Wednesday, September 9, 2020

பன்னீரில் நனைந்த பூக்கள்…

1965.. அந்த வருட ‘Filmfare பெஸ்ட் மியூசிக்’ யாருக்கு? ‘Sangam’தான், சந்தேகமென்ன என்பதே பல ரசிகர்களின் தீர்மானம். கேட்கிற அத்தனை செவிகளுக்கும் ஃபேவரிட் ஆக இருந்த சங்கர் ஜெய்கிஷன் இசையில் 'Yeh Mera Prem Patra Padkar..' உள்பட அத்தனை பாடலும் தென்றல். அதெப்படி? மதன்மோகனுக்குத்தான், என்றவர்களின் வாதம்: ‘Woh Kaun Thi?’யின் “Naina Barse..” -வை யாரால் மறக்க முடியும்? ஆனால் பரிசைப் பெற்றுக் கொண்டு போன படம் ‘Dosti’. யார்? கல்யாண்ஜி அனந்த்ஜியிடம் 10 வருடம் உதவியாக இருந்து அப்போதுதான் தனியே மலரஆரம்பித்திருந்த லக்ஷ்மிகாந்த்- பியாரிலால்!
பியாரிலால்.. Sept.3 பிறந்த நாள்!
லதா மங்கேஷ்கரின் மியூசிக் அகாடமியில் இவங்க இருவரும் பணிபுரிய, ஏற்பட்ட நட்பு. இசை ரசிகர்களுக்கு லட்டு! 40 வருஷம். 600 படங்கள். 7 Filmfare அவார்ட். 18 நாமினேஷன்.
அவர் மாண்டலின்.இவர் வயலின். ஐம்பது அறுபதுகளில் பிரபல இசையமைப்பாளர்களின் பாடல்களுக்கு வாசித்திருக்கிறார்கள். Music arrangers ஆக இருந்திருக்கிறார்கள் பலருக்கு. ஒரே வருத்தம் O. P. நய்யாருடன் பணி புரியாததுதான்.
முதல் படம் திரைக்கு வராததால் இசை நம் காதுக்கு வராமலேயே போய்விட்டது. அடுத்து ‘Parasmani’ வெளியாகி “Wo Jab yaad Aaye..” “Hansthaa Hua…” என்று பாட, யார் இந்த இசை இரட்டையர் என்று இரட்டைப் புருவங்களையும் உயர்த்தினோம்.
“காலையும் மாலையும் உன்னைத் தேடுகிறேன்..” பாட்டைக் கேட்டதிலிருந்தே (“Chahunga Main Tujhe Shaam Savere..” - Dosti) இசை ரசிகர்கள் இவங்க படங்களைத் தேடத் தொடங்கிட்டாங்க!
ஜெய்கிஷன் மறைந்ததும் திகைத்து நின்ற ராஜ் கபூருக்கு இசைக் கரம் கொடுத்தவர்கள் இவர்கள். ‘Bobby’ பிய்த்துக்கொண்டு ஓடிற்று இசைத்துக் கொண்டு! ஆரம்பத்தில் எது இவர்கள் பாடல், எது சங்கர் ஜெய்கிஷன் பாடல் என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பியது உண்டு.
1950, 60களின் ஜாம்பவான்களிடமிருந்து இசையை மேலெடுத்துச் செல்லும் பணியைத் தங்கள் தோள்களுக்கு மாற்றிக் கொண்டவர்கள்.
சில பாடல்களைக் குறிப்பிடலாம் என்றால் பல பாடல்கள் கோபித்துக் கொண்டுவிடும்! என்றாலும்..
