Wednesday, May 20, 2026

அதே ஜன்னல் ஓரம்...


விபத்தில் அடிபட்டு தன் ஒரு காலில் கட்டுப்போட்டுக் கொண்டு வீல் சேரில் நாளை ஓட்டுகிறார் போட்டோகிராபர் ஜெஃப். அவ்வப்போது வந்து பார்க்கும் காதலியும் நர்சும்... நேரம் போகணுமே? அபார்ட்மெண்ட் ஜன்னலோரம் பைனாகுலரில் எதிர் ஜன்னல்களில் மற்றவர்கள் வாழ்க்கையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவருக்கு உதிக்கிறது ஒரு விபரீத சந்தேகம். இடி மழையின் இடையே கேட்டதே ஒரு சின்ன அலறல், என்ன அது? நோயாளி மனைவியைக் கவனித்துக் கொண்டிருக்கும் அந்த வீட்டுக்காரன், தோர்வால்ட், நீளக் கத்தி ஒன்றை கழுவுகிறானே ஏன்? ஒரு பெரிய ட்ரங்கு பெட்டியை வீட்டிலிருந்து அவன் நகர்த்துவது எதற்காக இருக்கும்? சத்தமில்லாமல் மனைவியை காலி பண்ணி விட்டான் என்று சந்தேகம்! துப்பறியும் நண்பனிடம் சொன்னால், விசாரித்து, அவள் ஊருக்குப் போயிருப்பதாகத் தெரிகிறது என்கிறான்.
பக்கத்து வீட்டுக்காரர் நாயை யாரோ கொன்றுவிட ஜெஃப்புக்கு மட்டும் சந்தேகமே இல்லை அது அவன் தான் என்று. ‘உடலை புதைத்த இடத்தை நாய் தோண்ட ஆரம்பித்திருக்கும், அதான்!’ பொய்யாக ஒரு போன் கால் கொடுத்து அவனை வீட்டிலிருந்து அப்புறப்படுத்துகிறார். அந்த நேரத்தில் காதலி சுவர் ஏறி குதித்து அவன் வீட்டில் நுழைந்து ஆராய்கையில் அவன் வந்துவிடுகிறான். காதலியை காப்பாற்றணுமே? வேறு வழியின்றி போலீஸுக்கு போன் செய்கிறார் ஜெஃப். அவர்கள் வந்து அவளைப் பிடிக்க, விரல்களைப் பின்புறமாக வைத்து ஜெஃப்புக்கு சைகை காட்டுகிறாள் காதலி. விரலில் தோர்வால்டின் மனைவியின் கல்யாண மோதிரம். பார்த்துவிடுகிறான் தோர்வால்ட் இவர் பார்ப்பதை.
அடுத்து என்ன? ஜெஃப்பைத் தீர்த்துக்கட்ட இரவில் அவர் வீட்டில் நுழைகிறான் அவன். தன் காமிராவின் ஃபிளாஷ்களை அவன் முகத்தில் அடித்துத் தப்ப முயல்கிறார் வீல் சேர் ஜெஃப். முடியவில்லை. தள்ளி விடுகிறான் அவரை ஜன்னல் வழியே. சரியாக போலீஸ் வந்து சேர, மாட்டிக் கொள்கிறான். கொலை செய்ததை ஒப்புக் கொள்கிறான்.
கடைசி காட்சி: அதே ஜன்னல் ஓரம். அதே வீல்சேரில் ஜேம்ஸ். ‘இரண்டு காலிலும்’ கட்டுப் போட்டுக் கொண்டு!
ஹிட்ச்காக்கின் பிரபல ‘Rear Window’’வில் ஜெஃப் ஆக வந்து, அந்த வீல் செயரில் நம்மையும் நகர வைத்தவர்...
James Stewart.. இன்று பிறந்த நாள்!
ஒரு மில்லியனில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் 36 மில்லியன் குவித்தது. (ஏன் எல்லோரும் சினிமா எடுக்க ஓடுகிறார்கள் என்று புரிகிறதா?)
‘பின் ஜன்னல்' தவிர இவர் பின்னியெடுத்த படம், ‘என்னவொரு அற்புதம், வாழ்க்கை!’ (‘What A Wonderful Life’) துடிப்பான நடிப்பு!
ஹிட்ச்காக்கின் ‘Vertigo’விலும் ஹீரோ இவரே. உயரம் என்றால் துயரம் அவருக்கு அதில். ‘Rope’ என்ற ஒரே ஷாட் ஹிட்ச்காக் படத்திலும்!
கையில் அடுத்த வேலைக்கான கட்டிடக் கலை டிகிரியை வைத்திருந்தவர், ஆரம்பத்தில் கலக்கியது கௌபாய் படங்களில். ஒரே தொப்பியுடன் என்பது விசேஷம்.
1934 இல் ‘Art Trouble’ முதல் படத்தில் நடித்தபோது டைட்டிலில் பெயர் வரவில்லை. ஆனால் 32 வயதில் ஆஸ்கார் வாங்கி விட்டார். ‘The Philadelphia Story’ க்காக வாங்கிய அந்த ஆஸ்காரை அப்பாவின் இரும்பு கடையில் பார்க்க வைத்திருந்தார்.
இரண்டாம் உலகப்போர். அப்போது இவர் பிரபல நடிகர். அழைப்பு வரவே, குறைந்த 5 பவுண்டை நிறைய சாப்பிட்டு சரியாக்கிவிட்டு ஏர் ஃபோர்ஸில் சேர்ந்தார். அப்படி என்ன எழுதினாரோ தெரியவில்லை, அப்பா அப்போது கொடுத்த கடிதத்தை தப்பாமல் பாக்கெட்டில் வைத்திருந்தாராம் கடைசிவரை. பிரிகேடியர் ஜெனரல் ஆன ஒரே நடிகர்!
திலீப் குமாருக்கும் இவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு 40 வயதுக்கு மேல் திருமணம் செய்து கொண்டவர்கள்.
அமெரிக்கன் பிலிம் இன்ஸ்டியூட் இவருக்கு அளித்தது 50 திரை சாதனையாளர்களின் மூன்றாவது ரேங்க் என்றால், பிரிமியம் மேகஸின் அளித்தது மாபெரும் நடிகர்களில் ஒன்பதாவது இடம்.
Quote?
‘I don't act, I react….பாத்திரங்களுக்கு உள்ளேபோய் குழப்பம் ஏற்படுத்திக் கொள்வதில்லை நான். கொஞ்சம் கொஞ்சம் மாற்றி, நான் ஆகவே எல்லா படத்திலும் வருகிறேன்!’

Monday, May 18, 2026

உலகின் தலை சிறந்த ...


