Tuesday, September 30, 2025

ஒருவரே... அவரே!

1.தர்மேந்திரா நடித்ததில் உங்களால் மறக்க முடியாத படம் எது என்றால் ‘Satyakam' (தமிழில் 'புன்னகை') -ஐச் சொல்லத் தயங்க மாட்டீர்கள்.
2.ஜெயா பாதுரி என்றதும் முதலில் நினைவுக்கு வருவது 'Guddi'தான்.
3.ராஜேஷ் கன்னாவின் 'Anand’! ஆரால் மறக்க முடியும்?
4.அமிதாப் பச்சனின் பேர் சொல்லும் படங்களில் 'Abhiman' தவறாமல் இருக்கும்.
5.அமோல் பலேகரின் அட்டகாச காமெடி படம் என்றால் அது 'Gol Maal'(தமிழில் 'தில்லு முல்லு').
6.ராஜ் கபூர், நூடன் ஜோடியாக நடித்ததில் முதலில் நிற்பது ‘Anari’.
7.ரேகாவின் stellar performance -ஐ பார்த்து நாம் வியந்தது ‘Khubsoorat’ -இல்.
8.சஞ்சீவ் குமாரின் மிக முக்கியமான படங்களில் ஒன்று ‘Arjun Pandit.’
9.அசோக் குமார் அமர்க்களமாக நடித்து தானே ஒரு பாடலும் பாடிய படம் ‘Aashirvad.’
10.அமிதாப்பும் தர்மேந்திராவும் சேர்ந்து படம் முழுக்க காமெடியில் கலக்கிய படம் ’Chupke Chupke’
என்னன்னா... இந்த 10 படங்களையும் டைரக்ட் செய்தவர் ஒருவரே. எடிட்டிங்கும் அவரே!
யார்?
Hrishikesh Mukherjee!
இன்று பிறந்த நாள். (1922- 2006)

மொழிபெயர்ப்பு தினம்...

இன்று சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்.
நான் மொழி பெயர்த்த (முழி பிதுங்கிய) சில மேற்கோள்கள்…
‘வாழ்க்கையின் அந்தி
வருகிறது தன் விளக்கேந்தி!’
-Joseph Joubert (‘Life’s dusk brings its lamp with it.’)
'ஒரு வார்த்தை, ஒரு புன்னகை! உடனே மாறிடுவார்,
கையருகு புதியவர் ருசிகர நண்பராக!
பகட்டிலும் பயத்திலும் மறுக்கிறோம் நமக்கே,
மனம் வருடும் சினேகங்களை.
-D.C.Peattie. (‘A word, a smile and the stranger at your elbow may become an interesting friend. All through life we deny ourselves stimulating fellowship because we are too proud or too afraid to unbend.’)
'நிரப்பக் கொடுக்கப்பட்ட குவளையே
வாழ்க்கை.'
- William Brown (‘Life is a glass given us to fill.’)
'ஒரு நாள் கேட்பாய்
உன் வாழ்வா என் வாழ்வா, எது முக்கியமென்று.
நான் சொல்வேன் எனதென்று.
எனை விட்டுச் செல்வாய்,
என் வாழ்வே நீயென்றுணராமல்!'
-Kahlil Gibran ('One day you will ask me which is more important?My life or yours? I will say mine and you will walk away not knowing that you are my life.')
‘வாராது மீண்டும் என்பதே
வாழ்வின் சுவை!’
- Emily Dickinson (‘That it will never come again is what makes life so sweet.’)
'இன்னும் அவர்களில் எவரும்
நம்மைத் தொடர்பு கொள்ள
முயற்சிக்கவில்லை என்பதே,
அறிவுள்ள உயிரினம்
பிரபஞ்ச வெளியில் இருக்கிறது
என்பதற்கு ஒரு நிச்சய அறிகுறி.’
- Normandy Alden ('One of the surest signs that intelligent life exists in outer space is that none of it has tried to contact us yet.’)
'வீழாதிருப்பதல்ல நம் பெருமை;
வீழும்போதெல்லாம் எழுவதே.'
-Confucius ('Our greatest glory is not in never falling, but in getting up every time we do.')
‘படைத்தவனை உதவ அழை. ஆனால்
பாறைகளிலிருந்து விலகி படகோட்டு.’
- Proverb (‘Call on God, but row away from the rocks.’)
‘வரும் ஒளி உணர்ந்து இருள் விலகுமுன்
கருக்கலில் பாடும் பறவையே நம்பிக்கை.’
-RabindranathTagore (‘Faith is the bird that feels the light
and sings when the dawn is still dark.’)
'அன்பென்ற தேன் அமைந்த
அருமலரே வாழ்க்கை.'
- Victor Hugo ('Life is the flower for which love is the honey.')
'உங்கள் பிரசினைகளை
உரைக்காதீர் மற்றவரிடம்:
எண்பது சதவீதத்தினருக்கு
அக்கறையில்லை அதில்;
மீதி இருபதினருக்கோ
உமக்கவை இருப்பதில் மகிழ்ச்சி.'
- Lou Holtz ('Don't tell your problems to people: eighty percent don't care; and the other twenty percent are glad you have them.')
‘எல்லாம் இழந்தோம் எனும்போதும் நினை
எதிர்காலம் மிச்சமிருப்பதை!’
-Robert Goddard ('Just remember, when you think all is lost,
the future remains.')

