Friday, August 7, 2026

நயமான காட்சி...


ஸ்டீவ்! அவனைப் பழிவாங்க வேண்டும் ஸ்டெல்லாவுக்கு. அவனும் அவள் தகப்பன் பிரிட்ஜெரும் இன்னும் நாலு பேருமாக வெனிஸில் 35 மில்லியன் டாலர் தங்கக் கட்டிகளை கொள்ளையடித்த போது அவரை கொன்றுவிட்டு கட்டிகளுடன் ஓடிவிட்டான் ஸ்டீவ். அதைக் கேள்விப்படும் அவளுடன் அந்த நாலு பேரும் சேர்ந்து கொள்ள, தீட்டுகிறார்கள் திட்டம். வசதியாக அவன் வாழும் இடத்தைக் கண்டுபிடிக்கிறார்கள். டிவி மெக்கானிக் போல அவன் வீட்டினுள் நுழைகிறாள். வீட்டின் சேஃப்டி சிஸ்டத்தை அவள் சட்டைப் பையின் நுண் கேமரா அவர்களுக்கு எடுத்துக் கொடுக்கிறது. அழகான அவள் யார் என்று அறியாதவன், அவங்க எதிர்பார்த்தது போலவே, டேட்டுக்கு அழைத்து டேட் பிக்ஸ் பண்ணுகிறான்.
சந்திக்கிறாள். அவளைத் தன்னுடன் தங்க அழைக்கிறான் ஸ்டீவ். இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் என மறுக்கிறாள். ‘என் மீது நம்பிக்கை இல்லையா?’ என்கிறான். ‘நான் எந்த நபரையும் நம்புவேன். ஆனால் அவருக்குள் இருக்கும் சாத்தானைத்தான் நம்ப மாட்டேன்,’ என்கிறாள் புன்னகையுடன். அவன் முகம் மாறுகிறது. அவள் கையை மடக்கி கீழே கையை முறுக்குகிறான். ‘நீ யாருன்னு எனக்கு தெரிஞ்சு போச்சு. பிரிட்ஜெர் மகள் தானே நீ? அவன் தான் இந்த வார்த்தைகளை இதே மாதிரி அடிக்கடி சொல்வான்!’ சற்றும் எதிர்பார்க்கவில்லை அவள். அதற்குள் மற்ற நண்பர்கள் வந்து விட, ஸ்டீவைப் பார்த்து சொல்கிறாள்: ‘திருடனை விட மட்டமான ஒரே ஆள் யார் தெரியுமா? கோழை தான். நீ ஒரு கோழை!’
புகழ்பெற்ற ‘The Italian Job’ படத்தில் வரும் நயமான இந்த காட்சியில் ஸ்டெல்லாவாக வருபவர் Charlize Theron. எல்லா கட்டத்திலும் எழிலாகக் கொடுத்திருப்பார் தன் எக்ஸ்பிரஷன்களை.
Charlize Theron… இன்று பிறந்த நாள்.
முதல் பெரிய வாய்ப்பு Al Pacino வுடன் ‘The Devil's Advocate’ தவிர Tom Hanks உடன் ‘That Thing You Do.’
‘Monster’ படத்தில் சீரியல் கில்லர் வேடத்தில் நடிப்பதற்காக 20 கிலோ எடையைக் கூட்டியபோது இந்த ரோலுக்காகவா உன் லுக்ஸைக் குறைச்சுக்கறேன்னு அனுதாபித்தார்கள். ஆனால் அந்த ரோலுக்கு ஆஸ்கார் அவார்ட் ரோலானது அவர் கைக்கு. சந்தோஷமாக தன் சொந்த இடமான தென் ஆப்பிரிக்காவில் கொண்டாடினார்.
எளிய வாழ்க்கையை விரும்பும் ஷர்லீஸ் டிரோன் மிக வசீகரமானவர் லிஸ்டுகளில் மிக அதிகமாக இடம் பெற்றவர்.

Thursday, August 6, 2026

ஹாலிவுட்டின் மனோரமா...


1950 களில் கலக்கிய டிவி ஷோ அது. ‘I Love Lucy.’ பிரமாதமாகப் போய்க் கொண்டிருந்தது. நாயகி பிரபல காமெடி நடிகை. அவரும் கணவரும்தாம் தயாரிப்பாளர்கள். தான் குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதை அறிவித்தார் நாயகி, வேறு நடிகையைப் போடலாமென்று நினைத்து. அதையே கதையிலும் கொண்டு வந்துவிடலாம் என்றார் தலைமைக் கதாசிரியர். அப்படியே நடந்தது. அந்த 1953 ஜனவரி 19 அன்று நிஜத்தில் குழந்தை பிறந்த அன்று கதையிலும்!
அந்த நடிகை Lucille Ball… ஹாலிவுட்டின் மனோரமா! இன்று பிறந்த நாள்! (1911-1989)
நாலு வயதில் தந்தையை இழந்தவர். பள்ளிக்கூடத்தில் பென்சில்கூட வாங்க முடியாத வறுமையான இளமை. நாடகப் பள்ளியில் சேர்ந்தபோது, ரொம்ப வெக்கப் படறே, டயத்தை வேஸ்ட் பண்ணாதே என்று திருப்பி அனுப்பப் பட்டவர் மிகப் பிரபல நடிகையாகி இரண்டாம் வரிசை படங்களின் அரசியானார்.
மாடலிங், ரேடியோ, டிவி, சினிமா என்று கலக்கியவர். நாடகத்தில் நடிக்க நேரில் கேட்டபோது சேர்த்துக் கொள்ளாதவரை மாடலாக இருந்த போது வெளியான போஸ்டர் சினிமாவில் கொண்டு சேர்த்தது. Bob Hope உடன் ஜோடியாக உயர்ந்தார்.
சொந்த ஸ்டூடியோ வைத்த முதல் பெண்மணி. மூன்று கேமரா உபயோகித்து டிவி ஷோ எடுப்பதை முதலில் ஆரம்பித்து வைத்தது இவர்தான். பிரபல ‘Star Trek’ சீரியலை தயாரித்ததும் இவர் கம்பெனி தான்.
இவரது ‘Lucy and Superman’ எபிசோடில் George Reeves சூபர்மேனாக நடித்தார். டைட்டிலில் அவர் பேரைப் போட சம்மதிக்கவே இல்லையே இவர்? Superman இருக்கிறார்னு நம்பும் குழந்தைகளை ஏமாற்றலாகாது என்று!
“என்னை வெச்சு காமெடி ஒண்ணும் பண்ணலையே?”ன்னு கேட்க மாட்டார், ஏன்னா தன் காமெடி நடிப்புக்குக் காரணம் வசனகர்த்தாவும் டைரக்டரும்தாம் என்று சொல்பவராயிற்றே!
Quote?
‘அதிர்ஷ்டத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. என்னைப் பொறுத்தவரை அதிர்ஷ்டம் என்பது கடும் உழைப்பும் எது சரியான சந்தர்ப்பம், எது இல்லை என்று புரிந்து கொள்வதும் தான்.’
‘உங்களுக்கு எது முடியாது என்பதைத் தெரிந்து இருப்பது உங்களுக்கு எது முடியும் என்பதைத் தெரிந்து இருப்பதைவிட முக்கியமானது.’
‘முதலில் உன்னை நேசி. எல்லாம் சரியாகிவிடும். எல்லா விஷயங்களையும் நடத்த வேண்டுமானால் உன்னை உண்மையாக நேசிக்க வேண்டும்.’

Tuesday, August 4, 2026

நகைச்சுவைக்கு ஒரு பாலிஷ் ....


இங்கிருந்து அங்கே ஒரு ஜம்ப்.. அங்கிருந்து இங்கே ஒரு ஜம்ப். இங்குமங்கும் அணிலைவிட அதிவேகமாக தாவல்கள்... அது என்னமோ ரப்பர் மாதிரி இஷ்டத்துக்கு வளைகிற உடல்.. ஆம், சந்திரபாபு என்றதுமே அந்த அந்தர்பல்டிகள் தான் நினைவுக்கு வரும்.

வைரத்தை பட்டை தீட்டுவதுபோல நகைச்சுவைக்கு ஒரு பாலிஷ் கொடுத்தவர். கதாநாயகனை விட அதிக சம்பளம் வேண்டும் என்று கேட்டு வாங்கிய ஒரே நடிகர். லட்சம் தொட்ட முதல் காமெடி நடிகரும்!

இன்று பிறந்த நாள்.

ஆரம்பித்து வைத்த முன்மாதிரிகள் அனேகம். அதில் ஒன்று காமெடி நடிகர் கதாநாயகனாக நடிப்பது. கண்ணதாசனின் 'கவலை இல்லாத மனிதன்.' மற்றொன்று காமெடி நடிகர் சோகக் காட்சிகளிலும் சோபிக்க முடியும் என்று காட்டியது. ‘குமார ராஜா’ ஒன்று போதுமே?

“கல்யாணம் என்பது எது வரை?”என்று கதாநாயகன் பாடினால் “கழுத்தினில் தாலி விழும்வரை!” என்று அழகாகப் பதில் பாட இவர்தான் வேண்டும்! ('பாத காணிக்கை')

பாபு - நாகேஷ் ஜோடி சேரும்போதெல்லாம் அமர்க்களம்தான்.‘கடவுளைக் கண்டேன்’ முதல் ‘அன்னை’ வரை.

பத்மினி படத்தை வைத்துக்கொண்டு “உனக்காக, எல்லாம் உனக்காக..” பாடினாலும், சாவித்திரி படத்தை வைத்துக்கொண்டு “கோவா மாம்பழமே..” பாடினாலும் மாலினி படத்தை வைத்துக்கொண்டு “பம்பரக் கண்ணாலே…” பாடினாலும் அலுக்கவே அலுக்காது அந்த ஸ்டைல்!

