட்டுக் கொடுப்பாங்க? மைதிலிக்கு நீங்க சித்தப்பா. அதனால அவள் மனசிலிருக்கிறதை மறைக்காம சொல்லிட்டா. இல்லேன்னா அவளும் தன் கணவனை விட்டுக் கொடுத்துப் பேசியிருக்க மாட்டாங்கன்னுதான் நினைக்கிறேன்.”
”நீ என்ன சொல்ல வர்றே, நான் இப்ப கண்டுபிடிச்சது..”
”இப்படி எதையும் கண்டு பிடிக்காதீங்கன்னுதான்..”
><><
('அமுதம்' டிச.2015 இதழில் வெளியானது)

Thursday, August 22, 2019

அந்த 20 நிமிடம்... (நிமிடக்கதை)

அன்புடன் ஒரு நிமிடம் -133

சென்னைக்கு வந்திருந்தனர் வினோதும் தியாகுவும். வரிசையாக வேலைகளை முடித்துவிட்டு மாலையில் ரூமுக்கு வந்தபோது மணி ஐந்து முப்பது. 

உடனே குளியலறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டான் வினோத்.

”சீக்கிரம், சீக்கிரம்! ஐந்து நிமிஷம்தான் என்ன?” என்றான் தியாகு.

”என்னது, நான் குளிச்சிட்டு வர சரியா பதினஞ்சு நிமிஷம் ஆகும்! தெரிஞ்சதா?”

”டேய், அதெல்லாம் எப்படி முடியும்? இப்பவே கிளம்பினாத்தான் ஒன்பது மணிக்குள் ஷாப்பிங்கை முடிச்சிட்டு சாப்பிட்டு படுத்து அதிகாலை நாலு மணிக்கு  ட்ரையினைப் பிடிக்க முடியும். மறந்துட்டியா?”

”நோ வே,” என்றபடி பாத்ரூமுக்குள் நுழைந்தவன் பதினைந்து என்றால் சரியாக பதினைந்தாவது நிமிடம்தான் குளித்துமுடித்து வெளியே வந்தான்.

”என்னடா இப்படி பண்ணிட்டே?” என்றான் ஆட்டோவில் ஏறியதும் தியாகு

”காரணம் இருக்கு. நீயே யோசிச்சுப்பார். காலையிலேர்ந்து அலையறோம். ஆட்டோ பஸ்னு வேர்க்க விறுவிறுக்க...கம்பெனி மீட்டிங் அது இதுன்னு  தொடர்ந்தாப்பல பல வேலைகள்.  உடலுக்கு எத்தனை அலுப்பு! களைப்பு! இங்கே மட்டுமில்லே, ஊரிலேர்ந்தாலும் தினமும் இப்படி அடுத்தடுத்து வேலைகள் கொடுத்துட்டே இருப்பதில் உடம்பு எத்தனை சூடாகும்? களைப்பாகும்? அந்த அலுப்பையும் களைப்பையும் சூட்டையும் தணிக்க பதினஞ்சு நிமிஷம் ஒதுக்கி குளிர்ந்த நீரில் குளிப்பது வைடல் ஃபார் அவர் ஹெல்த்! எதை செய்யாவிட்டாலும் இதை மட்டும் நான் ஒரு நாளும் செய்யத் தவறினதே இல்லை. தவறவே மாட்டேன்.”

”அட, நான் இதை இப்படி நினைச்சுப்பார்த்ததில்லை. இனி நானும் இதை கடைப்பிடிக்கணுமே!”

ஷாப்பிங் முடிந்து வந்ததும் தியாகு ஐபாட் எடுத்தான், காதில் இயர் போனைச் செருகிக் கொண்டான். ”இருபது நிமிஷம் டிஸ்டர்ப் பண்னாதே,” என்றபடி சாய்ந்து கொண்டான் அந்த ஒடுங்கிய பால்கனி  செயரில், ”எனக்கு மியூசிக் கேட்கணும்.”

பிற்பாடு சாப்பிட செல்லும்போது சொன்னான், ”ஒரு நாளில் நம் உடம்பு எத்தனை சூடாகுது, களைப்பாகுதுன்னு சொன்னாயல்லவா? அதே போல தினசரி நாம் கொள்ளும் கோபதாப உணர்வுகளாலும் டென்ஷன்களாலும் நம்ம மனசு எத்தனை சூடாகுது, களைப்பாகுதுன்னு எண்ணிப் பார்த்தேன். தினமும் அந்தக் களைப்பைப் போக்கி அதை கூல் படுத்திட தவறக்கூடாது இல்லையா ? அதற்குத்தான் இந்தக் கட்டாய இருபது நிமிஷம் ஒதுக்கினேன். இந்த இருபது நிமிஷம் நல்ல மியூசிக்கைக் கேட்பது அல்லது சிறந்த ஓர் ஆன்மிக புத்தகத்தைப் படிப்பது என்று வைத்துக்கொண்டால் மனசுக்கு புத்துணர்ச்சி உண்டாகிவிடும். அதான்.”

”நானும் இதைக் கடை பிடிக்கணுமே!” என்றான் வினோத்.

><><

Monday, August 12, 2019

அவர்கள்... (நிமிடக்கதை)

அன்புடன் ஒரு நிமிடம் - 132

கடைத்தெருவில் சம்பத்தை சந்தித்த சாத்வீகன் புருவங்கள் உயர்ந்தன.

”சௌக்கியமா அங்கிள்?” என்றபடியே வந்தவனிடம், ”ஆ, சம்பத்! உன்னை எதிர்பார்க்கலை நான். இப்ப பசங்களுக்கு லீவாச்சே? எங்கானும் அழைச்சிட்டுப் போயிருப்பேன்னு...” என்றார்

”அதை ஏன் கேக்கறீங்க?” என்று அவரை நிழலுக்கு அழைத்தவன், ”அழைச்சிட்டுத்தான் போகணும். முடியலே.”

”ஏன் வரமாட்டேங்கறாங்களா?”

”அவங்க துடிக்கிறாங்க. என்னாலதான் அழைச்சிட்டுப் போக முடியலே.”

”புரியறாப்பல...”

”அவங்க இந்த முறை கிராமத்துக்குப் போகணும்னு ஆசைப்படறாங்க, அதான்.. நேச்சர் பத்தி நிறைய பார்க்கிறாங்க, கேள்விப் படறாங்க. வயல்காடு, மலையோரம், தென்னந்தோப்பு, சிற்றாறு, குளம் இப்படி ஒரு வாரம் தங்கி அனுபவிக்கணுமாம்.” 

”கூட்டிப்போக வேண்டியதுதானே உங்க ஊருக்கு?”

”அங்கேதான் வீடு இல்லையே... லாட்ஜும் கிடையாது. எங்கே போய்த் தங்குவேன்?”

”என்னப்பா இப்படி சொல்லிட்டே? அங்கே உனக்கு நிறைய சொந்தக்காரங்க இருக்கிறாங்களே? அவங்க வரசொல்லி அழைச்சிருப்பாங்களே வருஷா வருஷம்? இந்த வருஷம் ஜம்முன்னு போய் இறங்கிட வேண்டியதுதானே?”

”யாருமே அழைக்கலே. அதான் பிராப்ளம்!”

”என்னது?”

”ஆமா. இத்தனைக்கும் ஊரிலேர்ந்து எங்க வீட்டுக்கு வந்து தங்காதவங்க கிடையாது. ஆனா ஒருத்தராவது நம்மைக் 
கூப்பிடணுமே? ஒருத்தருக்கும் அந்தளவு அன்பு, பாசம் இல்லே. எல்லாம் வேஷம்.” 


”தெரியும். நான் ஒரிரு தடவை  உன் வீட்டில் சொந்தக்காரங்களைப் பார்த்திருக்கேன்.” நினைவு கூர்ந்தார் அந்த நாட்களை. 

”எல்லாம் வேஷம் போடற ஆட்கள், மாமா.”

யோசித்த இவரோ மறுத்தார் தலையைப் பலமாக ஆட்டி. ”உன் கிராமத்து சொந்தக்காரங்களை அப்படி சட்டுனு தவறா எடை போட்டுடாதே, எனக்குப் புரியுது ஏன்னு.”

”ஏன்?”

”அவங்க பயப்படறாங்க....நினைவு படுத்திப் பாரு. இங்கே உன் வீட்டில் வந்து தங்கியபோது நீங்க எப்படி வாழறீங்கன்னு 
அவங்க பிரமிப்போட கவனிக்கிறாங்க. உங்க வாழ்க்கை முறை அவங்களை திகில் படுத்தியிருக்கு. அதான் தயங்கறாங்க உங்களை அங்கே அழைக்க.’ 

”அப்படி என்ன தயக்கம்?”

”ஆமா. அது குக்கிராமம். ஓட்டு வீட்டிலே வாழறாங்க. நீங்க வந்தா அவங்களால உங்களை திருப்தியா கவனிச்சுக்க முடியுமான்னு பயம். உங்களால ஏ. சி. இல்லாம தூங்க முடியுமா, தூசியில புழங்க முடியுமா, புழுதி கிளம்பும் மண் சாலையில நடக்க முடியுமா, கலங்கின ஆற்று வெள்ளம் ஒத்துக் கொள்ளுமா, இண்டர்நெட் இல்லாம இருக்க முடியுமா, ஷாப்பிங் மால் ஏதுமில்லாம பொழுது போகுமா, பர்கர் பீட்சாவை மறக்கமுடியுமா... இப்படி பல சந்தேகங்கள். அதான் அந்தத் தயக்கம்.”

”அப்படீங்கறீங்க?”

”ஆமா,” என்றவர், ”நீ மட்டும் அங்கே வர விரும்பறோம்னு சொல்லு. அப்புறம் பாரேன் அவங்க துள்ளிக் குதிக்கிறதை!” 

