முழுமையாக ஒரு வார்த்தை...
கே.பி.ஜனார்த்தனன்
(’அமுதம்’ ஏப்.2012 இதழில் வெளியான 'அன்புடன் ஒரு நிமிடம்-2')
"என்ன ஞாபகம் வெச்சாலும் spelling மறந்துடுது!” அலுத்துக் கொண்டான் பரசு, “Complimentary, Complementary இந்த ரெண்டு வார்த்தையும் குழப்புது என்னை.”
“ரொம்ப சுலபம்,” என்றார் வாசு. அப்பா. ”Complimentary என்பது வாழ்த்துவது. Complementary ன்னா முழுமையாக்குவதுங்கற அர்த்தத்தில் வருவது. முழுமைக்கு என்ன வார்த்தை? Complete. அதனால Comple என்று L-க்கு பதிலாக E வருது, அப்படி ஞாபகம் வெச்சுக்கலாமே? தவிர அது ஒரு அழகான வார்த்தையும் கூட. ஒன்றையொன்று முழுமையாக்குவது. வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கிற எந்த சம்பத்துமே வாழ்க்கையை முழுமையாக்குவதாக இருக்கவேண்டும். அப்பதானே அழகு? பயன்?"
சுவாரசியம் தட்டிற்று இவனுக்கு.
”கணவனும் மனைவியும் எடுத்துக்கொண்டால் இவனிடம் இல்லாத சில நல்ல குணங்கள் அவளிடமும் அவளிடமில்லாத சில அவனிடமும் என அமைந்தால் அந்த அளவில் அது Complementary தானே?"
"கண்டிப்பா."
"கூட்டுக் குடும்ப காலத்தில் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா என்று குடும்பம் என்ற அமைப்பு முழுக்க முழுக்க மொத்ததில் Complementary ஆக அமைந்திருந்ததால் குழந்தைகளுக்கு வாழ்வில் அதுவே அவர்களின் மாபெரும் இயங்கு முன்னேற்றத் தளமாக இருந்தது. இப்ப அதை நாமே ஒதுக்கிவைத்துவிட்டு அங்கும் இங்கும் அலைந்து திரிந்து அந்த Complementary- யின் ஒவ்வொரு அங்கமாக சேகரிக்க வெளியில் ஓடுகிறோம். அப்ப தாத்தா படம் வரையக் கற்றுக் கொடுப்பார். எப்படி? ஆர்வத்தோடு கற்றுக்கொள்கிற மாதிரி. பாட்டி பழமொழியில் தொடங்கி பக்திப் பாடல் படிக்க வெச்சு ப த நி ச வரை சொல்லிக் கொடுப்பார். சித்தப்பா இலக்கணம், மாமா பேட்மிண்டன்... எல்லாம் ஒரே இடத்தில் நடந்திரும். இப்ப நாம அவனை அழைச்சிட்டு நீச்சல் கிளாஸ், மியூசிக் கிளாஸ், டிராயிங் கிளாஸ் அப்படீன்னு பேட்டைவிட்டு பேட்டை அலையறோம்...’
”அட, ரொம்ப யோசிக்க வைக்கிறீங்களே?”
”அத்தனைக்கத்தனை நல்லது. அந்த ரெண்டு வார்த்தைகளும் மறக்காது இல்லையா?”
கேட்டுக் கொண்டிருந்த தாத்தா தனக்குள்.. ’ஆஹா யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க! இனி நல்லதுதான் நடக்கும்.’
><><

No comments:
Post a Comment