“காவேரி ஓரம், கவி சொன்ன காதல்…” பாடலில் பாபுவின் பால் ரூம் டான்ஸ் திறமையை பார்க்கலாம் என்றால் ‘பதி பக்தி’ பாடலில் ராக் ஸ்டைலை ரசிக்கலாம்.
ஆம், எந்த மாதிரியும் ஆட வல்லவர். ‘சபாஷ் மீனா’ வில் சரோஜாதேவியுடன் “ஏறுங்கம்மா.. ரிக்‌ஷா ஏறுங்கம்மா…” விலிருந்து ‘நீதி'யில் “முத்தமிழின் செல்வன் வாழ்க..” என்று சிவாஜி, ஜெயலலிதாவுடன் ஆடுவது வரை சலிக்காத நடனம் அவருடையது.
பொம்மலாட்ட பொம்மை போல் பாட வேண்டுமா? “நான் கோலாலம்பூர் காட்டுக்குள்ளே குருவி பிடிக்கப் போனேன்..” (காத்தவராயன்)
கையையும் காலையும் மடித்து இடுப்பை ஒயிலாக ஒடித்து அவர் ஆடும் அந்த சந்திரபாபு ஸ்டைல் தனி முத்திரை பெற்றது.

அந்தப் படம் மட்டும் நன்கு ஓடியிருந்தால் ஜோரான டைரக்டராகவும் ஜொலித்திருப்பார். ஆம், அவர் தயாரித்து இயக்கிய ‘தட்டுங்கள் திறக்கப்படும்’. கே.ஆர்.விஜயா, சாவித்திரி, மனோகர் நடித்த க்ரைம் த்ரில்லர் அது. ஆங்கிலப் படங்களுக்கு இணையாக எடுத்திருப்பார். ஷாட்டுக்களை அந்தக் காலகட்டத்துக்கு ரொம்பவே அட்வான்ஸாக அமைத்திருப்பார். சாவித்திரியும் மனோகரும் விவாதிக்கும் காட்சியில் அந்த பிரம்மாண்ட செட்டின் ஒரு மூலையில் தொடங்கி, சுற்றி நடந்து அதே இடம் வரும் டிராலி ஷாட்டும் சரி, ஆடும் நாற்காலியில் குழந்தையைத் தாலாட்டும் சாவித்திரியை கணப்புக்குள் இருந்து காமிரா எட்டிப் பார்ப்பதும் சரி, சட்டென்று நிமிர்ந்து ரசிப்போம்.

அப்புறம் அந்த அட்டகாச ஷாட்: மாடியிலிருந்து மனோகரின் உடலை ஸ்ட்ரெச்சரில் எடுத்துக் கொண்டு நம்மை நோக்கி வருவார்கள். அப்படியே அந்த ஸ்ட்ரெச்சர் நம் தலைக்கு மேலாக படியிறங்கும்போது அசந்து போவோம். (காமிரா: பி.எஸ்.லோகநாதன்) படமே ஓர் உயர் தரத்தில் இருக்கும். பாபு பாடும் அந்தப் பிரபல "கண்மணி பாப்பா... மனிதன் பிறந்தது குரங்குக்குத்தான் என்று சொன்னது தப்பா..."(எம்.எஸ்.வி.)



ஆரம்பத்தில் அவர் பாடியது அவருக்கே அல்ல. ஏ.வி.எம்மின் ‘பெண்’ படத்தில் எஸ். பாலச்சந்தருக்கு. "கல்யாணம்... உல்லாசமாகவே.. உலகத்தில் வாழவே.."
ஏன், சிவாஜிக்கே பின்னணி பாடியிருக்கிறார். “ஜாலி லைஃப்.. தம்பதி யானால் ஜாலி லைஃப்.” (கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி) பாடலில். “பெண்டாட்டி கூடவே கொண்டாட்டம் போடுவே.. பின்னாலே நீயும் ஓடுவே.. என்ன சொன்னாலும் பின் பாட்டு பாடுவே.. என்னை கண்டாலும் காணாத மாதிரி.. எதோ காணாததை கண்ட மாதிரி…” என்ற வரிகளை அவர் பாடும் விதமே அலாதி!

சந்திரபாபுவுக்கே மற்றவர்கள் பாடியதும் உண்டு. யார் யார்? ‘அன்னை’யில் டிஎம்எஸ். ( “லைலா மஜ்னு..”) ‘பறக்கும் பாவை’யில் ஜேசுதாஸ் (“சுகம் எதிலே இதயத்திலா..”) ஏன், சீர்காழி கூட… ("அலங்கார வல்லியே.." - 'சபாஷ் மீனா')

நிறைய காமெடி நடிகர்களைப் போலவே சொந்த வாழ்க்கை சற்றே சோகம் சிந்துவது. 46 வயதில் மறைவு என்பது நம்மைத் திகைக்க வைத்த ஒன்று.

“குங்குமப்பூவே..”வை துள்ளலாக பாடிய அதே குரல் தான், “ஒண்ணுமே புரியலே உலகத்திலே..”வை உருக்கமாகவும் 'புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை..”யை அட்டகாசமாகவும் பாடுவது! அங்கே கிஷோர்குமார் என்றால் இங்கே இவர் பிரபலம் yodelling-இல்.

இவரது காமெடி டிராக்குக்காகவே கூடுதலாக ஓடிய படங்களும் உண்டு. உதா: ‘சகோதரி.’ விளம்பரத்தில் அந்த “நான் ஒரு முட்டாளுங்க..” தனி இடம் பெற்றது.

அவர் நாயகனாக நடிப்பதற்காக அவரே எழுதிய கதையாம் அது. அவர் நடிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் பீம்சிங் திரைக்கதையில் படம் வந்து வெற்றியும் பெற்றது: ‘பாவமன்னிப்பு'

சொல்ல வேணுமா? ‘சபாஷ் மீனா’வின் அந்த ஃபேமஸ் காட்சி! சிவாஜியின் அப்பா வரும்போது அவர் மேனேஜர், சந்திரபாபு டைப்பிஸ்ட் ஆகவும், பாபுவின் அப்பா வரும்போது அவர் மேனேஜர், இவர் டைப்பிஸ்ட் ஆகவும் சட்டென்று மாறும், தூள் கிளப்பிய சாகா வரம் பெற்ற காட்சி..

அதே படத்தில் சிவாஜியுடன் ஒரு காட்சி. பயந்த குரலில் தொடங்கி படிப்படியாக இறங்கி அழுகைக் குரலுக்கு அட்டகாசமாக மாறுவார். பாபு: “முதல்ல யார் வர்றாங்க தெரியுமா கண் முன்னால? அப்பா வர்றார். அப்புறம் அந்த கலெக்டர் அப்பாத்துரை வர்றார். (குரலில் பயம்.) அப்புறம் ஜெயில் வருதுடா.. அப்புறம் விலங்கு வருது... (குரலில் நடுக்கம்) அப்புறம் தூக்குக் கயிறு…” (குரலின் அழுகை)

டவுன் சந்திரபாபு கிராமத்தில் மாட்டிக்கொண்டு முழிக்கும்போது எரியும் கற்பூரத்தை முழுங்கும்போதும், கிராமத்து சந்திரபாபு டவுனில் இட்லியை பிளேட் பிளேட்டாக விழுங்கும்போதும் அந்த காமெடியிலும் வித்தியாசத்தை துல்லியமாக காட்டியிருப்பார்.

கைலியை தூக்கி முழங்காலில் செருகிக்கொண்டு இந்த காலிலிருந்து அந்த காலுக்கும் உடம்பை மாற்றி மாற்றி பேசிக் கலாய்ப்பது அவருக்கே உரித்தானது. மெட்ராஸ் பாஷையை அவர் போல யாரால் அத்தனை தத்ரூபமான பேசமுடியும்?

‘ராஜா’ படத்தில்... மீசையால் அவதிப்பட்ட சந்திரபாபு சலூனில் சென்று ‘மீசையை எடுத்துருப்பா!’ என்கிறார். அவன்: ‘சார், உங்க முகத்திலேயே அழகா இருப்பது மீசை ஒண்ணுதான்!’ இவர்: ‘அப்படின்னா மீசையை வெச்சிட்டு முகத்தை எடுக்க சொல்றியா?’

எப்ப எங்கே கேட்டாலும் மனது (சுற்றி யாருமில்லாவிடில் உடம்பும்) துள்ளும் பாடல்கள்! பத்மினி பிரியதர்சினியுடன் 'பாதகாணிக்கை’யில் வண்டலூர் ஜூவில் ஆடும் “தனியா தவிக்கிற வயசு.. இந்த தவிப்பும் எனக்கு புதுசு..”
ஜமுனா ராணியுடன் பாடும் “நீயாடினால் ஊராடிடும்.. நானாடினால் யார் ஆடுவார்..”. (பாண்டித்தேவன்)
“தடுக்காதே என்னை தடுக்காதே..”(நாடோடி மன்னன்)
“கொஞ்சம் தள்ளிக்கணும்..” (கடவுளைக் கண்டேன்)
“சிரிப்பு வருது சிரிப்பு வருது..” (ஆண்டவன் கட்டளை)
“உன் திருமுகத்தை ஒரு முகமா திருப்பு..” (மகாதேவி)
“எப்போ வச்சுக்கலாம்.. எப்படி வெச்சுக்கலாம்..” (பந்த பாசம்)
“நம்பள்கி பியாரி நம்பள் மஜா..” (பாதுகாப்பு)
ஒவ்வொரு தம்பதியையும் சிலிர்க்க வைத்த அந்தப் பாடல் சிகரம்! “பொறந்தாலும் ஆம்பளையா பொறக்கக் கூடாது… ஐயா, பொறந்துவிட்டா..”

Monday, August 3, 2026

மென்மையில் மேன்மை...


