Thursday, July 16, 2026

நிறைய 'முதல்'கள்...


M.G.M. பாரமௌண்ட் , யுனிவர்சலுக்கு இணையாக தமிழ்நாட்டில் ஒரு ஸ்டூடியோ கொடிகட்டிப் பறந்தது. சென்னையில் கூட அல்ல. சேலத்தில். 130க்கு மேலான படங்கள் தயாரான அந்த மாடர்ன் தியேட்டர்ஸை நிறுவியவர்..
T. R. சுந்தரம்.. இன்று பிறந்த நாள்.



லீட்ஸ் யூனிவர்சிடி லண்டனில் டெக்ஸ்டைல் எஞ்சினீயரிங் படித்துவிட்டு வந்தவர் தமிழ் சினிமா இண்டஸ்ட்ரியை லீட் செய்தவர்களில் ஒருவரானார். பேசும் படம் ஆரம்பித்த காலம் அது. சினிமா ஒரு பிஸினஸ் ஆக களம் இறங்கியிருந்தது. நண்பருடன் சேர்ந்து படம் தயாரிக்க ஆரம்பித்தவர் அடுத்து தொடங்கியதுதான் மாடர்ன் தியேட்டர்ஸ்.

நிறைய 'முதல்'கள். தமிழின் முதல் கலர் படம், ('அலிபாபாவும் 40 திருடர்களும்') மலையாளத்தின் முதல் பேசும் படம், ('பாலன்'), தென்னிந்தியாவின் முதல் ஆங்கிலப் படம் ('ஜங்கிள்' - இதில் நம்பியார் நடித்தாராக்கும்!) தமிழின் முதல் இரட்டை வேடப் படம் ('உத்தம புத்திரன்' - P. U. சின்னப்பா)
தயாரான படங்களில் நிறைய பிரபலம்! 'சர்வாதிகாரி' ‘திகம்பர சாமியார்', 'மந்திரி குமாரி' ‘திரும்பிப்பார்', ‘பாசவலை’, 'இல்லற ஜோதி', ‘வல்லவனுக்கு வல்லவன்' ‘இரு வல்லவர்கள்'...
பேரைச் சொன்னாலே நினைவு வருவது அவரது ஒழுங்கும் நேர்த்தியும் தான்.ஒவ்வொரு நிமிடத்தையும் சரி, ஃப்ரேமையும் சரி, திட்டமிட்டு உபயோகித்த இவர் இயக்கிய படங்களே 50 க்கு மேல். நடித்த படம்கூட உண்டு: 'பர்மா ராணி'. உதவி டைரக்டராக இருந்தவர்களில் முக்கியமானவர்கள் K. S. சேதுமாதவனும், முக்தா சீனிவாசனும்.

Wednesday, July 15, 2026

அக்காவின் ஆவி… (சிறுகதை)