“Hawa Hawai…” Mr India -வில் ஸ்ரீதேவி கலக்கும் பாடலைச் சொல்லவா, ‘Do Raaste’ -வில் மும்தாஜ் சிணுங்குவாரே, “Bindiya Chamkeki..” அந்த அழகைச் சொல்லவா?
கப்பல் அதிர அமிதாப் ஆடும், அரங்கம் அதிர ரசிகர்கள் ஆர்ப்பரிக்கும் அந்த ‘ஹம்’ பாடலை ஹம் பண்ணாத வாய் இல்லை! “Jumma Chumma De De..”
‘Shagird’ படத்தில் I.S.ஜோஹருக்கு ஜாய் முகர்ஜி கற்றுக் கொடுப்பாரே, இந்தக் காலப் பெண்களை எப்படிக் கவர்வது என்று? அதைக் கேட்டு ஸாய்ராவிடம் அவர் பாடுவாரே? ஸாய்ரா இவரைத் தொட்டதும் பாட்டு ரிகார்ட் ஸ்ட்ரக் ஆகும்! அந்த அட்டகாசமான காமெடி பாட்டு “Bade Miya Diwane…”தவிர சாய்ரா பாடும் அந்த “Dil Vil Pyar Vyar..”
‘Milan’ படத்தில் கிராமத்தான் சுனில்தத், பட்டணத்து நூதனுக்கு பாட்டுச் சொல்லிக் கொடுக்கும்போது (“Saavan Ki Mahinaa…”) அவர் தெளிவாக உச்சரிக்க, இவர், “ஷோரு நஹீன், சோரு! சோரு!” என்று திருத்தும் அழகு அந்த விருது பாடலுக்கு மெருகு சேர்த்தது. (தமிழில் சிவாஜி “காற்று இல்லே காத்து காத்து” என்று திருத்துவாரே சாவித்திரியை, அது! - ‘பிராப்தம்’)
‘Ek Tujhe Ke Liye’... S.P.B -க்கு இவர்கள் அளித்த அவார்ட் பாடல் “Tere Mere Beech Mein…
“பன்னீரில் நனைந்த பூக்கள்…” அந்த ஆறு நிமிடப் பாட்டு நினைவுக்கு வருகிறதா? ‘உயிரே உனக்காக.’ இவர்கள் இசையமைத்த தமிழ் படம். “தேனூறும் ராகம் நான் பாடும் நேரம்…” என்று ஜானகி பாடும் நேரம் காதில் தேனூறும்.
“My name is Anthony Gonsalvaz…” என்று பாடுவார் அமிதாப் ‘Amar Akbar Anthony’யில். அதுதான் இவருக்கு இசை கற்றுக் கொடுத்த குருவின் பெயர்.
லதா அதிக பாடல்கள் பாடியது இவர்களுக்குத்தான். 712. ரஃபியும் அதே. 379. ஆனந்த் பக்ஷிதான் ஆஸ்தான பாடலாசிரியர்.
R. D. பர்மன் முதலிரு படத்துக்கு இவர்கள்தாம் music arrangers. இவர்கள் ‘Dosti’ படத்துக்கு R.D.பர்மன் தான் இரு பாடல்களுக்கு மௌத் ஆர்கன் வாசித்தவர். அத்தனை ஒற்றுமை அவர்களுக்குள்.
“Ek Pyar Ka Nahma Hai…” (Shor) பாடலை பியாரிலால் வயலினில் இசைத்திருக்கும் நேர்த்தி! (லிங்க் கீழே)
நாள் பூராவும் இசை பற்றிப் பேச நான் தயார் என்று சொல்லும் இவர் கீ போர்டு வாசிப்பவர்களுக்கு கொடுக்கும் கீ அட்வைஸ்: எந்த வாத்தியத்தை அதில் வாசிக்கிறோமோ அதற்கேற்ப கீ போர்டை கையாளவேண்டும்.

