Monday, February 9, 2026

“ஒன்னோட நடந்தா…"


'விடுதலை' பாடல்...
இருள் பிரியாத இளம் கருக்கலில், இனம் புரியாத நதிப் போக்கில், இஞ்ச் சரியாத மரப் படகில், இலக்கின்றி வழுக்கிச் செல்வதைப்போல ஒரு பாடல் தந்திருக்கிறார் இளையராஜா.
வெற்றி மாறனின் 'விடுதலை'யில் அவர் பாடல்...
“ஒன்னோட நடந்தா…கல்லான காடு.. பூத்தாடும் பூவனம் ஆகிடுமே...”
வாழ்க்கையின் அழுத்தமும் சூழலின் இறுக்கமும் காதலின் இதமும் கலந்தேற்படுத்தும் உணர்வை இசையைப் போல் சொல்வதொன்றுண்டோ? என்று கேட்கும் பாடல் இது.
சின்னஞ்சிறு மதகுக்குள் புது வெள்ளம் குபுக் குபுக் என்று நுழைந்தோடுவதைப் போல முதல் சரண முன் இசையை தொடங்குவதும்… இரண்டாவது இடையிசையில் அந்த ஆராரிரோவை பல்லவி முடியும் முன்னால் சன்னமாக வெள்ளோட்டம் விடும் புதுமையும்!
சரணத்தின் முதல் வரியில் தாளத்தை வேறு விதத்தில் கொடுப்பதாகட்டும், நாலாவது வரியில் இல்லாத தாளத்தால் பிறப்பிக்கும் அமைதியாகட்டும்.. ஈர்த்து ரசிக்க வைக்கிறது.
“காத்தில் வரும் புழுதியை போல்.. நம்மைத் தூத்துகிற ஊரு இது..”. என்று சரணம் தொடங்கும் பொழுது பின்னால் பங்சுவேஷன் கொடுக்கும் அந்த மணி ஓசை மனதை என்னவோ செய்கிறது.
“முன்னேறிப் போக முட்டுக்கட்டை ஏது…” என்று பாடும்போது தனுஷின் குரல் ராகத்தின் எழுச்சிக்கு பதமாகப் பொருந்திப் போகிறது!
எங்கே வரும் எங்கே வரும் என்று எதிர்பார்க்கும் ஃப்ளூட் இசை, என்ன எதிர்பார்த்தாலும் அதையும் தாண்டிய ஒரு அழகு வரி வைத்திருப்பார், இரண்டாவது சரணத்துக்கு முன் அது சிறு நடனம் ஆடுகிறது.
‘காதல் சாதி’யில் ராஜா கொடுத்திருந்த, படம் வெளியாகாததால் பலரால் கவனிக்கப்படாமல் போய்விட்ட அந்த மாஸ்டர் பீஸ், அவரே பாடிய, “என்னை மறந்தாலும் உன்னை மறக்க மனம் கூடுதில்லையே..” கொடுத்த அதே உருக்கத்தை இந்தப் பாடலில் காண்கிறேன்.
பாட்டு முடிந்த பிறகும் அந்த ‘தன்னத் தன்னத் தானா..’ மனதில் ஆடிக்கொண்டே இருக்கிறது…

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!