அக்காவின் ஆவி… (சிறுகதை)
கே.பி.ஜனார்த்தனன்
('ஆரண்யநிவாஸ்' தை 2024 இதழில்)
"அதோ அங்கே பாருங்க! என்னையே முறைத்துக் கொண்டு நிற்கிறா பாருங்க அவ!"
வசந்தியின் தூக்கிய கரத்துக்கு நேரே நிழலாடியது.
நான் வேகமாக அருகில் ஓடிச் சென்று பார்த்தேன். இடதுபுறமிருந்து வந்த தெருவிளக்கு வெளிச்சத்தில், இடையில் கட்டியிருந்த கொடிக் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்த துணி அசைந்தபோது அதன் வடிவமற்ற நிழல் கோரமாக ஆடியது.
சிரித்தேன்.
"சிரிக்காதீங்க, உங்களை பார்த்ததும் ஓடிட்டா!"
நான் திரும்பி அவளை அணைத்தபடி கூடத்துக்குள் நுழைய முயன்றேன். நகர மறுத்தாள்.
அந்தக் குளிர் பூசிய இரவிலும் அவள் முகம் வேர்த்திருந்தது. கண்கள் கொட்ட கொட்ட விழித்துக்கொண்டு... இனி நிச்சயம் இவளும், இவளால் நானும் தூங்கப் போவதில்லை.
சுருள் சுருளாக அலை பாய்ந்திருந்த அவள் தலைமுடியைக் கோதியபடியே இருட்டை வெறித்தேன். வசந்தி, நீ இவ்வளவு பயந்தவளா?
நான் எதிர்பார்க்கவே இல்லை. அவள் அக்காவின் கணவன் என்ற முறையில் அவளுடன் பழகியிருந்த முதல் இரண்டு வருட காலத்தில் அவள் எனக்கு ஒரு சூட்டிகையாகத்தான், பேரழகியாகத்தான், குறும்புக்காரியாகத்தான் தெரிந்திருந்தாள்.
ராஜியைத் திருமணம் செய்தபின், இரண்டு வருடம் அவளுடன் இந்த பூனாவில் வாழ்ந்தபின் ஒரு நாள் நான் மட்டும் தனியனாக ஊருக்குத் திரும்பிச் சென்று அவள் பெற்றோரிடம் நின்றபோது எனக்கு பேச நா எழவே இல்லை. அவர்களோ அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை. அப்போதுதான் கிடைத்த என் மெசேஜை வைத்துக்கொண்டு அழுது கொண்டிருந்தார்கள். ராஜியின் அப்பா மட்டும் முன்னால் வந்தார். "மாப்பிள்ளை, அவள் பாடி கிடைக்கவே இல்லையா?"
நான் பரிதாபமாக விழித்தேன். "எங்களால் ஆன மட்டும் பார்த்தோம் மாமா, ராஜி ஆற்றோடு அடித்துக் கொண்டு போனவள் போனவள் தான்."
என்னுடைய கதறலைக் கேட்டு ஓடி வந்தவர்களும் செய்வதறியாது நின்றார்கள்
"ஐயோ, மகளே!" என்று வாய்விட்டு அழுதார். தொடர்ந்து எழுந்த அவலக் குரல்களும் விக்கல்களும்...
ஆனால் எல்லாம் இரண்டு வாரம் தான். அதற்குள் எல்லாரும் ஓரளவு தேறி எனக்கு ஆறுதல் சொல்லத் தொடங்கும் அளவு பக்குவம் பெற்று விட்டார்கள்.
அவர்களுடைய திருப்திக்காக ஒரு மாதம் இருந்து விட்டு திரும்பினேன். மறுபடியும் ஒற்றையாக. ஆனால் அவர்கள் என்னை விட்டால் தானே?
என்னைத் தொந்தரவு செய்ய தொடங்கினர், வசந்தியை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி. அவளுக்கு பூரண சம்மதம் என்று தெரிந்தபின் என்னை இசைய வைப்பது இன்னும் எளிதாகிவிட்டது.
முருகன் சன்னதியில் திருமணம் முடிந்து இவளை இங்கே அழைத்துக்கொண்டு வந்து ஒரு மாதம் ஆகவில்லை.
நௌ ஷி இஸ் ஸீயிங் திங்க்ஸ்!
<> <> <>
மறுநாள் மாலை வசந்தியிடமிருந்து ஒரு அவசர போன் வந்தது கம்பெனிக்கு. பறந்தால், கட்டிலில் படுத்து, கைக்குள் முகம் புதைத்தபடி அழுதுகொண்டே இருந்தாள். சமாதானப்படுத்தி விஷயத்தை தெரிந்து கொள்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.
காலையில் நான் போனதுமே ராஜி வந்தாளாம். "பாருங்க, அதோ அந்த துணி துவைக்கிற கல்லில்தான் கால் மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். வசந்தி, உன்னிடம் ஒரு ரகசியம் சொல்லணும், அவர்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இரு, இல்லேன்னா எனக்கு நேர்ந்த கதிதான் உனக்கும்னு எச்சரிக்கை பண்ணினா."
அதிர்ச்சியில் ஓரடி பின் வாங்கினேன். அடிப்பாவி, என்னைக் கொலைகாரன் என்றா சந்தேகப்படுகிறாய்?
ஒரு நிமிடம் தான். என் கோபம் மறைந்தது. அப்படி எல்லாம் எளிதில் சந்தேகம் தோன்றக் கூடியவளாக இருந்தால் என் கையால் ஒரு தாலியைக் கட்டிக் கொண்டு என்னோடு இந்த ரிமோட் பிளேஸுக்கு வருவாளா?
"ஏன் அவள் அப்படி சொல்லணும் சந்தீப்?" என்னையே பார்த்தபடி இன்னசெண்டாகக் கேட்டாள் வசந்தி.
அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ஒரு வினாடி விழித்தேன். "இப்ப நான் சொல்றதைக் கேட்டு ஆச்சரியப்படாதே வசந்தி. உன் மனசில ஒரு மூலையில் நான் உங்கக்காவைக் கொலை செய்து விட்டேன்கிற சந்தேகம் இருக்கு. அதான் உனக்கு இப்படி எல்லாம் பிரமைகள் ஏற்படுது."
"சே!" என் வாயைப் பொத்தினாள், "கண்டபடி பேசாதீங்க. அந்த மாதிரி எல்லாம் துளிகூட கிடையாது என் மனசில். ஆனா நான் கண்டது பிரமை இல்லை. அது எங்க ராஜியின் ஆவியேதான்."
தலையில் அடித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை எனக்கு. எப்படி? எப்படி இவளுக்கு நான் கொலை செய்யவில்லை என்பதை, அந்த உண்மையை, நிரூபிப்பது?
<> <> <>
"இன்னிக்கும் அவள் வந்திருந்தாள். சொன்னாள். என் மேலே எப்பவும் உங்களுக்கு ஒரு கண்ணாம்."
என் கோபம் எல்லை கடந்து விட்டது. "என்ன உளர்றே? அப்படின்னா என்னைக் கொலைகாரான்னு சொல்றியா?"
அவள் அடங்கி போனாள். என்னை கட்டிப்பிடித்துக் கொண்டாள். " எனக்கு... எனக்கு பயமா இருக்கு."
"ராஜியைக் கண்டா, என்னைக் கண்டா?"
"ரெண்டு பேரையும்," என்றாள். சிரித்தேன். மறுபடியும் எனக்குள் அந்த நம்பிக்கை ஏற்பட்டது. இவளது பயத்தைப் போக்கி விடலாம் என்ற நம்பிக்கை.
நம்பிக்கைக்கு ஆதாரமான அந்த சம்பவம் நினைவுக்கு வந்ததால்! முன்னால் நடந்தது. வசந்தி ஒன்றும் பயந்தாங்கொள்ளி அல்ல.
ராஜியின் கிராமத்தில் திருட்டு பயமுண்டு. நான் அங்கிருந்த ஒருநாள் இரவு எங்கள் வீட்டுக்குள்ளேயே ஒருவன் புகுந்து விட்டான். ராஜி அப்பாவின் அறையில் அவன் ஏதோ உருட்டிக் கொண்டிருக்க, விழித்துக் கொண்டு விட்ட நாங்கள் நடுங்க ஆரம்பித்தோம். "மெள்ள வெளியில போய் யாரையாவது கூட்டி வரட்டுமா?" என்று நான் ராஜியிடம் கிசுகிசுக்க, "வேண்டாம், சத்தம் போடுவோம், ஓடி விடுவான்!" என்று ராஜி சொல்ல, வசந்தி கொஞ்சம் கூட அசராமல் ஒரு கழியை எடுத்துக்கொண்டுவந்து என்னிடம் நீட்டினாள். "அப்பா ரூமுக்கு வெளில நின்னுக்குங்க. அவன் வெளியே வரும்போ ஒரு போடு போடுங்க!"
"ஐயையோ? வேண்டாம், அவன் சுருண்டுட்டா? உசிருக்கு ஏதாவது ஆயிட்டால்? என்னால் முடியாது!" நான் பின்வாங்க, அவள் நேரே போய் அங்கே நின்றுகொண்டு... வெளியே வந்தவன் மேல் ஒரு போடு போட்டாள். கீழே விழுந்தவன் கம்பும் கையுமாக அவள் நின்று கொண்டிருந்ததைப் பார்த்து எழத் தயங்க, "அக்கா, அந்தக் கயித்தை எடு!" என்றாள் வசந்தி. "இப்ப பக்கத்து வீட்டுக்காரங்களைக் கூப்பிடுங்க," என்றாள் என்னிடம்.
அவளாவது பயப்படுவதாவது!
ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருந்தது.
இரவு திடீர் திடீரென்று விழித்துக் கொண்டு என்னை உலுக்குவது முதல் அசாதாரண வேளைகளில் கம்பெனிக்கு போன் செய்து என்னை அழைப்பது வரை, ஓடி ஒடி வந்து ராஜியை நானும் சரி வேறு யாரும் சரி கொலை செய்யவில்லை என்று எந்தப் பயனுமின்றி விளக்குவதற்குள் படாத பாடுபட்டு போனேன்.
மெல்ல மெல்ல பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு இவள் இப்படி திடீர் திடீர் என்று பிதற்றுவது தெரிந்தது. என்னை ஒரு மாதிரி சந்தேகத்துடன் பார்க்க தொடங்கினார்கள். கொஞ்ச நாளில் விஷயம் கம்பெனிக்கும் எட்டி விட்டது. அவர்களும் தங்கள் பங்குக்கு என்னைத் துளைக்க ஆரம்பிக்க...
வீட்டுக்கு வந்தால் இவள் என்னைத் தூங்கவும் விடாமல்... ஒருநாள் இரவு கனவு கண்ட நிலையிலேயே என் சட்டையைப் பிடித்து அவள் அறியாமலேயே உலுக்கத் தொடங்கி விட்டாள்.
என்னால் பொறுக்க முடியவில்லை.
"வசந்தி! அது உன் அக்காவின் ஆவியும் இல்லை நான் அவளைக் கொல்லவும் இல்லை. தயவுசெய்து இதை நம்பு. இந்த விஷயத்துக்கு இதோடு ஒரு முற்றுப்புள்ளி வை," என்றேன் அழுத்தம் திருத்தமாய்.
அவள் அடங்குவதாக இல்லை. "என்னையும்... என்னையும் அதே போல்..."
அவள் முடிக்கவில்லை. நான் வெறியனானேன். "என்னோடு வா," என்று அவளை அழைத்துக்கொண்டு பைக்கை எடுத்துக்கொண்டு புறப்பட்டேன். ஊரைத் தாண்டி அந்தப் பாழடைந்த வீட்டின் முன் கொண்டு போய் நிறுத்தினேன். கதவைத் திறந்து உள்ளே தள்ளினேன்.
"வசந்தி!" ராஜி தான் கத்தினாள்.
"அக்கா!" விழி பிதுங்க வெறித்தாள் வசந்தி.
"பார், நன்றாகப் பார். உன் அக்காவை நான் கொலை செய்யவில்லை. அவளை இங்கேதான் அடைச்சு வெச்சிருக்கேன். எல்லாம் உன்னைக் கல்யாணம் செய்து கொள்ளத்தான்! இப்பவாவது நான் ஒரு கொலைகாரன் இல்லைன்னு தெரிஞ்சிக்கிட்டியா?"
"எனக்கு அப்பவே தெரியும்!" என்றாள் வசந்தி நிதானமாய், "உங்களால் ஒரு உயிரைக் கொல்ல முடியாது. அதனால்தான் என் அக்காவை எப்படியாவது உயிருடன் மீட்டு விடலாம் என்ற நம்பிக்கையில் உங்களோடு வந்தேன், என் வாழ்க்கையை அடகு வைத்து! கடைசியில் எனக்கு வெற்றிதான்! நாம இங்கே புறப்பட்டு வரும்போது பக்கத்து வீட்டுக்காரருக்கு சைகை காட்டிவிட்டுத்தான் வந்தேன்."
பின்னால் வந்த போலீசார் எனக்கு விலங்கிட்டு அவள் சொன்னதை ஊர்ஜிதம் செய்தார்கள்.
வசந்தி, உன் அழகு மட்டுமா என்னை வீழ்த்தியது? அறிவும் தான்!

Friday, July 10, 2026

இன்னும் நிறைய ...


‘மேலிருந்து குதிக்கும் போது ஒரு வலையை கண்டு கொள்வேன் என்றுதான் நம்பினேன். மாறாக என்னால் பறக்க முடியும் என்று அறிந்து கொண்டேன்.’
இந்த அருமை வாசகம் சொன்னவர் John Calvin ( 1509 - 1574) பிரெஞ்சு தத்துவ ஞானி. இன்று பிறந்த நாள்!
இன்னும் நிறைய முத்துக்களை உதிர்த்திருக்கிறார்.
‘ஒருவர் எந்த மாதிரி இருந்தாலும் அவரை நாம் நேசிக்க வேண்டும், ஏனெனில் நாம் கடவுளை நேசிக்கிறோம்.’
‘எல்லா மனிதர்களுமே சந்தோஷத்தை தேடுகிறார்கள், ஆனால் நூற்றில் ஒருவன் கூட அதை கடவுளிடம் தேடுவதில்லை.’
‘உண்மையைத் தியாகம் செய்து வாங்க வேண்டியது அல்ல அமைதி.’
‘அடக்கம் என்பது உண்மையான அறிவின் தொடக்கம்.’
‘மனிதனின் அழிவுக்கு நிச்சயமான வழி அவன் தனக்குக் கீழ்ப்படிவதுதான்.’
‘பிரார்த்தனை விஷயங்களை மாற்றாது; கடவுள் மாற்றுகிறார் நம் பிரார்த்தனையின் பதிலாக.’
'கடவுளை அறிந்து கொள்வதில் தொடங்காமல் எந்த அறிவும் இல்லை.'
‘செல்வத்தால் கண்கள் மறைக்கப்படுவதைவிட ஆபத்தானது வேறேதுமில்லை.’
‘நம் நம்பிக்கை குறைவாக இருக்கும்போது அது அதிகரிக்கவும், உறங்கிக் கிடக்கும் போது விழிக்கவும், ஊசலாடும் போது அதை உறுதிப்படுத்தவும், பலவீனமாக இருக்கும்போது பலப்படுத்தவும், தூக்கி எறியப்படும் போது அதை எடுத்து வளர்க்கவும் செய்யும்படி கடவுளைக் கேட்டுக் கொள்ள வேண்டும்.’