Sunday, September 28, 2025

கதாநாயகர்களை விட...

‘Farz’ என்ற இந்திப் படத்தில் நாகேஷ் ஒரே ஒரு காட்சியில் வருவார் கௌரவ நடிகராக. அதேபோல் இவர் ‘அஞ்சல் பெட்டி 520’ படத்தில் ஒரே ஒரு ஷாட் வருவார். சிவாஜியும் நாகேஷும் அந்த பெரிய ஹோட்டலில் நுழையும்போது வெளியே வருவார் இவர். Apparently drunk. எந்தப் பக்கம் போவது என்று புரியாமல் ஒரு விநாடி விழிப்பார். பாக்கெட்டிலிருந்து காசு எடுத்து சுண்டிப் பார்த்து வலதுபக்கம் போவார்.
Mehmood… இந்திப்பட உலகின் அசைக்க முடியாத காமெடியன். இன்று பிறந்தநாள்! (1932 - 2004)
எட்டுப் பிள்ளைகளில் ஒருவரான இவர் எட்டிய சிகரம் மிக உயரம். சின்ன அசோக் குமாராக ‘Kismet’ -இல் அறிமுகமாகி… சின்ன வில்லனாக 'C.I.D.' -யில் அனைவரும் அறியும் முகமாகி…
“Hum Kala Hain To…” பாடல்! ‘Gumnaam’ இல் அந்த அட்டகாச ஆட்டம்! உடன் ஆடும் ஹெலன் உருப்படியாக ஆடினாலும் உற்றுப் பார்த்ததென்னவோ அத்தனை கண்ணும் இவரைத்தான். இடுப்பை ட்யூனிங் ஃபோர்க்காக உதறுவதும் உடம்பை 45 டிகிரி இடவலம் நெ
ளிப்பதும் தோள்களை வெடுக் வெடுக்கென்று உதறுவதும்… மிகப் பாப்புலரான 10 இந்திப் பாடலை பட்டியலிட்டால் வந்துவிடும் இது அதில். எந்த அளவுக்கு ரசிகர் மத்தியில் பிரபலம் என்றால் ஷம்மிகபூரின் ‘Brahmachari’ படத்தில் Junior Mehmood அதுபோலவே பனியன் அணிந்து கொண்டு இந்த முழுப் பாட்டுக்கும் அவரை மாதிரியே ஆட, தியேட்டர் அதிரும்.
‘அடுத்த வீட்டுப் பெண்'ணை இந்தியில் இவர் ஜாயின்டாகத் தயாரித்த போது முதல் & இரண்டாவது காமெடி பாத்திரங்களை (டி.ஆர்.ராமச்சந்திரன், தங்கவேலு) சுனிலுக்கும் கிஷோர் குமாருக்கும் கொடுத்துவிட்டு மூன்றாவது பாத்திரமான பாட்டு வாத்தியார் பக்கிரி சாமியின் வேடத்தைத்தான் எடுத்துக் கொண்டார் தனக்கு. தன் அனாயாச நடிப்பால் அதை முதல் பாத்திரம் ஆக்கியிருப்பார்.
இவர் இல்லையானால் நாகேஷ் படங்களை அங்கே செய்ய ஆளில்லை என்று சொல்லி விடலாம். அந்த அளவுக்கு நகைச்சுவையிலும் குணச்சித்திரத்திலும் புகுந்து விளையாடும் நடிகர்! ‘நான்', 'கா. நேரமில்லை’ என்று நாகேஷ் படமெல்லாம் அங்கே இவர்தான். ரெண்டுக்கும் இவருக்கு Filmfare அவார்ட்! ஓம் பிரகாஷுக்கு அந்த கதை சொல்லும் காட்சியில் அதேபோலக் கலக்கி கைதட்டலை வாங்கியிருப்பார்.
ரொம்பவும் அனுபவித்து நடித்திருப்பார் ‘அனுபவி ராஜா அனுபவி’ இந்தியில். ‘முத்துக்குளிக்க வாரீயளா..’ என்று முதல் வரியை தமிழிலேயே பாடிக்கொண்டு ரமா பிரபாவுடன் ஆடுவது நினைவுக்கு வருமே?
காமெடியன் மட்டுமல்ல, திறமையான டைரக்டரும்கூட! ரொம்பவே நிரூபித்தது ‘Kunwara Baap’ படத்தில். “Main Hoon Ghoda Yeh Hai Gaadi…” என்று பாடிக் கொண்டே வரும் முதல் காட்சியிலேயே அசத்தியிருப்பார். குணசித்திர நடிகரும்கூட என்பதை மனோரமாவுக்கு முக்கிய பாத்திரம் கொடுத்திருந்த அந்தப் படத்தின் கடைசி காட்சிகளில் காட்டியிருப்பார்.