பாடலெழுத வாய்ப்புக் கேட்டு தன்னிடம் வந்தவரிடம் பிரபல இசையமைப்பாளர் நௌஷத், “உங்க மொத்த கவிதைத் திறமையையும் ரெண்டே வரியில சொல்லுங்க பார்ப்போம்!” என்றாராம். சொன்னார் அவர்:
“வலியின் வேதனையை இந்த உலகம் கேட்கச் செய்வோம்;
அன்பின் நெருப்பை ஒவ்வோர் இதயத்திலும் பற்ற வைப்போம்.”
உடனே தான் இசையமைக்கும் படத்துக்கு அவரைப் பாடலெழுதச் சொல்லிவிட்டார் நௌஷத். அந்தக் கவிஞர்...
Shakeel. மென்மையான கவிதைகள் எழுதுவதில் மேன்மையானவர். இன்று பிறந்த நாள்.
நௌஷத் அவர்களின் ஆஸ்தான பாடலாசிரியர் ஆனார். 'கங்கா ஜமுனா'வில் வைஜயந்திமாலா பாடும் அந்த ‘Do Hanson Ki Joda… Bichchad Gayo Re..” ஆல் இந்தியா ஹிட் பாடல். ஒலிக்காத திசையில்லை, உருகாத நெஞ்சமில்லை.
ஷகீல் எனறதுமே கைகள் தாமாகத் தட்டும் பாடல் ‘மொகலே ஆஸம்’ படத்தின் மகா பிரபல “Pyar Kiya To Darna Kiya..” 100 தடவைக்கு மேல் எழுதினாராம் இந்தப் பாடலை!
தவிர ஹேமந்த் குமார், ரவி, S.D.பர்மன் படங்களுக்கும் பரிசுப் பாடல்கள்…
திலீப் குமாருக்கு மிகவும் பிடித்த பாடல் இவரது "Madhuban Mein Radhika...” இந்தப் பாடல் காட்சியில் நடிக்க திலீப் 6 மாதம் சிதார் கற்றுக் கொண்டாராம்.
1961, 62, 63 என்று அடுத்தடுத்து மூன்று வருடமும் சிறந்த பாடல் Filmfare அவார்ட் இவருக்குத்தான். (Chaudwin Ka Chand, Gharana, Bees Saal Baad) பங்கஜ் உதாஸ் பாடிய சில கஜல்கள் இவர் எழுதியவை.
பரிசு பெற்ற இவரது “Husnvale Tera Jawab Nahi..” (Gharana) பாடலின் ஒரு வரி: “காற்றில் கரைந்திருக்கும் கதைகளின் மௌனம் உன் அதரங்களில் உறைந்திருக்கும்…”
மற்றொரு பாடலான “Chaudwin Ka Chand...” பற்றி சொல்லத் தேவையில்லை. “பதினான்காம் நாள் நிலவோ நீ... அல்லது பகலவன் தானோ?”
ரசியுங்கள், அந்த 'கங்கா ஜமுனா' பாடல் வரிகளை தமிழில் தருகிறேன்:
"அன்னமிரண்டு பிரிக்கப்பட்டன..
என்ன நியாயம்? என்னே துயரம்!
மகிழ்வில் இணைந்திருந்தோம்,
துயரில் சேர்ந்தில்லையே?
கண்ணீரோடையில் கண்கள் மூழ்கின
கனவுகளனைத்தும் கண்ணில் நொறுங்கின!"

Sunday, August 2, 2026

அட்டகாச காமெடி ...


1940-ல் வந்த படம் என்று சொன்னால் என்றால் நம்ப மாட்டீர்கள்.
ஆனால் ‘I Love You Again’ -ன் அட்டகாச காமெடி கதை இது:
அமைதியான பிசினஸ்மேன் வில்சன். கப்பலில் வந்து கொண்டிருக்கிறான். தவறிக் கீழே விழப்போன ஆளைக் காப்பாற்றப்போய் தலையில் அடிபடுகிறது. அம்போன்னு மயங்கியவன் விழிக்கும்போது ஒன்பது வருட அம்னீஷியா விலகி முன்பிருந்த ஜார்ஜுக்கு வருகிறான். 9 வருட முன் ரயில் ஆக்சிடென்ட்டில் நினைவிழந்த ஜார்ஜ். ஜாலியான ஃபிராடு ஜார்ஜ்!
இப்ப இந்த 9 வருட வாழ்க்கை மறந்துவிட்டது. இப்போது தான் யார் என்று ‘தன்’ லக்கேஜைக் குடைந்து பார்த்தபோது பணக்கார பிசினஸ்மேன் வில்சன்னு தெரியுது. பேங்க் பாஸ்புக்கில் ஒன்றரை லட்சம் டாலர். ‘ஆஹா! பணத்தை அடித்துவிட்டு கம்பி நீட்டி விடலாம்!’
கரையில் இறங்கினால் ஒரு இளம்பெண் வரவேற்கிறாள். மனைவி!
அடுத்த ஜாக்பாட் ஆக தெரிகிறாள் அந்த அழகி. மனைவியாமே.. அடடா, பேர் கூட தெரியாதே? எதற்கோ Okay, Okay என்றிவன் சொன்னப்போ யெஸ் என்று அவள் திரும்பிப் பார்க்க, அவள் பெயர் Kay என்று தெரிகிறது. ‘இப்பேர்ப்பட்ட அழகியோட கணவனா நான்?’
ஆனால் அவளோ அவன் கையெழுத்துக்காக காத்திருக்கும் டைவர்ஸ் பேப்பரை நீட்டுகிறாள். 'டல்லான வெறும் பிசினஸ் மக்கு! யார் வாழ்வார்கள் அவனோடு?' அதான் காரணம். திகைத்தவன் ஒரு மாசம் டைம் கேட்கிறான். பேங்கில் போனால் அவனுக்கு அடுத்த அதிர்ச்சி. அந்த பணம் கம்யூனிட்டி ஃபண்டு. கை வைக்க முடியாது.
வேறென்ன கவிழ்க்க முடியும் தன் ‘மறுபதிப்பி'டமிருந்து? யோசிக்கிறான். ஏகப்பட்ட நல்ல பேர் இருக்கிறது வில்சனுக்கு. சொந்தமா கொஞ்சம் நிலமும்! நண்பன் டியூக் ஐடியா தருகிறான். ‘அந்த நிலத்தில் பெட்ரோல் இருப்பதாக நம்ப வைத்து ஏகப்பட்ட விலைக்கு விற்றுவிடலாம்!’
இங்கே கே-க்கு ஆச்சரியம். படு ஜாலியான கணவனைப் பார்த்து! பார்ட்டி என்ன, டான்ஸ் என்ன? கலக்குகிறான். கருமியா இருந்தவனா இப்படி? தடுமாறுகிறாள் தன் முடிவில்.
பெட்ரோலை வாங்கி நிலத்தில் கொட்டிவிட்டு, பணக்காரப் பசங்களை அந்த இடத்துக்கு டூர் அழைத்துச் செல்வது போல அழைத்து வந்து ‘தற்செயலாக’ பார்க்க வைக்கிறான். அப்பாக்கள் ஓடிவந்து போட்டி போட்டு (ட்யூக் வந்து விலையை ஏற்றிவிட) அபார விலைக்குப் பேசுகிறார்கள். ‘அப்பாடா, பணம் வந்ததும் ஓட வேண்டியதுதான் பாக்கி!' ஆனால் இப்ப அவனுக்கு டிலெம்மா. கூடி வாழவா, ஓடி அவளை இழக்கவா? கே தான் ஜெயிக்கிறாள் மனதில்.
ஆனால் ட்யூக் விடுவதாயில்லை. மிரட்டுகிறான். அவனை எதிர்க்கும்போது தலையில் அடிபடுகிறது ஜார்ஜுக்கு. மறுபடி பழைய வில்சனாகிறான். ட்யூக், கே ரெண்டு பேருக்குமே ஏமாற்றம். ட்யூக் தன் திட்டம் பலிக்காதே இனியென்று அகலுகிறான்.
இப்பதான் கே-க்கு ஐடியா ஃப்ளாஷ் ஆகிறது. ஆக, தலையில் அடிபட்டால் போதும், தன் 'அடுத்தது'க்கு ஸ்விட்ச் ஓவர் ஆகிவிடுவான் அவன்! அகப்பட்ட ஃப்ளவர் வேஸை எடுத்து ஓங்குகிறாள் அடிக்க. “ஐயையோ, நடிச்சேனாக்கும் நானு!" என்கிறான், மறுபடி அம்னீசியா வந்த மாதிரி நடித்த ஜார்ஜ்.
கே ஆக நடித்தவர் Myrna Loy... 2 Aug. பிறந்த நாள்.



1940 இல் வந்த 'I love you again' எந்தளவு ஹிட் என்றால் இதே ஜோடியை வைத்து இதே போன்ற கதையில் அடுத்த படம் எடுக்கிற அளவுக்கு. படத்துல வர்ற எல்லா ஜோக்குகளும் கிடைக்கணும்னா, நீங்க படத்தை ரெண்டு தடவை பார்க்கணும்னு ட்ரெய்லர் சொல்லும்.
பிரபல Clark Gable -உடன் பல படங்களில் நடித்தவர். 1936 -இல் அவரை சினிமாவின் கிங், இவரை க்வின் என்று சொன்னாங்க. தன் வசீகரத்துக்கு முக்கிய காரணமாக ஒளிப்பதிவாளர்களை நன்றியுடன் கைகாட்டுவார்.
சொன்னார் பாருங்க, நச்சென்று ஒரு Quote!
‘Life is not a having and a getting but a being and a becoming.’

நேருக்கு நேர்...


‘நேருக்கு நேர் எதிர் கொள்வதால் எல்லாவற்றையும் மாற்றிவிட முடியாது ஆனால் நேருக்கு நேர் எதிர் கொள்ளாமல் எதையும் மாற்ற முடியாது.’
சொன்னவர் James Baldwin. (1924 - 87) அமெரிக்காவின் மிக முக்கிய நாவலாசிரியர், கவிஞர், பேச்சாளர். இன்று பிறந்த நாள்!
திரைப்படமாகிய இவரின் ‘If Beale Street Could Talk’ என்ற நாவல் ஆஸ்கார் அவார்ட் பெற்றது.
இன்னும் சொன்னவை:
‘கல்வியின் முரண் என்னவெனில் ஒருவன் கற்று விழிப்புணர்வு பெற தொடங்கியதும், தான் கல்விபெறும் சமூகத்தையே பரிசீலனை செய்ய தொடங்குகிறான்.’
‘மக்கள் தங்கள் வெறுப்புகளைப் பிடிவாதமாக சுமந்து கொண்டு திரிவதற்கு ஒரு காரணம் வெறுப்புகளில் இருந்து விடுபட்டால் வலிகளுடன் போராடவேண்டுமே என்பதால்தான்.’
‘நேசி, நேசிக்க விடு. அதைத் தவிர வேறு முக்கியமான விஷயம் உலகத்தில் இருக்கிறதா என்ன?’
‘மக்கள் சரித்திரத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். சரித்திரம் மக்களிடம் சிக்கிக் கொள்கிறது.’
‘அறியாமை அதிகாரத்துடன் சேர்ந்து இருப்பதுதான் நீதிக்கு கிடைக்க இருக்கிற மிகக்கொடூரமான எதிரி என்பது நிச்சயம்.’
‘வறுமையுடன் போராட நேர்ந்த எவருக்குமே தெரியும் ஏழையாக இருப்பது எத்தனை விலை உயர்ந்த விஷயம் என்று.’
‘அவற்றை அணியாமல் நாம் வாழ முடியாது என்று நாம் பயப்படுகிற, அணிந்தாலும் கஷ்டம் என்று நமக்குத் தெரிகிற முகமூடிகளை அன்பு அகற்றிவிடுகிறது.’