Wednesday, July 8, 2026

எண் கைப் பூதம்...


I Q test என்று ஒன்று வைக்கிறார்களே, அவரவர் திறமையை அங்குலம் சுத்தமாக அளந்து சொல்ல? அதை ஆரம்பித்து வைத்தவருக்கு இன்று பிறந்த நாள்! Alfred Binet... (1857 - 1911)
சட்டம் பயின்ற இந்த பிரெஞ்சுக்காரர் சட்டென்று அதை உதறக் காரணமாயிருந்தது ஹிப்னாஸிஸ் பற்றி அவர் படித்த ஒரு புத்தகம். சைகாலஜியில் பையக் காலை வைத்தார். தானே பயின்றார். இருநூறு புத்தகம் எழுதியது அதில்தான்.
பள்ளியில் கற்றுக் கொடுப்பதை சரிவர புரிந்து கொள்ள முடியாத மாணவர்களை கண்டெடுத்து தனியே பயிற்சி கொடுக்க, ஒரு டெஸ்ட் தயாரிக்கச் சொல்லிவந்தது ஓர் வேண்டுகோள் அரசிடமிருந்து அவருக்கு. நண்பர் சைமனுடன் சேர்ந்து முதலாவது ஐ.க்யூ. டெஸ்டை அவர் தயாரித்த வருடம் 1905.
அதை அடியொற்றி ஏகப்பட்ட இன்டெலிஜென்ஸ் டெஸ்ட் வந்து விட்டன. பத்து வருடத்தில் அமெரிக்காவில் காலை வைத்த இவரது டெஸ்ட், ஸ்டான்ஃபோர்டு யுனிவர்சிட்டியால் வார்த்தெடுக்கப்பட்டு இன்றளவும் பாப்புலர்.
'இப்படி எல்லாம் ஒன்றும் புத்திசாலித்தனத்தை ஒரு நம்பருக்குள் கொண்டுவந்துவிட முடியாது, பல்வேறு திறமைகளை உள்ளடக்கியது அது, காலம் சூழ்நிலை மோடிவேஷன் போன்ற ஏகப்பட்ட காரணங்கள் அதை எளிதாக மாற்றிவிடும், ஒரே மாதிரி பின்னணியில் உள்ள குழந்தைகளையே ஒப்பிட இயலும்' என்ற கருத்தையும் அவரே விட்டு சென்றிருக்கிறார்.
உதா ஒன்று: பெற்றெடுத்து ஒரே வீட்டில் வளர்க்கப்பட்ட சகோதர சகோதரிகளின் ஐ. க்யூ., தத்தெடுத்து ஒரே வீட்டில் வளர்க்கப்பட்டவர்களைவிட அதிக ஒற்றுமையாக இருக்குமாம். இப்படி நிறைய கண்டுபிடித்திருக்கிறார்கள் இப்போது.
ஆக, ஐ க்யூவை ஒரு ஹைக்கூவாக சொன்னால்…
‘எண் பாட்டிலில்
அடைக்க முடியவில்லை அதை.
எண் கைப் பூதம்.’

Tuesday, July 7, 2026

கனவுகளை நாடி...


அந்தப்படத்தில் ஐந்து புதிய இசை அமைப்பாளர்களை அறிமுகப்படுத்தினார் டைரக்டர் வசந்த். ‘ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே’ என்று சொல்ல வைத்தது ஒவ்வொரு பாட்டும். அதில் இதயத்தை "தொட்டுத் தொட்டுச் செல்லும்..." அந்தப் பாட்டை இசையமைத்ததோடு பாடியும் அசத்தி தமிழ் திரைக்கு அறிமுகமானார் அவர்.
இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம்... இன்று பிறந்த நாள்!
'அழகிய தீயே' தான் இவரை பிரபலமாக்கியது. பாடல்களும் சரி பின்னணி இசையும் சரி பாந்தமாக அமைந்த படம். “சந்தனப் பூங்காற்றே…” “விழிகளில் அருகினில்…” ரெண்டுமே கல்கண்டு ரகம். க்ளைமாக்ஸில் அந்த பின்னணி இசை! 'பூம்'!
இனி அவரின் அந்த அதி உன்னத முயற்சி. ‘ராமானுஜன்.’ 2014 இன் சிறந்த இசையாக ‘டெக்கான் மியூசிக்’ தேர்ந்தெடுத்த படம். க்ளாஸிகல் இசையும் வெஸ்டெர்னும் அந்தக் கதையின் காலத்திற்கேற்ப கலந்து ஓர் பவழ இசையைத் தவழ விட்டிருப்பார்.
“நாராயணா.. நாராயணா..” என்ற அந்தப் பாட்டை நீங்கள் ஒரு முறையாவது கேட்க வேண்டும். அடுத்து எத்தனை முறைகேட்பது என்பதை நீங்களே தீர்மானிப்பீர்கள். சுஹாசினி பாடி முடிந்து சின்ன இராமானுஜன் வந்து பாடும்போது பீட் மெல்லத் தாவி விட்டிருக்கும் முழு வெஸ்டர்னுக்கு. (லிங்க் கீழே)
உன்னி கிருஷ்ணன் பாடும் திருமழிசை ஆழ்வாரின் 'விண் கடந்த ஜோதியாய்..' பாடலாகட்டும், ("ஆறும் ஆறும் ஆறுமாய் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்...") ரமேஷே பாடும் நா. முத்துக் குமாரின்கனிவான 'துளி துளியாய்...' பாடலாகட்டும் கேட்க பரவசம்.

அப்புறம் அவரின் அந்த ஆகச் சிறந்த பாடல்... என்ன அதுன்னு கேட்பவருக்கு: “என்ன இது, என்ன இது என்னைக் கொல்வது?..." கமலின் ‘நள தமயந்தி'யில் சின்மயியுடன் இவரே பாடியது. சரணத்தின் கடைசி வரி பல்லவியின் முதல் வரியாக மாறும் அதிசயம்! பாடல் நின்ற பிறகும் நம் காதில் அந்த தனனதன ஃப்ளூட்! அந்த பிரில்லியண்ட் அரேஞ்ச்மெண்ட்! நான் ஸ்டாப்பாக ஒலிக்க விட்டு நாம் தூங்கிப் போகலாம் நல்ல கனவுகளை நாடி! (லிங்க் கீழே)
அதே படத்தில்தான் மாதவனும் ஷ்ருதிகாவும் ஆடும் அந்த அட்டகாச ஜாலி பாடலும்! "புக்காம் பொறந்தா மனுஷாளெல்லாம் ஒண்ணா சேருங்கோ… மாப்ளே பொண்ணில் யார்தான் சமர்த்து நன்னாப் பாருங்கோ.."
“ஜீவன் எங்கே …” ‘யூனிவர்சிடி’ படத்தில் வரும் பாடல். ஜீவனைத் தொட்டுச் செல்லும். இடையிசையில் அமர்க்களப் படுத்தியிருப்பார். 'ஜெர்ரி' படத்தின் ஹிட் "என் சுவாசத்தில் காதலின் வாசம் வீசவைத்ததாரோ.."
இவரின் பக்திப் பாடல் ஆல்பங்களில் எஸ். பி. பி. பாடிய "கிருஷ்ணா.. ஜனார்த்தனா..." அப்படியொரு உருக்கம்!

Monday, July 6, 2026

ஒரு வாரம்... ஒரு காட்சி...