”இதோ இன்னிக்கே போன் பண்றேன்,” என்று சென்றவன் அடுத்தவாரம் அங்கிருந்து உற்சாகமாக பேசினதைக் கேட்டு சந்தோஷமடைந்தார் தன் ஊகம் சரியானதில். 

('அமுதம்' டிச.2015 இதழில் வெளியானது)

Saturday, August 3, 2019

அந்த சந்தோஷமும்...(நிமிடக்கதை)

அன்புடன் ஒரு நிமிடம் - 131

வாசு வீட்டுக்குள் நுழைந்த போது மணி நாலு. பெயிண்ட் அடிக்க வந்தவர்கள் கையில் கேன்களை எடுத்துக் கொண்டு ஹாலுக்குள் நுழைந்திருந்தனர். அப்போதுதான் டீ குடித்துவிட்டு வந்திருந்த திருப்தி முகத்தில் ஒளியிட்டது.
ஜனனியிடம் சொல்லிவிட்டுப் போயிருந்தார், நாலு மணிக்கு டீக்கு பணம் கொடுத்துவிடு என்று. கொடுத்திருக்கிறாள் கரெக்டாக.  
”டீ சாப்பிட்டிட்டு வந்தவுடன் அவங்க கிட்ட ஒரு உற்சாகம் தொற்றிக்கிச்சு பார்த்தியா ஜனனி?” 
”ஆமா. ரொம்பவே. அதைப் பார்த்து நமக்கொரு சந்தோஷம் வருது,” என்றவள், ”இப்பதான் நான் போட்டுக் கொடுத்தேன்,”
”என்னது, நீயா?” சுர்ரென்று கோபம் மேலிட்டது. காட்டிக் கொள்ளவில்லை. இப்ப வேண்டாம். அவள் மூடைக் கெடுக்க வேண்டாம்.
ஆனால் அடுத்த  நிகழ்வில் அவராலேயே கட்டுப்படுத்த முடியவில்லை கோபத்தை.
கண்ணாடி பதித்திருந்த ட்ராயிங்க் டேபிளை காட்டி எப்படியிருக்கு என்றாள்.
பள பளவென்று அழகாக மின்னிற்று. ஒரு கம்பீரம் வந்து ஏறிக் கொண்டிருந்தது. 
”ஆஹா! நாம உபயோகிக்கிற டேபிளை நல்லா துடைச்ச பிறகு பார்த்தா எத்தனை சுகமா இருக்கு!"
”ஆமாங்க,” ஆமோதித்தாள். 
”செண்பகத்துக்கு ஏதாச்சும் தனியா காசு கொடு.” வேலை செய்யும் பெண் அழகாகத் துடைத்ததில்   அவருக்கு திருப்தி. 
”ஐயோ நான்தான் துடைச்சேன்.” 
”நீயா? உனக்கு ஏன் இந்த வேலையெல்லாம்? வயசாச்சேன்னு கொஞ்சம் கூட பொறுப்பில்லாம ... அதான் இதையெல்லாம் செய்யத்தான் அவங்க இருக்கிறாங்களே, அப்புறம் நாம ஏன் செய்யணும்? சொன்னா கேக்கிறதேயில்லை.” படபடவென்று பொரிந்து தள்ளிவிட்டார்.
”நான் ஒண்ணு சொல்லட்டுமா... எனக்கு கொஞ்சம் ஆசை அதிகம். அதனாலதான் நானே துடைச்சேன்.”
”என்னது?”
’இப்ப நீங்க சொன்னதுதான். இந்த டேபிளை நல்ல சுத்தமா துடைத்தபின் பார்க்கிறது சுகம் தானே?” 
”ஆமா.”
”எனக்கு துடைக்கிற சுகமும் வேணும்!”
”என்னது?”
”ஆமா. நாம உபயோகிக்கிற டேபிளை  விதம் விதமா அழகா கிளீன் பண்றதும் ஒரு சுகம் தான். எனக்கு அதும் வேண்டியிருக்கு.”
”ஓஹோ?”
”நேத்து அவங்களுக்கு டீ போட்டுக் கொடுத்ததும் அப்படித்தான். அவங்களுக்கு டீ கொடுக்கிறது ஒரு திருப்தின்னா அதை நானே என் கையால் தயாரிச்சுக் கொடுக்கிறதிலே இன்னொரு திருப்தி ஏற்படுது. அதும் எனக்கு வேணும். நான் டபிள் சந்தோஷம் அடையறதில ஏன் நீங்க வருத்தப் படறீங்க?”
அவளை அவர் பார்த்ததில் ஒரு பெருமை வந்து தொற்றிக் கொண்டது.
>><<
('அமுதம்'நவ. 2015 இதழில் வெளியானது)

Saturday, July 27, 2019

அதற்கேற்ப... (நிமிடக்கதை)

அன்புடன் ஒரு நிமிடம்...130

வழக்கமான சத்தம்தான். ஆனாலும் இன்றைக்கென்னவோ சற்று அதிகமாக கஷ்டப் படுத்திற்று வாசுவை. அவரிருந்த கவலை சூழ்நிலையில்.
எழுந்து கிச்சனுக்கு வந்தார். பேசினில் பாத்திரங்களை அலசிக் கொண்டிருந்தாள் ஜனனி. 
ஒரு நிமிடம் கவனித்தார். குழாயில் தண்ணீர் வேகமாகப் பாய்ந்து கொண்டிருந்தது. அதற்கேற்ப பாத்திரங்களை படபடவென்று வேகமாகக் கழுவிக் கொண்டிருந்தாள். 
பார்க்கப் பார்க்க அவருக்கு எரிச்சல் எகிறிற்று. இதென்ன இவள். குழாயின் வேகத்தை  குறைப்பதை விட்டுவிட்டு...  இப்படி மாய்ந்து மாய்ந்து போராடிக் கொண்டிருக்கிறாள்!
அதற்குள் அவள் வேலையை முடித்துவிட்டாள். திரும்பியவள் வாசுவைப் பார்த்ததும், “என்ன, ஏதோ பிரச்சினை என்று தலையை உடைச்சிட்டு அறையிலே இருந்தீங்க, இங்கே எப்படி...”
“நீ கிளப்பிய சத்தத்தில எழுந்து வந்தேன்...இப்படி ஸ்பீடாகவா தண்ணியை திறந்து விடறது?”
”அதிருக்கட்டும், என்ன பிரசினை?”
“வேறென்ன, இந்த வருஷம் கம்பெனி பர்ஃபாமன்ஸ் ரொம்ப மந்தம். பாதி வேலை கூட முடியலே. இத்தனைக்கும் நானே ரெண்டு நாள் உட்கார்ந்து என் கீழே இருக்கிற நாலு அஸிஸ்டண்ட் மேனேஜருக்கும் ஒவ்வொருத்தரும் தங்கள் வேலைக்கான ஷெட்யூலை எப்படி நாளுக்கு நாள், ஏன் , மணிக்கு மணி தயாரிச்சு செயல்படறதுன்னு கத்துக் கொடுத்திருக்கேன். அவங்களும் அப்படித்தான் செய்யறதா சொல்றாங்க. ஆனா காலாண்டு முடிவில் பார்த்தா ரிசல்ட் ரொம்பக் கம்மியாயிருக்கு. கேட்டால் ஷெட்யூல் போட்டுத்தான் செயல்படறோம்னு சொல்றாங்க. நானும் அவங்களிடம் எத்தனையோ முறை அழைத்து சொல்லிப் பார்த்தாச்சு. நோ யூஸ்.  எனக்கு டென்ஷன் வருமா வராதா? இத்தனைக்கும் அவங்க யாருமே வேலை பார்க்கத் தயங்காதவங்கதான்.”
ஜனனி சிரித்தாள். ”முக்கியமான விஷயத்தை நீங்க செய்யலியே?”
”என்ன அது?”
”வேலை பார்க்க அவங்க தயங்கலே. சரி. ஆனா அவங்க வேலை பார்க்கிற ஸ்பீட்? அது முக்கியம் இல்லையா? அந்த ஷெட்யூலை அவங்க பக்கத்தில உட்கார்ந்து நீங்களும் சேர்ந்து போடுங்க. அதன் வேகத்தை அதிகரியுங்க. அந்த வேகத்துக்கேற்ப அவங்க இயங்கியாகணும். இயங்குவாங்க. அப்ப தன்னால  ரிசல்ட் முன்னேறும்.  இப்ப நான் ஏன் இந்த குழாயை ஸ்பீடா தண்ணி வர்ற மாதிரி திறந்து வெச்சிருக்கேன்? அப்பதான் என் கை வேகமா இயங்கும். நான் சீக்கிரம் இந்த வேலையை முடிப்பேன். முடிச்சிட்டு அடுத்த விஷயத்துக்குப் போகணும் நான். அது மாதிரிதான். நீங்க வேலையை அசைன் பண்றப்ப கூடவே அந்த வேலைக்கான ஸ்பீடையும்  அசைன் பன்ணிட்டா எல்லாம் சரியாயிடும்.”
மனதில் எழுந்த இரண்டு கேள்விகளுக்கும் ஒரே நேரத்தில் ஒரே விடை கிடைத்த திருப்தி அவர் முகத்தில்.  
><><
('அமுதம்' நவ.2015 இதழில் வெளியானது)

Wednesday, June 12, 2019

அந்தக் கோணத்தில்...(நிமிடக் கதை)