உலகம் சுற்ற வேண்டும் என்பதுதான் ஜார்ஜின் லட்சியம். ஆனால் தன் ஒரே கிராமத்தை விட்டு போக முடியாத நிலை. அப்பா விட்டுச்சென்ற வங்கியை நடத்தியாக வேண்டும். இல்லாவிட்டால் ஊரை விழுங்கி ஏப்பம் விடக் காத்திருக்கும் வட்டி கடைக்காரன் பாட்டர் கைக்குப் போய்விடும். பொறுப்பை ஏற்கிறான். என்ன துரதிர்ஷ்டம், பேங்க் பணத்தை அவர் மாமா தவறவிட அது பாட்டர் கைக்கு போய்விடுகிறது. பணத்தை வைத்தாக வேண்டும் பேங்கில், இல்லாவிடில் போலீஸ்தான்.
செத்துப் போவதுதான் ஒரே வழி என நினைக்கிறான். குடும்பமும் தன் இன்சூரன்ஸ் பணத்தை வைத்துக்கொண்டு சந்தோஷமாக இருக்கும் என்று பாலத்திலிருந்து ஆற்றில் குதிக்கிறான். அவனை அழைத்துப் போக வந்திருக்கும் தேவதை க்ளாரென்ஸ், அவன் உலகில் இல்லாவிடில் என்னவெல்லாம் ஆகியிருக்கும், ஆகும் என்று அவனுக்கு வரிசையாகக் காட்டுகிறது. எல்லாம் பாட்டர் கைக்குப் போய் அந்தக் கிராமமே குட்டிச் சுவராகிறது. அவன் குடும்பம் அல்லாடுகிறது. எல்லாம் பார்த்தவன் நான் வாழணும் வாழணும் என்று கத்துகிறான், பாலத்தின் மேலிருந்து. ஓடிவரும் போலீஸ் நண்பர் அவன் உதட்டிலிருக்கும் பழைய வடுவைக் காட்ட இன்னும் உயிரோடிருப்பதை அறிந்து வீட்டுக்கு ஓடுகிறான். ஊர்மக்கள் அனைவருமே அவன் வீட்டுக்கு வந்திருக்கின்றனர் அவரவருக்கு முடிந்த தொகையுடன், அவனைக் காப்பாற்ற. வாழ்க்கைக்குத் திரும்புகிறான். தேவதை தன் சிறகுகளை, பதவி உயர்வு, பெறுகிறது.
உலகின் தலை சிறந்த படங்களில் ஒன்றான ‘It’s a Wonderful Life (1946)
தயாரித்து இயக்கியவர் உலகப் புகழ் பெற்ற இத்தாலிய அமெரிக்க இயக்குநர்...
Frank Capra… இன்று பிறந்த நாள்!
ஆறு முறை நாமினேஷன் பெற்று மூன்று முறை பெஸ்ட் டைரக்டர் ஆஸ்கார் வாங்கியவர். (‘It Happened One Night’, ‘Mr Deeds Goes to Town’, ‘You Can’t Take It with You.’)
கேப்ராவுக்குப் பிடித்த படமும் இதுதான். ஜார்ஜ் பாத்திரத்தில் வெளுத்து வாங்கியவர், அவர் தான் நடிக்க வேண்டுமென்று கேப்ரா விரும்பிய, ஜேம்ஸ் ஸ்டீவர்ட்.
இந்தக் கதையைத் தழுவி தமிழிலும் ஒரு படம் வந்தது 1954 இல். ‘முதல் தேதி.’ அந்த அசத்தலான ரோலில் உருக்கமான நடிப்பைத் தந்தவர்.. வேறு யார், சிவாஜிதான்.
இந்த 135 நிமிடப் படத்துக்கு உபயோகித்த ஃபிலிம் சுருள் 3,50,000 அடி. போட்ட கிராமத்து ஸெட் பரப்பு 89 ஏக்கர்.
அமெரிக்கன் ஃபில்ம் இன்ஸ்டிட்யூட் No.1 All Time Inspirational Movie யாகத் தேர்ந்தெடுத்த இந்தப் படத்தைக் கதையாகமுதலில் எழுதிய Philip Stern, யாருமே பப்ளிஷ் செய்யத் தயாராக இல்லாததால் சின்ன புக் லெட் ஆக 200 பிரதி அடித்து கிறிஸ்துமஸ் வாழ்த்தாக அனுப்பி வைத்தாராம் நண்பர்களுக்கு.

சின்னஞ்சிறு கிளியே...


“சின்னஞ்சிறு கிளியே.. கண்ணம்மா.. செல்வக் களஞ்சியமே…”
பாரதியாரின் அந்தப் பாடலுக்கு அதைவிடச் சிறந்த இசையை யாரும் அளிக்க முடியாது. ராகமாலிகையில் அமைந்த அந்தப் பாடலில் ஒன்றிலிருந்து அடுத்ததற்கு ராகம் மாறும் அழகே அழகு! அந்த காலத்து பாடல்களின் ஆகச் சிறந்த பாடல்களில் ஒன்றானது அது. (‘மணமகள்')
தந்தவர் இசை மேதை சி. ஆர். சுப்பாராமன்… இன்று பிறந்தநாள்.
மூன்று கட்டங்களாக மேலெடுத்துச் செல்லப்பட்ட தமிழ்த் திரையிசையின் முதலாவதில் முக்கியமானவர்.
ராஜேஸ்வரராவ் வர முடியாததால் எச்.எம்.வி. இவரை அழைத்து செஞ்ச படம் ‘செஞ்சு லஷ்மி’. முதல் படத்திலேயே தன் முத்திரையைப் பதித்து விட்டார். இசையமைத்த பத்து வருடத்தில் புரிந்த சாதனை சொல்லப் பத்தாது.
மனதில் என்றும் ஒலித்துக் கொண்டிருக்கும் அந்த தேவதாஸ் பாடல்கள்:
“உலகே மாயம்.. வாழ்வே மாயம்..”
“துணிந்த பின் மனமே..”
“ஓ.. ஓ.. தேவதாஸ்..” அழியாப் புகழை அளித்தன அவருக்கு.
‘லைலா மஜ்னு’, ‘காதல்' ‘சண்டிராணி’ என்று பானுமதி தயாரித்த படங்களுக்கும் வரிசையாக இசையமைத்தவர் தானும் ஒருவரானார் ‘தேவதாஸ்' படத்தில்.
சுண்டி இழுக்கும் பார்வையுடன் ஒய்யாரமாக மரத்தில் சாய்ந்தபடி பானுமதி நிற்க என். டி. ராமராவ் ஸ்டைலாகப் பாடுவாரே…“வான்மீதிலே.. இன்பத் தேனாறு பெய்யுதே..” (‘சண்டிராணி')
வயலின் வாசிக்க வந்த அந்த இளைஞரின் திறமையைப் பார்த்து தன் அசிஸ்டண்டாக்கிக் கொண்டார்: டி.கே.ராமமூர்த்தி. மற்றொரு அசிஸ்டண்ட் ஆனவர் எம்.எஸ். விஸ்வநாதன்.
எம்.எல்.வசந்தகுமாரியை அறிமுகப்படுத்திய இவர் கண்டசாலாவை தமிழுக்கு அழைத்து வந்தார்.
ஆரோக்கியம் மட்டும் இருந்திருந்தால் அனைவரையும் பின்னுக்குத் தள்ளி பல பத்தாண்டுகளுக்கு நம்பர் ஒன் இசையமைப்பாளராகத் திகழ்ந்திருப்பார்.. தன் 36 வது வயதில் உலகை..
அன்பர்கள் அறிந்ததே: இசையமைப்பாளர் சங்கர் (சங்கர் கணேஷ்) இவரது தம்பி.

Saturday, May 16, 2026

ஜம்மென்று ஒலிக்கும் அந்தக் குரல்...

“ஓ.. தேவதாஸ்..” என்று 17 வயது சாவித்திரி பாடிக்கொண்டே வரும்போது கூடவே நுழைந்த 15 வயது குரல் இவருடையது. அதற்கு முன்பே 7 வயதிலேயே ‘தியாகய்யா’ தெலுங்குப் படத்தில் பாட ஆரம்பித்திருந்தார்.
ஜமுனா ராணி... ஜம்முனு ஒலிக்கும் அந்தக் குரல்... இன்று பிறந்தநாள்!
இந்த வயலின் குரலுக்கு சொந்தக்காரரின் அம்மா ஓர் வயலினிஸ்ட். தந்தை ஆபீஸர் தனியார் நிறுவனத்தில். கிட்டத்தட்ட 6000 பாடல்கள். 1950, 60 களில் அனைத்து இசையமைப்பாளர்கள் பாடல்களிலும்..
முத்திரை பதித்த முதல் பெரிய ஹிட் ‘குலேபகாவலி’யில். கெஞ்சலும் கொஞ்சலுமாக அந்தப் பாட்டு! “ஆசையும்… (விக்கல்) என் நேசமும்..” அந்த அட்டகாசமான பாடலை இந்திப் பதிப்பிலும் அதே அழகுடன் பாடியிருந்தார். (“Aaj Tu In Nainan…”) இப்போது கேட்டாலும் குரலின் வசீகரம் தனியே தெரியும்.
அதே ராஜ சுலோசனா “ஆசை அன்பெல்லாம் கொள்ளை கொண்ட நேசா.. பேசும் ரோஜா என்னைப் பாரு ராஜா!” என்று ‘ஆசை’ படத்தில் அழகாய் ஆடிக்கொண்டே வருவதும் இவர் பாட்டு தான்.
நீங்கள் "பாட்டொன்று கேட்டு பரவசமானால்..." அது அனேகமாக ‘பாசமலரி’ல் இவர் பாடியதாக இருக்கும்.
'அன்பு எங்கே’யில் “பூவில் வண்டு போதை கொண்டு தாவு”வது இவர் குரலினிமையாலும் இருக்கலாம். ‘மாலையிட்ட மங்கை’யில் பாடிய “செந்தமிழ் தேன்மொழியாள்..” நீண்ட காலத்துக்கு அந்தத் தேன்மொழியை நினவில் வைத்திருந்தோம்.
மூன்று பாடகிகள் பாடும் “யாரடி நீ மோகினி” பாடலில் இவர் குரல் தன் தனித்தன்மையால் கவரும். “தேன் வேணுமா? நான் வேணுமா?”