Saturday, August 1, 2026

பதினெட்டைத் தாண்டாத...


‘Kaajal’ படத்தில் ஒரு துணைப் பாத்திரத்தில் வருவார் அந்த நடிகை. பத்மினிக்கும் அவருக்குமான காட்சிகளை பார்க்கும்போது (ரோஷமூட்டும் காட்சியில் இவர் சொல்லும் வசனம் ஒன்று பத்மினியின் காதுகளில் மட்டுமல்ல, பார்ப்போர் காதுகளிலும் ஒலித்துக் கொண்டே இருக்கும்) இணையான அழகும் நடிப்பும் உள்ள இவர் எப்படி இன்னும் பெரிய கதாநாயகி ஆகாமல் இருக்கிறார் என்று எனக்குத் தோன்றிற்று. எண்ணி சில வருடங்களிலேயே most sought-after ஹீரோயின் ஆகிவிட்டார். திலீப் குமார், தேவ் ஆனந்த் ஜோடியாக நடித்ததோடு ராஜேஷ் கன்னாவோடு பத்துப் படங்களில் most successful ஜோடியாக.
Mumtaz…. 31 July பிறந்த நாள்! இனிய வாழ்த்துக்கள்!
அவரின் திரை வாழ்க்கையை மூன்று பருவமாக பிரிக்கலாம். 1. சாந்தாராம் படங்கள் (Stree, Sehra) உட்பட பெரிய படங்களில் சிறிய வேடங்களில் நடித்தது... 2. பத்துப் பதினைந்து தாராசிங் படங்களில் ஹீரோயினாக வந்தது. 3. டாப் ஹீரோயினாக ஜொலித்தது.
நட்சத்திரம் ஆக்கிய படம் ‘Do Raaste’ துணை வேடம், சில காட்சிகள்தான் என்றாலும் நான்கு பாடல் காட்சிகள் அவருக்கு கொடுத்திருந்தார் இயக்குநர் Raj Khosla.
கலகலவென்று சிரிக்கும் அந்த innocent laughter.. சட்டென்று அகல விரியும் கண்கள்... பதினெட்டைத் தாண்ட மாட்டேன் என்று அடம் பிடிக்கும் முகம்... இதெல்லாம் அவருக்கே ஆன சில அடையாளங்கள்!
திலீப்குமாருடன் ‘மாந்தோப்பில் நின்றிருந்தேன்..’ இந்திப் பாடலுக்கு ‘ராம் அவர் ஷ்யாம்’ படத்தில் ஆடும்போதும் சரி, ’காஞ்சீரே.. காஞ்சீரே..’ என்று ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா'வில் தேவ் ஆனந்த் தேடும்போது ஆடைத் தொழிற்சாலைக்குள் ஒளிந்தோடும்போதும் சரி, அந்தப் பெரிய கதாநாயகர்களுடன் ரம்மியமாகக் காட்சியை பகிர்ந்து கொள்வார், Not to mention ‘பிரம்மச்சாரி’யில் ஷம்மி கபூருடன் ‘ஆஜ்கல் தேரே மேரே ப்யார்....’ என்ற அந்த அட்டகாச நடனம்!
ரிகார்டுகளில் ஒன்று ராஜேஷ் கன்னாவுடன் நடித்த எட்டுப் படங்களின் பிளாட்டினம் ஜூபிலி. நடிப்பில் கலக்கிய படம் அவருடன் ‘Aap Ki Kasam’ என்றால், முத்திரை பதித்த படம் சஞ்சீவ் குமாருடன் ‘Khilona’ (இந்தி எங்கிருந்தோ வந்தாள்). உச்சக் காட்சியில் ஞாபகம் இல்லையா, ஞாபகம் இல்லையா என்று ஒவ்வொன்றாகச் சொல்லி சஞ்சீவ்குமாரின் நினைவு நியூரான்களை ஆக்டிவேட் செய்ய பதைபதைப்புடன் கதறும் காட்சியில் ‘இதோ, இன்னொரு மீனாகுமாரி’யாகியிருப்பார். (Filmfare Award).
‘அரங்கேற்றம்’, படம் இந்தியில் அரங்கேற்றம் ஆனபோது (‘Aaina’), நடிப்புக்கு மற்றொரு நல்ல வாய்ப்பு.
ஆனால் பின்னி யெடுத்தது தேவ் ஆனந்தின் மனைவியாக ‘தேரே மேரே ஸப்னே’ யில் தான்! நடிகை ஹேமமாலினியுடன் பழகும் கணவனின் போட்டோ பார்த்து கோபத்தில் இருப்பார். கண்ணைக் கசக்கிக் கொண்டு அடுக்களையில். வீட்டுக்கு வரும் தேவ் அவள் பேச்சைப் பார்த்து, என்ன ஆச்சுன்னு கேட்டபடி அவளிடம் வர, அந்த சண்டைக்கிடையிலும், “ஷூவைப் போட்டுட்டு அடுக்களைக்குள்ளே வராதீங்க, ஆமா!”ன்னு கத்துவது ஓ, மறக்க முடியாத சீன்

Sunday, July 26, 2026

ரசி ரசி என்று...


‘இப்போது நீங்க அஞ்சு பேரும் உயிரோடு இருப்பதற்கான ஒரே காரணம் நீங்க யாரிடம் ஆட்டையை போட்டீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாது என்பதுதான்!’ என்கிறான் வில்லனிடமிருந்து வந்தவன், அந்த ஐந்து மினி சைஸ் திருடர்களிடம். உயிர் பிழைக்க அவர்களுக்கு ஒரு ஃபைனல் அஸைன்மெண்ட் கொடுக்கப்படுகிறது. கொடுத்தது யார் என்று தெரியும் போது..?
படம்: ‘The Usual Suspects’.. சப்த நாடியும் ஒடுங்கினாற்போல் விசாரணைக்காக அமர்ந்திருக்கும் கெவின் பாத்திரம்தான் படத்தின் உயிர் நாடி. அந்த தன் முதல் காட்சியிலிருந்து காரில் ஏறும் கடைசி காட்சி வரை அவர் நடிப்பு ரசி ரசி என்று கதறும்.
அப்படியே அள்ளிக்கொண்டு விட்டார் Best Supporting Actor ஆஸ்காரை! நாலாவது வருடம் Best Actor பரிசையும் ('American Beauty')
Kevin Spacey... இன்று பிறந்த நாள்!
இவர் குரல் தனி ஒலி. வித்தியாசமான, மெதுவாய்த் தவழ்ந்து வரும் குரல்.
Top 10 வில்லன்கள் பட்டியலில் இரண்டு இடத்தை இரண்டு படங்களுக்காக அள்ளிக்கொண்டு விட்டவர் இவர் ஒருவராகத்தான் இருக்கமுடியும்.
’Se7en’ படத்தில் சீரியல் கில்லர் ரோல் இவருக்கு. பாவத்துக்கு ஒருவராக ஏழு அப்'பாவி'களை கொலை செய்ய கிளம்பும் அவரின் மாடஸ் ஆப்பரேண்டியைக் கண்டுபிடித்து அவரைத் தூக்க முயலும் அதிகாரியாக Morgan Freeman! சபாஷ் சொல்லும் சரியான போட்டி!
சக்கைப்போடு போட்ட படம் ‘L.A.Confidential’. நட்சத்திரங்களின் வீக்நெஸை வைத்து நாலு காசு ஸைடில் பார்த்துக் கொண்டிருந்தவர், நல்ல பக்கம் சேர்ந்து உண்மைக்காக போராடும் போலீஸ் அதிகாரியாக மாறுவதை நவீனமாக சித்தரித்திருப்பார்.
திரையை விட மேடையே விருப்பம். என்ன சொல்றார்? ‘என்னதான் பிரமாதமாக நீங்கள் ஒரு படத்தில் நடித்தாலும் அதை விட நன்றாக அதில் நீங்கள் நடிக்க முடியாது. நாடகத்தில் அடுத்த செவ்வாய்க்கிழமை நீங்கள் இன்னும் பிரமாதமாக நடிக்க முடியும். அது தான் நாடகத்தின் த்ரில்!’
‘நாடக மேடை செய்து நசிந்து விட்டது என்கிறார்கள். ஆனால் மனிதர்கள் கதை கேட்க விரும்பும் வரை, மனிதர்கள் கதை சொல்ல விரும்பும் வரை நாடகம் உயிரோடுதான் இருக்கும்.’
நல்ல பாத்திரத்தை நாடிப் போவார். Woody Allen-க்கு Netflix சந்தா ஒன்றை அனுப்பினாராம் என் படங்களைப் பார்க்கலாமே என்றபடி. கண்டிப்பாக உங்களைப் பயன்படுத்திக் கொள்வேன் என்று அவர் பதிலளித்தார்.
Jack Lemmon தான் இவரது ரோல்மாடல். ‘எப்படி ஒரு நல்ல நடிகராகவும் நல்ல மனிதராகவும் இருக்க முடியுமென்று அவர் தான் கற்றுக் கொடுத்தார் எனக்கு.’
Other Quotes? ‘வெற்றி என்பது செத்துப் போவது மாதிரி. மேலும் மேலும் வெற்றி அடையும்போது இன்னும் உயரத்தில் உங்கள் வீடுகள் அமையும். இன்னும் உயரமாகும் வீட்டுச் சுவர்கள்.’
‘மிகப்பெரும் வெற்றி அடைந்ததும் அந்த கேள்வி உங்கள் முன் வந்து நிற்கும்: இதை வைத்துக் கொண்டு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? கார், வீடு, வசதிகள் என்று வாங்கிக்கொண்டு ஒதுங்கி ஓய்வு எடுக்கப் போகிறீர்களா அல்லது அந்த வசதிகளை வைத்துக் கொண்டு ஏதாவது செய்து அன்பைப் பரப்பப் போகிறீர்களா?’

