Tuesday, July 29, 2014

நல்லதா நாலு வார்த்தை... -34


'வெற்றியின் வழி நானறியேன்
ஆனால் 
வீழ்ச்சிக்கு ஒரு வழி 
அனைவரையும் திருப்திப்படுத்த 
முயற்சிப்பது.'
- Bill Cosby.
(‘I don’t know the key to success, but the key to 
failure is trying to please everybody.’)
<>

எல்லாமே கணிக்கப்பட்டு விட்டது,
எப்படி வாழ்வதென்பதைத் தவிர.’
Jean Paul Sartre
(‘Everything has been figured out, 
except how to live.’)
<>

அவரிடமே முடிவை 
விட்டு விடுபவருக்கே 
ஆண்டவன் தன் 
ஆகச் சிறந்ததை 
அளிக்கிறார்.’
-Jim Elliot
(‘God always gives His best to those 
who leave the choice with him.’)
<>

அடுத்தவர்கள் தன் மேல் 
அள்ளி எறிந்திட்ட
செங்கற்களைக் கொண்டு
அஸ்திவாரத்தை பலமாய் 
அமைப்பவனே 
வெற்றிகரமான மனிதன்.’
- David Brinkley
(‘A successful man is one who can lay a firm 
foundation with the bricks others have thrown at him.’)
<>

அது எழுத்தோ, பேச்சோ 
ஆகச் சோகமான வார்த்தைகள்
அப்படி நடந்திருக்கலாம்என்பதே.’

- John Greenleaf Whittier
(‘Of all sad words of the tongue or pen, the 
saddest are these, ’It might have been.’)
<>

நமக்கானது எல்லாம் 
நம்மிடம் வருகிறது, 
நாமதைப் பெற்றுக் கொள்ளும் 
திறனை உருவாக்கினால்.’ 
- Rabindranath Tagore
(‘Everything comes to us that belong to us 
if we create the capacity to receive it.’)
<>


இந்தக் கணத்தை நிறைவு செய்வதும்
பாதையின் ஒவ்வொரு அடியிலும் 
பயணத்தின்முடிவைக் கண்டுகொள்வதும்
ஆகச் சிறந்த வாழ்வை 
அதிக மணி நேரம் வாழ்வதுமே 
விவேகம்.’
- Emerson
(‘To finish the moment, to find the journey’s end 
in every step of the road, to live the greatest 
number of good hours, is wisdom.’)

>>><<<
(படம் - நன்றி: கூகிள்)

Saturday, July 26, 2014

எங்கிருந்தோ…




அந்த மனிதருக்கு ஆயிரம் கவலைகள்.
அதில் ஒன்றையேனும் பகிர்ந்து கொள்ள
அவர் தயாராயில்லை.
எனினும் கேட்டுப் பார்த்தேன்.
எனக்கென்னமோ அவரைப்
பேசவைத்து விடலாம் போலத் தோன்றியது.
என் பல வித முயற்சியினூடே
யோசனைகளோடு நான் தடம் புரண்டதில்
அவரின் மௌனமே அந்தக் கவலைகளைத்
தாங்கிக் கொள்வதற்கான சக்தியை
அளித்துக் கொண்டிருக்கிறது என்பதை
அறியலானேன் கொஞ்சம் கொஞ்சமாக…

>>>0<<<

Monday, July 21, 2014

காலத்தின் நடை...



கடைக்காரர் நேற்று கொடுத்த
கடைசி மிட்டாய் இருந்த கண்ணாடி பாட்டிலில்
என்ன மிட்டாய் போட்டு நிரப்பியிருப்பார்
இன்றைக்கு என்ற ஆவலிலும்
காலையில் என்னடீ சாப்பிட்டேன்னு
கலா கேட்டால் சாப்பிட்ட பழையதை
சொல்லவா வேண்டாமா என்கிற கேள்வியிலும்
அடுக்களைக்குள் அகப்பட்டு வழி தெரியாமல்
திணறும் தேன் சிட்டு அந்திக்குள் வெளியேறி
சென்றுவிடாதா என்ற கவலையிலும்
ஓரமாய் நிற்கும் இந்தக் காரில்
ஏறிவிட முடியும் தானும்
பக்கத்து வீட்டு அக்கா மாதிரி படித்து
வேலைக்குப் போய்விட்டால்
என்றுதிக்கும் நம்பிக்கையிலும்
பள்ளிக்கூட வாசலருகே பாட்டி விற்கும் இனிப்புகளில்
நாலைஞ்சு ஈக்களாவது மொய்க்க வேண்டுமே
அதை வாங்கி சாப்பிடும் ஆசை வராமலிருக்க
என்ற வேண்டுதலிலுமாக
பள்ளிக்கூடத்துக்கான காத தூரத்தை
நடந்தது தெரியாமல் நடந்தாள்.

><><

Thursday, July 10, 2014

அவ்வளவாக...


