Monday, April 27, 2026

தந்திக்குப் பிந்தி...


1825. வாஷிங்டனில் அமர்ந்து அந்த ஜெனரலின் உருவப்படத்தை அமைதியாக தீட்டிக் கொண்டிருந்தார் அந்த ஓவியர். இளம் மனைவிக்குத் திடீர் நோய் என்று தந்தை அனுப்பிய கடிதம் வந்தது குதிரைத் தபாலில். விரைந்தார் ஊருக்கு. சேதி கிடைக்குமுன்பே இறந்துவிட்ட மனைவியின் முகத்தைக் கூட பார்க்க முடியவில்லை. செய்தி வந்து சேர நாட்கள் ஆனதே காரணம். மாளாத சோகத்திலிருந்து மீளாத அவர் மனதில் ஒரு வைராக்கியம் பிறந்தது. ‘துரிதம் உண்டாக்குவேன் கடிதம் செல்ல!’
நிகழ்வு 2. கப்பலில் திரும்பிக் கொண்டிருக்கிறார் அவர், ஐரோப்பாவிலிருந்து. சக பயணியான அமெரிக்க விஞ்ஞானி, எலெக்ட்ரோ மேக்னெடிஸத்தில் ஐரோப்பாவில் நடத்திய சோதனைகளைப் பற்றிச் சொல்லுகிறார். இவர் மூளையில் பளிச்! ‘தொலை தூரத்துக்கு சிக்னலைக் கொண்டு செல்ல உபயோகிக்கலாமே இதை?’ முயன்றார். தந்தியை முந்தி சிந்தித்தவர்கள் 36 வருடமாக 26 கம்பிகளுடன் போராடிக் கொண்டிருக்க, ஒரே கம்பிக்குள் கொண்டு வந்தார். அந்த Code -ஐ எழுதினார் Morse.
Samuel Morse…. இன்று பிறந்த நாள்!
Patent கிடைத்தாலும் patronage கிடைக்கவில்லை. ஆறு வருடம் போராடி அரசின் நிதி உதவி பெற்று அமைத்தார் ஒரு ஐம்பது மைலுக்குத் தந்திக் கம்பங்களை. உதவிக்கு போராடிய பேடண்ட் அதிகாரி மகள் அந்த பைபிள் வாசகத்தை சொன்னாள் முதல் தந்தியாக! ‘What hath God wrought?’
தந்திக்குப் பிந்திய விளைவுகள் அமோகம். சேதிகள் புறாக்களாகப் பறந்தன. யுத்தத்திலும் சத்தமில்லாமல் உதவிற்று சத்தமிட்டு! நிகழ்வுகளில் ஒன்று: லண்டனில் தன் காதலியை கொன்று விட்டு தப்பி ஓடுகிறான் ரயிலில் ஒருவன். தந்தியில் அடையாளம் கொடுக்கப்பட்டு அவன் இறங்கும் போது தயாராக அதிகாரிகள் ரயில்வே ஸ்டேஷனில்!
அடுத்த 30 வருடத்துக்குள் அமெரிக்கா நெடுகிலும் நீண்ட தந்திக் கம்பி, அட்லாண்டிக்கையும் நீந்திச் சென்றது ஐரோப்பாவுக்கு. முதல் டெலிக்ராமை விக்டோரியா ராணி தந்தியித்தார் அமெரிக்க அதிபர் Buchanan -க்கு.
ஆங்காங்கே போட்டிக் கம்பங்களை நாட்டிய கம்பெனிகளிடமிருந்து போராடிப் பெற வேண்டியதாயிற்று உரிமைகளை. கப்பலில் வந்த விஞ்ஞானியும்கூட சொந்தம் கொண்டாட, சக பயணிகளின் சாட்சியால் ஜெயித்தார். மில்லியன்களை சந்தித்தார். ஐரோப்பாவில் மட்டும் கிடைத்தது 400000 ஃப்ராங்குகள். (இவருக்குப் 18 வருட முன்பே வேறொருவர் கண்டுபிடித்துவிட்டார் தந்தியை என்றொரு 'வதந்தி'யும் உண்டு.)
சூபர் ஹிட் படம், A Beautiful Mind, அதில் Priceton University யில் வரவேற்று பேசும் புரஃபசர் ‘உங்களில் யார் மோர்ஸ் ஆகப் போகிறீர்கள்?’ என்பார்.
மரிப்பதற்குப் பத்து மாத முன் அவர் சிலையொன்றை நிறுவி, ஆதரவாளர்கள் நடத்திய விழாவில் கலந்துகொண்ட மோர்ஸ், உலக முழுதுக்கும் ஒரு தந்தியைக் கொடுத்தார்: ‘குட் பை!’.

