Friday, September 19, 2025

ஆறே படங்கள்...


கல்லூரியில் படிக்கும் தன் உறவுக்கார பெண் மிஸ் சிம்லா போட்டியில் வென்றதைப் பார்த்து அவரைத் தன் அடுத்த படத்துக்கு ஹீரோயினாக்க அழைத்து வந்தார் அண்ணன். அதன் ஹீரோவான தம்பி அவரை விரும்பி காதல் அரும்பி அவருடனான நாலாவது படத்தின்போது மணந்து கொண்டார். வேறாருடனும் அவர் ஹீரோயினாக நடிக்கவுமில்லை.

கல்பனா கார்த்திக். இன்று பிறந்த நாள்.
கணவரை யூகித்திருப்பீர்கள். த ஒன் அன்ட் ஒன்லி தேவ் ஆனந்த்.
ஆறே படங்கள்! அத்துடன் நடிப்பதற்கு ‘கட்’ சொல்லிவிட்டு படத் தயாரிப்பில் கணவருக்குத் துணையானார்.
“ஆங்கோன் மே க்யாஜி…” என்று தேவ் ஆனந்துடன் அவர் பாடிவரும் அந்த எஸ்.டி.பர்மன் பாடல் காட்சிக்கு இப்போதும் யூ ட்யூபில் மில்லியன் தாண்டி வியூஸ் குவிகிறது. ஒளியும் நிழலும் ஒளிந்து விளையாடும் ஷாட்டுகளில் ரம்மியமாக வளைய வருவார்.
அப்புறம் ‘டாக்ஸி டிரைவரி’ல் அந்த சூபர்ஹிட்! “ஜாயே தோ ஜாயே கஹான்…” சோகத்திலும் சோபித்தார்.

Thursday, September 18, 2025

டிக் ஷ்னரி என்றாலே...


டிக் ஷ்னரி என்றாலே இவர் ஞாபகம்தான் வரும். யார்? ஜாண்ஸன்.
Samuel Johnson... இன்று பிறந்த நாள்!
வறுமையிலும் நோயிலும் தோல்வியிலும் வளர்ந்தவர்.
ஆங்கில அகராதியை அமைக்கும் பணி கிடைத்தது 1746 இல். மாபெரும் உழைப்பு. பத்து வருடத்துக்குள் 42000 வார்த்தைகளுடன் அது பதிப்பிக்கப்பட்டு ‘டிக் ஷ்னரி ஜான்ஸன்’ என்று அழைக்கப்பட்டார்.
பிரபல எழுத்தாளர் ஆலிவர் கோல்ட்ஸ்மித் இவர் நண்பர் என்றால் ஜேம்ஸ் பாஸ்வெல் இவர் வாழ்க்கைச் சரிதையை எழுதிய அன்பர்.
அவரது பிரபல Quotes-களில் சில.. (என் மொழிபெயர்ப்பில்)
‘கஷ்டங்களை ஜெயிப்பதைவிட மேலான சந்தோஷத்தை வாழ்க்கை கொடுத்ததில்லை.’
‘சிந்தனையின் ஆடையே மொழி. ஒவ்வொரு முறை நீங்கள் பேசும்போதும் உங்கள் மனதின் அணிவகுப்பு நடக்கிறது.’
‘விவேகம் இல்லாத நேர்மை பலமற்றது; பயனற்றது. நேர்மை இல்லாத விவேகம் ஆபத்தானது, அச்சமூட்டுவது.’
‘கவனம் என்கிற கலைதான் நினைவாற்றல் என்கிற கலை.’
‘தனக்கு அறவே பயனற்ற ஒருவனை ஒரு மனிதன் எப்படி நடத்துகின்றான் என்பதே அவனின் உண்மையான அளவீடு.’
‘சிரத்தையும் செய்திறனும் இருந்தால் முடியாதது ஒன்றில்லை. மாபெரும் விஷயங்கள் வலிமையினால் சாதிக்கப்பட்டவை அல்ல; விடா முயற்சியினால்.’
‘வாசித்தலை நேசிக்காமல் யாரும் விவேகமடைய முடியாது.’

Tuesday, September 16, 2025

அரங்கம் அமைதி..