"அப்படியா?" என்றார் சாத்வீகன், "நம்ம ஷண்முகமா?"
"ஆமா பெரியப்பா. என்னாலேயே தாங்க முடியலே... அப்படீன்னா பிள்ளைகள் என்ன பாடு படும்னு நீங்களே ஊகியுங்க.... நீங்கதான் எப்படியாவது என் கணவர்ட்ட எடுத்து சொல்லி...” கெஞ்சாக் குறையாக மாலினி.  சொந்தக்காரப் பெண். பக்கத்து தெரு.
”சொல்லிச் சரிப்படுத்த முடியாது இதை...” என்றவர் யோசித்தார். ”சரி, நான் பார்க்கிறேன். ஒரு வழி இருக்கு.”
மறு நாள் மாலை வாக் புறப்பட்டபோது  ஷண்முகத்தையும் அழைத்தார். பூங்காவில்  வழக்கமான பாதை. இவனிடம் பேசிக்கொண்டே நடை இரண்டு சுற்று முடிந்தபோது மணி ஆறு. அவர் எதிர்பார்த்த நண்பர் சொர்ணகுமார் வருவது தெரிந்தது. ”தெரியுமா  அவரை? புரஃபசர் சொர்ணகுமார். பெரிய ஸ்காலர். ரொம்பப் பிரபலம்.”
நெருங்கியதும் அவரிடம் இவனை அறிமுகம் செய்து வைத்தார். ”...ரொம்ப வேண்டிய பையன்.” கைகுலுக்கிக் கொண்டார்கள்.
”ஆச்சு, நாலு ரவுண்ட்! போதும் எனக்கு..  கொஞ்சம் உட்கார்றேன். நீ சாரோடு இன்னும் கொஞ்சம் நடந்துட்டு வரலாமே?”  என்றார் சாத்வீகன்.
”எஸ், வாங்க. Young as you are, I bet you can definitely take a few rounds more.” என்று சொர்ணகுமாரும் அழைக்க இருவரும் தொடர்ந்தார்கள். முடிந்ததும் அவர் விடை பெற்றுக் கொண்டு போய்விட்டார்.
அடுத்த நிமிடமே ஷண்முகம் இவரை சாடினான். ”நல்ல ஆள் கூட அனுப்பினீங்க என்னை... சே!”
”ஏன், என்ன ஆச்சு?”
”இப்படியா ஒரு மனுஷன் போர் அடிப்பார்?”
”என்ன பண்ணினார்?”
”ஒரே அட்வைஸ் மழை. இந்த முப்பத்தஞ்சு நிமிஷமும் அவர்தான் பேசினார்.”
”அப்படியா?” தெரியாதது போல...
”ஆமா. எங்கே வேலைன்னு கேட்டார் சொன்னேன் உடனே ஆபீஸில் எப்படி முன்னேறி எம் டி ஆகிறதுன்னு பொழிஞ்சு தள்ளிட்டார்.”
”ஓஹோ?’
”அப்புறம் எங்கே ஜாகைன்னார். சொன்னேன். அதுவா, கொசுத்தொல்லை இருக்குமேன்னு கேட்டு அதை எப்படி சமாளிக்கிறதுன்னு அடுத்த பத்து நிமிஷம் நான்ஸ்டாப்பா... அப்புறம் சாப்பாடைப் பத்தி ஏதோ கேட்டார். தொடர்ந்து ஹெல்தியா எப்படி சாப்பிடறதுன்னு பக்கம் பக்கமா வசனம்.”
”நல்ல விஷயங்கள் தானே சொல்லியிருக்கார்? நிறைய படிக்கிறவராச்சே? நிறைய பாயிண்ட் வெச்சிருப்பாரே...?
நல்லதுதானே?”
”ரொம்ப நல்லதுதான்.  ஆனா நான் பட்ட பாடு எனக்கில்ல தெரியும்?”
”ஓ அதுவா? அதுதான்  இவங்களை மாதிரி ஆட்களுக்கெல்லாம் பிரசினை. நாம இப்படி அட்வைஸாப் பொழியறது கேட்கிறவங்களுக்கு எவ்வளவு போரடிக்கும், சமயத்தில எத்தனை கஷ்டமா இருக்கும்னு கொஞ்சமும் யோசிக்கிறதில்லை. உன் இடத்தில் தன்னை வெச்சு ஒரு நிமிஷம் பார்த்திருந்தால்!  அப்படி செய்திருக்க மாட்டார் இல்லையா?”
ஒரு நிமிடம் யோசித்தவன், ”கரெக்ட். அந்தக் கோணத்தில் அவர் யோசித்திருக்க மாட்டார்னுதான் நினைக்கிறேன்.”
”அப்படி யோசித்தால் அவருக்கு இன்னொண்ணும் புரியும். இப்படி எப்பவும் எதுக்கும் அறிவுரைன்னு அடுக்கறதால முக்கியமான மிக அவசியமான அறிவுரை கூட  தன் எஃபெக்டை இழந்துரும்னும்.”
”அட, அதுகூட சரிதானே?” என்றபடி கிளம்பினான்.

அடுத்த மாதம் மாலினியை சந்தித்தபோது, எப்ப பார்த்தாலும் தன்னிடமும் பிள்ளைகளிடமும் எதுக்கெடுத்தாலும் அட்வைஸ், அட்வைஸ் என்று அலட்டிக்கொண்டிருந்த ஷண்முகம் இப்போதெல்லாம் தேவையான நேரத்தில் முக்கியமான அறிவுரையை மட்டுமே தருவதாக நன்றி தெரிவித்தாள்.
><><
அன்புடன் ஒரு நிமிடம் - 129 
('அமுதம்' அக். 2015 இதழில் வெளியானது)

Wednesday, September 12, 2018

அவளுக்கொரு காரணம்... (நிமிடக்கதை)

அன்புடன் ஒரு நிமிடம் - 128

வந்ததும் வராததுமாக கேட்டார் ராகவ். "ஏம்மா கிஷோர் மீது உனக்கு ஏதாச்சும் மனத்தாங்கல்...?"

"ஏன் கேட்கறீங்க? அவர் ஏதாச்சும் சொன்னாரா? " யாழினியின் குரலில் யாதொரு ஆச்சரியமும் இல்லாததைக் கவனித்தார். டீ போட ஆரம்பித்தாள் அவருக்கு.

"ம்..என்னமோ அப்படியொரு எண்ணம் அவனுக்கு. நேரடியா விஷயத்துக்கு வர்றேன்.  போன மாசம் உனக்காக ஒரு வாஷிங் மெஷினும் கூடவே ஒரு டிரையரும் சர்ப்ரைஸா வாங்கிகொண்டு வந்து கொடுத்தானில்லையா?  நீ என்ன பண்ணினே? வாஷிங் மெஷினை மட்டும் வைத்துக் கொண்டு மற்றதை உன்னோட அக்காவுக்குக் கொடுத்திட்டே, இப்ப வேண்டாம்னு.   அதில அவனுக்கு வருத்தம். உனக்குக் கஷ்டம் குறையணுமேன்னு அல்லவா அவன் ஆசையோடு... ?”

”அது வந்து..”

”அதை விடு, அதுக்கு முன்னாடி ஒரு முறை உனக்கு ஒரு டிஷ் வாஷர் வாங்கிகொண்டு வந்தப்ப  நீ என்ன பண்ணினே... அது இப்ப வேணாம்னு சொல்லி அவன் தங்கைக்கு ப்ரசண்ட் பண்ணிட்டே.”

”ஆமா, பண்ணினேன்...” டீயை எடுத்து மேஜையில் வைத்தாள்.

”இப்படி அவன் உன் வேலை சௌகரியத்துக்கு என்ன வாங்கிக் கொடுத்தாலும் நீ அதை முழுமையா பயன் படுத்திக்கலைன்னு அவனுக்கு ரொம்பவே கவலை. மனசில உனக்கு அவன் மேலான வருத்தம் ஏதும் இருக்குமோன்னு தோணறதில என்ன ஆச்சரியம்?”

‘டீயை முதல்ல சாப்பிடுங்க,” என்றவள் சிரித்தபடி விளக்கினாள். ”எனக்கு வேலை சிரமமே இருக்கக் கூடாதுன்னு அவர் பார்த்துப் பார்த்து வாங்கித் தர்றாருதான். ஆனா முழுக்க முழுக்க எனக்கு வேலையே இல்லாம போயிட்டா எப்படி...எனக்கும் ஏதாச்சும் உடற்பயிற்சி வேண்டாமா? இல்லேன்னா  நான் சோம்பேறியாகி விடுவேன்... இந்த சின்ன வயசில், என்னால முடிகிற காலத்தில் நான் என்னால் முடிந்த அளவுக்கு வேலைகளை செய்து என்னைப் பழக்கிக் கொண்டால்தானே வயதான காலத்தில் நல்லது? உங்களுக்கே தெரியும், இப்பல்லாம் முன்னே மாதிரி கூட்டுக் குடும்பம் சான்ஸ் இல்லையே... நாளைக்கு நாமேதான் நம்மைப் பார்த்துக்கணும்கிற நிலை வந்தால் உதவுமில்லையா? அவர் வாங்கித்தந்த எல்லாத்தையும் பயன்படுத்தாம இப்படி சுருக்கிகொண்டது எனக்கு கைக்கு தேவையான அளவு வேலை கொடுக்குது. அதனால்தான்...”

அவளுடைய காரணத்தைக் கேட்டதும் அமைதியானார்.  ”நல்ல நோக்கம்தான். அப்ப அதை அவனிடமே சொல்லியிருக்கலாமே?”

”அவருக்கு என் கஷ்டம்தான் பிரதானம். இந்தக் கோணத்தில் அவரால பார்க்கமுடியாது. சம்மதிக்க மாட்டார். அதான் காரணம்லாம் சொல்லிட்டிருக்கலை. எப்படியும் உங்ககிட்டே  சொல்லுவார், கேட்பீங்க, சொல்லலாம், நீங்க அவருக்கு பக்குவமா எடுத்து சொல்வீங்கன்னு...நீங்க சொன்னால் சரின்னு சொல்லிடுவார்னு இருந்தேன்.”

”அவன் கொடுத்த வேலையை செய்ய வந்தால் நீ அதே வேலையைத் திருப்பிக் கொடுத்திட்டியே...” சிரித்தபடி சொன்னார்.
><><
('அமுதம்' செப். 2015 இதழில் வெளியானது)

Thursday, September 6, 2018

காலம் சார்ந்தும்...(நிமிடக்கதை)


அன்புடன் ஒரு நிமிடம் - 127

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாள் யமுனா. இது மூன்றாவது முறை. சொல்லிவிட வேண்டியதுதான்.