‘கவலை இல்லாத மனிதனி'ல் இவரது “காட்டில் மரம் உறங்கும்..” கானத்தில் மனம் கிறங்கும்.
‘ராணி சம்யுக்தா’ வில் உருக்கமாகப் பாடினார் ஒரு பாடல்: “சித்திரத்தில் பெண்ணெழுதி..” கேட்டால் மறக்க முடியாதது.
லிஸ்டில் டாப் சாங் திக்கனைத்தும் ஒலித்த “மாமா.. மாமா.. மாமா..”தான்.(‘குமுதம்') “சிட்டுப் போல பெண்ணிருந்தா வட்டமிட்டு சுத்தி சுத்தி..” சூபர் ஹிட்! தெலுங்கிலும்!
சந்திரபாபுவுடன் இவர் டூயட்கள் தனி களை கட்டும். “குங்குமப் பூவே…”யானாலும் சரி, "தடுக்காதே.."யானாலும் சரி! ‘பாண்டித் தேவன்’ படத்தில் ச.பாபுவுடன் "நீயாடினால்..." பாடலில் அந்த பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரத்தின் வரிகளை இவர் பாடும் அழகு இருக்கிறதே..
“சீமான்கள் கொண்டாடும் மேடை..
செண்டாலே காற்றெங்கும் வாடை...
சிரிப்பெல்லாம் வெவ்வேறு ஜாடை..."
நாயகன் நாயகி டூயட்டுகளில் ஞாபகம் அகல மறுப்பவை.. மனதை உருக்கும் ‘மன்னாதி மன்னன்’ பாட்டு! “நீயோ நானோ யார் நிலவே?” ‘செல்வம்’: “எனக்காகவா.. நான் உனக்காகவா?” ‘கொடுத்து வைத்தவள்’: “பாலாற்றில் சேலாடுது..”
‘அத்திக்காய்..’ பாடலில் “ஏலக்காய் வாசனைபோல் எங்கள் உள்ளம் வாழக்காய்..” என்று இவர் எண்ட்ரி ஆவது நினைவிருக்கா? அதோடு “ஆதிமனிதன் காதலுக்குப் பின்..”
நீண்ட இடைவெளிக்குப் பின் “நான் சிரித்தால் தீபாவளி..” என்று மறுபடியும் அவர் பாட்டொன்று கேட்ட பரவசத்தைத் தந்தார்.

அவர் சம்மதித்தால்...


‘For Your Eyes Only’(James Bond) படத்தில் நடித்துக் கொண்டிருந்த மனைவி Cassandra Harris ஐப் பார்க்க செட்டுக்கு வந்தார் அந்த நடிகர். 'அவர் சம்மதிச்சா என் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் அவர்தான்,' என்றாராம் அதன் தயாரிப்பாளர் Albert Broccoli.
அந்த நடிகர் Pierce Brosnan. இன்று பிறந்தநாள்!
ஆனால் நடிகர் விரும்பியும் அது கைகூடவில்லை அப்போது. 'The Living Daylights' -இல் நடிக்க முடியாது போயிற்று, பிரபல ‘Remington Steele’ சீரியலில் காண்ட்ராக்டில் நடித்துக் கொண்டிருந்ததால்! இவரைவிட வருந்தியது இவர் மனைவி.
1995. 'Golden Eye'-இல் தொடங்கி நச்சென்று நாலு படம். 'Tomorrow Never Dies', 'The World is not Enough', 'Die Another Day'.
Sean Connery க்குப் பின் ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்துக்கு ஒரு தனி ஸ்டைலை கொடுத்த நடிகர் இவர்தான் என்று நினைக்கிறேன். அவருக்குப் பிடித்த பாண்ட் நடிகரும் கானரிதான். அதனால் ரோல் நல்ல சவாலாக இருந்ததாம்.
வாயின் வலது மேல் ஓரமாக வடு ஒன்று இருக்கும். புண்ணியம் கட்டிக் கொண்டது 'Tomorrow Never Dies' படத்தின் சண்டைக் காட்சி!
உலகின் 50 அழகிய மனிதர்களில் ஒருவராக People’s Magazine தேர்ந்தெடுத்தது இவரை. (1991).
‘நான் முதன் முதலில் பார்த்த படமே ஜேம்ஸ்பாண்ட் படம்தான்!’ என்கிறார். 'Goldfinger'. நடிகராக வேண்டும் என்ற ஆசையைத் துளிர்க்க விட்டதும் அந்தப் படம்தான். அப்பா பிரிந்து சென்று விட்டதால் அதீத அன்புடன் அம்மாவால் வளர்க்கப் பட்டவர். பதினொரு வயதிலேயே ஆறடி உயரம்.
தவிர, ஜேம்ஸ் அல்லாமலும் ரசிகர்களுடன் பாண்ட் ஏற்படுத்திக்கொண்ட வெற்றிப் படங்கள் நிறைய! ‘Dante’s Peak’, ‘The Thomas Crown Affair,’ பிரபல Roman Polanski யின் ‘The Ghost Writer.’ அப்புறம் 2017 இல் The Foreigner. (Jackie Chan உடன்) மிகப் பிடித்திருந்ததாம் 'Mrs. Doubtfire' இல் நடித்தது.
Quote? ‘வெற்றியை விரும்பினேன் அதற்காக உழைத்தேன் கொஞ்சம் திறமை இருந்தது. தீட்டிக் கொண்டேன். அதிர்ஷ்டமும் சேர்ந்துகொண்டது.’

Friday, May 15, 2026

பாட்டுக்கு பல ராகம்..


