Thursday, September 10, 2026

பிரபல பஞ்ச் டயலாக்...

தன் முன் நின்ற அந்த வாலிபனைப் பார்த்தார் டைரக்டர் எல்லிஸ் ஆர் டங்கன். காங்கேயம் சொந்த ஊர். கம்பீரமான உருவம். வில் புருவங்களின் கீழே கூர்மையான கண்கள். எகத்தாளம் தூக்கி நிற்கும் உதடுகள். அந்த கணீர்க் குரல். கே.பி.சுந்தராம்பாளின் சிபாரிசு தேவையே இல்லை. எடுத்துக் கொண்டார் அந்த நடிகரை. படம் 'மணிமேகலை.' தொடர்ந்து கிடைத்த படம் 'உதயணன் வாசவதத்தை.' உதயமானார் ஒரு வில்லன்.
யாரப்பா அது கர்ஜிப்பது என்று எல்லாரையும் திரும்பிப் பார்க்க வைத்த
வீரப்பா...
பி.எஸ்.வீரப்பா... இன்று பிறந்த நாள்! (1911-1998)
'மணந்தால் மகாதேவி; இல்லையேல் மரணதேவி!' கண்ணதாசன் எழுதிய தமிழ்பட உலகின் மிகப் பிரபல பஞ்ச் டயலாக்கைப் பேசியவர்.
ஸ்ரீராம், ஜெமினி, சிவாஜி, எம்ஜிஆர், எஸ்.எஸ்.ஆர். என்று எல்லோருக்கும் 'சபாஷ்! சரியான போட்டி!'யாக வந்தவர். அவரே 'சபாஷ்' சொன்ன 'சரியான போட்டி' பத்மினி, வைஜயந்தியுடையது. ('வஞ்சிக்கோட்டை வாலிபன்') மறக்க முடியுமா அதை?
சிரித்தாலும் சிரித்தார் ஒரு 'ஹா ஹா ஹா!' வில்லன் என்றால் ஹா ஹா ஹா என்றுதான் சிரிக்கணும் என்று கிளம்பிய பல 'ஹா ஹா ஹா'க்களைத் தாங்க வேண்டியதாயிற்று. அவர்போல் ஒன்றும் வரவில்லை.
நடிகர் எத்தனை பிரபலமோ அதற்குச் சற்றும் பிரபலம் குறையாத புரொட்யூசர். ஆம், ஓங்கி ஒலித்த அந்த ‘ஆலயமணி'! அதை நமக்குத் தந்தவராயிற்றே? திலீப்குமார் நடித்து அது இந்தியிலும் ‘ஆத்மி'யானது.
தயாரிப்பை ஆரம்பித்தது ‘பிள்ளைக் கனியமுது' படத்தில். (அந்த "ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே..." பாடல்!) தொடர்ந்து ஜெமினியுடன் ‘வீரக்கனல்'. ‘ஆலயமணி’ ஒலித்தபின் ஒளிர்ந்தது ‘ஆனந்த ஜோதி' அப்புறம் “ஆறு மனமே ஆறு…” என்ற ‘ஆண்டவன் கட்டளை’... 'Woh Kaun Thi?' யைத் தமிழில் ‘யார் நீ?’ என்று தர, அதிரடி ஹிட், இந்தியைப் போலவே. ராம நாராயணன், எஸ் ஏ சந்திரசேகர், ராமராஜன் டைரக்‌ஷனில் சளைக்காமல் படங்களைத் தந்தவர்.

Sunday, September 6, 2026

பால்வெளியின் வான்மதி...