‘Kaajal’ படத்தில் கலக்கலான ரோல். கட்டை பிரம்மச்சாரியாக்கும் நான் என்று சொல்லிக் கொண்டு கர்லாக் கட்டையை எடுக்க வருவார், கதவுக்கு வெளியே நின்றுகொண்டு மும்தாஜ் ஒரு துணியைக் கிழிக்க, வேட்டி கிழிஞ்சிட்டதாகத் தடுமாறுவதும் டம்ப் பெல்ஸை ஆட்டும்போது மும்தாஜ் சலங்கையைக் குலுக்க திகைப்பதும்….
பிரபல I S Johar இவருடன் சேர்ந்து நடித்த ‘Johar Mehmood in Goa’ ஜோராய் ஓடவே, தொடர்ந்தனர் அந்த சிரீஸை.
‘மதறாஸ் டு பாண்டிச்சேரி’யை இந்தியில் N.C. Sippyயுடன் தயாரித்தபோது அப்போதுதான் அறிமுகமான அமிதாப் பச்சனை அதில் கதாநாயகனாக நடிக்கவைத்தபோதே சொன்னார், அவர் அமோகமாக வருவார் என்று.
ரெண்டு மிகப் பெரிய இசையமைப்பாளர்களை அறிமுகப் படுத்திய பெருமையும் உண்டு இவருக்கு. யார் யார்? ஆர். டி. பர்மன்.( 'Chote Nawab’) ராஜேஷ் ரோஷன் (‘Kunwara Baap’)
செமத்தியான அந்த ‘எதிர்நீச்சல்’ நாகேஷ் ரோலை இந்தியில் செய்த ‘Lakhon Mein Ek’ படத்தில்தான் ஆர்.டி.பர்மனின் அந்தப் பிரபல “-Chanda O Chanda…” பாடலைப் பாடினார் கிஷோர் இவருக்காக. அங்கேயும் இங்கேயும் பிரபலமான பாடலாயிற்றே? ‘Main Sundar Hun’ இல் ‘சர்வர் சுந்தரத்’தை சுந்தரமாக….
முதல் முதலாக megaphone -ஐ எடுத்த ‘Bhoot Bangla’ -வில் ஹரரையும் காமெடியையும் கரெக்ட் டோஸில் மிக்ஸ் பண்ணி கொடுத்தார். அள்ளிக் கொண்டு போனது. ஆர்மோனியத்தை இயக்கிய ஆர்.டி.பர்மனை நடிக்கவும் அழைத்துக் கொண்டார். ரெண்டு பேருமாக பேய் பங்களாவில் கிலிகிலிக்க சுற்றிவருவது ஜோர் என்றால் கிஷோர் இவருக்காக பாடிய அந்த முதல் பாடல், “உறக்கத்தில் இருப்பவர்களே விழியுங்கள், என் கதையைக் கேளுங்கள்….” (Jagon Sonewale… ) கனஜோர்! (அதில் ஒரு வரி: “நல்லவனுக்கு ஏன் எப்பவுமே கெட்ட பேர் இந்த உலகத்தில், புரியலையே?”)
சரியாகக் கவனிக்கப்படாமல் போய்விட்ட, இவர் டைரக்ட் செய்த அந்த காமெடி ‘Ek Baap Chhe Bete’ நாலு பிள்ளைகளுக்கு தகப்பன் அந்த நடிகர். பெண்கள் பின்னால் சுற்றிக் கொண்டிருந்ததைப் பொறுக்க முடியாமல் மனைவி தற்கொலை செய்து கொள்ள... இன்னொருத்தியை மணந்து இன்னும் இரண்டு பிள்ளைகள் அவருடன். அவளும் இவர் flirtings -ஐப் பொறுத்துக்கொள்ள முடியாமல் ஆக்ஸிடெண்டில் உயிரை விட.. இப்போது ஆறு குழந்தைகளுடன் வேறூர் வந்து விவசாய வாழ்க்கைல் இறங்கி… அங்கேயும் பெண் மருத்துவர் ஒருவரைப் பார்த்துக் கிறங்கி நிற்கையில் ஒரு நிற்க போடுகிறான் அந்தப் பெண்ணின் மகளைக் காதலிக்கும் அவர் பையன்! ஹிலாரியஸ் காமெடி!
ஒரு கட்டத்தில் கதாநாயகர்களை விட அதிக தேடல் இருந்தது இவர் கால்ஷீட்களுக்கு. ஹாண்ட்சம் ஆக்டர்! காமெடியனாகியிராவிட்டால் ஹீரோவாக பல ரவுண்டு வந்திருப்பார் இந்த மீனா குமாரியின் மைத்துனர். அப்பா மும்தாஜ் அலி பெரிய நடிகர், டான்ஸர் கூட. சகோதரி மினு மும்தாஜ் காமெடி நடிகை.
எடுத்த சில படங்கள் மிகுந்த சமூக அக்கறையுடன் கூடியவை.