 அது ஒரு மேஜிக் ஷோ. 1300 பவுண்டு எடையுள்ள இரும்புக் கம்பிகள் மேலே தொங்குகின்றன. பிணைத்திருக்கும் கயிறு 90 செகண்டில் எரிந்து துண்டிக்கப்பட்டு விடும். அவரது கை கால்களை விலங்கிட்டு இரும்புக் கம்பிகளுக்கு நேர் கீழாக இருக்கும் ஒரு பெட்டிக்குள் அடைத்து விடுகின்றனர். உடலைச் சுற்றிக் கட்டிய இரும்புச் சங்கிலியை பெட்டிக்கு கீழே பிணைத்து விடுகின்றனர். கை கால் விலங்குகளை இணைத்திருக்கும் இரும்புச் சங்கிலியை இருபுறமும் இழுத்துப் பிடித்தபடி நிற்கின்றார் இருவர். 90 செகண்டுக்குள் வெளிவரவில்லையானால் மேலிருந்து விடுபடும் கிராதகக் கம்பிகள் கிழித்துவிடும் உடலை. பெட்டியை திரை மூட, கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்!...

கைவிலங்குடன் கட்டிய சங்கிலி உலுக்கப்படுவது தெரிகிறது. சில செகண்டுகளில் அது கீழே விழுகிறது. அடுத்து கால் விலங்குச் சங்கிலி. இழுத்து உலுக்கப்பட்டு வெளியே விழுகிறது. 60 செகண்ட் தாண்டியாயிற்று. கீழே இழுத்துக் கட்டியிருக்கும் சங்கிலியை இழுப்பது தெரிகிறது. அது வரவில்லை. நேரம் பறக்கிறது. ஆயிற்று. 88.. 89... 90...
படார்! செங்குத்தாய் விழுகின்றன கம்பிகள். அரங்கம் ஷாக்கில் அமைதி! அடுத்த விநாடி திரையை விலக்கிக்கொண்டு கம்பிகளின் மேலான பலகையிலிருந்து எழுந்திருக்கிறார். சிரித்தபடியே கை காட்டுகிறார். கைத்தட்டலில் அரங்கம் அதிர்கிறது.
David Copperfield.. உலகின் இணையற்ற மேஜிக் நிபுணர். இன்று பிறந்த நாள்!
கின்னஸ் ரெக்கார்டா? பதினொன்று! Emmy அவார்டா? இருபத்தி ஒன்று! உலகின் மிகப் பணக்கார, மிக வெற்றிகரமான மேஜிக் நிபுணர்!
நூற்றாண்டின் தலைசிறந்த மேஜிக் நிபுணராக The Society of American Magicians இவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறது..
'Terror Train' என்ற படத்திலும் வருவார் மேஜிக் நிபுணராகவே..

Sunday, September 14, 2025

வெற்றிகரமான...


தர்மேந்திரா, ஹேமமாலினி, ராஜ்குமார், கமலஹாசன், சுனில் தத், ராஜ்கிரன், பிரான்....இத்தனை பேரும் ஒரே படத்தில் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? படம்: ‘ராஜ் திலக்' டைரக்டர்: ராஜ்குமார் கோஹ்லி. ஆம், multi starrer expert.
Rajkumar Kohli…. இன்று பிறந்தநாள்!
’நீரும் நெருப்பும்' ஹிந்திப் பதிப்புடன் ஆரம்பித்தார். அந்த இரட்டையர் வேடங்களில் நடித்தவர் ராஜேந்திர குமார். ‘Kora Aur Kala’. எம்.கே. ராதா நடித்த ‘அபூர்வ சகோதரர்கள்' கதை அது. Alexander Dumas எழுதிய ‘The Corsican Brothers’ நாவலைத் தழுவியது.
Jaani Dushman எடுத்துக்கொள்ளுங்கள் ஜிதேந்திரா, சஞ்சீவ் குமார், சுனில் தத், சத்ருகன் சின்ஹா, வினோத் மெஹ்ரா, ரேகா, ரீனா ராய், நீடு சிங்… சூபர்ஹிட்!
சுனில்தத், பெரோஸ் கான், ஜிதேந்திரா, வினோத் மெஹ்ரா, ரேகா, மும்தாஜ்…என்று நட்சத்திரங்களை அழைத்து வந்த வெற்றிப் படம் ‘Naagin’ தமிழிலும் வந்தது. ‘நீயா?’