அவர் ஒரு பெண் எழுத்தாளர். தெலுங்கில் அவர் எழுதிய ‘அத்தகாரி கதாலு’ என்ற சிறுகதைத்தொகுதி சாகித்ய அகாடமி பரிசு பெற்றது. அதன் சில கதைகள் குமுதத்தில் ‘அத்தகாரு’ என்று தமிழில் வெளியானது என்றால் எத்தனை பேருக்கு தெரியும் அவரை என்று தெரியாது. ஆனால் பானுமதி என்றால் அத்தனை பேருக்கும் நினைவு வந்துவிடும் அவரை.
ஆம், இந்தப் பக்கம் தலை சிறந்த நடிகைகளில் ஒருவர். அந்தப் பக்கம் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவர்.
பி. பானுமதி. வெண் திரை பால்வெளியின் வான்மதி.
இன்று பிறந்தநாள்! (1924-2005)
‘வான் மீதிலே… ‘ என்று ராமராவ் முதல் வரியைப் பாடியதும் கிளையில் கையூன்றி நிற்கும் பானுமதி முகத்தைத் தாழ்த்தி உடலைப் பின்னிழுத்தபடியே, கண்களை உயர்த்தி, ஒரு பார்வையை வீசுவார் பாருங்கள், ஒரு நாயகி தன் களையை வெளிப்படுத்தும் கலையை அந்த ஐந்து விநாடி ஷாட்டில் கற்றுக் கொள்ளலாம்.
பாத்திரங்களைப் படைக்கும் எழுத்தாளர் என்பதாலோ என்னவோ பாத்திரங்களை புரிந்துகொண்டு காத்திரமான நடிப்பை வழங்கி விடுவார்.
‘அறிவாளி’ படத்தை ஷேக்ஸ்பியர் பார்த்தால், ஆஹா, இந்த நடிகை மட்டும் நடிப்பதாக இருந்தால் எத்தனை ‘Taming of the Shrew’ களை எழுதியிருக்கலாம்! என்பார்.
ஹாஸ்டல் மாடி பால்கனியிலிருந்து, கீழே சிவாஜி பாடும் ‘வெண்ணிலா ஜோதியே வீசுதே..’வுக்கு சந்திராவாக வெட்கப்பட்டு விட்டு, அந்தப் பக்க பால்கனிக்கு ஓடி, கீழே டி. ஆர். ராமச்சந்திரன் பாடும் ‘திண்டாடுதே என் கண்களே..’வுக்கு மாடர்ன் அபிநயம் காட்டி, ஒரே ஆள் இரண்டு நபராக அசத்துவார் பாருங்கள், தியேட்டர் அதிரும். ஆம், The Fabulous Senorita வில் Estelita வாக நடித்த Estelita வை விட Fabulous ஆக நடித்திருந்தார் ‘மணமகன் தேவை’யில்.
பீறிட்டுக்கொண்டு கிளம்பும் நடிப்பு அவருடையது. நம் நாட்டின் இன்க்ரிட் பெர்க்மன். ‘Gaslight’ (1944) இல் அவர் செய்ததை அனாயாசமாக ரங்கோன் ராதாவில்… கடைசி சீனில் அவரைப்போல் ஒரு வீல் அலறல் விட்டதும், படத்தில் அது கட்டாகி விட்டதும் அப்போது ஒரு பத்திரிகையில் படித்த ஞாபகம்.
அப்புறம் அந்த நடிப்பின் எல்லை.. ‘அன்னை.’ “உன் பிள்ளையை அடிக்க நான் யாரு?” என்று சௌகார் விலகும்போது, அவன் தன் பிள்ளை இல்லை என்று தான் உணருவதையும் அதை நமக்கு உணர்த்துவதையும் ஒரே பார்வையில் வெளிப்படுத்துவார். “என் புள்ளே இல்லே, நான் பெரியம்மா, தப்பு எம்மேலதான், மன்னிச்சுக்க, என் புள்ளே இல்லே, நான் பெரியம்மா, இது உம்பிள்ளே, நீ அடி, கொல்லு, என்ன வேணாலும் பண்ணிக்கோம்மா, உன் புள்ளையாச்சு, நீயாச்சு, நான் பெரியவ, நான் பெரியவ..” என்று நகரும்போது ஒரு நடிகை வசனம் பேசுவதையா பார்க்கிறோம்? ஒரு வளர்ப்புத் தாயின் மனத் தளர்வும் வேதனையும் மட்டுமே அல்லவா தெரிகிறது?
ரோல் எதுவானாலும் ஒரு கை பார்த்து விடுவார். ‘Let me try…’ என்று சங்கர் கணேஷ் இசையில் அந்த ஆங்கிலப் பாடலையும்!(‘பத்து மாத பந்தம்’). ‘Meet my son…’ இன்னொரு அழகுப் பாடல் ‘எடுப்பார் கைப்பிள்ளை’யில்.
‘லட்டு லட்டு மிட்டாய் வேண்டுமா..’ நாலு மொழிப் பாடலிலிருந்து ‘அன்னை என்பவள் நீதானா…’ வரை லட்டு லட்டாக பாடல்கள்.
அஷ்டாவதானி என்றால் அதான் எனக்கு தெரியுமே என்பீர்கள். என்ன அந்த எட்டு என்றால்? எழுத்தாளர், டைரக்டர், பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர், எடிட்டர், ஸ்டூடியோ அதிபர், நடிகை. (முதல் பெண் சூபர் ஸ்டார்.)
இவர் நடிப்பில் ஒரு இயல்பான குறும்பு கலந்திருக்கும். ‘ஏரு பூட்டி ஜோரு காட்டும் …’ ('ம.பெ.மகராசி') பாடலில் அந்தக் குறும்பை நாணத்துடன் சரிவிகிதத்தில் வழங்கியிருப்பார்.
‘கள்வனின் காதலி’யில் கல்கியின் கல்யாணியை அப்படியே கண்முன் கொண்டு வந்ததை நாலு வரி சொல்லலாமென்றால் ‘அம்பிகாபதி, ‘அலிபாபா’, ‘மதுரை வீரன்', ‘கானல் நீர்' எல்லாமாக சேர்ந்து நாற்பது வரி ஆகிவிடும்

Tuesday, September 1, 2026

சொல்லாமல் கொள்ளாமல்...


சொல்லாமல் கொள்ளாமல்…

கே.பி.ஜனார்த்தனன் 


 காலிங் பெல் ஒலித்தது. எட்டிப் பார்த்தார் ராகவ். கேட்டுக்கு வெளியே கிஷோர் நின்றிருந்தான். சற்று தாமதமாகவே கதவைத் திறந்தார்.

“என்ன மாமா, என்ன பண்ணிட்டிருந்தீங்க? எத்தனைவாட்டி பெல்லை அமுத்துறது?”
“இல்லேடா, இங்கே ஒரு பேஜார் வேலையில் அகப்பட்டு முழி பிதுங்கிட்டிருக்கேன். உட்காரு, என்ன தலை எல்லாம் கலைஞ்சிருக்கு?”

 அவன் ஏதோ சொல்ல வாயெடுக்கு முன் ”ஆ, உன்கிட்ட ஐடியா கேட்கலாமே? ஒரு வெப்சைட் போட்டி. பக்கத்து வீட்டு பையன் என்னை கலந்துக்கச் சொன்னான். ரெண்டே வரியில் எழுதணும்  ‘To whom do you want to thank before you die and why?’ அப்படிங்கிற கேள்விக்கு பதில். எப்படி எழுதறதுன்னு தலையை பிச்சிட்டு…”

“ஓ வந்து… அது இப்ப…”

“ஒரு நிமிஷம்தான். இந்த கேள்விக்கு நீ பதில் சொல்றதாயிருந்தா என்ன சொல்லுவே?”

யோசிக்கவேயில்லை. “எங்க அம்மாவுக்குத்தான் முதல்ல! லிஸ்ட் போட முடியாது அவங்க எனக்கு செய்திருப்பதை எல்லாம்! அப்புறம் எங்கப்பா..” என்று அவனாகவே அப்பாவுக்குத் தாவினான், “அவர் மட்டும் அந்த காலத்திலேயே எனக்கு அட்வென்ச்சர் கதைகளை படிச்சுக் காட்டவில்லையானால் நான் படிப்பில் இத்தனை ஆர்வத்தோடு வளர்ந்திருக்க மாட்டேன்.”
“அப்ப யாழினி?”
“ஆமாம். முதலிலேயே சொல்லியிருக்கணும். என் மனைவி இல்லாம நான் ஏது? அடுத்து என் தங்கை. அவளோட பாசம் நான் முன்னேற எத்தனை உதவியா இருந்திருக்கு! என் ப்ரண்ட் சீதாராமன். பிளஸ் டூவில் என் ஹை மார்க் ஸ்கோருக்கு அவனுக்கு நன்றி சொல்லணும். ராப்பகலா கூட இருந்து உழைச்சான்…”

 அவன் தொடர்ந்து சொல்ல… மாமா உட்கார்ந்தார்.