Saturday, September 27, 2025

வாழ்க்கை எளிதானது..


‘உண்மையிலேயே மகிழ்வோடும் மன நிறைவோடும் இருக்கவேண்டுமானால் மகிழ்வுக்கும் மனநிறைவுக்கும் அர்த்தம் தேடிக் கொண்டிருக்கக் கூடாது.’
சொன்னவர் Confucius... நம் பல கன்ஃப்யூஷன்களைத் தகர்த்தவர்...
இன்று பிறந்தநாள்!
இன்னும்…
‘வாழ்க்கை உண்மையில் எளிதானது, ஆனால் அதை சிக்கலாக்கிக் கொள்வதென்று அடம் பிடிக்கிறோம்.’
‘வீழாதிருப்பதில் அல்ல நம் மகிமை, வீழும்போதெல்லாம் எழுவதில்.’
‘எத்தனை மெதுவாக நகருகிறாய் என்பது முக்கியமல்ல, நீ நிற்காத வரையில்.’
‘துயருற வேண்டியதுதான், ஆனால் மூழ்கி விடக்கூடாது அதன் அழுத்தத்தில்.’
‘எங்கே நீ சென்றாலும் எல்லா உன் இதயத்தோடும் செல்.’
‘தன்னை வெற்றி கொள்பவனே தலைசிறந்த படைவீரன்.’
‘எல்லாவற்றுக்கும் ஒரு அழகு உண்டு, ஆனால் எல்லோரும் அதை பார்ப்பதில்லை.’
‘நீ நேசிக்கும் ஒரு வேலையை தேர்ந்தெடு. உன் வாழ்க்கையில் ஒரு நாளும் வேலை செய்ய வேண்டியிருக்காது.’
‘மூன்று விதங்களில் நாம் விவேகம் அடையலாம் 1. சிந்தித்து, அது உயர்வானது. 2. மற்றவரைப் பார்த்து. அது எளிதானது. 3. அனுபவத்தால். அதுதான் கசப்பானது.’
‘மனிதன்தான் சத்தியத்தை மேன்மையுறச் செய்ய வேண்டும்; சத்தியம் மனிதனை அல்ல.’
‘மௌனம்: ஒருபோதும் வஞ்சிக்காத உண்மையான நண்பன்.’
‘தீங்கிழைக்கப்படுவது ஒன்றுமேயில்லை, நீங்கள் அதை நினைக்காத வரையில்.’

சரியாக வாழ்வதே ...


‘பலவீனங்களில் பெரிய பலவீனம் அதிகப்படியான அச்சத்தில் பலவீனமாக காட்சியளிப்பது தான்.’
‘உலகத்தின் மீது எரிச்சலை உலகமே உண்டாக்கி விடுகிறது.’
‘உண்மை என்ற அரசியின் மகுடம் இருப்பது சொர்க்கத்தில். கடவுளின் இதயத்தில் அவளின் ராஜியம் இருக்கிறது.’
‘காரண அறிவால் புரிந்துகொள்ளமுடியாத காரணங்கள் இருக்கின்றன இதயத்துக்கு.’
‘கொடுப்பதில் உள்ள மகத்துவம் பேரிதயங்களே அறியும்.’
‘சரியாக வாழ்வதே நம்மை பயமற்ற, சந்தோஷமான சாவுக்கு தயார்படுத்துகிறது.’
‘இந்தப் பிரபஞ்சத்தின் இரண்டு அழகிய விஷயங்கள் என்னவென்று ஓர் இந்தியத் தத்துவ வாதியை கேட்டபோது அவர் சொன்னது: நம் தலைக்கு மேல் இருக்கும் நட்சித்திரங்கள் அடங்கிய வானமும் இதயத்தில் இருக்கும் கடமை உணர்வும்.’
‘எங்கள் அறியாமையின் மேல் நீ தெளிக்க போகும் வெளிச்சத்திற்காக, சாவே, உனக்கு நன்றி சொல்கிறேன்.’
‘நாம் பார்த்து அறிவது எப்படி இருந்தாலும் நாம் விரும்புவது போலவே விஷயங்கள் இருக்கின்றன என்று நம்புவது தான் ஆத்மாவின் மிகப்பெரிய சீரழிவு.’
‘வேஷங்களும் தந்திரங்களும் மனிதர்களை ஆளும்போது கவனமும் ஜாக்கிரதையும்தாம் நம்மை அதிர்ச்சிகளிலிருந்து காப்பவை.’
சொன்னவர் Jacques Benigne Bossuet. இன்று பிறந்தநாள்! (1627 - 1704)
Ceiro, Augustus வரிசையில் சொல்லப்படும் பேச்சாளர். ஏரை உடைத்தெறிந்த காளை என்றனராம் நண்பர்கள், கல்லூரியில் இவர் படித்தபோது.

Friday, September 26, 2025

‘வாவ்!’ ஆனந்த்!