அப்போதுதான் அவன் நண்பன் விஸ்வா வந்துவிட்டுப் போயிருந்தான். வழ்க்கம்போல் உற்சாகமாக ஆரம்பித்தான் வினோத்.  

"நினச்சாலே ஆச்சரியமா இருக்கு. நாங்க ரெண்டு பேரும் ஒண்ணாப் படிச்சவங்க. இப்ப நான் சேல்ஸ் எக்ஸிகியூடிவா இருக்கேன். அவனைப் பாரு, ஒரு சாதாரண ஸ்டில் ஃபோட்டோகிராஃபரா... நிலையான சம்பளம் இல்லாம.. வர்ற ஆர்டர்களை நம்பிக் கொண்டு... எங்க ரெண்டு பேரையும் கம்பேர் பண்ணினா என் லெவலுக்கு அவன் ஐம்பது பர்சண்ட்தான் வந்திருக்கான்.”

 ”மெதுவா மெதுவா.. அவர் பைக் இன்னும் வீட்டைவிட்டுப் போகலே.. சரி, நல்லா யோசிச்சுப் பார்த்துத்தான் சொல்றீங்களா?”

“ஆமா நீயே சொல்லு. இப்ப அவனோட மாத வருமானம் சராசரியாப் பார்த்தா பதினையாயிரம் வருது. அப்பா அம்மாவோட ஆறு பேர் கொண்ட குடும்பம்.  நாம மூணே பேருக்கு என் வருமானம் இருபதாயிரம்.”

புன்னகையுடன் சொன்னாள்,  ”இப்ப நான் சொல்றதை கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. உங்க ரெண்டு பேரோட வெற்றியையோ வாழ்க்கையையோ ஒப்பிட்டுப் பார்க்கிறதுன்னா நிச்சயமா அது இப்படியில்லே. கம்பேர் செய்வதானால் உங்க ரெண்டு பேரையுமே உங்க வயசையொட்டிய ஒரு ஐடியல் பர்ஸனோடு அல்லவா பண்ணிப் பார்க்கவேண்டும்? உங்க வயசில் ஒரு சராசரி நபர் எந்த உயரத்துக்குப் போக முடியும், எத்தனை சாதிக்க முடியும் வாழ்க்கையில் அப்படீன்னு ஒரு அளவுகோலை வெச்சு அந்த அளவுக்கு நீங்க மேலேவா, சமாமாகவா அல்லது கீழேவா எங்கே வந்திருக்கிறீங்கன்னு பார்க்கணும். அடுத்தது, அப்படி பார்த்தால்  நீங்க ரெண்டு பேருமே அந்த லெவலுக்குக் கீழேதான் வருவீங்கன்னு நான் நினைக்கிறேன்.”

யோசித்தான்.  ”உண்மைதான். முப்பத்தஞ்சு வயசில் ஒரு சராசரி மனிதன் இன்னும் மேலே போக முடியும்..ஆனாலும் அதில நான் அவனை விட ரொம்பவே முன்னாடி இருக்கேன். பரவாயில்லே.”

சிரித்தாள். ”ரெண்டு பேருமே பின் தங்கி இருக்கீங்க. அதிலே என்ன முன்பின் ஆறுதல்?” என்றாள், ”அதுவும் தவறு. உங்க அப்பா வசதியான பிசினஸ்மேன். நல்ல சாப்பாடு, ட்யூஷன்னு உங்க வளர்ப்பே வேறே. அவரோ ஒரு அட்டெண்டரோட மகன். சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டதா சொல்லியிருக்கீங்க. அந்த சூழ்நிலையில அவர் இத்தனை முன்னேறினதே பெரிய விஷயம். உங்க சூழ்நிலைக்கும் வளர்ப்புக்கும் நீங்க இன்னும் நிறைய படிச்சிருக்கணும். இன்னொண்ணு, அவர் குடும்பம் பெரிசு. பொறுப்பு ஜாஸ்தி. கிடைக்கிற. நேரம் கம்மி. உங்களுக்கோ ரெண்டே பேர் குடும்பம். கிடைக்கிற டைமுக்கு நல்லா ஓடியாடி உழைச்சு கிடுகிடுன்னு இன்னேரம் ஒரு ஏரியா மானேஜரா ஆகியிருக்கணும்.” 

”அதுவும் சரிதான்.”

”இன்னும் ஒரு விஷயம். இப்ப கூட அவர் கையில் வைத்திருப்பது ஒரு கலை. ஃபோட்டோகிராபி. அதில் திறமைசாலி வேறே. ஒரு வேளை நாலைஞ்சு வருஷத்தில் அவர் பெரிய ஆளாகிவிடலாம். மாதம் அம்பதாயிரம் அறுபதுன்னு வரலாம். அந்த ஸ்கோப் உங்களுக்கு இல்லே. அதனால உங்க கம்பாரிஸன் காலத்துக்கும் கட்டுப்பட்டதுதான்.” 

”உண்மை,” என்றான் கர்வம் அகன்றவனாக.

><><><
('அமுதம்' அக். 2015 இதழில் வெளியானது)

Tuesday, August 21, 2018

அந்தப் பக்கமிருந்து...

அன்புடன் ஒரு நிமிடம் - 126

”என்னவெல்லாமோ பண்ணிப் பார்க்கிறேன் மாமா, சேல்ஸை பழைய நிலைக்கு கொண்டு வர முடியலே..." என்றான் மிக்க கவலை ரேகைகளுடன் வந்த சோமு...அவனின் சோப் தயாரிப்பு தொழிலில் தற்போது விற்பனை வீழ்ச்சி. 
”அதுக்கு நீ என்னென்ன நடவடிக்கை எடுத்தே?” கேட்டார் வாசு.
”என்னவெல்லாம் முடியுமோ அது.. வழக்கமா செய்யற விளம்பரத்தை 25% அதிகரிச்சுப் பார்த்தேன். புதுசா சில விளம்பர யுக்தி பண்ணினேன்.” 
”அப்புறம்?”
”விலையை 10% குறைச்சேன், கட்டுப்படியாகாதுன்னாலும்...” 
”அப்புறம்?”
”மார்கெட்டிங்க் சைடில் இன்னும் நாலு ஆளைப்  போட்டேன்..”
அப்போதுதான்...
வெளியே கூக்குரல். பசங்க சத்தம். “அப்படித்தான்! போடு, போடு!”
“இன்னும் நல்லா வீசு!” எட்டிப்பார்த்தார்கள். 
பையன்கள்.. ஒரு தொட்டிலை மரத்தில் கட்ட முயன்றுகொண்டு... கீழேயிருந்து கயிற்றை வீச வீச அது அந்த வேப்ப மரக் கிளையில் அந்தப் பக்கம் விழாமல் அதன்மேல்கிளை இலைகள் தட்டிவிட  கீழேயே திரும்பிற்று.
”கொஞ்சம் இருடா,” என்றொருவன் மாடிக்கு ஓடினான்.
அங்கிருந்து பார்த்துவிட்டு அவன் கத்தினான், ”டேய் அப்படிப் போடறதை நிறுத்து. இந்தப் பக்கமிருந்து அந்தப் பக்கம் கயித்தை வீசு... ஏன்னா மேல் கிளை அந்தப் பக்கமா சாய்ஞ்சிருக்கு.”
அப்படியே போட, கயிறு அழகாய் அந்தப் பக்கம் ஜம்மென்று விழுந்தது.
”பார்த்தியா, இதைத்தான் உன்கிட்ட சொல்ல நினைச்சேன்...” என்றார் வாசு இவனிடம்.
”அந்தக் கயிறு மேலே போகணும். போகலே. எங்கே போகணுமோ அங்கேயிருந்து பார்த்தால்தான் என்ன பிரசினை, என்ன செய்யணும் அதுக்குன்னு தெரியும். அதேபோலத்தான் உன் பிரசினையும் உன் சைடிலிருந்தே பார்த்தால் போதாது. என்ன நம் இலக்கோ அந்தப் பக்கமிருந்து பார்த்தால்தான் அதுக்கு என்ன வழி, என்ன தடை, அதை அகற்ற, இலக்கை அடைய என்ன செய்யணும்னு தெளிவா தெரியும்.  
”அதைத்தான் இப்ப அந்த பையன் செய்தான். இப்ப நீயும் அதை செய்யறே. உன் பிரசினை என்ன? சேல்ஸ் டௌன். இலக்கு என்ன? முன்னே மாதிரி அதை நிறைய பேர் வாங்கணும். உன் சைடிலிருந்தே பார்த்து நீ இதுவரை செய்ததையே திரும்பத் திரும்ப அதிகமா செய்துட்டு இருக்கிறதில்லை.. அந்த எண்ட்லேயிருந்து பார். அவங்க வேறே எதையோ வாங்கறாங்க. என்ன காரணத்தால் நம்ம ப்ராடக்டை வாங்கலேன்னு யோசி. அவங்க வாங்கற மாற்று சோப்பில் இப்ப ஏதோ ஒண்ணு அதிகமா இருக்கலாம், ஆரோக்கியத்துக்கு உதவற ஒன்றோ, ஒரு அதி நறுமணமோ..  அப்ப நாம என்ன செய்யலாம்? அவங்களை சந்திச்சு பேசணும். நீ சில ஏஜெண்டுகளுக்குக் கொடுக்கறே. அவங்க சில்லறைக் கடைகளுக்குக் கொடுக்கறாங்க. அவங்கதானே கஸ்டமரோட பழகறாங்க? அவங்க மூலமா கஸ்டமர்களை அணுகினால் தானே  தெரிந்துவிடும் பிரசினையின் மையம். விஷயத்தை சரி செய்ய வழியும்!”
”முதல்ல அதை செய்யறேன்,” என்று புறப்பட்டான் அவன்.
><><
('அமுதம்' அக்டோபர் 2015 இதழில் வெளியானது)

Wednesday, May 16, 2018

காரணம் ஆயிரம்... (நிமிடக்கதை)

அன்புடன் ஒரு நிமிடம் - 125

சொல்லிக் கொண்டேயிருந்தான் சுந்தர்.  ஃபங்ஷன் முடிந்து சாப்பாட்டுக்காக காத்திருந்த உறவினர், நண்பர்கள் காது கொடுத்தனர். பார்த்துக் கொண்டேயிருந்தார் சாத்வீகன். 