இவர்களின் வருகைக்குப் பிறகுதான் தமிழ் திரை ரசிகர்கள் இசையமைப்பாளரை கூர்ந்து கவனிக்கத் தொடங்கினார்கள் எனலாம்.
மூன்று நிமிட பாடலின் ஒவ்வொரு வினாடியையும் அலங்கரித்தார்கள். Orchestration -ஐ வேறு லெவலுக்கு எடுத்துப் போனார்கள்.
பாலும் பழமும், பாவ மன்னிப்பு, பாசமலர், பார்த்தால் பசி தீரும், ஆலயமணி, பாசம், நெஞ்சில் ஓர் ஆலயம், போலீஸ்காரன் மகள், வீரத்திருமகன், நெஞ்சம் மறப்பதில்லை, பணத்தோட்டம், பார் மகளே பார், காதலிக்க நேரமில்லை, கர்ணன், ஆண்டவன் கட்டளை, ஆயிரத்தில் ஒருவன், எங்கவீட்டுப்பிள்ளை, புதிய பறவை... திக்குமுக்காடி போனோம் தேன் பலாச்சுளை விருந்தில்!
மெல்லிசை மன்னர்கள்...
T. K. ராமமூர்த்தி. இன்று பிறந்த நாள்!
அப்பாவும் சரி தாத்தாவும் சரி திருச்சியில் பிரபல வயலினிஸ்ட். 14 வயதிலேயே இவரின் திறமையைப் பார்த்து தன்னுடன் சேர்த்துக் கொண்டார் இசை மேதை சி ஆர் சுப்பாராமன். மீதிக்கதை திரையறியும்.
இணைந்தளித்த பாடல்களை சொல்லலாமென்றால் இடம் எங்கே இருக்கிறது?
“தன்னந்தனியாக நான் வந்த போது..” இந்தப் பாடல் காதில் வந்தது 'சங்கமம்' படத்தில். கூடவே “ஒரு பாட்டுக்கு பல ராகம்..”
மறக்க முடியாத பாட்டு ஒன்றைத் தந்தார், ‘மறக்க முடியுமா?’ படத்தில். “காகித ஓடம்.. கடலலை மேலே.. போவது போலே.. மூவரும் போவோம்!” மூவருமா? நாமும்தான், அந்த இசையோடு இசைவோடு!
அத்தனை பாடல்களுமே அருமையாக இருந்தது ‘நான்’ படத்தில்....அந்த அசத்தல் "அம்மனோ சாமியோ..." ஒவ்வொன்றாய்ச் சொல்வதற்குப் "போதுமோ இந்த இடம்.."?
"சந்தனக் குடத்துக்குள்ளே பந்துகள் உருண்டு வந்தது" போல் வந்தன பாடல்கள் ‘தங்கச் சுரங்கத்தி’ல்.
“காதலன் வந்தான்.. கண்வழி சென்றான்.. கண்களை மூடு.. பைங்கிளியே..” மெல்ல மெல்ல இன்னும் இன்னும் இறங்கிக் கொண்டே போகும் இனிமை -‘மூன்றெழுத்து’
“விழியால் காதல் கடிதம்.. வரைந்தாள் ஆசை அமுதம்..” (தேன்மழை), “எந்த எந்த நெஞ்சுக்குள்ளே என்ன மோகமோ?” (மதராஸ் டு பாண்டிச்சேரி), “நாடகமே இந்த உலகம்.. ஆடுவதோ பொம்மலாட்டம்..” (சாது மிரண்டால்), “நிச்சயம் நானே.. நேச்சுரல் பியூட்டி..” (சோப்பு சீப்பு கண்ணாடி.) ‘’உன் மேலே கொண்ட ஆசை.. உத்தமியே மெத்த உண்டு..” (காதல் ஜோதி) “கோயில் என்பதும் ஆலயமே.. குடும்பம் என்பதும் ஆலயமே..” (ஆலயம்)...
கர்நாடக இசையை இவர் கையிலெடுத்தால் அதைவிட இனிய "வசந்த காலம் வருமோ...?" ('மறக்க முடியுமா.')
“சாட்டைக் கையில் கொண்டு, ஓங்கக் கண்டு, காளை ரெண்டு, ஓடுது பாரு, சீறுது பாரு, பாயுது பாரு, பறக்குது பாரு, எவ்வுது பாரு, தவ்வுது பாரு, இப்படி அப்படி தாவுது பாரு, ஓடுறா ராஜா, ஓடுறா ராஜா, ஓடுறா, ஓடுறா, ஓடுறா ராஜா…” என்ற பல்லவியை ஒரே மூச்சில் ஒரே வீச்சில் சீர்காழி கோவிந்தராஜன் பாடுவாரே, ரவிச்சந்திரன் மாட்டு வண்டி ஓட்டிக்கொண்டு வரும் பாடலை? அது ‘காதல் ஜோதி’யில் இவரின் சொடுக்கும் இசையில்...
இவரது பின்னணி இசையின் முழு வீச்சையும் ‘தங்கச் சுரங்கம்’ படத்தில் கேட்கலாம். வில்லனை (தன் தந்தை) பிடிக்கப்போய் ஏமாந்து திரும்பும் சிவாஜி வீட்டுக்குள் நுழையும் போது சந்தேகம் கண்ணில் கொப்பளிக்க, தாயை சந்திக்கும் காட்சியில் ஒரு உச்சகட்ட பின்னணி இசையை வயலின்களால் இழைத்திருப்பார். காமிராவும் அந்த இசையும் சிவாஜியின் புருவங்களும் சுழன்று சுழன்று மேலெழும்பும் ஆக்ரோஷம்!
“கண் போன போக்கிலே கால் போகலாமா..” (பணம் படைத்தவன்) பாடலில் அமைத்திருக்கும் அந்த அற்புத வயலின் இசைக்கோர்ப்பை இவரது திறமைக்கு எடுத்துக்காட்டாக சொல்வார்கள்.

Tuesday, May 12, 2026

வயிறு குலு சிரிப்’ படம்...


தான் பூட்டிக்கொண்டிருக்கும் டினோஸர் எலும்புக்கூட்டைப் பூர்த்தியாக்கத் தேவைப்படும் ஒரே ஒரு எலும்புத் துண்டுக்காக அலைந்து கொண்டிருக்கும் புதைபடிவ ஆய்வாளர் டேவிட் (Cary Grant). தங்கள் மியூசியத்திற்கு ஃபண்ட் வாங்க அவன் எலிசபெத் என்ற பணக்காரியின் வக்கீலை இம்ப்ரஸ் செய்ய வேண்டும்.
அவரை சந்திக்கப்போன இடத்தில் குறுக்கிட்டுத் தொந்தரவு செய்த சூஸனோடு (Katharine Hepburn) சண்டைகள்.
மனசில் காதல் இருந்தால் அதை இப்படி சண்டை போட்டு வெளிப்படுத்துவார்கள் என்று ஒரு சைக்கியாட்ரிஸ்ட் அவளுக்கு சொல்ல, அவள் அதை காதல் என்று எடுத்துக் கொண்டு விடுகிறாள். தன் அத்தைக்காக அனுப்பி வைக்கப்பட்ட சிறுத்தைக் குட்டி ‘பேபி’யைப் பார்த்துக்க அவன் ஹெல்பைக் கேட்கிறாள்.
வந்தவனை நைசாக அழைத்துக்கொண்டு தன் அத்தையின் பண்ணை வீட்டுக்குப் போகிறாள். அவன் தன்னை விட்டுப் போய் விடாமல் இருக்க, அவன் குளிக்கும்போது டிரஸ்ஸை எடுத்து லாண்டரிக்கு அனுப்பி வைக்கிற அளவுக்கு போய்விடுகிறாள். ஊரிலிருந்து அத்தை, அட அவள்தான் அந்த எலிசபெத் என்ற பணக்காரி! வந்து பார்க்கும்போது இவன் அவளின் கவுனுடன்! என்ன ஒரு இம்பிரஷன்!
தேடியலைந்த கடைசித் துண்டு டினோசர் எலும்பு கிடைக்கிறது அவனுக்கு. ஆனால் அத்தை வளர்க்கிற நாய் அதை லவட்டிக் கொண்டு போய் எங்கோ புதைத்து விடுகிறது. சிரத்தையுடன் அதை தாஜா பண்ணி, ஒளித்து வைத்த இடம் தேடுவதற்குள் சிறுத்தையுடன் அது எங்கோ ஓடிவிடுகிறது.
காணாமல் போன பேபியைத் தேடி அலையும் ஜோடி... ஊரில் முகாமிட்டிருக்கும் சர்க்கஸ் கம்பெனியின் சிறுத்தை குட்டியை பேபி என்று நினைத்து கூட்டைத் திறந்து விட்டுவிட, ரெண்டு பேரும் ஜெயிலில்.
ஆக அந்த ஒரு நாள் அமர்க்களத்தில் டேவிட்டுக்கு அவள்மேல் காதல் வந்துவிடுகிறது…
‘Bringing up Baby'.... டைரக்டர் Howard Hawks -இன் காமெடி கிளாஸிக்...
சீரியஸ் ரோல்களில் நடிக்கும் Katharine Hepburn கலக்கிய ‘வயிறு குலு சிரிப்’ படம். இன்று அவர் பிறந்த நாள்!
தொடர் ஆக் ஷன் காமெடியாக இப்படித் துள்ளிக் குதித்துச் செல்லும் படம். கேரி க்ராண்ட் கிட்டத்தட்ட டி ஆர் ராமச்சந்திரன் மாதிரி அசடு வழிய, கேதரின் பின்னே கேட்கவே வேண்டாம், சாவித்திரி மாதிரி சளைக்காமல் அசர வைப்பார்...