அன்புடன் ஒரு நிமிடம் - 61 

பார்த்துக் கொண்டேயிருந்தாள் ஜனனி. பொறுக்கவில்லை அவளுக்கு. வாசுவின் இந்த வளவளாவுக்கு ஒரு எல்லையே கிடையாதா?
எப்ப பார்த்தாலும் என்ன இப்படி ஒரு சின்னப் பையனிடம் ஒரே விஷயத்தையே உச்சரித்துக் கொண்டு? சொல்லப்போனால்  நச்சரித்துக் கொண்டு?

ரகு சாப்பிட உட்கார்ந்தால் போதும். தானும் ஒரு தட்டை எடுத்துக்கொண்டு வந்து பக்கத்தில் அமர்ந்து கொள்கிறார்.அவன் பாட்டுக்கு அஞ்சு நிமிஷத்தில் சாப்பிட்டு எழுந்து போகிறவனிடம்...

"பாருடா இந்த சுட்ட அப்பளம், படு டேஸ்டா இல்லே?" "காரக் குழம்பு இன்னிக்கு சுமார்தான் இல்லியா?" "இந்த வெண்டைக்காய் ஏன் இத்தனை ருசி தெரியுமா? பொறுக்கிப் பொறுக்கி எடுத்தேனாக்கும் கடையில?" "போச்சு, போச்சு! அவ்வளவுதான் பச்சடி! உப்பு ஜாஸ்தி! "

தொடர்ந்து இப்படியே சொல்லிக் கொண்டிருப்பார். பேச்சும் சாப்பாட்டை விட்டு ஒரு வார்த்தை வெளியே போகாது
அவனும் ஒவ்வொன்றாகப் பதில் சொல்லி... சப்புக் கொட்டி சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ளே ஆகிறது மணி ஒன்று!

ரகு குளிக்கப் போகிறான் என்றால் ஓடி வந்துவிடுவார்.

"இந்தாடா புதுசா வாங்கினேன் இந்த டவலை... துவட்டும்போது பாரு, செம சாஃப்டா இருக்கும்!" "இந்த சோப் பாரு, நுரையே வராது, ஆனா எப்படி மணம்  தூக்குதுன்னு இதைப் போடறப்ப பாரு." "பக்குவமா இருக்குடா வெந்நீர், குளிச்சுப் பார்த்து கரெக்டா எத்தனை டிகிரி சென்டி கிரேட்னு  சொல்லணும்! ஒரு பந்தயம்! சரியா?"

டிவியில் படம் பார்த்தால் கிட்ட வந்து உட்கார்ந்துக்குவார். அவ்வளவுதான். "இந்த ஸாங்  சின்னதா இருந்தாலும் நல்ல  மெலடி இல்லையா?" "பைட் கொஞ்சமும் ரியலா இல்லே நீ என்ன சொல்றே?" "கொடுத்தான் பாரு சடார்னு ஒரு ட்விஸ்ட்!"

மொத்தத்தில்,  வளவள  வளவள ...அவன் எங்கே போய்  என்ன பண்ணினாலும்...

அதிலும் வேறு ஏதாச்சும் சப்ஜெக்ட் பேசாமல் அவன் செய்துட்டிருக்கிற விஷயத்தைப் பத்தியே மேலும் மேலும் பேசிப் பேசி...அவனை ஒரு வழி பண்றதில என்ன குஷியோ இவருக்கு? தாங்க முடியாமல் அவள் தாத்தாவிடம் புலம்பினாள்.

"எனக்குப் புரிந்துவிட்டது!" என்றார் அவர் கூலாக. "யோசிச்சுத்தான் இப்படி பண்றான். உன் வீட்டுக்காரனோட  ஐடியா என்ன தெரியுமா? நாம எந்த விஷயத்தை செய்தாலும் அதில் ஈடுபாட்டோடு செய்யணும்.. அப்படி செய்வதற்கு முதலில்  அதில் கான்சென்ட்ரேஷன் இருக்க வேண்டியது முக்கியம். அதை சின்ன வயதிலேயே உன் பையனிடம் உண்டாக்கத்தான் அவன் பாடுபடறான்.   தான் செய்துட்டிருக்கிற விஷயத்தை அணு அணுவா ரசிச்சு ரசனையோடு செய்யறத்துக்குத்தான், அவன் கவனத்தை அதில் குவிக்கத்தான், இப்படி அவன் செய்திட்டிருக்கிற விஷயத்தின் ஒவ்வொரு கூறுகளை எடுத்து இயம்பி அவன் மனதை அதில் மூழ்க வைக்கிறான். சாப்பிடும்போது சாப்பாட்டிலும் குளிக்கும்போது குளித்தலிலும் டிவி பார்க்கும்போது டிவியிலும்... இப்படி முழு கவனமும் வரவழைக்கிறான். இது நாளைக்கு அவன் வாழ்க்கையில், என்ன படிப்பு படித்தாலும் அதில் வெற்றி பெறவும் என்ன வேலை பார்த்தாலும் அதில் வாழ்க்கையை வாழவும் உறுதுணையா நிற்கும் "

"இதில இப்படி ஒரு விஷயம் இருக்கா?" அதன்பிறகு  அவ்'வளவள' அவ்வளவா அவளை குழப்பவில்லை.

(’அமுதம்’ டிசம்பர் 2013 இதழில் வெளிவந்தது.)

><><
(படம்- நன்றி : கூகிள்)