அறிவியல் தேடல்...


‘எப்படி நாம் கடந்த காலத்தின் சந்ததியோ அதேபோல் வருங்காலத்தின் பெற்றோரும் நாம்தாம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.’
சொன்னவர் Herbert Spencer (1820 -1903)
அறிவியலாளர், தத்துவவாதி...பன்முக வித்தகர். இன்று பிறந்த நாள்!
அவர் காலத்தில் மிக அதிகம் பேசப்பட்டவர்.
சர்வ சகஜமாக இன்று நாம் பயன்படுத்தும் 'Survival of the Fittest' என்ற சொற்றொடரை அமைத்தவர் இவர்தான்.
இன்னும் சொன்னவை...
‘கல்வியின் முக்கிய குறிக்கோள் அறிவு அல்ல, செயல்பாடு.’
‘அறிவியல் தேடல்களுக்குள் இறங்காதவர்கள், அவற்றைச் சுற்றியுள்ள கவிதைகளைக் கொஞ்சமும் அறிய மாட்டார்கள்.’
‘நாம் மிகுந்த விருப்பத்துடன் தேடும் பொருட்கள், கிட்டும்போது அந்த அளவு சந்தோஷத்தைக் கொண்டு வருவதில்லை. பெரும்பாலான சந்தோஷங்கள் எதிர்பாராத இடங்களில் இருந்து வருகின்றன.’
‘நுண்கலைகளில் மிக உயர்ந்த இடத்தை இசைக்குத்தான் தர வேண்டும். எல்லாவற்றையும்விட அதுவே மனிதனின் ஆன்மாவைக் கட்டிக் காக்கிறது.’
‘அன்பு தான் வாழ்வின் முடிவு, ஆனால் அது முடிவில்லாதது. அன்பு தான் வாழ்வின் சொத்து ஆனால் செலவழிக்கத் தீராதது. அன்பு தான் வாழ்வின் பரிசு. அளிப்பதில் கிடைக்கும் பரிசு.’
‘ஒரு மனிதனின் அறிவு ஒழுங்கற்றதாக இருந்தால், அது எத்தனை அதிகம் இருக்கிறதோ அத்தனை குழப்பம் ஏற்படும்.’
‘பாரபட்சத்தை நாம் அனைவரும் எதிர்க்கிறோம் ஆனால் பாரபட்சம் நம் அனைவரிடமும் இருக்கிறது.’

என் கனவுகள்...


‘என் கனவுகள் எனக்கு மட்டுமே சொந்தமானவை. அவற்றிற்காக நான் வேறு யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை. துன்புறும்போது அவை எனக்குப் புகலிடம். தளையற்று இருக்கும்போது அவை என் ஆகப் பெரிய சந்தோஷம்.’
சொன்னவர்Mary Wollstnecraft…
பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட பெருமைமிகு எழுத்தாளர். 38 வயதிலேயே மறைந்த முக்கியமானவர்களில் ஒருவர். இன்று பிறந்த நாள்..
அவர் காலத்தைய ஆண்களின் மட்டற்ற சுதந்திரமும் அதிகாரமும் பெண்களுக்கு ஏற்படுத்திய சிரமங்களையும் பாதிப்பையும் தன் வாழ்க்கை அனுபவங்களில் உணர்ந்தவர், பெண்ணின் உரிமையை நிலைநாட்டத் துடித்தார்.
‘A Vindication of the Rights of Woman’ என்ற அவரது புத்தகம் பெண்ணுரிமைக்காக எழுந்த பெரும் ஆக்கங்களில் ஒன்று.
இவரே ஒரு பெரிய எழுத்தாளர் என்றாலும் Frankenstein எழுதிய மேரி ஷெல்லியின் அம்மா என்பது இன்னொரு விசேஷம்.
சொன்ன இன்னும் சில:
‘எளிமையும் நேர்மையும் சேர்ந்தே பயணிக்கும், ஏனெனில் இரண்டும் உண்மையை நேசிப்பதால் வருபவை.’
‘எந்த ஒரு மனிதனும் தீமையை தீமை என்று தெரிந்து தேர்ந்தெடுப்பதில்லை, அதை சந்தோஷம் என தவறாக நினைத்துக் கொள்கிறான், தான் தேடும் நன்மை என அதை நினைக்கிறான்.’
‘நான் உன்னிடம் விரும்பியதெல்லாம் உன் இதயமே, அது போய் விட்ட பின் உன்னிடம் எனக்கு கொடுப்பதற்கு இனி ஒன்றுமே இல்லை.’

Sunday, April 26, 2026

டிவி காமெடி அரசி...