 “இலக்கணமும் கணக்கும் சொல்லித் தந்த ஆறுமுகம் சார், வேலையில் சேர்ந்தப்ப முதல் ப்ராஜெக்ட் லீடரா இருந்த மனோஜ் … கொஞ்சம் கஷ்டம்தான் மாமா. லிஸ்ட் வளந்துட்டேயிருக்கு. ஆஹா, எத்தனை பேர் என் வாழ்க்கையில் நான் நல்லாயிருக்க ஹெல்ப் பண்ணியிருக்காங்க? ஏன் உங்களால் அதை ஈசியா எழுத முடியலைன்னு புரியுது.” என்ன நினைத்தானோ, “வரேன் மாமா, வீட்டில் ஒரு வேலை, மறந்துட்டேன்!” போய்விட்டான்.


 போன் ஒலித்தது. “சித்தப்பா,” என்று அழைத்தாள் யாழினி. ”அங்கே வந்தாரா அவர்? என்னோட சண்டை போட்டுட்டு கோபத்தில் வெளியே போனாரு. அதான் கவலையா இருக்கு.”

“கவலைப்படாதே, இப்ப சரியாகியிருப்பான். அங்கேதான் வந்திட்டிருக்கான்,” என்றார் அவன் முகத்தில் அறிகுறி பார்த்து நோயை டயாக்னிஸ் செய்து உடனடியாக ஒரு திரைக்கதை எழுதி அதன்படி வைத்தியமும் பார்த்து அனுப்பிய ராகவ்.


(‘அமுதம்’ April 2012 இதழில் வெளியான ‘அன்புடன் ஒரு நிமிடம் -3’)

Sunday, August 30, 2026

அதுவும் அன்றே ...


"என்ன குற்றம் கண்டீர்?" என்கிறார் சிவாஜி.
"பொருளில்தான் குற்றம்! சொல்லில் குற்றமில்லை," என்கிறார் சிவாஜி.
என்ன இது? அதை சொல்வது ஏ பி நாகராஜன் அல்லவா?
இல்லை, அவர் வசனம் மட்டுமே.
சிவனும் சிவாஜியே; நக்கீரனும் சிவாஜியே.
"இங்கு எல்லாமே நீர் தானா?" என்பாரே நாகேஷ், திருவிளையாடலில்... அதுபோல.
ஆம், அங்கு இருவருமே அவர்தான்.
அதுவும் அன்றே (1956) நடித்துவிட்டார்..
படம்: 'நான் பெற்ற செல்வம்' அதில் வரும் டிராமா காட்சி! (லிங்க் கீழே)
டபிள் ரோலில் கலக்கியிருப்பார் சிவாஜி. சிவனாகவும் நக்கீரராகவும்.
இரு குரலிலும் ஒரு distinct difference காட்டி திகைக்க வைத்திருப்பார். அது போனஸ்!

 

Saturday, August 29, 2026

வள்ளலாக வாழ்ந்தவர்...


மனசில எந்தக் கவலைதான் இருக்கட்டும், ஒரு மூணு நிமிட் கமிட் பண்ணி இதைக் கேட்டால், அப்புறம் அதைத் தேட வேண்டியிருக்கும்...
நினைத்தாலே சிரிப்பு வந்துவிடும்! சிரிப்பின் சிறப்பை சிரிப்பால் நிரப்பிச் சொல்லும் பாட்டு.
சங்கீத சிரிப்பு, சாகசச் சிரிப்பு என வகை வகையாய் சிரித்துக் காட்டி…
பாட்டு முடியும்போது நாமே சிரிப்பில் மாட்டிக் கொண்டு விடுவோம்.
ரிகார்டிங்கின்போது கூட இருந்தவர்கள் எப்படித்தான் சிரிக்காமல் இருந்தார்களோ?
"சிரிப்பு! அதன் சிறப்பை சீர் தூக்கிப்
பார்ப்பது நமது பொறுப்பு!"
...என்று தொடங்கும் அந்த என் எஸ் கிருஷ்ணன் பாடல் வந்தது சிவாஜி பத்மினி நடித்த 'ராஜா ராணி' படத்தில்.. சிரித்துக் கலக்கிவிடுவார் என். எஸ். கே!

கலைவாணர்! .. கடைசி வரை வள்ளலாகவே வாழ்ந்தவர்.

><><><

 

Friday, August 28, 2026

மின்னல் போலாகும் ...


1.ராகத்துக்கு ஏற்றபடியும், 2.டப்பிங் வாயசைப்புக்கு பொருத்தமாகவும் 3.மூலப் பாட்டின் அதே பொருள் வரும்படியும் எழுத வேண்டும் அந்தப் பாடலை...
"சோட்டீ ஸி யே ஜிந்தகானி ரே
சார் தின் கி ஜவானி தேரி ஹாயரே
ஹாய் கம் கி கஹானி தேரி..."
இதுவே முகேஷ் பாடிய மூலப் பாட்டு. ராஜ் கபூரின் பிரபல ’ஆ’ இந்திப் படத்தில் ராஜ் காதல் தோல்வியில் பாடுவது. ’அவன்’ என்று தமிழில் டப்பிங் ஆகி அதுவும் ஹிட்.
எத்தனை அழகாக எழுதினார் பாருங்க.. அதைவிட அழகாகவே...
‘மின்னல் போலாகும் இந்த வாழ்க்கையே
வான் வில் போலவே இளமை ஆனதே
ஆம் துன்பக்கதை உனதே...’
எழுதியவர் கம்பதாசன். 1950'களின் அருங்கவி.

அதே படத்தில் இன்னும் சில மனம் தொடும் பாடல்கள்:
"கல்யாண ஊர்வலம் வரும்... உல்லாசமே தரும்..
மகிழ்ந்து நான் ஆடிடுவேன்.."

"ஏகாந்தமாம் இம்மாலையில்
எனை வாட்டுது உன் நினைவே..."

"உன் பேரைக் கேட்டேன்
தென்றல் தனில் நான்
கண்டாலே ஆடும் நெஞ்சம் தை தை தை..."

"கண் காணாததும் மனம் கண்டுவிடும்
வான் சந்த்ரன் வலம் வரலாச்சே
உடல் எங்கும் பொங்கும் கனலாச்சே..."