Tuesday, September 8, 2020

வெண் திரை பால்வெளியின் வான்மதி..



அவர் ஒரு பெண் எழுத்தாளர். தெலுங்கில் அவர் எழுதிய ‘அத்தகாரி கதாலு’ என்ற சிறுகதைத்தொகுதி சாகித்ய அகாடமி பரிசு பெற்றது. அதன் சில கதைகள் குமுதத்தில் ‘அத்தகாரு’ என்று தமிழில் வெளியானது என்றால் எத்தனை பேருக்கு தெரியும் அவரை என்று தெரியாது. ஆனால் பானுமதி என்றால் அத்தனை பேருக்கும் நினைவு வந்துவிடும் அவரை.
ஆம், இந்தப் பக்கம் தலை சிறந்த நடிகைகளில் ஒருவர். அந்தப் பக்கம் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவர்.
பி. பானுமதி. வெண் திரை பால்வெளியின் வான்மதி.
Sept.7. பிறந்தநாள்! (1924-2005)
‘வான் மீதிலே… ‘ என்று ராமராவ் முதல் வரியைப் பாடியதும் கிளையில் கையூன்றி நிற்கும் பானுமதி முகத்தைத் தாழ்த்தி உடலைப் பின்னிழுத்தபடியே கண்களை உயர்த்தி ஒரு பார்வையை வீசுவார் பாருங்கள், ஒரு நாயகி தன் களையை வெளிப்படுத்தும் கலையை அந்த ஐந்து விநாடி ஷாட்டில் கற்றுக் கொள்ளலாம்.
பாத்திரங்களைப் படைக்கும் எழுத்தாளர் என்பதாலோ என்னவோ பாத்திரங்களை புரிந்துகொண்டு காத்திரமான நடிப்பை வழங்கி விடுவார்.
‘அறிவாளி’ படத்தை ஷேக்ஸ்பியர் பார்த்தால், ஆஹா, இந்த நடிகை மட்டும் நடிப்பதாக இருந்தால் எத்தனை ‘Taming of the Shrew’ களை எழுதியிருக்கலாம்! என்பார்.
ஹாஸ்டல் மாடி பால்கனியிலிருந்து, கீழே சிவாஜி பாடும் ‘வெண்ணிலா ஜோதியே வீசுதே..’வுக்கு சந்திராவாக வெட்கப்பட்டு விட்டு, அந்தப் பக்க பால்கனிக்கு ஓடி, கீழே டி. ஆர். ராமச்சந்திரன் பாடும் ‘திண்டாடுதே என் கண்களே..’வுக்கு மாடர்ன் அபிநயம் காட்டி, ஒரே ஆள் இரண்டு நபராக அசத்துவார் பாருங்கள், தியேட்டர் அதிரும். ஆம், The Fabulous Senorita வில் Estelita வாக நடித்த Estelita வை விட Fabulous ஆக நடித்திருந்தார் ‘மணமகன் தேவை’யில்.
பீறிட்டுக்கொண்டு கிளம்பும் நடிப்பு அவருடையது. நம் நாட்டின் இன்க்ரிட் பெர்க்மன். ‘Gaslight’ (1944) இல் அவர் செய்ததை அனாயாசமாக ரங்கோன் ராதாவில்… கடைசி சீனில் அவரைப்போல் ஒரு வீல் அலறல் விட்டதும், படத்தில் அது கட்டாகி விட்டதும் ஒரு பத்திரிகையில் படித்த ஞாபகம்.
அப்புறம் அந்த நடிப்பின் எல்லை.. ‘அன்னை.’ “உன் பிள்ளையை அடிக்க நான் யாரு?” என்று சௌகார் விலகும்போது, அவன் தன் பிள்ளை இல்லை என்று தான் உணருவதையும் அதை நமக்கு உணர்த்துவதையும் ஒரே பார்வையில் வெளிப்படுத்துவார். “என் புள்ளே இல்லே, நான் பெரியம்மா, தப்பு எம்மேலதான், மன்னிச்சுக்க, என் புள்ளே இல்லே, நான் பெரியம்மா, இது உம்பிள்ளே, நீ அடி, கொல்லு, என்ன வேணாலும் பண்ணிக்கோம்மா, உன் புள்ளையாச்சு, நீயாச்சு, நான் பெரியவ, நான் பெரியவ..” என்று நகரும்போது ஒரு நடிகை வசனம் பேசுவதையா பார்க்கிறோம்? ஒரு வளர்ப்புத் தாயின் மனத் தளர்வும் வேதனையும் மட்டுமே அல்லவா தெரிகிறது?
ரோல் எதுவானாலும் ஒரு கை பார்த்து விடுவார். ‘Let me try…’ என்று சங்கர் கணேஷ் இசையில் அந்த ஆங்கிலப் பாடலையும்!(‘பத்து மாத பந்தம்’). ‘Meet my son…’ இன்னொரு அழகுப் பாடல் ‘எடுப்பார் கைப்பிள்ளை’யில்.
‘லட்டு லட்டு மிட்டாய் வேண்டுமா..’ நாலு மொழிப் பாடலிலிருந்து ‘அன்னை என்பவள் நீதானா…’ வரை லட்டு லட்டாக பாடல்கள்.
அஷ்டாவதானி என்றால் அதான் எனக்கு தெரியுமே என்பீர்கள். என்ன அந்த எட்டு என்றால்? எழுத்தாளர், டைரக்டர், பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர், எடிட்டர், ஸ்டூடியோ அதிபர், நடிகை. (முதல் பெண் சூபர் ஸ்டார்.)
இவர் நடிப்பில் ஒரு இயல்பான குறும்பு கலந்திருக்கும். ‘ஏரு பூட்டி ஜோரு காட்டும் …’ ('ம.பெ.மகராசி') பாடலில் அந்தக் குறும்பை நாணத்துடன் சரிவிகிதத்தில் வழங்கியிருப்பார்.
‘கள்வனின் காதலி’யில் கல்கியின் கல்யாணியை அப்படியே கண்முன் கொண்டு வந்ததை நாலு வரி சொல்லலாமென்றால் ‘அம்பிகாபதி, ‘அலிபாபா’, ‘மதுரை வீரன்', ‘கானல் நீர்' எல்லாமாக சேர்ந்து நாற்பது வரி ஆகிவிடும்.