அந்தப் படத்தை யாரும் மறந்திருக்க முடியாது. ஜீவனாம்சம் கொடுக்கத் திணறிக் கொண்டிருக்கும் தன் காதலனை மணம் செய்து கொள்ள பணம் வேணும். கம்பெனியில் நம்பி ஒப்படைத்த நாற்பதினாயிரம் டாலரை அபேஸ் பண்ணிக் கொண்டு காரில் விரைகிறாள் அவள். மழை, புயல்.. மோட்டல் ஒன்றில் தங்க வேண்டியதாகிறது. நார்மல் அல்லாத நார்மன் தான் அதன் ஓனர். ஷவரில் குளிக்கும் போது மெல்லக் கொல்லப் படுகிறாள்... ஆம், அதேதான். ‘Psycho.’
ஹிட்ச்காக்கின் ஹிட் டாக்கி.
‘மெயின் பிக்சர் ஆரம்பித்தபின் யாரும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்’ என்று தியேட்டர்களில் அறிவிக்கப்பட்ட அந்தப் படத்தில் ஹீரோயினாக வந்தவர்...
Janet Leigh... இன்று பிறந்த நாள்.
அந்த சின்னதானாலும் முக்கியமான வேடத்திற்கு ஆஸ்கார் நாமினேஷன் பிளஸ் கோல்டன் க்ளோப் அவார்ட் கிடைத்தது. ஒரு வாரம் எடுக்கப்பட்டது அந்த ஷவர் காட்சி. நடிக்கும்போது தெரியவில்லை ஆனால் அதை திரையில் பார்த்ததும்? ஷவரில் குளிப்பதையே நிறுத்திவிட்டார்.
பிற்பாடு ‘Hitchcock’ என்று படம் எடுத்தபோது அதில் இவராக நடித்தது அழகு நடிகை Scarlett Johansson.
‘Houdini’ படத்தில் நடிக்கும்போது கணவர் Tony Curtis -ஐ விட இவர் பிரபலமாக இருந்தார். ஆனாலும் அவர் பெயரை முதலில் போட வைத்தார்.
தம்பதிகள் சேர்ந்து நடித்த படங்களில் முக்கியமானது The Vikings. இந்த தம்பதிக்கு பிறந்தவர் தான் Jamie Lee Curtis. அவரும் பிரபல நடிகை (‘True Lies’)
அந்த ப்ரஃபசரிடம் படிக்கிற மாணவி ஒருத்தி அவரை முத்தமிட்டுவிட, பார்க்கும் அவர் மனைவி பத்ரகாளியாகிறாள். தப்பிக்க, தான் ஒரு சீக்ரட் போலீஸ் என்று ஒரு பொய் சொல்கிறார். அது யாரடா என்று நிஜப் போலீஸ் துரத்த… காமெடி ரகளை! கணவர் டோனியுடன் நடித்த ‘Who Was That Lady?’
பிரபல டைரக்டர் நடிகர் Orson Welles இன் ‘Touch of Evil’ படத்தில் நடித்தது பெருமிதம் தரும் அனுபவம்.

Sunday, July 5, 2026

இருவரில் ஒருவர்…


1. ஏராளமான பேர் ஒரே நேரத்தில் ரசிக்கிற கேளிக்கையாக இருக்கிறது.
2. மாபெரும் கூடாரத்தில் எண்ணற்ற பிராணிகளின் பங்கேற்புடன் அமைந்திருக்கிறது
3. குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும்படியாக,
4. எல்லா வயதினருக்கும் பொருத்தமான ஒரு நிகழ்ச்சியாக இருக்கிறது.
இந்த நான்கையும் ஏற்படுத்தி சர்க்கஸ் என்பதை ஓர் மாபெரும் கேளிக்கையாக மாற்றி அமைத்த இருவரில் ஒருவர்…
James Anthony Bailey. இன்று பிறந்தநாள்!
மிச்சிகனில் பிறந்த இவர் பிச்சு உதறினார் சர்க்கஸ் சார்ந்த சகல விஷயத்திலும்! இரண்டு வயதில் தந்தையையும் எட்டு வயதில் தாயையும் இழந்தவர்.
சர்க்கஸ் கம்பெனி நடத்திக் கொண்டிருந்த P T Barnum, அதாங்க அந்த இன்னொருவர், அவருடன் தன்னை இணைத்துக் கொண்டார். உலக முழுதும் சர்குலேட் ஆனது அவர்கள் சர்க்கஸ். (ஹாலிவுட் படம்கூட வந்ததே, ‘The Greatest Show on Earth’)
அருமையான ஜோடி இருவரும். சர்க்கஸை பிரபலப்படுத்திக் கொள்ளுவதில் நிபுணர் பார்னம். பின்னால் இருந்து சர்க்கஸை வெற்றி பெற வைப்பது பின்னவருக்கு பிடித்தமானது. ‘என்னை விட பத்து மடங்கு திறமைசாலி,’ என்று அவரே சொன்னார் இவரை.
வருடத்தில் ஒரு நாளை தாய் தந்தையற்றவர் தினம் என்று அறிவித்து அன்று அவர்களுக்கு மட்டும் ஷோ நடத்துவார்.
அத்தனை பெரிய கூடாரத்தையும் வேலையாட்களையும் கலைஞர்களையும் பிராணிகளையும் ஒவ்வொரு ஊருக்கும் கொண்டு செல்வதற்கு அவர் அமைத்திருந்த அட்டகாசமான சிஸ்டம் பாராட்டப்பட்டதோடு, பின்பற்றவும் செய்யப்பட்டது சில இடங்களில்.
அவர் மனக்கூடாரத்தில் உதித்த முத்து:
‘கலை என்பது மனிதனின் இயற்கை. இயற்கை என்பது கடவுளின் கலை. எளிமை என்பது இயற்கையின் முதல் படி, கலையின் கடைசிப் படி. உலகின் ஒரே சமநிலை மரணம் மட்டுமே. ஒவ்வொரு மனிதனும் தன்னை கடவுளின் ஓர் செயலாக, தன்மனதை கடவுளின் ஒரு எண்ணமாக, தன்னுடைய வாழ்க்கையை கடவுளின் ஒரு மூச்சாக நினைக்கட்டும்! தன் நற்செயல்களாலும் நல்லெண்ணங்களாலும் தன்னுள்ளே இருக்கும் சொர்க்கத்தை திறந்து காட்ட முயலட்டும்!’
இன்னும்...
‘உலகை முன்னேற்றுவதற்கு உள்ளதிலேயே மிக மோசமான வழி அதைக் குற்றம் சொல்வது.’
‘கடவுளை நோக்கி அழைத்துச் செல்லாத எந்த எண்ணத்திலும் நான் காலை வைக்க மாட்டேன்.’
‘நிறைய சிந்திக்கிறவன், உயர்ந்ததையே உணர்கிறவன், மிகச் சிறந்ததையே செய்கிறவன்.. அவன் தான் அதிகம் வாழ்கிறான்.’

Friday, July 3, 2026

மங்காத ‘வாவ்’!


அப்பா ரோலுக்கான ஜிப்பா, தப்பாமல் பொருந்துவது இவருக்குத்தான்.
கம்பீரம், கண்டிப்பு, கனிவு மூன்றையும் கொடுப்பதில் அப்படி ஒரு கச்சிதமான மிக்ஸ்!
பாத்திரத்தின் பாதியை முக பாவமே நிரப்பி விடும். மீதியை அந்தக் குரல்.
ரங்கா ராவ்...இன்று பிறந்த நாள்!
இவரை நினைத்தாலே போதும் அப்பாவின் வசனம் தானாக தோன்றிவிடும் வசனகர்த்தாவுக்கு!
ஏழை அப்பாவாக ரங்கா ராவ் என்றால் இ'ரங்கா'த மனமே இராது. 'படிக்காத மேதை'யில் அந்த ரங்கனோடு சேர்ந்து இந்த ரங்கா நம்மை உருக்கிய உருக்கம்!
அப்பழுக்கற்ற அப்பாவி மகளுக்கொரு வாழ்வமைத்துக் கொடுக்க முடியாமல் விரக்தி, வேதனை, தோல்வி, இயலாமை அத்தனையும் அழுத்த, மகள் சாவித்ரியிடம் வெடிப்பாரே கடைசிக் காட்சியில்… ‘கை கொடுத்த தெய்வத்'துக்கு அது எத்தனை கை கொடுத்தது!
நளினமாகப் பொருந்திக் கொண்டார் நரசிம்ம பல்லவராக, 'பார்த்திபன் கனவி'ல். ‘அன்னை’யில் ஆனானப்பட்ட பானுமதியை சமாளிக்கும் விதமே அலாதி…
கேரக்டர் இவருக்குள் நுழைகிறதா, இவர் கேரக்டருக்குள் நுழைகிறாரா.. அது அந்த கேரக்டருக்குத்தான் வெளிச்சம்.
'அப்பப்பா!' என்கிற அளவுக்கு அந்த அப்பாக்களிடையேயும் எத்தனை வெரைட்டி கொடுத்தார்! . ‘இருவர் உள்ளத்’தின் கண்டிப்பான ஜட்ஜ் அப்பாவிலிருந்து , ‘எங்க வீட்டுப் பிள்ளை’யின் அசட்டு செல்வந்தர் அப்பா வரை!
மிஸ் பண்ணக்கூடாத படம் ‘மிஸ்ஸியம்மா’. கல்யாணமே ஆகாத ஜெமினி சாவித்திரி ஜோடியின் ‘கணவன் மனைவி’ ஊடலைத் தீர்த்துவைக்க இவரு தவிக்கிற தவிப்பு! அந்த ‘மாயாபஜார்’ கடோத்கஜனா இவர்?
நாயகனுக்கு (சிவாஜி) நெஞ்சுவலி. டாக்டருக்கு போன் பறக்கிறது. ஏற்கெனவே ஜோசியர் கெடு வைத்த நேரம் வேறு நெருங்குகிறது. கொஞ்ச நேரத்தில் தான் செத்துப் போய்விடுவோம் என்ற நிச்சயமான பயத்தில் சிவாஜியும் சுற்றியுள்ளவர்களும் கதி கலங்க...
அப்போது கதவு திறக்கிறது. என்டர் எமன்! "எம்மா, எமன் வந்துட்டான்!" என்று அவர் அலற.. விடமாட்டேன்னு தாய் கதற..
"எல்லாருமா சேர்ந்து 'என்' உயிரை வாங்கிடுவீங்க போலிருக்கே? விலகுங்க, நான் டாக்டர்!"
நாடகத்திலிருந்து நேராக எமன் வேடத்தில் வந்து இறங்கும் ரங்கா ராவ் கிளப்பும் சிரிப்பலை! காமெடியிலும் தூள்! ('செல்வம்')
ரங்கா ராவ்! மனதில் மங்காத ‘வாவ்’!