ஹாலிவுட்டின் சாவித்திரி...


நாலைந்து படம் நன்றாக நடித்து அதில் ஒன்றுக்கு ஆஸ்கார் அவார்டும் வாங்கினாலும், எதிர்பார்க்கப்படும் எந்த படோபடோபமும் அந்த நடிகையிடம் இல்லை. இமேஜ் பில்டிங் சுத்தம். நிருபர்களைக் கண்டால் ஓட்டம் (ஒரு முறை விமான விசிறியில் மாட்டிக் கொள்ளப் பார்த்தாராம்) பிராட்வே நாடக மேடைக்கு திரும்பினால் சரியான வரவேற்பு இல்லை. திரும்ப ஹாலிவுட்டுக்கு போனால் கிடைத்த படங்கள் ஓடவில்லை. ‘பாக்ஸ் ஆஃபீஸ் பாய்சன்’ என்றனர் வழக்கம்போல.
மனம் தளரவில்லை. மறுபடியும் மேடைக்கு வந்தார். நடித்த ‘The Philadelphia Story’ சூப்பர் ஹிட். அதன் ரைட்ஸ் வாங்கி, ரைட்டான டைரக்டரை அமர்த்தி, கேரி க்ராண்டையும் ஜேம்ஸ் ஸ்டீவர்டையும் போட்டு தானே தயாரித்தார் படமாக. அதுவும் சூப்பர் ஹிட். நட்சத்திரமானார்.
Katharine Hepburn.. (1907 - 2003) ஹாலிவுட்டின் சாவித்திரி… இன்று பிறந்த நாள்!
12 முறை, ஆமாம், 12 முறை நாமினேஷன் பெற்று (ஒரு தடவை கூட விழாவுக்கு போகவில்லை) அதில் ‘நான்கு முறை’ ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஒரே நடிகை. கின்னஸ் ரிகார்ட் அது.
ஸ்பென்சர் டிரேசியுடன் நல்ல ராசி. ஒன்பது படங்களில் ஜோடியாக. கடைசிப் படம் மிகப் பிரபலம். ‘Guess Who’s Coming to Dinner?’ மற்றொன்று ‘Adam’s Rib.’ கணவரை கொலை செய்ய முயன்றதாக அந்தப் பெண் மீது வழக்கு. போலீஸ் தரப்பில் வாதாடும் வக்கீல் பானர். ஆனால் அந்தப் பெண்ணுக்காக ஆஜராகிறார் பானரின் மனைவி அமெண்டா. இருவருக்கும் சரியான நடிப்பு போட்டி.
உறுதி கொண்ட பெண் காரக்டர்களை சித்தரிப்பதில் விற்பன்னரான காதரின், கேரி க்ராண்டுடன் நடித்த சிரியோ சிரி படத்தைப் பற்றி (‘Bringing up Baby’) வேறொரு நாளில் எழுதியிருந்தேன்.
எண்டர்டெய்ன்மெண்ட் வீக்லி 1999 இல் நடத்திய சிறந்த கிளாஸிக் நடிகை போட்டியில் மற்றொரு ஹெபர்னை (Audrey Hepburn) விளிம்பில் வென்றவர்.
‘எந்தக் கலை ஆனாலும் சரி அதில் உயரத்தில் இருப்பவர்கள் தாங்கள் மேலே இருப்பது தங்கள் திறமையினாலா அல்லது அதிர்ஷ்டத்தினாலா என்று ரகசியமாக வியந்து கொண்டிருப்பார்கள், அவர்களுக்கு நேரம் இருந்தால்,’ என்று நினைக்கும் இவர் சொல்வது, ‘கஷ்டப்படுவது எத்தனை சுவையானது என்பதைப் புரிந்து கொள்ளும் யோகம் எல்லாருக்கும் வாய்ப்பதில்லை.’
உற்சாகமூட்டும் இவர் வார்த்தைகள்: ‘சில சமயம் வாழ்க்கை கொடூரமான சோகமாக இருக்கலாம். எனக்கும் இருந்திருக்கிறது. ஆனால் உங்களுக்கு என்ன நேர்ந்தாலும் சற்றே நகைச்சுவையுடன் எதிர்கொள்ளுங்கள். இறுதியில் பார்த்தால் வாழ்வில் நீங்கள் சிரிக்க மறந்து விடக்கூடாது என்பதுதான் முக்கியம்.’
‘உங்களுக்குப் பிடித்த விஷயங்களை செய்யுங்கள், குறைந்தபட்சம் ஒரே ஒரு நபராவது திருப்தியுடன் இருப்பார்.’
சொன்னாரே ஒன்று தமாஷாக: ‘Life is hard. After all, it kills you.’

Friday, May 8, 2026

காதல் க(வி)தை...



கவிஞர் இருவரின் காதல் க(வி)தை..
இங்கே இளைஞன் ராபர்ட். எழுதியவற்றுக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால் தன் கவிதைகளுக்கு ஓர் அங்கீகாரத்தை ஏற்படுத்திவிட முயன்று கொண்டிருக்கிறான். நல்ல ஒரு இடம் மெல்ல எழும் வேளை..
அங்கே எலிசபெத். 12 வயதிலேயே தன் கவிதைகளை எழுத ஆரம்பித்தவள். என்னவொரு சோகமெனில், குதிரையிலிருந்து தவறி விழுந்து முதுகில் அடி. டி.பி.யும் சேரவே, முழு நேர நோயாளியாக அறைக்குள்ளேயே வாசம். தண்ணீரில் மூழ்கி இறந்த தம்பியின் சோகம். எல்லாம் மறக்க எழுதினாள். மொழி நயம்! புதுமையான எண்ணங்கள்! துணிச்சலான கருத்துக்கள்! பிரபலமாகிவிட்டிருந்தாள். தன் தொகுப்பொன்றில் ராபர்டின் கவிதைகளைப் பற்றி குறிப்பிட...
நன்றி தெரிவித்து கடிதம் எழுதினார் ராபர்ட். அவள் கவிதைகளின் மீதான தன் ஹார்ட்டின்களையும் சேர்த்து. ‘என் இதயபூர்வமாக நேசிக்கிறேன் உங்கள் கவிதைகளை..’ என்று தொடங்கிற்று அது. தொடர்ந்தது நட்பு. 2 வருடத்தில் 600 கடிதங்கள்! அவளது நண்பர் (Kenyon) உதவியால் ஒரு கோடை நாளில் சந்தித்தார்கள். கல்யாணம் என்றாலே பிடிக்காத கண்டிப்பான அப்பாவின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் இருப்பவள். ரகசியமாகவே சந்திப்பு. காதலுக்கு இதைவிட கிரியா ஊக்கி உண்டா? மலர்ந்தது.
ஆற்றொணா துயரிலிருந்து தன்னை மீட்டவர் மேல் மாற்றொணா அன்பு. ஆனாலும் ஆயிரம் தயக்கம் எலிஸபெத் மனதில். அனுதாபத்தில் வந்த காதலா? நீடிக்குமா? அப்பால் வருந்த நேருமா? 6 வயது அதிகம் இல்லையா அவளுக்கு? அப்பாவின் ஆதரவில் இருக்கும் நோயாளியாயிற்றே நான்? ஆனால் ராபர்ட் திடம் தந்தார். காதலில் விளைந்த அவள் கவிதைகள் பல. அதிலொன்று பிற்பாடு காதல் இலக்கியமானது. “எப்படியெல்லாம் உன்னைக் காதலிக்கிறேன்? எண்ணப் போகிறேன் அந்த வழிகளை!...” 14 வரி ஸானட்.
அவளைக் கவனிக்கும் தாதி சாட்சியாக வர, ஒரு செப்டம்பர் 12 இல் ரகசியமாய் திருமணம் செய்து கொண்டனர். பாரிசில் தேனிலவு முடிந்த கையோடு டாக்டர்கள் ஏற்கெனவே சொல்லியபடி, (அப்பா செய்ய மறுத்தது) வெப்பமான இத்தாலிக்கு அழைத்துச் சென்று ஃப்ளாரன்ஸில் குடியமர்த்தினார் ராபர்ட். அப்பா கடைசி வரை பேசவேயில்லை.
மனைவியின் கவிதைகளுக்கு மவுசு ஏற்பட உழைத்தார் இவர். அவளும் அதுபோல். இருவர் எழுத்திலும் முன்னேற்றம். Wordsworth மறைந்தபோது அவைக் கவிஞர் இடத்துக்கு Tennyson, எலிஸபெத்துடன் போட்டியிட வேண்டியதாயிற்று. Aurora Leigh என்ற தன் மிகப் பெரும் கவிதை நாவலை அப்போதுதான் எழுதினார்.
ஆரோகணத்திலிருந்து அவரோகணத்துக்கு வந்த ஆரோக்கியம்… 1861. மணவாழ்வின் 15 வது வருடம்.. மெலிவுற்று நலிவுற்று கணவன் மடியிலேயே உயிர் விட்டார். ஆனந்தப் புன்னகையொன்று அவள் முகத்தில்.. ‘பியூட்டிஃபுல்!’ என்றொரு வார்த்தை உதடுகளில். கடைசி வார்த்தை!
Robert Browning and Elizabeth Barrett...