இவரது பெயர் சொல்லும் மாபெரும் பாடல் 'ஞான சௌந்தரி' யின் "ஆதியே இன்ப ஜோதி...அருள் தாரும் தேவ மாதாவே..." ஸ்ரீதர் வசனம் எழுதிய 'மாமன் மகள்' படத்தில் வரும் அந்த பிரபல சோகப் பாடலை ("ஆசை நிலா சென்றதே... அபலை கண்ணீரில் நீந்துதே...") தவிர நௌஷத் இசையமைத்த 'மொகலே ஆஸம்' தமிழில் 'அக்பர்' என்று வந்தபோது இவர் எழுதினார் "கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே.. நிலா வீசும் வானில் மழை சூழலாச்சே.. "

நடிகராக நினைத்து அப்புறம் கதை வசனம் எழுதி பின் பாடலாசிரியராக பரிமளித்தார். 'வானரதம்' படத்துக்கு இவர் எழுதிய பாடலை லதா மங்கேஷ்கரே பாடினார் என்றால், "பார்த்தால் பசி தீரும்.." என்று பி யூ சின்னப்பா 'மங்கையர்க்கரசி'யில் பாடியது இவர் பாடல்தான்.

Monday, August 24, 2026

வாழ்க்கை என்பதே...


சில மேற்கோள்கள்...
‘வாழ்க்கை என்பதே ஒரு மேற்கோள்தான்.’
‘நிலவும் அமைதியை மேம்படுத்த முடியும் என்றால் மட்டுமே பேசு!’
‘உன்னுடன் நான் இருப்பதையும் உன்னுடன் நான் இல்லாததையும் வைத்தே நேரத்தை என்னால் கணக்கிட முடிகிறது.’
‘நடக்கக் கூடியதாகவோ நடக்கிறாற் போலவோ இல்லை நிஜம்.’
‘எழுத்து என்பது வழி நடத்தப்படும் கனவுக்கு மேல் வேறில்லை.’
‘புத்தகம் என்பது தனிப்பட்ட ஒன்றல்ல. அது ஓர் உறவு.எத்தனையோ உறவுகளுக்கு அச்சாணி.’
‘மனிதனின் எளிமையை விட மிகவும் சிக்கலானது உலக இயந்திரம்.’
சொன்னவர்...Jorge Luis Borges. பிரபல ஸ்பானிஷ் எழுத்தாளர்.
இன்று பிறந்த நாள்.
எதையும் மறக்காத பேர்வழியைப் பற்றி இவர் எழுதிய சிறுகதை எவராலும் மறக்க முடியாதது: 'Funes, the Memorious'

Sunday, August 23, 2026

முழுமையாக ஒரு வார்த்தை...

முழுமையாக ஒரு வார்த்தை...

கே.பி.ஜனார்த்தனன்

(’அமுதம்’ ஏப்.2012 இதழில் வெளியான 'அன்புடன் ஒரு நிமிடம்-2')




"என்ன ஞாபகம் வெச்சாலும் spelling மறந்துடுது!” அலுத்துக் கொண்டான் பரசு, “Complimentary, Complementary இந்த ரெண்டு வார்த்தையும் குழப்புது என்னை.”

“ரொம்ப சுலபம்,” என்றார் வாசு.  அப்பா.  ”Complimentary என்பது வாழ்த்துவது. Complementary ன்னா முழுமையாக்குவதுங்கற அர்த்தத்தில் வருவது. முழுமைக்கு என்ன வார்த்தை? Complete. அதனால Comple என்று L-க்கு பதிலாக E வருது, அப்படி ஞாபகம் வெச்சுக்கலாமே? தவிர அது ஒரு அழகான வார்த்தையும் கூட. ஒன்றையொன்று முழுமையாக்குவது. வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கிற எந்த சம்பத்துமே வாழ்க்கையை முழுமையாக்குவதாக இருக்கவேண்டும். அப்பதானே அழகு? பயன்?"

சுவாரசியம் தட்டிற்று இவனுக்கு.

”கணவனும் மனைவியும் எடுத்துக்கொண்டால் இவனிடம் இல்லாத சில நல்ல குணங்கள் அவளிடமும் அவளிடமில்லாத சில அவனிடமும் என அமைந்தால் அந்த அளவில் அது Complementary தானே?"

"கண்டிப்பா."

"கூட்டுக் குடும்ப காலத்தில் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா என்று குடும்பம் என்ற அமைப்பு முழுக்க முழுக்க மொத்ததில் Complementary ஆக அமைந்திருந்ததால் குழந்தைகளுக்கு வாழ்வில் அதுவே அவர்களின் மாபெரும் இயங்கு முன்னேற்றத் தளமாக இருந்தது. இப்ப அதை நாமே ஒதுக்கிவைத்துவிட்டு அங்கும் இங்கும் அலைந்து திரிந்து அந்த Complementary- யின் ஒவ்வொரு அங்கமாக சேகரிக்க வெளியில் ஓடுகிறோம். அப்ப தாத்தா படம் வரையக் கற்றுக் கொடுப்பார். எப்படி? ஆர்வத்தோடு கற்றுக்கொள்கிற மாதிரி. பாட்டி பழமொழியில் தொடங்கி பக்திப் பாடல் படிக்க வெச்சு ப த நி ச வரை சொல்லிக் கொடுப்பார். சித்தப்பா இலக்கணம், மாமா பேட்மிண்டன்... எல்லாம் ஒரே இடத்தில் நடந்திரும். இப்ப நாம அவனை அழைச்சிட்டு நீச்சல் கிளாஸ், மியூசிக் கிளாஸ், டிராயிங் கிளாஸ் அப்படீன்னு பேட்டைவிட்டு பேட்டை அலையறோம்...’

”அட, ரொம்ப யோசிக்க வைக்கிறீங்களே?”

”அத்தனைக்கத்தனை நல்லது. அந்த ரெண்டு வார்த்தைகளும் மறக்காது இல்லையா?”

கேட்டுக் கொண்டிருந்த தாத்தா தனக்குள்.. ’ஆஹா யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க! இனி நல்லதுதான் நடக்கும்.’

><><



Saturday, August 22, 2026

வில்லனுக்கும் காமெடியனுக்கும் இடையிலான...