Thursday, July 2, 2026

கோப்பு நிறைய...


காஞ்சனா கேட்கிறார் குட்டிப் பெண் மஞ்சுளாவிடம். "Tell me why a man is great?"
"A man is great because he alone can laugh at others and at himself." என்று பதில் வருகிறது.
'சாந்தி நிலையம்' படத்தில் வரும் கலகலப்பான இந்த டயலாக் நினைவிருக்கிறதா?
52 வருடங்களுக்கு முன் எழுதியவர்...
சித்ராலயா கோபு! சிரிப்பு ஆள் ஐயா கோபு என்று சொல்லி விழுந்து விழுந்து சிரித்தோம். மகிழ்ந்தோம்.
ஜோக் எல்லாம் சும்மா க்ளாஸா இருக்கும். தமிழ்த் திரைக்கு ஶ்ரீதரும் இவருமாக அளித்த நகைச்சுவை வண்ணம் கொஞ்சமா?
கட்ட பொம்மன் வசனத்தை எப்படி உணர்ச்சி பொங்கக் கேட்டார்களோ அதேபோல ‘கல்யாண பரிசு’ வசனங்களை சிரிப்பு பொங்க மீண்டும் மீண்டும்!
‘காதலிக்க நேரமில்லை’ பற்றி சொல்லவே வேண்டாம். எழுதுவதற்கு இடமில்லை, அதில் வரும் நல்ல நகைச்சுவை அத்தனையையும் எடுத்து!
காமெடி படத்தில் டயலாக் சற்று சீரியஸான விஷயம். கதையைக் கொண்டு செல்வதாவும் இருக்கணும். எழும் கேள்விகளை இயல்பாக விளக்குவதாகவும்! சங்கீதம் மாதிரி டயலாகிலேயும் ஒரு ப்ராக்ரஷன் உண்டு. ஒன்றிலிருந்து ஒன்று இயற்கையா வரணும். அதே சமயம் கதைக்குத் தேவையில்லாமல் இருக்கக்கூடாது. இந்த இலக்கணத்துக்கு எடுத்துக் காட்டாக 100% சரியாக அமைந்த படம் ‘காதலிக்க நேரமில்லை’.
ஊட்டி வரை உறவு, கலாட்டா கல்யாணம், சுமதி என் சுந்தரி என்று நிறைய படங்களில் தன் வசனத்தால் நம் விசனம் துடைத்தவர். காசேதான் கடவுளடா, அத்தையா மாமியா, ராசி நல்ல ராசி என டைரக் ஷனிலும் டிஸ்டிங்ஷன் காட்டினார்.
எல்லாவற்றிலும் என்னைக் கவர்ந்த அந்த ஒன்று… காமெடி, காதல், தத்துவம் என அவரது முழு வீச்சையும் மிகவும் ரசித்தது ‘சாந்தி நிலைய'த்தில்!
சாலையில் சந்திக்கும் கோப ஜெமினியிடம் காஞ்சனா சொல்லும் கோபு டயலாக்: “அந்தஸ்தில இருக்குற உங்கள மாதிரி பணக்காரங்க வாழ்க்கையில முன்னேற மேலே போகும்போது சந்திக்கறங்ககிட்ட கொஞ்சம் அன்பா நடந்துக்கணும். காரணம், கீழே வரும்போது மறுபடியும் அவங்களை சந்திக்க வேண்டியதா இருக்கும்!”
“அனுசூயா டீச்சர்னு வந்தாங்களே, அவங்களும் வேலையைவிட்டு போய்ட்டாங்களா?”ன்னு ஜெமினி கேட்க, நாகேஷ்: வந்தாளே அனுசூயா! புருஷனை விவாகரத்து பண்ணிட்டு, பெத்த இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு இங்க வந்தா. நம்ம வீட்டு குழந்தைகளைப் பார்த்தவுடனே அந்த குழந்தைகளே பெட்டர்னு புருஷனோட போயிட்டா!”
தனியே நிற்கும் காஞ்சனாவிடம், ‘என்ன மாலதி, இருட்டைக் கண்டாலே பயப்படுவியே’ன்னு கேட்கும் ஜெமினியிடம், “வாழணும்கிற நம்பிக்கைகளும் ஆசைகளும் மனசில நிறைஞ்சி இருந்தப்ப நான் பயத்தை உணர்ந்தேன். ஆனால் இப்ப நான் இருட்டைக் கண்டு பயப்படறதில அர்த்தமே இல்லை.”
“என்ன திடீர்னு இந்த விரக்தி மனப்பான்மை?”
“என்னைப்போல அனாதைகள்கிட்ட நிரந்தரமாக உறவாடுவது விரக்தி ஒண்ணுதானே?”
“காலையில உன்னை கடுமையாக பேசிட்டேன், என்ன மன்னிச்சிடு மாலதி.”
“எப்பவுமே மன்னிப்பு கேட்கிறது அடுத்து செய்ய இருக்கிற தப்புக்கு அஸ்திவாரம்னுதான் நான் நினைக்கிறேன்!”

குழந்தைகளைப் பற்றி காஞ்சனா ஜெமினியிடம் சொல்லும் அந்த ஆழமான அட்வைஸ்: “அவங்கள நீங்க கடுமையான நடத்தறதினால நீங்க வீட்டில் இல்லாத போது சுதந்திர உணர்ச்சியில விஷமங்களைக் கொஞ்சம் அதிகமாக செய்யறாங்கன்னு நினைக்கிறேன். குழந்தைங்க எப்போதுமே மலரைப் போல மிருதுவானவங்க. மலர்ல இருக்கிற முள்ளை நீக்க அதைத் தீயில போட்டால் கருகிவிடும் இல்லையா? வேறுவிதமா தானே எடுக்க முயற்சி செய்யறோம்? அதைப்போலத்தான் நாம குழந்தைகளை அவங்க போற போக்குல போய்த்தான் நம்ம வழிக்கு கொண்டு வரணும்!”
“மலருங்கறீங்க, முள்ளுங்கறீங்க, வாத்தியார் வேலைக்கு வர முன்னாலே எங்கேயாவது தோட்டவேலை பார்த்தீர்களா?” என்று நாகேஷ் கேட்பது அதையும் மென் காமெடிக்கு நகர்த்தும்!
சிகரமாக நாகேஷின் அந்த காலட்சேப காட்சி! “குறும்புக்கார கோவிந்தன், நம்ப கிருஷ்ணன் ஒரு நாளைக்கு உண்ணாவிரதம் இருந்தார்...(நாகேஷே பாடுகிறார்) உப்புமா ஒரு குண்டா! உருளைக்கிழங்கு போண்டா! காப்பி ஒரு அண்டா! குடிக்க டம்பளர் கொண்டா!... ஆப்பம் அறுபது! அதிரசம் அறுபத்தெட்டு!... பத்தாதா? இத்தனைக்கும் மேலே ஒரு தார் வாழைப்பழம் அதையும் சாப்பிட்டுட்டு உண்ணாவிரதம் இருந்தார்!” என்று தொடங்கி கோபியர் கதைக்கு வந்து “கோபியரே, கோபியரே, கேளுங்கோடி.. கோபாலகிருஷ்ணனை பாருங்கோடி! குளத்திலே குளிக்கையில் கண்ணன் புடவையை எடுத்தே ஓடிச் சென்றான்!... தம்மாத்துண்டு பயலுக்கு தில்லைப் பாத்தியா...?”ன்னு அமர்க்களப்படுத்துவாரே… அது!
கோபுவின் கையில் ஒரு கோப்பு. முழுக்க முழுக்க அதில் சிரிப்பு!