ஸ்டைலான ஒரு ஹீரோவாக அறிமுகமானார். ஸ்டைலான ஒரு ஹீரோவாகவே கடைசிவரை நடித்து விடைபெற்றுக் கொண்டார். ஹீரோவாக வரும் பொழுது என்ன ஃப்ரேமில் இருந்தாரோ அதே ஃப்ரேமில் கடைசி படம் வரை இருந்தார், அப்படி ஒரு ever slim ஹீரோ.
தேவ் ஆனந்த்… இன்று (Sept 26.) பிறந்தநாள்!
மழையளவு எழுதலாம் அவரைப் பற்றி, சில துளிகள்…
எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி போல அங்கே திலீப், ராஜ் கபூர், தேவ். மற்ற இருவரை விட அதிக வருடம் ஹீரோவாக நீடித்தவர் தேவ். மோஸ்ட் சார்மிங் ஆக்டர் என்று மோஸ்ட் நபர்களால் வியக்கபட்டவர்.
சிவாஜியுடனான முக்கிய ஒற்றுமை இருவரின் தகப்பனார்களும் விடுதலைப் போராட்ட தியாகிகள்.
ஆரம்ப நாட்களில் இவரும் குரு தத்தும் திரை அங்கீகாரத்துக்காக போராடிக் கொண்டிருந்த தருணம் நட்போடு ஒரு அக்ரீமெண்ட் போட்டுக்கொண்டார்கள். நான் படம் எடுத்தால் நீ தான் டைரக்டர் என்று இவரும், நான் டைரக்ட் பண்ணினால் நீ தான் நடிக்கிறாய் என்று அவரும். நடந்தது. குரு தத் டைரக்ட் செய்த ‘C. I. D.’ யில் தேவ் ஹீரோ. மாபெரும் ஹிட். தேவ் தயாரித்த ‘Baazi’ யில் மெகா ஃபோனை பிடித்தவர் குருதத். மாபெரும் ஹிட்.
ஒரு பார்ட்டியில் ஓடிவந்து தன்னை உலுக்கி, ஏன் மறந்துட்டே அமர்? என்று ஒரு பெண் கேட்கும்போதுதான் வினய்க்கு தெரிகிறது, தன்னைப் போலவே உள்ள அமர் என்ற ஜுவல் தீஃப் பற்றி! அமராக நினைத்து அனைவரும் இவனைத் துரத்த... ஆரம்பமாகிறது 'அமர்'க்களம்! ‘Jewel Thief’! எந்தப் படத்திலும் இப்படி காட்சிக்குக் காட்சி வில்லனைத் தேடியிருக்க மாட்டார்கள் ரசிகர்கள். ஹோட்டல் அறையில் தன் டூப்ளிகேட்டைத் தேடிவரும் தேவ் ஆனந்த் கையில் ரிவால்வருடன் வெளியில் வர எதிரே மற்றொரு தேவ் ஆனந்த், கையில் ரிவால்வருடன்! அடுத்த வினாடி புன்னகைக்கிறார். கண்ணாடி! கடைசியில் அந்த 'திடுக்' உண்மையை நாயகி சொல்ல, நாயகனுக்கும் நமக்கும் சரியான அதிர்ச்சி.
ஹிட்ச்காக்கின் ‘North by Northwest’ பாணியிலான தேவ் ஆனந்தின் இந்தப் படத்தை ரெண்டே ஜோடி வார்த்தையில் சொன்னால் 'சூபர் ஸ்டைல்! சூபர் திகில்!' கிளாமரும் இன்னிசையும் போனஸ்! ஹீரோ தேவ் ஆனந்த் அணிந்த மாடல் தொப்பி இளைஞர்களிடையே craze ஆகி அமோகமாக விற்றது. பெங்களூரில் ஒரு டெய்லர் அதை அடித்து விற்றே லட்சாதிபதி ஆனாரென்றார்கள்.
இந்தியாவின் கிரிகரி பெக் என்று அழைக்கப்பட்டவர் வித்தியாசமான ரோல்களை செய்யத் தயங்கியதே இல்லை. ஜால் படத்தில் ஏமாற்றும் காதலனாக வந்ததிலிருந்து அனேக நிழலான கேரக்டர்களை செய்தார்.
க்ரேஸி விளம்பர கேப்ஷன்ஸ் இவருக்கு ஜாஸ்தி! மூணு ஹீரோயினோடு நடித்த ’Teen Deviyan’ படத்தின் போது: Dev and his ‘Teen Deviyan’ என்று!
டைரக்ட் செய்த ‘Hare Rama Hare Krishna’வை மறந்திருக்க மாட்டீர்கள். முதலில் அந்த ‘Dum Maro Dum’ பாடலை நீக்கி விட நினைத்தார்கள். பாடிய ஆஷா பாஸ்லேயின் வற்புறுத்தலால் சேர்க்கப்பட்டது. மிகவும் ஈர்க்கப்பட்டது.
50 வருடம் ஹீரோவாக வலம் வந்தவர்தான் ஜீனத் அமனையும் டினா முனிமையும் அறிமுகப் படுத்தி நட்சத்திரமாக்கியவர். ராஜேஷ் கன்னா மிஞ்சியிராவிட்டால் (106) அதிக படங்களில் ஹீரோவாக நடித்த இந்தி நடிகர் இவராகத்தான் இருப்பார் (92)