அது யாரய்யா அசட்டு அப்பாவியா என்றால் அதுதான் டி. எஸ். பாலையா!
வேறு யாரய்யா முகத்தில் டன் டன்னாக அசடு வழிய விடுவதில் வல்லவர்?
அந்தக் காதலிக்க நேரமில்லை விஸ்வநாதனாக வேறு யாரையாவது நம்மால் நினைக்க முடியுமா பாலையாவைத் தவிர? வெறும் ரீயாக்‌ஷனை வைத்துக்கொண்டே ஐந்து நிமிடம் அந்தக் காட்சியை ஹாஸ்யத்தின் உச்சத்துக்குக் கொண்டுபோய் விடுவாரே நாகேஷ் கதை சொல்லும்போது!
பாலையா அந்த கேரக்டருக்கு கொடுத்த பாலிஷ் நமக்கு ஒரு பிளஸண்ட் சர்ப்ரைஸ்! ஹீரோக்கள் அவரை ஏமாற்றுவதான கதையை, அவர் ஏமாறுவதான கதையாக மாற்றும் அளவுக்கு அட்டகாசமாக அவர் நடிப்பு!
எம்ஜிஆர் அறிமுகமான சதிலீலாவதி படத்தில் அறிமுகமான இவர், வில்லனுக்கும் காமெடியனுக்கும் இடையிலான ஒரு வகை காரக்டரை திரைக்கு சுவாரசியமாக அறிமுகப்படுத்தினார்.
'இன்னிக்கு வெள்ளிக் கிழமை, வாளைத் தொடமாட்டேன்'னு மதுரை வீரனிடம் காட்டும் பொய் மிடுக்கும் சரி, பிள்ளைகளின் பாமா விஜய ஸ்டார் மோகத்தைக் கண்டிக்கும் மெய் மிடுக்கும் சரி என்னவொரு ரேஞ்ச் அஃப் ஆக்டிங்!
கொலைப் பழியை ஏவிஎம் ராஜன் மீது சுமத்தி ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு, தன் மனைவி மகளைப் பறிகொடுத்தபின் மனம் திருந்தும் கேரக்டர், கே எஸ் கோபாலகிருஷ்ணனின் ‘என்னதான் முடிவு?’ படத்தில். பழிவாங்கத் துடிக்கும் ராஜன் முன்னால், ‘உன் கையால் சாகத்தான் காத்திருந்தேன்,’ என்று அமைதியாக வந்து நிற்கும் க்ளைமாக்ஸில் மன்னிப்பை ஆடியன்ஸிடமிருந்தும் வாங்கிவிடுவார்.
சந்தர்ப்ப சூழ்நிலையால் தன் குழந்தையை வேலைக்காரி குழந்தையாகவும் அவள் குழந்தையைத் தன் குழந்தையாகவும் பார்க்க வேண்டிய சூழ்நிலை அம்மா எம் வி ராஜம்மாவுக்கு. அவரது பிடிவாதம் பிடித்த கணவராக அமர்க்களப் படுத்தியிருப்பார். எல். வி. பிரசாத்தின் ‘தாயில்லாப் பிள்ளை’யில்.
ஜெயகாந்தன் கதையில் நடித்தது ‘யாருக்காக அழுதான்?’ படத்தில். குடிகாரனின் பணத்தை எடுத்து வைத்துக்கொண்டு அப்பாவி நாகேஷ் மீது பழியைப் போட்டுவிட்டு உள்ளுக்குள் வதைபடும் அந்த கேரக்டருக்கு 100 சதம் உயிர் கொடுத்திருப்பார்.
பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாமல் நடந்ததை சொல்லவும் முடியாமல் பரிதவிக்கும் கேரக்டர் என்றால் இவருக்கு பீட்சா சாப்பிடுற மாதிரி. இவருக்காகவே எழுதப்பட்டதோ என்று சில சமயம் தோன்றும். ‘ஊட்டி வரை உறவு.’
துளி பிசிறு இல்லாமல் கான்ட்ராஸ்ட் காட்டுவதில் மன்னர். சபையில் காட்டிய கர்வத்துக்கு சற்றும் குறையாமல், ‘சற்று முன்பு ஒரு தேவகானம் கேட்டதே?’ என்று பிரமிப்பை உதிர்த்தபடி தன் செருக்குச் சட்டையைக் கழற்றிப் போடும் அந்த நயம்! (திருவிளையாடல்)

Aug. 23. பிறந்த நாள்! 

><><><

Wednesday, August 19, 2026

பறப்பது வசீகரமானது...


யார் இந்த முன்னேற்ற வாசகங்களைச் சொல்லியிருப்பார் என்று ஊகிக்க முடிகிறதா?
'பறக்கக் கற்றுக் கொள்வது வசீகரமானது அல்ல. ஆனால் பறப்பது வசீகரமானது'
'ரசிக்க முடிகிற வரையில் உங்கள் வேலையை நன்றாகவும் மனப்பூர்வமாகவும் நேர்மையான நோக்கத்துடன் செய்யுங்கள், வாழ்க்கை உங்களை ஒருபோதும் ஏமாற்றாது.’
‘ஒவ்வொரு மனிதரும், நிறுவனமும், ஏன், சமூகமும் ஒரு கட்டத்தை அடைந்தவுடன் தங்கள் நோக்கத்தை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் - புத்துணர்ச்சியூட்டிக்கொள்ள, புதிதாக கட்டமைத்துக் கொள்ள, மீண்டும் சிந்திக்க வேண்டும்.’
‘புதியவைகளை நோக்கித் தாவா விட்டால் நீங்கள் ஜீவிக்க முடியாது.’
‘உங்கள் போட்டியாளர் மீது எப்போதும் மதிப்பு வைத்திருங்கள், அவர்களை வியந்து பார்க்க வேண்டியதில்லை.’
‘நமக்கு வேண்டியது புத்திசாலித்தனமான இயந்திரங்கள் அல்ல, புரிந்துகொள்ள எளிதானவை. செயற்கை நுண்ணறிவு அல்ல, கூட்டு அறிவு.’
‘உங்களுக்கு என்று நீங்கள் வகுத்துக் கொள்ளும் பார்வை, நீங்கள் வாழ்க்கையை நடத்தும் விதத்தை வெகுவாக பாதிக்கிறது.’
‘தினமும் உங்களை புதுப்பித்துக் கொண்டே இருங்கள். சிலசமயம் வெற்றியடைவீர்கள், சிலசமயம் அடைவதில்லை. இரண்டின் சராசரி என்னவோ அதுதான் முக்கியம்.’
‘உலகில் இருக்கும் நிலையற்ற தன்மையை இன்னும் ஆழமாக உணர்ந்து கொண்டால், மனதில் ஒரு சமநிலையை வளர்த்துக் கொள்ள முடியும். வாழ்வின் உயர்வுகளும் வீழ்ச்சிகளும் திகைக்க வைக்காது. அப்போதுதான், சுற்றியுள்ளவர்களின் மீது ஆழமான பரிவையும் பச்சாதாபத்தையும் வளர்த்துக் கொள்ள முடியும்.’
‘எந்தப் பழக்கங்களால் முதலில் அவர்கள் வெற்றி பெற்றார்களோ அந்தப் பழக்கங்களையே மக்கள் மறந்துவிடச் செய்கின்றன வெற்றிகள்.’
‘நாம் செய்வது வேலை அல்ல, மற்றவர்களின் வாழ்க்கையை முன்னேற்றுவது என்பதை அறியும் போதுதான் அது மிகச் சிறந்த வேலை ஆகிறது.’
… சொன்னவர் Satya Nadella. மைக்ரோ ஸாஃப்ட் நிறுவனத்தின் சி. இ. ஓ. இவரின் பிரபல ‘Hit Refresh’ புத்தகம் படித்திருப்பீர்கள்...
இன்று பிறந்த நாள்!
வாழ்த்துக்கள்!