Wednesday, July 1, 2026

அழகிய பாணி ...


ஏழு வயது இருக்கும் அந்த சிறுமிக்கு. கார் ஒன்று மோதியதில் இடுப்பில் எலும்பு முறிவு. நடப்பதே கஷ்டம் என்றார் டாக்டர். பொய்யாக்கி ஒரே வருடத்தில் நடந்து காட்டினார். ஆனாலும் உயரம் குறைந்துபோன ஒரு காலை, ஷூவில் உயரம் வைத்து சரி பண்ணி நடக்க வேண்டியதாயிற்றாம். தோழிகளின் கிண்டல் எத்தனை வேதனையாக இருந்திருக்கும் அந்த பெண்ணுக்கு? ஆனால் பின்னாளில் அவரொரு மூவி ஸ்டார் ஆனபோது அதுவே அவரது அழகிய பாணி ஆகிவிட்டது.
அவர் Susan Hayward...
உலகம் முழுவதும் சொல்லப்படவேண்டிய உண்மைக் கதை இது என்ற ஆல்பர்ட் காம்யூவின் அழுத்தமான முன்னுரை வரிகளுடன் ஆரம்பிக்கிறார்கள் அந்தப் பிரபல படத்தை. ‘I Want to Live.’ வேதனையான குழந்தைப்பருவம், வீணான மணவாழ்க்கை, வேண்டாத சகவாசம் , எல்லாமாகச் சேர்ந்து அவளை ஒரு கொலைக் குற்றத்தில் சிக்க வைக்கிறது. மரண தண்டனை. நாற்காலியில் அமரும் கடைசி நிமிடம் வரை அவளது போராட்டம்.. அவள் படும் பாடு.. அவளுடன் சேர்ந்து நாம் படும் பாடு.. அத்தனை அற்புதமாக நடித்திருந்தார் சுஸன். அதுவரை நாமினேட் ஆவதும் நழுவிப் போவதுமாக நாலு முறை இருந்த ஆஸ்கார், நச்சென்று வந்து விழுந்துவிட்டது கையில். தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம் பார்க்க வேண்டிய படங்கள் லிஸ்ட் லிஸ்டில்.
'Gone with the Wind' படத்திற்காக நாடெங்கும் நடந்த நாயகி தேர்வில் தோற்றவர். ஆனால் தேர்வான Vivien Liegh பெற்ற நட்சத்திர அந்தஸ்தை அடுத்த பத்து வருடங்களிலேயே இவரும் அடைந்துவிட்டார். நடிப்பும் க்ளாமரும் நல்லதொரு விகிதத்தில் கலந்து அளித்த நடிகை.
The Conqueror படத்தில் நடிக்கும் போதுதான் கேன்சர் வந்து இவரைக் கொண்டது. அந்தப் படத்தில் நடித்த JohnWayne -ம் டைரக்டரும் கேன்சரிலேயே முடிவு கொண்டனர்.
Quotes?
‘வாழ்க்கை ஒரு போராட்டம் என்பதை மிகச் சின்ன வயதிலேயே அறிந்துகொண்டேன் நான். குடும்பம், சுற்றுப்புறம் எல்லாமே வறுமை. வறுமை. வாழ்க்கையின் எல்லா அவலங்களில் இருந்தும் நான் விடுபட, சினிமா தியேட்டர் தான் ஒரே வழியாக இருந்தது. நிறையப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று அப்போது தான் தீர்மானித்தேன். ஒரு உறுதியான பெண்மணியாக நான் உருவெடுத்தது அங்கேதான்.’
‘ஓய்வாக உட்கார்ந்ததே இல்லை நான். அது எப்படி என்றுகூட எனக்குத் தெரியாது. தெரிந்துகொள்ள விரும்பவும் இல்லை. வாழ்க்கை மிகச் சின்னது, ஓய்வெடுக்க முடியாத அளவுக்கு!

ஆடாத மனமும் ஆடும்...