Saturday, September 13, 2025

உதட்டின் புன்னகை...


'மனிதனுக்கு முதல் முதலாக இருக்கவேண்டிய குணம் கருணைதான். தைரியம், வீரம், தயாளம் எல்லாம் அதற்குப் பின்னர்தான்என்பேன்.'
'உதட்டின் புன்னகை உண்மையாக இருந்தால் அது கண்களிலும் வெளிப்படும். எனவே கவனியுங்கள், யாராவது உங்களிடம் சிரிக்கும்போது கண்கள் அப்படியே இருந்தால் அது நிஜப் புன்னகை அல்ல.'
'யாராவது உங்களை நேசிக்கும் வரை நீங்கள் யார், பார்க்க எப்படி இருக்கிறீர்கள் என்பது ஒரு விஷயமே இல்லை.'
'இன்னும் நீங்கள் பார்த்து அதிசயிக்காத விஷயங்கள் இன்னும் எத்தனையோ இருக்கின்றன இந்த நம் உலகத்தில்.'
'எண்ணங்கள் நல்லவையாக உள்ள மனிதன் ஒருபோதும் அழகற்று இருந்ததில்லை.'
‘எப்பவாவது கொஞ்சம் மடத்தனமாக இருப்பதுபற்றி ரொம்ப விவேகமானவர் கவலைப்படுவதில்லை.’
'கற்பனைக்கு சமமான வாழ்க்கை இல்லை. கற்பனை உலகில் நீங்கள் மிகச் சுதந்திரமாக இருக்கிறீர்கள்.'
'அப்படி நடந்தால் இப்படி நடந்தால்'களை வைத்துக்கொண்டு நீங்கள் எங்கேயுமே போய்ச் சேர முடியாது. 'வழியில் நான் மூழ்கி விட்டால்? கடற் கொள்ளைக்காரர்கள் வந்துவிட்டால்? நான் திரும்பி வரமுடியாமல் போய் விட்டால்?' என்றெல்லாம் நினைத்து இருந்தால் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடித்திருக்க முடியாது.'
'அதிகாரத்தை வைத்திருப்பது அதை வைத்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்கிற அளவுக்கு முக்கியமானதல்ல.'
'வாழ்க்கையில் நீங்கள் எதையாவது சாதிக்க வேண்டும் என்றால் ஏராளமான புத்தகங்கள் படிக்க வேண்டும்.'
சொன்னவர்: Roald Dahl
இன்று பிறந்த நாள். (1916 - 1990)

வாழ்க்கையை ஒரு புன்னகையுடன் ...


 'A sense of humour is all that matters in this world!'

வாழ்க்கையை ஒரு புன்னகையுடன் ஏற்றுக்கொள்ள வடிவேலு அவர்களின் காமெடியைப்போல் வேறெதுவும் உதவவில்லை.
நம்முடைய 'கனவுகளைத்' திரையில் பிரதிபலிப்பவர்தான் ஹீரோ. நிஜத்தில் நாம் அப்படியல்ல என்பது நமக்குத் தெரியும். ஆம், அதைத்தான் வடிவேலு பிரதிபலித்தார். வாழ்வின் அத்தனை இக்கட்டுகளுடன்! அந்த இக்கட்டுகளில் இழையோடும் அத்தனை நகைச்சுவையுடன்! நம்ம முட்டாள்தனங்களை நாம் உணர்ந்து ஒரு விசனச் சிரிப்போட ஏத்துக்கற அந்த கணம் இருக்கே, அந்தப் பொன்னான கணங்களைத்தான் அவர் அடையாளம் காட்டினார் நமக்கு. சிக்கென்று ஒன்றிவிட்டோம் (நமக்குள் இருக்கும்) அவருடன்.
நம்மை புத்திசாலின்னு நினைச்சிட்டு நாம செய்யற அசட்டுத் தனங்கள் இருக்கே… அதுக்கு எல்லையே இல்லேங்கிறதை எல்லையில்லாத அவரது காமெடி காட்சிகள் சொல்லுது.
நமக்குள்ளே இருக்கிற லூஸை நமக்கு அறிமுகப்படுத்தினார். அதையே ரசிக்கப் பண்ணினார்.
சினிமாவைத் தாண்டி வாழ்க்கையின் பல சூழ்நிலைகளில் அவரை நினைச்சுக்கறோம். இது ஒரு சாதனையில்லையா? Take it with a pinch of salt! என்பாங்க. அதைத்தான் அவர் அழகாகக் காட்சிப் படுத்துகிறார். இன்றைய இந்த சமுகம் நம்மைப் படுத்தற பாட்டை அழகா உணரப் பண்ணுகிறார். சில சமயம் நாம இந்த சமூகத்தைப் படுத்தற பாட்டையும்!
Life is painful. Take it with a pinch of or lot of his comedy. You will feel wonderful, even if life is not!
இன்று பிறந்த நாள்! Great Artiste! வாழ்த்துக்கள்!