அவர் எதைச் செய்தாலும் ஸ்டைல் ஆனது. ஒரு பக்கம் படம் ஃபெயில்யர் ஆகும், மறுபக்கம் அடுத்த படத்துக்கு கூட்டம் அலை மோதும் என்று இருந்த ஒரே நடிகர் ஹிந்தியில் இவர் மட்டுமே.
அப்புறம் அந்தப் பிரபல ‘The Guide’ ஆர் கே நாராயணன் அவர்களின் சாகாத saga. தம்பி விஜய் ஆனந்த் திரைக்கதை எழுதி இயக்க, முதல் முறையாக Filmfare இன் 4 டாப் அவார்டுகளை ஒரு சேரப் பெற்றது (சிறந்த படம், நாயகன், நாயகி, டைரக்டர்). Pearl S Buck திரைக்கதை எழுத தேவ் அதை ஆங்கிலத்தில் தயாரித்தார் கூட்டு தயாரிப்பாக. ஏனோ அங்கே வெற்றி பெறவில்லை. தவிர நடித்த ஒரே ஆங்கில படம் ‘The Evil Within.’
இந்திப் படங்களின் டாப் 10 கிளைமாக்ஸ் காட்சி சொன்னால் அது அதில் ஒன்றாக வந்து விடும், ‘The Guide’ படத்தினுடையது. காதலிலும் வாழ்விலும் ஏமாந்து கஷ்டங்களுக்கு பின் ஒரு கோவிலில் சாதுக்களுடன் தங்குகிறான் ராஜு. அதிகாலையில் சால்வையை போர்த்தி விட்டு அவர்கள் போய்விட இவனைப் பார்க்கும் பக்தன் ஒருவன் இவனையும் ஒரு சாது என்று நினைத்து தன் பிரச்னையை சொல்கிறான். இவன் சொன்ன வழியில் அது தீரவே, பெருகி விடுகிறார்கள் பக்தர்கள் . அடுத்து கிராமத்தில் வறட்சி. மழை பொய்த்துப் போனது. இந்த சாது 12 நாள் உண்ணாவிரதம் இருந்தால் மழை வரும் என்று அவர்கள் நம்புகிறார்கள். சாதாரண மனிதன் நான் என்று சொல்லிப் பார்த்தால் அவர்கள் கேட்கணுமே? இவனை அவர்கள் நம்புகிறார்கள். அவர்கள் நம்பிக்கையை அவன் நம்புகிறான். விரதம் இருக்கிறான். 12 வது நாள் மழை பாய்கிறது. அவன் மாய்கிறான்.
திரை உலகின் மிக இனிமையான காதல் கதைகளில் ஒன்று தேவ் - ஸுரையாவுடையது. அப்போது ஸுரையா அவரை விட பெரிய ஸ்டார். அவர் வீட்டின் எதிர்ப்பினால் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. சுரையா கடைசி வரைக்கும்!
தற்கொலை செய்யப் போன ஒருவனை தடுத்து நிறுத்தி அவனை இன்ஷூர் பண்ண வைத்து பணத்தை அடித்துக் கொள்ள நினைக்கிறான் ஒரு கில்லாடி. தப்பி அவன் மகளையே திருமணம் செய்து கொள்ளும் ஹீரோவாக ‘Funtoosh’ இல் கலக்கினார். அப்பா இசையமைக்க, டீன் ஏஜில் இருந்த ஆர்.டி.பர்மன் ட்யூன் போட்டார் அதிலொரு ஹிட் பாடலுக்கு. “Ae Meri Topi Palakte Aa..”
அண்ணனும் (Chetan Anand) தம்பியும்(Vijay Anand) பிரபல டைரக்டர்கள் என்றால் இவரு மட்டும் என்ன, 19 படங்களை இயக்கியதோடு 13 படத்துக்கு கதை எழுதி… மெடிகல் ப்ரஃபஷனை வைத்து A. J. Cronin எழுதிய ‘The Citadel’ நாவலை தழுவி வந்த ’Tere Mere Sapne’ வில் விஜய் ஆனந்தும் இவருடன் நடித்தார்.
காதலி நந்தாவின் துப்பட்டாவின் நுனியை பாக்கெட்டில் செருகியபடி சோளம் கடித்துக்கொண்டே “Likha Hai Teri Aankhon Mein..” பாடும்போதும் பஞ்சாலையில் பொதிகளினூடே மும்தாஜைத் தேடிக்கொண்டு “Kanjire Kanjire..” பாடும்போதும் ஆர்ப்பரிக்கிற வைக்கும் பிரத்தியேக கரிஷ்மாவை அணிந்திருப்பது தெரியும்.
ஆகச் செமத்தியான வசூலைப் பெற்ற படம் இவருக்கு, ஆம், சொல்லிவிட்டீர்களே, ‘Johny Mera Naam’ தான். சிவாஜியின் ‘ராஜா’ பார்த்தவங்களுக்கு ஏனென்று புரிந்திருக்கும்.
மகனுக்கு ஒரு பிரேக் கொடுக்கலாம் என்று ‘Anand aur Anand’ படத்தை எடுத்தார். ஆனால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளணுமே? வேண்டாம் சாமி என்று Suneil Anand டைரக்டர் ஆகிவிட்டார்.
தேவ் ஆனந்த் அநேக விதங்களிலொரு ‘வாவ்!’ ஆனந்த்!