Friday, July 24, 2026

அந்த இடையிசை!


இழுத்து நிறுத்தும் அந்த இடையிசை!
விஸ்தாரமாக மெல்லிசையை அதன் விவரிக்க முடியாத எல்லைகளுக்கு விஸ்தரித்த விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் அந்தப் பாடல்!
“தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா? காதல்
கண்கள் உறங்கிடுமா?"
தென்றலில் இலை தவழ்வது போல இழைந்து செல்லும் அந்தப் பல்லவி முடிந்ததும் துவங்கும் பாருங்க (கேளுங்க) ஒரு இடையிசை .. (progression)
வயலின்கள் ‘தனனனா..’ என்று அலைகளாக மேலெழும்ப அதற்கு மேல் ஃப்ளூட் ‘தானனானனா..’ என்று அடுத்த கட்டத்துக்கு அந்த இசைச் சரத்தை எடுத்துச் செல்ல அதை நாம் ரசித்துக் கொண்டிருக்கும் போதுதான் ஒரு ஆனந்த அதிர்ச்சி! பேஸ் கிதார் மேலோங்கி ‘தும்த தும் துதும்…’ என்று அதை ஆக்கிரமித்து சரணத்தில் கொண்டு போய் முடிக்கையில்… கையில் இல்லை நம் மனம்!
அப்பா! இசைச் சாட்டையால் சொடுக்கிவிட்டார்கள் நம் உள்ளத்தை விஸ்-ராம்!
ரீப்ளே பண்ணாமல் முதல் சரணத்துக்குள் போக முடியவில்லை. ஒரு வழியாக போய் வந்தால் அடுத்த இடையிசையில் ஜாக்பாட் நம்பர் 2 வுடன் காத்திருக்கிறார்கள் மெல்லிசையர்!
இந்த முறை வயலின் தொடங்கியதை ஃப்ளூட் எடுத்துச் செல்லும்போது ஆனந்த அதிர்ச்சியாக ‘ஆ அ ஆ அ ஆ…’ என்று சுசீலாவின் தேன்குரல் வயலினை ரீப்ளேஸ் செய்ய, பேஸ் கிதார் அதற்கும் சளைக்காமல் தாளம் போட இனிதே இரண்டாவது சரணத்தை ஆரம்பிக்கிறார் ஏ.எம்.ராஜா.
கொடுத்தவர்கள் மன்னர்கள்! கவனித்து ரசித்தால் நாம் வின்னர்கள்!
மருதகாசியின் மதுர வரிகள் இடம் பெற்றது ‘பெற்ற மகனை விற்ற அன்னை’ படத்தில். (எஸ் எஸ் ஆர், விஜயகுமாரி)