திரைக்கதைக்கு பாடம்...

 "வாழ்க்கையில ரசனை ரொம்ப முக்கியம். ரசிக்கத் தெரிஞ்சவங்கதான் உலகத்தினுடைய அழகை பூரணமா அனுபவிக்க முடியும். நல்லா இருக்குன்னு சொல்றோம் பார்த்தீங்களா அந்த வார்த்தையே ரசனையிலேர்ந்துதான் உற்பத்தி ஆகுது," என்கிறார் சிவாஜி கப்பலில் அறிமுகமான பெண்ணிடம். அவள் ரசித்துக் கொண்டிருப்பது தன் வாழ்க்கையை என்பது அறியாமல்...

‘புதிய பறவை’.... இன்று பிறந்தநாள்! Technical Brilliance- க்கு ஒரு படம்! An 'ever-new' movie!
மனைவியை இழந்த கோபால் மறுபடி முகிழ்த்த காதலில் மனம் தேறி, லதாவை வாழ்வில் இணைக்க நிச்சயதார்த்தம் நடக்கையில் 'அத்தான்!' என்று அவன் முன் வந்து நிற்கிறாள் முதல் மனைவி. இடைவேளை! The best ever interval block!
Shot by shot, scene by scene நுணுக்கங்களை அடுக்கி, திரைக்கதைக்கு பாடம் சொல்லும் படங்களில் ஒன்று. டைடில் சீனிலிருந்தே சுறுசுறுப்பாக அதிகரிக்கும் விறுவிறுப்பு சூபர் க்ளைமாக்ஸில் முடியும்! Breathtaking suspense என்பார்களே, அது!
ஒவ்வொரு காட்சியையும் சிற்பமாகச் செதுக்கி எடுத்திருப்பார்கள். எந்த ஒரு வசனமும் படத்தின் கதையோடு இம்மி பிசகாமல் ஒன்றியிருப்பது இறுதியில் விளங்கும்போது ஏற்படும் வியப்பு!
விஸ்வநாதன் ராமமூர்த்தி தங்கள் பி. ஜி. எம்.மில் சிகரம் தொட்ட படம் இதுதான் என்பேன். scintillating! சிவாஜியின் ஊட்டி பங்களாவுக்குள் கார் நுழையும் அந்த சீனில் ஒன்றேகால் நிமிடத்துக்கு வரும் ஒய்யார பிஜிஎம் இல் இருந்து... ரயில்வே கேட் மூடிவிடும்போது சுழன்று சுழன்றொலிக்கும் வயலின் பின்னல்.... முதல் இரவில் குடித்துவிட்டு வரும் சௌகாரைக் கண்டு சிவாஜி மனம் குமையும் போது ஒலிக்கும் ஹாண்டிங் பின்னணி இசை.... ‘நான் யாருன்னு உங்களுக்குத் தெரியாது’ன்னு சரோஜா தேவி ஊடல் செய்யும்போது ஒலிக்கும் மிக மிக மெல்லிய பிஜிஎம் வரை காட்சியின் உணர்வை காதுக்கு ஊட்டும் அவர்களின் மேதைமை! இன்றைக்குக் கவனித்தாலும் அசந்து விடும் அட்டகாச பங்களிப்பு!
சிவாஜியின் நடிப்புக்கு சவால்விட்டதில் சிகரம் இந்தக் கதை! வென்றது, வழக்கம்போல், அவரே.