Thursday, September 25, 2025

வசிப்பது என்பது..

 


‘இந்தச் சிந்தனை சூழ் காலத்தில் மிகவும் சிந்திக்க வேண்டிய விஷயம் நாம் இன்னும் சிந்திப்பது இல்லை என்பதுதான்!’
'வசிப்பது என்பது தோட்ட வேலை பார்ப்பது.'
‘மிகப்பெரும் சிந்தனைகளைக் கொண்டிருப்பவர்கள் அடிக்கடி மிகப்பெரும் தவறுகளை செய்கிறார்கள்.’
‘இயற்கைக்கு சரித்திரம் இல்லை.’
‘சாவைக் கையில் எடுத்து அதை ஒத்துக் கொண்டு நேருக்கு நேராக நோக்கினால்தான் சாவின் கவலையிலிருந்தும் வாழ்வின் சிறுமையிலிருந்தும் விடுபட்டு நான் நானாக முடியும்.’
‘காலமும் இருப்பும் ஒன்றை ஒன்று நேர்மாறாக விதிக்கின்றன. இருப்பை காலம் சார்ந்ததாகவோ காலத்தை இருப்பதாகவோ கருத முடியாது.’
‘மொழியை வடிவமைப்பதும் வழி நடத்துவதும் தானே என்று மனிதன் நினைக்கிறான். ஆனால் மொழிதான் அவனை நடத்துகிறது.’
‘ஒவ்வொரு மனிதனும் பல நபர்களாகப் பிறக்கிறான்; ஒற்றை ஆளாக இறக்கிறான்.’
‘அடிப்படையில் டெக்னாலஜி மனிதனின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதல்ல.’
‘எல்லாமும் ஏன் இருக்க வேண்டும்? ஒன்றுமே இல்லாமல் இருந்திருக்கலாமே? அதுதான் கேள்வி.’
சொன்னவர்: Martin Heidegger. ஜெர்மன் தத்துவ மேதை. இன்று பிறந்தநாள்!
இவரின் 'Being and Time' மிகப் பிரபல புத்தகம்.

மிடில் கிளாஸின் அவதியை..

“ஒண்ணுல இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம், கொண்டாட்டம்!
இருபத் தொண்ணில இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம், திண்டாட்டம்!”
மிடில் கிளாஸின் அவதியை ரீடிங் கிளாஸ் போட்டுக் காட்டும் இந்த கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் பாடும் பாடலை எழுதியவர்…
தமிழ் சினிமா உலகில் சரித்திரம் படைத்த ‘வேலைக்காரி’ படத்தில் ஒலித்த,
"ஓரிடம் தனிலே.. நிலையில்லா உலகினிலே..
உருண்டோடிடும் பணம் காசெனும் உருவமான பொருளே..." பாடலை எழுதியவர்…
உடுமலை நாராயண கவி... இன்று பிறந்தநாள்!
எழுதிய ஏராளம் பாட்டுகளில் இன்றும் இனிக்கும் பல உண்டு.
"மஞ்சள் வெயில் மாலையிலே... வண்ணப்பூங்காவிலே.. .
பஞ்சவர்ண கிளிகள் கொஞ்சும் பரவசம் பார்... " சிவாஜி பத்மினி டூயட் 'காவேரி'யிலும்,
"காதல் எந்தன் மீதில் என்றால் காதில் இனிக்கிறது… தாலி
கட்டிக் கொள்ளத் தட்டிக் கழித்தால் கவலைப்படுகிறது.." எம்.ஜி.ஆர் விஜயா டூயட் 'விவசாயி'யிலும்...
"பெண்களை நம்பாதே... கண்களே, பெண்களை நம்பாதே..." என்று சிவாஜி பாடி வருவாரே ' தூக்குத் தூக்கி'யில், அதுவும், அதே படத்தில்
"குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்... கொம்பேறித் தாவும்
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்..." என்ற ஜி. ராமநாதனின் சூப்பர் ஹிட் பாடலும்…
சிருங்கார பாட்டுகளிலும் ஜொலித்தார்... "சிங்காரப் பைங்கிளியே பேசு.. ." ஏ.எம்.ராஜாவின் குழல் தோற்கும் குரல் ஒலித்ததே 'மனோகரா'வில்? அந்தக் காலத்திலேயே இந்த பாடல் எழுத ஒரு பெருந்தொகை கொடுத்தார்களாம்.
"பொன்னாள் இது போலே வருமோ புவி மேலே..." இது 'பூம்புகார்' படத்தில்.
"ஆடல் காணீரோ... திருவிளையாடல் காணீரோ..." எம். எல். வசந்தகுமாரியின் மதுரகானம் 'மதுரை வீரனி'ல் என்றால் "ஆளை ஆளை பார்க்கிறார்..." பிரபல பாடல் 'ரத்தக்கண்ணீர்' படத்தில்.
“ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக அன்போடு ஓடி வாங்க... கா கா கா…” என்று இவர் அழைத்தது 'பராசக்தி'யில்.
இவரது பல்லவிகள் நச்சென்று இருக்கும். மருதகாசியின் குருவாயிற்றே?
"அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம்…
அம்புவியின் மீது நான் அணிபெறும் ஓர் அங்கம்..."
"தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்... அதற்கு
சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்..." ('தெய்வப்பிறவி')
எளிமையான வார்த்தைகளில் அருமையான கருத்துக்கள்... "நல்ல நல்ல நிலம் பார்த்து. நாமும் விதை விதைக்கணும்.. நாட்டு மக்கள் மனதினிலே நாணயத்தை வளர்க்கணும்...". (‘விவசாயி')
சந்திரபாபுவுக்கும் பாடல் தந்தார். "உல்லாசமாகவே உலகத்தில் வாழவே .. மாப்பிள்ளையாக மலர் மாலை சூட கல்யாணம்.. ஆஹாஹா கல்யாணம்..." ('பெண்')