“...இத்தனை வருஷம் ஆச்சு. கணேசன் இன்னும் சொந்த வீடு கட்டாமல்... நேற்று கல்யாண வீட்டில் எல்லாரும் சந்திச்சபோது கேட்டேன் என்ன காரணம்னு. கடன் வாங்கறது பிடிக்காதாம் அவனுக்கு. சொன்னான். நாமெல்லாம் லோன் வாங்கி வீடு கட்டலையா? இதெல்லாம் ஒரு காரணமா? இத்தனை வருஷம் வேலை பார்த்தும் இன்னும் சொந்தமா ஒரு வீடு கட்டலைன்னா என்ன மதிப்பு இருக்கும்? இப்ப கட்டினால் அவங்கப்பா, அம்மாவுக்கு வயசான காலத்தில எத்தனை சௌகரியமா இருக்கும்! கையில எப்ப காசு சேர்ந்து.. அதுவரை அவங்க நல்லா இருக்கணும். அப்ப வேறே செலவு வந்து நின்னா என்ன பண்ணுவான்? எம். எஸ்சி வரை படிச்சு என்ன, கொஞ்சம் கூட விவரமே இல்லே.. ”

அதை ஆமோதித்து சில குரல்கள், ’அதானே என்ன இவன் இப்படி..’ என எழுமுன் சாத்வீகன் எழுந்து சுந்தரைத் தள்ளிக் கொண்டு போனார் அப்புறமாக.

"உட்கார்,’ என்றார், ”நம்ம கணேசன் வீடு கட்டாததற்குக் காரணங்கள்... ஒண்ணு, அவனுக்கு இப்போது ஒரு முக்கியமான பெரிய செலவு இருக்கு. ரெண்டு. இப்ப அவன் வாடகை வீட்டில் இருந்தாலும் பெற்றோரோடு இருக்க வசதியா இருக்கு, அதே வசதியில் வீடு கட்ட நிறைய ஆகும். மூணு. சொந்த ஊரில் அதைக் கட்ட ஆசை. அந்தப் பக்கம் டிரான்ஸ்ஃபர் ஆகிறப்ப கட்டினா பார்த்து சிக்கனமா கட்டலாம். நாலு. ஊர்ப்பக்கம் அவன் வாங்கிப் போட்டிருக்கிற மனை ரொம்பத் தள்ளியிருக்கு. ஆள் புழக்கம் வர சில வருஷமாகும். அஞ்சு...”

பன்னிரண்டு காரணம் சொன்னார். “இன்னும் இருக்கலாம். நீ ஒரு பொது இடத்தில வெச்சு திடீர்னு அப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறப்ப அவன் அப்ப தோணின ஒரு பதிலை சொல்றான். அந்த இடத்தின் சூழ்நிலையில் எல்லார் முன்னாலும் அவனால் எல்லா காரணத்தையும் சொல்ல முடியணும்னு எதிர்பார்க்கிறது சரியா? இடம் பொருள் ஏவல் பார்த்தல்லவா கேட்கணும்? ஒரு வேளை நீ அவனிடம் தனியாக கேட்டிருந்தால் அவன் விலாவாரியா சொல்லியிருக்கலாம். பொதுவாக யார் எதைசெய்தாலும் அதற்கு ஒரு காரணம்தான் இருக்கும்னு நாமாக நினைத்துக் கொள்கிறோம். அது அவர்கள் சொல்லும் ஒரு காரணம், அவ்வளவுதான். எல்லா காரணங்களும் எப்போதும் நம்மிடம் சொல்லக் கூடியவையாகவும் இருக்காது.  அப்படி நாம் எதிர்பார்ப்பதிலும் அர்த்தமில்லை. நபர் எப்படிப்பட்டவர் என்று மட்டுமே பார்க்கணும். சராசரி விவரமுள்ள ஒருவர் ஒரு விஷயத்தை செய்யவோ செய்யாமலிருக்கவோ சரியான, அவருக்கேயான காரணங்கள் இருக்கும். அதை நம்மிடம் அவங்க சொல்ல விரும்பலாம், விரும்பாமலுமிருக்கலாம். ஏதோ ஓரிடத்தில் சூழ்நிலைக்கேற்ப அவங்க சொல்கிறதை வைத்து அவர்களை மற்றவர் முன் விமரிசிப்பது என்பது நம்மையும் ஏமாற்றுவதோடு அவரையும் சங்கடப் படுத்தும். அது தேவையில்லைங்கிறது என் கருத்து.”

><><
('அமுதம்' செப்.2015 இதழில் வெளியானது)

Wednesday, April 18, 2018

அற்புதம் அருகேயே...

அன்புடன் ஒரு நிமிடம் - 124

அந்த சின்னஞ்சிறு கிராமத்தில் தன் வீட்டில் அதிகாலையில் கண் விழித்ததுமே எதிரில் கையில் பையுடன் டவுன் நண்பர் சாத்வீகன் நின்றதில் அசந்தார் வேலாயுதம்.

"எப்படி வந்தீங்க? அதும் இந்நேரம்..."

"பாசஞ்சர் ட்ரெயின். ஸ்டேஷன்ல ஜட்கா வண்டி. ஏன் ஆச்சரியம்?"

"என் கவலையோட வெளிப்பாடுதான் அந்த ஆச்சரியம்...  இந்தக் கிராமத்தில செட்டில் ஆனதிலேர்ந்து எனக்கு விசிட்டர்கள், விருந்தாளிகள் ஒரேயடியா குறைஞ்சு போச்சு. யாரும் இங்கே எட்டிப் பார்க்கிறதில்லே.. அப்படி நெருங்கிப் பழகின சொந்த பந்தமெல்லாம் இப்ப என்னை அப்படியே ஒதுக்கிட்டாங்க.”

”என்ன காரணம்?”

”வேறென்ன, இந்தக் கிராமத்தில இருக்கிற வசதிக் குறைவுதான். இத்தனைக்கும் யாராவது இங்கே வர்றேன்னு சொன்னால் போதும், நான் மதுரை ஜங்ஷனுக்கே ஒரு கார் அனுப்பி கூட்டிவர்றேன். பக்கத்து டவுனிலிருந்து வேளா வேளைக்கு ஹோட்டல்லே நல்ல நல்ல டிஷ் எல்லாம் வாங்கி உபசரிக்கிறேன். நெட் கனெக்‌ஷன் ஏற்பாடு செய்யறேன். வென்னீர், ஏ.சி.ன்னு வசதி பண்றேன். கொடைக்கானல், குற்றாலம்னு டூர் போக ஏற்பாடு செய்யறேன். அப்படியிருந்தும்...”

”ஓ, அதெல்லாம் வேறே செய்யறீங்களாக்கும்.. பேஷ், பேஷ்,” என்றாரே தவிர அங்கிருந்த ஒரு வாரமும் அதையெல்லாம் வேண்டாமென்று தவிர்த்துவிட்டார் சாத்வீகன். வீட்டில் கிடைப்பதையே சாப்பிட்டுக் கொண்டார். ஊருக்குள்ளேயே சுற்றினார். 

கிளம்புகையில் ”உன்னை சரியாவே உபசரிக்க முடியலியே...” என்று வருத்தப்பட்டார்  வேலாயுதம். ”இத்தனை சிரமமிருந்தால் எப்படி நீ மறுபடி இந்தப்பக்கம் வருவாய்?”

”அதனால்தான் வருவேன்,” என்றார் சாத்வீகன். ”மற்றவங்க ஏன் விரும்பி வர்றதில்லேன்னு இப்ப புரியுது எனக்கு. அவங்களுக்கு அங்கே கிடைக்கிற விஷயங்களையே இங்கே நீ ஏற்பாடு செய்து கொடுப்பதில் அவங்களுக்கு என்ன விசேஷம் தென்படும்? வீட்டுத் தோட்டத்தில இயற்கை உரம் போட்டு நீங்க வளர்க்கிற காய்கறிகளோட சுவை எங்களுக்கு புதுசு. வயல் கரைகளோட காலாற போகிற வாக் புதுசு.  கட்டிலை எடுத்து முற்றத்தில போட்டு காத்தாட நெடுநேரம் பேசிட்டேயிருந்து கண்ணசறது தனி அனுபவம். இண்டர்நெட்டில் கிடைக்காத பல்லாங்குழியும் தாயமும் விளையாடறது குஷி. பக்கத்து மலையில பாறைப்படிகளில் ஏறி அந்த சுனையில குளிச்சுட்டு அங்கேயே பொங்கி சாப்பிட்டு வர்றதில ஒரு நாள் ஒரு நொடியாவது அற்புதம். இதெல்லாம் விட்டிட்டு நீ எங்களுக்கு எங்க இடத்தில கிடைக்கிற அதே சௌகரியங்களை அப்படியே இங்கே ஏற்பாடு செய்து கொடுத்தால் அதில் எங்களுக்கு என்ன த்ரில் கிடைக்கும்? காட்சி மாறாமல் இடம் மட்டும் மாறினால் போதுமா ரசனைக்கு?”

”அட, இப்படி நான் யோசிக்கலையே...’

’யோசிக்கவே வேணாம். நீ  அற்புதமான இடத்தில் அருமையான உணவை சாப்பிட்டு ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்ந்துட்டிருக்கே. அதை நாங்க புரிஞ்சுக்க, அந்த அனுபவங்களை பகிர்ந்துக்க வழி, நீ எதுவும் யோசிக்காம 
இருக்கறதுதான்.”