Monday, September 1, 2025

இந்தா, இந்தா ...


இந்தா, இந்தா என்று அவர் கொடுத்த ‘நந்தா’ பாடல்கள்!
மெலடியும் புதுமையும் பின்னிப் பிணைந்து சோகமும் காதலும் சுகமாக இணைந்து.. அந்த ஆறு பாடல்களுமே ஒரு இசைக்கொத்து! அதிலும் அந்த “முன் பனியா…” ரொம்பவே தனியா என் கூடவே இன்னிக்கும் சுத்திக்கிட்டிருக்கு!
அப்புறம் எத்தனையோ பாடல்கள்! கேட்டதுமே ஆடுகிற மாதிரி.. மனசு துள்ளுகிற மாதிரி… அவருடைய தனி முத்திரை தெரிகிற மாதிரி…
‘தீனா’வில் அந்த “நீ இல்லை என்றால்….” ஆரம்பிக்கிற வேகமும் ஸ்தம்பித்தலாக முடிவதும்.. என்னவொரு சங்கீத அமர்க்களம்!
கேட்க ஆரம்பித்தால் மறுபடி, மறுபடி கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்றொரு பாடல்..
“காதல் எந்தன் காதல்… என்ன ஆகும் நெஞ்சமே!
கானல் நீரில் மீன்கள் துள்ளி வந்தால் இன்பமே..”
எங்கோ ஒரு உலகுக்கு அழைத்துச் செல்லும் பாடலல்லவா அது?
ஒரு மோர்சிங்கையும் நாகஸ்வரத்தையும் வைத்து விளையாடியிருப்பார் நம் நெஞ்சங்களில்! எனக்குத் தெரிந்து morsing ஐ இத்தனை tantalizing ஆக திரைப்பாடலில் யாருமே உபயோகித்ததில்லை.
(‘மூன்று பேர் மூன்று காதல்’)
தவிர என் நெஞ்சோடு கலந்துவிட்ட அந்தப் பாடல்..
நிறுத்தி நிறுத்தி இசையின் எட்டுத் திக்குக்கும் நம்மை இட்டுச் செல்லும் லாவகம்! உயர உயர தூக்கிச் செல்லும் சரணமும் அங்கிருந்து நம்மை மெதுவாக இறக்கிக் கொண்டு வரும் இசையும்!
“நெஞ்சோடு கலந்திடு உறவாலே…காயங்கள் மறந்திடு அன்பே..” (‘காதல் கொண்டேன்')
சரணம் முடிந்ததும் ஷெனாயா, கிளாரினெட்டா, ரெண்டுமா, தெரியாது. நெஞ்சைத் துளைத்துச் செல்லும்…
யுவன் ஷங்கர் ராஜா… இசைச் செடியின் ஒரு ரோஜா.
இன்று பிறந்தநாள்…

எவராலுமே...


சர்பட்டா பார்த்து ஏற்பட்ட பாக்ஸிங் உற்சாகம் தீர்வதற்குள் இவரைப் பற்றி சொல்லி விடுகிறேன். எவராலுமே தோற்கடிக்கப்படாதவராக ஒரு பாக்ஸிங் ஹிஸ்டரியை வைத்துக்கொண்டிருந்தவர் இவர்.