Thursday, May 7, 2026

கேட்டுக் கிறங்கி ...


ஹேம்லின் நகரத்தில் கெலிக்க முடியாத எலித்தொல்லை. எதுவும் பலிக்கவில்லை. என்னிடம் விடுங்கள் என்று வந்தார் அந்த பைப் வாசிப்பவர். 40000 ரூபாய் பேசுகிறார்கள். அவன் பைப் எடுத்து வாசிக்க, அத்தனை எலிகளும் கேட்டுக் கிறங்கி அவன் பின்னால் பைப் லைனாக அணிவகுத்தன. அப்படியே அழைத்து சென்று ஆற்றில் நடந்து எலிகளை மூழ்க வைத்தான். எலிகள்தான் எலிமினேட் ஆயாச்சே? 2000 தான் தருவேன் என்கிறார்கள். அவன் மறுபடியும் பைப்பை வாசிக்கிறான். கேட்டு மயங்கிய அந்த ஊர் குழந்தைகள் அவனைத் தொடர அழைத்துச் செல்கிறான் காட்டுக்கு...
‘The Pied Piper of Hamelin’ - பிரபலமானஇந்தக் கவிதையை எழுதியவர் ...
Robert Browning.. பிரசித்தி பெற்ற ஆங்கிலக் கவிஞர். இன்று பிறந்த நாள்.
நோய்வாய்ப்பட்ட அவருடைய பப்ளிஷர் நண்பர் மகன், நேரம் போகாமல் படம் வரைவதற்கு ஒரு கதை கேட்டபோது இவர் கவிதையாக சொன்னதுதான் இந்தக் கதை.
அப்பா வைத்திருந்த 7000 புத்தக லைப்ரரி ஆர்வத்தை கிளப்ப, சின்ன வயதிலேயே தீர்மானித்துவிட்டார் கவிஞராக வேண்டும் என்று.
கவிதாயினி Elizabeth Barrette மீதான காதல் ஒரு காவியக் கதை.
ஆழமான வரிகளை வரைந்தவர். சில இதோ...
‘எட்டுவதற்கு மேலாக இருக்க வேண்டும்
மனிதன் அடைவது;
சொர்க்கம் என்று ஒன்று இருப்பது வேறு எதற்காக?’
'பளிங்கு என்று இளமை நினைத்ததை,
பனித்துளி என்று கண்டுபிடிக்கிறது முதுமை!'
‘என் சூரியன் மறைவது,
மீண்டெழுவதற்கே.’
‘எளிய அழகு மட்டுமே உங்களுக்கு கிடைத்தது
வேறு எதுவும் கிடைக்கவில்லை என்றால்
கடவுள் உருவாக்கிய மிகச்சிறந்தது
உங்களுக்கு கிடைத்திருக்கிறது என்று அர்த்தம்!’
‘அன்பு, அச்சம், எதிர்பார்ப்பு, நம்பிக்கை:
இவற்றால் ஆனதே மனிதம்.
இவையே அதன் அடையாளம், லயம், தன்மை.’
‘எவ்வளவு வருத்தமாக, எவ்வளவு மோசமாக
எவ்வளவு கிறுக்குத் தனமாக இருந்தது!
ஆனால் எப்படி அது இனிமையாக இருந்தது?’
><><><

Wednesday, May 6, 2026

ஏராளம் பஞ்ச் ...


‘Jab We Met’ படத்தின் கடைசிக் காட்சி. படுத்திருக்கும் தாத்தா, பேத்தி கரீனா கபூரின் ரெட்டைக் குழந்தைகளிடம் சொல்வார், “உங்கம்மாவும் அப்பாவும் எங்கிட்ட திரும்பத் திரும்ப பொய் சொன்னாங்க, ஆனா அவங்க காதலைக் கண்ணிலிருந்தே கண்டு பிடிச்சிட்டேன் நான்!” அந்தத் தாத்தா யாரென்று தெரிகிறதா?
இந்தியாவின் சூபர்மேன்... மல்யுத்தத்தில் ஒருபோதும் தோற்காத ரெக்கார்டை கொண்டவர்… சினிமாவின் நிஜ ஹீரோ.
டயலாகில் அல்லாது நிஜமாகவே ஏராளம் பஞ்ச் விட்ட தாராசிங்!
இன்று பிறந்த நாள்.
203 கிலோ ஆன, ஆனானப்பட்ட கிங்காங்கை அசால்ட்டாக தலைக்குமேல் தூக்கிச் சுழற்றி வீசியவர். அந்த ஃபைட்டில், கிங் சைடில் கிங் சைஸுக்கு பெட் கட்டினவங்க அதிகம். ஆனால் கடைசியில் அவர் உதவிக்கு ரெஃப்ரீயை நோக்கிக் கத்த வேண்டியதாயிற்று.
அந்த நாட்களில் தாராசிங் Vs கிங் காங் என்றாலே போதும், எள் போட்டால் லெவலுக்கு கூட்டம் களைகட்டிவிடும். (நம்ம ஊரில் அந்த மல் யுத்தங்களை நடத்தியதில் ஒருவர் சின்ன அண்ணாமலை.)
பயில்வானி என்ற பல நூறாண்டு பழமை வாய்ந்த கலையைப் பயின்று வந்தவரை வெல்வாரில்லை. வந்தாரா, வென்றாரா, சென்றாரா என்றிருப்பார். (‘தாரா’ என்ற வார்த்தைக்கு ராஜா என்றல்லவா அர்த்தம்?)
இந்த 53 இஞ்ச் நெஞ்சுக்கு ஆறடி ரெண்டு அங்குல உயர 'வின்னர் ஃபார்எவர்' வந்தது விவசாய குடும்பத்தில் இருந்து. இந்தியா சாம்பியன்.. காமன்வெல்த் சாம்பியன்.. கடைசியில் உலகச் சாம்பியன், 1968 இல் அமெரிக்க வீரரை (Lou Thesz) வென்று!
தயாரிப்பாளர்கள் அழைக்க மேடையிலிருந்து திரைக்கு... அத்தனை பாட்டுக்களும் ஹிட்டான (Laxmikant Pyarelal) ’புயல் வந்தது' (‘Aaya Toofan’) போன்ற படங்களின் மூலம் புயலாக வந்தார். மும்தாஜுடன் ஹீரோவாக ராஜேஷ் கன்னா அதிகபட்சம் 10 படங்களில் நடித்திருப்பார், ஆனால் 16 படங்களில் அவருடன் ஹீரோவாக நடித்தவர் இவர். செகண்ட் லெவல் படங்களில் ஃபர்ஸ்ட் லெவல் சம்பளம் வாங்கினார்கள் அவரும் மும்தாஜும்.
ஹெர்குலிஸ் ஃபிகர் எப்படி இருக்கும் என்று கேட்டால் தாராளமாக சொல்லிவிடலாம் தாராசிங் மாதிரி இருக்கும் என்று . Incidentally அவர் Hercules ஆகவும் நடித்தார். Anand படத்தில் தகராறு பண்ணும் பசங்களிடமிருந்து தன்னைக் காப்பாற்ற ராஜேஷ் கன்னா அழைத்து வருவாரே அது தாராசிங்கைத்தான்!
பிரபல 'ராமாயணா' டிவி தொடரில் இவர் ஹனுமானாக வந்தது அனுமானிக்க முடியாத புகழ் தந்தது.
தம்பி ரந்தாவாவும் ஒரு மல்யுத்தர் & நடிகர். ‘ஜானி மேரா நாம்’ அல்லது ‘ராஜா’வில் பார்த்திருப்பீர்களே இவரை?
கால் நூற்றாண்டுக்கு மல்யுத்த மேடைகளின் ராஜாவாக வலம் வந்தவர் 1983-இல் அவார்ட் வாங்கிய கையோடு மேடைக்கு குட்பை சொன்னார்.