சினிமா தியேட்டரில் வந்தவர்களை ஸீட்டில் அமர்த்துபவராக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள் அந்தப் பெண். உள்ளே ஆல்ஃபிரட் ஹிட்ச்காக்கின் ‘Strangers in a Train’ படம் ஓடிக்கொண்டிருக்கிறது. முடியப் போகிற நேரத்தில் அடுத்த ஷோ படம் பார்க்க வருகிறது அந்த தம்பதி. அப்பல்லாம் அப்பவே உள்ளே விட்டுடுவாங்க. ஆனால் எப்பேர்ப்பட்ட சஸ்பென்ஸ் படம் அது! அதனால இந்தப் பெண் அவங்ககிட்ட, ப்ளீஸ், இப்ப உள்ள போகாதீங்க, சஸ்பென்ஸ் ஸ்பாயில் ஆயிடும்னு சொல்கிறாள். அங்கே ஆஜரான மேனேஜர் என்ன நடந்ததுன்னு கேட்டவர் ஆன் தி ஸ்பாட் அவள் சீட்டைக் கிழித்து விடுகிறார்.
வருஷங்களுக்குப் பிறகு அந்தப் பெண் ஹாலிவுட்டின் பிரபல டிவி ஷோ நடிகையாகி விடுகிறார். அவருக்கு Hollywood Walk of Fame அவார்ட் தருகிறார்கள். பிளாட்ஃபார்மில் பதிக்கும் பித்தளை ஸ்டார் அது. எங்கே பதிக்க வேண்டும் என்று வழக்கம்போல் கேட்டதற்கு அந்தத் தியேட்டர் முன்னால்! என்கிறார் நடிகை.
Carol Burnett... க்வீன் அஃப் டெலிவிஷன் காமெடி! இன்று பிறந்த நாள்!
ஒரு முகம் பாடகி, ஒரு முகம் காமெடி.
ஒரு பாதம் மேடையில், ஒரு பாதம் டி.வி.யில்.
வறுமை உந்தித்தள்ள, பாட்டியுடன் ஹாலிவுட்டில் பாதம் பதித்த சிறுமி அங்கேயே படித்தாள்.தன் தோற்றம் பற்றி பெரிய அபிப்பிராயம் இல்லை. விரும்பியது நாடகமெழுத. ஆனால் நடிப்போடு சேர்த்துத்தான் கற்றுத் தருவாங்க. முதல் முதலாக நடித்தபோது விழுந்த கைதட்டு, வாழ்நாள் முழுதும் அதை விரும்ப வைத்தது.
சின்ன சின்ன சிரிப்பு வேடங்கள்! மெல்ல முன்னேறி… நாடக மேடைகளில் நடந்து.. டிவி ஷோக்களைக் கடந்து.. முதல் திரை பிரசன்னம் ‘என் படுக்கையில் யார் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்?’ படத்தில் டீன் மார்டினுடன்!
பிரபல ஸ்டார் Lucille Ball இன் ‘The Lucy Show’ -வுக்கு அடுத்து அதே அளவு அப்ளாஸ்களுடன் தப்பாமல் கொண்டு போனார், தன் The Carol Burnett Show -வில். 1967 இல்.. ஒளிபரப்பானதுமே பரபரப்பானது. 11 வருடங்களில் 22 எம்மி அவார்ட் வாங்கிய ஷோ அது. அது போதாதா?
எண்பது வயதுக்கு மேலும் அவ்வப்போது டிவியில் தலை காட்டிக் கொண்டு உற்சாகமாக...
சொன்ன பிரபல வாசகம்: ‘இன்பம் என்பது சோகம் ப்ளஸ் காலம்.’

Saturday, April 25, 2026

நெஞ்சில் குடியிருக்கும்...