><><
('அமுதம்' செப்.2015 இதழில் வெளியானது)

Thursday, March 22, 2018

வேலைக்கு ஆவது...

அன்புடன் ஒரு நிமிடம் - 123

தியாகுவை அழைத்துக் கொண்டு அந்த இலக்கியக் கருத்தரங்கிற்கு செல்ல வந்திருந்தான் வினோத். 
”இதோ குளிச்சிட்டு வர்றேண்டா.”
”டேக் யுர் டைம். நிறைய நேரம் இருக்கு.”
இருந்தாலும் டைம் கொஞ்சம் நீண்டுதான் போனது. கவனித்தான் வினோத். அப்பவே குளிச்சு முடிச்சிட்ட மாதிரி இருந்ததே அப்புறமும் என்ன பின்கட்டை விட்டு வர இத்தனை நாழி? எட்டிப் பார்த்தான்.
பின்கட்டில் தலைக்கு மேல் உயரத்தில் அமைந்திருந்த நீளப் பலகணியின் கண்ணாடிகளில் ஒன்றைக் கழற்றிக் கொண்டிருந்தான் தியாகு. இவன் பார்த்துக் கொண்டிருக்க அவன் அந்த கண்ணாடியை சோப் தண்ணீர் தெளித்து பிரஷால் கழுவி துணியால் கிளீன் செய்தான். 
பலகணியில் வரிசைக்கு நான்காக பதினாறு இருந்தன. அவன் கழற்றியது ரெண்டாம் வரிசையில் நாலாவது. 
துடைத்து முடிந்ததும் அதை அதனிடத்தில் பொருத்தினான். உபகரணங்களை எடுத்து அதனிடத்தில் வைத்தான்.
கையைத்  துடைத்துக் கொண்டு இவனிடம், ”கிளம்பலாமா?” 
”பாக்கி கிளாஸ் எல்லாம்...?’
”இன்னிக்கு ஒண்ணுதான். நாளைக்கு ஒண்ணு. அப்படி...”
அவனை ஏற இறங்கப் பார்த்தான் வினோத். ”இதென்னடா இது. ஒரே ஒரு கிளாஸை மட்டும் மெனக்கெட்டு உட்கார்ந்து கழுவிக்கொண்டு?  ஒன்றை மட்டும் கழுவ இருபது நிமிஷம் ஆகுதுன்னா அதிலே, சோப், தண்ணி, பிரஷ், துணின்னு அதுக்கான எல்லா தேவைகளையும் எடுத்து வைக்க, கழற்ற, கை கழுவன்னு பத்து நிமிஷம் ஆகாதா? இந்தப் பத்து நிமிஷ நேரம்  தினம் அதிகப்படியா வேஸ்ட் ஆகறதுக்கு. ஒரேயடியா 16 கிளாஸையும் ஒரே நாளில் கிளீன் செய்யறதுன்னா அந்த நேரம் மிச்சம் இல்லையா? அதை யோசிக்கலியா? அப்படிச் செய்ய நினைக்கலியா?”
”அப்படித்தான் இதை செய்ய நினைச்சேன்.  நினைச்சு ஒண்ணரை வருஷம் ஆச்சு.” 
”ஓண்ணரை வருஷமா?”
”ஆமா. சுத்தமா வேலை நடக்கலே. நடக்காது. அதான் நம்ம மனசு. மொத்தமா ஒரு ரெண்டரை மணி நேரம் வேணும்னா அது நமக்கு சுலபமா கிடைக்காது. அதுவே ஒரு எக்ஸ்க்யூஸ் ஆகிடும் மனசுக்கு. மூடும் வராது. ஆக, ஒரு நாளும் அந்த வேலை நடக்காது. தினம் ஆகிற பத்து நிமிஷ வேஸ்டை நினைக்காதபோது... இப்ப பாரு, பாதி வேலை நடந்தாச்சு. எது பெட்டர்?”
“இதுவேதான்...” 
('அமுதம்' செப் 2015 இதழில் வெளியானது)

Thursday, February 8, 2018

வேண்டும் ஒரு பரிசு... (நிமிடக்கதை)

வலையை சுருக்கமாக சொன்னார் கணேசன்.
“பத்து வருஷம் அவர் கீழே வேலை பார்த்தேன். அப்ப இந்த ஊர்லேயே பெரிய தையல் கடை அவரோடதுதான். அவருதான் என் குரு. தொழிலை, ஒவ்வொரு நுணுக்கத்தையும் கத்துக்கிட்டது அவர்ட்டதான். இப்ப நான் கடை தொடங்கப் போறேன். அவரில்லாம அதன் திறப்பு விழாவை நினைச்சுக் கூட பார்க்க முடியாது.”
“அவர் வரமறுக்கிறாரா?” கேட்டார் வாசு.
“ஐயோ சந்தோஷமா வருவார்.  என் முன்னேற்றத்தில அக்கறை உள்ளவராச்சே. என்னன்னா அவர் இப்ப நல்ல வசதியா இல்லை. கடையை எல்லாம் விட்டு வருஷமாச்சு. ரெண்டு பழைய தையல் மெஷின் கிடக்குது வீட்டில அடையாளமா, அவ்வளவுதான்! வெளியூர்லேருந்து பிள்ளைகள் அனுப்பற பணத்தை வெச்சுத்தான் வீடு நடக்குது. திறந்துவைக்க வரும்போது கண்டிப்பா ஏதாவது பெரிசா பரிசு கொடுக்க நினைப்பார். வேண்டாம்னு என்ன சொன்னாலும் கேட்கமாட்டார். ஆனா அவரால...கஷ்டப்படுவார்.  தெரிஞ்சும் அவருக்கு எப்படி கஷ்டத்தைக் கொடுக்கறது?”
”அப்ப விழா இல்லாம ஆரம்பிச்சுடு. அப்புறம் பக்குவமா சொல்லிக்கலாம் அவ்ர்ட்ட.”
“செய்யலாம் ஆனா வீட்டில, நண்பர்கள் எல்லாரும் விரும்பறாங்க. முதமுதல்ல தனியா பெரிய அளவில் நான்...”
கொஞ்ச நேரம் யோசித்தார் வாசு. ”ஒரு ஐடியா தோணுது. ஒரு வேளை சுமுகமா எல்லாம் நடக்க அது உதவலாம்..” சொன்னார்.

டுத்த அரையாவது மணியில் கணேசன் தன் பழைய முதலாளியின் வீட்டில் நுழைந்தார்.
நார்க் கட்டிலில் படுத்திருந்த சதாசிவம் எழுந்தார். “வாய்யா வா! என்ன விசேஷம்?”
சொன்னார் விஷயத்தை.
“அப்படியா.. கேட்க சந்தோஷமா இருக்கு.”
“அடுத்த மாசம் ரெண்டாம் தேதி. நீங்க வந்து திறந்து வைக்கறீங்க”
“கண்டிப்பா...” 
”அது மட்டுமல்ல. ஒரு மறக்க முடியாத பரிசும் நீங்க தர்றீங்க.”
”அதுக்கென்ன தந்துட்டா போச்சு.’’ அவர் கடைக்கண் ஓரம் ஒரு கவலை ரேகை ஓடியது.
”அதோ..” கையைக் காட்டினார் கணேசன். ”அந்த தையல் மெஷின்! அந்தக் காலத்தில் நீங்க உட்கார்ந்து வேலை செய்த  மெஷின். அது எனக்கு வேணும். உங்க ஞாபகமா எப்பவும் என் கண் எதிரே வெச்சிருக்க!  அதைவிட வேறு எனக்கு என்ன பரிசு இருக்கமுடியும்?”
இவர் மனதில் சந்தோஷமும் கூடவே ஒரு திருப்தியும்..

திறப்பு விழா அமர்க்களமாக நடந்தேறியது. வாசுவிடம் தன் பிரத்தியேக நன்றியை சொல்ல மறக்கவில்லை கணேசன்.

(’அமுதம்’ ஆகஸ்ட் 2015 இதழில் வெளியானது - அன்புடன் ஒரு நிமிடம் - 121)

><><

Thursday, January 4, 2018

தானே யோசிக்க... (நிமிடக்கதை)

ரிலாக்ஸ், ரிலாக்ஸ் என்றார் சாத்வீகன். வந்தவளோ அமைதியாவதாகக் காணோம்.
"என் பொண்ணு ஏதோ ஒரு உதவாக்கரைப் பையனை லவ் பண்றா மாமா. எப்படி அவளை தடுக்கறது... எப்படி எப்படி..."
"தடுக்க வேண்டிய அவசியமே இல்லை." என்றார் இவர். "சொல்லு, என்ன நடக்கிறது?..."
அழுது கொண்டே விவரித்தாள் சாவித்திரி.
எல்லாம் கேட்டு விட்டு அவர் சொன்ன வழி?
”இப்ப நீ என்ன பண்றே.. அவகிட்டபோய் லவ் பண்ண சொல்லப்போறே..."
"என்ன இப்படி சொல்றீங்க?"
"சில சமயம் பிரசினைக்குள்ளேயே தீர்வு இருக்கும் இல்லையா?" சிரித்தார்.