Tuesday, August 18, 2026

The One Better..


The One Better.. (One minute story)

K.B.Janarthanan

"It's either Kannan or Madhavan, sir, for the team leader," said the manager, "We have to fix who."
"OK," said Parasuram, the Managing Director, "What's your opinion? Tell me about Kannan first."
"M.B.A plus M.S... Hard-working... Has the experience of about fifty projects."
"Good."
"And what's unique about him, he's never come to me seeking advice or suggestion in the midst of any project."
"Splendid. Now what about Madhavan?"
"He's also hard-working... M.B.A and M.S... Fifty or so projects."
"Go on."
"One difference. He'd come to me often enough seeking suggestions, telling about the errors made," said the manager.
He was sure the M.D. would select Kannan.
But Parasuram said, "OK, Send the order to Madhavan."
"Sir?"
"I can see you're surprised. Look at it this way. Team leaders should be efficient, no doubt. But it is equally important that they should be trustworthy. Men who consult with us at phases, though they make some mistakes, are much better than persons going about their way and managing on their own."
"True," said the manager.

Sunday, August 16, 2026

எதிர்பாராத இசை...


"எதிர் பார்த்தேன்.. இளங்கிளியைக் காணலியே...
இளம் காற்றே.. ஏன் வரலே தெரியலியே..."
எதிர் + பார்த்தேன் என்ற இரண்டு வார்த்தைகளை சுண்டிப் போட்டு பிடிக்கும் அந்த இசை, ’இளம்கிளியைக் காணலியே ..’ என்று குழைந்து ஏங்கிப் பின்வாங்கும் இனிமையாக.
மயக்கும் அந்த இசை மகாதேவனுடையது. 1950, 60களில் தமிழ் திரை இசையுலகை அசத்திய கே வி மகாதேவன், 80 களிலும் தன் அற்புத இசையை அளிக்கத் தவறவில்லை என்பதற்கு சாட்சி.
படம்: ஆர். சுந்தர ராஜனின் ’அந்த ராத்திரிக்கு சாட்சியில்லை’
எஸ்.பி.பி.யின் அட்டகாச சோலோ அமர்க்களங்களில் ஒன்று. ‘எதிர் பார்த்தே……..ன்’ என்று தன் மோகனக்குரலில் இழுக்கும்போது மனசு அப்படியே இழுக்கப்பட்டு விடும். 'ஏன் வரலே தெரியலியே..' எனும்போது குரலின் ஏக்கம் நம் மனதுக்கு தொற்றிக்கொண்டு விடும்.
One of the Eighties' delicacies we missed to enjoy and appreciate...

Friday, August 14, 2026

முழுமையாக ஒரு வார்த்தை...


முழுமையாக ஒரு வார்த்தை...

கே.பி.ஜனார்த்தனன்

(’அமுதம்’ ஏப்.2012 இதழில் வெளியான 'அன்புடன் ஒரு நிமிடம்-2')


"என்ன ஞாபகம் வெச்சாலும் spelling மறந்துடுது!” அலுத்துக் கொண்டான் பரசு, “Complimentary, Complementary இந்த ரெண்டு வார்த்தையும் குழப்புது என்னை.”

“ரொம்ப சுலபம்,” என்றார் வாசு.  அப்பா.  ”Complimentary என்பது வாழ்த்துவது. Complementary ன்னா முழுமையாக்குவதுங்கற அர்த்தத்தில் வருவது. முழுமைக்கு என்ன வார்த்தை? Complete. அதனால Comple என்று L-க்கு பதிலாக E வருது, அப்படி ஞாபகம் வெச்சுக்கலாமே? தவிர அது ஒரு அழகான வார்த்தையும் கூட. ஒன்றையொன்று முழுமையாக்குவது. வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கிற எந்த சம்பத்துமே வாழ்க்கையை முழுமையாக்குவதாக இருக்கவேண்டும். அப்பதானே அழகு? பயன்?"

சுவாரசியம் தட்டிற்று இவனுக்கு.

”கணவனும் மனைவியும் எடுத்துக்கொண்டால் இவனிடம் இல்லாத சில நல்ல குணங்கள் அவளிடமும் அவளிடமில்லாத சில அவனிடமும் என அமைந்தால் அந்த அளவில் அது Complementary தானே?"

"கண்டிப்பா."

"கூட்டுக் குடும்ப காலத்தில் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா என்று குடும்பம் என்ற அமைப்பு முழுக்க முழுக்க மொத்ததில் Complementary ஆக அமைந்திருந்ததால் குழந்தைகளுக்கு வாழ்வில் அதுவே அவர்களின் மாபெரும் இயங்கு முன்னேற்றத் தளமாக இருந்தது. இப்ப அதை நாமே ஒதுக்கிவைத்துவிட்டு அங்கும் இங்கும் அலைந்து திரிந்து அந்த Complementary- யின் ஒவ்வொரு அங்கமாக சேகரிக்க வெளியில் ஓடுகிறோம். அப்ப தாத்தா படம் வரையக் கற்றுக் கொடுப்பார். எப்படி? ஆர்வத்தோடு கற்றுக்கொள்கிற மாதிரி. பாட்டி பழமொழியில் தொடங்கி பக்திப் பாடல் படிக்க வெச்சு ப த நி ச வரை சொல்லிக் கொடுப்பார். சித்தப்பா இலக்கணம், மாமா பேட்மிண்டன்... எல்லாம் ஒரே இடத்தில் நடந்திரும். இப்ப நாம அவனை அழைச்சிட்டு நீச்சல் கிளாஸ், மியூசிக் கிளாஸ், டிராயிங் கிளாஸ் அப்படீன்னு பேட்டைவிட்டு பேட்டை அலையறோம்...’