Thursday, July 23, 2026

கடைசிக் குடம்


கடைசிக் குடம்
கே.பி.ஜனார்த்தனன்
('இலக்கியப்பீடம்' சிறுகதைப் போட்டி 2005 - பரிசு பெற்ற கதை)
கனகசுந்தரம் தவித்தார். கண்ணுக்கெட்டிய தொலைவு வரை தண்ணீருக்கான எந்த சாத்தியக் கூறும் தென்படவில்லை. இப்படியோர் அத்துவானக் காட்டில் இப்படியொரு நெருக்கடியான வேளையில் பரிதவித்துக் கொண்டு நிற்க வேண்டி வரும் என்று தன் வாழ்நாளில் ஒருபோதும் நினைத்ததில்லை அவர். காலடி நிலத்தைப் போலவே அந்த உண்மை சுட்டது.
அவருக்கு இப்போது தண்ணீர் வேண்டும். உடனடியாக வேண்டும். ஓர் அரைக் குடமாவது வேண்டும்.
அங்கே இந்நேரம் மகளுக்கு என்ன ஆச்சோ என்று நினைத்தபோது அவர் மனம் பதை பதைத்தது. அஜிதா உயிருக்கு ஆபத்து ஏதும் நேர்ந்து விடக்கூடாதே என்று துடி துடித்தார். “கடவுளே, முருகா, உன் அறுபடை வீட்டுக்கு வந்து அன்னதானம் செய்யறேன், எப்படியாவது என் மகளைக் காப்பாத்து!”
அந்த நேரத்தில் அவர் புறப்பட்டு இங்கே வந்திருக்கவே கூடாது. மகளுக்குத் தலைப் பிரசவ நேரத்தில் யாராவது புது ஃபாக்டரிக்கு ஸைட் பார்க்கப் போவார்களா? புத்திக்குத் தெரிவது ஆசைப்பட்ட மனசுக்குத் தெரியாமல் போச்சே!
எண்பது கிலோமீட்டர் தானே, விருட்டுன்னு ஒரு டிரைவ் போய்விட்டு வந்து விடலாம் என்று காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். டிரைவரைக் கூட அழைத்துக் கொண்டு வரவில்லை, அங்கே வீட்டில் ஆட்கள் தேவைப்படுமே என்று.
இடத்தைப் பார்த்துப் பேசி முடித்து அட்வான்ஸ் நீட்டும்போது செல் ஒலித்தது.
“அஜிதாவுக்கு வலி எடுத்துட்டுதுங்க. நாங்க உடனே ஆஸ்பத்திரிக்குப் போறோம்.”
“வலிதானா? கன்ஃபர்ம் பண்ணிட்டியா?”
“ஐயோ அதெல்லாம் ஆச்சுங்க. நீங்க உடனே….”
“ஓகே. அப்ப அட்மிட் பண்ணிடு. நான் இதோ புறப்பட்டு வந்துடறேன்.”
“வந்துடுங்க. ஏற்கனவே அவளுக்கு பிராப்ளம் இருக்கு. டாக்டர் சொல்லியிருக்காரு. ஞாபகம் இருக்கில்ல?”
இருக்கிறது. அவர் அதற்குள் காரில் ஏறி விட்டிருந்தார். ”அப்ப பார்க்கலாம்யா! அட்வான்ஸ் பத்திரத்தை மானேஜர் கொண்டு வருவாரு.”
வண்டியைக் கிளப்பி அந்தப் பழைய தார் ரோட்டில் ஏதோ ஒரு சிற்றூரைத் தாண்டிக் கொண்டிருந்தபோது செல் மறுபடி கூப்பிட்டது. “ஹலோ!”
பார்வதியின் அழுகைதான் முந்திக்கொண்டு கேட்டது. “டாக்டர் என்னென்னமோ சொல்றாருங்க. ஏதோ சிக்கலாம். நீங்க எங்கே இருக்கீங்க?”
“வந்துட்டுத்தான் இருக்கேன். என்ன சிக்கல்? செல்லை டாக்டர்கிட்டே கொடு.”
“அவரு தியேட்டருக்குள்ளே இருக்காருங்க. பிளட்டுக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். ஏ பாசிடிவ்.”
“என் குரூப் கூட… சரி, பெருமாள்கிட்டே சொல்லு. உடனே…” என்று சொல்வதற்குள் செல் சிக்னலை முற்றிலுமாக இழந்து விட்டது. “சே!”
எதிரில் தென்பட்ட மாட்டு வண்டியைக் கைநீட்டி நிறுத்தினார். “மெயின் ரோட்டுக்கு இன்னும் எத்தனை தொலைவு இருக்குப்பா? அர்ஜெண்டா போகணும்.”
“அது இருக்குங்க ஒரு இருபது கிலோமீட்டரு. நீங்க இப்படி இந்த மண் ரோட்டிலே புகுந்து ஸ்ட்ரெயிட்டா போனீங்கன்னா அதிலே பாதி தொலைவு கூட இருக்காதுங்க. மருங்கூர்கிட்டே ரோட்டிலே ஏறிடலாம்.”
“இந்த ரோட்டிலேயா? ரோடு ஒரு மாதிரி இருக்கே?”
“அதெல்லாம் சரிதாங்க. ஏத்தம் இறக்கமா இருக்குமே தவிர குழப்பம் ஒண்ணுமில்லீங்க. அட, துரிதமா போகணும்கறீங்க. அப்புறம் யோசிச்சிட்டிருந்தா எப்படிங்க?”
ரோடு சமாளிக்கும்படியாகத்தான் இருந்தது. ஆளரவம் எதுவும் தென்படவில்லை. வெகு தொலைவில் ஏதோ ஒன்றிரரண்டு குடிசைகள். மேலே பறக்கிற பருந்துகளும் காக்கைகளும். வெயில் தகித்தது.
பாதி தொலைவு வந்திருப்பார். கார் சட்டென நின்று விட்டது.
இறங்கி பேனட்டை திறந்து ஆராய்ந்தார். புகை முகத்தைச் சூழ்ந்தது. ரேடியேட்டர் தண்ணீர் கேட்டது.
தண்ணீர்! இந்த அத்துவானக் காட்டில் தண்ணீருக்கு எங்கே போவது? யாரிடமாவது கேட்கலாம் என்றால் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை ஒருவரும் தென்படவில்லை.
அங்கே என்ன ஆச்சோ? பார்வதியால் ஓரளவுக்கு மேல் சமாளிக்க முடியாது. டாக்டர் என்ன க்ரிடிகல் சிச்சுவேஷனைச் சொல்லப் போகிறாரோ? அதிலே அவள் துவண்டு, தடுமாறி, எப்படி என்ன முடிவு எடுத்து…
அவர் மட்டும் அங்கே இருந்தால் என்ன பிரச்சனை என்றாலும் சமாளித்திருப்பார். ஃபிளைட்டில் கூட ஸ்பெஷலிஸ்டை வரவழைத்திருப்பார்.
இதுவரை வாழ்க்கையில் அவர் சமாளித்திராத பிரச்னையே இல்லை. முந்து, முந்து, முந்திக் கொண்டு முன்னேறு. இதுவே அவரது வாழ்க்கையின் தாரக மந்திரம். அவரது சுய முன்னேற்றப் பாய்ச்சல்கள். அவற்றின் வேகம். மற்றவர்களைப் பின்னுக்குத் தள்ளி விட்டு முன்னேறிப் போய்க் கொண்டே இருப்பார். எந்த சந்தர்ப்பத்திலும் தோல்வியுறாதவர் இப்போது வசமாக மாட்டிக் கொண்டு விட்டார்.
சுற்றிலும் மண்டியிருந்த முள் மரங்களைப் பரிதாபமாகப் பார்த்தார். இந்தப் பக்கம் இறங்கிப் பார்க்கலாமா? தண்ணீர் கிடைக்குமா? எந்தப் பக்கம் இறங்கித் தேடினாலும் தண்ணீர் கிடைக்கிற மாதிரி தெரியவில்லை. வந்த வழியே திரும்பி நடந்தால் மட்டும் - பத்து கிலோமீட்டருக்கு மேலேயே இருக்குமே? ஏதாவது சான்ஸ் இருக்கலாம். அது நடக்கக்கூடிய காரியமா? சே, இப்படி வந்து சிக்கிக் கொண்டோமே?
மனதில் குமைந்தபடி வந்த வழி திரும்பிப் பார்த்தபோதுதான் அந்தச் சிறுமியைப் பார்த்தார்.
தலையில் தண்ணீர்க் குடம்!
அவர் நாக்கில் எச்சில் ஊறிற்று. ‘கிடைச்சிட்டது!’
அவளைப் பார்த்தார். ஒட்டி உலர்ந்த தேகம். சாயம் போயிருந்த சட்டை. காய்ந்த சேறு அப்பியிருந்தது பாவாடையில். எண்ணெய் காணாத தலை தரிசாக வறண்டிருந்தது.
நிறுத்தினார். “இந்தா பிள்ளே! எங்கேயிருந்து தண்ணி கொண்டு வர்றே?”
“அப்பாலே புதுமலையிலே ஒரு குட்டை இருக்கு. அதிலேயிருந்துதான்.”
“ரொம்பத் தொலைவோ?”
“ஆமா.. ஏழு கிலோ மீட்டர். எங்க வீட்டிலேயிருந்து.”
“உங்க வீடு எங்கேயிருக்கு?”
“அது போகணுங்க.. இன்னும் மூணு கிலோமீட்டர்.”
“நல்ல சமயத்தில் தெய்வம் மாதிரி வந்தே.” விஷயத்தைச் சொன்னார். “அந்தத் தண்ணியைக் கொஞ்சம் கொடு, உனக்கு நான் பணம் தர்றேன்.” கையை நீட்டினார், நூறு ரூபாய் நோட்டுடன்.
அவள் யோசிக்கவில்லை. தீர்மானமாகச் சொன்னாள். “முடியாதுங்க.”
“என்னது… தரமாட்டியா?”
“ஆமாங்க. தரமாட்டேன்.”
“ஏய், உனக்கு எவ்வளவு வேணா பணம் தர்றேன். என் மகளுக்கு அங்கே பிரசவம் நடக்குது. சிக்கல் அதிலே. நான் உடனே போகணும். என் உயிரே அங்கே தான் இருக்கு. இந்தா…” நோட்டுக் கற்றைகளை எடுத்து நீட்டினார்.
“அதான் சொன்னேன்ல.. முடியாது! வழி விடுங்க.” அவள் தாண்டிச் செல்வதிலேயே குறியாயிருந்தாள்.
“ஏம்மா தர மாட்டேங்கிறே?”
“எப்படிங்க தர முடியும்? எங்களுக்குக் குடிக்கக் கூட தண்ணியில்லே! எங்கப்பா, அம்மா, அண்ணன், அக்கா நாலு பேரும் வேலைக்கு போயிருக்கிறாங்க. ஊரை சுத்தி ரொம்ப தொலைவுக்கு தண்ணி கிடையாது. கிழக்கே இப்படி பத்து கிலோமீட்டர் நடந்து போய் புதுமலையிலேயிருந்துதான் தண்ணி கொண்டு வரணும். அதனாலதான் நான் வேலைக்குப் போகலை. வேலை முடிஞ்சு அவங்க பசியோட வருவாங்க. அதுக்குள்ள நான் ரெண்டு குடம் தண்ணி எடுத்து சோறாக்கி வெக்கணும். ஒவ்வொரு குடமாத்தான் எடுத்திட்டு வரமுடியும். ஏன்னா… எனக்கு எலும்பு நோய் இருக்கு. எப்படி இந்தத் தண்ணியைத் தருவேன்? எங்க உசிரும் இந்த தண்ணியிலேதான் இருக்கு!” முகத்தில் உறுதி ஓடியது.
பத்து கிலோமீட்டர் இந்தக் கல்லிலும் முள்ளிலும் நடந்து… அவர் காலுக்குள் ஒரு மாதிரி கூசியது. கலங்கி சாயா கலரில் தழும்பிய தண்ணீரைப் பார்த்தார்.
‘இதையா குடிக்கிறாங்க? ஏன் டி.பி. எல்லாம் வராது?’
“கேக்கிறதுக்கே ரொம்பச் சங்கடமா இருக்கும்மா. தண்ணிக்கு இங்கே இவ்வளவு கஷ்டமா?” தேனொழுகப் பேசினார் “இத பாரும்மா, நீ கஷ்டப்பட்டு எடுத்துட்டு வந்த தண்ணியைக் கொடுன்னு கேக்க உண்மையிலேயே நான் விரும்பலை. ஆனா, நான் இருக்கிற நிலைமை அப்படி. கேக்கிற நிலைமையிலே கடவுள் என்னைக் கொண்டு வந்து விட்டுட்டார். பாரு.. இப்ப இந்தத் தண்ணியை இதிலே விட்டால் வண்டி கிளம்பிடும். நீயும் என்னோடவே வா. மெயின் ரோடு போனதும் முதல் ஊர்ல தண்ணியை வாங்கி உன்னை ஒரு டாக்ஸி பிடிச்சு அனுப்பி வெச்சிடறேன். சரியா?”
“முடியாது,” என்றாள் அவள் அழுத்தமாக.
“அப்புறமும் ஏம்மா முடியாதுங்கறே? உனக்கு வேண்டியது தண்ணி தானே? எனக்கும் உனக்கும் கிடைக்கிற மாதிரி ஏற்பாடு பண்ணிடறேன்ன பிறகும் மறுக்கிறியே… ஏன்?”
“ஏனா? ஏன்யா நான் இதைத் தரணும்? உங்களை மாதிரி ஆளுங்களுக்குத் தண்ணி கொடுக்க மாட்டேன். நாங்க இன்னிக்கு தண்ணிக்கு இந்தப் பாடு படறதுக்குக் காரணம் நீங்கதான்!”
“நாங்களா? என்ன பிள்ளே உளர்றே?”
“உளரலே. எங்கம்மா சொல்லியிருக்கா. எல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கா.”
“என்ன சொன்னா?”
“உங்கள மாதிரி ஆளுங்களோட சுயநலத்தாலதான் இன்னிக்கு நாட்டிலே தண்ணிப் பஞ்சம். காடுகளை எல்லாம் அழிச்சிட்டீங்க. அப்புறம் எப்படி மழை பெய்யும்? விவசாயத்திலே வர்ற வருமானத்திலே படிப்பீங்க. அப்புறம் கிராமத்தைக் காலி பண்ணிட்டு டவுனுக்கு போயிடுவீங்க. டவுனிலிருக்கிற மரம், செடியை எல்லாம் வெட்டித் தள்ளுவீங்க. டவுனைப் பெரிசாக்கிப் பெருசாக்கி பக்கத்து கிராமத்தை எல்லாம் விழுங்கி ஏப்பம் விட்டுடுவீங்க. சுத்தியிருக்கிற வயலையெல்லாம் அழிச்சு வீடு, பாக்டரின்னு கட்டிடுவீங்க. இப்படி உலகத்தை சிமெண்டு கட்டடங்களா மாத்திட்டே போனா அப்புறம் மழை எங்கே பெய்யும்? தண்ணி எப்படிக் கிடைக்கும்?
“எங்கம்மா சொல்லுவா.. இயற்கையிலே எல்லாத்திலேயும் ஒரு சுழற்சி இருக்குதாம். பெரியவங்க சொல்லியிருக்கிறாங்க. கிராமத்திலே என்ன பண்ணறோம்? சாப்பாட்டிலேருந்து நமக்கு சக்தி வருது. அந்த சக்தியை உழைப்பாக்கி வயல்லே வேலை செய்றோம். அந்த உழைப்பிலே பயிரு வளர்ந்து மறுபடி நெல்லு விளைஞ்சு சாப்பாடு கிடைக்குது. பூமியிலிருந்து எடுத்ததை பூமிக்கே திரும்பக் கொடுத்திடறோம்.
“கடல்லேயிருந்து தண்ணியை எடுக்குது சூரியன். மலையும் காடும் அதை மழையாக்கித் தருது. பூமியிலே அது ஆறா ஓடி மறுபடியும் கடலுக்கே வருது. அது மாதிரி! ஆனா உங்க டவுன் ஆளுங்க இப்ப என்ன பண்றீங்க? பூமியிலேயிருந்து என்னென்னமோ எடுக்கறீங்க… ஆனா பூமிக்கு என்ன திருப்பித் தர்றீங்க? அல்லது தானாக பூமிக்குத் திரும்பக்கூடிய எதையாவது தடுக்காமல விட்டுருக்கீங்களா?
“உலகத்திலே இயல்பா இருக்கிற சுழற்சியை கலைக்கிறீங்க. அதனால கஷ்டப்படுறது யாரு? இப்ப முதல்ல நாங்க. எங்களை மாதிரி அப்பாவிங்க. அப்புறம் கடைசியிலே நீங்க. ஆமா, ஒரு நாள் நீங்களும் அதனால பாதிக்கப்படுவீங்க. பாதிக்கப்படணும். பட்டே தீருவீங்க. ஆமா… அப்படிப் பாதிக்கப்பட்டுத்தான் இப்ப இங்கே நீங்க நிக்கறீங்க!”
கனகசுந்தரம் ஸ்தம்பித்து நின்றார். அவளுடைய ஒவ்வொரு வார்த்தையும் சாட்டையடியாக விழுந்தன. காக்கையொன்று வேகமாகச் சிறகடித்து அவர்களுக்குக் குறுக்கே பறந்து சென்றது.
மகளின் பிரசவச் சிக்கல், போராட்டம் என்று அவர் இருந்த நிலைமையை முற்றிலுமாக மறந்து போனார். நேரம் நின்று போயிருந்தது.
உலகத்தின் கடைசிக் குடம் தண்ணீரை வைத்துக்கொண்டு உலகின் கடைசி இரண்டு மனிதர்கள் வார்த்தைகளால் போராடிக் கொண்டிருந்த மாதிரி பட்டது.
தன் பங்கில் நியாயம் சற்றுமின்றி போரில் தோற்றுப் போனதை உணர்ந்தார்.
“உண்மைதாம்மா! சுயநலம்கிற மந்திரத்தை உச்சரிச்சுக்கிட்டே வாழ்க்கை முழுதும் வாழ்ந்திடறோம். அதனுடைய பாதிப்பு சுத்திச் சுத்தி கடைசியிலே எங்களையும் தாக்கும்கிறது எங்களுக்குப் புரியலே. நீ சொல்றது சரிதாம்மா. இன்னிக்கு நீங்க. நாளைக்கு நாங்க. நாங்களும் ஒரு நாள் கஷ்டத்தை சந்திச்சே ஆகணும். எது எல்லாரையும் கஷ்டத்தில் கொண்டு விடுமோ அதை நோக்கி நாங்க கடுமையான வேதத்திலே போயிட்டிருக்கோம். நல்லாவே தெரியுது எனக்கு. இனிமே யோசிப்பேன். என்னை யோசிக்க வச்சிட்டே. புறப்படும்மா, வீட்டிலே எல்லாரும் பசியோட வருவாங்கன்னு சொன்னியே…”
அவள் புறப்படவில்லை. மெல்ல அந்த பிளாஸ்டிக் குடத்தை இறக்கி கார் மீது வைத்தாள். “எடுத்துக்குங்க,” என்றாள்.
“இல்லே.. வேணாம்மா.”
“இல்லிங்க, உங்க மக…”
“என்ன நடக்கிறதோ நடக்கட்டும் அங்கே. இயற்கையோட தீர்ப்பு அதுன்னு ஏத்துக்கிறேன்.”
“இல்லைங்க, ரொம்ப நாளா சுமந்த கோபம். கொட்டிட்டேன் வார்த்தையை. பெரிசா எடுத்துக்காதீங்க. எதிலே ஊத்தணுங்க?” என்று அவள் முற்பட, அவர் தயங்கிய அந்த வினாடி…
சர்ரென்று பறந்து வந்த இரு காக்கைகள் அந்தக் குடத்தின் மீது மோதின.
குடம் கவிழ்ந்து பள்ளத்தில் உருண்டோட அதிலிருந்து சாடிய தண்ணீர் - அந்த இடத்தில் அது வெறும் தண்ணீரா? - தரையில் புரண்டோடியது. காக்கைகள் அதே வேகத்தில் இறங்கிப் பாய்ந்து, உறிஞ்சும் செந்தரையுடன் போட்டியிட்டு அதைப் பருகிக் கொண்டு பறந்தன.
அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர் சிறுமியும் கனகசுந்தரமும்.
“இந்த தண்ணீர் மீது அந்த பறவைகளுக்குத்தான் என்னை விட உரிமை போல,” என்றார் விதியை உணர்ந்தவர் மாதிரி.
சிறுமி சாலையின் ஓரப்பள்ளத்தில் மெல்ல இறங்கிச் சென்று அந்த குடத்தை எடுத்துக் கொண்டாள்.
அவர் பக்கெட்டை எடுத்துக் கொண்டார்.
அவள் வந்த வழியே நடந்தார்கள், மௌனமாக.
><><><

