சொல்லாமல் கொள்ளாமல்…
கே.பி.ஜனார்த்தனன்
காலிங் பெல் ஒலித்தது. எட்டிப் பார்த்தார் ராகவ். கேட்டுக்கு வெளியே கிஷோர் நின்றிருந்தான். சற்று தாமதமாகவே கதவைத் திறந்தார்.
“என்ன மாமா, என்ன பண்ணிட்டிருந்தீங்க? எத்தனைவாட்டி பெல்லை அமுத்துறது?”
“இல்லேடா, இங்கே ஒரு பேஜார் வேலையில் அகப்பட்டு முழி பிதுங்கிட்டிருக்கேன். உட்காரு, என்ன தலை எல்லாம் கலைஞ்சிருக்கு?”
அவன் ஏதோ சொல்ல வாயெடுக்கு முன் ”ஆ, உன்கிட்ட ஐடியா கேட்கலாமே? ஒரு வெப்சைட் போட்டி. பக்கத்து வீட்டு பையன் என்னை கலந்துக்கச் சொன்னான். ரெண்டே வரியில் எழுதணும் ‘To whom do you want to thank before you die and why?’ அப்படிங்கிற கேள்விக்கு பதில். எப்படி எழுதறதுன்னு தலையை பிச்சிட்டு…”
“ஓ வந்து… அது இப்ப…”
“ஒரு நிமிஷம்தான். இந்த கேள்விக்கு நீ பதில் சொல்றதாயிருந்தா என்ன சொல்லுவே?”
யோசிக்கவேயில்லை. “எங்க அம்மாவுக்குத்தான் முதல்ல! லிஸ்ட் போட முடியாது அவங்க எனக்கு செய்திருப்பதை எல்லாம்! அப்புறம் எங்கப்பா..” என்று அவனாகவே அப்பாவுக்குத் தாவினான், “அவர் மட்டும் அந்த காலத்திலேயே எனக்கு அட்வென்ச்சர் கதைகளை படிச்சுக் காட்டவில்லையானால் நான் படிப்பில் இத்தனை ஆர்வத்தோடு வளர்ந்திருக்க மாட்டேன்.”
“அப்ப யாழினி?”
“ஆமாம். முதலிலேயே சொல்லியிருக்கணும். என் மனைவி இல்லாம நான் ஏது? அடுத்து என் தங்கை. அவளோட பாசம் நான் முன்னேற எத்தனை உதவியா இருந்திருக்கு! என் ப்ரண்ட் சீதாராமன். பிளஸ் டூவில் என் ஹை மார்க் ஸ்கோருக்கு அவனுக்கு நன்றி சொல்லணும். ராப்பகலா கூட இருந்து உழைச்சான்…”
அவன் தொடர்ந்து சொல்ல… மாமா உட்கார்ந்தார்.
“இலக்கணமும் கணக்கும் சொல்லித் தந்த ஆறுமுகம் சார், வேலையில் சேர்ந்தப்ப முதல் ப்ராஜெக்ட் லீடரா இருந்த மனோஜ் … கொஞ்சம் கஷ்டம்தான் மாமா. லிஸ்ட் வளந்துட்டேயிருக்கு. ஆஹா, எத்தனை பேர் என் வாழ்க்கையில் நான் நல்லாயிருக்க ஹெல்ப் பண்ணியிருக்காங்க? ஏன் உங்களால் அதை ஈசியா எழுத முடியலைன்னு புரியுது.” என்ன நினைத்தானோ, “வரேன் மாமா, வீட்டில் ஒரு வேலை, மறந்துட்டேன்!” போய்விட்டான்.
போன் ஒலித்தது. “சித்தப்பா,” என்று அழைத்தாள் யாழினி. ”அங்கே வந்தாரா அவர்? என்னோட சண்டை போட்டுட்டு கோபத்தில் வெளியே போனாரு. அதான் கவலையா இருக்கு.”
“கவலைப்படாதே, இப்ப சரியாகியிருப்பான். அங்கேதான் வந்திட்டிருக்கான்,” என்றார் அவன் முகத்தில் அறிகுறி பார்த்து நோயை டயாக்னிஸ் செய்து உடனடியாக ஒரு திரைக்கதை எழுதி அதன்படி வைத்தியமும் பார்த்து அனுப்பிய ராகவ்.
(‘அமுதம்’ April 2012 இதழில் வெளியான ‘அன்புடன் ஒரு நிமிடம் -3’)