றுநாள்.
மகளைக் கூப்பிட்டு கவலையோடு பேசினாள் இவள். "ஆமா. அந்த சுரேஷுக்குத்தான் உன்னைக் கொடுக்கணும்னு பிடிவாதமா இருக்கார் உங்கப்பா. அவர் தங்கையைக் கொடுத்த இடத்திலேர்ந்து வந்த வரன். அதனால அவருக்கு தலைகால் புரியலே.  அவளோட மதிப்பு அங்கே நல்லாயிருக்குமாம். உறவும் பலப்படுமாம்.  கேட்டதிலேரந்து  தூக்கம் போச்சு. அந்தப் பையனுக்கு சரியான படிப்பும் இல்லே. வேலையும் ஏதோ டெம்பரரியா ஒரு சிமண்டு கம்பெனியில... இத பாரும்மா, அப்பா இப்பத்திய சௌகரியங்களையும் பையன் அழகையும் பார்க்கிறாரு. ஆனா நாளைக்கு? உனக்கு குழந்தைங்க பிறந்து அதுகள் நல்லா சாப்பிட்டு ஆரோக்கியமா இருக்கணும், தரமான பள்ளியில படிக்கணும்... உன் ப்ரண்ட்ஸ் உன்னைப் பார்த்து பரிதாபப்படக் கூடாதில்லையா?"
அவள் ஏதோ யோசனையில் ஆழ்ந்த மாதிரி...
"நான் என்ன சொல்லியும் அவர் கேட்கற மாதிரி இல்லை. அவரை எதிர்த்து நான் ஒண்ணும் செய்ய முடியாது. வேறே வழியில்லே. அதிலேர்ந்து தப்பணும்னா நீ லவ் மேரேஜ் பண்றதுதான் ஒரே வழி.”
“என்னம்மா சொல்றே? நிஜமாவா?”  
”நீ புத்திசாலிடி. ஒரு ஸ்கூட்டி வாங்கறதானா கூட அதோட தரத்தை நல்ல அலசிப் பார்த்துத்தானே வாங்குவே? நிச்சயமா நீ தேர்ந்தெடுக்கிற பையன் நல்ல வேலை, ரொம்பவே  திறமை உள்ளவனா உன்னோடவும் அவனோடவும் உங்கள் குழந்தை களோடவும் எதிர்காலம் முழுக்க சிறப்பா விளங்கிற மாதிரி சகல தகுதியும் உள்ளவனாகத்தான் இருப்பான். எனக்கு நம்பிக்கை இருக்கு."
"என்னம்மா.. நீ.. என்கிட்ட போய் இப்படி சொல்லிட்டு.....நான் இப்ப யாரயும் லவ் .... " இழுத்தாள்.
டுத்த வாரம் சாத்வீகனிடம் நன்றி சொன்னாள் சாவித்திரி.
"நேத்திக்கு பொண்ணு வந்து சொல்லிட்டா. அவளால அப்படியெல்லாம் பார்த்து சரியாக தேர்ந்தெடுத்து லவ் பண்றதெல்லாம் முடியாதாம். நீங்க பார்த்து நல்ல வரனா தேர்ந்தெடுத்து தீர்மானியுங்க. அப்பாவை எதிர்த்து போராடி நாம ஜெயிக்கலாம்னு சொல்லிட்டா. நீங்க எதிர்பார்த்த மாதிரியே அவள் தன் தேர்வை சரியா உட்கார்ந்து எடை போட்டு பார்த்துட்டா. சுருக்குன்னு விலகிட்டா.”

(’அமுதம்’ ஆகஸ்ட், 2015 இதழில் வெளியானது - அன்புடன் ஒரு நிமிடம் - 120)

Wednesday, November 15, 2017

மௌனம் புரிந்தது...

அன்புடன் ஒரு நிமிடம்... 119

”புறப்படுங்க. நீங்கதான் வந்து புத்தி சொல்லணும்.”
”யாருக்கு?”
”எங்கப்பாவுக்கு.”
சாத்வீகன் விழித்தார்.  ஒரு நிமிடம்தான்.  ”சரி.”
விளக்கினான் ஷ்யாம். நண்பரின் மகன். ”இன்னமும் அவர் காலத்திலேயே இருக்கிறார். பழம்பெரும் விஷயங்களைப் பேசிக்கொண்டு... இந்த தலைமுறையின் வேகமும் சரி, விவரமும் சரி அவர்கிட்டே இல்லே. எப்படி என்னத்தை பேசமுடியும் நான் அவரிடம்?  கொஞ்சமும் மாறவேமாட்டேங்கிறார். நீங்கதான்...”
”சொல்லிட்டேயில்லே?... புறப்படு.”

கிராமத்தில்...
போய் சேர்ந்த நேரம் நண்பகல்.
விறகு அடுப்பிலிருந்து கொதிக்கக் கொதிக்க மீன் குழம்பை எடுத்துவந்துஊற்றினாள் அவன் பாட்டி. இன்னொரு அடுப்பில் வத்தல் குழம்பு மணம் மூக்கை துளைக்க...
”சுடச்சுட சாப்பாடு! எப்படி சுவையா இருக்கு, பாத்திங்களா?” என்றான் சாத்வீகனிடம்
சாயங்காலம் வரை பேசிக்கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் அந்த டாபிக் பற்றி வாயைத் திறக்கலையே இவர். ஆச்சரியம் அவனுக்கு.
அது மட்டுமா? ”வெளியே கிளம்புவோம். ஊரை நல்லா சுத்திப் பாக்கணும்.” என்றார்
”சாப்பாடு நைட்டுக்கு?”
”வெளியே பார்த்துக்கறோம். சுடச்சுட பரோட்டா...”
சுற்றினார், சுற்றினார் அப்படி ஒரு அலைச்சல்.
திரும்பின நேரம் ஓட்டலும் திறந்திருக்கவில்லை. பசியும் உக்கிரம்.
வீட்டுக்கு வந்தால் மத்தியான சோறும் குழம்பு கொஞ்சமும். காலையில் மீந்துபோன இரண்டொரு ஆப்பமும் சாம்பாரும்தான் மீதி இருந்தது.
உற்சாகமின்றித்தான் உட்கொள்ள ஆரம்பித்தான். ஆனால் அந்த குழம்பில் பிசைந்த சோற்றின் ருசி. சாம்பார் ஊற்றிய ஆப்பத்தின் சுவை. ”அட சூப்பரா இருக்கே?” என்றான்.
’எப்படி, எப்படி இத்தனை ருசி..?” அவனே கேட்டுக் கொண்டு... சற்றே யோசித்து அவனே பதிலும் சொன்னான், “மத்தியானமே செய்ததுதான். ஆனால் அதனாலேயே அதில் உப்பும் புளியும் இன்னும் நல்லா ஊறி... மொத்த கலவையும் அலாதியாக  செட் ஆகி அருமையா இருக்கு. சுடச்சுட சாப்பிடும் புது சாப்பாட்டில் எப்படி ஒரு ருசி இருக்கோ, அது மாதிரி பழைய சாப்பாட்டின் சுவை இன்னொன்று....”
சொல்லிக் கொண்டேயிருந்தவன் சாத்வீகன் தன் பார்வையை செலுத்திய இடத்தைப் பார்த்தான். அவர் தாத்தாவை பார்த்துக் கொண்டிருந்தார்.
சாத்வீகனின் மெஸேஜ் புரிந்தது
மறு நாள் ரயிலில் திரும்ப வந்து கொனடிருந்தபோது சொன்னான்.
”யூ ஆர் ரைட். அந்தக்கால மனிதர்தான் என்றாலும் அவரிடம் அத்தனை வாழ்ந்த காலத்துக்கான பக்குவப்பட்ட பார்வை இருக்கு. அந்தப் பார்வை... அதுவும் அர்த்தமுள்ளதுதான். இந்தக்காலத்து இளைஞனான என் பார்வை மாதிரி அதுவும்!”
இவர் புன்னகைத்தார்.
><><
('அமுதம்’ ஜூலை 2015 இதழில் வெளியானது)

Thursday, September 14, 2017

கவலையின் காரணம்...


அன்புடன் ஒரு நிமிடம் - 118

நண்பர் வீட்டுக்குப் போய்விட்டு வீடு திரும்ப காரில் ஏறியதுமே மனைவியிடம் கேட்டார் வாசு. ”என்ன நீ இங்கே இப்படி சொல்றே அன்னிக்கு அங்கே அப்படி சொன்னே?”
ஜனனிக்கு புரிந்தது. ”என்ன சொன்னேன்?”
”இங்கே என் நண்பன் கதிரேசன் தன் பையன் மது காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டதைப் பத்தி வருத்தமா சொன்னப்ப, அது ஒண்ணும் தப்பாப் போயிடாது, அவங்க நல்லா அமோகமா இருப்பாங்க, நீங்க மனசைப் போட்டு அலட்டிக்காதீங்கன்னு சொல்றே.”
”ஆமா, சொன்னேன்.”
”ஆனா அன்னிக்கு உன் ஃப்ரண்ட் விமலா வீட்டுக்கு போயிருந்தப்ப அவள் மகள் ஸ்வேதா லவ் மேரேஜ் பண்ணிக் கொண்டதைப் பத்தி அவள் வருத்தமா சொன்னப்ப, ஆமாடீ, நானும் எதிர்பார்க்கவே இல்லே, இவள் இப்படி பண்ணிட்டாளேன்னு கூடவே சேர்ந்து ஒன்றரை மணி நேரத்துக்கு புலம்பினே...  ரெண்டு பேருமே பெற்றவங்க சொன்னதைக் கேட்கலே. அவங்களே போய் பதிவுத் திருமணம் பண்ணிக்கிட்டாங்க.  ஆனா நீ... இது ரொம்ப முரணா இருக்கே?  உன் ஃப்ரண்ட்னா ஒரு பார்வை, என் ஃப்ரண்ட்னா இன்னொன்றா...?” 
ஜனனி சிரித்தாள். ”ஆமா, ரெண்டு விதமாதான் சொன்னேன். ஏன்னு கொஞ்சம் யோசிச்சுத்தான் பாருங்களேன். அதைவிட்டு முரண் அது இதுன்னு ஏன்...”
யோசித்தார். ”சரி, நீயே சொல்லு.”
”ரெண்டு குடும்பமும் நமக்கு இருபது வருஷத்துக்கு நெருங்கின பழக்கம், இல்லையா?” 
”இருபத்தஞ்சு.”
”விமலா தன் மகளை ரொம்ப செல்லமா வளர்த்தாள். உங்களுக்கே தெரியும். சின்னதோ பெரியதோ அவ சம்பந்தமான எல்லா விஷயங்களையும் இவதான் முடிவெடுப்பாள். பெரும்பாலும் தானாக அந்தப் பெண் எதையும் செய்து பழகவில்லை. அதுக்கு முயற்சித்ததுமில்லை. அதனால்தான் பயந்தேன். முதல் முறையா ஒரு மிக முக்கியமான விஷயத்தில் அவள் தானாகவே எடுத்த முடிவு எத்தனை தூரம் சரியா அமையுமோன்னு... ஆக நான் கவலைப்பட்டதில காரணம் இருக்கு. அதனால் அவள் கவலையைப் பங்கிட்டுக் கொண்டேன்.  இங்கே உங்க ஃப்ரண்ட் கதிரேசன் தம்பதி அவங்க மகனை வளர்த்த விதம் எப்படீன்னா சின்ன வயசிலிருந்தே அவனை ரொம்ப சுதந்திரமா தன் விஷயங்களை தானே முடிவெடுத்து செய்யப் பழக்கி அதில தப்பு நேரும்போது சொல்லிக் கொடுத்து ..இப்படி இது வேறு விதம். இவனைப் பொறுத்தவரைக்கும்  அவன் தேர்ந்தெடுத்த துணை சரியாக அமைவதற்கு வாய்ப்பு அதிகம்னு நினைக்கிறேன். அதனால் ஒரு நம்பிக்கையோடு அப்படி ஆறுதல் சொன்னேன்.”
புன்னகைத்தார்.
><><
(`அமுதம்` ஜூலை 2015 இதழில் வெளியானது)