”அட, ரொம்ப யோசிக்க வைக்கிறீங்களே?”

”அத்தனைக்கத்தனை நல்லது. அந்த ரெண்டு வார்த்தைகளும் மறக்காது இல்லையா?”

கேட்டுக் கொண்டிருந்த தாத்தா தனக்குள்.. ’ஆஹா யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க! இனி நல்லதுதான் நடக்கும்.’

><><


சட்டென்று....


திரையின் அட்டகாசமான கேரக்டர்கள் கதாசிரியரால் define செய்யப்பட்டு, டைரக்டரால் refine செய்யப்பட்டு, நடிகர்களின் நடிப்பால் fine செய்யப்பட்டு நமக்கு ரசிக்கக் கிடைக்கிறது. ஆனால் வெகுசில கேரக்டர்களை நடிகர்கள் தங்கள் rare performance கொண்டு வேறு லெவலுக்கு எடுத்துச் சென்று விடுகிறார்கள். எழுதியவர், இயக்கியவர், நடித்தவர் மூவரையும் தாண்டி அந்த கேரக்டர் தனியே நின்று ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்று விடுகிறது.
சட்டென்று நினைவுக்கு வருவது ‘மூன்றாம் பிறை’ விஜி.
ஶ்ரீதேவி… Aug.13. பிறந்தநாள்!

Thursday, August 13, 2026

தெளிவைஸர்!...


அது இல்லாமல் முடியாது என்று ஆகிவிட்டது நம்ம வாழ்க்கை. ஆனால் அந்த ‘டி.வி.’யை கண்டு பிடித்தவர், அதன் தந்தை என்று அழைக்கப்படுபவர், முதல் பேசும் சினிமா வெளிவருவதற்கு முந்தைய வருடமே அதைச் செய்து காட்டியவர்...
John Logie Baird. இன்று பிறந்த நாள்! (1888 - 1946)
லண்டன் Royal Institution -இல் 1926 ஜனவரியில் நடந்தது அந்த டெமோ. நகரும் பொருட்களை திரைக்கு நகர்த்தி காட்டினார் ஜான். விநாடிக்கு 5 வேகத்தில் படங்கள் வந்து விழுந்தன திரையில். அப்ப அதற்கு அவர் சொன்ன பெயர் டெலிவைஸர்!
அடுத்த வருடமே லண்டனிலிருந்து கிளாஸ்கோவிற்கு அசைவுகளை ஓசையுடன் டெலிபோன் ஒயர்களின் வழியே டெலிகாஸ்ட் செய்தார். அடுத்த வருடம் லண்டனிலிருந்து நியூயார்க்குக்கு. அதே வருடம் கலர் டெலிவிஷனையும்!
ஒளியை மின்சாரமாக மாற்றும் தன்மை selenium -க்கு உண்டு என்பதைப்பற்றி படித்ததுதான் அந்த ஸ்காட்லாண்ட் இளைஞனை டெலிவிஷனைப் பற்றி சிந்திக்க வைத்தது.
பாவம், ஃபண்ட்ஸ் கிடைக்கவில்லை. பத்திரிகை ஆபீஸில் சென்று தன் ஐடியாவை சொன்னால் பைத்தியம் மாதிரி பார்த்தார்கள். தன் முதல் டி.வி. மாடலை செய்தபோது தையல் ஊசியிலிருந்து சைக்கிள் லைட் வரை கையில் கிடைத்த பொருளை எல்லாம் உபயோகிக்க வேண்டியதாயிற்று.
சுழலும் டிஸ்குகள் அசைவுகளை ஸ்கேன் செய்து மின் சிக்னல்களாக கம்பிகளில் அனுப்ப, வேறோரிடத்தில் அவை திரையில் பதிக்கப்படுகின்றன. முதலில் திரையில் அசைந்த பிம்பம் ஒரு பொம்மையின் தலை. பார்த்ததும் அவர் துள்ளிக் குதித்தார்.
டி.வி.க்கான அந்த ஒரிஜினல் ஐடியா Nipkow உடையது. ஆனால் அதை மேம்படுத்தி தெளிவான பிம்பம் கொண்டுவந்தது இவரது டெலிவைஸர் தான். தெளிவைஸர்!
முதலில் ஐந்து வருடத்திற்கு அவருடைய டெக்னிக்கை உபயோகித்தது BBC. இரண்டு மடங்கு லைன்களுடன் இவருடன் போட்டியிட்டது மார்க்கோனி டிவி. இவருடையது மெக்கானிக்கல் என்றால் அவருடையது எலக்ட்ரானிக்.
டி.வி. உலகத்தின் எந்த சாத்தியதையையும் ஜான் விட்டு வைக்கவில்லை. HD TV, 3D TV.... ஏன், வீடியோவையும் தொட்டார். Phonovision என்று பெயர் வைத்தார்.

டி.வி. வரலாற்றில் இவருடையது மெகா சீரியல்!

Monday, August 10, 2026

எண்ணிச் சிந்திடுவோம்... (அன்புடன் ஒரு நிமிடம் -1)



அன்புடன் ஒரு நிமிடம் -1

எண்ணிச் சிந்திடுவோம்...