“நெஞ்சில் குடியிருக்கும், அன்பருக்கு நானிருக்கும்
நிலைமை என்னவென்று தெரியுமா?”
இந்த ‘இரும்புத் திரை’ சூப்பர் ஹிட்டுக்கு இசையமைத்தவர் யாரென்று தெரியுமா?
எஸ் வி வெங்கட்ராமன். இன்று பிறந்தநாள்!
1948 -இல் சிட்டாடலின் ‘ஞானசௌந்தரி’ வெளியானபோது அந்தப் படத்தின் பாடல் ஒன்று பிரபலமாகி எங்கும் ஒலித்தது நினைவிருக்கும்: “அருள் தாரும் தேவமாதாவே! ஆதியே, இன்ப ஜோதியே!” இவர் இசையே.
பி யு சின்னப்பா, தண்டபாணி தேசிகர், டி ஆர் மகாலிங்கம், எம் எஸ் சுப்புலஷ்மி, எம் எல் வசந்தகுமாரி, பட்டம்மாள்… இவர் இசையில் பாடாத சங்கீத பிரபலம் இல்லை.
புகழ் சேர்த்த படம், ‘மீரா.’ 11000 அடியில் 20 பாடல். அனைத்தும் எம்.எஸ். அதிலொன்று கல்கி எழுதிய ‘காற்றினிலே வரும் கீதம்..’ ‘Toot Gayi Man Bina..’ என்ற இந்திப் பாடலிசையின் இன்ஸ்பிரேஷனில் அமைத்த பிரசித்தி பெற்ற சிந்து பைரவி ராக பாடல். மற்றொன்று, கேட்டாலே உருகும் ‘பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த அந்த நாளும் வந்திடாதோ..?’
'வாராய் என் தோழி..' வருவதற்கு முன் கல்யாணங்களில் தவறாது ஒலித்த ‘புருஷன் வீட்டில் வாழப் போற பெண்ணே, தங்கச்சி கண்ணே..’ இவரது இசைப் ‘பண்’ணே! அந்த ‘பானை பிடித்தவள் பாக்கியசாலி’யின் மற்றொரு பாடல் ‘சோலைக்குள்ளே குயிலு குஞ்சு..சும்மா சும்மா கூவுது!’
‘சிங்காரப் பைங்கிளியே பேசு!’ என்றொரு பாடல் ஏ எம் ராஜாவின் தேன் குரலில் ஒலிக்குமே, ‘மனோகரா’வில்? அது!
ஸ்ரீதர் வசனம் எழுதிய ஜெமினி நடித்த ‘மாமன் மகள்’ படத்தில் ‘ஆசை நிலா சென்றதே.. அபலைக் கண்ணீரில் நீந்தியே!’ நாயகியின் விக்கித்துப் போன சோகம் ஜிக்கியின் குரலில். (கால் நிமிடத்துக்கு ஷெனாயுடன் தொடங்கும் அந்தப் பாடலின் orchestration ஒரு ட்ரெண்ட் ஸெட்டர்!) அது உங்கள் நினைவுக்கு வராவிட்டாலும் அதே படத்தில் சந்திரபாபு பாடிய ‘கோவா மாம்பழமே, மல்கோவா மாம்பழமே!’ மறக்காதே?
அந்தக் கால சிவாஜி பாடல்களின் எந்த லிஸ்டிலும் தவறாது தலை நீட்டும் ‘பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா?’(‘மருத நாட்டு வீரன்) ‘அறிவாளி’ படத்தில் ‘ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும்..’
சோழவந்தானில் பிறந்தவர் நாற்பதுகளில் இசை ஆளவந்தார். மாஸ்டர் என்று அழைக்கப்பட்ட ஐந்து இசையமைப்பாளர்களில் ஒருவர்.
ஐந்து வயதிலேயே அழகாக பாடுவார் தியாகராஜ கீர்த்தனைகளை. சங்கீத ஆசையில் சென்னை வந்தார். நாடக மேடையில் இசையமைத்ததோடு நாலைந்து படங்களிலும் நடித்தார். ஏற்பட்ட விபத்தில் படுக்கை வாய்ப்பட்டு நொந்தவருக்கு ‘நந்த குமார்’ படத்துக்கு இசை வாய்ப்பை இசைவாய்த் தந்தது ஏவிஎம்.

புகை என்றால் பகை...


புகை என்றால் தன் காதலனுக்குப் பகை என்பதால், தான் சிகரெட் பிடிப்பதை எப்படியாவது நிறுத்த வழி கேட்டு அந்த சைக்கோதெரபிஸ்டிடம் வருகிறாள் டெய்சி. அவர் அவளை ஹிப்னாடைஸ் செய்ததில் அவளுடைய முன் பிறவிகள் ஒவ்வொன்றுக்கும் உள்ளே போய் வருகிறாள். அதில் ஒன்றில் அவள் பிரபல நாட்டியக்காரி மெலிண்டாவாக இருந்திருக்கிறாள் என்று தெரிகிறது. மெலிண்டாவின் தீவிர அபிமானியான டாக்டர் மிரண்டார், இதாண்டா நான் தேடின பெண்ணென்று! உடனே டெய்சியை காதலிக்கிறார். அவளும் அவரை.
ஆனால் பாருங்கள் அவர் காதலிப்பது தன்னை அல்ல, தன்னுள் இருக்கும் மெலிண்டாவைன்னு தெரிய வந்ததும் - எந்தப் பெண்ணாவது சம்மதிப்பாளா? - உதறி விடுகிறாள். அவரோ விடாப்பிடியாக கெஞ்சுகிறார். மறுபடி தன்னுள்ளே சஞ்சரித்து வந்தவள் அவருக்கு அந்த சந்தோஷச் செய்தியை கொடுக்கிறாள்: “கவலைப்படாதீங்க, என் அடுத்த பிறவி லாரா உங்களைத் தான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாள் அம்பது வருஷத்துக்குப் பிறகு!”
‘On a Clear Day You can See Forever’ (1970) படத்தில் டெய்சியாக வந்து கலக்கியவர்…
Barbara Streisand. 24 April. பிறந்த நாள்..