Tuesday, September 23, 2025

இன்றளவும்...


'Rules of Algebra' என்று ஒரு அல்ஜிப்ரா புத்தகத்தை அவர் எழுதினார். என்ன விசேஷம்? அவர் அதை எழுதிய வருடம் 1545.
நெகட்டிவ் எண்களை எப்படி உபயோகிப்பது என்று விளக்கியவர், ஒரு பக்கம் சீட்டாடிக்கொண்டே Probability பற்றியும் எழுதினார். அதில் நிறைய ஜெயித்தார்.
அவர் கண்டுபிடித்த Cardana Shaft என்ற டிரைவிங் ஷாப்டை இன்றளவும் கார்களில் உபயோகிக்கிறார்கள்.
நம்பர் லாக் என்று சொல்கிறோமே அந்த Combination lock -கை அவர்தான் கண்டுபிடித்தார்.
'அசையும் எந்தப் பொருளும் நின்றே ஆகவேண்டும்,' என்றார் ஆணித்தரமாக.
ஆனானப்பட்ட லியானார்டோ டாவின்சி சந்தேகம் கேட்பது இவரைத்தான்.
அவர் பெயர் Gerolamo Cardano. இத்தாலிய கணித மேதை. டாக்டர். பல்கலை வித்தகர்.
இன்று பிறந்த நாள். (1501 -1576)

அழகிய தீயே..


அழகிய தீயே..
...அல்லது கை நிறைய கலகலப்பு எனலாம் படத்தின் பேரை.
சின்ன அழகிய முடிச்சு. (கல்யாணத்திலிருந்து தப்ப, காதலிக்கிறேன் ஒருவரை என்று ஒரு ஆளை அவள் காட்டப்போய், அவனையே கல்யாணம் செய்து வைத்து விடுகிறான் பெண் பார்க்க வந்தவன்!...)
பிரசன்னாவும் நவ்யா நாயரும் சண்டை போட்டுக்கும்போது நாமும் சண்டை போட்டுக்கறோம்; அவங்க சமாதானமாகும்போது நாமும்... கூடவே பயணித்து கூடவே சிரித்து…
டயலாக் டெலிவரிக்கு இந்தப் படம் ஒரு பாடம். சரியான ஏற்ற இறக்கங்களுடன் பேசும் அழகு! ஒவ்வொரு டயலாக்கும் அதனதன் இயல்பான தன்மையுடன்... ஒன்றிலிருந்து ஒன்று இயல்பான தொடர்புடன்... அந்த இடத்தில் அந்தப் பாத்திரம் என்ன பேசுமோ அது! With a sense of humour throughout! (வசனம்: விஜி)
அண்ணாச்சி பாத்திரத்திலிருந்து எம் எஸ் பாஸ்கரை பிரித்தெடுக்கவே முடியாது... அப்படியொரு memorable performance!
Casting இந்தப் படத்தில் கச்சிதமாக... பாத்திரங்களும் நடிகர்களும் அப்படிப் பொருந்திப் போவார்கள். கதாநாயகனின் அம்மாவிலிருந்து. காஸ்ட்யூம் சரியான்னு கேட்கிற பெண் வரை.
டைரக்டர் ராதாமோகனுக்கு இந்தப் படம் ஒன்று போதும் பேர் சொல்ல. நமக்கும் இந்தப் படம் ஒன்று போதும் அடிக்கடி நினைத்து சிரிக்க.
><><><