Rocky Marciano... இன்று பிறந்தநாள்.
ஐம்பதுகளில் உலக ஹெவி வெய்ட் சாம்பியனாக தொடர்ந்து நான்கு வருடங்கள் இருந்தவர். ஹெவி வெயிட் போட்டிகளில் உலகின் மிக அதிகமான நாக்அவுட் சதவீதமும் இவருடையதுதான். 49 க்கு 43 மேட்சில்.
24 வயதில் களத்தில் குதித்தவர் தொடர்ந்து 17 பேரை நாக்-அவுட்டில் தோற்கடித்தார்.
1956இல் Archie Moore -ஐ ஒன்பதாவது ரவுண்டில் வீழ்த்தியவர் சில மாதங்களில் தன் ரிட்டயர்மென்ட்டை அறிவித்தார். உச்சத்தில் இருக்கும்போதே ஒதுங்கியவர் மிச்சத்தை நடுவராக, வர்ணனையாளராக கழித்தார். டி.வி ஷோவும் நடத்தினார்.
எந்த அளவுக்கு பாப்புலர் என்றால் பிற்பாடு 1969இல் பிரபல முகமது அலியும் இவரும் மோதுகிறாற்போல ஒரு கற்பனைப் படம் எடுத்தார்கள். (‘The Superfight’) யாரை ஜெயித்ததாக காட்டுவது? இரண்டு பேரையும் தான். ஒவ்வொரு வர்ஷனில் ஒருவர்.
மேடையில் சோடை போகாதவர் மரித்தது ஒரு விமான விபத்தில். மறுநாள் அவரது 46 வது பிறந்த தினம். சோகம் என்னன்னா ரொம்ப ஈஸியா தவிர்த்திருக்கலாமாம் அந்த விபத்தை. அத்தனை மோசமாக இருந்திருக்கிறது வெதர்.
இவர் கதை டெலிவிஷன் படமாக வந்தது 1999இல்.

மனதின் கதவை...

 



மனதின் கதவைத் தட்டாமலேயே உள்ளே நுழைந்து விடுகிறது ‘கதவைத் தட்டு’ (‘Dastak’)என்கிற அந்தப் படம். மும்பையில் தங்கள் கனவுகளுடன் வந்திறங்கும் ஜோடி. வீடு தேடி அலைகிறவர்கள் முன்கதைச் சுருக்கம் தெரியாமல் அந்த வீட்டில் மாட்டிக்கொண்டு விடுகிறார்கள். ஒரு மாதிரியான ஏரியா அது. இதற்கு முன்பு அங்கு தங்கியிருந்த பெண்ணும்! ராத்திரியானால் கதவைத் தட்டுகிறார்கள் கஸ்டமர்கள். அவனுக்கு விரட்டித் தாங்கவில்லை.


அப்பாவிடம் சங்கீதம் பயின்ற அவளால் இங்கே தன் தம்புராவைத் தொடமுடியவில்லை. கிராமத்தில் ஆடிப்பாடி திரிந்தவள் இங்கே கூண்டுப் பறவையாக... தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. அவனுடைய ஆத்திரமும்! அவளுடைய பரிதவிப்பும்! அப்புறம் அற்புதமான அந்த கிளைமாக்ஸ் சீன்.
சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசை என்று மூன்று நேஷனல் அவார்ட் அள்ளிய படம். படத்தின் இயக்குநர் ராஜேந்திர சிங் பேடி.
Rajinder Singh Bedi... இன்று பிறந்த நாள்.
மி. சி. படங்கள் பார்க்க விரும்புபவர்கள் பா. வே. படம். சஞ்சீவ் குமார், ரேஹானா சுல்தான் நடிப்புடன் போட்டி போட்டது மதன் மோகனின் இசை.
“கடைத்தெருவின் விற்பனைப் பொருளாக...
காணுகிறார்கள் அவர்கள் என்னை...”
அடக்கி வைத்திருக்கும் உணர்வுகள் எல்லாம் அத்துமீறி வெளிப்பட, அவள் பாடும் அந்த வரிகள்...
சாகித்ய அகாடமி விருது பெற்ற உருது எழுத்தாளர். மிகச் சிறந்த வசனகர்த்தா. ஐம்பதுகளின் ‘தேவதாஸ்’ ‘மதுமதி’யிலிருந்து அறுபதுகளின் ‘அபிமான்’ ‘அனுபமா’ ‘சத்யகாம்’ (தமிழில் ‘புன்னகை’யாக வந்த படம்) வரை.
மகன் நரேந்தர் பேடியும் இயக்குநர். இயக்கிய படங்களில் ஒன்று கமல் நடித்த ‘Sanam Teri Kasam’ (ஆர். டி. பர்மனுக்கு முதல் Filmfare அவார்ட்!)
><><><