ஹாலிவுட்டின் ஒரு பானுமதி. ஆம், பாடகியும் நடிகையும்!.. ஏன் டைரக்டரும் திரைக்கதாசிரியரும் கவிஞரும் தயாரிப்பாளரும் கூட. சென்ற நூற்றாண்டின் மிக அதிக ரெக்கார்டு விற்பனையான பாடகி!
நைட் கிளப் பாடகியாக துளிர்த்து, பிராட்வே நாடகங்களில் மிளிர்ந்து, டிவி சிரீஸில் ஒளிர்ந்து, திரைக்கு வந்தார் மனம் குளிர்ந்து. ஒமர் ஷரிஃபுடன் நடித்த முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான ஆஸ்கார்! பென்ஹர் புகழ் வில்லியம் வைலர் டைரக்ட் செய்த படமாச்சே? ஒரே படத்தில் நட்சத்திரமானார். அதே பிறந்தநாள் கொண்ட ஷர்லி மக்லீனுக்குப் போவதாயிருந்த ரோல் அது.
இவரின் ‘The Way We Were’ படப் பாடலை கேட்டால் மிகச் சிறிய விமானமொன்றிலேறி மிக உயரத்தில் வளைய வருவது the way you will feel! லிங்க் கீழே.
இவர் இயக்கிய ‘Yenti’ படத்தைப் பார்த்துவிட்டு புகழ்ந்து தள்ளிவிட்டார் ஸ்டீவன் ஸ்பீல்பர்க். வேறென்ன வேண்டும் திறமையை சொல்ல?
ஆஸ்கார், கிராமி, எம்மி, டோனி, கோல்டன் க்ளோப் என்று நடிப்பு, பாட்டு, நாடக மேடைக்கான அத்தனை டாப் அவார்டுகளையும் அள்ளிக் கொண்ட ஒரே நடிகை.
இவ்வளவும் சாதித்தவர் சொன்னது: நான் உருப்படுவேன்னு எங்க அம்மா நெனைக்கவே இல்லை.

அன்பின் பெருஞ்சொற்கள்...