Saturday, July 1, 2017

முக்கியமான இடங்கள்...

அன்புடன் ஒரு நிமிடம் - 117

ரொம்ப நாளைக்கு அப்புறம் வீட்டுக்கு வந்திருந்த நண்பர் சுதாகரைக் கண்டதும் சாத்வீகன் முகம் மலர்ந்தது. 
”வா, வா. ஆரு இது, உன் பேரனா?”
”ஆமா. நாலு வயசு. அவங்க அப்பா அம்மா ரெண்டு பேருக்கும் இவனை வெளியே அழைச்சிட்டுப் போக நேரம் இல்லே. வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கிறான். அதான் நான்..” 
”நீ அந்த வேலையைக் கையில் எடுத்துக் கொண்டு விட்டாயாக்கும்? பேஷ். பேஷ்.”
பெருமையாக... ”வாராவாரம் இவனை அழைச்சிட்டு வெளியே கிளம்பிடுவேன். இவன் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களைக் காட்டறதுதான் என்வேலை.” 
உற்சாகமானார்...”வெரி குட். என்னென்ன இடமெல்லாம் அழைச்சிடுப் போனே?”
”எல்லாம்  தெளிவா ப்ளான் போட்டு... முதல் வாரம் பஜாருக்கு அழைச்சிட்டுப் போய் அங்கிருந்த கடைகளை எல்லாம் காட்டினேன். ரெண்டாவது வாரம் எங்க ஊர் பக்கம் கட்டியிருந்த புது ஓவர்பிரிட்ஜ். அரை கிலோ மீட்டர் நீளம் இருக்குமே, அங்கே.”
”அடுத்த வாரம்?”  
“ஊரிலிருக்கிற பெரிய மாலுக்கு... நல்லா சுத்திக் காட்டினேன். அப்புறம் போன வாரம் பஸ் ஸ்டாண்ட். இந்த வாரம் மல்டிப்ளெக்ஸ் தியேட்டர்... ஒரு வழியா அவனுக்கு காட்ட வேண்டிய முக்கியமான இடங்களை எல்லாம்  காட்டிட்டேன்னு நினைக்கிறேன்.”
”அதாவது முக்கியமான?”
”ஆமா. முக்கியமான.”
”அந்த வார்த்தையை சொல்லணுமா? அப்படீன்னா... சரி நான் கேட்கறேன். உங்க ஊரில் ஒரு பெரிய ஆறு ஓடுதே, சுழியும் நுரையுமா... தண்ணி பொங்கிப் பொங்கிப் பாயுமே...அங்கே அழைச்சிட்டு போனியா?”
”இல்லே.”
”அது பக்கத்திலே.. நூற்றைம்பது வருஷம் இருக்குமா, அந்த பெரிய அரசமரம்? அங்கே?”
"இல்லே."
”ஊர் நிரம்பி வழியுதே தோப்புகள் ...ஒரு தென்னந்தோப்புக்கு? இளநீர் காய்ச்சுத் தொங்கற அழகு... உயர்ந்த மலைகளின் பின்னணியில் அமைந்த அந்த வயல் வெளிகள்...”
”இல்லே.”
”இதெல்லாம் அல்லவா நீ அவனுக்கு முதலில் காட்டவேண்டிய இயற்கை அழகின் மகிமைகள்? அறிமுகப்படுத்த வேண்டிய ஆண்டவன் படைப்பின் அருமைகள்?”
 எழுந்து கொண்டார். ”சே, எப்படி எனக்கு தோணாம போச்சு? இதோ இப்பவே ஆரம்பிச்சுடறேன்.”
><><
(”அமுதம்’ ஜூலை 2015 இதழில் வெளியானது)

Friday, May 26, 2017

ரெண்டு நிமிஷம்...

அன்புடன் ஒரு நிமிடம்... 116

உற்சாகம் ஒரு துளிகூட இன்றி காணப்பட்டான் வைபவ். வாசுவின் பக்கத்து வீட்டுப் பையன். எஞ்சினீயர். மனைவி, இரு குழந்தைகள். அடிக்கடி வீட்டுக்கு வருவான் இவரைப் பார்க்க. இவரிடம் ரொம்ப ஒட்டுதல்.
என்னப்பா என்று கேட்டபோது எல்லாரையும் போல, வேலை ஜாஸ்தி, டென்ஷன் என்றே எதிர்பார்த்த பதில்.. ஆனால் கொஞ்ச நேரம் அவனுடன் பேசியதுமே தெரிந்துவிட்டது அப்படியொன்றும் வேலைப்பளு இருக்கவில்லை என்று. வீட்டில் ஒன்றும் பிரசினை இல்லை. வேறு எதனால் இவன் இப்படி? எதனாலோ ஒரு வெறுமை...எப்படி இவனை சரிப் படுத்துவது?
“ஒரு வாக் போலாமா?” என்றவர் சொன்னதும் அவன் எழுந்தபோது செல் ஒலித்தது. எடுத்துப் பார்த்துவிட்டு அணைத்து விட்டான்.
”யார் அது? பேசியிருக்கலாமே?”
”ஃப்ரண்ட். அப்புறம் பேசலாம்னு...” காட்டினான் பெயரை’
பார்க்கலாமா என்று அதை வாங்கினார். 
கான்டக்ட் லிஸ்டை உயிர்ப்பித்தார். ”இது யார் அரவிந்த்?’
”என் பெரியண்ணா. என் மேல ரொம்பப் பிரியம்.”
”கடைசியா எப்ப அவருக்கு போன் பண்ணினே.. இரு பார்க்கிறேன் இதில...ஓ, நாலு மாசம் முந்தி.” இன்னும் புரட்டி, ”அஸ்வின்?”
”ஃப்ரண்ட். பத்து வருஷமா... சென்னையில இருக்கான். எப்ப போனாலும் இவனோடதான் தங்கறது...”
”ரெண்டு மாசம் முந்தி ரெண்டு நிமிஷம் பேசியிருக்கே.” புரட்டி... ”ராமாமிர்தம். இது உன் கல்லூரி ஆசிரியராச்சே? எனக்கு இவர்தான் வழிகாட்டின்னு..”
“அவரேதான். அவங்க பையன் கொஞ்ச நாள் முந்தி ஆக்ஸிடெண்ட்ல...”
“ஒரு மாசமா அவர்கிட்ட எதும் பேசலே போல. அப்புறம் வத்சலா கார்த்திக். அது யாரு?”
“ரயிலில் சந்திச்ச எழுத்தாளர். ரொம்ப ஃப்ரண்டாயிட்டாங்க.”
”இவங்களோடும் சமீபத்தில பேசினமாதிரி தெரியலியே?” 
தொடர்ந்து அழுத்திப் பார்த்த முக்கியமான நெருங்கிய பல பேர்களோடெல்லாம் அவன் பேசி  நாளாயிற்றென தெரிந்தது.
”என்னப்பா இது, அத்தனை பிரியமானவங்க..  அப்பப்ப அவங்களை அழைத்து ரெண்டு நிமிஷம் பேசறதில்லையா?”
”அது... எனக்கு... நேரம் கிடைக்கணுமில்லையா?”
”ரெண்டு நிமிஷம்கிறது ஒரு நேரமா என்ன... அதில்லை காரணம்!”
”சரி, அவங்களும் கூப்பிட்டு பேசணும் இல்லையா?”
”நாம மதிக்கிறவங்க, நேசிக்கிறவங்களோட பேசறதுக்கு பதிலுக்கு பதில் பார்க்கணுமாக்கும். நோ! இந்தா!” நீட்டினார் மொபைலை.
”பேசு இப்ப இதில ரெண்டு பேரோட. ஜஸ்ட் அஞ்சு நிமிஷம்... நாளைக்கு ரெண்டு பேர்.  தினம் இப்படி ஒரு வாரம் பண்றே. ப்ளீஸ்....  நான் சொன்னதுக்காக இதை செய்யறே. அடுத்த வாரம் உன்னை பார்க்கிறேன். சரியா?”
இவன் போனை உசுப்பியவாறே வெளியேறினான். .
அடுத்த வாரம் வந்தபோது அவனது கண்களில் அப்படியொரு உற்சாகம். மனதில் அகன்றிருந்த வெறுமை பேச்சில் தெரிந்தது.
><><><
(”அமுதம்’ ஜூன் 2015 இதழில் வெளியானது)