Thursday, July 16, 2026

நிறைய 'முதல்'கள்...


M.G.M. பாரமௌண்ட் , யுனிவர்சலுக்கு இணையாக தமிழ்நாட்டில் ஒரு ஸ்டூடியோ கொடிகட்டிப் பறந்தது. சென்னையில் கூட அல்ல. சேலத்தில். 130க்கு மேலான படங்கள் தயாரான அந்த மாடர்ன் தியேட்டர்ஸை நிறுவியவர்..
T. R. சுந்தரம்.. இன்று பிறந்த நாள்.



லீட்ஸ் யூனிவர்சிடி லண்டனில் டெக்ஸ்டைல் எஞ்சினீயரிங் படித்துவிட்டு வந்தவர் தமிழ் சினிமா இண்டஸ்ட்ரியை லீட் செய்தவர்களில் ஒருவரானார். பேசும் படம் ஆரம்பித்த காலம் அது. சினிமா ஒரு பிஸினஸ் ஆக களம் இறங்கியிருந்தது. நண்பருடன் சேர்ந்து படம் தயாரிக்க ஆரம்பித்தவர் அடுத்து தொடங்கியதுதான் மாடர்ன் தியேட்டர்ஸ்.

நிறைய 'முதல்'கள். தமிழின் முதல் கலர் படம், ('அலிபாபாவும் 40 திருடர்களும்') மலையாளத்தின் முதல் பேசும் படம், ('பாலன்'), தென்னிந்தியாவின் முதல் ஆங்கிலப் படம் ('ஜங்கிள்' - இதில் நம்பியார் நடித்தாராக்கும்!) தமிழின் முதல் இரட்டை வேடப் படம் ('உத்தம புத்திரன்' - P. U. சின்னப்பா)
தயாரான படங்களில் நிறைய பிரபலம்! 'சர்வாதிகாரி' ‘திகம்பர சாமியார்', 'மந்திரி குமாரி' ‘திரும்பிப்பார்', ‘பாசவலை’, 'இல்லற ஜோதி', ‘வல்லவனுக்கு வல்லவன்' ‘இரு வல்லவர்கள்'...
பேரைச் சொன்னாலே நினைவு வருவது அவரது ஒழுங்கும் நேர்த்தியும் தான்.ஒவ்வொரு நிமிடத்தையும் சரி, ஃப்ரேமையும் சரி, திட்டமிட்டு உபயோகித்த இவர் இயக்கிய படங்களே 50 க்கு மேல். நடித்த படம்கூட உண்டு: 'பர்மா ராணி'. உதவி டைரக்டராக இருந்தவர்களில் முக்கியமானவர்கள் K. S. சேதுமாதவனும், முக்தா சீனிவாசனும்.

Wednesday, July 15, 2026

அக்காவின் ஆவி… (சிறுகதை)


