Saturday, June 20, 2026

‘சும்மா’வா சொன்னாங்க…


‘சும்மா’வா சொன்னாங்க…
கே.பி.ஜனார்த்தனன்.

ரிடயரானதும் ஆனந்தம் பிடிபடவில்லை. ஆஹா ஜாலி! இனி ஃப்ரீ! 24 மணியும் நமக்கேன்னு நினைத்தபடி மாமாவைப் போய்ப் பார்த்தேன். “ஆசீர்வாதம் பண்ணுங்க மாமா!” என்றேன்.
“அட, ரிடயராயிட்டியா? இனிமேதான் கவனமா இருக்கணும். ஐடிலா இருக்கவேபடாது. நோய் வந்துரும். உடனே போய் ஒரு சோஷியல் கிளப்பில சேர்ந்துரு. ஆக்டிவிடி! அதான் மருந்து!” என்று அட்வைஸை வழங்கினார் ஆசியாக, ஆசையாக.
என்னடா இதுன்னு அண்ணாவைப் பார்க்கப் போனேன். “என்னிக்கு ரிடயரானே?”
“போனவாரம்..”
“ஒரு வாரமா எங்கே போனே? சும்மாவா இருந்தே?”
“இப்பதானேண்ணா சும்மா இருக்க முடியும்?”
“இப்பதான் படாது. சுறுசுறுப்பா இருக்கணும். இல்லன்னா உடம்பு கெட்டுடும். அதனால நீ என்ன பண்றே, நாளைக்கே என் கடையில ஜாயின் பண்ணிரு. வேணா உன்னை ஒரு 10% பார்ட்னரா போட்டுக்கறேன்.”
“பிசினஸ்லாம் எனக்கு வராதே?”
“அதனால தான் உன்னை போடறேன், இல்லன்னா கவிழ்த்துருவேல்ல?”
எப்படியோ நழுவி வந்து மனைவியிடம் சொன்னபோது… “நான்கூட படிச்சேங்க… சும்மாவே இருக்கப்படாதாம். சுகர் வந்துருமாம்.. உங்களுக்குத்தான் மேத்ஸ் நல்ல வருமே? நம்ம தெருவிலேயே பத்து பதினஞ்சு பசங்க தேறுவாங்க.. டியூசன் சொல்லித் தரலாமே.. வருமானத்துக்கு வருமானமும் ஆச்சு…” என்று இடியை இறக்கினாள், “நாலு காசு வந்தால் நாலு புடவை எடுக்கலாமில்ல? உங்களுக்கு ஒரு வேட்டி…”
எனக்கு தெள்ளத் தெளிவா விளங்கிப் போச்சு. மறுநாளே போய் எங்க எம் .டியைப் பார்த்தேன்.
“என்ன சொல்றே, ஏதாவது வேலை வேணுமா?”
“ஆமா, காண்ட்ராக்டில் சில வேலைக்கு ஆள் எடுக்கிறீங்கல்ல? அது மாதிரி.”
“அது இப்ப… நல்ல வேலை ஒண்ணும்… செக்யூரிடி வேலை மட்டும்தானே காலியாயிருக்கு. வந்து சும்மாதான் இருக்கணும்!"
“போதும்!” என்றேன், ரொம்பவே செக்யூர்டாக உணர்ந்தேன்.
><><

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!