மூன்று முறை படமாக...


முன்பெல்லாம் ஷூட்டிங் நடக்கும்போது அது அவுட்டோராக இருந்தாலும் சரி, இன்டோராக இருந்தாலும் சரி துளி சத்தம் கேட்கக் கூடாது, டயலாக் தவிர! மைக் கவ்வி விடும். காக்காய் கத்தினாலே ரீடேக் தான்.
ஆனா இப்பல்லாம் ஷூட்டிங் நடக்கிறப்ப எந்த சத்தம் எழுந்தாலும் கவலை இல்லை. க்யூட் சப்தம்னாலும் ம்யூட் தான். பேச்செல்லாம் டப்பிங்கில் பார்த்துக் கொள்ளலாம். நடிகர்களுக்கு வசதி. நாடகம் மாதிரி ப்ராம்ப்ட் கூட பண்ணலாம்.
ஆனால் முன்புக்கும் முன்பொரு காலத்தில், அதாவது மௌனப் படங்கள் வந்த காலத்தில் நிலைமை வேறு. எந்த சத்தம் போட்டாலும் ஃபிலிமில் விழாது. ஏன்னா அந்த வசதி இல்லை. அதனால் இருந்த கஷ்டம் அதிகம். ஃபிலிமில் டயலாக் ஒலிப்பதிவு ஆகாது. பத்துப் பதினைந்து ஷாட்டுகளுக்கு ஒரு முறை வசனத்தில் எஸென்ஷியல் ஒரு வரியை கார்டு போடுவார்கள். மிச்சம் எல்லா வசனத்தையும் நடிப்பில் காட்டவேண்டும். அழுவதையும் சிரிப்பதையும் தவிர அத்தனை எமோஷனும் சவால்தான்.
அந்தவிதமான மௌனப் போர்ட்ரேயலில் ஜெயித்து சக்கைப்போடு போட்டவர்களில் மகத்தானவர் சார்லி சாப்ளின். (எந்த அளவுக்கு என்றால் மௌனித்த படங்கள் பேச ஆரம்பித்தபோது அதில் நடிக்க விருப்பமே வரவில்லையாம்.) அடுத்தபடியாக அந்த சைலன்ட் எராவில் சக்கை போடு போட்ட ஹீரோ..
Rudolph Valentino…(1895 - 1926) இன்று பிறந்த நாள்!
இத்தாலியில் இருந்து ஹாலிவுட்டுக்கு இடம் பெயர்ந்தவர். ஆரம்பத்தில் காசின்றி ரோடுகளில் நடமாடியவர் அதன்பின் ஓட்டல்களில் நடனமாடினார். அப்புறம் சின்ன சின்ன வேடங்கள்.
‘The Four Horsemen of the Apocalypse’ படத்துக்கு திரைக்கதை எழுதிய பெண் (June Mathis) இவரை சிலாகித்து சிபாரிசித்து ஹீரோ வேடம் வாங்கிக்கொடுத்து இவர் வாழ்க்கைக் கதையை எழுதினார்.
அதிவிரைவில் மாஸ் ஹீரோ ஆகிவிட்டார். Tango டான்ஸை இவர்தான் அறிமுகப்படுத்தினார் ஹாலிவுட்டுக்கு என்பார்கள். பத்து லட்சம் டாலர் மொத்த வசூல் வந்த முதல் படங்களில் இவருடையதும்….
பரபரப்பான படோபடோப வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு புகழின் உச்சத்தில் தன் முப்பதுகளின் துவக்கத்தில் மறைந்தார். அதிர்ச்சியுடன் அடக்கத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலும் பெண் ரசிகைகள்.
இவரது வாழ்க்கை மூன்று முறை படமாக, அதில் ஒன்றில் நடித்தவர் பிரபல Franco Nero.

Monday, May 4, 2026

தன்னை விட்டு வெளியே...


அமெரிக்க கல்வியின் தந்தை என்று அவர் அழைக்கப்படுகிறார். ‘கல்வி என்பது அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டிய ஒன்று, தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு,’ என்று ஆயிரத்தி எண்ணூறுகளில் பேசியவர். "வறுமையை ஒழிக்கவும் குற்றங்களைக் குறைக்கவும் அதுவே உதவும்."
Horace Mann… (1796 - 1859) இன்று பிறந்த நாள்!
இளமையில் வறுமையில் உழன்றவர் பயின்றது பெரும்பாலும் நூலகங்களில்..
ஸ்கூல் சிஸ்டம் ஆரம்பித்து வைத்தவர்களில் முக்கியமானவர். ஒரு கிளாஸில் எல்லா மாணவர்களும் என்பதில் தொடங்கியது வயதுக்குத் தகுந்தபடி தனித்தனி கிளாஸ் என்று வளர்ந்தது.
இந்த ஹோம் வொர்க்! கண்டுபிடிச்சது யாருன்னு குமுறுவாங்க சில பசங்க. அது இவரு இல்லீங்க. ஆனா அதை ஒரு முக்கியமான விஷயமா கொண்டு வந்ததில் இவர் பங்கு இருக்கு...
ஊர்ஸெஸ்டர் என்ற ஊரில் அமெரிக்காவின் முதல் மனநல மருத்துவமனை ஏற்பட்டதன் பின்னால் இவரது உழைப்பு மிக.
மாணவர்களுக்கு அவர் சொன்னது: ‘மனிதகுலத்துக்கு ஏதேனும் வெற்றி தராமல் மரணம் அடைய வெட்கப்படுங்கள்!’
இன்னும் சொன்னவை: ‘புத்தகங்கள் இல்லாத வீடு ஜன்னல்கள் இல்லாத அறையை போன்றது.’
'காணவில்லை! நேற்று சூரியோதயத்துக்கும் அஸ்தமனத்துக்கும் இடையில் இரண்டு பொன் மணி நேரம். அறுபது வைர இழைகளால் ஆனது. கண்டுபிடிப்பவர்களுக்கு எந்த பரிசும் கிடையாது. அவை காணாமல் போனது போனதுதான்.'
‘மற்றவர்களுக்கு நாம் செய்யும் ஆகப் பெரிய சேவை, அவர்கள் தங்களுக்குத் தாங்களே உதவிக் கொள்ளச் செய்வதுதான்.’
‘வாழும்போது செய்யும் தர்மம் சாகும்போதும் செய்யும் தர்மத்தை விட வித்தியாசமானது. இது தாராள மனதுடன் பரோபகார சிந்தையில் எழுவது. மற்றது பயத்தில் அல்லது கௌரவத்தில் எழுவது.’
‘மாணவனிடம் கற்றுக் கொள்ளும் ஆர்வத்தை உருவாக்காமல் ஓர் ஆசிரியர் கற்றுக் கொடுக்க முயற்சிப்பது குளிர்ந்த இரும்பில் சுத்தியலால் அடிப்பது போல.’
‘பழக்கம் என்பது ஒரு கயிறு. தினம் ஒரு இழையாக பின்னுகிறோம், கடைசியில் அதை அறுக்க முடியாத அளவுக்கு.’
‘தன்னை விட்டு வெளியே செல்கிற இதயம் இன்னும் பெரிதாகி இன்பத்தால் நிரம்புகிறது. அக வாழ்க்கையின் மிகப்பெரும் ரகசியம் இதுதான். மற்றவர்களுக்கு ஏதேனும் செய்வதன் மூலம் நமக்கு நாம் பெரும் நல்லது செய்கிறோம்.'