அன்பின் பெருஞ்சொற்கள்... (அவர் வரிதான்)
யஷோ வின் ‘வரிகளில் படிந்த நிழல்.’ (கவிதைகள்) படித்தேன்.
ஒரு வருடத்திற்கு ரசித்துக் கேட்கிற கவிதைகளை ஒரே தொகுப்பாகக் கொடுத்துவிட்டார். முதலில் ஏற்படும் ஐயம் இதை விமர்சிக்கும் அளவுக்கு கவிதை ஞானம் எனக்கு இருக்கிறதா என்பது. சரி சிவாஜி நடிப்பை விமரிசனம் மாதிரி இது ஒரு ‘வியப்புசனம்’!
யதார்த்தத்தின் உலகத்திற்கும் பெரும் கனவின் அமானுஷ்ய வெளிகளுக்கும் இடையே அவரது நளினமான தாவல்களின் வேகம் அபாரம்.
தலைப்பு: 'மறுக்கும்.'
சிறகு வற்றி இறகுகள் சிதறிய
நில விள்ளலின் பாரமென கனக்கிறது
நேசத்தின் சொற்தின்ற விழிகள்
இமை திறந்து
பெருவெளிக் கூடடைய எத்தனிக்கையில்
விடியல் மறுக்கும் இரவாகிறாய்.
பிரியம், அன்பு, காதல், லயிப்பு எல்லாவற்றையும் சாதாரண சொற்களாக்கி விடுகின்றன, அவர் கையாண்டிருக்கும் அருஞ்சொற்றொடர்கள். 'எங்கேயும் செல்லாத வானத்’தையும் ‘கனவுகளின் சப்தங்களால் ஆன இரவை’யும் நினைக்கவே புல்லரிக்கிறது. அதற்குள் ‘மணித்துளிகளற்ற கணம்’, ‘இருளை உமிழ்ந்த நெடும் பகல்’, என்று சொல்லிக் கொண்டே போகிறார். ‘யாமத்தின் நீளம் அளக்கும் துயில்…’ என்னவொரு ஒயில் சொற்றொடரில்!
பிடித்து இழுத்து நிறுத்திடும் கவிதைகள்...
தலைப்பு: 'டி என் ஏ.'
போல ஒரு நீ
தேட சில வார்த்தை
அறியாமலிருக்க சிறு தூரம்
தவிக்க அவ்வெழுத்து
கேவ ஒரு கடுஞ்சொல்
அணைக்க உன் கவிதை
அதில் நீ
போல ஒரு நான்.
வானத்திலிருந்து வார்த்தைகளை எடுத்து தன் கானத்தில் கோர்க்கிறார். மிகச் சுருக்கமாகவும் மிக விரிவாகவும் அன்பின் போர்வைகளை ஏங்கும் என்பில் போர்த்துகிறார், தன் 'மீளவியலா' கவிதைகளால்!
இதோ ஒன்று!
தலைப்பு: 'யுகமாதல்'
கழியா நாழிகை நீ
களைத்த நிமிடமாய் நான்
யுகமாவாயா.
மணலாழி மனது.. கவிஞ வெறுமை.. கன்ன வெதுமை.. பிம்பத் திரிவு.. தீ இடை... பிரிச்செடுக்க முடியாத உரிச்சொற்றொடர்கள்! கவிதைகளுக்கு அவை highly complementing!
தரிசித்ததில்லை, ஆனால் தரிசிக்க விரும்புவோம் அவர் காட்டும் திசைகளில் கொட்டக் கொட்ட விழித்தபடி அமர்ந்திருக்கும் அழகுகளை.
‘அந்தகாரத்தின் ஒளிக்கீற்றாய் பயணிக்கும் வேகம் உனதன்பு…’ அன்பின் வீச்சை அட்டகாசமாக அளவிடுகிறார் மற்றொரு கவிதையில்!
தலைப்பு: 'என்னுள்ளே.'
ஒரு குழந்தையின் மொழியறிதலாய்
ஒவ்வொரு சொல்லாய்
உள்ளேகுகிறாய் நீ.
(மனத்தினுள் ஏகுபவனின் ஊடுருவலை குழந்தையின் ஒவ்வொரு சொல்லாய் மொழியறிதலை விட மென்மைப் படுத்த முடியுமா?)
கற்பனையின் எல்லை பிரமிக்க வைக்கிறது. ‘...அணுகி வான் பகிர முயலும் அல்காரிதத்தின் ஒன்றும் பூஜ்யமும் சுட்டிய இடங்களில் அமர மறுத்தால்’... என்ன ஆகும்?
அருவியாய் வந்துவிழும் உவமைகள்... ‘பாதியில் நின்று போன தீசிஸ்’, ‘அறிய முற்பட்ட முரண்’, ‘ஆர்வம் தொலைத்த உரையாடல்கள்’...
இசையை இசைக்கிற இவரின் சொற்கள் இசைக்கு மிக இசைவானவை. ‘மனதின் ஆழத்தில் சப்தித்துக் கொண்டே இருக்கும் எழுத்துக்கள் மறைத்த பேரிசை..’
வார்த்தைகள் ரத்தினங்கள். அறிவார், ஆகவே காதலில் ஆட்படுவதை ரத்தினச் சுருக்கமாக...
தலைப்பு: 'என்னை.'
என்னுள்ளே/ என்ன/ நிகழ்த்திக் கொண்டிருக்கிறாய்/ உன்னை.
அந்த அன்புலகிற்குள் அஸால்டாக அழைத்துப் போகிறார், ‘நம் பிணக்கை உடைக்க/ போதுமானதாயிருக்கிறது/ ஒரு அர்த்தமற்ற மீம்…’ என ஒரு கவிதையைத் தொடங்கும்போது.
ரசித்துப் படிக்க வேண்டிய கவிதைத் தொகுப்பு! அவரே சொல்கிற மாதிரி
‘கவிதைகள் அங்கேதான் இருக்கின்றன
அதற்கானவர்கள் மட்டும்
பயணித்துக் கொண்டே இருக்கிறார்கள்.'
(தலைப்பு: ‘வெவ்வேறாக.')
மிக ரசித்த கவிதை?
தலைப்பு: 'அல்லாது.'
மிஞ்சாப் பேராழி
தீவாரித் தழுவினாற் போலல்லாது
பனியின் துளியொன்றை
அபகரித்தாற்போல
கல.
><><

Wednesday, April 22, 2026

ஒளிப்பதிவாளர்களின் ஒளிப்பதிவாளர்...

 


‘மாயாபஜார்’ படத்தில் கடோத்கஜ ரங்கராவ் லட்டு விழுங்கும் காட்சி நினைவிருக்கிறதா? எந்த வசதியும் இல்லாத அந்தக் காலத்தில் எப்படி எடுத்தார் என்று எல்லாரையும் புருவம் உயர்த்த வைத்தார் அவர்.