‘பக்கயிந்தி அம்மாயி’.. 1953 இல் வந்த தெலுங்குப் படம். எதிர் மாடியில் தரிசனம் தரும் அஞ்சலி தேவியோ கானப் பிரியை. காதலிக்கும் ரேலங்கிக்கோ பாட வராது. நண்பர்கள் ஒரு பாடகரை அழைத்து வருகிறார்கள். கட்டிலில் அமர்ந்து ரேலங்கி வாயசைக்க, கட்டிலுக்குக் கீழே அமர்ந்து ஆக்சுவலாகப் பாடுவார் அந்த பாடகர். பாடகராக நடித்ததும் பாடியதும்..
நம் ஏ.எம்.ராஜா… இன்று பிறந்த நாள்!
தென்னிந்திய சினிமாவில் தென்றலாக நுழைந்தவர்… தன் இசையால் தென்றலை வீசவும் செய்தவர். இவரது பாடகர் பகுதியை பற்றி அதிகம் சொல்லவா இசையமைப்பாளர் பகுதியை பற்றி அதிகம் சொல்லவா? மயக்கத்தைத் தவிர்க்க முடியாது, இரண்டிலும் ஏகத்துக்கு சாதித்திருப்பதால்.
'கல்யாண பரிசு' படத்தின் வெற்றிக்கு ஒரு தூணாக நின்றது, பட்டுக்கோட்டையாரின் எட்டுப் பாடல்களுக்கு ஏ.எம்.ராஜா தந்த இசைப் பரிசு.
“காலையும் நீயே.. மாலையும் நீயே..” என்று கேட்டுக்கொண்டே இருக்கலாம் இன்றைக்கும் அதன் பாடல்களை. ஆம் இசைக்கென்றே அவதரித்த படம்.. ‘தேன்நிலவு.’
கர்நாடக இசை, மேற்கத்திய இசை இரண்டும் இரண்டு கைகளில்! ஆடிப்பெருக்கின் இசை சொல்லும். “தனிமையிலே இனிமை காண முடியுமா..” “காவேரி ஓரம்…”
இவருடைய progression (பல்லவிக்கும் சரணத்துக்கும் இடையே வரும் இசை) கனகச்சிதமாக, மிகச் சரியான வாத்தியங்கள் கொண்டு ஏராளம் வயலின்களுடன் ஒரு முழுமையான orchestration ஆக இருக்கும். “மலரே மலரே தெரியாதோ…” (தேன் நிலவு) பாடலிலும் சரி, “புரியாது.. வாழ்க்கையின் ரகசியம் புரியாது..” (ஆடிப்பெருக்கு) பாடலிலும் சரி அதைத் தெளிவாகப் பார்க்கலாம். ஒரு சின்ன மாற்றம் கூட செய்வதை விரும்ப மாட்டார் என்பார்கள் என்றால் அந்த அளவு ஒரு பர்ஃபெக் ஷனுடன் அது இருக்கும்.
பி.பி. ஸ்ரீனிவாஸின் மிக இனிமையான பாடல்களில் ஒன்று இவர் இசையில் அமைந்த “பண்ணோடு பிறந்தது தாளம்…” (விடிவெள்ளி) சீர்காழி கோவிந்தராஜனின் முத்துக்களில் ஒன்று “அன்னையின் அருளே வா..” அதுவும் இவர் இசையமைத்ததே. (‘ஆடிப்பெருக்கு').
இசையமைத்த ‘அன்புக்கோர் அண்ணி’ யில்தான் அந்த ஒரு நாள் விடாமல் ஒலித்த சூப்பர் ஹிட். “ஒரு நாள்.. இது ஒரு நாள்.. உனக்கும் எனக்கும் இது திருநாள்..”
“ஆடாத மனமும் ஆடுதே..” என்றிவர் பாடினால் ஆடாத மனமும் ஆடும்! “பாட்டு பாட வா..” என்று பாடினால் பாடாத வாயும் பாடும். “வாராயோ வெண்ணிலாவே..” பாடலின் அந்தக் குழைவு! “அதிமதுரா.. அனுராகா..” பாடலோ அதிமதுரம்! “பிருந்தாவனமும் நந்தகுமாரனும்..” விருந்தானது காதலர்களுக்கு அப்போது. “எல்லாம் உனக்கே தருவேனே.. இனிமேல் உரிமை நீதானே…” பெண்களின் மனதை அள்ளிக் கொண்டது.
வளமான குரல் இருந்ததால் வாய்ப்புக்காக ரொம்ப சிரமப்படத் தேவை இருக்கவில்லை. எடுத்த எடுப்பிலேயே ஜெமினி படம், கே.வி. மகாதேவனின் ‘குமாரி' என்று பாட ஆரம்பித்து ஹெலிகாப்டராக உயர்ந்தார். இங்கிருந்து இந்திக்குப் போன முதல் பாடகரும் இவர்தான்.
பிரிக்க முடியாதது? என்று கேட்டால் துள்ளிக் குதித்துக் கொண்டு வரும் பதில்: ஜெமினியும் இவர் குரலும். பாடகரே நடிகராக இருந்த காலம் மாறி நடிக்க மட்டும் நடிகர்கள் வந்தபோது ஜெமினி கணேசன் குரலின் இனிய பாதியாக இவர் இருந்ததை மறக்க முடியுமா? வேறு யாருக்காவது ராஜா பாடினால், 'அட, ஜெமினி இந்த நடிகருக்கு பின்னணி பாடியிருக்கிறாரே?' என்று ஒரு கணம் நாம் தடுமாறும் அளவுக்கு!
“கண்களின் வார்த்தைகள் புரியாதோ..” (களத்தூர் கண்ணம்மா) “தங்க நிலவில் கெண்டை இரண்டும்..” (திருமணம்) “வாடிக்கை மறந்ததும் ஏனோ..” என்று ராஜா-ஜெமினி இனிமை லிஸ்ட் பெருமை மிக்கது.
எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினி, என்டிஆர், நாகேஸ்வரராவ், ராஜ்குமார், சத்யன், பிரேம் நசீர் என்று நாலு மொழி நாயகர்களின் நாவசைப்புக்கும் பாடிக்கொண்டிருந்தவர். சிவாஜிக்கு “என்ன என்ன இன்பமே..” (அன்பு) “இடை கையிரண்டில் ஆடும்..” (விடிவெள்ளி) “திரைபோட்டு நாமே..” (ராஜா ராணி) “யாழும் குழலும் உன் மொழி தானோ..” (கோடீஸ்வரன்) என்றால் எம்ஜிஆருக்கு “கண்மூடும் வேளையிலே..” (மகாதேவி) “மாசிலா உண்மை காதலே..” “பேசும் யாழே பெண்மானே…” (நாம்) “மயக்கும் மாலைப் பொழுதே நீ போ..” (குலேபகாவலி)
அதுபோன்ற ஒரு மதுரமான குரலை ஆண்டவன் தேர்ந்தெடுத்து அவருக்குக் கொடுத்தது, வேறென்ன, நம்மைச் சில வருடங்கள் மகிழ்விக்கத்தான்! எத்தகைய சால மென் குரல் என்பதை எந்த பின் வாத்தியமும் இல்லாமல் வெறும் குரலில் ஆரம்பிக்கும் இவரது சில பாடல்களில் உணர்கின்றோம். “கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்..” (மீண்ட சொர்கம்) என்று ஆரம்பிக்கும் போது! “காலையும் நீயே மாலையும் நீயே..” (தேன் நிலவு) “சிங்காரப் பைங்கிளியே பேசு..” (மனோகரா)
‘இல்லற ஜோதி’யில் “களங்கமில்லா காதலிலே..” பாடலில் “நினைவிலே பேதமில்லை..” என்று இவர் என்ட்ரி ஆகும்போது ஏற்படும் சிலிர்ப்பு இருக்கிறதே, அதை உலகில் வெகு சில குரல்கள் தான் கொடுக்க முடியும்! அதேபோல் “இதய வானின் உதய நிலவே..” பாடலில் “இருளகற்றும் ஒளியென்றென்னை எண்ணும் நீயாரோ..” என்றும்! "தேன் உண்ணும் வண்டு.." பாடலில் "வீணை இன்ப நாதம்.." “மயக்கும் மாலைப் பொழுதே நீ போ..” வில் அந்த மயக்கும் என்ட்ரி “பன்னீர் தெளிக்க பனி பெய்யுமே..”
ஜாலி பாடல்களிலும் கலீர் கலீரென ஒலிக்கும் குரல்.. “கொடுத்துப் பார் பார் உந்தன் அன்பை..” “ஓஹோ எந்தன் பேபி..”
எம். எல். வசந்தகுமாரியிலிருந்து (“இன்பக் குயில் குரல் இனிமை..” - மனிதனும் மிருகமும்) ஜமுனாராணி வரை (“சந்தோஷமே தான் சங்கீதமாக..” - சந்தானம்) சேர்ந்து பாடியவர். ஜி. ராமநாதன் முதல் சங்கர் கணேஷ் இசையில் வரை…
ராஜா - ஜிக்கி தாம் ஐம்பதுகளில் பிரபல பின்னணி ஜோடி. “அழகு நிலாவின் பவனியிலே..” இந்தப் பாடலைத் தொடர்ந்து வாழ்விலும் இணைந்தது அந்த ஜோடி.
ஒரிரு வரி பாடினாலும் உள்ளம் கவரும் குரல். “வெண்ணிலா நிலா.. என் கண்ணல்லவா கலா..” என்று இரு வரிதான் பாடுவார் ‘ஆரவல்லி'யில் “சின்னப் பெண்ணான போதிலே..’’ போதாதா? சில பாடல்களை இவர் பாடினால் கேட்போருக்கு ஏற்படும் உணர்வு மிகப் பிரத்தியேகமானது. அதற்கு உதாரணம் “என் நெஞ்சின் பிரேம கீதம்..” (பணம் படுத்தும் பாடு)
.எத்தனைக்கெத்தனை காதல் பாட்டுக்கு மன்னனோ அத்தனைக்கத்தனை சோகப்பாட்டுக்கும் அரசன். “மின்னல் போல் ஆகும் இந்த..” “அன்பே.. நீ அங்கே..” “என் காதல் இன்பம் இதுதானா..” “அன்பே வா..அழைக்கின்றதெந்தன் மூச்சே..” “உன்னைக் கண்டு நான் வாட…” எல்லாவற்றுக்கும் மேலே மனம் பிழியும் சோகம் வழியும் அந்தப் பாடல்.. “வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே..” (மல்லிகா)
Re entry சில ஹிட்கள் பாடத் தந்தது. 'ரங்கராட்டினம்' படத்தில் வி. குமார் இசையில் “முத்தாரமே உன் ஊடல் என்னவோ..” சங்கர் கணேஷ் இசையில் 'அன்பு ரோஜா'வில் “ஏனடா கண்ணா..”
“மலரே ஓ மலரே..” வெகு காலத்துக்குப்பின் இவர் இசையில் வந்த ‘வீட்டு மாப்பிள்ளை’யில் அந்த அசத்தும் பாடல்! 'நீ என் மலரல்ல..' எனும்போது என்னவொரு எழுச்சியும் வேகமும் அந்தக் குரலில்!
‘அம்மா என்னு ஸ்திரி’ மலையாள படத்துக்கு இசையமைத்தார். ‘பார்யா’ ‘அடிமைகள்’.. என்று ஜி. தேவராஜன் இசையில் ஏராளம் பாடல்கள் பாடினார் மலையாளத்தில்! “தாழம்பூ மணம் உள்ள தணுப்புள்ள ராத்திரியில்..” அங்கே சூபர்ஹிட்.
சில பாடல்களை இவர் தான் பாட முடியும் அத்தனை மென்மையாக… “பூவில் வண்டு போதை கொண்டு..” (அன்பு எங்கே) “போதும் உந்தன் ஜாலமே..” (கடன் வாங்கி கல்யாணம்) “புதுமை நிலா அங்கே..” (கோமதியின் காதலன்)
ஒரு பாட்டின் உருக்கத்தை பாடகர் எத்தனை அப்லிஃப்ட் செய்ய முடியும்? சி. என். பாண்டுரங்கன் இசையில் ‘எதிர்பாராதது' படத்தில் இவர் பாடிய “சிற்பி செதுக்காத பொற்சிலையே..” யைக் கேளுங்கள்.
மிகப் பெரும் மியூசிக் டைரக்டராகத் திகழ்ந்திருக்க வேண்டியவர். தன்னுடைய straightforwardness காரணமாக வாய்ப்புகளைத் துறந்ததாக சொல்லுவார்கள். இழந்தது நாம்.