அக்காவின் ஆவி… (சிறுகதை)
கே.பி.ஜனார்த்தனன்
('ஆரண்யநிவாஸ்' தை 2024 இதழில்)
"அதோ அங்கே பாருங்க! என்னையே முறைத்துக் கொண்டு நிற்கிறா பாருங்க அவ!"
வசந்தியின் தூக்கிய கரத்துக்கு நேரே நிழலாடியது.
நான் வேகமாக அருகில் ஓடிச் சென்று பார்த்தேன். இடதுபுறமிருந்து வந்த தெருவிளக்கு வெளிச்சத்தில், இடையில் கட்டியிருந்த கொடிக் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்த துணி அசைந்தபோது அதன் வடிவமற்ற நிழல் கோரமாக ஆடியது.
சிரித்தேன்.
"சிரிக்காதீங்க, உங்களை பார்த்ததும் ஓடிட்டா!"
நான் திரும்பி அவளை அணைத்தபடி கூடத்துக்குள் நுழைய முயன்றேன். நகர மறுத்தாள்.
அந்தக் குளிர் பூசிய இரவிலும் அவள் முகம் வேர்த்திருந்தது. கண்கள் கொட்ட கொட்ட விழித்துக்கொண்டு... இனி நிச்சயம் இவளும், இவளால் நானும் தூங்கப் போவதில்லை.
சுருள் சுருளாக அலை பாய்ந்திருந்த அவள் தலைமுடியைக் கோதியபடியே இருட்டை வெறித்தேன். வசந்தி, நீ இவ்வளவு பயந்தவளா?
நான் எதிர்பார்க்கவே இல்லை. அவள் அக்காவின் கணவன் என்ற முறையில் அவளுடன் பழகியிருந்த முதல் இரண்டு வருட காலத்தில் அவள் எனக்கு ஒரு சூட்டிகையாகத்தான், பேரழகியாகத்தான், குறும்புக்காரியாகத்தான் தெரிந்திருந்தாள்.
ராஜியைத் திருமணம் செய்தபின், இரண்டு வருடம் அவளுடன் இந்த பூனாவில் வாழ்ந்தபின் ஒரு நாள் நான் மட்டும் தனியனாக ஊருக்குத் திரும்பிச் சென்று அவள் பெற்றோரிடம் நின்றபோது எனக்கு பேச நா எழவே இல்லை. அவர்களோ அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை. அப்போதுதான் கிடைத்த என் மெசேஜை வைத்துக்கொண்டு அழுது கொண்டிருந்தார்கள். ராஜியின் அப்பா மட்டும் முன்னால் வந்தார். "மாப்பிள்ளை, அவள் பாடி கிடைக்கவே இல்லையா?"
நான் பரிதாபமாக விழித்தேன். "எங்களால் ஆன மட்டும் பார்த்தோம் மாமா, ராஜி ஆற்றோடு அடித்துக் கொண்டு போனவள் போனவள் தான்."
என்னுடைய கதறலைக் கேட்டு ஓடி வந்தவர்களும் செய்வதறியாது நின்றார்கள்
"ஐயோ, மகளே!" என்று வாய்விட்டு அழுதார். தொடர்ந்து எழுந்த அவலக் குரல்களும் விக்கல்களும்...
ஆனால் எல்லாம் இரண்டு வாரம் தான். அதற்குள் எல்லாரும் ஓரளவு தேறி எனக்கு ஆறுதல் சொல்லத் தொடங்கும் அளவு பக்குவம் பெற்று விட்டார்கள்.
அவர்களுடைய திருப்திக்காக ஒரு மாதம் இருந்து விட்டு திரும்பினேன். மறுபடியும் ஒற்றையாக. ஆனால் அவர்கள் என்னை விட்டால் தானே?
என்னைத் தொந்தரவு செய்ய தொடங்கினர், வசந்தியை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி. அவளுக்கு பூரண சம்மதம் என்று தெரிந்தபின் என்னை இசைய வைப்பது இன்னும் எளிதாகிவிட்டது.
முருகன் சன்னதியில் திருமணம் முடிந்து இவளை இங்கே அழைத்துக்கொண்டு வந்து ஒரு மாதம் ஆகவில்லை.
நௌ ஷி இஸ் ஸீயிங் திங்க்ஸ்!
<> <> <>
மறுநாள் மாலை வசந்தியிடமிருந்து ஒரு அவசர போன் வந்தது கம்பெனிக்கு. பறந்தால், கட்டிலில் படுத்து, கைக்குள் முகம் புதைத்தபடி அழுதுகொண்டே இருந்தாள். சமாதானப்படுத்தி விஷயத்தை தெரிந்து கொள்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.
காலையில் நான் போனதுமே ராஜி வந்தாளாம். "பாருங்க, அதோ அந்த துணி துவைக்கிற கல்லில்தான் கால் மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். வசந்தி, உன்னிடம் ஒரு ரகசியம் சொல்லணும், அவர்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இரு, இல்லேன்னா எனக்கு நேர்ந்த கதிதான் உனக்கும்னு எச்சரிக்கை பண்ணினா."
அதிர்ச்சியில் ஓரடி பின் வாங்கினேன். அடிப்பாவி, என்னைக் கொலைகாரன் என்றா சந்தேகப்படுகிறாய்?
ஒரு நிமிடம் தான். என் கோபம் மறைந்தது. அப்படி எல்லாம் எளிதில் சந்தேகம் தோன்றக் கூடியவளாக இருந்தால் என் கையால் ஒரு தாலியைக் கட்டிக் கொண்டு என்னோடு இந்த ரிமோட் பிளேஸுக்கு வருவாளா?
"ஏன் அவள் அப்படி சொல்லணும் சந்தீப்?" என்னையே பார்த்தபடி இன்னசெண்டாகக் கேட்டாள் வசந்தி.
அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ஒரு வினாடி விழித்தேன். "இப்ப நான் சொல்றதைக் கேட்டு ஆச்சரியப்படாதே வசந்தி. உன் மனசில ஒரு மூலையில் நான் உங்கக்காவைக் கொலை செய்து விட்டேன்கிற சந்தேகம் இருக்கு. அதான் உனக்கு இப்படி எல்லாம் பிரமைகள் ஏற்படுது."
"சே!" என் வாயைப் பொத்தினாள், "கண்டபடி பேசாதீங்க. அந்த மாதிரி எல்லாம் துளிகூட கிடையாது என் மனசில். ஆனா நான் கண்டது பிரமை இல்லை. அது எங்க ராஜியின் ஆவியேதான்."
தலையில் அடித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை எனக்கு. எப்படி? எப்படி இவளுக்கு நான் கொலை செய்யவில்லை என்பதை, அந்த உண்மையை, நிரூபிப்பது?
<> <> <>
"இன்னிக்கும் அவள் வந்திருந்தாள். சொன்னாள். என் மேலே எப்பவும் உங்களுக்கு ஒரு கண்ணாம்."
என் கோபம் எல்லை கடந்து விட்டது. "என்ன உளர்றே? அப்படின்னா என்னைக் கொலைகாரான்னு சொல்றியா?"
அவள் அடங்கி போனாள். என்னை கட்டிப்பிடித்துக் கொண்டாள். " எனக்கு... எனக்கு பயமா இருக்கு."
"ராஜியைக் கண்டா, என்னைக் கண்டா?"
"ரெண்டு பேரையும்," என்றாள். சிரித்தேன். மறுபடியும் எனக்குள் அந்த நம்பிக்கை ஏற்பட்டது. இவளது பயத்தைப் போக்கி விடலாம் என்ற நம்பிக்கை.
நம்பிக்கைக்கு ஆதாரமான அந்த சம்பவம் நினைவுக்கு வந்ததால்! முன்னால் நடந்தது. வசந்தி ஒன்றும் பயந்தாங்கொள்ளி அல்ல.
ராஜியின் கிராமத்தில் திருட்டு பயமுண்டு. நான் அங்கிருந்த ஒருநாள் இரவு எங்கள் வீட்டுக்குள்ளேயே ஒருவன் புகுந்து விட்டான். ராஜி அப்பாவின் அறையில் அவன் ஏதோ உருட்டிக் கொண்டிருக்க, விழித்துக் கொண்டு விட்ட நாங்கள் நடுங்க ஆரம்பித்தோம். "மெள்ள வெளியில போய் யாரையாவது கூட்டி வரட்டுமா?" என்று நான் ராஜியிடம் கிசுகிசுக்க, "வேண்டாம், சத்தம் போடுவோம், ஓடி விடுவான்!" என்று ராஜி சொல்ல, வசந்தி கொஞ்சம் கூட அசராமல் ஒரு கழியை எடுத்துக்கொண்டுவந்து என்னிடம் நீட்டினாள். "அப்பா ரூமுக்கு வெளில நின்னுக்குங்க. அவன் வெளியே வரும்போ ஒரு போடு போடுங்க!"
"ஐயையோ? வேண்டாம், அவன் சுருண்டுட்டா? உசிருக்கு ஏதாவது ஆயிட்டால்? என்னால் முடியாது!" நான் பின்வாங்க, அவள் நேரே போய் அங்கே நின்றுகொண்டு... வெளியே வந்தவன் மேல் ஒரு போடு போட்டாள். கீழே விழுந்தவன் கம்பும் கையுமாக அவள் நின்று கொண்டிருந்ததைப் பார்த்து எழத் தயங்க, "அக்கா, அந்தக் கயித்தை எடு!" என்றாள் வசந்தி. "இப்ப பக்கத்து வீட்டுக்காரங்களைக் கூப்பிடுங்க," என்றாள் என்னிடம்.
அவளாவது பயப்படுவதாவது!
ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருந்தது.
இரவு திடீர் திடீரென்று விழித்துக் கொண்டு என்னை உலுக்குவது முதல் அசாதாரண வேளைகளில் கம்பெனிக்கு போன் செய்து என்னை அழைப்பது வரை, ஓடி ஒடி வந்து ராஜியை நானும் சரி வேறு யாரும் சரி கொலை செய்யவில்லை என்று எந்தப் பயனுமின்றி விளக்குவதற்குள் படாத பாடுபட்டு போனேன்.
மெல்ல மெல்ல பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு இவள் இப்படி திடீர் திடீர் என்று பிதற்றுவது தெரிந்தது. என்னை ஒரு மாதிரி சந்தேகத்துடன் பார்க்க தொடங்கினார்கள். கொஞ்ச நாளில் விஷயம் கம்பெனிக்கும் எட்டி விட்டது. அவர்களும் தங்கள் பங்குக்கு என்னைத் துளைக்க ஆரம்பிக்க...
வீட்டுக்கு வந்தால் இவள் என்னைத் தூங்கவும் விடாமல்... ஒருநாள் இரவு கனவு கண்ட நிலையிலேயே என் சட்டையைப் பிடித்து அவள் அறியாமலேயே உலுக்கத் தொடங்கி விட்டாள்.
என்னால் பொறுக்க முடியவில்லை.
"வசந்தி! அது உன் அக்காவின் ஆவியும் இல்லை நான் அவளைக் கொல்லவும் இல்லை. தயவுசெய்து இதை நம்பு. இந்த விஷயத்துக்கு இதோடு ஒரு முற்றுப்புள்ளி வை," என்றேன் அழுத்தம் திருத்தமாய்.
அவள் அடங்குவதாக இல்லை. "என்னையும்... என்னையும் அதே போல்..."
அவள் முடிக்கவில்லை. நான் வெறியனானேன். "என்னோடு வா," என்று அவளை அழைத்துக்கொண்டு பைக்கை எடுத்துக்கொண்டு புறப்பட்டேன். ஊரைத் தாண்டி அந்தப் பாழடைந்த வீட்டின் முன் கொண்டு போய் நிறுத்தினேன். கதவைத் திறந்து உள்ளே தள்ளினேன்.
"வசந்தி!" ராஜி தான் கத்தினாள்.
"அக்கா!" விழி பிதுங்க வெறித்தாள் வசந்தி.
"பார், நன்றாகப் பார். உன் அக்காவை நான் கொலை செய்யவில்லை. அவளை இங்கேதான் அடைச்சு வெச்சிருக்கேன். எல்லாம் உன்னைக் கல்யாணம் செய்து கொள்ளத்தான்! இப்பவாவது நான் ஒரு கொலைகாரன் இல்லைன்னு தெரிஞ்சிக்கிட்டியா?"
"எனக்கு அப்பவே தெரியும்!" என்றாள் வசந்தி நிதானமாய், "உங்களால் ஒரு உயிரைக் கொல்ல முடியாது. அதனால்தான் என் அக்காவை எப்படியாவது உயிருடன் மீட்டு விடலாம் என்ற நம்பிக்கையில் உங்களோடு வந்தேன், என் வாழ்க்கையை அடகு வைத்து! கடைசியில் எனக்கு வெற்றிதான்! நாம இங்கே புறப்பட்டு வரும்போது பக்கத்து வீட்டுக்காரருக்கு சைகை காட்டிவிட்டுத்தான் வந்தேன்."
பின்னால் வந்த போலீசார் எனக்கு விலங்கிட்டு அவள் சொன்னதை ஊர்ஜிதம் செய்தார்கள்.
வசந்தி, உன் அழகு மட்டுமா என்னை வீழ்த்தியது? அறிவும் தான்!