ஒளிப்பதிவாளர் மார்கஸ் பார்ட்லி... இன்று பிறந்தநாள்!
“ஆஹா இன்ப நிலாவினிலே..” பாடலில், இந்திய சினிமாவிலேயே முதல் முதலாக, முற்பகலில் படமாக்கிய காட்சிக்கு தன் லைட்டிங்கால் மூன் லைட் எஃபெக்ட் கொண்டு வந்திருப்பார்! அதில் ஸ்பெஷலிஸ்ட்.
கதையை கேட்டுத் தெரிந்து கொண்டு கதைக்கேற்ற ஒளிக் கலவையை அளிப்பவர். பர்ஃபெக்‌ஷன் இவர் மூச்சு. ரிசல்ட் வேண்டுமானால் இவர்தான் என்று தேடிவந்தார்கள்.
பானுமதியின் முதல் படமான ‘சுவர்க்க சீமா’தான் இவர் தடம் பதித்த முதல் படம். திறமையால் ‘விஜயா வாஹினி'யின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராகி மிஸ்ஸியம்மா, குணசுந்தரி, பாதாள பைரவி, மாயா பஜார் என்று ‘படம் பதித்தார்’.
Cannes International Film Festival -இல் பிரபல ‘செம்மீன்’ படத்துக்காக பெஸ்ட் ஃபோட்டோகிராபியின் தங்கப் பதக்கம் வாங்கி பெருமை சேர்த்தார். ஜெமினியில் பணி புரிந்து கொண்டிருந்த இவரை ‘செம்மீனு'க்காக டைரக்டர் ராமு காரியாட் விரும்பிக் கேட்டு அழைத்துச் சென்றார். கடற்கரைக் காட்சிகள் கண்ணில் ஒற்றிக் கொள்கிறாற்போல இருக்கும். மணலில் நண்டு ஊர்வதிலிருந்து மறையும் சூரியனின் கிரண வண்ணம் வரை! ‘Ryan’s Daughter’-இன் அட்லாண்டிக் போல 'செம்மீனி'ல் அரபிக் கடலின் இரண்டு மைலுக்கு 60 அடி உயர்ந்த்தெழும் அலகளைப் படம் பிடிக்க விரும்பினாராம், நடக்கவில்லை.
நாம் இவரது ட்ரீட்டை மிஸ் பண்ணினது ‘எங்க வீட்டு பிள்ளை’ படத்தில். அப்போது இவர் ஒளிப்பதிவு பற்றி மேலும் படிக்க வெளிநாட்டுக்குப் போய் இருந்தாராம். ஆனால் இந்திப் பதிப்பான ‘ராம் அவுர் ஷியாம்’ இவர்தான் பண்ணியிருப்பார். ஸ்ரீதர் இந்தியில் ‘பாலும் பழமும்’ (‘Saathi’) இயக்கியபோது கேமராவை இயக்க அழைத்தது இவரை.
என்றென்றும் மறக்க முடியாத மற்றொன்று ‘சாந்தி நிலையம்.’ 'இயற்கை என்னும் இளைய கன்னி..’ பாடல் இறுதியில் காமிரா மேலே, மேலே, மேலே சென்று முடிவது ரம்மியமாக இருக்கும். ‘வண்ண வண்ணப் பூவில் காயை வைத்தவன்..’ வரியில் வட்ட மரத்தைச் சுற்றி காமிரா வளைந்திறங்கும் அழகு ஒன்று போதும், எப்படியெல்லாம் படப்பிடிப்பில் நூதனம் சேர்க்கலாம் என்பதைக் கற்றுக் கொடுக்க. அந்த ராட்சத பலூன் காட்சிகளை யாரால் மறக்க முடியும்? பலரும் எதிர்பார்த்த மாதிரி நேஷனல் அவார்ட், ஸ்டேட் அவார்ட் இரண்டும் கிடைத்தது அந்தப் படத்தின் ஒளிப்பதிவுக்கு. 1989 இல் கிடைத்தது தமிழக அரசின் ராஜா சாண்டோ அவார்ட்.
ஒற்றை நெகடிவில் ஏழு மாஸ்கிங் எடுத்தவர். ஸாஃப்ட் லைட்டிங்கின் முன்னோடியாக இவரைக் கருதுகிறார் பி.சி.ஶ்ரீராம். “கலரும் டெக்ஸ்சரும் சரியாகவும் அழகாகவும் இருக்கும்!”
காமிரா தானிருப்பது தெரியாமல் காட்சியையும் கதையையும் வலுப்படுத்த வேண்டும் என்பார் மார்கஸ் பார்ட்லி. “ஆஹா, நல்ல ஷாட் என்றால் போச்சு என்று அர்த்தம்!”
ஒரு வரியில் சொன்னால் ஒளிப்பதிவாளர்களின் ஒளிப்பதிவாளர்!