இளவரசியாக...


அரண்மனையின் சம்பிரதாய கெடுபிடிகள் பிடிக்காத இளவரசி அவள். ரோம் வந்தபோது இரவில் வெளியே நடக்கும் கேளிக்கைகளை வேடிக்கை பார்க்க எட்டி குதித்து வெளியே வருகிறாள். லேட்டாக வேலை செய்த தூக்க மாத்திரைகளால் நடு ரோட்டில் குழம்ப, சந்திக்கும் ரிப்போர்ட்டர் கிரிகரி பெக், போதை என்று நினைத்து அந்தப் பேதையை பத்திரமாக தன் அறைக்கு அழைத்து சென்றதினால், இளவரசி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை கவர் செய்வதில் கோட்டை விடுகிறார். அவளேதான் அது என்றறிந்ததும், தனிப் பேட்டியே வாங்கி தருகிறேன் பார் என்று பத்திரிகை ஆசிரியரிடம் சவால் விட்டவர் ஊரைச் சுற்றி காட்டுகிறேன் என்று அவளை அழைத்துப்போகிறார். அவர்கள் அடித்த லூட்டிகளை உடன் அழைத்துச் சென்ற நண்பனைக் கொண்டு போட்டோவும் எடுத்து விடுகிறார். ஆனால் ஒரு பிரியம் பிறக்கவே கட்டுரையைப் பத்திரிகைக்குத் தர மறுக்கிறார். காதல் மலர்ந்தாலும் கடமை அழைக்க 'இளவரசி'க்கு திரும்புகிறாள் அவளும். இளவரசியின் ஃபேர்வெல் விழாவில் நண்பன் அந்த போட்டோக்களை அவளுக்குப் பரிசளிக்க, பை சொல்லி, தன் தனிமைக்கு திரும்புகிறார் ரிப்போர்ட்டர் பெக்.
படங்களுக்கெல்லாம் படமான ‘Roman Holiday’ கதை அது. ஆமாம், அதையொட்டி நாலைந்து படங்கள் வந்துவிட்டன தமிழில் மட்டுமே.
இளவரசியாக Audrey Hepburn.. இன்று பிறந்தநாள்!
ஸ்லிம்முக்கு எதுகை இவர். பிளஸ் அந்த துரு துரு கண்கள்! ஒரு லுக் விட்டார், அவ்வளவுதான், அந்தப் பார்வைக்கு ஆட்ரே ஹெபர்ன் லுக் என்றே பேர் வந்திட்டது!
கிரிகரி பெக் அப்போ டாப் ஸ்டார். ஷூட்டிங் தொடங்கி நடக்கும் போதே புதுமுகமான ஆட்ரே பெயரை தனக்கு இணையாக போட சொல்லிவிட்டார். பதறிய ஏஜென்டிடம், ‘ஆஸ்கார் வாங்கப் போகிறாள் பார்!’ என்றார். அப்படியே வாங்கினார் ஆட்ரே.
கடைசி காட்சியில் அழுகை வரவில்லை அவருக்கு. டைரக்டர் வில்லியம் வைலர்(Ben Hur) போலியாகப் போட்ட அதட்டலில் பொத்துக்கொண்டு வந்துவிட்டது.
Wait, அந்த ‘Wait Until Dark’ பத்தி சொல்லிடறேன்... அவளுக்கு கண் தெரியாது. தனியே இருக்கிறாள் வீட்டில். அங்கே கொள்ளையடிக்க மூன்று பேர் நுழைகிறார்கள். எப்படி தப்பிக்கிறாள்? வினாடிக்கு வினாடி த்ரில்! நுனி அல்ல, சீட்டுக்கு வெளியேவே வரவழைத்துவிடும் சஸ்பென்ஸ்! ஆஸ்கார் நாமினேஷன் வாங்குகிற அளவு அபாரமாக நடித்தார் ஆட்ரே.
அப்புறம் My Fair Lady. ப்ச்! வேறெதுவும் சொல்ல வேண்டாம். மனங்களை வாரி முடிந்து கொண்ட அந்த பூக்காரியை யாரால் மறக்க முடியும்?
ஜஸ்ட் 31 படங்கள்தான். முக்கிய கதாநாயகர்கள். பிரபல டைரக்டர்கள். ஏராளம் அவார்டுகள். யார் செய்வார்கள், உச்சத்தில் இருக்கும்போதே விலகிக் கொண்டதும், சொச்ச வருடங்கள் லத்தீன் அமெரிக்காவிலும் ஆப்பிரிக்காவிலும் உள்ள ஏழைக் குழந்தைகளுக்காக உழைத்ததும்.. கான்சர் வாரிக்கொண்டது வரை.
பிரபல பிரிட்டிஷ் பத்திரிகை நடத்திய உலகின் கண் கவர் பெண்களின் போட்டியில் நம்பர் ஒன்னாக வந்தார் என்றால் மற்றொரு போட்டியில் உலகின் இயற்கையான அழகிகளில் முதலாவதாக! 50 கிலோ தாஜ்மஹால் என்றிவரை வர்ணிக்க முடியாது. ஏன்னா 47 கிலோ தாண்டியதேயில்லை வாழ்நாளில், தான் வைராக்கியம் வைத்திருந்தபடியே.
சினிமாவால் பலரைப் பல்லைக் காட்ட வைத்திராவிட்டால் பல் ஆஸ்பத்திரியில் காட்ட வைத்திருப்பார், ஆம், முதலில் பல் டாக்டர் உதவியாளராகப் பயின்றிருந்தார்.
‘Cleopatra’ வுக்கு முதலில் யோசிக்கப்பட்டவர்.. ‘The Exorcist’ படத்தில் நடிக்கவில்லை, மகன்களுடன் இருக்கணும் என்று ரோமில் படப்பிடிப்பு வைக்கக் கேட்டதற்கு அவர்கள் சம்மதிக்காததால்.
இவர் பிரபலத்துக்கு ஒரு சாம்பிள், ‘Breakfast At Tiffany’s’ படத்தில் அணிந்த உடை சுமார் மில்லியன் டாலருக்கு ஏலம் போயிற்று.
சொன்னாலும் சொன்னாங்க நல்லாவே சொன்னாங்க: "அவங்க நடிக்கச் சொல்லும்போது எனக்கு நடிக்கத் தெரியலே. அவங்க பாடச் சொல்லும்போது எனக்குப் பாடத் தெரியலே. அவங்க ஆடச் சொல்லும் போது எனக்கு ஆடத் தெரியலே. அப்புறம் ஒரு ஆவேசத்தோட எல்லாத்தையும் கத்துக்கிட்டேன்.”
“ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம் வாழ்க்கையை அனுபவிப்பதுதான். சந்தோஷமாக இருப்பது! அது ஒண்ணுதான் விஷயம்!”
“எப்பவாவது உங்களுக்கு ஒரு உதவிக்கரம் தேவைப்பட்டால் அது உங்கள் தோளின் அற்றத்தில் இருக்கிறது என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வளர்ந்து வரும்போது உங்களுக்கு இன்னொரு கையும் இருப்பதை நினைவில் கொள்ளுங்கள். முதல் கரம் உங்களுக்கு உதவ. இரண்டாவது மற்றவர்களுக்கு உதவ.”