Sunday, June 28, 2026

அலட்டிக்கொள்ளாமல்...

‘வைரமாலை.’ 1954-இல் வெளியான படம்.
“கூவாமல் கூவும் கோகிலம் .. “ என்று பத்மினியுடன் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்த கண்ணதாசன் பாடலை பாடியபடியே வந்த அந்த நாயகர் பின்னாட்களில் பிரபல வில்லனாக வருவார் என்று எதிர்பார்த்திருப்பார்களா? ஆர்ப்பாட்டம் இல்லாமல் அலட்டிக்கொள்ளாமல் வரும் பாலிஷ் வில்லன்...
ஆர். எஸ் மனோகர். இன்று பிறந்த நாள்!

அறிமுகமான படம் ‘ராஜாம்பாள்’. ஜே. ஆர். ரங்கராஜுவின் அந்தப் பிரபல நாவல்தான் கதை. கல்கியின் ‘பொய்மான் கரடு’ படமானபோது பதில் அதிலும் நாயகன்.
நல்லவனாக சில படங்களில் நடித்து முடித்துவிட்டு வில்லன் வேடத்திற்கு நகர்ந்தார் மாடர்ன் தியேட்டர்ஸின் அபிமான நடிகர். அவர்களின் ‘வண்ணக் கிளி'யில்தான் வில்லனாக மாறினார்.
மரப்படிகளில் இறங்கி நின்று புறங்கையில் மது பாட்டிலைத் தட்டி உடைத்தபடி என்ட்ரி தருவாரே பிச்சுவாப் பக்கிரியாக ‘வல்லவனுக்கு வல்லவன்’ படத்தில்.... அந்த நல்லவனுக்கு நல்லவன் ரோலில் அசத்தியது அடுத்த திருப்பு முனை. அந்தப் பாடல்! 'பாரடி கண்ணே கொஞ்சம்... பைத்தியமானது நெஞ்சம்...'
திரை அவருக்கு இரண்டாவதுதான். முதலிடம் மேடை. மேடையில் பிரம்மாண்டம் என்றால் அது மனோகர்தான்! ‘நாடகக் காவலர்' மனோகரால் நன்கு அறியப்பட்ட புராண சரித்திர புருஷர்கள் நிறைய. 1800 தடவைக்கு மேல் நடிக்கப்பட்ட ‘இலங்கேஸ்வரன்’ அதில் மிகப் பிரபலம். தவிர ‘துரோணர்', ‘துரியோதனன்', 'சூரபத்மன்', 'சாணக்கிய சபதம்', 'இந்திரஜித்'...
கண் மூடித் திறப்பதற்குள் நாடகக் காட்சி மாறுவது ஸ்பெஷாலிட்டி என்றால் நாடகத்தில் சினிமாஸ்கோப் இவருடைய அறிமுகம். திரையிலும் சரி மேடையிலும் சரி அந்தக் கணீர்க் குரலும் பளிங்குத் தெளிவு உச்சரிப்பும் அவருக்கு ஒரு தனி இடத்தை கொடுக்கத் தவறவில்லை.
‘நான்’, ‘சொர்க்கம்’ (இரட்டை வேடத்தில் ), ‘குழந்தைக்காக’, ‘அடிமைப்பெண்' ‘நான்கு கில்லாடிகள்' சந்திரபாபுவின் ‘தட்டுங்கள் திறக்கப்படும்'.... பர்ஃபெக்ட் பர்ஃபாமன்ஸ் தந்த படங்கள் நிறைய. இந்தி ராஜ் குமார் போல இவர் நடை ஒரு தனி ஸ்டைல்.
குறிப்பாக சொல்லணும்னா உடனே தோன்றுவது ‘ராஜா’ தான். சிவாஜி உண்மையில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று பாஸ் ரெங்க ராவிடம் நிரூபிக்க மனோகர் படும் பாடு! ‘ஒண்ணு மட்டும் ஞாபகத்தில் வெச்சுக்குங்க. அந்தத் தாயை நான் கடத்தி வெச்சிருக்கிறதாலதான் நான், நீங்க, எல்லாரும் இப்போ உயிரோட இருக்கோம்!’ என்று அழுத்தமாக சொல்வதும்… ‘ஒரே ஒரு சந்தர்ப்பம் கொடுங்க பாஸ்’னு கேட்டு ரங்கராவ், ‘சரி விடுங்கடா அவனை’ன்னதும் பிடித்திருந்த அடியாட்களிடமிருந்து விடுவித்த கைகளை உதறிக் கொண்டு, தளர்ந்திருந்த டையை முறுக்கிக் கொண்டு, கோட்டை சரி செய்தபடியே நடந்து சிவாஜியிடம் பேசியபடியே பண்டரி பாயை அடிக்க ஆரம்பிப்பதும், அந்த முயற்சியிலும் தோற்றுவிட... அந்த நெடு நீளக் காட்சி நெடுக தான் சொல்வதை நிஜமாக்க அவர் துடிக்கிற நடிப்பு க்ளாஸ் ரகம்.

Saturday, June 27, 2026

ஏமாந்ததே இல்லை...


அவரு எவ்வளவு பெரிய ப்ரொடியூசர்.. ஆனா அவரை, 'நம்ம தேவர் அண்ணன், நம்மள நெனச்சு படம் எடுத்திருக்கார், நாலு நல்ல விஷயம் காட்டுவார்'னு நம்பி படக் கொட்டகைகள் நோக்கிப் படையெடுப்பார்கள் ஜனங்கள். ஏமாந்ததே இல்லை. இருவருமே!
சாண்டோ சின்னப்ப தேவர்… இன்று பிறந்த நாள்!
தம்பி உடையான் படமெடுக்க அஞ்சான்னு சொல்ற மாதிரி டைரக் ஷனைப் பார்த்துக்கொள்ள ஒரு தம்பி. எம்.ஏ.திருமுகம். ஒரு ஃபிரேமில் கூட அவர் கை தெரியாத படி காட்சிகள் ரொம்ப இயல்பாக மலரும், கதையை மட்டும் பகரும். வர்மாவின் காமிரா வழுக்கிக் கொண்டு நகரும்.
முருகன் மேல் அவர் வைத்த நம்பிக்கைக்கு கொஞ்சமும் குறையாதது கதை மேல் அவர் வைத்திருந்ததும். பாருங்களேன். ‘தெய்வச் செயல்’ என்று ஒரு படம் எடுத்தார். நாலு யானைகளை வளர்க்கும் செல்வந்தர் சுந்தர ராஜன் நொடித்துப் போனபோது தானும் வாழ்ந்து அவற்றையும் வாழ வைக்கும் அந்தக் கதை நன்றாகப் போகவில்லை.
எப்படித் தோற்க முடியும் இந்தக் கதை என்று யோசித்தார். எழுதினார் அதற்கு இன்னொரு திரைக்கதை. அப்போதுதான் டாப்புக்கு வந்து கொண்டிருந்த பிரபல கதாசிரியர் Salim - Javed -இடம் சீன்கள்எழுதி வாங்கி ஹிந்தியில் வெளியிட்டார். ‘ஹாத்தி மேரே சாத்தி’. ஆத்தி, அது கலக்கிற்று வசூலை. குலுக்கிற்று பாலிவுட்டை. அதை அப்படியே தமிழிலும்! ‘நல்ல நேரம்.’ இங்கேயும் ஹிட்.
டீம் வைத்துக்கொண்டு கதை டிஸ்கஷன் செய்யும் முறையை அனேகமாக இவர்தான் கொண்டு வந்தார். Tell the gist. Get the best. Leave the rest. That's it.
பக்தி சிரத்தையுடன் தியேட்டரில் நுழைந்ததும, பரமன் லீலைகள் பார்த்து பரவசத்துடன் வெளிவர முடிந்தது இவர் காலத்தில்தான்.
ஆஹா, வரிசையாக அவர் தந்த எம் ஜி ஆர் படங்கள்! ஜஸ்ட் பதினோரு நாளில் முடித்துவிட்டார் ‘முகராசி' ஷூட்டிங்கை.
எந்தப் பிராணியைத்தான் கூர்ந்து கவனித்து இருப்போம்? இதயம் என்று அதற்கும் ஒன்று இருக்கும் என்று எண்ணி இருப்போம்? ஆனால் ‘ஆட்டுக்கார அலமேலு’வையும் ‘கோமாதா என் குலமாதா’வையும் பார்த்ததும் நம் அபிப்பிராணியமே எத்தனை மாறிப் போச்சு!
நம்ம எல்லாருக்கும் நல்லாத் தெரிஞ்ச நம்ம சின்னப்ப தேவரைப் பத்தி நாஞ்சொல்ல தனியா என்ன இருக்கு? மறக்க முடியாத மனிதர்!