Tuesday, April 21, 2026

கற்பனை உலகு...


எந்த ஒரு மீட்டிங்கிலும் சரி, கூட்டத்தை நோக்கி, உங்களில் பள்ளிநாட்களில் ‘Jane Eyre’ படிக்காதவர்கள் விரல் உயர்த்துங்கள் என்று சொன்னால் விரல் உயர்த்தியவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அத்தனை புகழ் பெற்ற அந்த (துணைப்பாடக்) கதையை எழுதியவர்
Charlotte Bronte... இன்று பிறந்த நாள்.
கதையில் ஜேன் படும் துன்பங்களுக்குக் கொஞ்சமும் குறைந்ததல்ல, அதனை உருவாக்கியவர் வாழ்க்கையில் பட்டது. சின்னவயதில் கொண்டு விடப்பட்ட பள்ளி விடுதியில் சார்லெட்டும் 4 சகோதரிகளும் சந்தித்த கஷ்டங்கள்! தங்களில் இருவரைப் பறிகொடுத்தே மீண்டார்கள்
சார்லட்டுக்கு 10 வயது இருக்கும்போது அப்பா சில படை வீரர் பொம்மைகளை வாங்கி வந்தார். சகோதரிகள் அந்த பொம்மைகளுக்கு பெயரும், குணமும், உலவிட ஓர் உலகமும் கொடுத்தார்கள். அந்தக் கற்பனை உலகுக்கு Angria என்று பெயரிடப்பட்டது. அவர்களை வைத்து கதையும் கவியும் புனைந்தார்கள்.
ஆம், வாழ்வின் சோகத்திலிருந்து இலக்கியம்தான் அவர்களை வெளியில் எடுத்து சென்றது. பெண்கள் பெயரில் எழுதினால் வரவேற்பில்லை (ஆம் அப்படி ஒரு காலம் இருந்தது!) என்பதால் ஆண் புனைபெயர்களில் அவர்கள் எழுதினார்கள். அவர்களே வெளியிட்ட முதல் கவிதைத் தொகுப்பு இரண்டு பிரதிகள்தாம் விற்றது என்றாலும் சோர்ந்து போகவில்லை.
சார்லட் அனுப்பி வைத்த கவிகளைப் பார்த்து அவர் திறமையை ஒப்புக்கொண்ட கவிஞர் Robert Southey, ஆனாலும் இதற்கெல்லாம் ஏது பெண்களாகிய உங்களுக்கு நேரம்? வேண்டாமே, என்று பதில் எழுதியதையும் பொறுத்துக் கொண்டார்.
எழுதிய முதல் நாவல் 9 முறை திரும்பி வந்தது. அடுத்ததுதான் Jane Eyre. உடனடி ஹிட்! by Currer Bell என்று வெளியிட்ட பப்ளிஷருக்கு அடுத்த வருடம் தான் தெரிந்தது அது பெண் என்று. மற்றொரு சகோதரியின் நாவலுக்கும் மகத்தான வரவேற்பு. ஆம், ‘Wuthering Heights’ எழுதிய Emily Bronte தான் அவர்.
தந்தையின் உடல்நிலை, தம்பியின் கடன் என்று பல தடைகள், அவர் தனக்கு ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள. தம்பியையும் இரு சகோதரிகளையும் ஒரே வருடத்தில் பறி கொடுத்தார். மூன்று முறை தனக்கு வந்த ப்ரப்போசல்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் போனவருக்கு இறுதியில் அந்த வாய்ப்பு கூடும்போது வயது 37 ஆகியிருந்தது. மாதங்களே நீடித்தது மண வாழ்க்கை. மறைந்தார் 38வது வயதிலேயே, தன் அம்மாவைப் போல.
இரண்டு Quotes ...
‘பகைமையை வளர்க்கவோ மற்றவர் தவறுகளை பட்டியலிடவோ
நேரமில்லாத அளவுக்கு வாழ்க்கை எனக்கு மிகச் சிறியதாகத் தோன்றுகிறது.’
‘மனித இதயத்தில் ரகசியப் புதையல்கள் உண்டு. காப்பாற்றும் ரகசியங்களில். மூடி வைத்த மௌனத்தில். நினைவுகள், நம்பிக்கைகள், கனவுகள், சந்தோஷங்கள்... சொல்லிவிட்டால் அவற்றின் வசீகரம் நொறுங்கி விடும்!’