Thursday, November 6, 2025

காட்சி என்றால் காட்சி...


'தெரியுமா அரசே உங்களுக்கு? ரொம்ப நல்லாவே பாடுகிறான் கம்பர் மகன், காதலை,' என்று வம்பிழுக்கிறார் ஒட்டக்கூத்தர் (நம்பியார்)...
அரசரும் கம்பரும் அம்பிகாபதி(சிவாஜி)யும் அமர்ந்திருக்கையில்!
அப்போது இளவரசி அமராவதி (பானுமதி) மெல்லப் படியிறங்கி வருகிறாள் அடியெடுத்து.
தன்னை மறந்து பாடி விடுகிறான் அம்பிகாபதி! "இட்ட அடி நோவ.. எடுத்த அடி கொப்புளிக்க… வட்டில் சுமந்து மருங்கசைய.."
அரசர் கோபமுற நோக்க, பதறிய கம்பர் தொடர்ந்து ஒரு வரி பாடி அதைச் சமாளிக்கிறார். “...கொட்டிக் கிழங்கோ கிழங்கென்று… கூவுவாள் நாவில் வழங்கோசை வையம் பெறும்.” வெளியே கொட்டிக் கிழங்கு விற்கும் முதியவளின் பாதங்கள், கொளுத்தும் வெயிலில் நோவதைத்தான் சொல்கிறான் தன் மகன் என்று.
"யாரங்கே? அழைத்து வா அந்த முதியவளை!" ஆணையிடுகிறார் சந்தேகம் அகலாத அரசர்.
'இருந்தால்தானே வருவதற்கு?' என நம்பியார் குதூகலிக்க, கம்பர் கலங்கி, கலைமகளை மனதில் துதிக்க...
நுழைகிறாள் அந்தப் பாட்டி, "அப்பா... என்னா வெய்யில்," என்கிறாள், தலையிலிருந்து கொட்டிக் கிழங்குப் பெட்டியை இறக்கியபடி.
காப்பாற்றி விடுகிறாள் சரஸ்வதி!
நம்பும் மன்னர்... வெம்பும் நம்பியார்...
'அம்பிகாபதி' படத்தின் அற்புதமான காட்சி.
இயக்குநர் ப. நீலகண்டனின் ஷாட் அமைப்பைக் கவனியுங்கள். மிகக் குறைந்த ஷாட்களில் அந்த செக்வன்ஸையும் அத்தனை எக்ஸ்ப்ரஷன்களையும் அழகாகக் capture செய்திருக்கும் நுணுக்கம்!
காட்சி youtube இல் காணக் கிடைக்கிறது.

No comments: