Sunday, July 26, 2026

ரசி ரசி என்று...


‘இப்போது நீங்க அஞ்சு பேரும் உயிரோடு இருப்பதற்கான ஒரே காரணம் நீங்க யாரிடம் ஆட்டையை போட்டீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாது என்பதுதான்!’ என்கிறான் வில்லனிடமிருந்து வந்தவன், அந்த ஐந்து மினி சைஸ் திருடர்களிடம். உயிர் பிழைக்க அவர்களுக்கு ஒரு ஃபைனல் அஸைன்மெண்ட் கொடுக்கப்படுகிறது. கொடுத்தது யார் என்று தெரியும் போது..?
படம்: ‘The Usual Suspects’.. சப்த நாடியும் ஒடுங்கினாற்போல் விசாரணைக்காக அமர்ந்திருக்கும் கெவின் பாத்திரம்தான் படத்தின் உயிர் நாடி. அந்த தன் முதல் காட்சியிலிருந்து காரில் ஏறும் கடைசி காட்சி வரை அவர் நடிப்பு ரசி ரசி என்று கதறும்.
அப்படியே அள்ளிக்கொண்டு விட்டார் Best Supporting Actor ஆஸ்காரை! நாலாவது வருடம் Best Actor பரிசையும் ('American Beauty')
Kevin Spacey... இன்று பிறந்த நாள்!
இவர் குரல் தனி ஒலி. வித்தியாசமான, மெதுவாய்த் தவழ்ந்து வரும் குரல்.
Top 10 வில்லன்கள் பட்டியலில் இரண்டு இடத்தை இரண்டு படங்களுக்காக அள்ளிக்கொண்டு விட்டவர் இவர் ஒருவராகத்தான் இருக்கமுடியும்.
’Se7en’ படத்தில் சீரியல் கில்லர் ரோல் இவருக்கு. பாவத்துக்கு ஒருவராக ஏழு அப்'பாவி'களை கொலை செய்ய கிளம்பும் அவரின் மாடஸ் ஆப்பரேண்டியைக் கண்டுபிடித்து அவரைத் தூக்க முயலும் அதிகாரியாக Morgan Freeman! சபாஷ் சொல்லும் சரியான போட்டி!
சக்கைப்போடு போட்ட படம் ‘L.A.Confidential’. நட்சத்திரங்களின் வீக்நெஸை வைத்து நாலு காசு ஸைடில் பார்த்துக் கொண்டிருந்தவர், நல்ல பக்கம் சேர்ந்து உண்மைக்காக போராடும் போலீஸ் அதிகாரியாக மாறுவதை நவீனமாக சித்தரித்திருப்பார்.
திரையை விட மேடையே விருப்பம். என்ன சொல்றார்? ‘என்னதான் பிரமாதமாக நீங்கள் ஒரு படத்தில் நடித்தாலும் அதை விட நன்றாக அதில் நீங்கள் நடிக்க முடியாது. நாடகத்தில் அடுத்த செவ்வாய்க்கிழமை நீங்கள் இன்னும் பிரமாதமாக நடிக்க முடியும். அது தான் நாடகத்தின் த்ரில்!’
‘நாடக மேடை செய்து நசிந்து விட்டது என்கிறார்கள். ஆனால் மனிதர்கள் கதை கேட்க விரும்பும் வரை, மனிதர்கள் கதை சொல்ல விரும்பும் வரை நாடகம் உயிரோடுதான் இருக்கும்.’
நல்ல பாத்திரத்தை நாடிப் போவார். Woody Allen-க்கு Netflix சந்தா ஒன்றை அனுப்பினாராம் என் படங்களைப் பார்க்கலாமே என்றபடி. கண்டிப்பாக உங்களைப் பயன்படுத்திக் கொள்வேன் என்று அவர் பதிலளித்தார்.
Jack Lemmon தான் இவரது ரோல்மாடல். ‘எப்படி ஒரு நல்ல நடிகராகவும் நல்ல மனிதராகவும் இருக்க முடியுமென்று அவர் தான் கற்றுக் கொடுத்தார் எனக்கு.’
Other Quotes? ‘வெற்றி என்பது செத்துப் போவது மாதிரி. மேலும் மேலும் வெற்றி அடையும்போது இன்னும் உயரத்தில் உங்கள் வீடுகள் அமையும். இன்னும் உயரமாகும் வீட்டுச் சுவர்கள்.’
‘மிகப்பெரும் வெற்றி அடைந்ததும் அந்த கேள்வி உங்கள் முன் வந்து நிற்கும்: இதை வைத்துக் கொண்டு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? கார், வீடு, வசதிகள் என்று வாங்கிக்கொண்டு ஒதுங்கி ஓய்வு எடுக்கப் போகிறீர்களா அல்லது அந்த வசதிகளை வைத்துக் கொண்டு ஏதாவது செய்து அன்பைப் பரப்பப் போகிறீர்களா?’

Friday, July 24, 2026

அந்த இடையிசை!


இழுத்து நிறுத்தும் அந்த இடையிசை!
விஸ்தாரமாக மெல்லிசையை அதன் விவரிக்க முடியாத எல்லைகளுக்கு விஸ்தரித்த விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் அந்தப் பாடல்!
“தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா? காதல்
கண்கள் உறங்கிடுமா?"
தென்றலில் இலை தவழ்வது போல இழைந்து செல்லும் அந்தப் பல்லவி முடிந்ததும் துவங்கும் பாருங்க (கேளுங்க) ஒரு இடையிசை .. (progression)
வயலின்கள் ‘தனனனா..’ என்று அலைகளாக மேலெழும்ப அதற்கு மேல் ஃப்ளூட் ‘தானனானனா..’ என்று அடுத்த கட்டத்துக்கு அந்த இசைச் சரத்தை எடுத்துச் செல்ல அதை நாம் ரசித்துக் கொண்டிருக்கும் போதுதான் ஒரு ஆனந்த அதிர்ச்சி! பேஸ் கிதார் மேலோங்கி ‘தும்த தும் துதும்…’ என்று அதை ஆக்கிரமித்து சரணத்தில் கொண்டு போய் முடிக்கையில்… கையில் இல்லை நம் மனம்!
அப்பா! இசைச் சாட்டையால் சொடுக்கிவிட்டார்கள் நம் உள்ளத்தை விஸ்-ராம்!
ரீப்ளே பண்ணாமல் முதல் சரணத்துக்குள் போக முடியவில்லை. ஒரு வழியாக போய் வந்தால் அடுத்த இடையிசையில் ஜாக்பாட் நம்பர் 2 வுடன் காத்திருக்கிறார்கள் மெல்லிசையர்!
இந்த முறை வயலின் தொடங்கியதை ஃப்ளூட் எடுத்துச் செல்லும்போது ஆனந்த அதிர்ச்சியாக ‘ஆ அ ஆ அ ஆ…’ என்று சுசீலாவின் தேன்குரல் வயலினை ரீப்ளேஸ் செய்ய, பேஸ் கிதார் அதற்கும் சளைக்காமல் தாளம் போட இனிதே இரண்டாவது சரணத்தை ஆரம்பிக்கிறார் ஏ.எம்.ராஜா.
கொடுத்தவர்கள் மன்னர்கள்! கவனித்து ரசித்தால் நாம் வின்னர்கள்!
மருதகாசியின் மதுர வரிகள் இடம் பெற்றது ‘பெற்ற மகனை விற்ற அன்னை’ படத்தில். (எஸ் எஸ் ஆர், விஜயகுமாரி)

Thursday, July 23, 2026

கடைசிக் குடம்


கடைசிக் குடம்
கே.பி.ஜனார்த்தனன்
('இலக்கியப்பீடம்' சிறுகதைப் போட்டி 2005 - பரிசு பெற்ற கதை)
கனகசுந்தரம் தவித்தார். கண்ணுக்கெட்டிய தொலைவு வரை தண்ணீருக்கான எந்த சாத்தியக் கூறும் தென்படவில்லை. இப்படியோர் அத்துவானக் காட்டில் இப்படியொரு நெருக்கடியான வேளையில் பரிதவித்துக் கொண்டு நிற்க வேண்டி வரும் என்று தன் வாழ்நாளில் ஒருபோதும் நினைத்ததில்லை அவர். காலடி நிலத்தைப் போலவே அந்த உண்மை சுட்டது.
அவருக்கு இப்போது தண்ணீர் வேண்டும். உடனடியாக வேண்டும். ஓர் அரைக் குடமாவது வேண்டும்.
அங்கே இந்நேரம் மகளுக்கு என்ன ஆச்சோ என்று நினைத்தபோது அவர் மனம் பதை பதைத்தது. அஜிதா உயிருக்கு ஆபத்து ஏதும் நேர்ந்து விடக்கூடாதே என்று துடி துடித்தார். “கடவுளே, முருகா, உன் அறுபடை வீட்டுக்கு வந்து அன்னதானம் செய்யறேன், எப்படியாவது என் மகளைக் காப்பாத்து!”
அந்த நேரத்தில் அவர் புறப்பட்டு இங்கே வந்திருக்கவே கூடாது. மகளுக்குத் தலைப் பிரசவ நேரத்தில் யாராவது புது ஃபாக்டரிக்கு ஸைட் பார்க்கப் போவார்களா? புத்திக்குத் தெரிவது ஆசைப்பட்ட மனசுக்குத் தெரியாமல் போச்சே!
எண்பது கிலோமீட்டர் தானே, விருட்டுன்னு ஒரு டிரைவ் போய்விட்டு வந்து விடலாம் என்று காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். டிரைவரைக் கூட அழைத்துக் கொண்டு வரவில்லை, அங்கே வீட்டில் ஆட்கள் தேவைப்படுமே என்று.
இடத்தைப் பார்த்துப் பேசி முடித்து அட்வான்ஸ் நீட்டும்போது செல் ஒலித்தது.
“அஜிதாவுக்கு வலி எடுத்துட்டுதுங்க. நாங்க உடனே ஆஸ்பத்திரிக்குப் போறோம்.”
“வலிதானா? கன்ஃபர்ம் பண்ணிட்டியா?”
“ஐயோ அதெல்லாம் ஆச்சுங்க. நீங்க உடனே….”
“ஓகே. அப்ப அட்மிட் பண்ணிடு. நான் இதோ புறப்பட்டு வந்துடறேன்.”
“வந்துடுங்க. ஏற்கனவே அவளுக்கு பிராப்ளம் இருக்கு. டாக்டர் சொல்லியிருக்காரு. ஞாபகம் இருக்கில்ல?”
இருக்கிறது. அவர் அதற்குள் காரில் ஏறி விட்டிருந்தார். ”அப்ப பார்க்கலாம்யா! அட்வான்ஸ் பத்திரத்தை மானேஜர் கொண்டு வருவாரு.”
வண்டியைக் கிளப்பி அந்தப் பழைய தார் ரோட்டில் ஏதோ ஒரு சிற்றூரைத் தாண்டிக் கொண்டிருந்தபோது செல் மறுபடி கூப்பிட்டது. “ஹலோ!”
பார்வதியின் அழுகைதான் முந்திக்கொண்டு கேட்டது. “டாக்டர் என்னென்னமோ சொல்றாருங்க. ஏதோ சிக்கலாம். நீங்க எங்கே இருக்கீங்க?”
“வந்துட்டுத்தான் இருக்கேன். என்ன சிக்கல்? செல்லை டாக்டர்கிட்டே கொடு.”
“அவரு தியேட்டருக்குள்ளே இருக்காருங்க. பிளட்டுக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். ஏ பாசிடிவ்.”
“என் குரூப் கூட… சரி, பெருமாள்கிட்டே சொல்லு. உடனே…” என்று சொல்வதற்குள் செல் சிக்னலை முற்றிலுமாக இழந்து விட்டது. “சே!”
எதிரில் தென்பட்ட மாட்டு வண்டியைக் கைநீட்டி நிறுத்தினார். “மெயின் ரோட்டுக்கு இன்னும் எத்தனை தொலைவு இருக்குப்பா? அர்ஜெண்டா போகணும்.”
“அது இருக்குங்க ஒரு இருபது கிலோமீட்டரு. நீங்க இப்படி இந்த மண் ரோட்டிலே புகுந்து ஸ்ட்ரெயிட்டா போனீங்கன்னா அதிலே பாதி தொலைவு கூட இருக்காதுங்க. மருங்கூர்கிட்டே ரோட்டிலே ஏறிடலாம்.”
“இந்த ரோட்டிலேயா? ரோடு ஒரு மாதிரி இருக்கே?”
“அதெல்லாம் சரிதாங்க. ஏத்தம் இறக்கமா இருக்குமே தவிர குழப்பம் ஒண்ணுமில்லீங்க. அட, துரிதமா போகணும்கறீங்க. அப்புறம் யோசிச்சிட்டிருந்தா எப்படிங்க?”
ரோடு சமாளிக்கும்படியாகத்தான் இருந்தது. ஆளரவம் எதுவும் தென்படவில்லை. வெகு தொலைவில் ஏதோ ஒன்றிரரண்டு குடிசைகள். மேலே பறக்கிற பருந்துகளும் காக்கைகளும். வெயில் தகித்தது.
பாதி தொலைவு வந்திருப்பார். கார் சட்டென நின்று விட்டது.
இறங்கி பேனட்டை திறந்து ஆராய்ந்தார். புகை முகத்தைச் சூழ்ந்தது. ரேடியேட்டர் தண்ணீர் கேட்டது.
தண்ணீர்! இந்த அத்துவானக் காட்டில் தண்ணீருக்கு எங்கே போவது? யாரிடமாவது கேட்கலாம் என்றால் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை ஒருவரும் தென்படவில்லை.
அங்கே என்ன ஆச்சோ? பார்வதியால் ஓரளவுக்கு மேல் சமாளிக்க முடியாது. டாக்டர் என்ன க்ரிடிகல் சிச்சுவேஷனைச் சொல்லப் போகிறாரோ? அதிலே அவள் துவண்டு, தடுமாறி, எப்படி என்ன முடிவு எடுத்து…
அவர் மட்டும் அங்கே இருந்தால் என்ன பிரச்சனை என்றாலும் சமாளித்திருப்பார். ஃபிளைட்டில் கூட ஸ்பெஷலிஸ்டை வரவழைத்திருப்பார்.
இதுவரை வாழ்க்கையில் அவர் சமாளித்திராத பிரச்னையே இல்லை. முந்து, முந்து, முந்திக் கொண்டு முன்னேறு. இதுவே அவரது வாழ்க்கையின் தாரக மந்திரம். அவரது சுய முன்னேற்றப் பாய்ச்சல்கள். அவற்றின் வேகம். மற்றவர்களைப் பின்னுக்குத் தள்ளி விட்டு முன்னேறிப் போய்க் கொண்டே இருப்பார். எந்த சந்தர்ப்பத்திலும் தோல்வியுறாதவர் இப்போது வசமாக மாட்டிக் கொண்டு விட்டார்.
சுற்றிலும் மண்டியிருந்த முள் மரங்களைப் பரிதாபமாகப் பார்த்தார். இந்தப் பக்கம் இறங்கிப் பார்க்கலாமா? தண்ணீர் கிடைக்குமா? எந்தப் பக்கம் இறங்கித் தேடினாலும் தண்ணீர் கிடைக்கிற மாதிரி தெரியவில்லை. வந்த வழியே திரும்பி நடந்தால் மட்டும் - பத்து கிலோமீட்டருக்கு மேலேயே இருக்குமே? ஏதாவது சான்ஸ் இருக்கலாம். அது நடக்கக்கூடிய காரியமா? சே, இப்படி வந்து சிக்கிக் கொண்டோமே?
மனதில் குமைந்தபடி வந்த வழி திரும்பிப் பார்த்தபோதுதான் அந்தச் சிறுமியைப் பார்த்தார்.
தலையில் தண்ணீர்க் குடம்!
அவர் நாக்கில் எச்சில் ஊறிற்று. ‘கிடைச்சிட்டது!’
அவளைப் பார்த்தார். ஒட்டி உலர்ந்த தேகம். சாயம் போயிருந்த சட்டை. காய்ந்த சேறு அப்பியிருந்தது பாவாடையில். எண்ணெய் காணாத தலை தரிசாக வறண்டிருந்தது.
நிறுத்தினார். “இந்தா பிள்ளே! எங்கேயிருந்து தண்ணி கொண்டு வர்றே?”
“அப்பாலே புதுமலையிலே ஒரு குட்டை இருக்கு. அதிலேயிருந்துதான்.”
“ரொம்பத் தொலைவோ?”
“ஆமா.. ஏழு கிலோ மீட்டர். எங்க வீட்டிலேயிருந்து.”
“உங்க வீடு எங்கேயிருக்கு?”
“அது போகணுங்க.. இன்னும் மூணு கிலோமீட்டர்.”
“நல்ல சமயத்தில் தெய்வம் மாதிரி வந்தே.” விஷயத்தைச் சொன்னார். “அந்தத் தண்ணியைக் கொஞ்சம் கொடு, உனக்கு நான் பணம் தர்றேன்.” கையை நீட்டினார், நூறு ரூபாய் நோட்டுடன்.
அவள் யோசிக்கவில்லை. தீர்மானமாகச் சொன்னாள். “முடியாதுங்க.”
“என்னது… தரமாட்டியா?”
“ஆமாங்க. தரமாட்டேன்.”
“ஏய், உனக்கு எவ்வளவு வேணா பணம் தர்றேன். என் மகளுக்கு அங்கே பிரசவம் நடக்குது. சிக்கல் அதிலே. நான் உடனே போகணும். என் உயிரே அங்கே தான் இருக்கு. இந்தா…” நோட்டுக் கற்றைகளை எடுத்து நீட்டினார்.
“அதான் சொன்னேன்ல.. முடியாது! வழி விடுங்க.” அவள் தாண்டிச் செல்வதிலேயே குறியாயிருந்தாள்.
“ஏம்மா தர மாட்டேங்கிறே?”
“எப்படிங்க தர முடியும்? எங்களுக்குக் குடிக்கக் கூட தண்ணியில்லே! எங்கப்பா, அம்மா, அண்ணன், அக்கா நாலு பேரும் வேலைக்கு போயிருக்கிறாங்க. ஊரை சுத்தி ரொம்ப தொலைவுக்கு தண்ணி கிடையாது. கிழக்கே இப்படி பத்து கிலோமீட்டர் நடந்து போய் புதுமலையிலேயிருந்துதான் தண்ணி கொண்டு வரணும். அதனாலதான் நான் வேலைக்குப் போகலை. வேலை முடிஞ்சு அவங்க பசியோட வருவாங்க. அதுக்குள்ள நான் ரெண்டு குடம் தண்ணி எடுத்து சோறாக்கி வெக்கணும். ஒவ்வொரு குடமாத்தான் எடுத்திட்டு வரமுடியும். ஏன்னா… எனக்கு எலும்பு நோய் இருக்கு. எப்படி இந்தத் தண்ணியைத் தருவேன்? எங்க உசிரும் இந்த தண்ணியிலேதான் இருக்கு!” முகத்தில் உறுதி ஓடியது.
பத்து கிலோமீட்டர் இந்தக் கல்லிலும் முள்ளிலும் நடந்து… அவர் காலுக்குள் ஒரு மாதிரி கூசியது. கலங்கி சாயா கலரில் தழும்பிய தண்ணீரைப் பார்த்தார்.
‘இதையா குடிக்கிறாங்க? ஏன் டி.பி. எல்லாம் வராது?’
“கேக்கிறதுக்கே ரொம்பச் சங்கடமா இருக்கும்மா. தண்ணிக்கு இங்கே இவ்வளவு கஷ்டமா?” தேனொழுகப் பேசினார் “இத பாரும்மா, நீ கஷ்டப்பட்டு எடுத்துட்டு வந்த தண்ணியைக் கொடுன்னு கேக்க உண்மையிலேயே நான் விரும்பலை. ஆனா, நான் இருக்கிற நிலைமை அப்படி. கேக்கிற நிலைமையிலே கடவுள் என்னைக் கொண்டு வந்து விட்டுட்டார். பாரு.. இப்ப இந்தத் தண்ணியை இதிலே விட்டால் வண்டி கிளம்பிடும். நீயும் என்னோடவே வா. மெயின் ரோடு போனதும் முதல் ஊர்ல தண்ணியை வாங்கி உன்னை ஒரு டாக்ஸி பிடிச்சு அனுப்பி வெச்சிடறேன். சரியா?”
“முடியாது,” என்றாள் அவள் அழுத்தமாக.
“அப்புறமும் ஏம்மா முடியாதுங்கறே? உனக்கு வேண்டியது தண்ணி தானே? எனக்கும் உனக்கும் கிடைக்கிற மாதிரி ஏற்பாடு பண்ணிடறேன்ன பிறகும் மறுக்கிறியே… ஏன்?”
“ஏனா? ஏன்யா நான் இதைத் தரணும்? உங்களை மாதிரி ஆளுங்களுக்குத் தண்ணி கொடுக்க மாட்டேன். நாங்க இன்னிக்கு தண்ணிக்கு இந்தப் பாடு படறதுக்குக் காரணம் நீங்கதான்!”
“நாங்களா? என்ன பிள்ளே உளர்றே?”
“உளரலே. எங்கம்மா சொல்லியிருக்கா. எல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கா.”
“என்ன சொன்னா?”
“உங்கள மாதிரி ஆளுங்களோட சுயநலத்தாலதான் இன்னிக்கு நாட்டிலே தண்ணிப் பஞ்சம். காடுகளை எல்லாம் அழிச்சிட்டீங்க. அப்புறம் எப்படி மழை பெய்யும்? விவசாயத்திலே வர்ற வருமானத்திலே படிப்பீங்க. அப்புறம் கிராமத்தைக் காலி பண்ணிட்டு டவுனுக்கு போயிடுவீங்க. டவுனிலிருக்கிற மரம், செடியை எல்லாம் வெட்டித் தள்ளுவீங்க. டவுனைப் பெரிசாக்கிப் பெருசாக்கி பக்கத்து கிராமத்தை எல்லாம் விழுங்கி ஏப்பம் விட்டுடுவீங்க. சுத்தியிருக்கிற வயலையெல்லாம் அழிச்சு வீடு, பாக்டரின்னு கட்டிடுவீங்க. இப்படி உலகத்தை சிமெண்டு கட்டடங்களா மாத்திட்டே போனா அப்புறம் மழை எங்கே பெய்யும்? தண்ணி எப்படிக் கிடைக்கும்?
“எங்கம்மா சொல்லுவா.. இயற்கையிலே எல்லாத்திலேயும் ஒரு சுழற்சி இருக்குதாம். பெரியவங்க சொல்லியிருக்கிறாங்க. கிராமத்திலே என்ன பண்ணறோம்? சாப்பாட்டிலேருந்து நமக்கு சக்தி வருது. அந்த சக்தியை உழைப்பாக்கி வயல்லே வேலை செய்றோம். அந்த உழைப்பிலே பயிரு வளர்ந்து மறுபடி நெல்லு விளைஞ்சு சாப்பாடு கிடைக்குது. பூமியிலிருந்து எடுத்ததை பூமிக்கே திரும்பக் கொடுத்திடறோம்.
“கடல்லேயிருந்து தண்ணியை எடுக்குது சூரியன். மலையும் காடும் அதை மழையாக்கித் தருது. பூமியிலே அது ஆறா ஓடி மறுபடியும் கடலுக்கே வருது. அது மாதிரி! ஆனா உங்க டவுன் ஆளுங்க இப்ப என்ன பண்றீங்க? பூமியிலேயிருந்து என்னென்னமோ எடுக்கறீங்க… ஆனா பூமிக்கு என்ன திருப்பித் தர்றீங்க? அல்லது தானாக பூமிக்குத் திரும்பக்கூடிய எதையாவது தடுக்காமல விட்டுருக்கீங்களா?
“உலகத்திலே இயல்பா இருக்கிற சுழற்சியை கலைக்கிறீங்க. அதனால கஷ்டப்படுறது யாரு? இப்ப முதல்ல நாங்க. எங்களை மாதிரி அப்பாவிங்க. அப்புறம் கடைசியிலே நீங்க. ஆமா, ஒரு நாள் நீங்களும் அதனால பாதிக்கப்படுவீங்க. பாதிக்கப்படணும். பட்டே தீருவீங்க. ஆமா… அப்படிப் பாதிக்கப்பட்டுத்தான் இப்ப இங்கே நீங்க நிக்கறீங்க!”
கனகசுந்தரம் ஸ்தம்பித்து நின்றார். அவளுடைய ஒவ்வொரு வார்த்தையும் சாட்டையடியாக விழுந்தன. காக்கையொன்று வேகமாகச் சிறகடித்து அவர்களுக்குக் குறுக்கே பறந்து சென்றது.
மகளின் பிரசவச் சிக்கல், போராட்டம் என்று அவர் இருந்த நிலைமையை முற்றிலுமாக மறந்து போனார். நேரம் நின்று போயிருந்தது.
உலகத்தின் கடைசிக் குடம் தண்ணீரை வைத்துக்கொண்டு உலகின் கடைசி இரண்டு மனிதர்கள் வார்த்தைகளால் போராடிக் கொண்டிருந்த மாதிரி பட்டது.
தன் பங்கில் நியாயம் சற்றுமின்றி போரில் தோற்றுப் போனதை உணர்ந்தார்.
“உண்மைதாம்மா! சுயநலம்கிற மந்திரத்தை உச்சரிச்சுக்கிட்டே வாழ்க்கை முழுதும் வாழ்ந்திடறோம். அதனுடைய பாதிப்பு சுத்திச் சுத்தி கடைசியிலே எங்களையும் தாக்கும்கிறது எங்களுக்குப் புரியலே. நீ சொல்றது சரிதாம்மா. இன்னிக்கு நீங்க. நாளைக்கு நாங்க. நாங்களும் ஒரு நாள் கஷ்டத்தை சந்திச்சே ஆகணும். எது எல்லாரையும் கஷ்டத்தில் கொண்டு விடுமோ அதை நோக்கி நாங்க கடுமையான வேதத்திலே போயிட்டிருக்கோம். நல்லாவே தெரியுது எனக்கு. இனிமே யோசிப்பேன். என்னை யோசிக்க வச்சிட்டே. புறப்படும்மா, வீட்டிலே எல்லாரும் பசியோட வருவாங்கன்னு சொன்னியே…”
அவள் புறப்படவில்லை. மெல்ல அந்த பிளாஸ்டிக் குடத்தை இறக்கி கார் மீது வைத்தாள். “எடுத்துக்குங்க,” என்றாள்.
“இல்லே.. வேணாம்மா.”
“இல்லிங்க, உங்க மக…”
“என்ன நடக்கிறதோ நடக்கட்டும் அங்கே. இயற்கையோட தீர்ப்பு அதுன்னு ஏத்துக்கிறேன்.”
“இல்லைங்க, ரொம்ப நாளா சுமந்த கோபம். கொட்டிட்டேன் வார்த்தையை. பெரிசா எடுத்துக்காதீங்க. எதிலே ஊத்தணுங்க?” என்று அவள் முற்பட, அவர் தயங்கிய அந்த வினாடி…
சர்ரென்று பறந்து வந்த இரு காக்கைகள் அந்தக் குடத்தின் மீது மோதின.
குடம் கவிழ்ந்து பள்ளத்தில் உருண்டோட அதிலிருந்து சாடிய தண்ணீர் - அந்த இடத்தில் அது வெறும் தண்ணீரா? - தரையில் புரண்டோடியது. காக்கைகள் அதே வேகத்தில் இறங்கிப் பாய்ந்து, உறிஞ்சும் செந்தரையுடன் போட்டியிட்டு அதைப் பருகிக் கொண்டு பறந்தன.
அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர் சிறுமியும் கனகசுந்தரமும்.
“இந்த தண்ணீர் மீது அந்த பறவைகளுக்குத்தான் என்னை விட உரிமை போல,” என்றார் விதியை உணர்ந்தவர் மாதிரி.
சிறுமி சாலையின் ஓரப்பள்ளத்தில் மெல்ல இறங்கிச் சென்று அந்த குடத்தை எடுத்துக் கொண்டாள்.
அவர் பக்கெட்டை எடுத்துக் கொண்டார்.
அவள் வந்த வழியே நடந்தார்கள், மௌனமாக.
><><><

Thursday, July 16, 2026

நிறைய 'முதல்'கள்...


M.G.M. பாரமௌண்ட் , யுனிவர்சலுக்கு இணையாக தமிழ்நாட்டில் ஒரு ஸ்டூடியோ கொடிகட்டிப் பறந்தது. சென்னையில் கூட அல்ல. சேலத்தில். 130க்கு மேலான படங்கள் தயாரான அந்த மாடர்ன் தியேட்டர்ஸை நிறுவியவர்..
T. R. சுந்தரம்.. இன்று பிறந்த நாள்.



லீட்ஸ் யூனிவர்சிடி லண்டனில் டெக்ஸ்டைல் எஞ்சினீயரிங் படித்துவிட்டு வந்தவர் தமிழ் சினிமா இண்டஸ்ட்ரியை லீட் செய்தவர்களில் ஒருவரானார். பேசும் படம் ஆரம்பித்த காலம் அது. சினிமா ஒரு பிஸினஸ் ஆக களம் இறங்கியிருந்தது. நண்பருடன் சேர்ந்து படம் தயாரிக்க ஆரம்பித்தவர் அடுத்து தொடங்கியதுதான் மாடர்ன் தியேட்டர்ஸ்.

நிறைய 'முதல்'கள். தமிழின் முதல் கலர் படம், ('அலிபாபாவும் 40 திருடர்களும்') மலையாளத்தின் முதல் பேசும் படம், ('பாலன்'), தென்னிந்தியாவின் முதல் ஆங்கிலப் படம் ('ஜங்கிள்' - இதில் நம்பியார் நடித்தாராக்கும்!) தமிழின் முதல் இரட்டை வேடப் படம் ('உத்தம புத்திரன்' - P. U. சின்னப்பா)
தயாரான படங்களில் நிறைய பிரபலம்! 'சர்வாதிகாரி' ‘திகம்பர சாமியார்', 'மந்திரி குமாரி' ‘திரும்பிப்பார்', ‘பாசவலை’, 'இல்லற ஜோதி', ‘வல்லவனுக்கு வல்லவன்' ‘இரு வல்லவர்கள்'...
பேரைச் சொன்னாலே நினைவு வருவது அவரது ஒழுங்கும் நேர்த்தியும் தான்.ஒவ்வொரு நிமிடத்தையும் சரி, ஃப்ரேமையும் சரி, திட்டமிட்டு உபயோகித்த இவர் இயக்கிய படங்களே 50 க்கு மேல். நடித்த படம்கூட உண்டு: 'பர்மா ராணி'. உதவி டைரக்டராக இருந்தவர்களில் முக்கியமானவர்கள் K. S. சேதுமாதவனும், முக்தா சீனிவாசனும்.

Wednesday, July 15, 2026

அக்காவின் ஆவி… (சிறுகதை)


அக்காவின் ஆவி… (சிறுகதை)
கே.பி.ஜனார்த்தனன்
('ஆரண்யநிவாஸ்' தை 2024 இதழில்)
"அதோ அங்கே பாருங்க! என்னையே முறைத்துக் கொண்டு நிற்கிறா பாருங்க அவ!"
வசந்தியின் தூக்கிய கரத்துக்கு நேரே நிழலாடியது.
நான் வேகமாக அருகில் ஓடிச் சென்று பார்த்தேன். இடதுபுறமிருந்து வந்த தெருவிளக்கு வெளிச்சத்தில், இடையில் கட்டியிருந்த கொடிக் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்த துணி அசைந்தபோது அதன் வடிவமற்ற நிழல் கோரமாக ஆடியது.
சிரித்தேன்.
"சிரிக்காதீங்க, உங்களை பார்த்ததும் ஓடிட்டா!"
நான் திரும்பி அவளை அணைத்தபடி கூடத்துக்குள் நுழைய முயன்றேன். நகர மறுத்தாள்.
அந்தக் குளிர் பூசிய இரவிலும் அவள் முகம் வேர்த்திருந்தது. கண்கள் கொட்ட கொட்ட விழித்துக்கொண்டு... இனி நிச்சயம் இவளும், இவளால் நானும் தூங்கப் போவதில்லை.
சுருள் சுருளாக அலை பாய்ந்திருந்த அவள் தலைமுடியைக் கோதியபடியே இருட்டை வெறித்தேன். வசந்தி, நீ இவ்வளவு பயந்தவளா?
நான் எதிர்பார்க்கவே இல்லை. அவள் அக்காவின் கணவன் என்ற முறையில் அவளுடன் பழகியிருந்த முதல் இரண்டு வருட காலத்தில் அவள் எனக்கு ஒரு சூட்டிகையாகத்தான், பேரழகியாகத்தான், குறும்புக்காரியாகத்தான் தெரிந்திருந்தாள்.
ராஜியைத் திருமணம் செய்தபின், இரண்டு வருடம் அவளுடன் இந்த பூனாவில் வாழ்ந்தபின் ஒரு நாள் நான் மட்டும் தனியனாக ஊருக்குத் திரும்பிச் சென்று அவள் பெற்றோரிடம் நின்றபோது எனக்கு பேச நா எழவே இல்லை. அவர்களோ அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை. அப்போதுதான் கிடைத்த என் மெசேஜை வைத்துக்கொண்டு அழுது கொண்டிருந்தார்கள். ராஜியின் அப்பா மட்டும் முன்னால் வந்தார். "மாப்பிள்ளை, அவள் பாடி கிடைக்கவே இல்லையா?"
நான் பரிதாபமாக விழித்தேன். "எங்களால் ஆன மட்டும் பார்த்தோம் மாமா, ராஜி ஆற்றோடு அடித்துக் கொண்டு போனவள் போனவள் தான்."
என்னுடைய கதறலைக் கேட்டு ஓடி வந்தவர்களும் செய்வதறியாது நின்றார்கள்
"ஐயோ, மகளே!" என்று வாய்விட்டு அழுதார். தொடர்ந்து எழுந்த அவலக் குரல்களும் விக்கல்களும்...
ஆனால் எல்லாம் இரண்டு வாரம் தான். அதற்குள் எல்லாரும் ஓரளவு தேறி எனக்கு ஆறுதல் சொல்லத் தொடங்கும் அளவு பக்குவம் பெற்று விட்டார்கள்.
அவர்களுடைய திருப்திக்காக ஒரு மாதம் இருந்து விட்டு திரும்பினேன். மறுபடியும் ஒற்றையாக. ஆனால் அவர்கள் என்னை விட்டால் தானே?
என்னைத் தொந்தரவு செய்ய தொடங்கினர், வசந்தியை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி. அவளுக்கு பூரண சம்மதம் என்று தெரிந்தபின் என்னை இசைய வைப்பது இன்னும் எளிதாகிவிட்டது.
முருகன் சன்னதியில் திருமணம் முடிந்து இவளை இங்கே அழைத்துக்கொண்டு வந்து ஒரு மாதம் ஆகவில்லை.
நௌ ஷி இஸ் ஸீயிங் திங்க்ஸ்!
<> <> <>
மறுநாள் மாலை வசந்தியிடமிருந்து ஒரு அவசர போன் வந்தது கம்பெனிக்கு. பறந்தால், கட்டிலில் படுத்து, கைக்குள் முகம் புதைத்தபடி அழுதுகொண்டே இருந்தாள். சமாதானப்படுத்தி விஷயத்தை தெரிந்து கொள்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.
காலையில் நான் போனதுமே ராஜி வந்தாளாம். "பாருங்க, அதோ அந்த துணி துவைக்கிற கல்லில்தான் கால் மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். வசந்தி, உன்னிடம் ஒரு ரகசியம் சொல்லணும், அவர்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இரு, இல்லேன்னா எனக்கு நேர்ந்த கதிதான் உனக்கும்னு எச்சரிக்கை பண்ணினா."
அதிர்ச்சியில் ஓரடி பின் வாங்கினேன். அடிப்பாவி, என்னைக் கொலைகாரன் என்றா சந்தேகப்படுகிறாய்?
ஒரு நிமிடம் தான். என் கோபம் மறைந்தது. அப்படி எல்லாம் எளிதில் சந்தேகம் தோன்றக் கூடியவளாக இருந்தால் என் கையால் ஒரு தாலியைக் கட்டிக் கொண்டு என்னோடு இந்த ரிமோட் பிளேஸுக்கு வருவாளா?
"ஏன் அவள் அப்படி சொல்லணும் சந்தீப்?" என்னையே பார்த்தபடி இன்னசெண்டாகக் கேட்டாள் வசந்தி.
அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ஒரு வினாடி விழித்தேன். "இப்ப நான் சொல்றதைக் கேட்டு ஆச்சரியப்படாதே வசந்தி. உன் மனசில ஒரு மூலையில் நான் உங்கக்காவைக் கொலை செய்து விட்டேன்கிற சந்தேகம் இருக்கு. அதான் உனக்கு இப்படி எல்லாம் பிரமைகள் ஏற்படுது."
"சே!" என் வாயைப் பொத்தினாள், "கண்டபடி பேசாதீங்க. அந்த மாதிரி எல்லாம் துளிகூட கிடையாது என் மனசில். ஆனா நான் கண்டது பிரமை இல்லை. அது எங்க ராஜியின் ஆவியேதான்."
தலையில் அடித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை எனக்கு. எப்படி? எப்படி இவளுக்கு நான் கொலை செய்யவில்லை என்பதை, அந்த உண்மையை, நிரூபிப்பது?
<> <> <>
"இன்னிக்கும் அவள் வந்திருந்தாள். சொன்னாள். என் மேலே எப்பவும் உங்களுக்கு ஒரு கண்ணாம்."
என் கோபம் எல்லை கடந்து விட்டது. "என்ன உளர்றே? அப்படின்னா என்னைக் கொலைகாரான்னு சொல்றியா?"
அவள் அடங்கி போனாள். என்னை கட்டிப்பிடித்துக் கொண்டாள். " எனக்கு... எனக்கு பயமா இருக்கு."
"ராஜியைக் கண்டா, என்னைக் கண்டா?"
"ரெண்டு பேரையும்," என்றாள். சிரித்தேன். மறுபடியும் எனக்குள் அந்த நம்பிக்கை ஏற்பட்டது. இவளது பயத்தைப் போக்கி விடலாம் என்ற நம்பிக்கை.
நம்பிக்கைக்கு ஆதாரமான அந்த சம்பவம் நினைவுக்கு வந்ததால்! முன்னால் நடந்தது. வசந்தி ஒன்றும் பயந்தாங்கொள்ளி அல்ல.
ராஜியின் கிராமத்தில் திருட்டு பயமுண்டு. நான் அங்கிருந்த ஒருநாள் இரவு எங்கள் வீட்டுக்குள்ளேயே ஒருவன் புகுந்து விட்டான். ராஜி அப்பாவின் அறையில் அவன் ஏதோ உருட்டிக் கொண்டிருக்க, விழித்துக் கொண்டு விட்ட நாங்கள் நடுங்க ஆரம்பித்தோம். "மெள்ள வெளியில போய் யாரையாவது கூட்டி வரட்டுமா?" என்று நான் ராஜியிடம் கிசுகிசுக்க, "வேண்டாம், சத்தம் போடுவோம், ஓடி விடுவான்!" என்று ராஜி சொல்ல, வசந்தி கொஞ்சம் கூட அசராமல் ஒரு கழியை எடுத்துக்கொண்டுவந்து என்னிடம் நீட்டினாள். "அப்பா ரூமுக்கு வெளில நின்னுக்குங்க. அவன் வெளியே வரும்போ ஒரு போடு போடுங்க!"
"ஐயையோ? வேண்டாம், அவன் சுருண்டுட்டா? உசிருக்கு ஏதாவது ஆயிட்டால்? என்னால் முடியாது!" நான் பின்வாங்க, அவள் நேரே போய் அங்கே நின்றுகொண்டு... வெளியே வந்தவன் மேல் ஒரு போடு போட்டாள். கீழே விழுந்தவன் கம்பும் கையுமாக அவள் நின்று கொண்டிருந்ததைப் பார்த்து எழத் தயங்க, "அக்கா, அந்தக் கயித்தை எடு!" என்றாள் வசந்தி. "இப்ப பக்கத்து வீட்டுக்காரங்களைக் கூப்பிடுங்க," என்றாள் என்னிடம்.
அவளாவது பயப்படுவதாவது!
ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருந்தது.
இரவு திடீர் திடீரென்று விழித்துக் கொண்டு என்னை உலுக்குவது முதல் அசாதாரண வேளைகளில் கம்பெனிக்கு போன் செய்து என்னை அழைப்பது வரை, ஓடி ஒடி வந்து ராஜியை நானும் சரி வேறு யாரும் சரி கொலை செய்யவில்லை என்று எந்தப் பயனுமின்றி விளக்குவதற்குள் படாத பாடுபட்டு போனேன்.
மெல்ல மெல்ல பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு இவள் இப்படி திடீர் திடீர் என்று பிதற்றுவது தெரிந்தது. என்னை ஒரு மாதிரி சந்தேகத்துடன் பார்க்க தொடங்கினார்கள். கொஞ்ச நாளில் விஷயம் கம்பெனிக்கும் எட்டி விட்டது. அவர்களும் தங்கள் பங்குக்கு என்னைத் துளைக்க ஆரம்பிக்க...
வீட்டுக்கு வந்தால் இவள் என்னைத் தூங்கவும் விடாமல்... ஒருநாள் இரவு கனவு கண்ட நிலையிலேயே என் சட்டையைப் பிடித்து அவள் அறியாமலேயே உலுக்கத் தொடங்கி விட்டாள்.
என்னால் பொறுக்க முடியவில்லை.
"வசந்தி! அது உன் அக்காவின் ஆவியும் இல்லை நான் அவளைக் கொல்லவும் இல்லை. தயவுசெய்து இதை நம்பு. இந்த விஷயத்துக்கு இதோடு ஒரு முற்றுப்புள்ளி வை," என்றேன் அழுத்தம் திருத்தமாய்.
அவள் அடங்குவதாக இல்லை. "என்னையும்... என்னையும் அதே போல்..."
அவள் முடிக்கவில்லை. நான் வெறியனானேன். "என்னோடு வா," என்று அவளை அழைத்துக்கொண்டு பைக்கை எடுத்துக்கொண்டு புறப்பட்டேன். ஊரைத் தாண்டி அந்தப் பாழடைந்த வீட்டின் முன் கொண்டு போய் நிறுத்தினேன். கதவைத் திறந்து உள்ளே தள்ளினேன்.
"வசந்தி!" ராஜி தான் கத்தினாள்.
"அக்கா!" விழி பிதுங்க வெறித்தாள் வசந்தி.
"பார், நன்றாகப் பார். உன் அக்காவை நான் கொலை செய்யவில்லை. அவளை இங்கேதான் அடைச்சு வெச்சிருக்கேன். எல்லாம் உன்னைக் கல்யாணம் செய்து கொள்ளத்தான்! இப்பவாவது நான் ஒரு கொலைகாரன் இல்லைன்னு தெரிஞ்சிக்கிட்டியா?"
"எனக்கு அப்பவே தெரியும்!" என்றாள் வசந்தி நிதானமாய், "உங்களால் ஒரு உயிரைக் கொல்ல முடியாது. அதனால்தான் என் அக்காவை எப்படியாவது உயிருடன் மீட்டு விடலாம் என்ற நம்பிக்கையில் உங்களோடு வந்தேன், என் வாழ்க்கையை அடகு வைத்து! கடைசியில் எனக்கு வெற்றிதான்! நாம இங்கே புறப்பட்டு வரும்போது பக்கத்து வீட்டுக்காரருக்கு சைகை காட்டிவிட்டுத்தான் வந்தேன்."
பின்னால் வந்த போலீசார் எனக்கு விலங்கிட்டு அவள் சொன்னதை ஊர்ஜிதம் செய்தார்கள்.
வசந்தி, உன் அழகு மட்டுமா என்னை வீழ்த்தியது? அறிவும் தான்!

Friday, July 10, 2026

இன்னும் நிறைய ...


‘மேலிருந்து குதிக்கும் போது ஒரு வலையை கண்டு கொள்வேன் என்றுதான் நம்பினேன். மாறாக என்னால் பறக்க முடியும் என்று அறிந்து கொண்டேன்.’
இந்த அருமை வாசகம் சொன்னவர் John Calvin ( 1509 - 1574) பிரெஞ்சு தத்துவ ஞானி. இன்று பிறந்த நாள்!
இன்னும் நிறைய முத்துக்களை உதிர்த்திருக்கிறார்.
‘ஒருவர் எந்த மாதிரி இருந்தாலும் அவரை நாம் நேசிக்க வேண்டும், ஏனெனில் நாம் கடவுளை நேசிக்கிறோம்.’
‘எல்லா மனிதர்களுமே சந்தோஷத்தை தேடுகிறார்கள், ஆனால் நூற்றில் ஒருவன் கூட அதை கடவுளிடம் தேடுவதில்லை.’
‘உண்மையைத் தியாகம் செய்து வாங்க வேண்டியது அல்ல அமைதி.’
‘அடக்கம் என்பது உண்மையான அறிவின் தொடக்கம்.’
‘மனிதனின் அழிவுக்கு நிச்சயமான வழி அவன் தனக்குக் கீழ்ப்படிவதுதான்.’
‘பிரார்த்தனை விஷயங்களை மாற்றாது; கடவுள் மாற்றுகிறார் நம் பிரார்த்தனையின் பதிலாக.’
'கடவுளை அறிந்து கொள்வதில் தொடங்காமல் எந்த அறிவும் இல்லை.'
‘செல்வத்தால் கண்கள் மறைக்கப்படுவதைவிட ஆபத்தானது வேறேதுமில்லை.’
‘நம் நம்பிக்கை குறைவாக இருக்கும்போது அது அதிகரிக்கவும், உறங்கிக் கிடக்கும் போது விழிக்கவும், ஊசலாடும் போது அதை உறுதிப்படுத்தவும், பலவீனமாக இருக்கும்போது பலப்படுத்தவும், தூக்கி எறியப்படும் போது அதை எடுத்து வளர்க்கவும் செய்யும்படி கடவுளைக் கேட்டுக் கொள்ள வேண்டும்.’

Wednesday, July 8, 2026

எண் கைப் பூதம்...


I Q test என்று ஒன்று வைக்கிறார்களே, அவரவர் திறமையை அங்குலம் சுத்தமாக அளந்து சொல்ல? அதை ஆரம்பித்து வைத்தவருக்கு இன்று பிறந்த நாள்! Alfred Binet... (1857 - 1911)
சட்டம் பயின்ற இந்த பிரெஞ்சுக்காரர் சட்டென்று அதை உதறக் காரணமாயிருந்தது ஹிப்னாஸிஸ் பற்றி அவர் படித்த ஒரு புத்தகம். சைகாலஜியில் பையக் காலை வைத்தார். தானே பயின்றார். இருநூறு புத்தகம் எழுதியது அதில்தான்.
பள்ளியில் கற்றுக் கொடுப்பதை சரிவர புரிந்து கொள்ள முடியாத மாணவர்களை கண்டெடுத்து தனியே பயிற்சி கொடுக்க, ஒரு டெஸ்ட் தயாரிக்கச் சொல்லிவந்தது ஓர் வேண்டுகோள் அரசிடமிருந்து அவருக்கு. நண்பர் சைமனுடன் சேர்ந்து முதலாவது ஐ.க்யூ. டெஸ்டை அவர் தயாரித்த வருடம் 1905.
அதை அடியொற்றி ஏகப்பட்ட இன்டெலிஜென்ஸ் டெஸ்ட் வந்து விட்டன. பத்து வருடத்தில் அமெரிக்காவில் காலை வைத்த இவரது டெஸ்ட், ஸ்டான்ஃபோர்டு யுனிவர்சிட்டியால் வார்த்தெடுக்கப்பட்டு இன்றளவும் பாப்புலர்.
'இப்படி எல்லாம் ஒன்றும் புத்திசாலித்தனத்தை ஒரு நம்பருக்குள் கொண்டுவந்துவிட முடியாது, பல்வேறு திறமைகளை உள்ளடக்கியது அது, காலம் சூழ்நிலை மோடிவேஷன் போன்ற ஏகப்பட்ட காரணங்கள் அதை எளிதாக மாற்றிவிடும், ஒரே மாதிரி பின்னணியில் உள்ள குழந்தைகளையே ஒப்பிட இயலும்' என்ற கருத்தையும் அவரே விட்டு சென்றிருக்கிறார்.
உதா ஒன்று: பெற்றெடுத்து ஒரே வீட்டில் வளர்க்கப்பட்ட சகோதர சகோதரிகளின் ஐ. க்யூ., தத்தெடுத்து ஒரே வீட்டில் வளர்க்கப்பட்டவர்களைவிட அதிக ஒற்றுமையாக இருக்குமாம். இப்படி நிறைய கண்டுபிடித்திருக்கிறார்கள் இப்போது.
ஆக, ஐ க்யூவை ஒரு ஹைக்கூவாக சொன்னால்…
‘எண் பாட்டிலில்
அடைக்க முடியவில்லை அதை.
எண் கைப் பூதம்.’

Tuesday, July 7, 2026

கனவுகளை நாடி...


அந்தப்படத்தில் ஐந்து புதிய இசை அமைப்பாளர்களை அறிமுகப்படுத்தினார் டைரக்டர் வசந்த். ‘ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே’ என்று சொல்ல வைத்தது ஒவ்வொரு பாட்டும். அதில் இதயத்தை "தொட்டுத் தொட்டுச் செல்லும்..." அந்தப் பாட்டை இசையமைத்ததோடு பாடியும் அசத்தி தமிழ் திரைக்கு அறிமுகமானார் அவர்.
இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம்... இன்று பிறந்த நாள்!
'அழகிய தீயே' தான் இவரை பிரபலமாக்கியது. பாடல்களும் சரி பின்னணி இசையும் சரி பாந்தமாக அமைந்த படம். “சந்தனப் பூங்காற்றே…” “விழிகளில் அருகினில்…” ரெண்டுமே கல்கண்டு ரகம். க்ளைமாக்ஸில் அந்த பின்னணி இசை! 'பூம்'!
இனி அவரின் அந்த அதி உன்னத முயற்சி. ‘ராமானுஜன்.’ 2014 இன் சிறந்த இசையாக ‘டெக்கான் மியூசிக்’ தேர்ந்தெடுத்த படம். க்ளாஸிகல் இசையும் வெஸ்டெர்னும் அந்தக் கதையின் காலத்திற்கேற்ப கலந்து ஓர் பவழ இசையைத் தவழ விட்டிருப்பார்.
“நாராயணா.. நாராயணா..” என்ற அந்தப் பாட்டை நீங்கள் ஒரு முறையாவது கேட்க வேண்டும். அடுத்து எத்தனை முறைகேட்பது என்பதை நீங்களே தீர்மானிப்பீர்கள். சுஹாசினி பாடி முடிந்து சின்ன இராமானுஜன் வந்து பாடும்போது பீட் மெல்லத் தாவி விட்டிருக்கும் முழு வெஸ்டர்னுக்கு. (லிங்க் கீழே)
உன்னி கிருஷ்ணன் பாடும் திருமழிசை ஆழ்வாரின் 'விண் கடந்த ஜோதியாய்..' பாடலாகட்டும், ("ஆறும் ஆறும் ஆறுமாய் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்...") ரமேஷே பாடும் நா. முத்துக் குமாரின்கனிவான 'துளி துளியாய்...' பாடலாகட்டும் கேட்க பரவசம்.

அப்புறம் அவரின் அந்த ஆகச் சிறந்த பாடல்... என்ன அதுன்னு கேட்பவருக்கு: “என்ன இது, என்ன இது என்னைக் கொல்வது?..." கமலின் ‘நள தமயந்தி'யில் சின்மயியுடன் இவரே பாடியது. சரணத்தின் கடைசி வரி பல்லவியின் முதல் வரியாக மாறும் அதிசயம்! பாடல் நின்ற பிறகும் நம் காதில் அந்த தனனதன ஃப்ளூட்! அந்த பிரில்லியண்ட் அரேஞ்ச்மெண்ட்! நான் ஸ்டாப்பாக ஒலிக்க விட்டு நாம் தூங்கிப் போகலாம் நல்ல கனவுகளை நாடி! (லிங்க் கீழே)
அதே படத்தில்தான் மாதவனும் ஷ்ருதிகாவும் ஆடும் அந்த அட்டகாச ஜாலி பாடலும்! "புக்காம் பொறந்தா மனுஷாளெல்லாம் ஒண்ணா சேருங்கோ… மாப்ளே பொண்ணில் யார்தான் சமர்த்து நன்னாப் பாருங்கோ.."
“ஜீவன் எங்கே …” ‘யூனிவர்சிடி’ படத்தில் வரும் பாடல். ஜீவனைத் தொட்டுச் செல்லும். இடையிசையில் அமர்க்களப் படுத்தியிருப்பார். 'ஜெர்ரி' படத்தின் ஹிட் "என் சுவாசத்தில் காதலின் வாசம் வீசவைத்ததாரோ.."
இவரின் பக்திப் பாடல் ஆல்பங்களில் எஸ். பி. பி. பாடிய "கிருஷ்ணா.. ஜனார்த்தனா..." அப்படியொரு உருக்கம்!

Monday, July 6, 2026

ஒரு வாரம்... ஒரு காட்சி...


அந்தப் படத்தை யாரும் மறந்திருக்க முடியாது. ஜீவனாம்சம் கொடுக்கத் திணறிக் கொண்டிருக்கும் தன் காதலனை மணம் செய்து கொள்ள பணம் வேணும். கம்பெனியில் நம்பி ஒப்படைத்த நாற்பதினாயிரம் டாலரை அபேஸ் பண்ணிக் கொண்டு காரில் விரைகிறாள் அவள். மழை, புயல்.. மோட்டல் ஒன்றில் தங்க வேண்டியதாகிறது. நார்மல் அல்லாத நார்மன் தான் அதன் ஓனர். ஷவரில் குளிக்கும் போது மெல்லக் கொல்லப் படுகிறாள்... ஆம், அதேதான். ‘Psycho.’
ஹிட்ச்காக்கின் ஹிட் டாக்கி.
‘மெயின் பிக்சர் ஆரம்பித்தபின் யாரும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்’ என்று தியேட்டர்களில் அறிவிக்கப்பட்ட அந்தப் படத்தில் ஹீரோயினாக வந்தவர்...
Janet Leigh... இன்று பிறந்த நாள்.
அந்த சின்னதானாலும் முக்கியமான வேடத்திற்கு ஆஸ்கார் நாமினேஷன் பிளஸ் கோல்டன் க்ளோப் அவார்ட் கிடைத்தது. ஒரு வாரம் எடுக்கப்பட்டது அந்த ஷவர் காட்சி. நடிக்கும்போது தெரியவில்லை ஆனால் அதை திரையில் பார்த்ததும்? ஷவரில் குளிப்பதையே நிறுத்திவிட்டார்.
பிற்பாடு ‘Hitchcock’ என்று படம் எடுத்தபோது அதில் இவராக நடித்தது அழகு நடிகை Scarlett Johansson.
‘Houdini’ படத்தில் நடிக்கும்போது கணவர் Tony Curtis -ஐ விட இவர் பிரபலமாக இருந்தார். ஆனாலும் அவர் பெயரை முதலில் போட வைத்தார்.
தம்பதிகள் சேர்ந்து நடித்த படங்களில் முக்கியமானது The Vikings. இந்த தம்பதிக்கு பிறந்தவர் தான் Jamie Lee Curtis. அவரும் பிரபல நடிகை (‘True Lies’)
அந்த ப்ரஃபசரிடம் படிக்கிற மாணவி ஒருத்தி அவரை முத்தமிட்டுவிட, பார்க்கும் அவர் மனைவி பத்ரகாளியாகிறாள். தப்பிக்க, தான் ஒரு சீக்ரட் போலீஸ் என்று ஒரு பொய் சொல்கிறார். அது யாரடா என்று நிஜப் போலீஸ் துரத்த… காமெடி ரகளை! கணவர் டோனியுடன் நடித்த ‘Who Was That Lady?’
பிரபல டைரக்டர் நடிகர் Orson Welles இன் ‘Touch of Evil’ படத்தில் நடித்தது பெருமிதம் தரும் அனுபவம்.

Sunday, July 5, 2026

இருவரில் ஒருவர்…


1. ஏராளமான பேர் ஒரே நேரத்தில் ரசிக்கிற கேளிக்கையாக இருக்கிறது.
2. மாபெரும் கூடாரத்தில் எண்ணற்ற பிராணிகளின் பங்கேற்புடன் அமைந்திருக்கிறது
3. குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும்படியாக,
4. எல்லா வயதினருக்கும் பொருத்தமான ஒரு நிகழ்ச்சியாக இருக்கிறது.
இந்த நான்கையும் ஏற்படுத்தி சர்க்கஸ் என்பதை ஓர் மாபெரும் கேளிக்கையாக மாற்றி அமைத்த இருவரில் ஒருவர்…
James Anthony Bailey. இன்று பிறந்தநாள்!
மிச்சிகனில் பிறந்த இவர் பிச்சு உதறினார் சர்க்கஸ் சார்ந்த சகல விஷயத்திலும்! இரண்டு வயதில் தந்தையையும் எட்டு வயதில் தாயையும் இழந்தவர்.
சர்க்கஸ் கம்பெனி நடத்திக் கொண்டிருந்த P T Barnum, அதாங்க அந்த இன்னொருவர், அவருடன் தன்னை இணைத்துக் கொண்டார். உலக முழுதும் சர்குலேட் ஆனது அவர்கள் சர்க்கஸ். (ஹாலிவுட் படம்கூட வந்ததே, ‘The Greatest Show on Earth’)
அருமையான ஜோடி இருவரும். சர்க்கஸை பிரபலப்படுத்திக் கொள்ளுவதில் நிபுணர் பார்னம். பின்னால் இருந்து சர்க்கஸை வெற்றி பெற வைப்பது பின்னவருக்கு பிடித்தமானது. ‘என்னை விட பத்து மடங்கு திறமைசாலி,’ என்று அவரே சொன்னார் இவரை.
வருடத்தில் ஒரு நாளை தாய் தந்தையற்றவர் தினம் என்று அறிவித்து அன்று அவர்களுக்கு மட்டும் ஷோ நடத்துவார்.
அத்தனை பெரிய கூடாரத்தையும் வேலையாட்களையும் கலைஞர்களையும் பிராணிகளையும் ஒவ்வொரு ஊருக்கும் கொண்டு செல்வதற்கு அவர் அமைத்திருந்த அட்டகாசமான சிஸ்டம் பாராட்டப்பட்டதோடு, பின்பற்றவும் செய்யப்பட்டது சில இடங்களில்.
அவர் மனக்கூடாரத்தில் உதித்த முத்து:
‘கலை என்பது மனிதனின் இயற்கை. இயற்கை என்பது கடவுளின் கலை. எளிமை என்பது இயற்கையின் முதல் படி, கலையின் கடைசிப் படி. உலகின் ஒரே சமநிலை மரணம் மட்டுமே. ஒவ்வொரு மனிதனும் தன்னை கடவுளின் ஓர் செயலாக, தன்மனதை கடவுளின் ஒரு எண்ணமாக, தன்னுடைய வாழ்க்கையை கடவுளின் ஒரு மூச்சாக நினைக்கட்டும்! தன் நற்செயல்களாலும் நல்லெண்ணங்களாலும் தன்னுள்ளே இருக்கும் சொர்க்கத்தை திறந்து காட்ட முயலட்டும்!’
இன்னும்...
‘உலகை முன்னேற்றுவதற்கு உள்ளதிலேயே மிக மோசமான வழி அதைக் குற்றம் சொல்வது.’
‘கடவுளை நோக்கி அழைத்துச் செல்லாத எந்த எண்ணத்திலும் நான் காலை வைக்க மாட்டேன்.’
‘நிறைய சிந்திக்கிறவன், உயர்ந்ததையே உணர்கிறவன், மிகச் சிறந்ததையே செய்கிறவன்.. அவன் தான் அதிகம் வாழ்கிறான்.’

Friday, July 3, 2026

மங்காத ‘வாவ்’!


அப்பா ரோலுக்கான ஜிப்பா, தப்பாமல் பொருந்துவது இவருக்குத்தான்.
கம்பீரம், கண்டிப்பு, கனிவு மூன்றையும் கொடுப்பதில் அப்படி ஒரு கச்சிதமான மிக்ஸ்!
பாத்திரத்தின் பாதியை முக பாவமே நிரப்பி விடும். மீதியை அந்தக் குரல்.
ரங்கா ராவ்...இன்று பிறந்த நாள்!
இவரை நினைத்தாலே போதும் அப்பாவின் வசனம் தானாக தோன்றிவிடும் வசனகர்த்தாவுக்கு!
ஏழை அப்பாவாக ரங்கா ராவ் என்றால் இ'ரங்கா'த மனமே இராது. 'படிக்காத மேதை'யில் அந்த ரங்கனோடு சேர்ந்து இந்த ரங்கா நம்மை உருக்கிய உருக்கம்!
அப்பழுக்கற்ற அப்பாவி மகளுக்கொரு வாழ்வமைத்துக் கொடுக்க முடியாமல் விரக்தி, வேதனை, தோல்வி, இயலாமை அத்தனையும் அழுத்த, மகள் சாவித்ரியிடம் வெடிப்பாரே கடைசிக் காட்சியில்… ‘கை கொடுத்த தெய்வத்'துக்கு அது எத்தனை கை கொடுத்தது!
நளினமாகப் பொருந்திக் கொண்டார் நரசிம்ம பல்லவராக, 'பார்த்திபன் கனவி'ல். ‘அன்னை’யில் ஆனானப்பட்ட பானுமதியை சமாளிக்கும் விதமே அலாதி…
கேரக்டர் இவருக்குள் நுழைகிறதா, இவர் கேரக்டருக்குள் நுழைகிறாரா.. அது அந்த கேரக்டருக்குத்தான் வெளிச்சம்.
'அப்பப்பா!' என்கிற அளவுக்கு அந்த அப்பாக்களிடையேயும் எத்தனை வெரைட்டி கொடுத்தார்! . ‘இருவர் உள்ளத்’தின் கண்டிப்பான ஜட்ஜ் அப்பாவிலிருந்து , ‘எங்க வீட்டுப் பிள்ளை’யின் அசட்டு செல்வந்தர் அப்பா வரை!
மிஸ் பண்ணக்கூடாத படம் ‘மிஸ்ஸியம்மா’. கல்யாணமே ஆகாத ஜெமினி சாவித்திரி ஜோடியின் ‘கணவன் மனைவி’ ஊடலைத் தீர்த்துவைக்க இவரு தவிக்கிற தவிப்பு! அந்த ‘மாயாபஜார்’ கடோத்கஜனா இவர்?
நாயகனுக்கு (சிவாஜி) நெஞ்சுவலி. டாக்டருக்கு போன் பறக்கிறது. ஏற்கெனவே ஜோசியர் கெடு வைத்த நேரம் வேறு நெருங்குகிறது. கொஞ்ச நேரத்தில் தான் செத்துப் போய்விடுவோம் என்ற நிச்சயமான பயத்தில் சிவாஜியும் சுற்றியுள்ளவர்களும் கதி கலங்க...
அப்போது கதவு திறக்கிறது. என்டர் எமன்! "எம்மா, எமன் வந்துட்டான்!" என்று அவர் அலற.. விடமாட்டேன்னு தாய் கதற..
"எல்லாருமா சேர்ந்து 'என்' உயிரை வாங்கிடுவீங்க போலிருக்கே? விலகுங்க, நான் டாக்டர்!"
நாடகத்திலிருந்து நேராக எமன் வேடத்தில் வந்து இறங்கும் ரங்கா ராவ் கிளப்பும் சிரிப்பலை! காமெடியிலும் தூள்! ('செல்வம்')
ரங்கா ராவ்! மனதில் மங்காத ‘வாவ்’!

Thursday, July 2, 2026

கோப்பு நிறைய...


காஞ்சனா கேட்கிறார் குட்டிப் பெண் மஞ்சுளாவிடம். "Tell me why a man is great?"
"A man is great because he alone can laugh at others and at himself." என்று பதில் வருகிறது.
'சாந்தி நிலையம்' படத்தில் வரும் கலகலப்பான இந்த டயலாக் நினைவிருக்கிறதா?
52 வருடங்களுக்கு முன் எழுதியவர்...
சித்ராலயா கோபு! சிரிப்பு ஆள் ஐயா கோபு என்று சொல்லி விழுந்து விழுந்து சிரித்தோம். மகிழ்ந்தோம்.
ஜோக் எல்லாம் சும்மா க்ளாஸா இருக்கும். தமிழ்த் திரைக்கு ஶ்ரீதரும் இவருமாக அளித்த நகைச்சுவை வண்ணம் கொஞ்சமா?
கட்ட பொம்மன் வசனத்தை எப்படி உணர்ச்சி பொங்கக் கேட்டார்களோ அதேபோல ‘கல்யாண பரிசு’ வசனங்களை சிரிப்பு பொங்க மீண்டும் மீண்டும்!
‘காதலிக்க நேரமில்லை’ பற்றி சொல்லவே வேண்டாம். எழுதுவதற்கு இடமில்லை, அதில் வரும் நல்ல நகைச்சுவை அத்தனையையும் எடுத்து!
காமெடி படத்தில் டயலாக் சற்று சீரியஸான விஷயம். கதையைக் கொண்டு செல்வதாவும் இருக்கணும். எழும் கேள்விகளை இயல்பாக விளக்குவதாகவும்! சங்கீதம் மாதிரி டயலாகிலேயும் ஒரு ப்ராக்ரஷன் உண்டு. ஒன்றிலிருந்து ஒன்று இயற்கையா வரணும். அதே சமயம் கதைக்குத் தேவையில்லாமல் இருக்கக்கூடாது. இந்த இலக்கணத்துக்கு எடுத்துக் காட்டாக 100% சரியாக அமைந்த படம் ‘காதலிக்க நேரமில்லை’.
ஊட்டி வரை உறவு, கலாட்டா கல்யாணம், சுமதி என் சுந்தரி என்று நிறைய படங்களில் தன் வசனத்தால் நம் விசனம் துடைத்தவர். காசேதான் கடவுளடா, அத்தையா மாமியா, ராசி நல்ல ராசி என டைரக் ஷனிலும் டிஸ்டிங்ஷன் காட்டினார்.
எல்லாவற்றிலும் என்னைக் கவர்ந்த அந்த ஒன்று… காமெடி, காதல், தத்துவம் என அவரது முழு வீச்சையும் மிகவும் ரசித்தது ‘சாந்தி நிலைய'த்தில்!
சாலையில் சந்திக்கும் கோப ஜெமினியிடம் காஞ்சனா சொல்லும் கோபு டயலாக்: “அந்தஸ்தில இருக்குற உங்கள மாதிரி பணக்காரங்க வாழ்க்கையில முன்னேற மேலே போகும்போது சந்திக்கறங்ககிட்ட கொஞ்சம் அன்பா நடந்துக்கணும். காரணம், கீழே வரும்போது மறுபடியும் அவங்களை சந்திக்க வேண்டியதா இருக்கும்!”
“அனுசூயா டீச்சர்னு வந்தாங்களே, அவங்களும் வேலையைவிட்டு போய்ட்டாங்களா?”ன்னு ஜெமினி கேட்க, நாகேஷ்: வந்தாளே அனுசூயா! புருஷனை விவாகரத்து பண்ணிட்டு, பெத்த இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு இங்க வந்தா. நம்ம வீட்டு குழந்தைகளைப் பார்த்தவுடனே அந்த குழந்தைகளே பெட்டர்னு புருஷனோட போயிட்டா!”
தனியே நிற்கும் காஞ்சனாவிடம், ‘என்ன மாலதி, இருட்டைக் கண்டாலே பயப்படுவியே’ன்னு கேட்கும் ஜெமினியிடம், “வாழணும்கிற நம்பிக்கைகளும் ஆசைகளும் மனசில நிறைஞ்சி இருந்தப்ப நான் பயத்தை உணர்ந்தேன். ஆனால் இப்ப நான் இருட்டைக் கண்டு பயப்படறதில அர்த்தமே இல்லை.”
“என்ன திடீர்னு இந்த விரக்தி மனப்பான்மை?”
“என்னைப்போல அனாதைகள்கிட்ட நிரந்தரமாக உறவாடுவது விரக்தி ஒண்ணுதானே?”
“காலையில உன்னை கடுமையாக பேசிட்டேன், என்ன மன்னிச்சிடு மாலதி.”
“எப்பவுமே மன்னிப்பு கேட்கிறது அடுத்து செய்ய இருக்கிற தப்புக்கு அஸ்திவாரம்னுதான் நான் நினைக்கிறேன்!”

குழந்தைகளைப் பற்றி காஞ்சனா ஜெமினியிடம் சொல்லும் அந்த ஆழமான அட்வைஸ்: “அவங்கள நீங்க கடுமையான நடத்தறதினால நீங்க வீட்டில் இல்லாத போது சுதந்திர உணர்ச்சியில விஷமங்களைக் கொஞ்சம் அதிகமாக செய்யறாங்கன்னு நினைக்கிறேன். குழந்தைங்க எப்போதுமே மலரைப் போல மிருதுவானவங்க. மலர்ல இருக்கிற முள்ளை நீக்க அதைத் தீயில போட்டால் கருகிவிடும் இல்லையா? வேறுவிதமா தானே எடுக்க முயற்சி செய்யறோம்? அதைப்போலத்தான் நாம குழந்தைகளை அவங்க போற போக்குல போய்த்தான் நம்ம வழிக்கு கொண்டு வரணும்!”
“மலருங்கறீங்க, முள்ளுங்கறீங்க, வாத்தியார் வேலைக்கு வர முன்னாலே எங்கேயாவது தோட்டவேலை பார்த்தீர்களா?” என்று நாகேஷ் கேட்பது அதையும் மென் காமெடிக்கு நகர்த்தும்!
சிகரமாக நாகேஷின் அந்த காலட்சேப காட்சி! “குறும்புக்கார கோவிந்தன், நம்ப கிருஷ்ணன் ஒரு நாளைக்கு உண்ணாவிரதம் இருந்தார்...(நாகேஷே பாடுகிறார்) உப்புமா ஒரு குண்டா! உருளைக்கிழங்கு போண்டா! காப்பி ஒரு அண்டா! குடிக்க டம்பளர் கொண்டா!... ஆப்பம் அறுபது! அதிரசம் அறுபத்தெட்டு!... பத்தாதா? இத்தனைக்கும் மேலே ஒரு தார் வாழைப்பழம் அதையும் சாப்பிட்டுட்டு உண்ணாவிரதம் இருந்தார்!” என்று தொடங்கி கோபியர் கதைக்கு வந்து “கோபியரே, கோபியரே, கேளுங்கோடி.. கோபாலகிருஷ்ணனை பாருங்கோடி! குளத்திலே குளிக்கையில் கண்ணன் புடவையை எடுத்தே ஓடிச் சென்றான்!... தம்மாத்துண்டு பயலுக்கு தில்லைப் பாத்தியா...?”ன்னு அமர்க்களப்படுத்துவாரே… அது!
கோபுவின் கையில் ஒரு கோப்பு. முழுக்க முழுக்க அதில் சிரிப்பு!