கே. பி. ஜனார்த்தனன்

“மணி எட்டரை ஆச்சு. இன்னும் நீங்க புறப்படலையா கல்யாணத்துக்கு? என்ன இப்படி உட்கார்ந்திருக்கீங்க? கிளம்புங்க சீக்கிரம்,” என்றாள் தலையை வாரிக் கொண்டு வந்த யமுனா. அவள் தொடர்ந்து சொன்னது: “ஒரு அவசரம் விசேஷம் என்றால் உங்களைப் புறப்பட வைக்கிறதே எனக்குப் பெரிய வேலையாப் போகுது!”
வினோத் தன் லேப்டாப்பை மூடிவிட்டு எழுந்தான். “எத்தனை மணிக்கு முகூர்த்தம்? மண்டபம் எது?”
“பத்தரை. ஸ்ரீநிவாஸ் மண்டபம்.”
“முகூர்த்தம் பத்தரைக்குத்தானே? இப்ப அரைமணியில் ரெடியாயிட்டேன்னா ஒரு மணி நேரத்துல அங்க போயிடலாமே?” என்றான். அவன் தொடர்ந்து சொன்னது: “நான் என்ன சும்மா தூங்கிட்டா இருக்கேன்? ரெண்டு வாரமாச்சு. ப்ராஜெக்ட் வேலை முடியலை. அதைத்தான் கொஞ்சம் எட்டிப் பார்த்தேன்.”
“சரி சரி, இட்லி ரெடியாயிருக்கு. எடுத்து சாப்பிட்டுக்குங்க. நான் டிரஸ் பண்ணிக்கிறேன்,” என்றாள் அவள். வேலை ரொம்ப பாக்கின்னா வீட்டிலிருந்து கொஞ்சம் பார்க்கலாமே என்று சொன்னது அவள்தான். ஆகவே அவளுக்கு உறுத்திற்று. நீ சொன்னதைத்தானே நான் செய்தேன் என்கிறானோ? அவள் தொடர்ந்து சொன்னது: “ஆமா, எங்க மாமா வீ டடு கல்யாணமாச்சே, அப்பத்தான் ப்ராஜெக்டைப் பார்க்கிறதுக்கு உட்காருவீங்க!”
“உடனே அப்படிப் போயிருமே நினைப்பு? அதெல்லாமில்லே,” என்று மறுத்தான். ஷேவிங்கை ஆரம்பித்தவன் தொடர்ந்து சொன்னது: “நீதான் சில சமயத்தில் அப்படி சிறுபிள்ளைத்தனமா நடந்துக்குவே, நானில்லை.”
இதற்குப் பிறகு இந்த உரையாடல் எப்படி போயிருக்கும் என்பதை ஊகித்து விடலாம்.
மேலே உள்ள உரையாடலில் எல்லா ‘தொடர்ந்து சொன்னது’களையும் கவனிக்கவும். அவற்றைச் சொல்லுமுன் ஒரு நிமிடம், ஒரே ஒரு நிமிடம் ‘இப்ப இப்படிச் சொல்லணுமா? சொல்லலாமா? சொன்னால் அது என்ன எதிர் விளைவை அல்லது பக்க விளைவை ஏற்படுத்தும் என்று யோசித்துப் பார்த்துவிட்டு அப்படிச் சொல்லவா வேண்டாமா என்று முடிவு எடுத்திருந்தால் அநேகமாக அந்த எல்லா ‘தொடர்ந்து சொன்னது’களையுமே நிச்சயமாக தவிர்த்திருப்போம் இல்லையா? அந்த இடங்களில் அவை அவசியப்படவும் இல்லை என்பதுதான் முக்கியமான விஷயம்.
தான் சொல்வது சரி என்று வாதாடுகையில் ஒருவரை ஏதும் குறை சொல்லும் முன், அப்படிச் செய்திருக்கணும் என்று அறிவுரை வழங்கும் முன், ஒரு நிமிடம் நாம் என்ன சொல்கிறோம் என்பதை யோசித்துவிட்டுப் பேசினால் உறவுகளும் நட்புகளும் எப்போதும் இனிக்குமே? எண்ணிச் சிந்திடுவோம் எண்ணங்களை…!
(‘அமுதம்’ ஏப். 2012 இதழில் வெளியானது)

><><><

Sunday, August 9, 2026

ஓவியரும் கூட....


‘உங்களை மிக அழகானவராக கற்பனை செய்து கொள்ள வேண்டியதில்லை, ஏனெனில் நீங்கள் மிக அழகானவர்.’
சொன்னவர் யார்?
மூமின்ஸ் என்ற காமிக்ஸ் ஸ்ட்ரிப்ஸ் மூலமாக பூமியில் பிரபலமான நபர் அவர். (Moomins)
பின்லாந்தின் முன்னணி பெண் எழுத்தாளர்களில் ஒருவர். புகழ்பெற்ற ஓவியரும் கூட.
குடும்பத்தில் அத்தனை பேரும் கலைஞர்களாக இருக்கும் போது அதில் வளரும் ஒருத்தி மிகச்சிறந்த படைப்பாளியாக மாறக் கேட்கணுமா?
குழந்தைகளுக்கு எழுதுவதிலும் பெரியவர்களுக்கு எழுதுவதிலும் வல்லவர்.
Tove Jansson. இன்று பிறந்தநாள்!
இன்னும் சொன்னவை சுவையானவை:
‘நீண்ட பிரயாணம் மேற்கொள்ள வேண்டும் நீங்கள், வீடு எத்தனை அற்புதமானது என்பதை கண்டுகொள்ள.’
‘ஒருவன் எல்லாவற்றையும் தானே கண்டுபிடித்தாக வேண்டும்; தானே அதிலிருந்து விடுபட வேண்டும்.’
‘யாரையேனும் அளவுக்கதிகமாக பிரமித்தால் சுதந்திரமாக இருக்கவே முடியாது.’
‘எல்லா விஷயங்களுமே மிகவும் நிச்சயமற்று இருக்கின்றன; அதுவேதான் என்னில் மீண்டும் நம்பிக்கை ஏற்படுத்துகிறது.’
‘பாலத்தில் படுத்துக்கொண்டு வெள்ளம் பாய்வதைக் கவனியுங்கள்; சிவப்பு பூட்ஸ்களை அணிந்துகொண்டு ஈர நிலத்தில் சிரமப்பட்டு ஓடுங்கள்; அல்லது மாடியில் உருண்டபடி கூரையில் மழை விழுவதை கேளுங்கள். தனக்குத்தானே அனுபவிப்பது ரொம்ப சுலபம்!'
‘உள்ளபடியே கடவுள் உதவுகிறார், ஆனால் நீ சொந்தமாக ஒரு முயற்சியாவது செய்த பிறகு தான்.’
‘மொத்தத்தில் இவ்வளவுதான் விஷயம்: ஒரு போதும் களைப்படையாதீர்கள், உற்சாகத்தை இழந்து விடாதீர்கள், வெறுமே இருந்துவிடாதீர்கள் - விலைமதிப்பற்ற உங்கள் ஆர்வத்தை இழந்து உங்களை சாக விட்டுவிடாதீர்கள். அவ்வளவுதான், விஷயம் ரொம்ப சிம்பிள்.’